பிரபஞ்சன் அவர்களுக்கு அஞ்சலி

டிசம்பர் 21 ஆம் நாள் , வானம் வசப்பட்டுவிட்ட பிரபஞ்சன் அவர்களின் மறைவுக்கு குவிகத்தின் அஞ்சலி !

புதுச்சேரியின் அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை நடைபெற்றது! 

வாழ்க அவர் புகழ் !!

 

Image may contain: 2 peopleRelated image

 நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

 

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (19) – புலியூர் அனந்து

 

கண்ணாடி மேனி முன்னாடி போக 

தள்ளாடி உள்ளம் பின்னாடி போக

பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..

பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..

 

பயிற்சி மையத்தின் முதல் அனுபவத்தில் சந்தித்த பலரை அதற்குப்பிறகு சந்திக்க நேர்ந்ததில்லை.  வாழ்க்கையில்  நன்றாகச் சாதித்த  கோபதியை ஒருமுறை அலுவலக நண்பர் ஒருவர் திருமணத்தில் பார்த்தேன். அந்த நண்பர் தொழிற்சங்கத்தில் ஒரு முக்கியப் பதவியில் இருந்தார்.  அப்போதுதான் கோபதி எங்கள் நிறுவனத்திலிருந்து  ராஜினமா செய்துவிட்டு ஐ.ஏ.எஸ்.பயிற்சிக்கு முஸ்ஸோரி  செல்லவிருந்தான். அதற்குமுன் இயன்றவரை பழைய நண்பர்களைப் பார்ப்பதற்காக  சென்னையிலிருந்து வந்திருந்தான்,

அடுத்தமுறை அவனைப் பார்த்தது  மாவட்டத்  தலைநகரில் ஒரு பெரிய அரங்கத்தில். அரசாங்கத்தால்  மாவட்ட அளவிலான செயலாக்க  மற்றும் திட்டங்கள் எந்த அளவிற்குச்  செயலாக்கப்பட்டுள்ளன என்பதினை  மதிப்பிடும் கூட்டம்.  எல்லாத் துறைகளையும் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களையும் சேர்ந்த மாவட்ட அளவிலான தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ளவேண்டிய கூட்டம்.. அந்தத் தலைமை அதிகாரியுடன் சில உதவியாளர்களும் தேவைப்படுவார்கள். எங்கள் நிறுவனத்தின் மாவட்டத் தலைமை அதிகாரி மூன்று உதவியாளர்களுடன் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எங்கள் நிறுவனத்திற்காக அந்த வரிசையில் நான்கு இருக்கைகள் ஒதுக்கி இருந்தார்கள். அதுபோன்ற கூட்டங்களில் தலைமை அதிகாரிமட்டுமே பேசுவார் என்றாலும், விவாம் தெரிந்த இரண்டு மூன்று உதவியாளர்கள் உடன்  சென்று   தேவைப்பட்ட  புள்வி விவரங்களையோ , திட்டங்களின் தற்போதைய நிலவரத்தையோ எடுத்துக் கொடுக்க தயாராக இருப்பார்கள். விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் உதவியாளர்கள் அதற்குத் தேவைப்படுவார்கள். என்னை அது போன்ற முக்கியமான வேலைகளுக்குத் தகுந்தவனாக யாரும், நான் உட்பட, கருதவில்லை.

இம்முறை ஒரு நெருக்கடி நேர்ந்துவிட்டது.  எல்லோரும் கிளம்புவதற்குக்  கார்கூட வந்துவிட்டது. கூடப் போகவேண்டிய மூவரில் ஒருவருக்கு வயிறு சரியில்லாமல் போய்விட்டது. அவரால் இருக்கையில்  ஒரு பத்து நிமிடம் உட்காரக்கூட முடியவில்லை. கூட்டத்திற்கு அவர் போவதற்கு வாய்ப்பே இல்லை.  அதேசமயம் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஒன்றை காலியாக விட்டால் பலர் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிவரும். காரணத்தைச் சொல்லவும் முடியாது. கடுமையான விமர்சனம் வருமோ என்று பயம் வேறு.

Related imageதுரதிஷ்ட வசமாக வேறு யாரும் இல்லாததால், உப்புக்குச் சப்பாணியாக என்னை அழைத்துப்போகும்படி ஆகிவிட்டது. காலி இருக்கையை நிரப்புவது ஒன்றுதான் என்னால் உபயோகம்.

கூட்டம் தொடங்கியது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில்  முதலில்  மாவட்ட அதிகாரி,   அடுத்து மற்ற இரு உதவியாளர்கள் , கடைசி  இருக்கையில் நான். எனக்கு முன்னாலும் ஓரிரு கோப்புகள் வைக்கப்பட்டன.

கூட்டம் தொடங்கியது. கூட்டத்தை நடத்தியவர் மாவட்ட ஆட்சித் தலைவர். சென்னையிலிருந்து வருவாய் துறை உறுப்பினர் வந்திருந்தார்.  ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு நிறுவனமாக ‘ரெவ்யூ’ நடந்தது.

மாவட்ட ஆட்சித் தலைவர் சில கேள்விகள் கேட்பார். சென்னை அதிகாரி குறுக்கிட்டு, சில கேள்விகள் கேட்பார். பதில் சொல்லும் அதிகாரி மிகுந்த கவனத்துடன் பதிலளிப்பார். புள்ளி விவரங்கள்  தேவைப்படும்போது உதவியாளர்களில் ஒருவர் ஒரு காகிதத்தைக் கொடுப்பார். அதிலிருந்து துறைத் தலைவர் பதிலளிப்பார். திருப்திகரமான பதில் இல்லாவிட்டால்  சிலசமயம் மாவட்ட ஆட்சித் தலைவர்  திட்டாத குறையாகக் கடுமையாகப் பேசுவார்.  சென்னை மேலதிகாரி  வருவாய்துறை போர்ட் உறுப்பினர் என்று சொன்னார்கள். அவரும் ஏதேனும் கண்டனம் தெரிவிப்பார்.

தங்கள்முறை அதிக பிரச்சினைகள் இல்லாமல் போகவேண்டுமே என்று கவலையோடும் இறுக்கத்தோடும் இருந்தார்கள். எங்கள் நிறுவனம் நேரடியாக ஆட்சித்  தலைவரின் அதிகார வரம்பில் கிடையாதாம்.  எங்கள் தலைவர்  கேட்கப்பட்ட கேள்விகளுக்குப்  பதில்களை அளித்தார். அதிகக் கடுமையோ, கண்டனமோ இல்லாமல் அது முடிந்தது. ஆனாலும்,  அவர்  அமரும்போது அந்த  ஏர் கண்டிஷன் அரங்கிலும் அவருக்கு வியர்த்துப் போய்விட்டது.

“நெக்ஸ்ட்” என்றார் ஆட்சித் தலைவர். அடுத்து பதில் அளிக்க வேண்டியர்   எனக்கு அடுத்த இருக்கைக்காரர். இன்னொரு முக்கியமான  துறையின்  தலைவர். போர்டு உறுப்பினர் பார்வை அவரை அடையும் முன்பு என்னைக் கடந்து சென்றது. ஒருகணம் எங்கள் இருவர் கண்களும் சந்தித்தன.

அப்போது ஒரு அதிசயம் நேர்ந்தது.  அதிகாரப்  படிகளில்  எங்கோ உயரத்தில் இருந்த  அந்த சென்னை அதிகாரி  என்னைப் பெயரிட்டுக் கூப்பிட்டு, “ஹவ் ஆர் யூ?” என்றார். 

கோபதி….

வந்திருந்த அதிகாரி கோபதி. வெகு நாட்களுக்கு முன் எங்கள்  நிறுவனத்தில் வேலையில் இருந்த, என்னோடு பயிற்சி மையத்தில் பழகிய, திருமணத்தில் சந்தித்த அதே கோபதி.

அசட்டுச் சிரிப்புடன் தலையை அசைத்தேன். எழுந்திருக்க வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை.  முழுக் கூட்டமும் என்னைப் பார்வையால் துளைத்தது.  கூட்டம் தொடர்ந்தது. என்றாலும் நூற்றுக் கணக்கான கண்கள் என்னைத் துளைத்த அந்த நொடி … இன்று நினைத்தாலும் உடல் பதறுகிறது.

கூட்டம் முடிவடைந்ததும் கோபதி என்னைக் கூப்பிட்டனுப்பினா(ன்)ர்.  என் அண்ணன் பற்றிக் கூட விசாரித்தார். ஏதோ பதில் அளித்தேன் என்று நினைக்கிறேன்.

என் வாழ்க்கையிலேயே நாடகத்தனமான நிகழ்ச்சி இதுதான் என்று நினைக்கிறேன்.

நான் சொல்ல நினைத்தது பயிற்சி மையத்தில் சந்தித்த இன்னொருவனைப்பற்றி. பேச்சுவாக்கில் பிற்கால நிகழ்ச்சிக்குப் போய்விட்டேன்.

நமது நண்பன் சற்று வித்தியாசமானவன். நிறையப் பொய்கள்.  சொல்லும்போதே அது உண்மையல்ல என்று கண்டுபிடித்துவிடக் கூடிய பொய்களைக் கூட அஞ்சாமல் ஒரு சஞ்சலமும் இன்றி சொல்வான்.     

அவனது தந்தை ஒரு பிரபலம். பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது என்பார்களே அது இவர் விஷயத்தில்  மிகவும் பொருத்தம்.  அரியக்குடி, செம்மங்குடி என்று  சங்கீத வித்வான்கள் மட்டுமே ஊரின் பெயரால் விளிக்கப்பட்டு வந்திருந்த காலத்தில், இவன் தந்தை ஊரின் பெயரால் விளிக்கப்பட்டு வந்த எழுத்தாளர்.  (ஆங்கரை, விம்கோ நகர், திசையன்விளை , இரணியல்  என்று சில ஊர்கள் பிற்காலத்தில் துணுக்கு எழுத்தாளர்களால் பிரபலமானது வேறு விஷயம்.)    பல புனைபெயர் கொண்டவர். பொதுவான வார மாத இதழ்களில் எழுதிய  குடும்பப்பாங்கான கதைகள் இவரது  பலம்.

சென்னையிலேயே வசித்துவந்த நமது நண்பன்  வீட்டுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஐந்து நாட்களுக்காவது வெளியே தங்க இந்தப்  பயிற்சிக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டான். உள்ளூர் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வரலாம் என்று இருந்தது. இவன் ஏதோ பொய்யைச் சொல்லி எங்களுடன் அந்த லாட்ஜில்  ஒரு அறையில் தங்கினான்.

மதுவிலக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்ட நேரம்.    எங்கிருந்தோ பாட்டில் வாங்கிக்கொண்டு தினம் ஒரு நண்பன் வருவான். சற்றுநேரத்தில் அங்கு நான்கைந்து பேர்  வந்து சேர்ந்துகொள்வார்கள். இரவு 12 மணிக்குமேல்தான் கலைவார்கள்.

முதல் நாளன்றே எப்படி இந்த ஏற்பாடுகள் செய்தான் என்பதுதான் ஆச்சரியம். நண்பர்களில் யாரோ ஒருவர் கேட்கவும் செய்தார். எங்கே கிடைக்கும் என்பது பழக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும். யார் வீடு  ஃப்ரீ  என்றோ அல்லது எங்கே யார் இதற்காக அறை எடுத்திருக்கிறார்கள் என்றோ  செய்தி இரண்டு மணி நேரத்தில் போய்ச்சேர வேண்டியவர்களுக்கு சேர்வது கடினம் இல்லையாம்.

கேள்விகேட்ட நண்பரிடம் “உங்கள் ஊரில் சரக்கு எங்கே கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?”  என்று  கேட்டான்.. தெரியாது என்று தலை அசைத்தார்.

“நான் உங்கள் ஊருக்கு வருகிறேன். ஒரு மணிநேரத்தில் இடத்தைச் சொல்கிறேன் .”  என்றான் சவாலாக. தொடர்ந்து “இதில் ஒரு தொழில் ரகசியம் இருக்கிறது”  என்றான்.

கிடைக்கும் இடத்திலும், எங்கே கிடைக்கும் என்கிற தகவல் சொல்லக்கூடிய கடைகளிலும்  முட்டை விளக்கு என்று சொல்லப்படுகிற ஒரு விளக்கு இரவு பகல் எல்லா நேரமும் எரியுமாம்.  இது எல்லா ஊரிலும் பொதுவான விதியாம்.

எட்டுமணிக்கு மேல்தான் அந்த ஜமா கூடும். ஒருநாள் பயிற்சி மையத்திலிருந்து  லாட்ஜிற்குப் போக நான் கிளம்பியபோது  கொஞ்சம் காலார நடந்துவிட்டுப் போகலாம் என்று அவன் கூப்பிட்டான்.

நேராகச் சென்றால்  பத்து நிமிட தூரத்தில் இருந்த இடத்திற்கு ஊரைச் சுற்றி நாற்பது நிமிடங்கள் நடந்தோம்.  திடீரென ஒரு கடை முன் நிற்பான். கடைக்காரரிடம் ஏதோ சொல்லிவிட்டு வருவான். ஒரு அலுவலகத்தில் நுழைந்தான். வரவேற்பில் இருந்த பெண்மணி இவனைப் பார்த்துவிட்டு இன்டர்காமில் யாருடனோ பேசினாள்.  இவன் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.  தகவல் பரப்பும் முறை கொஞ்சம் புரிந்தது.

அவனுடன் நடந்த அந்த நாற்பது நிமிடங்களில் உதை வாங்காமல் அறையை அடைந்ததே  எந்தச் சாமியாரின் ‘அற்புதங்க’ளுக்கும்  குறைவில்லை  என்றுதான் தோன்றுகிறது. வழியில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் முதலில் சொன்ன பாட்டைக்  கீழ் ஸ்தாயியில்  விசிலடிப்பான். சில பெண்கள் திரும்பி முறைப்பார்கள்.  ஒன்றுமே நடக்காததுபோல்  இவன் அவளைத்தாண்டிப் போய்விடுவான்.  பெரும்பாலான பெண்கள் வேகமாக நடந்து போய்விடுவார்கள்.  

அந்த ‘பக் பக்’ அனுபவத்திற்குப் பிறகு அவன் இருக்கும் பக்கமே நான் போவதில்லை. அவன் ஒய்வு பெறும்வரை அவனைப்பற்றிய வம்பு தும்பு  சேதிகள்  அவ்வப்போது காற்றுவாக்கில் வரும். பெரிய பிரச்சினையாக  ஏதும் ஆகவில்லை.

எல்லோராலும் மதிக்கப்படும் ஒருவருக்கு இப்படி ஒரு மகன் இருப்பது சற்று வினோதம்தான் என்று நினைப்பேன். வெகு நாட்கள் கழித்து கேள்விப்பட்ட விஷயம் இன்னும் வினோதம். இவனது தந்தையான எழுத்தாளர்  நிழலான பத்திரிகைகளில் ‘பலான’ கதைகளை வேறு பெயரில் எழுதிவந்தது அம்பலமாகி சலசலப்பு ஏற்பட்டது.

வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன் என்பார்களே. அதுபோல  இவன் சகோதரன் சாதுவாம்  இவன்  அந்தக்கால வகைப்பாட்டில் ‘தறுதலை’யாம். பெயர் மாற்றிவைத்து  விட்டார்களோ என்று சொல்லும்படி சாது அண்ணன் பெயர் லீலாகிருஷ்ணன். ‘தறுதலை’ இவனோ சீதாராமன்.

இன்னும் ஒரு முரண். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத லீலாகிருஷ்ணன் நாற்பது வயதிலேயே போய்ச் சேர்ந்துவிட்டான். ரிட்டையர் ஆகி வாட்ஸ்ஆப்பில் நண்பர்களுக்குத் தினமும் ‘குட் மார்னிங்’ அனுப்பும்  சீதாராமன் சௌக்யமாக இருக்கிறான் .

(இன்னும் எவ்வளவோ இருக்கு )

 

கோமலின் பறந்துபோன பக்கங்கள் – குவிகம் பதிப்பகம் வெளியீடு

 

Image may contain: 8 people, including Kirubanandan Srinivasan and Dharini Komal, people smiling, people standing and indoor

கோமல் சுவாமிநாதன் அவர்களின் நினைவலைகளான பறந்துபோன பக்கங்கள் குவிகம் பதிப்பாக  16 – 1 – 19 அன்று சென்னை புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வெளியிடப்பட்டது.

இது குவிகம் பதிப்பகத்தின் 25 வது பெருமைமிகு பதிப்பு.

கோமல் அவர்களின் குடும்ப நண்பரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார்.

பெற்றுக்கொண்டவர்கள்  கோமல் அவர்களுடன் நாடக உலகில்  பயணம் செய்த கவிஞர் வைதீஸ்வரன், நாடகத்துறை எழுத்தாளர் T V ராதாகிருஷ்ணன், சுபமங்களா இணையாசிரியராக ஐந்தாண்டுகள் உடன் பயணித்த குடந்தை கீதப் பிரியன் மற்றும் தமுஎகச வைச் சேர்ந்த இரா தெ முத்து ஆகியோர்.

பேசிய அனைவரும் கோமல் அவர்களின் பன்முக ஆளுமையையும் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பண்பினையும் நாடகம் மற்றும் இலக்கியத் துறைகளில் செய்த நிகரற்ற பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார்கள்.

அவரது பரந்துபட்ட அனுபவங்களின் பதிவான பறந்துபோன பக்கங்கள் நடனம் அவர்களின் படங்களுடன் வருவது வரவேற்கத் தக்கது என்று அபிப்பிராயப்பட்டார்கள்.

தாரிணி கோமல் நாடகத்துறையிலும் இலக்கியத் துறையிலும் தந்தையின் பணியைத் தொடர்வதையும் எல்லோரும்  பாராட்டினார்கள்

சுரேஷ் சீனு  வரைந்த  அட்டைப்பட ஓவியம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

அரியதொரு மனிதரின் சிறந்ததொரு படைப்பிற்கு நல்லதொரு விழா.

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

 

Related image

Related imageராகு கதை சொல்லி முடித்தபின்   அவனைத் தண்டிக்கவேண்டும் என்று விஷ்வகர்மா தீர்மானித்து யோசித்து முடிக்குமுன் ஆயிரக்கணக்கான பாம்புகள் அறைக்குள் வருவதை அறிந்து திடுக்கிட்டார்.  ராகுவைத்  தான்  சற்றுக் குறைவாக எடை போட்டுவிட்டோமே என்று  வருந்தினார். அதுமட்டுமல்லாமல் மிகவும் சக்திவாய்ந்த நாகலோக இளவரசிகள் நாகவல்லியும் , நாககன்னியும் இருப்பதைப்பார்த்து கொஞ்சம் கலக்கத்திலும் ஆழ்ந்தார்.

இருப்பினும் விஷ்வகர்மா எதற்கும் கலங்காதவர். எதையும் சமாளிக்கும் ஆற்றல் படைத்தவர். பிரும்மரையே எதிர்த்துத் தான் நினைத்ததைச்  சாதிக்க முயன்றவர். தேவ சிற்பி என்பதால் தேவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அதனால் அவருக்கு அதீதமான சக்திகளையும் வரங்களையும் வாரி வாரி வழங்கி இருந்தனர் ! அவரும் அநாவசியமாக யார் வம்பிற்கும் போகமாட்டார். அதேசமயம் தான் நினைத்த காரியங்களைச் சத்தமில்லாமல் முடித்துக்கொள்ளும் சாமர்த்தியம் அவரிடம் நிறைய இருந்தது.

ராகுவை சமாளிப்பது அவருக்குப் பெரிய சவாலாகத்  தோன்றவில்லை.  அந்த அறையின் ஒவ்வொரு இடுக்கிலும் பாம்புகள் புகுந்து இருக்கின்ற இடத்தையெல்லாம் அடைத்துக்கொள்ள முயலுவதையும் பார்த்தார்.  ராகுவின் கண்களிலும் நாக இளவரசிகளின் கண்களிலும் தெரியும் குரூரப் புன்னகையைக் கண்டார்.

ராகுதான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.

” விஷ்வகர்மா அவர்களே ! “

“என்ன ராகு ! மீண்டும் ஒரு புனைவுக்  கதையா?” – விஷ்வகர்மாவின் குரலில் தெரிந்த ஏளனம் ராகுவை என்னவோ செய்தது.

” புனைவுக் கதை இல்லை, விஷ்வகர்மா அவர்களே!, நினைவைவிட்டு என்றும் மறக்க முடியாத கதை! உங்களுக்கு” என்றான் ராகு.

” உண்மைதான் ராகு! என்னை இந்த அளவிற்கு ஏமாளியாக்க யாரும் நினைத்ததில்லை. “

“அது கடந்த காலம், விஷ்வகர்மா அவர்களே , நிகழ் காலத்திற்கு வருவோம்”

” வந்துதானே ஆக வேண்டும்.  முதலில் உன்னைத் தண்டிக்க உன்னிடமே யோசனை கேட்டேன். இப்போது இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க என்ன வழி ராகு?”

” சரியாகக் கேட்டீர்கள்! எனக்கு இரண்டு வரங்கள் நீங்கள் தரவேண்டும்”

“இது என்ன புதுமையான வரம் கேட்கும் வித்தையாக இருக்கிறது? நீ தவமும் செய்யவில்லை, நானும் தேவன் இல்லை”

” வரம் என்ற சொல் தவறான பிரயோகம் என்றால் சத்தியம் என்று வைத்துக் கொள்ளலாம்”

” சத்தியமா ?  எதற்காகச் செய்யவேண்டும்?”

” உங்களுக்கு வந்துள்ள  ஆபத்து சரியாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன் “

” ஆபத்தா?  எனக்கா? நீ கோபக்காரன் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு வேடிக்கையாகப் பேசக் கூடியவன் என்பது எனக்கு இவ்வளவு நேரம் தெரியவில்லை”

” உங்கள் வேடிக்கைப் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள் ! நாக இளவரசிகளும் அவளுடன்  வந்திருக்கும் இந்த ஆயிரக்கணக்கான தோழிப் பாம்புகளும் உங்களுடன் விளையாட வரவில்லை. அவர்கள் அனைவரும் அக்கினி தேவனின் மானசீகப் புதல்விகள். அவர்களின் திறமையைப் பார்க்கிறீர்களா? ” என்று சொல்லி அப்போதுதான் சாளரம் வழியாக வரும் ஒரு சிறிய பாம்பைப்பார்த்து ராகு ஏதோ கட்டளையிட்டான். .அந்தப் பாம்பும் சாளரத்தில் நின்றவாறு வானத்தைப் பார்த்து சீறியது. வானத்தில் மிகப்பெரிய நெருப்புக் கோளம் ஒன்று  உருவாகி அரண்மனைக்கு வெளியில் வெடித்துச் சிதறியது.

” அடேடே! அந்தச் சின்ன அக்கினிக் குஞ்சிற்கே இத்தனை வலிமை இருக்கிறதென்றால் இங்கிருக்கும் பெரிய பாம்புகளுக்கும் நாக இளவரசிகளுக்கும்  ஏன் உனக்கும்கூட எத்தனை சக்தி இருக்கக்கூடும்? “

“இப்போதுதான் உங்களுக்கு விவரம் புரிய ஆரம்பித்திருக்கிறது விஷ்வகர்மா அவர்களே!”

” இவற்றிலிருந்து என்னையும் இந்த அரண்மனையையும் காப்பாற்றிக்கொள்ள நான் உனக்கு இரண்டு வரம் அல்லது இரண்டு  சத்தியம் செய்துதர வேண்டும். அப்படித்தானே ராகு?”

” நீங்கள் புத்திசாலி விஷ்வகர்மா அவர்களே”

” என்னைப் பாராட்டுவதை விட்டுவிட்டு அந்த இரண்டு சத்தியம் என்னவென்று சொல்லலாமே?”

” ஆஹா!   சொல்கிறேன் கேளுங்கள்! இந்திரனுக்கு நீங்கள் கட்டிக்கொடுத்த தேவேந்திரப் பட்டணம்போல நாகலோகத்தில் ஒரு மாபெரும் பட்டிணத்தை உருவாக்கித் தரவேண்டும்”

” அது மிக எளிது. அடுத்தது?”

” உங்கள் மகள் ஸந்த்யாவின் மூன்று குழந்தைகளில் ஒன்றை என்னிடம் தந்துவிடவேண்டும். அதுவும் அந்தப் பெண்குழந்தையை”

” அது மிகவும் கடினம். அதற்கு என் சம்மதம் மட்டும் போதாது. சூரியனுடைய  சம்மதமும் ஸந்த்யாவின் சம்மதமும் வேண்டுமே?”

” எப்படியாவது கொண்டுவருவது உங்கள் பொறுப்பு”

” அது சரி, இந்த இரண்டு சத்தியங்களையும் செய்யமறுத்தால் ? “

” மறுக்கும் நிலையில் நீங்கள் இல்லை. இந்த விஷ்வபுரி – உங்களுடைய இந்த அழகிய நகரம் -அதில் உள்ள மாந்தர்கள் – எங்கள் கணவர் ராகுதேவனைக் கத்தியால் வெட்டினார்களே ! உங்கள் மனைவி- ஏன் நீங்கள் உட்பட அனைவரும் எம்முடைய  நெருப்புக் கோளங்களால் அழிந்துபடுவீர்கள்”  – நாக இளவரசிகள்  இருவரும் ஒருமித்துக் கூறினார்கள்.

ராகு அவனுக்கே உரிய கவர்ச்சிகரமான புன்னகையுடன் விஷ்வகர்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

விஷ்வகர்மா தொண்டையைக்  கனைத்துக்கொண்டு மெதுவான குரலில்  பேசஆரம்பித்தார்.

” அதில் பெரிய சிக்கல் இருக்கிறது ! நாக இளவரசிகளே !” 

” என்ன சிக்கல்?” ராகு உண்மையான கோபத்துடன் கேட்டான்.

” அந்த அக்கினிதேவன் உங்களுக்கு மானசீக பிதாவாக இருக்கலாம் ! ஆனால் அவன் என் மானசீக சிஷ்யன். அவனுக்கு யாரும் மாளிகை கட்டித் தர இயலவில்லை. அவனுக்கு அவன் நெருப்பிலிருந்தே எரியாத மாளிகை கட்டிக்கொடுத்தவன் நான். அன்றிலிருந்து அவன் என்  சிஷ்யனாகி விட்டான். அது மட்டுமல்ல அக்கினியினால் எனக்கு எந்தவித கஷ்டமும் வராது என்று வரம் இல்லை சத்தியம் இல்லை இல்லை  குரு தக்ஷிணை  கொடுத்தான். “

ராகுவின் முகம் மாறத் தொடங்கியது. 

” இன்னும் சொல்கிறேன் கேள் ! அதையும் மீறி  அக்னியால்   ஏதாவது ஆபத்து வருவதாக இருந்தால் அந்த நெருப்பை ஏற்படுத்தும் காரணியைக் கட்டுப்படுத்தும் மந்திரத்தையும்  சொல்லிக்கொடுத்திருக்கிறான்.  அதைச் சொல்லட்டுமா  ?”  என்று சொல்லி விஷ்வகர்மா  சிரித்துக்கொண்டே தன்னிடமிருந்த சிறிய சிப்பி ஒன்றை எடுத்து ஊதத்தொடங்கினார். மெல்லிய இசையுடன் பலத்த காற்று வந்தது. நின்ற இடத்திலிருந்தே அந்த அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே ஊதினார். 

“இந்த தேவ சிற்பி ஏதோ சூழ்ச்சி செய்கிறான்! நெருப்புக் கோளங்களைக் கக்கிவிடுங்கள்” என்ற சீறிய ராகுவின் உடல்  தடுமாறியது.

Image result for rahu and snakes

அவன் கழுத்துக்குக் கீழே இருந்த பாம்பு உடலில் விஷ்வகர்மாவின் காற்றுபட்டதும் அது அப்படியே பனிக்கட்டிபோல் மாறி உறைந்துவிட்டதை உணர்ந்தான். அவனால் முகத்தைமட்டும் அசைக்க முடிந்தது. ஆனால் அவன் மனைவிகளுக்கோ அறையில் இருந்த மற்ற  பாம்புகளுக்கோ அந்தப் பாக்கியம்கூட இல்லை. அனைவரும் அப்படியே பனிக்கட்டியில் செய்த பாம்புகள்போல் உருமாறி உறைந்து கிடந்தனர்.  சாளரத்தில் நின்று கொண்டிருந்த அந்தக் குட்டிப்பாம்பும் அதை தொடர்ந்து வர முயற்சித்த அத்தனை பாம்புகளும் பனிக்கட்டிபோல் உறைந்துகிடந்தன. 

 

ராகுவால் எல்லாவற்றையும் உணரமுடிந்தது. விஷ்வகர்மாவின் பலமும் புரியஆரம்பித்தது. 

 

“இப்போது நீ எனக்கு இரு வரம் தரவேண்டும்” என்று விஷமத்துடன் பேச்சைத் துவங்கினார் விஷ்வகர்மா 

(தொடரும்)  

 

 

(இரண்டாம் பகுதி)

 

WCF stage

 

நாரதர் எமியைப் பார்க்க  எமி நாரதரைப் பார்க்க  முப்பெரும் தேவியரும் ஓருவரை ஒருவர் பார்க்க அங்கே ஒரு கனவு சீன் டூயட் ஆரம்பிப்பதற்கான சரியான வேளை தயாராகிக்கொண்டிருந்தது.

ரஹ்மான் இசையில்  நீல மலைச் சாரல்  மாதிரி ஒரு பாடல்   ஒலித்துக்கொண்டிருந்தது. நடு நடுவே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நீ எமிதானே ! உன்னை நான் வேறு எங்கோ சில மாதங்கள்  முன்பு பார்த்திருக்கேனே!

நீங்கள் நாரதர்தானே ! உங்களை நானும் ஒரு விழாவில் பார்த்துப் பேசிய ஞாபகம் வருகிறது !

ஆம்! டில்லியில் நடந்த உலகக் கலாசார விழாவில்தானே நாம் சந்தித்தோம் !

“உண்மை!  ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் நடத்திய  விழாவாயிற்றே ! நீ ஒரு ராஜஸ்தானிய இளவரசிமாதிரி வந்து நடனமாடி முதல் பரிசு பெற்றவள்தானே !

உண்மை. என்னுடைய இடத்தில் அதாவது யமுனை ஆற்றின் கரையில் நடைபெற்ற விழா ஆயிற்றே! நான் மாறுவேடத்தில் கலந்துகொண்டேன்.  நீங்கள் அங்கே வயலினில்  விஷ்ணு சகஸ்ரநாமம் இசைத்து அனைத்துலக மக்களின் மதிப்பைப்  பெற்றவர்தானே ?

” உண்மைதான். நானும் அந்த விழாவில் கலந்துகொள்ளவே  வந்தேன்.  மாறுவேடம் பூண்டு வயலினில் வித்தை காட்டினேன். “

” பரிசுபெற்ற நாம்  இருவரும் அப்படியே என் கரை ஓரமாக  ஆக்ரா சென்று தாஜ்மஹால் பார்த்தோம்.   அந்தப் பௌர்ணமி இரவில் தாஜ்மகாலின் பளிங்கு மண்டபத்தில் ஒருவரை ஒருவர் விழுங்கி விடுவதுபோல் சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்”

” சில நிமிடங்கள்தானா? ? ஆயிரம் ஆயிரம் வருடங்கள் இருந்தமாதிரி நினைவு.”

திருமணம் செய்ய முடிவு செய்த நாரதர்

” திடீரென்று ஒரு மின்னல் ! நாம் இருவரும் மறைந்துவிட்டோம்.  நீங்கள் ஆகாயத்தில் சென்றீர்கள். நான் நதியாய்த் தவழ்ந்தேன்

“இப்போது உன்னை சந்திக்கும்வரை அந்த எண்ணங்கள் எல்லாம் என் மனத்திலிருந்து யாரோ பறித்து எறிந்ததுபோல ஒரு உணர்வு”

” எனக்கும் அதே உணர்வுதான். என் மனதிலிருந்த உங்கள் நினைவை யாரோ ஒளித்துவிட்டதுபோன்ற உணர்வு. என் அப்படி ஆயிற்று நம் இருவருக்கும் ?”

” அது என் தந்தை பிரும்மர் செய்த சதி என்பதை இப்போதுதான் உணருகிறேன். “

” உண்மையைச் சொல்லுங்கள் ! அந்த கலாசார விழாவினால்  என் யமுனைக் கரைக்கு பங்கம் விளைந்துவிட்டது என்று முதல்நாள் கிளப்பிவிட்டதே தாங்கள்தானே ?”

” உணமைதான். ஏதாவது கலாட்டா செய்யவில்லை என்றால் எனக்குத் திருப்தியே கிடையாது.  மாசு வாரியத் தலைவரிடம் கொஞ்சம் போட்டுவாங்கினேன். விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவி ரவிஷங்கருக்குப் பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விட்டது. கடைசியில் நமது கலகம் நன்மையில்தான் முடிந்தது. அதன்பின்தான் கங்கை யமுனை போன்ற நதிகளில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார்கள். “

” இங்கே எப்படி வந்தீர்கள்? உங்களுடன் வந்த முப்பெரும் தேவியர்கள் எங்கே? உங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர்களை மறந்துவிட்டேன். அண்ணன் வந்தால் கோபித்துக் கொள்வார்.”

” அவர்கள் எங்கும் போகவில்லை. வாசலில் தோட்டத்தில் அமர்ந்து ஒரு அழைப்பிதழைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம்மையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு அவர்கள் மறைந்து  போய்விடுவார்கள் பாரேன். “

அதேபோல் முப்பெரும் தேவியரும் சட்டென்று மறைந்துபோனார்கள்.

அதற்குக் காரணம் நாரதர் பையிலிருந்து  கீழே விழுந்த  அந்த அழைப்பிதழ்.

அது விவாத நிகழ்ச்சிக்கான   அழைப்பிதழ் .

எது பெரியது? ஆக்கலா? காத்தலா ? அழித்தலா? சாலமன் பாப்பையா தலைமையில் நடைபெறப்போகும் விவாத மேடையின் அழைப்பிதழ்.

” எங்கே போனார்கள் அவர்கள்?

” என்னை அறியாமலேயே நானே ஒரு  புது கலகத்திற்கு வழி  வகுத்துவிட்டேன். நாராயணன் சொன்னது சரியாகிவிட்டது. இனி இவர்களுக்குள் நடக்கப்போகும் பூசலை சமாளிப்பது மிகமிகக் கடினம். வா! நாமும் அந்த விவாத மேடைக்குச் செல்வோம்” என்று நாரதர் எமியிடம் கூறினார்.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

தைப் பொங்கல்

தை மாதம் முதல் நாள் !

அதற்கான குறிச் சொற்கள்:

பொங்கல் –  அறுவடை – விழா – நெல் – கரும்பு – வாழை –  பானை – இஞ்சி-மஞ்சள் – பூளைப்பூ -செழிப்பு – உழவர் – உத்தராயணம் –  புண்ணியம் – மகரசங்கராந்தி – தர்ப்பணம் – சூரியன் – காளை – நன்றி- ஜல்லிக்கட்டு – விடுமுறை – சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், வாழ்த்து, போகி,  புகை, சுண்ணாம்பு – புத்தாடை- திருவள்ளுவர்தினம் – காணும்பொங்கல் – மாட்டுப்பொங்கல் – கணுப்பொங்கல் -பொங்கலோ பொங்கல் 

சங்க காலத்திலேயே  இவ்விழா கொண்டாடப்பட்டது என்பதற்கு ஆதாரமான வரிகள்:

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும்

”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும்

கூறுகின்றன.

சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் சேர்த்து  வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல்.

சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், ‘நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்’ எனக் கூறுகிறார் ,

திருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி, ‘பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்கிறது.

முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை இடங்கை வரலாறு என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது.

இருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார்.

23-1-2008 அன்று கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தமிழகச் சட்டப்பேரவையில் “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, தமிழ் அறிஞர்கள்  ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால்; தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது’ என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, “தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும்வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்றார்.

 

ஒரு புராணக் கதை :

சிவபெருமான் ஒருமுறை நந்தியிடம் பூலோகம் சென்று மக்களை மாதம் ஒருமுறை சாப்பிடும்படியும் , தினமும் எண்ணை தேய்த்துக் குளிக்கும்படியும் சொல்லுமாறு கூறினாராம்.

நந்தி தவறுதலாக அதை உல்டா செய்து – தினமும் சாப்பிடும்படியும் மாதம் ஒருநாள் எண்ணைதேய்த்துக் குளிக்கும்படியும் கூறிவிட்டாராம்.

அதனால் கோபம் கொண்ட சிவன்  பூலோக மக்கள் அதிக உணவு தயாரிக்க நிலத்தை உழவேண்டி, நந்திக்கும் அதன் சந்ததியருக்கும் ஆணையிட்டாராம்.

இது புதிதாக இருக்கிறதல்லவா?

 

விளையாட்டு

Uzhavar

 

 

 

தனித்து நின்றதால் ? – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

ராகேஷ் மற்றவர்களைப்பற்றிய சிந்தனை உள்ளவன். பலமுறை என்னைச் சந்தித்து ஆலோசனை கேட்பதுண்டு. அவன் படிக்கும் பள்ளியில் நான் மனநலம் மற்றும் கல்வி ஆலோசகராக இருந்தேன். மாணவர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு உணர்வு-உறவாடல் ஆற்றல்கள் (social emotional learning) பயிற்சி தருவது என் பொறுப்புகளில் ஒன்று. இதுவே என்னுடைய “வரும் முன் காப்போம்” கருவி. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தக் கண்ணோட்டம் உள்ளதால்தான் எங்களால் ராதிகாவின் இன்னல்களைப் புரிந்து, அணுகி சீர் செய்ய முடிந்தது.

புதிதாகச் சேர்ந்த ராதிகா எட்டாவது வகுப்பு மாணவி. அவளுடைய அப்பாவிற்கு இந்த ஊருக்கு மாற்றலானது. மேலாளர். பெரிய பதவியில் இருந்ததால் மாளிகைபோன்ற வீடு. அவருக்குக் கீழே வேலை செய்பவர்களின் பிள்ளைகள் ராதிகாவின் வகுப்பில் இருந்தனர். இவர்களில் பலருக்கு அவளிடம் பேசுவதற்கோ, பழகுவதற்கோ தயக்கமாக இருந்தது. அதனால் அவள் தனியாகப் பள்ளிக்கு நடந்து வருவாள், சாப்பிடுவாள்.

இவளைப்போல ஆறு மாணவர்கள் புதிதாக எட்டாம் வகுப்பில் சேர்ந்திருந்தார்கள். அவர்கள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வகுப்பு மாணவர்களுடன் பழகினார்கள், ஒருவேளை அவர்கள் எல்லோரும் அக்கம்பக்கத்தில் இருந்ததாலோ, அல்ல பெற்றோர்கள் சமநிலை வேலையில் இருப்பதாலோ என்னவோ. ஆனால் ராதிகாவிடம் மற்ற மாணவர்கள் மேலோட்டமாகவே பழகினார்கள்.

இதை ராகேஷ் கவனித்துவந்தான். அவனும் அதே வகுப்பில் படிப்பவன். யாரையும் என்றுமே துச்சமாகப் பேசாதவன், அவரவர் சூழ்நிலை புரிந்து அனுசரித்துப்போவான். இவற்றால், சக மாணவர்களுக்கும் இவனிடம் பழக எளிதாக இருந்தது. உதவி தேவை என்றால் ஆண் மாணவர்களும், பெண்களும் அவனை அணுகுவார்கள். தன்னால் முடிந்தவரை உதவி செய்வான்.

அந்த வருட ஆரம்பத்தில் முதல் இரண்டு மாதத்திற்கு நான் பள்ளிக்கு வரமுடியாத சூழ்நிலை. நான் திரும்பிய முதல் நாளே ராகேஷ் என்னைச் சந்திக்க ஓடோடிவந்தான். வந்ததும் ராதிகாவைப்பற்றி விவரித்தான், தான் கூர்ந்து கவனித்ததைப் பகிர்ந்தான். ராதிகா ஆசிரியர்களுக்குப் பதில் அளிக்கும்போது வியர்வை அதிகம் ஊற்ற, சொல்லவந்ததை முடிக்கத் தடுமாறுவதைப் பார்த்து பரிதாபப்பட்டான், ஆனால் என்னசெய்வதென்று தெரியவில்லை. அவளுடன் மற்றவர்கள் பழகத் தயங்குவதையும் விவரித்தான். வகுப்பில் எல்லோரும் அவளுடைய அப்பாவின் பதவிக்கு பயந்தே பேசத் தயங்குகிறார்கள் என்று தன் கணிப்பைப் பகிர்ந்தான்.

“ஸோஷியல்-எமோஷனல் லர்னிங்” பயிற்சி அளிக்க ராதிகாவின் வகுப்பிற்கு வந்தபோது நானும் அவளைச் சந்தித்தேன். அவளுடைய பதிமூன்றாம் வயதிற்குச் சரியான உயரம். பயம் அவளுடைய கயல்விழியில் தாண்டவம் ஆடியது. அவள் போட்டிருந்த கூன் அவள் வெட்கப்படுவதை மேலும் காட்டியது.

எப்படி உதவலாம் என்று ராகேஷும் நானும் யோசித்தோம். எளிதான ஒன்றைத் தொடங்க முடிவெடுத்தோம். எங்கள் யுக்தி, ராதிகா பள்ளிக்கு வரும் வழியில் செல்வதென்று. ராகேஷ் பலருடன் சைக்கிளில் போவது பழக்கம். ராதிகாவைக் கடந்து போகையில் அவளிடம் ஹலோ சொன்னான். நாளடைவில் தோழர்களும் செய்தனர். அடுத்த கட்டத்தில் ஐந்து ஆறு அடி அவளுடன் அவர்கள் நடந்து சென்றார்கள். செய்யச்செய்ய, பரிச்சயம் ஆரம்பமானது. இப்படி, பழக்கம் வளர, சில நாட்களுக்குப்பிறகு அவளையும் சைக்கிளில் வரப் பரிந்துரைத்தான். வியப்புடன் அவளும் வர ஆரம்பிக்க, மெதுவாகப் பலருடன் முதல்கட்ட சினேகிதம் தொடங்கியது.

வகுப்பு ஆசிரியர்களும், அவர்களுக்கு நான் பயிற்சி அளிக்கும்பொழுது, ராதிகாவின் இந்நிலைகளைப்பற்றி தாங்களும் கவனித்ததாகப் பகிர்ந்தார்கள். ஆங்கில ஆசிரியையும், பூகோள ஆசிரியரும், பதில் அளிக்கும்போது, குறிப்பாக தன்னைப்பற்றியோ, இல்லை பாடங்களைப்பற்றிய கேள்விகளாக இருந்தாலோ ராதிகாவின் கால்கள் நடுங்குவதை கவனித்ததாகச் சொன்னார்கள். பதில் சொல்லச்சொல்ல சரியாகிவிடும் என்ற ஒரு நம்பிக்கையில் அவளிடம் கேள்விகளை அதிகமாகத் திருப்பினார்கள் என்று ஒப்புக்கொண்டார்கள்.

 

Related image

 

ராதிகா போன்றவர்களுக்கு எப்படி ஆசுவாசப்படுத்த முடியும் என்று கணக்கு வாத்தியாரும் தமிழ் டீச்சரும் கேட்டார்கள். ஒரு வழியை விவரித்தேன். கேள்வி கேட்டதும் சில மாணவர் பெயரைச் சொல்லி, அதிலிருந்து யார் வேண்டுமானாலும் பதிலைச் சொல்ல அழைக்கலாம் என்றேன். அப்போது, ராதிகாபோன்ற பதட்டம் உள்ளவர்கள் தங்களைத் தயாராக்கிக்கொண்டு பதில் அளிக்கக்கூடும். வகுப்பு அமைப்பே, பாடங்களைப் படிக்கையில் நம்மை முழு மனிதனாக்கவும்தான்.

சில நாட்களுக்குப்பிறகு அவளுடைய அம்மா விமலா என்னைச் சந்தித்தார். புதிய மாணவர்களின் குடும்பச் சூழல் புரிந்துகொள்ள பெற்றோரைச் சந்திப்பது என் பழக்கம். அதனாலும் ராதிகாவின் நிலையைப்பற்றி ஆலோசிக்கவும் அவள் வந்திருந்தாள்.

தான் அவளுடைய மாற்றாந்தாய் என்றாள். என்னை ஆலோசித்துச் சிலவற்றை சரிசெய்ய விரும்புவதாகப் பகிர்ந்தாள். தன் வளர்ப்பில் எந்தவித குறையும் இருந்துவிடக்கூடாது என்பதால், ராதிகாவை எல்லாமே சரியாகச் செய்யவேண்டும் என்று தான் எப்பொழுதும் திருத்திச் சொல்வதாகப் பகிர்ந்தாள். கூடவே, தான் இவ்வளவு கவனித்துச்செய்தும் ராதிகாவிற்குப் பதட்டம் உண்டாகிறது என்று தெரிவித்தார். தன்மேல் ஏதோ குறையினால் ராதிகாவிற்கு இப்படியோ என்று எண்ணி, அது தனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினாள்.

இதை மையமாக வைத்து அடுத்த சில ஸெஷன்களில் ஆராய்ந்தோம். விமலாவின் எண்ணம், தன்னால் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் என்னேரமும் தானே வழிகாட்ட வேண்டும் என்று நினைப்பதினால் ஏற்படும் இடையூறுகளைப்பற்றிப் பேசினோம். ராதிகாவிற்கு எப்போதும் தன்னை ஒரு பூதக்கண்ணாடியில் கண்காணிப்பதைப்போல் தோன்றுவதால்தான் அவளுக்குப் பதட்டம் ஏற்படுகிறது என்பதை எடுத்துச் சொன்னேன். அதாவது நல்ல எண்ணத்தில் செய்தாலும், ஒவ்வொன்றுக்கும் சொல்வதால் ராதிகா தன்னம்பிக்கை இழந்துவிடும் நிலையானது. எங்கே முடியவில்லை என்று சொன்னால் அம்மாவின் மனம் தளருமோ எனப் பயந்து பதட்டமாகிவிடுகிறது. இதனால்தான் அவளின் சலனமும் பயமும்.

இதன் இன்னொரு நேர்விளைவு – இங்கு சேர்ந்ததுமுதல் ராதிகாவின் படிப்பு சரிந்துகொண்டே போவதைப்பற்றியும் விமலா கவலைப்பட்டார். அவர்கள் மதிப்பெண் வராததைப்பற்றிக் கூடக் கவலைப்படவில்வை. ராதிகா படிக்க உற்சாகம் காட்டாதது சங்கடப்படுத்தியது. அவளுக்குத் தெளிவுபடுத்தினேன், ராதிகா போன்றவர்கள், முன் பரிச்சயம் இல்லாத, பழகாத, புது இடத்தில், மற்றவர்களுடன் பழகிக்கொள்ளச் சங்கடப்படும்போது உண்டாகும் சஞ்சலத்தினால் பாதிக்கப்படுவது: படிப்பு-உணர்வு- மற்றவர்களுடன் உறவாடுவது. இந்த மூன்றும் தான் ராதிகாவிடமும் ஊசலாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம் என்றேன். இதைச் சரிசெய்யும் வழிகளை அடுத்த ஸெஷன்களில் பேசி, வழிமுறைகளை வகுத்தோம்.

மேலும் ராதிகா இருக்கும் பருவநிலையில் தானாகச் சிந்தித்து முடிவு எடுக்க எடுக்க, நல்லது-கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் பருவம் இது என்றும் விளக்கினேன். விமலா இதைச் செயல்படுத்தப் பல வழிமுறைகளை நாங்கள் யோசித்தோம். நான் வகுப்பில் நடத்திவரும் “ஸோஷியல் எமோஷனல் லர்னிங்” பற்றியும் விவரித்தேன். தன் சந்தேகங்கள் தெளிவாக, முகம் மலர்ந்து விமலா பெருமூச்சுவிட்டாள்; தனக்குத் தெம்பு வந்ததைத் தெரிவித்தாள்.

வகுப்பில் மற்றவர்களுடன் நன்றாகப் பழக ஒன்றைச் செய்யச் சொன்னேன். எல்லோரும் வகுப்பில் ஒவ்வொருவரிடமும் இதுவரை மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு திறனைக் கண்டுபிடித்து அடுத்த வாரம் வகுப்பில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று.

நான் கணித்தபடி, இதிலிருந்து ராதிகாவை வகுப்பில் ஏற்றுக்கொள்வது ஆரம்பமானது! ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்! ராதிகாவிற்கும் அதே கதி, மற்றவருக்கும் அதே நிலை. எப்படியாவது மற்றவருடன் பேசவேண்டிய சூழ்நிலையைத் தெரிந்தே உருவாக்கினேன்.

ராதிகா சோப்பை விதவிதமாக செதுக்குவதை ஸௌதா கண்டுபிடித்தாள். வகுப்பில் எல்லோருக்கும் இது வியப்பைத் தந்தது. ஆச்சரியப்பட்டார்கள். எப்படிச் செய்வது எனக் கேட்டார்கள். ராதிகா அப்படியே வெட்கப்பட்டுச் சொல்ல முயன்றாள், முடியவில்லை. உடனே ராகேஷ் எழுந்து, “ராதிகா நாளை மேடத்தை வரச்சொல்லிக் கேட்டுக்கொள்வோம். நீ செஞ்சு காமிக்கறியா?” அவள் திகைத்தபடி அவனைப் பார்த்தாள். புன்னகையுடன், “ம்..என்ன?” என்றான். மெதுவாகத் தலையை அசைத்தாள், உடனே முழு வகுப்பும்,  ஒரே குரலில், “யெஸ், டூ இட்” என்றார்கள். ராதிகாவின் கண் கலங்கியது. அருகில் இருந்த சித்ரா அவள் கைகளைத் தழுவினாள். சமாதானம் செய்தாள்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி ராதிகாவிற்கு “பியர் பட்டி” (peer buddy) அதாவது அவளுக்கென்று தோழர் ஒருவர் என்று தேர்ந்தெடுத்தேன். இதற்குத் திறமை, மனதிடம் உள்ள ஸௌதாவையே சேர்த்துவைத்தேன். ராகேஷ் எப்படியும் தன் பங்கைச் செய்துவந்தான். அதனால் இன்னொருவரைத் தேர்ந்தெடுத்தேன். இவளே ராதிகாவின் கவசமும்.  இந்த புது இடத்தில் பழகிக்கொள்ள, துணிச்சல், எடுத்துச் செய்யும் தன்மை எனப் பலவற்றை அவளிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பாகும். இந்த வயதில் நண்பர்களின் பரிந்துரைகளைக் கேட்டுக்கொள்வது, அவர்களிடமிருந்து கற்பது பீயர் சப்போர்ட் என்ற ஒரு மேஜிக்கை நான் உபயோகித்தேன்!

ஸௌதாவுடன் வந்து என்னை அழைத்துச் சோப்பு செதுக்குவதைச் செய்துகாண்பித்தாள். மற்றவர்கள் கேள்வி கேட்க, விளக்கம் தர, மற்றவருடன் இன்னும் பேசத்தொடங்கினாள். எல்லோரும் செய்யவிரும்பியதால் அடுத்த வகுப்பில் சோப்பை எடுத்துவர, ராதிகா தயக்கம் கலந்த பரவசத்துடன் விளக்கினாள். பல அழகான வடிவங்களை அமைத்தார்கள். ஒவ்வொரு நாழிகையும் மிகச் சுகமாக இருந்தது!

கலந்து பேசிச்செய்வதென்று பலவகையான பாடங்களை, ப்ராஜெக்ட்களில் பீயர் ஸப்போர்ட்டை (peer support) தாராளமாக உபயோகிக்க ஆசிரியர்களுக்குப் பரிந்துரைத்தேன். ராதிகாவுக்கும் உதவும், மற்றவருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ள நல்ல சூழலாக இருந்தன.

ராதிகா கைப்பந்து விளையாட்டில் பரிசுபெற்றவள் என்பதால் அவளை மற்றவருக்குப் பீயர் பட்டி ஆக்கினேன். முரளியும், ஹனீபாவும் கைப்பந்து வீரர்கள். அவர்கள் ஸ்கோர் பண்ணமுடியவில்லை என்றால் மனம் தளர்ந்துவிடுவார்கள். தன் மனோ தைரியம் வளர்த்துக்கொள்ள, இந்த இருவரை ராதிகாவுடைய பொறுப்பில் நியமித்தேன். அவர்களைத் தேர்ச்சி செய்வதிலிருந்து ஆரம்பித்தாள். தன் நிலையைமீறி அவர்களின் பயிற்சியில் கவனம் செலுத்தினாள். மிகமிக மெல்ல ராதிகாவிடம் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஸோஷியல் எமோஷனல் திறமைகள் வளர, நண்பர்கள் கூடின!

அவளுடைய முன்னேற்றத்தை வகுப்பில் வெளிப்படையாகப் பகிர்ந்தேன். எப்படி அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பால் இது நேர்ந்தது என்று.  ஏற்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும், அதனால் புது நபர்களுடன் பழக உதவுவதையும் அவர்கள் செய்ததை வைத்தே உதாரணங்கள் கொடுத்து விவரித்தேன். அவர்களால்தான் ராதிகா திரும்பவும் பாடங்களில் கவனம் செலுத்தினாள் என்பதையும் வலியுறுத்தினேன்.  இதன் சிறந்த விளைவு, ராதிகாவை ஊக்குவித்து, கணக்கு ஒலிம்பியாடிற்குப் பயிற்சி ஆரம்பமானது!

ஆசிரியர்களுடன் கூடும்போது அவர்களுக்கும் பீயர் ஸப்போர்ட்டையும், பீயர் பட்டியினால் தெரியும் நன்மைகளையும் உதாரணங்களுடன் விவரித்தேன்.

மாலைவேளையில் ராதிகா வீட்டிற்கு ராகேஷ், சொளதா எனப் பல வகுப்பு மாணவர்கள் போகத்தொடங்கினார்கள். இதிலிருந்து இந்த வயதிற்குப் பொருத்த வரம்பாக, ஐந்து பேர்கள் கூட்டானது. இது ஆண்-பெண் கலந்த குழுவாக இருந்தது. இவர்கள் மாலை நேரம் இரண்டு கிலோமீட்டர் நடப்பது, இல்லை கைப்பந்து, கேரம் போர்ட், செஸ் விளையாடுவது, சில நாட்கள் தோட்டத்தில் உட்கார்ந்து பேசுவது வழக்கம். ஆரோக்கியமானது! தங்களை அறிந்துகொள்ள வாய்ப்பானது, உடலின் உணர்வைப் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பானது.

கடந்த பதினைந்து வருடமாக ஒவ்வொரு வருடமும் இந்த ஐவர் சந்தித்து வருகிறார்கள், எனக்கும் அழைப்பு வந்துவிடும்! ஒவ்வொருமுறையும் இவர்களின் பெற்றோருக்கு மனதுக்குள் சபாஷ் சொல்வேன். ஆண்-பெண் குழுவை ஆமோதித்து, பழகச் சந்தர்ப்பம் அளித்தற்கு, நம்பிவிட்டதற்கு மிகப் பெரிய சபாஷ். நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை ஒரு சுமையாகும்!

திருப்பாவை – அழகிய பெண்ணே – எஸ் எஸ்

Thiruppavai, Andal paadiya tamil version

 

இந்த ஆண்டு (2018) மார்கழி மாதம் ஒரு மாபெரும் செயல் புரிந்ததற்காக எனக்குள் ஒரு மகிழ்ச்சி அலையே ததும்புகிறது. 

குவிகம் -திருப்பாவை என்ற ஒரு வாட்ஸப் குழு அமைத்து அதில் தினம் ஒரு பாடலாக ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் மூலத்தையும் அத்துடன் நான் எழுதிய  திருப்பாவையின் எளிய பதம்  கொண்ட பாடலையும் ‘அழகிய பெண்ணே’ என்ற தலைப்பில்  அனுப்பினேன். 

கிட்டத்தட்ட 200 நண்பர்களுடன் நானும் தினமும் திருப்பாவையைப் படித்துக் கலந்து உரையாட முடிந்தது நான்செய்த பாக்கியம்.  

கூடிய விரைவில் இவற்றைத் தொகுத்து ஆண்டாளின் பாடல், என்னுடைய எளிய பாடல் மற்றும் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் படங்கள் ஆகியவை சேர்த்துப் புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளேன். படங்கள் திருப்பாவையின் ஒவ்வொரு பாடலின் முழு அர்த்தத்தையும் பிரதிபலிக்கவேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன். 

 

ஒருபானை சோற்றுக்கு ஒருசில பதங்கள்!  

முதல் பாடல்: 

அழகிய பெண்ணே -1 

மார்கழி மாதம் ஒளி நிறைந்த நல்லநாள்
நீராடப் போவோம் வாருங்கள் தோழிகளே !
சீரான ஆய்ப்பாடியின் செல்வச் சிறுமிகளே !
கூர்வேல் போன்றவன் நந்தகோபன் குமரன்
பார்வைக்கு இனியவன் யசோதாவின் இளஞ்சிங்கம்
கார்மேகக் கண்ணன் கதிர்போன்ற முகமுடையான்
நாராயணன் அவனே நல்லருள் தந்திடுவான்
ஊரார் பாராட்ட வாருங்கள் பாவையரே !!

 

திருப்பாவை -1 

மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய்

அழகிய பெண்ணே -30

பால்கடலைக் கடைந்த மாதவனை கேசவனை
பால்நிலா போன்ற முகத்தானை துயிலெழுப்பி
பாமாலை பாடி பரிசில் பெற்றவற்றை
பூமாலை சூட்டிய பெரியாழ்வார் சுடர்க்கொடி
கோதை சொன்ன திருப்பாவை முப்பதையும்
வேதப் பொருளென தப்பாது தினம் சொன்னால்
திருத்தோளும் திருக்கண்ணும் திருமுகமும் உருக்கொண்ட
திருமாலின் திருவருள் தினம்கிட்டும் பாவையரே !!

 

திருப்பாவை -30 

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன                                                                                                                                            சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

 

ஒலிப்புத்தகம்

தமிழில் ஒலிப்புத்தகங்கள்  தற்போது நிறைய வரத்தொடங்கிவிட்டன.

நண்பர் பாம்பே கண்ணன் அவர்களின் பங்கு இதில் மிக மிக முக்கியமானது.

கல்கியின் பொன்னியின் செல்வன் -ஒலிப்புத்தகம்

பொன்னியின் செல்வனை இவர் 78 மணிநேரம்  கேட்கக்கூடிய ஒலிப்புத்தகமாக மாற்றி வெற்றி கண்டது இவரது சிறப்பு. மேலும் எண்ணற்ற ஒலிப்புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இன்னும் நிறைய புத்தகங்களை ஒலி வடிவில் கொண்டுவருகிறார்.

https://www.audible.in/  இல் நிறைய ஒலிப்புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கின்றன. அதற்கு சந்தாதாரராக வேண்டும். அதிகமில்லை மாதம் ரூபாய் 200 மட்டுமே. உங்கள் ஸ்மார்ட் போனில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால் எங்கேயும் எப்போதும் கேட்கலாம்.  அசோகமித்திரன்,( வாசித்தளிப்பவர் திருப்பூர் கிருஷ்ணனாமே ?)   இந்திரா பார்த்தசாரதி ( குரல் அனுராதாவாம்) , கல்கி ,ஜெயகாந்தன்,புதுமைப்பித்தன் போன்றவை இருக்கின்றன.

 

இதோ இரண்டு ஒலிப்புத்தகங்கள் ! பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் வாண்டுமாமாவின் புத்தகங்கள். கேட்டு மகிழுங்கள் !

 

 

 

 

 

அம்மா கை உணவு (11)- சதுர்புஜன்

Image may contain: Baskar Ayer, smiling, eyeglasses and closeup

அம்மாவின் கை உணவு எழுதிக்கொண்டு வரும் திரு சதுர்புஜன் ( உண்மைப் பெயர் பாஸ்கர் ) அவர்களுக்கு பிப்ரவரியில்        ஸ்வீட் 60 .

வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !

 

Image result for பஜ்ஜி

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

இதுவரை .வந்தவை :

1.  கொழுக்கட்டை மஹாத்மியம் , 2. இட்லி மகிமை, 3. தோசை ஒரு தொடர்கதை, 4. அடைந்திடு சீசேம், 5. ரசமாயம்

6. போளி புராணம் , 7. அன்னை கைமணக் குறள்கள் , 8. கலந்த சாதக் கவிதை , 9. கூட்டுக்களி கொண்டாட்டம்

10. சேவை செய்வோம்

இப்போது

 பஜ்ஜி பஜனை !

இடி இடிக்குது மின்னலடிக்குது
போடலாமா பஜ்ஜியை ?
கடலை மாவைக் கரைத்துக் கலந்து
வெட்டலாமா காய்களை ?

உருண்டு திரண்ட உருளைக் கிழங்கு
நான்கே நான்கு வேண்டுமே !
வெங்காயமும் இருந்துவிட்டால்
விறுவிறுப்பு கூடுமே !

வாழைக்காய் இல்லையெனில்
பஜ்ஜி என்பதில்லையே !
கத்திரி, மிளகாய் இல்லையெனில்
கதை முடிவதில்லையே !

அழகழகாய்க் காய்களையே
அரித்து எடுத்துக் கொள்ளுவோம் !
எண்ணைச் சட்டி காய வேண்டும் –
பொறுமை வேண்டும் மக்களே !

கடலை மாவில் தோய்த்தெடுத்து
காயைப் போட்டுத் திருப்பும்போது
இஸ்ஸ் என்ற சத்தம் வந்து
இனிய இம்சை செய்யுமே !

எண்ணையை வடிய வைத்து
எடுத்து எடுத்து போடுவாள் !
போடப் போடக் கணக்கு இன்றி
கபளீகரம் பண்ணுவோம் !

நாக்கு சுடும் என்று சொல்லி
நன்றாய் உள்ளே தள்ளுவோம் !
கண்களிலே கண்ணீர் வர
கணக்கு இன்றி உண்ணுவோம் !
சட்னி சாம்பார் சேர்ந்து விட்டால்
சுவை கூடிடும் உண்மையே !
ஒன்றுமில்லாமல் உண்பதென்றால்
அதுவும் எனக்கு சரி சரி !

சுடச்சுட சுட பஜ்ஜி உண்டு
சுவையில் திளைத்து ஆடுவோம் !
எடுக்க எடுக்க கைக்கும் வாய்க்கும்
போட்டி முடியவில்லையே !

இந்தியாவில் எங்கு சென்றும்
இந்த பஜ்ஜி உண்ணலாம் !
பக்கோடா என்று சொல்கிறான் –
பார்த்தால் நம்ம பஜ்ஜிதான் !

சுபா, கிரி, ரவி, பிரேமா –
எல்லோருமே வாருங்கள் !
பஜ்ஜியை ஒரு பிடி பிடிப்போம் –
கூடித் தின்போம் வாருங்கள் !

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சிம்மவிஷ்ணு

Related image

தென்னிந்தியாவில் பல மன்னர்கள் கி பி 500 லிருந்து 600 ஆண்டுகள் ஆண்டனர்.

அவர்கள்…

பல்லவர், சாளுக்கியர், ராக்ஷ்ட்ரகூடர், கங்கர், களப்பிரர், சேரர், சோழர், பாண்டியர்- என்று பலர்.

அவர்கள் – கலை உணர்வுடன் கோவில்கள், சிற்பங்கள் அமைத்தனர்.

சைவ – வைணவ மத இலக்கியங்களை ஆதரித்து வளர்த்தனர்.

தோள்கள் தினவெடுத்து அருகிலிருந்த நாட்டின்மீது படையெடுத்தனர்.

தோற்றவர்கள் பதுங்கிப் பின் சமயம் கனிந்ததும் வென்றவன் நாட்டில் படையெடுத்தனர்.

பழிக்குப் பழி!!

இரத்தத்திற்கு இரத்தம்!

கூட்டணி அமைத்து –  கொடி பிடித்து – வாள் வீசி – ஒருவரை ஒருவர் கொன்றனர்.

மக்கள் நிம்மதியைக் கண்டிலர்.

 

இந்த சரித்திரப் பாடலுக்கு…

பல்லவன் பல்லவி பாடட்டுமே!

 

சரித்திரத்தில் பெரிய மாற்றம் நிகழும்போது … சில நாயகர்கள் அதற்குக் காரணமாயிருப்பர்.

களப்பிரரின் இருண்ட காலத்தை அழிக்கவந்து…சூரியன்போல ஒளியேற்றியவன் – பல்லவ நாட்டில் சிங்கமாக வந்த அந்த அரசன்…

மாவீரன்!

அவன் பெயரோ ‘சிம்ம விஷ்ணு’!

தந்தையோ சிம்ம வர்மன்!

பேரனோ நரசிம்மன்!

சிங்கம், சிங்கம்2, சிங்கம்3!!

கடிக்காமல்…கதைக்குச் செல்வோம்!

(மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம். இச்சிற்பம் சிம்மவிஷ்ணுவின் பேரனான நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தினது (630-668) எனவறியப்படுகிறது. நன்றி: விக்கிபீடியா )

  

கி பி : 575

அந்த நாள் …

சிம்ம விஷ்ணு அரசனான நாள்..

அது ஒரு பிரம்மாண்டமான முடியேற்கும் விழா அல்ல..

எளிய முறையில் நடந்த விழா…

முடியேற்றவுடன்… சிம்ம விஷ்ணு – மந்திரிகள் மற்றும் படைத்தலைவரை அழைத்து:

“நமது பல்லவ நாடு … இன்று ஒரு எலிவளைபோல் சிறியதாக இருக்கிறது…

நமது கண்ணான காஞ்சி இன்று நம்மிடம் இல்லை.

நமது பெரும்பாட்டனார் குமாரவிஷ்ணு காலத்தில் அடைந்த காஞ்சியை நாம் இன்று இழந்து நிற்கிறோம்.

காட்டில் சீதாதேவியைத் தொலைத்த ஸ்ரீராமனின் மனநிலையில்தான் நான் உள்ளேன்.

சாளுக்கியர்,கங்கர், களப்பிரர், சோழர், பாண்டியர் – இவர்கள் நம்மை நெருக்கி .. சுருக்கிவிட்டனர்.

கம்பளிப்பூச்சிபோல் நாம் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம்.

வண்ணத்துப்பூச்சி போல நாம் சுதந்திரமாகப் பறந்து … பருந்துபோல உயர்ந்து… இவர்களை வென்று  நமது பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவவேண்டும்..

கலை, மற்றும் கவிதை, சிற்பம், ஓவியம், கோவில் என்று நாட்டை அலங்கரிக்கவேண்டும்.”

பேசிக்கொண்டே கனவு நிலையை அடைந்தாலும் … அவன் குரலில் இரும்பின் உறுதி தெரிந்தது..

“இன்றே படைதிரட்டி … காஞ்சியில் இருக்கும் களப்பிரனைத் துரத்தி…ஓடவைக்கவேண்டும்”.

படை பல திரண்டது…

நாட்கள் சில உருண்டது..

களப்பிரர் உள்ளம் மருண்டது…

காஞ்சி சிம்மவிஷ்ணுவின் வசப்பட்டது…

ஓடிய களப்பிரப் படையைத் துரத்தி – காவிரி ஆற்றுவரை சென்று… சோழர்களையும் வென்றான்.

அதில் களப்பிரர்களுடன் அவர்களது கூட்டாளி மழவ மன்னனையும் தோற்கடித்துத் துரத்தினான்.

களப்பிரர்களது ஆட்சிக்கு அது அஸ்தமன காலம்…

தென்னாட்டில் இருந்து பாண்டியன் கடுங்கோன் வேறு – படையெடுத்து – களப்பிரர்களை சிட்டெறும்புபோல அழித்தான். எஞ்சிய களப்பிரர்கள் தஞ்சையில் ஒடுங்கினர்.. வெகு விரைவிலே ‘ விஜயாலய சோழன்’ அவர்களை தஞ்சையிலிருந்து துரத்துவான்..

 

மூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில்:

“சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது.

இவன் காவிரி பாயப்பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்.”

இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயத்தில்:

“இப் பூவுலகில் சிங்கம்போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான், களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றிகொண்டான்”

 

வெற்றியாளனாக இருந்த சிம்மவிஷ்ணு காலத்தில் மற்ற அரசர்களும் சக்திகொண்டே விளங்கினர்:

சாளுக்கியநாட்டில் இரண்டாம் புலிகேசி அரசனாக இருந்தான்; அவன் கி.பி. 642வரை ஆண்டான். கங்கநாட்டைத் துர்விநீதன் (கி.பி. 605-650) என்பவன் ஆண்டுவந்தான். தெற்கே மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டியன் (கி.பி. 600-625) பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான். நாசிக்கிலும் வேங்கிநாட்டிலும் விஷ்ணுவர்த்தனன் என்பவன் (கி.பி.614-635) ஆண்டு வந்தான்.

 

காஞ்சியில் இன்னொரு அரசவைக் காட்சி:

சிம்மவிஷ்ணு புலவர்க்குப் புரவலனாக இருந்தான். ஒருநாள் ஒரு புலவன் அவைக்களத்திற்கு வந்து, நரசிம்ம அவதாரத்தைப்பற்றிய பெருமாள் துதி ஒன்றை வடமொழியில் பாடினான். அதில் இருந்த சொல்லழகும் பொருளழகும் அரசனை ஈர்த்தன. உடனே அவன் பாடகனை நோக்கி:

”இதனை இயற்றியவர் யார்?” என்று ஆவலோடு கேட்டான்.

பாடகன்: “மன்னா! வடமேற்கே அனந்தபுரம் என்னும் ஊரில்  நாராயணசாமி என்பவரது மகன்   தாமோதரன் என்பவர். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப் பெயர்கொண்டார். அப் புலவர் இன்று (கங்க அரசனான) துர்விநீதன் அவையில் இருந்துவருகிறார். நான் பாடிய பாடல் அப் பெரும்புலவர் பாடியதே ஆகும் என்றான்.”

சிம்மவிஷ்ணு: “ஆஹா…எனது மகன் மகேந்திரனுக்கு இன்று மகன் பிறந்துள்ளான். இந்த நரசிம்ம துதி என் மனதை உருக்கிவிட்டாது.. என் பேரனுக்கு நரசிம்மன் என்று பெயர் வைக்கிறேன். அவனது நாட்களில் பல்லவநாடு உன்னத நிலையை அடையும்..”

 உடனே சிம்மவிஷ்ணு ஆட்களை அனுப்பி பாரவியைத் தன் அவைக்கு வருமாறு வேண்டினான். பாரவி காஞ்சி நகரம் வந்து .. புலமையால் அரசனை மகிழ்வித்து, பாக்கள் இயற்றினார்.

 

சிம்மவிஷ்ணுவின்  மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய மத்தவிலாசத்தில் தன் தந்தையைச் சிறப்பித்துள்ளான்:

“சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத் தாங்கும் குலமலைபோன்றவன். நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல நாடுகளை வென்றவன்;வீரத்தில் இந்திரனைப்போன்றவன்; செல்வத்தில் குபேரனை ஒத்தவன்.அவன் அரசர் ஏறு”

 

பின்னாளில் தண்டி என்ற வடமொழிப்புலவர் எழுதிய ‘அவந்தி சுந்தரி’ என்ற கதையில்:

“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான்; கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை அறவே நீக்கினான். அவன் தன்வீரத்தாலும்பெருந்தன்மையாலும் பகை அரசர்களுடைய அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக்கொண்டான்”

Image result for சிம்மவிஷ்ணு

(மகேந்திரவர்மன் கட்டிய சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம்)

சிம்ம விஷ்ணு சீயமங்கலத்தில் உள்ள குகைக்கோவிலை அமைத்தான். சிங்க உருவங்களும் மகேந்திரன் கல்வெட்டும் உடைய அக் குகைக் கோவில் சிம்ம விஷ்ணுவின் காலத்ததாக இருக்கலாம்.

இதனைக் கண்ட பின்னரே மகேந்திரவர்மன் பல குகைக் கோவில்களை அமைக்கத் தொடங்கினான் போலும். வாகாடகர் அஜந்தாக்குகைகளில் வியத்தகு வேலைப்பாடுகளைச் செய்தனர். அவற்றை எல்லாம் சிம்ம விஷ்ணுவும் அவன் மகன் மகேந்திரவர்மனும் பார்வையிட்டு – அந்நினைவு கொண்டே மாமல்லபுரத்திலும் பிற இடங்களிலும் குகைக் கோவில்களை அமைத்திருத்தனர் போலும்.

 

சாம்ராஜ்யங்கள் தோன்றுகின்றன.

சாம்ராஜ்யங்கள் மறைகின்றன.

களப்பிரர் அழிந்தனர்.

பல்லவர் துவங்கினர்…

சில நிகழ்வுகள் கல்லிலோ, எழுத்திலோ பொறிக்கப்பட்டு சரித்திரமாகிறது…

ஆனால் – பல சுவையான நிகழ்வுகள் மௌனமாக நடந்து முடிந்திருக்கலாம்… அவை சரித்திரத்திலிருந்து நழுவியிருக்கலாம்..

என்றோ ஒரு நாள் அந்த சரித்திர ஆதாரங்கள் கிடைக்கலாம்…

இனியும்…

கண்ணில் எண்ணைவிட்டு சரித்திரத்தைத் தேடுவோம்.

 

 

தில்லைத் தென்றல் – மரபுக் கவிதைப் புத்தகம் வெளியீடு (குவிகம் பதிப்பகம்)

Image may contain: 3 people, including Natarajan Ramaseshan, people smiling, indoor

இன்று காலை (டிசம்பர் 30) தி.நகர் குவிகம் இல்லத்தில் குவிகம் பதிப்பகம் சார்பாக கவிஞர்.தில்லைவேந்தன் அவர்கள் எழுதிய ‘தில்லைத்தென்றல்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் ஏடகம் அவர்கள் நூலை வெளியிட திருமிகு.சங்கரிபுத்திரன் ஐயா அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டார். கவிஞர்.தில்லைவேந்தன் அவர்களின் இரண்டாவது நூல் இந்தக் கவிதைத்தொகுதி. முதல் கவிதைத்தொகுதியான ‘வைகறைத்தென்றலையும்’ குவிகம் பதிப்பகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Image may contain: indoor

குவிகம் பொறுப்பாளர் திருமிகு.கிருபானந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கவிஞர் ஏடகம் அவர்கள் நூலைச் சிறந்த முறையில் திறானாய்வு செய்து, வெண்பாக்களிலும், விருத்தங்களிலும் மிகச்சிறந்த முறையில் கவிதைகள் தந்துள்ள கவிஞர்.தில்லைவேந்தன் அவர்களைப் பெரிதும் பாராட்டினார். கவிஞர்.தில்லைவேந்தன் என்ற R.நடராஜன் அவர்கள் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பள்ளி நாட்களிலேயே வெண்பாக்களைப் பள்ளியின் இறுதித் தேர்வுகளில் கூடப் பதட்டமில்லாமல் புனையும் ஆற்றல் பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் நல்ல பரிச்சயமுடையவர். எல்லோரிடமும் இனிய முறையில் பழகும் நண்பர்.

திருமிகு.பானுமதி, சென்னை நிலத்தகவல் திருமிகு.இரா.இராசு ஆகியோருடன் கவிஞர்.தில்லைவேந்தன் அவர்களை நானும் வாழ்த்திப் பேசினேன். கவிதை நூலானது மிக அருமையான முறையில் குவிகம் பதிப்பகத்தால் வடிவமைக்கப்பட்டு நல்ல தரத்தில் 160 பக்கங்கள் வெறும் 120 ரூபாயில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக திருமிகு.கிருபானந்தன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கவிஞர்.தில்லைவேந்தன் அவர்கள் நூலில் தான் பாடியுள்ள கவிதைகளின் கருப்பொருட்கள் குறித்துப் பேசினார். பாரதி பாஞ்சாலி சபதம் பாடியுள்ளதுபோல தான் கடோத்கசக் காவியம் இந்தக் கவிதைநூலில் எழுதியுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார். வங்கமொழியில் உள்ள பாரதத்தைத் தமிழில் தரும் நண்பர் திருமிகு. அருட்செல்வ பேரரசன் Arul Selva Perarasan S அவர்களைப் பெரிதும் பாராட்டினார்.

தமிழன்னையின் வாழ்த்துகள் கவிஞருக்கு நிச்சயம் உண்டு. 

(நன்றி : திரு மந்திரமூர்த்தி முகநூல் பக்கம்) 

திரைக் கவிதை – பா விஜய் – ஆட்டோகிராப் – ஒவ்வொரு பூக்களுமே …

பாடலும் இசையும் படத்தில் அமைக்கப்பட்ட விதமும் நம்மை எங்கோ கொண்டு செல்லும் !

பாடலைப் படியுங்கள்! பிறகு கேட்டுக்கொண்டே பாருங்கள் ! 

Image result for ஆட்டோகிராப் பாடல்

 

படம்: ஆட்டோகிராப்

வரிகள்-பா.விஜய்

பாடியவர்-சித்ரா 

இசை- பரத்வாஜ்

 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

 

 

2018 சிறந்த திரைப்படங்கள்

எங்கள் கணிப்பில் 2018இன் சிறந்த படங்கள் இந்தப் பத்துப் படங்கள் !

இவற்றில் எது முதல் தரம் ?   நீங்களே தேர்ந்தெடுங்கள். 

                                                             இது ஒரு மலையின் மணம் !   

Merku Thodarchi Malai

 

                                                                       புதிய பரிணாமம்

Kolamavu Kokila 

                                                           இன்றைய  வாரிசுப்போர்

Chekka Chivantha Vaanam 

                                                        கிராமத்து மனிதனின் மனம்

Pariyerum Perumal 

                                                                 வசந்தகால நினைவுகள்

96

                                                 

                                                     சென்னையின் கருவாட்டு மணம்

 Vada Chennai 

                                                                    திகிலின் ஒரு பக்கம்

Ratsasan  

                                                             நாளைய புதிய மனிதன்

2.0

                                                        காவல்துறையின் மறுபக்கம் 

 

Imaikkaa Nodigal

                                                       சாவித்திரியின் ஏணிப்படிகள்

Image result for நடிகையர் திலகம் 

குவிகம் இல்லம் அளவளாவல் – – ஆர் கே

 

Image may contain: 1 person, sitting and indoorImage may contain: 1 person, sitting

இன்றைய குவிகம் அளாவளாலில் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன். எனக்குத் தெரிந்து இருமுறை அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்து பிறகு இன்று குவிக அளவளாவல் குவிந்து கைகூடி வந்ததில் அதிர்ஷ்டக்காற்று என் திசையில். காரணம் இல்லாமலில்லை. வங்கிப்பணியின் இரண்டாம் மற்றும் நான்காம் சனி ஞாயிறு விடுமுறையில் பொதுவாக என் சொந்தக்காரர்களைப் பார்த்துவர ஊர் சென்றுவிடுவேன். இம்முறை ஞாயிறு என்கையில்.

பைக்கை நிறுத்தச் சற்றே அவஸ்தைப்பட்டு ஜெயக்கொடி நாட்டி நிறுத்தி குவிகம் இல்லம் சேர்வதற்கு சற்றுமுன் தன் உரை துவங்கியிருந்தார் கி.ரா..!

அளவளாவலின் முழுப்பரிமாணத்தையும் உள்ளடக்கியதாய் அவரின் பேச்சு. மணிப்பிரவாள அருவி. ஊடகத்துறையில் வங்கித்துறையில் தான் வளர்ந்து வந்த பாதையை எளிமையாய் நேர்மையாய் துளியும் பாசாங்கின்றி நேர்படப் பேசினார்.

நல்ல நண்பர்கள் மத்தியில் போலிமுகம் காட்டாமல் எப்படி இயல்பாய் புழங்குவோமோ அதைப்போல அமைந்தது அவர் பேச்சு. ஊடக வளர்ச்சி அடுத்த தளத்திற்கு மாறுவதை, மாற்றம் தவிர்க்க முடியாதென்றும் ஆனால் புத்தக வாசிப்பு குறையாது என்றும் மிக மென்மையாக ஆனால் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். இடைக்கேள்விகள் எதிர் பதில்கள் இவற்றை தர்க்கரீதியாக வெற்றிகரமாக எதிர்கொண்டார். தான் கடந்துவந்த பாதை தந்த பாடங்களைத் தன் நிலை உயர்வுக்கான படிக்கட்டுக்களாக மாற்றிக்கொண்ட அவர் உழைப்புப் பாராட்டப்பட வேண்டியது.

பிரபலங்கள் நிகழ்வுகள் டிவி சேனல்கள் இவைகுறித்து தன்வாழ்வின் எழுத்துசார்
அனுபவங்களை down memory laneல் desending orderஐ மிக அழகாக ascending வரிசையில் குறிப்பிட்டார். தான் கற்றதும் பெற்றதும் என குறிப்பிட்ட அனைத்து விஷயங்களிலும் ஒரு இடத்திலும் கூட தன் பாண்டித்தியத்தை
அதுவாக்கும் இதுவாக்கும் என்று பறை சாற்றவே இல்லை.

விடாமுயற்சி (டார்கெட் என்று வைத்துக்கொண்டு அதை சென்றடைவதுவரை விடமாட்டேன்) பட்டறிவை பட்டை தீட்டி ஞானமாக்கி தனக்கென ஒரு பாதையும் வாசக அணியையும் வைத்திருக்கிறார்.

தன்னம்பிக்கைதான் பெண்களின் தனித்துவ அடையாளம் என்பதில் தெளிவாக இருப்பது அவரின் கடந்துவந்த பாதை தந்த அனுபவச்செறிவு..!

பேசும் குரலின் காத்திரமும் தீர்க்கமும் அவர் எழுத்திலும் எண்ணத்திலும் விமர்சன எதிர்கொள்ளலிலும் சர்வ நிச்சயமாய் பிரதிபலித்தது.!

நல்லவேளை ஞாயிறு என் கைவசம் இன்று. மழை போக்குக்காட்டி கடந்துபோனது..!

எனக்கு லாபம் ஒரு நல்ல பேச்சு கேட்ட அனுபவமும் இந்த ஞாயிறு இனிதாய் நிறைந்ததே எனும் மன நிறைவும்..!
——–அன்புடன் ஆர்க்கே..

பிளாஸ்டிக் தடை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விவரம்: பிளாஸ்டிக் தாள்கள், மேசை விரிப்புக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் விரிப்பான், பிளாஸ்டிக் தெர்மாக்கோல் கப், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் / தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமேதான் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

Image result for தடை செய்யப்பட பிளாஸ்டிக்

எழுத்துருவாக்கம் – நானா அவர்களின் அளவளாவல்

Image may contain: 1 person, sitting

Image may contain: 17 people, including Kirubanandan Srinivasan, Manthiramoorthi Alagu and Natarajan Ramaseshan, people smiling

இன்று டிசம்பர் 16, ஞாயிறு காலையில்குவிகம் சார்பாக சென்னை தி.நகரில் திரு.நானா ( நாராயணன் ) அவர்களுடன் ஏற்பாடு செய்திருந்த எழுத்துருவாக்கம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திரு.நானா அவர்கள் India Today, மய்யம், பாக்யா, வண்ணத்திரை போன்ற பல இதழ்களில் லே-அவுட்டில் தலைமைப் பொறுப்பு உள்ளிட்ட பல பொறுப்புகளில் வேலை செய்தவர். எழுத்தாளர்கள் சுஜாதா, மாலன் உள்ளிட்ட பலருடன் பணிசெய்தவர். இத்துறையில் மிக நீண்ட அனுபவமுடையவர். அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணமுடையவர். பிறரைத் தன்னுடைய அன்பால், நட்பால் தன்பால் கவர்ந்து இழுக்கும் குணமுடையவர். மற்றவர்களை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்துவதில் தான் மகிழ்ச்சியடைகின்ற இனிய பண்பாளர். புன்னகையைப் பொன்நகையாக எப்போதும் அணிந்திருப்பவர்.

இன்றைய நிகழ்வில் நிறைய நண்பர்கள் கூட்டம். எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக, குறும்பட இயக்குநர்கள் எனப் பலரும் எழுத்துத்துறையில் இருப்பவர்கள். எழுத்துருவாக்கம் குறித்த கல்வெட்டுக்காலம், ஓலைச்சுவடி, பிரின்டிங் காலம் தொடக்கம் முதல் தற்கால வளர்ச்சி வரை எல்லாவற்றையும் விளக்கினார் திரு.நானா அவர்கள். லே-அவுட்டின் பங்கு மீடியாத் துறையில் அதிகம். ஆனால் வெளியே தெரியாது. எப்படி? என்பதனைச் சிறப்பாக அவர் விளக்கினார். மிகவும் இயல்பான தெளிவான உரை.

நண்பர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அருமையாகப் பதில்கள் தந்தார் நானா அவர்கள்.

கலந்து கொண்ட அனைவரும் திரு.நானாவிற்கு தங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார்கள்.

உங்கள் வெற்றியும், புதுமையும் என்றும் தொடரட்டும்.
❤️

இல்லாதவன் – நிலா ரவி

Image result for life after death

வெண்ணிலாவையும் விண்மீன்களையும் தொலைத்த தனிமையில் கருமை பூசிக்கிடந்தது வானம். காணும் யாவிலும் காரிருள் கவ்விக் கொண்டிருந்த ஓர் இரவு. காற்றின் தீண்டல் இல்லாது கற்சிலைகளாய் உறைந்திருந்தன மரங்களும் செடிகளும் . பகல் முழுவதும் சுட்டெரித்த அனலின் தாக்கம் நீறுபூத்த நெருப்பாக்கி இருந்தது இரவை.

தவளையின் குரலொன்று தனித்து ஒலித்தது இரவில். ஒரே மாதிரியான சப்தத்தையே மீண்டும் மீண்டும் எழுப்பியது அது. சற்று நேரத்தில் அடங்கியது சப்தம். ஒரு நிசப்தம் அதனை விழுங்கியிருந்தது.
அந்த நிசப்தம் ஒரு நீண்ட சர்ப்பமாயிருக்கலாம். இம்முறை ஆந்தையின் குரல். அந்தப் பறவையும் பறந்து செல்ல ஓசைகள் யாவும் அடங்கி மீண்டும் அங்கே அமைதி பாசியென சூழ்ந்து கொண்டது. பகலின் இரைச்சல்களற்ற யாமத்தின் மௌனத்தில் பூமி இயல்பாய் இருப்பதாகப்பட்டது அவனுக்கு.

படுக்கையில் நெளிந்தான் அவன். இமைப் போர்வைகள் போர்த்திக்கொள்ள மறுக்க நெடிய இரவாய் நீண்டு கொண்டிருந்தது காலம். உறக்கம் இன்றித் தவித்தவன் கட்டிலைத் துறந்து பாய் விரித்துப் படுத்துப் பார்த்தான் தரையில். ஏனோ அவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள். மீண்டும் மீண்டும் நெளிந்தான் உறக்கமின்றி. வீடு மாத்திரம் அல்ல, ஏனோ வீதியிலிருந்த விளக்குகள் யாவும் அணைந்திருந்தன. மொத்த உலகுமே ஒரு குகைக்குள் அடைபட்டதுபோல் .

அந்த நடுநிசியின் நிசப்தத்தையும் இருளையும் கிழித்து ஒலித்தது ஒரு குரல். அவன் இதுவரை கேட்டிராத ஒரு அதிசய குரல் அது.
தன் காது மடல்களைக் கூர்மையாக்கி மீண்டும் அந்தக் குரலைக் கேட்டான் அவன்.
யாரோ யாசகம் கேட்கிறார்கள், அவனது இல்லத்து வாசலில், இந்த நடு நிசியில்.
யார் இந்த நிசியில் அதுவும் தனது வாசலில். வியப்பில் விரிந்தன அவனது விழிகள்.

தானே நித்ரா தேவியிடம் யாசகம் கேட்கையில் தன்னிடமே யாரோ யாசகம் கேட்பது! களைப்பும் சோர்வும் அவனை கட்டிப் போட்டிருக்க எழுந்திட மனமில்லாமல் படுத்துக்கிடந்தபடியே “இல்லை” என்ற பதிலை மட்டும் உரக்கமாக உரைத்தான் அவன்.
“க்ளுக்” என்று சிரித்தது அந்தக் குரல். “எதை நீ இல்லை என்கிறாய்…?”
சிரித்துக் கொண்டே மீண்டும் கேட்டது…
“எதை நீ இல்லை என்கிறாய் இருப்பையா அல்லது
இன்மையையா…?”

“யார் நீ…?” என்றான் அவன்.
“உன்னை நீ அறிவாயா…?” என்றது அந்தக் குரல்.
“எனது உறக்கத்தை ஏன் இப்படிக் கலைக்கிறாய்…?” என்றான்.
“உறங்குபவனே விழிப்பை நீ அறிவாயா…” என்றது குரல்.
” கேள்விகளுக்குப் பதில் கேள்விகளா…”
அவனது புருவங்களை கவ்வி இழுத்துக் கைது செய்தன அந்தக் கேள்விகள்.

“கண்களால் எதையும் காண முடியாத இந்தக் காரிருளில் ஏன் வந்திருக்கிறாய்…” என்று கேட்டான் அவன்
“கண்கள் என்பது எது ? இருள் என்பது எது ?
இருள் என்று எதுவுமில்லை.
கூகையின் விழிகொண்டு காண்…இருளென்று ஏதுமில்லை…” என்றது.

சில நிமிடங்கள் மௌனமானான் அவன். நிசப்தம் நிரவியது மீண்டும் அங்கு .
“இல்லாதவனா நீ… இத்தனை நேரம் எனை ஏன் காக்க வைக்கிறாய்…?”
இம்முறை முதலில் வினவியது அந்தக் குரல்.

“யாமத்து யாசகனே, நாவடக்குகிறாயா. நானொன்றும் இல்லாதவனில்லை.
எனது இருப்பை அறிவாயா நீ. அதை நான் உனக்குச் சொல்வதற்கில்லை.
எப்போதும் கொடுப்பவன்தான் நான்.
இன்றுதான் உறக்க மயக்கம்”
பதிலுரைத்தான்.

மீண்டும் சிரித்தபடி…
அவனது வார்த்தைகளையே திரும்பச் சொன்னது அது.
“உண்மைதான்
நீ இல்லாதவனில்லை…
நானும் இல்லாதவனில்லை
நாம் இருவரும் இங்கிருப்பதால்…
எனில் இல்லாதவன் என்று யாருமில்லை…”

“அவ்வாறெனில் இவ்வாறு யாசகம் கேட்பது வெட்கமாக இல்லையா உனக்கு…”
“யாசகம் தருவதில் விருப்பம் இல்லையா உனக்கு…”
“பிச்சைக் கேட்கும் உன்னிடம் எவ்வளவு அகந்தை…”
“அகத்தைச் சுருக்கி தைப்பது “அகந்தை”…விரித்திடு உன் அகத்தை.”
“எல்லாவற்றுக்கும் பதில் தருகிறாய்…எனினும் இல்லாதவன்தானே நீ…”
ஏளனமாய் கேட்டான்.

“நீ “இருப்பை” மறுப்பதால்தானே
நான் இல்லாதவனாயிருக்கிறேன்…
“இல்லாதவன்” ஆகிய நானும் இங்கிருக்கிறேன்.
உனது கண்களின் முன்பே.
இல்லாதவர்கள் இருப்பது இருப்பை மறைப்பதால், இருப்பை மறுப்பதால்.
இருப்பைப் பகிர்வதால் இல்லாதவன் மறைவான், இருப்பை மறுப்பதால் இல்லாதவன் இருக்கிறான்.
ஆனால் உன்னிடம் விழிக்கவோ தேடவோ மனமில்லை. அதற்கான பொறுமையுமில்லை. அதனால் தான் உன் சௌகரியங்களில் எளிதாக விடைகொள்கிறாய்,
“இல்லை” யெனும் பொய்மையை…”
தீர்க்கமாய் ஒலித்தது அந்தக்குரல்.
பொறி தட்டினாற் போல்அவன் எழுந்து உட்கார்ந்தான்.
எதையோ பெற்றுக்கொண்ட விழிப்பு அவனுக்குள்.
இங்கு யாசகன் யார்…
அவனா இல்லை நானா..?
ஈதவன் யார்…?
ஈதவன் அவனெனில்
இல்லாதவன் யார்…?
அவனது உடலெங்கும் ஓடும் உதிரம் முழுவதும் ஒரு நொடி உறைந்து நின்று மீண்டும் ஓடியது.
துள்ளி எழுந்தான், துயில் துறந்தான்.
எழுந்து நின்று வாசலை நோக்கிக் கால்களை நகர்த்த எத்தனித்தான். நகர்த்த முடியாமல் கயிறாக அவன் கால்களை சுற்றியிருந்தது போர்வைகள்.
கைகளை அசைத்துப் பார்த்தான். கைகளையும் அந்தக் கயிறுகள்தான் பிணைத்திருந்தன. தன் உடல் முழுவதையும் அது பிணைத்திருந்ததையும் உணர்ந்தான்.
கைகளையும் கால்களையும் உதறினான். நீங்குவதாய் இல்லை அந்தக் கட்டுகள். தன்னை இறுக்கமாகப் பிணைத்திருந்த அந்தக் கட்டுகளை மிகுந்த பிரயத்தனத்திற்குப் பின் அவிழ்க்க முயன்றான். அவிழ்க்க அவிழ்க்க அது நீண்டுகொண்டிருந்தது. தொடர்ந்து கட்டவிழ்க்கக் கலைந்து கிடந்தவை மலைபோல் குவியத் துவங்கின. மலைத்து நின்றான் அவன்.
யுகயுகங்களாய், ஜென்மஜென்மமாய் தன்னை அவை பிணைத்திருப்பதாகவே நினைத்தான் அவன். கட்டவிழ்த்துக் கட்டவிழ்த்து களைத்துப்போனான் அவன்.
அப்போதுதான் எங்கிருந்தோ அந்த மாயக் கைகள் அவனது துகிலுரிக்கத்
துணையாக வந்தது.

இந்தக் கைகள்…
இந்தக் கைகள்…
நிறைந்த சபையில் மாதொருத்தியின் மானம் காக்க துகில் தந்த அந்தக் கைகள்…ஏனோ அவனது நினைவுக்கு வந்தது.
அவனது கட்டுக்களை பந்தங்களை விடுவிப்பதும் இன்று அந்தக் கைகள்தானோ.
போர்வைகள் அகல அகலக் கட்டுகளிலிருந்து விடுதலையாகி நிர்வாணமாய் நின்றான் அவன்.
வாசலை நோக்கி ஓடினான்
கதவுகளைத் திறந்தான்…
விழிகளை விரித்துப் பார்த்தான்.
யாசகன் மறைந்திருந்தான்.
அங்கு ஔி நிறைந்திருந்தது…

சற்று நேரம் அந்த ஒளியில் நனைந்தபடி நின்றான் அவன். சில மணித்துளிகளில் அந்த ஒளி மறைந்தது.

அறைக்குத் திரும்பியவன் அவனது கட்டிலில் யாரோ உறங்குவது கண்டு திகைத்தான்.
போர்வையை நீக்கி முகம் பார்த்தான்.
அவனது முகம் தெரிந்தது.

நிலாரவி.

குவிகம் பொக்கிஷம் – சிறுமி கொண்டுவந்த மலர் – விமலாதித்த மாமல்லன்

நன்றி: அழியாத சுடர்கள்  வலைப்பதிவு  

Image result for விமலாதித்த மாமல்லன்

வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN | நேரம்: 12:00 AM |

இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறித்த பார்வையுடன் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தார். காலி டபராசெட் எதிரிலிருந்தது. ஆனால் வேறு யாரோ காபி குடித்ததுபோன்ற பிரமையே அவருக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே ஒன்றும் புரிபடவில்லை. தலைக்கு நாள் மதியத்திலிருந்து இப்போது படுக்கையில் இப்படி உட்காந்திருப்பது வரை, அனைத்தும் நாட்டுப்புறக்  கட்டுக்கதைகளில் சொல்லப்படுவது போலவே நடந்தேறியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு.

XXXvimala2.jpg

முன்தினம் பகல் உணவை முடித்துக்கொண்டு கடைக்கு வந்தார். பையனை சாப்பிட அனுப்பிவைத்து திண்டில் சாய்ந்து கொண்டார். வெளியில் ஊமைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. வாடிக்கையொன்றும் வரவில்லை. காலையிலிருந்து நடந்த வியாபாரத்தைக் கணக்கு பார்த்தார். இரண்டு பொருட்கள் மீட்கப்பட்டுப் போயிருந்தன. மற்றபடி பெரிய வியாபாரமொன்றும் நடந்திருக்கவில்லை. மாதக் கடைசியை நெருங்க நெருங்கத்தான் சூடுபிடிக்கும். முதல் பத்து தேதிகளில் எல்லார் கையிலும் பணம் புரளும்தானே. செய்ய ஒன்றுமில்லாமல் அசட்டுப் பார்வையுடன் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வானம் மூடுவதும் திறப்பதுமாக இருந்தது. இதில் பார்க்க என்ன இருக்கிறது?

அப்போதுதான் அவளைப் பார்த்தார். இருந்த படிக்கே சற்று முகத்தை மட்டும் தூக்கிப் பார்த்தார். எதிர்சாரியில் நின்றபடி அவள் தம் கடையைப் பார்ப்பதைக் கவனித்தார். அவள் தெருவைக் கடந்து படிகளில் ஏறினாள். அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. குட்டைப் பாவாடையும் அதற்குள் செருகப்பட்ட சட்டையும் அணிந்திருந்தாள். இரட்டைப் பின்னல் மடித்து மேற்புறம் ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது. பள்ளிச் சிறுமிக்கு அடகுக்கடையில்போய் என்ன ஜோலி இருக்கப்போகிறது? மிட்டாய் விற்கிற லாலாகடை எனத் தவறிவந்திருக்கும் என்று நினைத்தார். முகம் மட்டும் உடம்புடன் ஒட்டாமல், பெரிய மனுஷி போல் கம்பீரமாகக் களையுடன் இருந்தது. இப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவள் பேசத் தொடங்கினாள்.

இதை எடுத்துக்கிட்டுப் பணம் குடு – மூடியிருந்த வலது கையை நீட்டிப் பேசினாள்.

வயசுப்பையன்கள் மோதிரம் செயின் என்று அடகு வைக்க வருவார்கள். அவர்களிடம் இல்லாத உருட்டெல்லாம் உருட்டுவார். இது உன்னுடையதுதானா? படிக்கிறாயா? வேலை செய்கிறாயா? பெரியவர்களை ஏன் அழைத்து வரவில்லை? என்று ஊர்ப்பட்ட கேள்விகள் கேட்பார். அதே சமயம் வந்தவனையும் போகவிடமாட்டார். அவனைக் கலவரப்படுத்தியே குறைவான பணமாற்றலில் காரியத்தை முடித்துவிடுவார். இவ்வளவு சிறிய பெண்ணிடம் ஏனோ அவரால் ஒன்றுமே பேச முடியவில்லை. சிறுமியின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அடிக்கடி பார்க்கிற முகம் போல அவ்வளவு சௌஜன்யமாக இருந்தது. எங்கே எப்போது என்கிற கண்ணிகள் இணையவில்லை.

நான் சீக்கிரம் போகணும்.

அவருடைய பேரன் நச்சரிப்பதை நினைவுறுத்தியது. ஆனால் சிணுங்கல் குழைவு இவையொன்றுமில்லை. எஜமானியின் அவரசம் போல இருந்தது அது.

நிம்பள் என்னா கொண்டாந்திருக்கான்.

பூ.

என்னாது.

பூ. புஷ்பம்.

அவருக்கு தலைகால் புரியவில்லை. வேகமாக குறுக்கு மறுக்காய் தலையசைத்து மறுத்தார். ’- அதெல்லாம் நம்பள் வாங்கறானில்லே’ – நியாயமாய் அவள் சொன்னதைக் கேட்டு சிரித்திருக்க வேண்டும். ஆனால் அதொன்றும் செய்யமுடியவில்லை அவரால்.

Image result for தங்க ரோஜாப்பூ

தேர்ந்த ஜாலவித்தை நிபுணனைப் போல மூடியிருந்த வலது கையை விரல்கள் மெல்லப் பிரிய விரித்தாள். அவர் முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே இதைச் செய்தாள். இதழ்களை நமுட்டிச் சிரிப்பது போலிருந்தது. அசட்டுத் தனமாய் ஆச்சரியப்படப் போகிறாய் என்று சொல்லாமல் சொன்னது அவள் செய்கை.

நிஜமாகவே அசந்துபோனார். வேறு வழி. நட்ட நடுப்பகலில் பேத்தி போல ஒரு சிறுமி விலைக்கு வாங்கிக்கொள் என்று வந்து நிற்கிறாள். அதற்கு மேல் கையை விரித்தால் தங்க ரோஜா. ரோஜாப்பூ சொக்கத் தங்கத்தில். சந்தேகத்திற்கு இடமேயில்லை. அறுபத்து மூன்று வயதிலும் கண்ணாடியில்லாமல் பார்க்கிற கண் தவறாது. பிரமிப்பெல்லாம் சொற்ப நேரம்தான். தரைக்கு நடை போட்டது மனம். கபாலத்தில் உமிழ் நீர் சுரப்பது கண்ணின் மணியில் பளபளத்தது. கையைப் படக்கென்று மூடிக் கொண்டாள். கண்ணாடிப் பெட்டியின் மீதிருந்தும் கையை எடுத்துக் கொண்டவளாய் பின்னால் நகர்ந்தாள்.

நிம்பள் எவ்ளோ கேக்றான்.

ஆயிரம்.

என்னாது!

ஆ யி ர ம்.

அவ்ளோ அல்லாம் நம்பள்கு கட்டாது.

கட்டாதுனாப் போ, வேற கடைக்குப் போறேன்.

நம்பள் அதைத் தேச்சி பாக்றான்.

பூவை நான்தான் பிடிச்சிப்பேன். கல்லை எடுத்து நீ ஒரசிக்கணும்.

இரண்டு மூன்று முறை உரசினார். முந்திய அபிப்ராயத்தை அது கொஞ்சமும் மாற்றிவிடவில்லை. எனினும் இன்னொருமுறை சோதித்துவிடலாம் என்றது உள்மனம். ஒழுங்காய்க் கழுவிக் கொள்ளக்கூடத் தெரியாத குழந்தையிடம் போய் பதினெட்டு யோசனையா? வலிய வரும் அதிர்ஷ்டத்தை நழுவ விடாதேயென அதட்டியது மூளை.

கை மாறியது.

குள்ளமேசையின் கீழ்டிராயரைத் திறந்து உள்ளே வைத்தார். பணத்தை இரண்டாம் முறையாக அவள் எண்ணிக் கொண்டு இருந்தாள். திரும்ப ஒரு தடவை திறந்து பார்த்து மூடினார்.

யார் முகத்தில் விழித்தோம், இப்படியொரு அதிர்ஷ்டம் தேடிவந்து பிடிபிடியெனக் கொட்டிவிட்டுப் போக என்று நினைத்தார். சந்தோஷம் நெஞ்சையடைத்து நெட்டியது. சந்தோஷப்படுவதில் என்ன பிழை? துளியும் வஞ்சகமில்லை. சரியாகச் சொன்னால் யாரும் யாரையும் ஏமாற்றக் கூட இல்லை. தெரு வழியே போய்க் கொண்டிருக்கிறோம். காலில் ஏதோ தட்டுகிறது. குனிந்து பார்த்தால் ரூபாய்க் கட்டு. எடுத்துக் கொள்கிறோம். நாமா தேடிப் போனோம். தானே வழியில் வந்தது. வேறு என்ன செய்ய? ஆள் யாரெனத் தெரிந்தால் கொடுத்துவிடப் போகிறோம். ஆனால் அதென்ன அவ்வளவு சுலபமா? பணத்தைப் பார்த்ததும் தரையெல்லாம் சொந்தக்காரர்கள் முளைக்கிற காலமிது. எல்லோரும் தனதென்றுதான் சொல்லுவான். தொலைத்தவன் நிச்சயம் இவர்களில் ஒருத்தனில்லை. தெய்வம் தேடிவந்து கொடுத்த பணத்தை மறுக்க நமக்கென்ன உரிமை?

நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருந்ததில் கால்கள் மரத்துப் போயிருந்தன. அந்தச் சிறுமியிடம் முகவரி வாங்கவில்லை என்பது நினைவிற்கு வந்தது. சுதாரித்து கடைவாசலுக்குப் போய் கதவைப் பிடித்தபடி தெருவின் இருபுறமும் பார்வையை ஓட்டினார்.

வழக்கம்போல் இருந்தது தெரு. மாவுமெஷின் இரைச்சல். தெருக்கோயில் மரத்தடியில் நிழல்வாங்கும் ரிக்ஷாக்கள். சாராயத் தள்ளாட்டம். கிழங்கு விற்கும் கிழவிகள். சாக்கடையில் கால்வைத்து கோலியடிக்கும் சிறுவர்கள். குந்தியிருந்து நடக்கின்ற சூதாட்டம். கைஸ்டாண்டில் சலவைத்துணி சுமக்கும் கடைப்பையன். காலகட்டி மலம் கழித்து நகரும் எருமைகள். போஸ்டர் தின்னும் பசுமாட்டின் மூத்திரத்தை பஞ்சபாத்திரத்தில் பிடிக்கும் திவசப் புரோகிதர். ரோகம் பீடித்த நகரோரத் தெரு வழக்கம் போல் இருந்தது.

சிறுமியைக் காணவில்லை.

முகவரி இல்லாவிட்டால் என்ன. அதுவும் நல்லதற்குத்தான். யாரையேனும் அழைத்து வந்தாலும் ஒரு ஆதாரமுமில்லை. கனத்தை வைத்துப் பார்த்தால் எட்டுப பத்துப் பவுன் தேறும். ஏழெட்டு கிராம் செம்பைக் கழித்தாலும் இன்றைய தினத்திற்கு கிராம் 180 ரூபாய்.

உள்ளே வாங்கோம்மா.

கிழவியும் பெண்ணுமாக உள்ளே வந்தனர். அவர் தம்மிடத்தில் வந்து உட்கார்ந்தார்.

உக்காருங்கோம்மா.

உட்கார்ந்தபடி, இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையை விரித்து காகிதப் பொட்டலத்தை எடுத்தாள். இரண்டு கம்மல், மூக்குத்தி முதலியவற்றைக் கண்ணாடிப் பெட்டியின் மேல் வைத்தாள். அவற்றைப் பரிசோதிக்கத் தொடங்கினார். விசும்பும் சப்தம் கேட்டது. தலையை நிமிர்த்தாமலே பார்த்தார். கும்குமப்பொட்டு தவிர ஆபரணமற்றிருந்த அந்தப் பெண் மூக்கும் கன்னமும் துடிக்க அழுது கொண்டிருந்தாள். கிழவி தேற்றிக்கொண்டு இருந்தாள். தராசில் நிறுத்துப் பார்த்தார். உரசிப் பார்த்து உறுதி செய்துகொண்ட பின் கிழவியை நோக்கிக் கேட்டார்.

நிம்பள் எவ்ளோ கேக்றான்.

அறநூறு ரூபா வோணும் சேட்டு.

அல்லாம் டோட்டல் பாஞ்ச் பவுன் ஏளு கிராம். கல்லு செம்பெல்லாம் போனாச்சா பாஞ்ச் பவுன்க்கும் கொறையறான். நம்பள் நானூறு தரான் – என்றபடி நான்கு விரல்களைக் காட்டினார்.

சேட்டு சேட்டு அப்பிடி சொன்னீனா எப்பிடி சேட்டு. மருமவப்புள்ளய ஆஸ்பத்திரில சேத்துக்குது. டாக்டரு செலவு மருந்து செலவெல்லாம் இருக்குது சேட்டு. கம்பெனிலயும் சம்பளமில்லாத லீவுதான் குடுத்துருக்கான். வூடும் நடக்கோணும். பாத்துக்குடு சேட்டு.

நம்பள் என்னாம்மா செய்றான்.

அவதினுட்டுல்ல வந்துருக்கோம். பாத்துக் குடு சேட்டு.

நம்பள் நானூறு தரேன் சொல்றான். உதர் கடையிலே அதும் தரானில்லே இதுகு.

இல்ல சேட்டு பாத்துக் குட்தீன்னா உம் புள்ளகுட்டியில்லாம் நல்லாருக்கும் சேட்டு.

நிம்பள் ஒன்னு செய்ங்கோமா. கம்பல் அடகு வெக்றான். மூக்தி விக்றான். நம்பள் டோட்டல் ஐநூறு தரான். நிம்பள் இஸ்டம் செய்றான்.

பையன் வந்தான். ரசீது போடச் சொல்லி, அவர்களை ஒரு வழியாக அனுப்பி வைத்தார். விளக்கு வைக்கிற நேரமாகிவிட்டது. நெகிழ்ந்திருந்த கச்சத்தை சரிபண்ணிக் கொண்டு இரவு உணவிற்காக மாடிக்குப் போனார்.

கொஞ்சம் ஓய்வெடுத்த பின் கடைக்கு வந்தார். நன்றாக இருட்டி விளக்குகள் போடப்பட்டிருந்தன. அவை இருளை அதிகப்படுத்திக் காட்டின. மகனை அனுப்பிவிட்டுத் திண்டில் சாய்ந்தார். சாய்ந்தபடிக்கே குள்ள மேஜையின் கீழ் டிராயரைத் திறந்தார். ஒரு அழகான ரோஜா மலர் இருந்தது. பரபரப்பாய் மேல் டிராயரை இழுத்தார். சில்லறைக் கிண்ணங்களும் அவற்றினடியில் நோட்டுகளும் இருந்தன. மேஜைக்கடியில் கையைச் செலுத்தி அபத்தமாய் துழாவினார். பதைப்புடன் அங்கிருந்த இரும்புப் பெட்டியைத் திறந்தார். லாண்டரிக் கடைப் பையன் நூறு ரூபாய் தாளை நீட்டி சில்லறை கேட்டான். இரும்புப் பெட்டியை மூடிக் கொண்டு ’நை நை ஜாவ்’ என்று எரிந்து விழுந்தார். அவன் போனபின் திறந்து பார்த்தார். இருக்கிற பொருட்கள் பத்திரமாய் இருந்தன. அதைப் பூட்டிவிட்டு கீழ்டிராயரைத் திறந்தார். துல்லியமாக அந்த ரோஜாமலர் வீற்றிருந்தது.

தரையில் கையூன்றி எழுந்து கடைவாசலுக்குப் போனார். மாடியைப் பார்த்து மகனுக்குக் குரல் கொடுத்தார். வந்தவனிடம் விஷயத்தைக் கூறினார். சாவியை அவரே எடுத்துப் போய்விட்டதாகவும், ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவரை தொந்தரவு செய்ய வேண்டாமென்று, கைப்பணத்திலேயே தான் வியாபாரம் செய்ததாகவும் மகன் கூறினான். திரும்பவும் குனிந்து திறந்து பார்த்தார். இன்னும் நூறாயிரம் முறை மூடித் திறந்தாலும் நான் நான்தான் என்றது ரோஜாமலர். பையனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, இடுப்பு பெல்ட்டை இறுக்கியபடி தெருவில் இறங்கினார்.

சாதாரணமாக தெருவில் அதிகம் நடமாடுபவரல்ல அவர். அப்படியே நடக்க நேர்கையில், பஞ்சகச்சத்தைக் கெண்டைக் காலுக்கு உயர்த்திக் கொண்டு நிதானமாகவும், மாட்டு மனிதச் சாணங்களை மிதித்து விடாமல் ஜாக்கிரதையாகவும் நடப்பார். அதையெல்லாம் கவனிக்கிற நிலையில் அப்போது இல்லை. அவருடைய மனவுலகில் ஒரு சிறுமி. அவள் கையில் ஒரு தங்க மலர். அதை ஆவலுடன் கையில் எடுக்கிறார். மறுகணம் அது வெறும் மலராகி கையைத் தீயாய்ச் சுடுகிறது.

தெருக்கள் விளக்கின்றி இருண்டிருந்தன. ஜன்னல்கள் அற்ப ஒளியைக் கசியவிட்டுக் கொண்டிருந்தன. அவற்றில் உட்கார்ந்து பல்வேறு ஸ்தாயிகளில் பாடம் படித்துக் கொண்டிருந்த சிறுசுகள் மீதே அவர் பார்வை பட்டு நகர்ந்தபடி இருந்தது. கண்களை இடுக்கிய வண்ணம் தெருக்களைச் சுற்றி வந்தார். புகையும் வயிற்றைக் குமட்டும் நாற்றமும் வரத் தொடங்கியது. கூவம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இந்த இடங்களில் இருக்க நியாயமில்லை என்று ஒரு தெருவில் திரும்பினார். அதுபோய் ஒரு வீட்டில் முட்டிக் கொண்டது. வந்த வழியே திரும்பி வேறு தெரு பார்க்க நடந்தார். பார்வையில் படும் சிறு பெண்களெல்லாம் அசப்பில் மலர் கொண்டு வந்த சிறுமியைப் போலவே தோன்றினர். கடைக்குத் திரும்ப இருந்தவர் எதற்கும் கோயிலை எட்டிப் பார்த்துவிடலாம் என்று குளத்திற்காய் திரும்பினார்.

கோபுரத்து மெர்குரி விளக்கு, இருண்ட வானத்தின் பின்னணியில் ஒற்றைக்கல் மூக்குத்தியென சுடர் விட்டது. நீரற்ற குளம் அமைதி கொண்டிருந்தது. மைய மண்டபத்தில் ஒற்றை நெருப்புப் புள்ளி மங்கி ஒளிர்ந்து ஆளிருப்பதைக் காட்டியது. படிக்கட்டு அனுமார் கோயில் விளக்கு, அணைந்தால் தேவலாம் என்று முணுக்முணுக்கென எரிந்தவண்ணம் இருந்தது. ஏற்கெனவே சில சமயம் இந்தப் பக்கம் நடந்திருந்தாலும், கடக்கவியலா நீளம் கொண்டிருப்பதான பிரமிப்பை அளித்தது குளத்தங்கரை.

பிரதான வாயிலுக்கெதிரில் யானை நின்றிருந்தது. அதைச் சுற்றி ஒரே மொட்டைப் பட்டாளம். யானையிடம் என்ன இருக்கிறதென்று எல்லோரும் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். போதாதென்று வெளியூரிலிருந்து வேறு கூட்டம். அவருக்கு எரிச்சலாக வந்தது. கும்பலைச் சுற்றிக் கொண்டு உள்ளே சென்றார். ஒவ்வொரு சந்நிதியாய் நகர்ந்தார். பெரும்பாலும் குழந்தைகளே இல்லை. ஏகமாக அலைந்தததில் கால்கள் விண்ணென்று தெரித்தன. பிரசாதக் கடையருகிலிருந்த படிக்கட்டில் போய் உட்கார்ந்தார். ஒரு மொட்டைக் குடும்பம் கசக்மொசக்கென்று தின்றுகொண்டிருந்தது. தரையெங்கும் இலைகளும் சோற்றுப்பருக்கைகளும் இறைந்து கிடந்தன. சந்நிதிகளை விடவும் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாயிருந்தது.

என்ன சேட்டுவாள் அபூர்வமா இந்தப்பக்கம். என்ன விசேஷம். மைசூர் பாக், தேங்குழல் இருக்கு. என்ன சாப்பட்ரேள் – வியர்வையை சுண்டிவிட்டு, அசுரகதியில் பொட்டலம் கட்டியபடி பேச்சுக் கொடுத்தார் மடப்பள்ளிக்காரர். சுரத்தின்றி ஏதோ சில வார்த்தை பேசிவிட்டுக் கிளம்பினார்.

அவருக்குப் படபடப்பாக வந்தது. என்ன அநியாயம். பெரிய பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதைப் போலிசில் போய் புகார் பண்ண முடியுமா? இல்லை யாரிடமாவது சொல்லி அழத்தான் முடியுமா? எவன் நம்புவான். நிஜமாகத்தான். கனவில்லை. கதையில்லை. ஒரு சின்னப் பெண். ஸ்கூல் போகிற பெண். பாவாடை சட்டை ரெட்டை ஜடை. என்னை ஏமாற்றி விட்டது. கொடுக்கும்போது தங்கம்தான். சந்தேகமேயில்லை. நன்றாக உரசிப் பார்த்துதான் வாங்கினேன். வேறு யாரும் எடுத்து ஏமாற்றியிருக்கலாம் என்கிற பேச்சுக்கும் இடமில்லை. சாவி என்னிடம்தான் இருந்தது. கண்கட்டி வித்தையோ, என்ன மாயமோ. அந்தச் சிறுமியே நிஜமோ பொய்யோ. ஆனால் ஆயிரம் ரூபாய் இருப்பில் குறைவது உண்மை.

அந்தச் சிறுமியின் பிராயத்திலேயே மதராஸ் வந்தாயிற்று. தாத்தாவின் அருகிலிருந்து பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொண்ட தொழில். வேடிக்கை போல் விளையாட்டைப் போல் கரைந்து கற்றுக் கொண்ட தொழில். ஆரம்ப நாட்களில்கூட இப்படியொன்று நிகழ்ந்ததில்லை. தாத்தா ரொம்ப உற்சாகப்படுத்துவார். பேரனின் சூட்டிகையில் ஏகப் பெருமை. அப்பாதான் சிறிய தவறுக்கும் பயங்கரமாகக் கத்துவார். பெட்டியை பூட்டிய பின்னும், சாவி அதிலேயே தொங்கிக் கொண்டிருந்தால் போயிற்று. நிறைய தடவை விரல் முட்டுகளில் கடைச் சாவியாலேயே அடித்திருக்கிறார். அப்பா அடிக்கடி சொல்லுவார். முகத்தைப் பார்த்ததும் சொல்ல வேண்டும். அவன்தான் தேர்ந்த வியாபாரி. இது எப்படி. திரும்ப வந்து மீட்குமா? இல்லை, இப்போதிருந்தே இது நம்முடையது தானா என்று முடிவு செய்யத் தெரிய வேண்டும். குடிகாரன் சூதாடி போன்றவர் வைக்கிற பொருள் திரும்ப அவன் கைக்குப் போகப் போவதில்லை. அப்படியான ஆட்களிடம் அடிபிடி பேரம் பேசக்கூடாது. இவ்வளவு தான் என்று கறாராக ரெண்டு முறை சொன்னாலே போதும். அவனுக்கு வேண்டியது பணம்; அதுவும் உடனே. அவர்களை சீக்கிரம் முடித்து அனுப்ப வேண்டும். தாமதப்படுத்தினால் வேறு கடை பார்க்கப் போய்விடுவான். இப்படி இப்படியாக தாத்தாவின் ஞானம் அப்பாவின் அறிவு மற்றும் தாமே சுயமாகக் கண்டுகொண்டு அமல்படுத்திவரும் சூட்சுமங்கள் என்று எதற்கும் ஓர் அர்த்தமின்றிப் போய்விட்டது.

அவருக்குக் குளிர்வது போல் இருந்தது. ஒற்றைத் தெருவிளக்கில் பனியிறங்குவது துல்லியமாகத் தெரிந்தது. தேரடியில் பெரும்பாலான கடைகளை அடைத்துக் கொண்டிருந்தனர். மீதப்பட்ட பழங்கள், அழுகல் எனத் தரம் பிரித்து ஜவ்வுத்தாள்களால் தள்ளுவண்டிகளை மூடிக் கொண்டிருந்தனர். மணி பத்துக்கும் மேல் ஆகிவிட்டிருக்கும் போல் தோன்றியது. அநேகமாக அந்தப் பகுதி முழுக்க அலைந்தாயிற்று. இனிப் பயனில்லை. அசதியும் சோர்வும் அந்தரத்திலிருந்து தோன்றியவை போல அவர் மீது திடீரெனக் கவிந்தன. சிரமமாக இருந்தாலும் சற்று வேகமெடுத்து நடந்தார்.

XXX

வேலைக்காரச் சிறுவன் காபி டபராவை எடுததுக் கொண்டு போனான். எண்ணக்கோர்வை அறுபட வெளியில் பார்த்தார். வெயில் சூடேறத் தொடங்குவதை வீசிய காற்றின் வெம்மையிலிருந்து உணர முடிந்தது. எது எப்படியானாலும் கடை திறந்தாக வேண்டும். நாளை வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை. ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. சோர்வாயிருந்தாலும் அன்றைய தினத்தைத் தொடங்க ஆயத்தமானார்.

கடையைத் திறந்து வைத்திருந்தான் மகன். அவனுடைய பொறுப்புணர்ச்சியை உள்ளூர பாராட்டிக் கொண்டார். எனினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், காலை ஆகாரம் உண்டானா எனக் கேட்டு அவனை அனுப்பி வைத்தார். திண்டில் சாய்ந்தபடியே இடுப்புச் சாவியை எடுத்தவர் ஒருகணம் நிதானித்தார். சுயரூபத்தை அடைந்திருக்கலாகாதா என்கிற நப்பாசை அவரைப் பீடித்தது. கழுத்தை ஒடித்து திரும்பி அண்ணாந்து தலைக்கு மேல் நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த மகாவீரரைப் பார்த்து மனதிற்குள் பிரார்த்தித்தபடி கீழ் டிராயரைத் திறந்தார். அப்போதுதான் கொய்யப்பட்டது போல் ரோஜா மலர் நிர்மலமாய் காட்சியளித்தது.

இரவு தூக்கமின்மையால் கண்கள் எரிந்தன. உடல் வெம்மையடைந்து தலை கனத்தது. மகன் சீக்கிரம் வந்தால் தேவலாமென்று இருந்தது. படுத்துக் கொள்ள வேண்டும்போல் அசதி அவர் உடலையும் மனதையும் வியாபித்தது. அவருடைய கடைசிப் பேரன் கைகளால் படிகளைப் பிடித்து ஏறி கடைக்குள் வந்தான். வேறு சமயமாயிருந்தால் குழந்தையைத் தூக்கி மார்பிலணைத்துக் கொஞ்சியிருப்பார். யோசனையில் அவனையே வெறித்தபடி இருந்தார். குழந்தை குள்ள மேசையில் கையூன்றி ஏறினான். மூடப்படாதிருந்த கீழ் டிராயரில் மலரைப் பார்த்ததும் குதூகலமாய் மழலையில் கூவிக் கொண்டு அதையெடுக்கக் கையை நீட்டினான். எரிச்சலுடன் அவன் கையைத் தட்டிவிட்டு மேலே போகும்படி விரட்டினார். தாங்கவியலாத ஆற்றாமையுடன் மலரை எடுத்துத் தெருவில் வீசினார். அது சாக்கடையோரத்தில் போய் விழுந்தது.

கனத்த பேரேட்டைத் தூக்கி வைத்துக் கொண்டு வேலையில் மூழ்கினார் அவர்

 கனவோ  வாழ்க்கை ? – தில்லைவேந்தன்

Related image

கனவு காணும் உரிமையினைக்
     கட்டுப் படுத்த யாருமில்லை.
மனமும் கேள்வி தொடுப்பதில்லை
     வந்து விதியும் கெடுப்பதில்லை
சினவில் வேந்தன் கனவினிலே
     திரிந்து பிச்சை எடுப்பதுண்டு.
தினமும் இரந்து  வாழ்பவனோ
     செல்வச் சிறப்பில் மிதப்பதுண்டு.

ஏக்கம், துயரம் நோயெல்லாம்
     இருந்த போதும் தனைமறந்த
தூக்கம் தன்னில் வரும்கனவு
     துய்க்க வைக்கும் இன்பத்தை.
வாய்க்கும் கனவு சிலநேரம்
     வாட்டித் துன்பம் தருவதுண்டு..
யார்க்கும் புரியாது அதன்தன்மை.
      எவரே அறிவார் முழுஉண்மை ?

சென்ற கனவில் பொறிவண்டு
     தேனை மலரில்  அமர்ந்துகொண்டு
நன்று  பருக   நான்கண்டேன்.
     நண்ணும் ஐயம் ஒன்றுண்டு.
மன்றில் மயங்கும் ஓர்வண்டின்
     மாயக் கனவில் மானிடனோ
இன்று வாழும் என்வாழ்க்கை ?
      எதுவோ  உண்மை யாரறிவார்?

         
                                 

ஹைகூ – மு.முருகேஷ்

ஹைக்கூ

Related image

 

கூவுதலை நிறுத்திவிட்டு

கேட்க ஆரம்பித்தது குயில்

சில்வண்டின் கீச்ச்ச்ச்

சறுக்கி சறுக்கி

மேலேற மேலேற

வழுக்குப்பாறையில் ஆட்டுக்குட்டி

 

குப்பையைக் கிளறிய

கோழிக்குஞ்சு மெல்ல அதிர்ந்தது

தாயின் இறகுகள்

 

கழுத்தை இறுக்கியது

தூக்குக் கயிறு

தரை தொட்டன பாதங்கள்

 

ஒற்றை விரலை உதட்டில் வைத்து

‘உஷ்’ அமைதி என்றார் குரு

ஆர்ப்பரித்தன குழந்தைகள்

 

எல்லையில் போர்

பக்கத்து வீட்டோடு சண்டையிடும்

படைவீரரின் மனைவி

 

தூக்கம் தப்பிய நாளொன்றில்

தனிமையை விரட்ட அருகிருந்தது

பசித்த கொசு

 

அறுந்த செருப்பைக்

கழட்டிவிட்டு நடந்தேன்

நின்றுபோனது பயணம்

 

நீண்ட நெடுநேரமாய்

பேசிக் கொண்டிருந்தோம்

சொல்வதற்கு ஒன்றுமில்லை 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

இசைப் பிரியர்களுக்கு டிசம்பர் மாதம் எப்படியோ, அப்படியே புத்தகப்பிரியர்களுக்கு ஜனவரி மாதம் – இவ்வருடமும் புத்தகக் கண்காட்சி YMCA மைதானத்தில் கோலாகலமாக நடக்கிறது. இந்த 42 ஆவது கண்காட்சியில் 800க்கும் அதிகமான அரங்கங்கள், இலட்சக் கணக்கான புத்தகங்கள், ஆடியோ புக்ஸ் இத்தியாதிகள்.

எல்லா அரங்குகளிலும் அநேகமாக எல்லா பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கின்றன. பெரிய பதிப்பகங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில் விற்பனை செய்கின்றன – எல்லோர் கைகளிலும் ஏதாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் – மகிழ்ச்சியான வாசகர்கள்!

பிரபல எழுத்தாளர்கள், அரங்குகளில் வாசகர்களுடன் அளவளாவிக் கொண்டும், புத்தகங்களில் கையொப்பம் இட்டுக்கொண்டும், புத்தகங்கள் வாங்கிக்கொண்டும் உலா வருகிறார்கள்!

முகநூல் நண்பர்கள் நேரில் முகம் பார்த்துப் பேசி மகிழ்கிறார்கள்.

ஆங்காங்கே, சிறுசிறு கூட்டங்களில் புதிய புத்தக வெளியீட்டு வைபவங்கள் நடந்தவண்ணமிருக்கின்றன.

ஊடகங்கள், பிரபலங்களையும், வாசகர்களையும் பேட்டி எடுப்பதும், ‘வீடியோவில்’ பிடிப்பதும் இடையிடையே நடந்துகொண்டிருக்கின்றன!

துணை இயக்குனர், எழுத்தாளர் சரசுராம் அவர்களின் ‘ராஜா வேசம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா அரங்கு 49ல் நடந்தது. இயக்குனர் சற்குணம் வெளியிட முதற்பிரதியை நான் பெற்றுக் கொண்டேன் – மிக்க மகிழ்ச்சியுடன்!

Zero Degree Publishing (எழுத்து பிரசுரம்) அரங்கில் அமர்ந்துகொண்டு, நேரத்தை வீணாக்காமல் ப்ரூஃப் கரெக்‌ஷன் செய்து கொண்டிருந்த எழுத்தாளர் சாருவுடன் சில நிமிடங்கள் – அவரது ‘நாடோடியின் நாட்குறிப்புகள்’ அவர் கையொப்பமிட்டு வாங்கிக்கொண்டேன்!

நற்றிணையில் எம்.எல். (வண்ணநிலவன்), ஆகாயத் தாமரை (அசோகமித்திரன்), மகா நதி (பிரபஞ்சன்), மற்றும் எஸ் ரா வின் சாகித்திய அகாடமி விருது பெற்ற ‘சஞ்சாரம்’, சுதாங்கனின் ‘இன்று’ டன் ‘நான்’, ஆ.மாதவனின் ‘மொழிபெயர்ப்புக் கதைகள்’, ‘சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ’, வேணு வேட்ராயனின் ‘அலகில் அலகு’, பரிபாடல் (புலியூர்க்கேசிகன்) என்னுடன் சேர்ந்து கொண்டன – இது முதல் சுற்று!

இரண்டாவது சுற்றில், ‘கடல்புரத்தில்’, ‘தெரிந்த பாரதம், தெரியாத பாத்திரம்’ (இந்திரா சவுந்தர்ராஜன்), ’முற்றுப்பெறாத தேடல்’ (லா.ச.ரா), சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மூன்றாம் தொகுதி), விருட்சத்திலிருந்து, ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்’ (அரவிந்த் சுவாமிநாதன்), ‘ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்’ (அழகிய சிங்கர்) புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன்!

இவை தவிர, கிருஷ்ணா கிருஷ்ணா (இ.பா), சிதம்பர நினைவுகள் (கே.வி.ஷைலஜா), பீரோவுக்குப் பின்னால் (பாக்கியம் ராமசாமி), ‘சிவப்பு ரிக் ஷா’ (தி.ஜானகிராமன்), ‘நிறக்குருடு’ (சுதாகர் கஸ்தூரி) ஆகியவையும் நட்புகளுக்குக் கொடுப்பதற்காக!

விருட்சம் அரங்கில் ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்’ புத்தகத்தை அறிமுகம் செய்து ஓரிரு வார்த்தைகள் நான் பேச, சிங்கர் அதை ஓளிப்பதிவு செய்தார். சுற்றிலும் எழுந்த பேச்சு, மைக் அறிவுப்புகள் மற்றும் சப்தங்கள் பதிவு செய்யமுடியாமல் படுத்தவே, பிறகு தனியாக பதிவு செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம்! தப்பித்தோம் என பெருமூச்சு விடும் அன்பர்கள், ‘தேடும் புத்தகம் கிடைக்காமல் போகக் கடவது’ என சபிக்கப்படுகிறார்கள்!

புத்தக ஆசையும், வாசிக்கும் காதலும் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் போலும் – புத்தகங்கள் உள்ளவரை நாம் தனியாக இல்லை என்ற உணர்வு இருப்பதென்னவோ உண்மை!

வெளியே அமைக்கப்பட்டிருந்த பெரிய அரங்கத்தில் நாள்தோறும் சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள் என நடந்தவண்ணம் இருக்கின்றன!

கண்காட்சியில் சுற்றிய களைப்பு தீர, வெளியே ஸ்டால்களில், காபி, டீ. ஜூஸ், ஸ்னாக்ஸ் கிடைக்கின்றன – எப்போதும்போல் அங்கு எல்லா அரங்குகளையும் விட அதிகக் கூட்டம்!

1977 ல் முதன்முதலில் ஆரம்பித்தது புத்தகக் கண்காட்சி – காயிதே மில்லத் கல்லூரியில் பன்னிரண்டே ஸ்டால்களுடன் – 42 வருடங்களாகப் புத்தகக் கண்காட்சியில், விடாமல் கலந்து கொண்டிருக்கும் திரு பாலசுப்பிரமணியன்பற்றிய முகநூல் பதிவில் ஆர் வி எஸ் (பினாக்கிள் பதிப்பகம்) !

“தமிழர் புத்தகங்கள்” ஓர் அறிமுகம் – தொகுப்பாசிரியர் ‘சுப்பு’ (விஜயபாரதம் பதிப்பகம்) – அருமையான இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு வாசகனும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!