குவிகம் 100 – அட்டைப்படம்

 

இது குவிகம் மின்னிதழின் 100 வது இதழ்!

குமுதம், விகடன், கல்கி, குங்குமம்  இவற்றின் இணைப்புதானே  குவிகம் என்று நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள்.

குவிவோம், ( GATHERING)  கவனம் (FOCUS) இவ்விரண்டையும் இணைப்பதே குவிகம் என்ற பொருளில்  நாமே உண்டாக்கிய சொல்தான் குவிகம். .   

எட்டு ஆண்டுகளுக்கு மேல் வந்துகொண்டிருக்கும் மின்னிதழ்!

பெரிய சாதனை என்று சொல்ல முடியாவிட்டாலும்  சதம் அடித்த  பெருமிதம் ஒன்று இருக்காத்தான் செய்கிறது. 

மாதாமாதம் 25 டிஜிடல் பக்கங்கள் ! கதை- கவிதை- கட்டுரை – தகவல் -தொடர் – ஆடியோ-வீடியோ குறும்படம் இப்படி எல்லா வகையான வடிவங்களைத் தரும் மின்னிதழ்!

முதலில் தமிழ்வாணனின்   கல்கண்டு வார இதழ் போல இருந்தது. அதாவது நான் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன்.

இப்போது  கிட்டத்தட்ட 20 பேர் மாதாமாதம் எழுதுகிறார்கள்.

 குவிகத்தில் வந்த தொடர்கள் அனைத்தும் புத்தகமாகவும் வந்துள்ளன!

மீனங்காடி , மணிமகுடம், சில படைப்பாளிகள், இன்னும் சில படைப்பாளிகள், ஷாலு மை வைஃப், சரித்திரம் பேசுகிறது ( பாகம் 1, பாகம் 2, பாகம் 3)  குவிகம் கடைசிப்பக்கம்,  ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் , எங்கேயோ பார்த்த முகம், ஆதலினால் கவிதை செய்தோம்  போன்றவை குவிகத்தை அலங்கரித்துப் பின்னர் புத்தகங்களாகவும்  வந்துள்ளன. 

இன்னும் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. நல்ல எழுத்தாளர் நண்பர் வட்டம் குவிகத்தில் இணைந்திருக்கிறார்கள்! 

அவர்கள் துணையோடு இன்னும் பயணிப்போம். 

இந்த இதழிலிருந்து வ வே சுவைக் கேளுங்கள் என்ற கேள்வி – பதில் பகுதி ஆரம்பமாகிறது.

உலக இதிகாசத்தில் கில்காமேஷ் கதை முடிந்து இலியட் ஆரம்பமாகப்போகிறது.

படைப்பாளிகள் பலரைப் பற்றி சுருக்கமாக விவரித்து அவர் புகழைப் பரப்பினோம். 

கடைசிப்பக்கம் என்ற தலைப்பில் தரமான கட்டுரைகளைத் தொடர்ந்து தருகிறோம். 

தமிழ்த் திரைக் கவிஞர்கள் என்று வாலி, கண்ணதாசன் என்று பெரிய பட்டியல் தொடர்ந்து வருகிறது.

குண்டலகேசி முடிந்து கண்ணன் கதையமுதம் கவிதையாகப்  பரிணமிக்கிறது. 

குறுக்கெழுத்துப் போட்டியும் துவக்கிவிட்டோம்.

கம்பன் கவி நயம் முடிந்து இனி சங்கப் பாடல்களின்  நயயங்கள் வெளிவரும். 

மனநலக் கல்வியின் தொடர்ச்சியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் வந்துள்ளன. 

மலையாளம் ஆங்கிலம், கன்னடம் போன்ற மொழிகளிலிருந்து சிறந்த கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறோம். 

தாகூரின் நாட்டிய மங்கை நாடகத்தையும், காந்தியின் கடைசி ஐந்து வினாடிகள் என்ற நாடகத்தையும் வழங்கினோம். 

அறுசுவை உணைவைக் கவிதையாகவும், குதூகலம் தரும் குழந்தைப் பாடல்களை எழுத்திலும், வீடியோவிலும் தந்தோம்.  

குவிகம் பொக்கிஷம் என்ற தலைப்பில் கிளாசிக் சிறுகதைகளை பதிவு செய்தோம். 

திரைக் கவிதை, திரை ரசனை என்று திரையில் தொடரும் இலக்கியத் தரத்தை எடுத்துக் காட்டினோம். 

காளிதாசனின் குமாரசம்பவத்தைக் கவிதையாய்த் தந்தோம். 

குவிகம் இலக்கியத் தகவல்கள் மற்றும் அளவளாவல்கள் பற்றிய தகவல்கள் தந்தோம். 

இன்னும் எண்ணற்ற கதைகள் கவிதைகள் கட்டுரைகள். சிறப்பான அட்டைப்படங்கள் 

இவற்றையெல்லாம் நமக்கு அளித்த எழுத்தாளர்கள் யார் என்பதைப் பற்றியும் குவிகத்தின்  100 மாதப்  பயணத்தைப் பற்றியும் சொல்ல மார்ச் 20 மாலை 6.30 மணிக்கு குவிகம் அளவலாவல்  நிகழ்வில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். தவறாமல் வாருங்கள்! 

குவிகம் நண்பர்கள் அனைவரும ஒன்று சேர்வோம்! கவனமுடன் முன்னேறுவோம். 

 இனிவரும் நாட்களில் ஆடியோ, வீடியோ அதிகம் வரும். ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரும். போட்டிகள் நிறைய வரும். புத்தக விமர்சனங்கள் வரும். நகைச்சுவையும் மிளிரும். வித்தியாசமான கதைகள் கவிதைகள் கட்டுரைகள் வரும். பரிசுகளும் வரும் ! 

வாரத்துக்கு வாரம் வித்தியாசம் அதுதான் குவிகத்தின் அடையாளம். 

நண்பர் தில்லைவேந்தன் குவிகம் பற்றி எழுதிய வாழ்த்து வெண்பாவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம். 

துளியில் தெரியும்!

சின்னப் பனித்துளி சீரோங்கு தென்னையினைத்
தன்னுள்ளே காட்டும் தகவினைப்போல் – மன்னுபுகழ்
மின்னிதழாம் நம்குவிகம் விள்ளும் பொருளனைத்தும்,
என்னசொல்லி வாழ்த்துவேன் இங்கு! 

                                      தொடர்ந்து பயணிப்போம்! 

வ வே சுவைக் கேளுங்கள் !!!

 

Jalamma Kids - kelvi-pathil

 

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynterதங்கள் இலக்கிய ஆர்வத்தின் திறவுகோல் யாரென்று கூறமுடியுமா? ( ஜெயராமன் பாஸ்கரன், கனடா) 

                                                                                                                  தி வேணுகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட பேராசிரியர் நாகநந்தி. சென்னை ஏ எம் சமணக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஆ.வி. யில் முத்திரைக் கதைகள் எழுதியவர். நாடக ஆசிரியர், நடிகர். என் இலக்கிய ஆர்வத்தின் அடிநாதம்; இலக்கியத்தை எப்படி அணுகவேண்டும் என்று சுட்டிக்காட்டிய வழிகாட்டி. வள்ளுவனும் பாரதியும் அவர்தம் இரு விழிகள். அவர் பெயரை “குவிகம்” வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை உங்கள் கேள்வி தந்துள்ளது. நன்றி.

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynter“சரவண பவ” என்றவுடன் முதலில் உங்களுக்கு நினைவில் தோன்றுவது எது? ( சாய்நாத் , சென்னை ) 

சிறுவயதில், எங்கள் வீட்டில் இருக்கும் ஹாலில் நடுநாயகமாக “யாமிருக்க பயமேன்” சரவண பவ என்று எழுதப்பட்டிருக்கும் பெரிய சைஸ் வேல்முருகன் படம். மாலை வேளைகளில் படத்தின் மேல் ஒரு சிறு மின்சார பல்பு எரிந்துகொண்டிருக்கும். உண்மையிலேயே எனது இளவயது பயங்களையும், தேர்வு பயங்களையும் உடனுக்குடன் தீர்த்துவைத்த அற்புதமான படம். கண்ணை மூடினால் இப்போதும் என் நினைவில் வரும்.

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynterசங்ககால தமிழ் இலக்கியத்திற்கும், பக்தி கால தமிழ் இலக்கியத்திற்கும் இடையில் கால இடைவெளி அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது. அந்தக் காலகட்டத்தில் இலக்கிய செயல்பாடுகள் குறைந்து விட்டனவா அல்லது சுவடிகள் கிடைக்கவில்லையா? ( பானுமதி, சென்னை) 

எல்லாக் காலகட்டத்திலும் இலக்கிய செயல்பாடுகள் இருந்திருக்க வேண்டும். இடைக்காலத்தில் இன்னும் சிறந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்திருக்கலாம். தமிழ்த்தாத்தா கண்டுபிடிக்கும்வரை சங்கம் இருந்ததே சந்திக்கு வரவில்லையே! உவே சா நூலகத்திலேயே இன்னும் படிக்காத பல ஓலைச்சுவடிகள் கட்டுக்கட்டாக உள்ளன. இப்போது ஓலைச்சுவடிகளைப் படித்து அறியும் தமிழறிஞர்களும் அருகிவிட்டனர்.

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynter“மரபுக் கவிதை என்பது புதுக்கவிதை ஆனது. அதுவே சுருங்கி சுருங்கி ஹைக்கூ ஆனது. எனவே தமிழ்க் கவிதையின் இப்போதைய “வடிவம்” தான் என்ன?  (ராய செல்லப்பா,சென்னைப்பட்டினம் )

கவிதை புதுவகை யாப்புள் செல்லும் போது ஹைக்கூ போன்ற கவிதைகள் பிறந்தன, புதிய வரையறைகள் பிறந்தன. ஆனால் தற்காலக் கவிதைகள் தங்களுக்குத் தாங்களே வடிவம் கொடுத்துக் கொள்கின்றன. உரைநடை போல் தொடர்ந்து எழுதாமல் “அடி அடியாகப்” பிரித்து எழுதுவது ஒன்றே இன்றைய கவிதையின் “வடிவமாக” எஞ்சி உள்ளது.

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynter பாரதியாரின் ‘ஆசைமுகம் மறந்து போச்சே’ பாடலை அவர் இளம்வயதில் தானிழந்த தன் தாயின் முகம் மறந்து போயிற்றென்று பாடினார் என ஒரு கருத்து நிலவுகின்றதே, உண்மையா? விளக்குவீர்களா? (மீனாக்‌ஷி பாலகணேஷ், பெங்களூர்))

நான் அறிந்து இக்கூற்றில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. பாரதியாரைப் பற்றி வழங்கி வந்த சில கருத்துகளை செல்லம்மா பாரதி மறுத்துப் பேச வேண்டிய சூழல் அன்றே இருந்தது. இன்றைய நிலையில் பலர் பல சொல்கின்றனர். ஆதாரம் ஏதும் இல்லை. மேலும் ஆசைமுகம் மறந்து போச்சே என்ற காதல் பாடலின் பின்னணியில் அன்னைமுகம் இருப்பதாக சொல்வது ஏற்புடையதன்று.

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynterமண் விடுதலை, பெண் விடுதலையைப் பிரதானமாகப் பாடிய பாரதி இந்நாளில் வாழ்ந்திருந்தால், எந்த சமூக அவலத்தைப் பிரதானமாகப் பாடியிருப்பார்? ( ராம், லாஸ் ஏஞ்சலிஸ் )

விடுதலை பெற்ற மண்ணும் பெண்ணும் தேர்ந்தெடுக்கும் நெறியற்ற பாதைகளின் அவலங்களைப் பாடுவார்.

 

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynterபாரதி பாடலில் ஏதேனும் இலக்கணம் தவறி, பின்னாளில் வேறு யாரேனும் திருத்தியது உண்டா? (கவிஞர் செம்பருத்தி, சென்னை)

நிச்சயமாகக் கிடையாது. அவரது விநாயகர் நான்மணிமாலையின் கையெழுத்துப் பிரதி சிதைவுற்று இருந்ததால் பதிப்பகத்தார் அந்நாளில் சுத்தானந்த பாரதியையும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையையும் அணுகி சீர் செய்துதரச் சொல்லி சில சீர்கள் சேர்க்கப்பட்டன. தஞ்சைப் பல்கலைக்கழகப் பதிப்பில் இவை போன்ற இடங்கள் வளைவுக்குறிக்குள் போடப்பட்டுள்ளன. பாரதியாரே தமது பாடல்களில் பல இடங்களைப் பதிப்பின் போது மாற்றி எழுதியுள்ளார். “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்பதை சொல்லில் இனிது தமிழ்ச் சொல்லே” என்று மாற்றியுள்ளார். பாஞ்சாலி சபதத்திலும் சில இடங்களை அவரே திருத்தி எழுதியுள்ளார்.

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynter“நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் “எனத் துவங்கும் பாடலில் சக்தித் தாயைப் பாடும் பாரதி , அதே பாடலில் தொடர்ந்து ” வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய், தெள்ளு கலைத் தமிழ்வாணி” என கலை மகள்/ தமிழ்த்தாய் என அழைக்கிறார்?
வெள்ளை மலர்மிசை அமர்ந்தவள் சரஸ்வதியாகிய கலை மகள் அல்லவா? ( வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்)காளி மாதாவும் சரஸ்வதியும் வேறல்லவா? பாரதி சக்தி மாதாவை கலை மகளாக தமிழ் வாணியாக உருவகிக்கறாரா? (முத்து சந்திரசேகரன், கோவை )

உருவகம் ஏதும் இல்லை.பாரதி கணக்கில் எல்லா தெய்வங்களும் ஒன்று. ஆனால் சக்தி அனைத்துக்கும் மேல். ஒரே பாட்டில் பல தெய்வங்களைப் பாடியவன் பாரதி. ஆறு துணை என்ற தலைப்பில் “ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் என்ற பல்லவியில் கணபதி, முருகன், கண்ணன், கலைமகள், திருமகள் அனைவரையும் பாடியுள்ளானே ! மேலும் நீங்கள் குறிப்பிடும் பாடலில் இறுதியில் வரும் இந்தக் கண்ணியின் நிறைவில் ஓம் சக்தி ஓம் என்று பாடாமல் சக்தி வேல் என்று பாடியுள்ளான். எனவே அப்பாடலில் கலைமகள் தவிர ,முருகனைப் பற்றிய குறிப்பும் வந்துள்ளதாக அறியலாம்.

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynter“கவியரங்கப் பட்டிமன்றம் என்ற நிகழ்ச்சி பாரதி கலைக் கழகத்தில் எப்பொழுது துவங்கியது? அதன் சிறப்பையும், அதில் பங்கு பெற்ற மூத்த கவிமாமணி நா.சீ.வ. அவர்களோடு உங்களுக்கான நட்பையும் பகிருங்களேன்.” ( மீ.விசுவநாதன், சென்னை )

பாரதி கலைக்கழகக் கவிதைப்பட்டிமன்றம், 1985 ல் தொடங்கியது (ஓராண்டு முன்பின்னாக இருக்கலாம்). முதல் கவிதைப் பட்டிமன்றம் கவிஞர் இளந்தேவனின் இராயப்பேட்டை இல்லத்தில் நடைபெற்றது. தலைப்பு : சீரிய பொழுது இரவா? பகலா? ; நடுவர் – வவேசு. என்ன தீர்ப்புக் கொடுத்தேன் என்பது மறந்துவிட்டது.

என்னிலும் பல ஆண்டுகள் மூத்த கவிமாமணி நா.சீ.வ. பீஷ்மன் என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியவர். பல நூல்களின் ஆசிரியர். திரிலோகம், நா.பா., மகரிஷி, லா.ச.ரா , தி.சா. ராஜு போன்றோரின் நெருங்கிய நண்பர். இளையவனான என் தலைமையில் பல கவியரங்கங்களில் பங்கு கொண்டு என்னை வழிநடத்தி எனக்குப் பெருமை சேர்த்தவர். நல்ல கவிதை வரி ஒன்று கண்டால் போதும், தலைமேல் வைத்துக் கொண்டு குழந்தை போலே கூத்தாடுவார். இலக்கிய இரசனையில் இன்னொரு டி.கே.சி. மனம் திறந்து பாராட்டுவார். மீ.வி. கவிதையில் குருவருள் பொறியாக வளர்கிறது என உங்கள் கவிதையை அவர் பாராட்டியதும் நினைவில் பசுமையாக உள்ளது.

Want to be a better public writer? Celebrate the versatility of the question mark. - Poynterஇன்னும் தமிழ் பயிற்று மொழியாக இல்லாமல் சரளமாக வீட்டில் பேசும் மொழியாகவும் இல்லாமலும் இருக்கின்ற காலகட்டத்தில் சிற்றிதழ்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்.? (ராஜாமணி,சென்னை)

கையே காணவில்லையென்றால் கைரேகை பார்ப்பது எப்படி ? தமிழ் படிக்காமல் வளரும் தலைமுறையிடம் என்ன எதிர்பார்க்கமுடியும் ? ஆனால் நல்ல தமிழ் அறிந்தோரும் இலக்கிய ரசனை உள்ளோரும் இனி “சிற்றிதழ்களை” மட்டுமே சுவையான வாசிப்பு அனுபவத்திற்கு நம்பி இருக்கவேண்டும். அந்த நம்பிக்கைக்காகவேனும் எதிர்காலத்தில் சிற்றிதழ்கள் நிச்சயம் வாழும்.

 

 

குறுக்கெழுத்து – சாய்நாத் கோவிந்தன்

Plugins categorized as crossword | WordPress.org

பிப்ரவரி மாத குறுக்கெழுத்து சரியான விடை:

 

சரியான விடையை  முதலில் அனுப்பியவர்:

திரு நாகேந்திர பாரதி.

அவருக்கான பரிசு காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

 

இனி மார்ச் மாத குறுக்கெழுத்து இதோ !

இது ஒரு சினிமா படம் சம்பந்தப்பட்ட குறுக்கெழுத்து !!

முதலில் வரும் சரியான விடைகக்குப் பரிசு ரூபாய் 100

 

http://beta.puthirmayam.com/crossword/40595ABAB5

க்ரூகர் பார்க் சிங்கமும் ஹைதராபாத் போமரேனியனும் – ஜெ ரகுநாதன்

Thrillers Will keep Lion man ..! || சிலிர்க்க வைக்கும் சிங்க மனிதன்..!

சில பல வருஷங்களுக்கு முன்னாள் ஏதோ இட்சிணி உபாசனையின் பேரில் எனக்கு தொழிலதிபர் ஆகிவிட வேண்டும் என்ற பேரவா எழுந்து அது  என்னை நாளொரு பொழுதும் வாட்டி எடுத்து ஒரு சுபயோக சுப தினத்தில் கம்பெனி ஆரம்பிக்க வைத்துவிட்டது. உடனே ஒன்றிரண்டு புரோஷ்யூர்கள்  தயாரித்து “Artificial Intelligence சிஸ்டம் வாங்கலியோ” என்று டமுக்கு டப்பா  போட்டுக்கொண்டு ஹைதராபாத் தெருக்களில் சுற்றினேன்.

தெலுங்கு பேசுபவர்களுக்கே சகாயம் பண்ணிப்பண்ணி அலுத்துப்போயோ என்னமோ அந்த ஏழுகொண்டலவாட எனக்கும் பெரும் சகாயமாகப்பண்ணினார். அந்த கத்திரி சிகரெட் தயாரிக்கும் கம்பெனி “உன்னுடைய சிஸ்டத்தை வாங்கிக்கொள்ளுகிறோம். ஆனால் மவனே, நீயே இருந்து முழுசுமாக நிறுவிவிட்டுப்போகலை, சிண்டைப்பந்தாடிடுவோம்”  என்று எச்சரிக்கை செய்ததோடு அவர்களுடைய கெஸ்ட் ஹௌசில் மூன்று மாசம் டேரா போடுவதற்குமான ஏற்பாட்டையும் செய்து விட்டார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை வேளைகளில் அவன் போடும் சோளம் கலந்த கூட்டுக்கே ஏழு, எட்டு ரோடி  உள்ளே தள்ளிவிடலாம். அப்புறம் டிவியில் தெலுங்கு படங்களைப்பார்க்க ஆரம்பித்த  மூன்றாவது நிமிடத்தில் தூக்கம் வரவில்லைஎன்றால் நான் என் வலது காதை எடுக்கத்தயார்.

ஒரு மாதம் நானும் என் பிராஜக்ட் மானேஜர் ராமகிருஷ்ணனும் அந்த கெஸ்ட் ஹௌசில் பிரம்மச்சர்ய வ்ரதத்துடன் கத்திரி சிகரெட் கம்பெனி ப்ராஜக்ட் பண்ணிக்கொண்டிருந்தோம். நவராத்திரி வெகேஷன் குறுக்கிட்ட போது. கம்பெனியின் டைரக்டர் ரவி என்னை மடக்கினார்.

”என்ன ரகு எப்போ மெட்ராஸ் போறீங்க?”

”இல்லை ரவி. இன்னும் முதல் ஃபேஸ்   முடியலை.  குப்தா வேறு அடுத்த வாரம் லீவுல போகப்போகிறார். எனக்கு அவரோட டைம் வேணுமே . அதனால போகலை!

”ஒண்ணு பண்ணுங்க ரகு! மெட்ராசுல பசங்களுக்கு லீவுதானே. அவங்களை இங்க வரவழைச்சுடுங்க. நம்ம கெஸ்ட் ஹௌசிலெயெ உங்க ரூமில் தங்கிக்கலாமே. நான் வைத்தி கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கிடறேன்! ராமகிருஷ்ணன் ஃபாமிலிகூட வரட்டும்!”

ரவிக்கு காலை மோஷனிலிருந்து பேரப்பிள்ளைகள் பிறக்கும் வரை சுகானுபவமாக இருக்க பிரார்த்தனை செய்து கொண்டு லதா, பசங்களை வரவழைத்தேன். கூடவே என் பிராஜக்ட் மானேஜர் ராமகிருஷ்ணனின் ஃபாமிலியையும் வரவழைத்தோம்.

விஸ்தாரமான எஸ்டேட் அந்த கெஸ்ட் ஹௌஸ். ஒன்றிரண்டு டைரக்டர்களும் அங்கேயே குடியிருந்ததால் மெயிண்டனன்ஸ் பக்காவாக இருக்கும். அழகான தோட்டம். நீர்வீழ்ச்சி. பீங்கானில் சொல்ப உடை அணிந்த பெண்ணின் சிலை என்று சம்ப்ரதாயமாக இருந்தாலும் அழகாகவே இருக்கும். லதாவுக்கும் பசங்களுக்கும் பரம குஷி. காலை ப்ரேக்ஃபாஸ்ட், அப்புறம் வாக்கிங். கேம்ஸ் ரூமில் காரம். செஸ், டேபிள் டென்னிஸ்  என்று விளையாட்டு.  

நானும் ராமகிருஷ்ணனும் மட்டும் ஒரு நல்ல க்ரஹஸ்தன்களாக உழைத்துக்கொண்டு குடும்பம் ஜாலியாக இருந்த சொர்க்க நேரம்.

மாலை வேளைகளில் எங்காவது  போவோம். என்ன பெரிய “எங்காவது“ டாங்க் பண்ட்,, விட்டால் பாரடைஸ் ஷாப்பிங் அதுவும் இல்லையென்றால், கெஸ்ட் ஹவுசுக்கு உள்ளேயே நடை பயிலுதல்.

ஒரு சாயங்காலம் கேம்ஸ் ரூமில் பில்லியர்ட்ஸ் ஆடுகிறோம் என்ற பெயரில் அதகளம் பண்ணிவிட்டு அடுத்த பில்டிங்கில் இருக்கும் சாப்பாட்டு மெஸ்சுக்கு நடந்தோம். எதிரே ஏதோவொரு டைரக்டர் வீட்டு  வேலைக்காரி ஒரு தக்குனூண்டு சைஸ் பொமரேனியன் நாய்க்குட்டியுடன் வந்து  கொண்டிருந்தாள். அன்னிக்கு அம்மாவாசையோ என்னமோ, சாதுவாக வந்த அந்த நாய்க்குட்டி, ராமகிருஷ்ணனின் மகன் அருணைப்பார்த்து  என்ன நினைத்ததோ, குலையோ குலை என்று குரைக்க ஆரம்பித்து விட்டது. அசந்தர்ப்ப நேரத்தில் சங்கிலியை கழற்றிக்கொண்டு அவனை துரத்த வேறு ஆரம்பித்தது. இவன் பதட்டத்தில் அருண் “ஐயோ அம்மா பிடி பிடி” என்று அவன் கதற, அது விடாமல் சுத்தி சுத்தி இவனைத்துரத்த, ரகளை கொஞ்ச நேரம். ஒரு மாதிரி அதைப்பிடித்து கட்டி இழுத்துக்கொண்டு போன பின்னரும் இவன் ”பிடி பிடி” என்று முனகிக்கொண்டிருந்தான்.

அன்றிலிருந்து அருணுக்கு மிருகங்கள் என்றாலே பயம்தான். மைசூரில் ஒரு முறை ஜூவுக்கே வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஹோட்டல் ரூமிலேயே  டிவிபார்த்துக்கொண்டு தங்கிவிட்டான் என்றும் கேள்விப்பட்டேன்.  

கொடைக்கானலில் ஒரு முறை ரிஸார்ட் சாப்பாடு அலுத்துப்போய்  ஒரு டாபாவில் சாப்பிடப் போனபோது, பாதி சாப்பாட்டில் சின்ன பூனை  ஒன்று அருண் காலடியில் வர, இவன் பயத்தில் ஒரு வீசு வீச, டேபிள் தட்டு எல்லாம் உருண்டதை இப்போதும்  கொடைக்கானலில் கார்ப்பரேஷன் பள்ளியிலேயே கதையாகச்சொல்கிறார்களாம் என்பதாக ராமகிருஷ்ணன் பின்னாளில் சொன்னார்

எங்கள் ஆஃபீசில் அருணுடைய நாய், பூனை, பயம் ஒரு ஃபோல்க் லோர் போல ஆகிவிட்டிருந்தது.

போன வருஷம் நடந்த அவன் கல்யாணத்துக்குப் போக முடியவில்லை. சென்ற வாரம் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு ஒரு விசிட் அடித்து விசாரித்தேன்.

ராமகிருஷ்ணன் ஒரு ஃபோட்டொவைக்காட்டினார்.

பிராஜக்டுக்காக சவுத் ஆஃப்ரிக்கா போனபோது ஒரு வீக் எண்டில் க்ரூகர் பார்க்கில் ஒரு பெரிய சிங்கத்தின் பிடரியில் தடவிக்கொண்டே அருண் வெற்றிப்பார்வை பார்க்கும் கலர் ஃபோட்டோ.   சிரித்துக்கொண்டே அருணிடம் கேட்டேன்.

“அட! சின்ன நாய்க்கே நாலு மைல் ஓடுவே! எப்படிடா உனக்கு இவ்ளோ தைரியம் வந்தது?“

“கல்யாணத்துக்கு அப்புறம்”  என்றாள் அருணின் புது மனைவி அஞ்சனா.

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

The Epic of Gilgamesh - Pulkit Agrawal - Literature 114 (Spring 2014-2015) - Harvard Wiki

கில்காமேஷ் விரக்தியின் எல்லைக்கே சென்றான். துயரம் அவனுக்கு அலை அலையாக வந்தது.  தன் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டான்.

தனது துயரத்தைப் படகோட்டியிடம் பகிர்ந்துகொண்டு தன் வேதனைக்கு வடிகால் தேடினான் கில்காமேஷ்.

“இதற்குத்தானா நான் இவ்வளவு   சிரமப்பட்டேன்! நான் கடந்து வந்த பாதையில் எத்தனை துயரங்கள்! சாவை வெற்றி கொள்ளப் புறப்பட்ட எனக்கு மனிதர்களும்  தேவர்களும்  ஏன் இந்த அண்ட சராசமும் எனக்கு  எதிராக நின்றன! என்னை எப்போது ஆசீர்வதிக்கும் கடவுளர் கூட ‘இது நடவாத காரியம்’ என்று என்னைத் தடுக்கப் பார்த்தார்கள். நான் பிடிவாதமாக அத்தனை எதிர்ப்புக்களையும் இலட்சியம் செய்யாது ஒரே குறிக்கோளுடன் வந்தேன். உத்னபிஷ்டிம் வரை வந்து பார்த்துவிட்டேன். அதுவே எனக்கு வெற்றிதான். அவர் எனக்குச் சாவா வாரம் பெற உதவவில்லை. ஆனால்  என்றும் இளைஞனாக இருக்க உதவும்  பூக்களைப்பற்றிக் கூறினார். அதைப் பறித்து எடுத்தும் வந்தேன். அதைக் கொண்டு  என் வயோதிகத்தை மட்டுமல்ல உருக் நாட்டின் தலைசிறந்த வீரர் அறிஞர் அனைவரையும் இளைமையுடன் இருக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஒரு பாம்பு வடிவில் என் விதி அனைத்தையும் அழித்துவிட்டது. நான் சிந்திய ரத்தம் வேர்வை அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. எனக்கு இந்த மாபெரும் பயணத்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. அத்தனை சிரமமும் வீண். இதற்காகவா  நான் இத்தனை பாடுபட்டேன்?     எப்படியோ அந்தப் பாம்பாவது கிழட்டுத்தன்மை அடையாமல் இளமையுடன் இருக்கட்டும்” என்று சற்று நேரம் புலம்பினான்.

படகோட்டிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

கில்காமேஷும் எந்தவித பதிலையும் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய தயக்கமும் கலக்கமும் சிறிது காலம்தான் இருந்தது. சுத்த வீரன் ஆயிற்றே அவன்!

இந்தப் பயணம் நான் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆனால் என் விடாமுயற்சி – நான் பெற்ற அனுபவம் இவை இரண்டுமே எனக்குப் போதும். படகோட்டியே! வா! நாம் இருவரும் என்  நாட்டிற்குச் செல்வோம். நான் இன்னமும்  உருக்  நாட்டு மன்னன் தானே ! “

கில் காமேஷ் தன் தலைநகருக்குச் செல்லும் பாதையில் பயணித்தான். படகோட்டியையும் கூட அழைத்துச் சென்றான். மற்றவர்கள் 45 நாட்களில் முடிக்கும் பயணத்தை கில் காமேஷ் மூன்றே நாட்களில் முடித்து உருக் நகரை அடைந்தான்.

“எனக்குக் கிடைத்த புதிய நண்பா! படகோட்டியே! அதோ பார்! என்  நாடு! என் தலை நகரம். கோட்டையைப் பார்! மதிள் சுவரைப் பார்! அஸ்திவாரத்தைப் பார்! நான் உருவாக்கிய நகரம். அனைத்தும் சுட்ட கற்களால் ஆனது. இதை வடிவமைத்துக்  கொடுத்தவர்கள் ஏழு ஞானிகள். நாட்டில் மூன்றில் ஒரு பங்கு நகரம். இன்னொரு பங்கு பூங்கா. மற்ற பங்கு  வயல்கள். இஷ்டார் தேவியின் கோவில் நகரில் நடுவில் இருக்கிறது. இந்த  மூன்று பங்கும் இஷ்டார் தேவி கோவிலும்  சேர்ந்ததுதான் என் உருக் மாநகரம்.

படகோட்டிக்குச்  சொல்வதுபோல தனக்குத்தானே உறுதி எடுத்துக் கொண்டான் கில்காமேஷ்.

” இது என் புகழ் பரப்பும் நகரம். இந்தப் பயணத்தின் மூலம் எனக்கு உலகத் தேசங்கள் அனைத்தும் தெரியும். எல்லாவித மக்களையும் நான் அறிவேன்.  என்  அறிவு பல திசைகளில் பிரகாசித்தது. எனக்குத் தெரியாத மர்மங்களே இல்லை. உலகின் அனைத்து ரகசியங்களையும் நான் அறிவேன். யாருக்கும் தெரியாத பிரளய காலக் கதையை அறிந்து வந்திருக்கிறேன். இதை என்  நாட்டு மக்கள்  அனைவரும் அறியும் வண்ணம்  ஏற்பாடு செய்வேன். நான் சென்ற நீண்ட பயணத்தைப் பற்றியும் அதில் நான் பட்ட துன்பங்கள் துயரங்கள் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் என்  மக்கள் மட்டுமல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பின்னால் வரும் பிற்கால சந்ததியினர் தெரியும் வண்ணம் அவற்றைக் கல்லில் வடித்து வைப்பேன். நான் சாவை வெற்றி கொள்ளாமலிருக்கலாம். சாவு என்னை எப்போது வேண்டுமானாலும் தழுவலாம். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. என்  கதையையும் இந்த உருக் நகரத்தின் கதையையும் அழியாச் சின்னங்களாகக் கற்களிலும் களிமண் ஏட்டிலும்  பொறித்து வைப்பேன். எனக்குச்  சாவு வரட்டும் . ஆனால் என்  புகழுக்குச் சாவே கிடையாது. அது போதும் எனக்கு” என்று வீராவேசமாகச் சபதம் செய்து தன் நகருக்குள் சென்றான் கில் காமேஷ்

நினைத்ததை அப்படியே செய்தான் கில் காமேஷ்.

ஆராவாரத்துடன் இருந்துவந்த  கில்காமேஷ் அமைதியின் மறு உருவமாக மாறினான். மாபெரும்  அயோக்கியர் நம் மன்னர் என்று மக்கள்   ஆரம்பக்காலத்தில்  நிந்தித்த மக்கள் அனைவரும் பின்னர் அவனைக்  கடவுளாகவே  மதிக்கத்  தொடங்கினர்.

என்லில் என்கிற சர்வ வல்லமை படைத்த  தேவனை தன் ஆயுள் முழுதும் மறக்காமல் அவரைப் போற்றிக் கொண்டே  உலகின் மாபெரும் மன்னனாக ஆட்சி புரிந்தான் கில் காமேஷ்.

ஆனால் என்லில் தேவன் கில் காமேஷுக்கு விதித்திருந்த விதி முடியும் காலம் வந்தது. அதை  என்லில் ஒரு கனவின் மூலம் அவனுக்குத் தெரியப்படுத்தினார்.

” கில்காமேஷ்!  நீ பூமிக்கு அடியில் சாவு உலகத்தில் இருட்டில்  ஒரு ஓளிச்  சுடரைக் காண்பாய். அதுதான் உன் வாழ்வின் இறுதி நேரம். அத்துடன் உன் விதி முடிவடைந்துவிடும். நீ செய்த சாதனைகளை எண்ணிப்  பார்! உனக்கு அரச பதவி அளிக்கப்பட்டது. அதுதான் உனக்கு அமைந்த விதி!   நித்தியமான வாழ்வு வாழ்வது உன் விதி அல்ல. அதற்காக நீ வருந்தத் தேவையில்லை. மனித குலத்தின் ஒளியாகவும் இருளாகவும் இருக்கும்படி உன்னைப் பணித்தோம். மக்களை ஆளும்  தகுதியை உனக்குத் தந்தோம். நீ போரிட்ட யுத்தங்கள் அனைத்திலும் நீயே  வெற்றி பெற்றாய்! உன்னை எதிர்த்தவரை நீ வென்று வந்தாய். தேவர்களும் உன்னைவிடப் பலசாலிகளும் உன்னை எதிர்க்க வரும்போது உன் அறிவுத் திறத்தால் நீ தப்பி வந்திருக்கிறாய். உனக்குக் கொடுத்த அரசுப் பதவியைத் தவறாக நீ  உபயோகிக்கவில்லை. அனைவரிடமும் நியாயமாக நடந்துகொண்டாய்.

இப்போது  நீ உருக் நாட்டிலிருந்து ஏன் உலகிலிருந்து விடைபெறும் காலம்  வந்துவிட்டது. உன் நினைவைக் கொண்டாடுவது போன்ற ஒரு நினைவுச் சின்னம் எழுப்புவார்கள். அது போன்று உலகில் எவருக்கும் அமையாது.  வீரர்களும் அறிஞர்களும் ஞானிகளும் எல்லோரும் நிலவைப் போல வளர்ந்து தேய்ந்து மறையக்  கூடியவர்தாம். ஆனால் உன்னைப் போல பலம் கொண்டு ஆண்ட மன்னர் வேறு யாரும் இல்லை.  வீரனே! நீ விடை பெரும் காலம் வந்துவிட்டது! ” என்று  என்லில் கனவில் சொல்லி முடித்ததும் கில்காமேஷ் படுக்கையில் சாய்ந்தான்.

நகரத்து மக்கள் அனைவரும் தங்கள் மன்னனுக்காகக்  குரல் எடுத்து அழுதார்கள். உரத்த குரலில் அவன் புகழினைப் பாடிக் கொண்டிருந்தார்கள்!

அவன் ஞானமுள்ளவன்
அவன் அழகன் மக்களை வசீகரிப்பவன்
அவன் மலைகளைக் கடந்து போய் விட்டான்.
இனித் திரும்ப வரமாட்டான்.
விதியின் படுக்கையில் செயலற்று விழுந்துவிட்டான்.
தூண்டிலில் அகப்பட்ட மீன் போலக் கிடக்கிறான்.
சுருக்கு வலை இறுக்கிய மானைப் போலக் கிடக்கின்றான்.
கையும் காலும் இல்லாத சாவுத்தேவன் நம் மன்னர் கில்காமேஷைக் கைப்பற்றிவிட்டான்.
சாவு அரக்கன் நம் தலைவரின் உயிரைக் குடித்துவிட்டான்.
இனி கில்காமேஷ் எழுந்து நடமாட முடியாது.
உருக் நகரிலிருந்து மீளா நகருக்குச் சென்றுவிட்டான்.”

என்று பாடிக்  கதறிக் கதறி அழுதார்கள்.

கில்காமேஷின் மனைவி மக்கள் மற்றும் நகரத்து மாந்தர் அனைவரும்  தன்னிகரில்லாத  கில்காமேஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சாவுத்தேவனுக்குக் கொடுக்கவேண்டிய பலிகளை எல்லாம் தவறாமல் கொடுத்தார்கள்.

உலகைத் துறந்து சென்றுவிட்டான் மாமன்னன்  கில்காமேஷ்! அவனுக்குச் சமமாகச் சொல்ல யாரும் இல்லை! அவன் புகழ் மகத்தானது. இந்த உலகம் இருக்கும் வரை அவன் புகழ் நிலத்து இருக்கும்.

கற்களிலும் களிமண் ஏட்டிலும் அவன் பதித்த வரலாறும் அவன் புகழும்  இன்றும் அழியாமல் இருக்கிநிறன.

உலகின் மாபெரும் இதிகாசமாக  கில்காமேஷின் கதை என்றென்றும் நிலைத்து நிற்கும்.

வாழ்க கில்காமேஷ் புகழ்!

(அடுத்த இதழில் அடுத்த இதிகாசம் தொடரும்)

பிரிடிஷ் மியூசியத்தில் இருக்கும் கில்காமேஷ் களிமண் பட்டயம் பற்றிய தகவல்கள்: 

Place: British Museum  

Object: The Gilgamesh Tablet

Description : Fragment of a clay tablet, upper right corner, 2 columns of inscription on either side, 49 and 51 lines + 45 and 49 lines. Neo-Assyrian. Epic of Gilgamesh, tablet 11, story of the Flood.

Cultures/periods : Neo-Assyrian
Production date: 7thC BC
Excavator/field collectorExcavated by: Hormuzd Rassam

FindspotExcavated/Findspot: Kouyunjik

Asia: Middle East: Iraq: Iraq, North: Kouyunjik
Materials: clay
DimensionsLength: Length: 15.24 centimetres Thickness: Thickness: 3.17 centimetres Width: Width: 13.33 centimetres

Inscriptions

  • Inscription type: inscription
  • Inscription script: cuneiform

Curator’s comments: This object is the single most famous cuneiform text and caused a sensation when its content was first read in the 19th century because of its similarity to the Flood story in the Book of Genesis. Baked clay tablet inscribed with the Babylonian account of the Flood.

It is the 11th Tablet of the Epic of Gilgamesh and tells how the gods determined to send a flood to destroy the earth, but one of them, Ea, revealed the plan to Utu-napishtim whom he instructed to make a boat in which to save himself and his family. He orders him to take into it birds and beasts of all kinds. Utu-napishtim obeyed and when all were aboard and the door shut the rains descended and all the rest of mankind perished. After six days the waters abated and the ship grounded. The first bird released “flew to and fro but found no resting-place”. A swallow likewise returned but finally a raven which had been sent out did not return showing that the waters were receding. Utu-napishtim, who later told this story to Gilgamesh, thereupon emerged and sacrificed to the gods who, angry at his escape, granted him on the intercession of Ea divine honours and a dwelling place at the mouth of the river Euphrates.

நன்றி: கில் காமேஷ் -உலகத்தின்  ஆதி  காவியம்  தமிழில் க நா சுப்பிரமணியம் ( சந்தியா பதிப்பகம் SAN 163 முதல் பதிப்பு 2003 மறுபதிப்பு 2017 http://www.sandhyapathippakam.com 

குதூகலம் தரும் குழந்தைப் பாடல்கள் – சதுர்புஜன்

உங்கள் குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுப்பது எப்படி | இன்று தாய்மார்கள்

மரங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? - அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம் | Court ordered to file report on action taken to protect trees | Puthiyathalaimurai - Tamil News | Latest ...

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாகத்  தன்  கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
  20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
  21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
  22. சிட்டுக் குருவி – மே   2021  
  23. ஆகாய விமானம் – ஜூன் 2021
  24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
  25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
  26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
  27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
  28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021
  29. மழையே வா ! – செப்டம்பர் 2021
  30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
  31. தோட்டம் போடலாமா ?   – அக்டோபர் 2021
  32. வள்ளுவர் தாத்தா !   – அக்டோபர் 2021
  33. தமிழ் ! – நவம்பர் 2021
  34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
  35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
  36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
  37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
  38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
  39.  பார் பார் மெட்ரோ பார் !
  40. நேதாஜி நேதாஜி 

41. வருகுது சைக்கிள் 

41 . சைக்கிள் !

அம்மா அப்பா பாருங்க !
தள்ளிப் போயி நில்லுங்க !
இதோ நானும் வருகிறேன் !
சைக்கிள் ஓட்டி வருகிறேன் !

சரக்கென்று மிதிக்கிறேன் !
சர்ரென்று போகுது !
வேகம் வேகமாய் மிதித்தால் –
விர்ரென்று போகுது !

போன பிறந்த நாளிலே –
பாட்டி தாத்தா தந்தது !
பரிசாய் கொடுத்த சைக்கிளு !
பரபரன்னு போகுது !

கார் ஸ்கூட்டர் போகுது –
சாலையிலே நிறையவே !
பத்திரமாய் போகிறேன் !
பையப்பைய ஓட்டுறேன் !

கவனமாகப் போகிறேன் !
கவலை எதுவும் வேண்டாமே !
நேராகப் பார்த்து நானும் –
நல்விதமாய் ஓட்டுவேன் !

தம்பி சீனு, கூடவா !
உனக்கும் சொல்லித் தரேண்டா !
தங்கச்சி பாப்பா, நீயும் வா !
நீயும் சைக்கிள் ஓட்டலாம் !

 

42 . என்ன மரம் ?

சாலையில் நடந்து போகையிலே
வெய்யில் வந்தால் இளைப்பாற –
நிழல் கொடுக்கும் நெடிய மரம் –
விழுதுகள் தொங்கும் பெரிய மரம்…
அது என்ன மரம் ?

ஆலமரம் ! ஆலமரம் ! ஆலமரம் !

கோயில்களிலே இருக்கும் மரம் –
கும்பிடுவார்கள் சுற்றும் மரம் –
வேல் போல் இலைகள் கொண்ட மரம் –
பிள்ளையார் விரும்பும் நல்ல மரம்….
அது என்ன மரம் ?

அரச மரம் ! அரச மரம் ! அரச மரம் !

பழங்கள் தொங்கும் பச்சை மரம் –
பறவைகள் கூடி மகிழும் மரம் –
கோடையில் கனிகள் கொடுக்கும் மரம் –
வீட்டின் தோட்டத்தில் உள்ள மரம்…
அது என்ன மரம் ?

மா மரம் ! மா மரம் ! மா மரம் !

வீடு தோறுமே வைக்கும் மரம் –
பாரதம் முழுதும் பார்க்கும் மரம் –
கசப்புத் தன்மை கொண்ட மரம் –
மருத்துவ குணங்கள் நிறைந்த மரம்….
அது என்ன மரம் ?

வேப்ப மரம் ! வேப்ப மரம் ! வேப்ப மரம் !

பச்சைப் பசேலென இருக்கும் மரம் –
கூட்டுக் குடும்பமாய் வாழும் மரம் –
குலை தள்ளி சற்றே சாய்ந்த மரம் –
பூ காய் இலை தண்டு கொடுக்கும் மரம்….
அது என்ன மரம் ?

வாழை மரம் ! வாழை மரம் ! வாழை மரம் !

உயர உயர வளரும் மரம் –
ஊரின் எல்லையில் பார்க்கும் மரம் –
நுங்கும் பதனியும் அளிக்கும் மரம் –
தாகத்தைத் தீர்க்கும் ஒல்லி மரம்….
அது என்ன மரம் ?

பனை மரம் ! பனை மரம் ! பனை மரம் !

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மரம் –
காய்கள் குலையாய் தொங்கும் மரம் –
இளநீர் தேங்காய் கொடுக்கும் மரம் –
தமிழ்நாட்டினிலே தழைக்கும் மரம்….
அது என்ன மரம் ?

தென்னை மரம் ! தென்னை மரம் ! தென்னை மரம் !

 

 

 

தமிழ்த் திரைக் கவிஞர்கள் – கவியரசு கண்ணதாசன் – Dr.தென்காசி கணேசன்,

இம்மாத திரைக்கவிதை – மலர்ந்தும் மலாராத | குவிகம்

கவியரசு கண்ணதாசன்

இந்த பெயர் உச்சரிக்கப் படாமல், எந்த ஒரு நாளும் கடந்து போவதில்லை என்றே கூறலாம்.

மானிட இனத்தை ஆட்டிவைப்பேன்,
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்,
நான் நிரந்தரமானவன், அழிவதில்லை,
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

என்று, மரணம் அடைவதற்கு 20 வருடங்கள் முன்பாகவே அவன் கூறிவிட்டான் மஹாகவியைப் போல, அவன் ஒரு சித்தன் – ஒரு தீர்க்கதரிசி.

பாரதிக்குப் பின், பண்டிதர்களை மட்டுமல்ல, பாமரர்களையும் அவன் பாடல்கள் ஈர்த்தது. காரணம், அவன் எளிமையில் இலக்கியத்தைத் தந்தவன் – இலக்கியத்தில் எளிமையைத் தந்தவன்.

ஒரு கவிஞனின் வெற்றிக்குக் காரணம் மூன்று விஷயங்கள்

1. திறமை 2. தன்னம்பிக்கை 3. துணிவு.

இந்த மூன்றும் கண்ணதாசனிடம் நிறையவே இருந்தது.

திறமை

இரண்டே வரியில் இராமாயணத்தை சொன்னவன் –

கோடு போட்டு நிற்க சொன்னால், சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால், ராமன் கதை இல்லையே,

துணிவு

என்னதான் நடக்கும்,நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கிறவரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்றை பார்த்து விடு,

என்கிறான்.

தன்னம்பிக்கை

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில், என்றும்,

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்,
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்,
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்,

என்றும் பாடுகிறான்.

அது மட்டுமா ? ஒரு வார்த்தையை வைத்தே சொற்சிலம்பம் நடத்தியவன்,அவன்.

காய் – அத்திக்காய் காய் காய்
தேன் – பார்த்தேன் சிரித்தேன்
ஊர் – எந்த ஊர் என்றவளே
மே – அன்பு நடமாடும் கலைக்கூடமே
தான் – அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
பூ – பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
வளை – என்னவளை முகம் சிவந்தவளை
கை – அஹ்ஹாஹோ கை கை
காவல் – உடலுக்கு உயிர் காவல்
ஓட்டம் – தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
நோ – காதல் கதை சொல்வேனோ
வண்ணம் – பால் வண்ணம்

ஒரே பாடலில் காதல், தத்துவம் இரண்டையும் சேர்த்துப் பாடியது எனக்கு தெரிந்து கவியரசராகத்தான் இருக்க முடியும்..

பெண், இல்வாழ்வை, திருமண சுகத்தை, ஆசை தீர அனுபவிக்க விரும்புகிறாள். ஆனால், அவனோ, வாழ்வின் நிலையாமையை புரிந்துகொண்டு, விரக்தியுடன், அதை விட்டு விலகப் பார்க்கிறான். கேள்வி – பதில் பாணியில், வாழ்வை கவிஞர் அணுகியிருப்பது மிக அழகு . அவள், காமத்துப் பாலையும், காளிதாசனையும் வரிகள் ஆக்குகிறாள்.
அவனோ, பட்டினத்தாரையும், பஜகோவிந்தத்தையும், வரிகள் ஆக்குகிறான்.
அவள் பாடுகிறாள் –

இது மாலை நேரத்து மயக்கம் – பூ மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும் – அந்த இன்பம் தேடுது எனக்கும்

அவன் பதிலாகக் கூறுகிறான் –

இது கால தேவனின் கலக்கம் – இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்

விடவில்லை, அவள், காமத்துடன்,தொடர்கிறாள் –
பனியும் நிலவும் பொழியும் நேரம், மடியில் சாய்ந்தால் என்ன ?
பசும் பாலைப் போலே மேனி எங்கும் பழகிப் பார்த்தால் என்ன?

அவன் உறுதியாகவே, பதிலை உரைக்கிறான் –
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன?
தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே உண்மை அறிந்தால் என்ன?
என்கிறார்.
இப்படி அவனுக்கென்றே, தனித் திறமையைக் கொண்டவன் கண்ணதாசன். அவனின் பாடல்களில் எதை எடுப்பது? எதை விடுவது? காதல்,தத்துவம், சிரிப்பு, தேசம், குடும்பம், மனிதவளம், குழந்தை, வாழ்வு, கடவுள் என அவன் தொடாத பொருளே இல்லை எனலாம். ;

உளியால் செதுக்கப்படுபவைகள் எல்லாம் சிலைகள் ஆவதில்லை. உணர்ச்சிகளாலும் உந்துதல்களாலும் உதிர்கின்ற வார்த்தைகள் எல்லாம் கவிதைகள் ஆவதில்லை. தமிழ்த்திரை வரலாற்றிலே எத்தனைக் கவிஞர் பெருமக்கள் பாடல்கள் எழுதியிருந்தாலும் “கண்ணதாசனுக்குப் பின் – கண்ணதாசனுக்கு முன்” (க. மு., க. பி. ) என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியவன் அவன். அவனுடைய பாடல்கள் வாழ்வின் எல்லாத் துறைகளிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா வயதினராலும் பாடப்படுகின்றப் பெருமை கொண்டது. அவன் கையாளாத பொருளுமில்லை; தலைப்புமில்லை;

காதலைப் பாடாத கவிஞன் இல்லை என்பார்கள். ஆனால் நான் கூறுவேன் – காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை. காதல் மனித வாழ்வின் ஒரு அங்கம். பாரதியின் “காதல் செய்வீர் – காதலினால் இன்பம் உண்டு”. இவைகளை ஒட்டியே கவியரசும் காதலை அற்புதமாய்ப் பாடியிருக்கிறார். கம்பனுக்கும், பாரதிக்கும் பிறகு காதலைக் கண்ணியமாய் கையாண்டவன் இவன்.

“மண் பார்த்து விளைவதில்லை –
மரம் பார்த்து காய்ப்பதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா – அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லய்யா’

என்கிறான்! அத்துடன், வள்ளுவனின் குறளைக் கருத்திலே வைத்து

“உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே”

என்றும் விவரிக்கிறான்! இந்தக் காதல் மானிடர்க்குப் பொது; இதனைத் தடுப்பது பெரிய தீது என்பதைத்தான்

‘காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே –
‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே’ என்றும்

‘நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை’

என்றும் இந்த மண்ணின் தத்துவத்தை, மதம் கடந்த ஒழுக்கமான பழக்கத்தை, மனிதப் பிறவியின் அடிப்படைத் தேவையை, நியாயப் படுத்திக் காண்பிக்கின்றான்.

“ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் கணவன் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்”

என்று பெண்மையை வலிமையாய்க் காட்டுகிறான். அடுத்த வரிகளிலே அந்த உள்ளத்தின் மென்மையையும் காட்டுகின்றான்.

ஒரு கொடியில் ஒரு முறைதான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா’

என்று கற்புடைய காதலைக் காட்டுகின்றான்! இல்லற சுகத்தை இனிதே பாடியவன், இந்த இல்லறக் காதலை, தாம்பத்யத்தை, விரசமில்லாமல் கூறுகின்ற வார்த்தைகள்தான் எத்தனை எத்தனை!

‘நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே!
அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே!
என்றும்

‘கட்டில் தந்த பாட்டு பாராட்டு
தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு’

என்றும் பாடுவது தாம்பத்ய உறவைப் போற்றுகிறது. அப்படிப்பட்ட உறவுதான் குடும்பத்தை வளர்க்கும். அந்தக் குடும்பம் எப்படி இருக்கும் என்பதை

‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மொழி வழங்கும் சுரங்கம்’
என்றும்,

அன்னை எனும் கடல் தந்தது
தந்தை எனும் நிழல் கொண்டது
பிள்ளைச் செல்வம் எனும் வண்ணம்
கண்ணன் பிறந்தான்’

என்றும் கூறுகிறான். இப்படிப்பட்ட உறவுதான் இறுதிவரை உறுதியாக இருக்கும் என்பதைத்தான்

‘ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’
என்கிறான்.

இப்படிக் காதலைத் தொடர்ந்து, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்கும் பாடங்களையே பாடல்களாய்த் தந்திருக்கிறான். காரணம், அனைத்துமே அவனின் அனுபவம். அவனைப் பொறுத்தவரை அனுபவம் என்பது தெய்வீகம். அதைத்தான்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
அனுபவித்தே அறிவதுதான் வாழ்க்கை என்றால்
ஆண்டவனே நீ எதற்கு என்றேன்!
ஆண்டவன் அருகே அழைத்துச் சொன்னான்
அந்த அனுபவமே நான் தான் என்று!
அதனால் தான் நம் அனைவரின் அனுபவத்தோடு ஒத்துப்போகிறது அவனது பாடல்கள்.

நம் அனைவரின் துன்பத்திற்குக் காரணம் எண்ணம்தான். அந்த எண்ணம் வருகின்ற இடம் மனம். மனம் முழுதும் ஆசை. அதனைதான்,

கையளவே தான் இதயம் வைத்தான்
கடல்போல் அதிலே ஆசை வைத்தான்’

என்றும் பாடுகிறான். இந்த ஆசையைக் கொடுப்பதே மனம்தானே! அதனைக் கூட

மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா’ என்றும் –

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி,
நாளைப் பொழுதை இறைவனுக்களித்த
நடக்கும் வாழ்வில் அமைதி கிடைக்கும் , என்றும் விடையும் கூறுகிraaன்.

இப்படியில்லாமல் ஆசையின் வழியிலே வாழ்க்கையைச் செல்ல விட்டால், நிம்மதிதான் மறையும். எனவே தான்,

“கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவேஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே இருப்பது தான் உலகம், கண்ணா!
இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா!

என்கிறான்.

மனிதன் ஆசையை விட்டு விட்டு, உழைப்புடனும், நம்பிக்கையுடனும் வாழ வேண்டுமென்கிறான்.

பஞ்சைப்போட்டு நெருப்பை மறைப்பவன்
பைத்தியக்காரனடா
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன்
பச்சை மடையனடா!
நெஞ்சுக்குள் நீதியை மறைத்து வாழ்பவன்
நிச்சயம் மிருகமடா
தன் நேர்மையிலும், உடல் வேர்வையிலும்
நின்று வாழ்பவன் மனிதனடா!

நேர்மையும் உடல் உழைப்பும் மனிதனுக்குத் தேவை என்பதனை இந்த வரிகளிலே காட்டுகின்றான். கடமையைச் செய்யாமல், பலனை எதிர்பார்ப்பதில் நியாயமில்லை என்பதைக்கூட

“எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்”
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று”

இந்தக் கடமையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. அப்பொழுது ஏற்படும், மனச்சோர்வை நீக்க நம்பிக்கை வரிகளை நமக்குத் தருகின்றான்.

‘நாளைப் பொழுதென்றும் நமக்கென வாழ்க! –
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க!
வேளை பிறக்குமென்று நம்பிக்கை கொள்க!.
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல!

என்றும்,

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்’ என்றும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் –
வாசல் தோறும் வேதனை இருக்கும் –
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை”

என்றும் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றான். நிம்மதி வேண்டுமானால் நம்பிக்கையுடன், மனதினில் நிறைவு வேண்டும். அதனை,

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’

என்று, மனமானது மாற்றத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று,

பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் தொடந்து வரும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் –
மயக்கம் தெளிந்து விடும்
என்று கூறுகிறான்.

அந்த மனம் கிடைத்தால் மயக்கம் தீரும். அதனைத்தான்,

மனமிருந்தால் பறவைக்கூட்டில்
மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே
மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில்
எந்தச் சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்!
என்றும்

‘காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை’ என்றும் பாடுகிறான்.

தன்னை அறிதலே வாழ்க்கை! தன்னை உணர்தலே வாழ்க்கை! இதுதான் மதங்கள் கூறுவது, சமயங்கள் கூறுவது! என்பதை,

‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!”

அன்னையின் மடியில் ஆடுதல் இன்பம்
கன்னியின் மடியில் சாயுதல் இன்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்!’
என்கிறான்!

இப்படி வாழ்க்கைக்குத் தேவையான எல்லாக் கருத்துகளையும் கொடுத்து விட்டுச் சித்தரின் தத்துவங்களையும் அள்ளித் தந்திருக்கிறான். வாழ்க்கையின் நிலையாமையை நன்றாகவே கூறுகின்றான்.

வந்தது தெரியும், போவதெங்கே
வாழ்க்கை நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது!
என்றும்

மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு,
பாவம் மனிதரென்று’

என்றும் நிலையற்ற வாழ்வினை எண்ணிக் கொண்டு வாழ வேண்டுமென்கிறான். எனவே இறை நம்பிக்கையை வலியுறுத்துகிறான்.

மூலம் வித்து, முளைப்பது பூங்கொடி
மூலம் விந்து, முளைப்பது பாலகன்
மூலம் மேகம், முகிழ்ப்பது பொன் மழை
மூலம் இல்லாமல் முளைப்பன இல்லையே!
ஆயின் இந்த அவனிக்கு மூலம்
யாரோ அறியேன்! அவனை என் மனம்
இறைவன் என்பது எவ்வழித் தவறாகும்’

என்று கூறுவதுடன்

தன்னையறிந்துத் தன்பால் சூழ்ந்த
மன்னுயிர்க் கூட்டம் மனநிலை யறிந்து
நம்பிய வழிகளில் நடப்போர் கண்களில்
இம்மை வாழ்விலும் இறைவன் வருவான்’
என்று கூறுகிறான்.

இப்படி வாழ்க்கையின் அத்தனை எல்லைகளையும் தொட்டவன், நமக்கு வாழ்வதற்குரிய பொருள்களை இல்லையென்று கூறாமல் பாடல்களாய் வாரி வழங்கிய வள்ளல் கவிஞன் அவன்.

அவன் மது போதை, மாது போதை, மயக்க போதைகளில் இருந்தவன். ஆனால் புகழ் போதையில் மட்டும் மயங்காதவன்; அடக்கத்தை உயர்வாய் எண்ணியதால்தான், படித்தவர்மட்டும் அல்லாமல் அனைவர் நெஞ்சினிலும் கற்பனையாய், கவிதை வரிகளாய் அடங்கியிருப்பவன்.

எனவேதான், இளைஞர்களுக்கு தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று கூறியதுடன், “எப்படி வாழ வேண்டும் என்பதற்கு என் புத்தகங்களையும், எப்படி வாழக்கூடாது என்பதற்கு என் வாழ்க்கையையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அழுத்தமாகச் சொன்னான், அந்த இமாலயக் கவிஞன்.
இவன் பாடல்கள் அனுபவத்தின் சுவடுகள் என்பதால் நம் அனைவரின் வாழ்விற்கும் என்றென்றும் பொருத்தமாகவே இருக்கும்

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜராஜன் – அருண்மொழிவர்மன் – பொன்னியின் செல்வன் 

Ponniyin Selvan - part 1 posters | போஸ்டரே மிரட்டலா இருக்கே...பொன்னியின் செல்வன் அசத்தல் போஸ்டர்ஸ் இதோ - FilmiBeat Tamil

ராஜராஜனை அருண்மொழி என்ற பெயரில் கல்கி ‘பொன்னியின் செல்வனில்’ ஒரு கலக்குக் கலக்கியிருப்பார். அதற்கு மேலே எழுதி நாம் எந்த ஆணியைப் பிடுங்கப்போகிறோம்? (ஆணிக்குப் பதிலாக வேறு ஒரு வார்த்தையைப் போடலாமென்றால், குவிகம் ஆசிரியரின் கடுங்கோபத்துக்கு ஆளாகநேரிடும் என்பதால் அதைத் தவிர்த்து விடுகிறேன்!).

அப்படியானால் எந்தத் தைரியத்தில் இந்த அத்தியாயம் எழுதத் துணிந்தாய் என்று தானே கேட்கிறீர்கள்? கல்கி விட்ட பின் நான் ராஜராஜனைத் தொடர்கிறேன்.

இருந்தாலும் கல்கியின் கற்பனையை சில வரிகளில் அசைபோடாமல் விட மனது வரவில்லை.. கல்கியின் கற்பனையில், அருண்மொழியை ஒரு சாக்கலேட் பையனாகவும், மக்களின் பேரன்பைப் பெற்றவனாகவும், அனைவராலும் மதிக்கத்தக்க இளைஞனாகவும், பெரும் வீரனாகவும், அறிவாளியாகவும் சித்தரித்திருப்பார்.

பொன்னியின் செல்வனைப்பற்றி கல்கியின் சில வரிகள்:

Pin by S.Murugavel on Ponniyin Selvan | Famous novels, Historical novels, Magazine artPin by S.Murugavel on Ponniyin Selvan | Dance paintings, Culture art, Character art

Ponniyin selvan Maniam Drawings

Vanthiyathevan injured in an attempt to save sendhan Amudhan, the real mathuranthagar | Vedic art, Children's book illustration, Line art drawings

சின்னஞ்சிறு வயதில் பொன்னிநதியில் விழுந்த அருண்மொழியை..
பொன்னித் தாய் நீரிலிருந்து எடுத்துக் கொடுக்க..
பொன்னியின் செல்வன் என்ற பெயர் பெற..
சங்கு சங்கரக் குறி அவனுடலில் இருக்க..
வானதியின் காதலில் விழ..
இலங்கையில் அனுராதபுரத்தில் முடி சூட மறுக்க..
குந்தவையின் தூதனாக வந்த வந்தியத்தேவனைச் சந்திக்க..
பழுவேட்டரையர் அருண்மொழியை அழைத்து வர அரசனிடம் ஆணை வாங்க..
இசைந்த அருண்மொழி – சோழ நாடு பயணம் செய்ய..
கப்பல் விபத்தைக் கடந்து நாகப்பட்டினம் சேர..
கடற்கொந்தளிப்பான சுனாமியைத் தாண்டிட..
நோய்வாய்ப்பட்டு குணமாகி..
எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து யானைமேலேறி..
தஞ்சை அரண்மனை சேர..
பின்னாள் – தான் பட்டமேறுவதாகக் கூறி..
கடைசி நொடியில்..
செம்பியன் மாதேவியின் புதல்வருக்கு மகுடமளித்து..
தியாகச் சிகரமாகினான்.

இதை எழுதியதில், நாமும் பெருமை கொள்வோம்.
அருண்மொழியின் கதை அதற்குப்பின்னால் என்னவாயிற்று?
அதைப் பற்றி சரித்திரம் பேசுகிறது..

மதுராந்தகனை மன்னனாக்கும் போது..
‘அவன் ஆளும் வரை ஆண்ட பின் தான்’ – தான் அரசாள்வதாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது..
அச்சமயம் மதுராந்தகனுக்கும், அருண்மொழிக்கும் சம வயது..
ஆக.. மதுராந்தகன் அருண்மொழியைத் தாண்டி வாழ்வானேயானால், அருண்மொழி அரசாள வாய்ப்பு பெறவே இயலாது.

இதை அறிந்தும் மதுராந்தகனை மன்னனாக்கிய அருண்மொழியின் தியாகம் மகத்தானது. அதனால் தான் தியாகசிகரம் என்ற பெயர் அவனுக்குப் பொருந்தும்।

மதுராந்தகன் ஆட்சியில் ராஜராஜன் யுவராஜாவாக இருந்தது மட்டுமல்லாமல்- அரசியல் மற்றும் ராணுவத்தைப் பலப்படுத்துதல் என்று ஆட்சித்துறையில் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தான். சேர, பாண்டிய, ராஷ்டிரகூட, சாளுக்கிய, கங்க அனைத்து நாட்டு நடப்புகளையும் கூர்ந்து கவனித்து வந்தான். ஒவ்வொருவரும் தனது எதிரியாக வாய்ப்பு இருப்பதாக நம்பினான். ஒவ்வொருவரின் பலம் – பலவீனம் இரண்டையும் துல்லியமாகக் கணித்து..ஒவ்வொருவரையும் வெல்வதற்கான பலங்களைப் பெருக்கிக் கொண்டான். சேர நாட்டு பலமான கடற்படைக்கு நிகராக இல்லாது அதை விட சிறந்த கடற்படையை உருவாக்கத் திட்டமிட்டு- செயல்படுத்தினான்.

மன்னன் மதுராந்தகன் – தன் தாய் தந்தையர் போல சமயப்பணிகளைச் செய்து, அருண்மொழியின் உதவியால் நாட்டைக் காத்துக் கொண்டான். அருண்மொழியும் மன்னனுக்கு அடங்கிய இளவரசனாகவே இருந்தான். ஆயினும் சுடர்மிகு அறிவுடன் இருந்ததால், பெரும் கனவுகளுடனும், காலம் கனியும் நாளை எண்ணிக்கொண்டிருந்தான். தன்னை வளர்த்த செம்பியன் மாதேவி, அக்கா குந்தவையை மதித்து அவர்கள் சொல் கேட்டும் வந்தான்.

பதினைந்து ஆண்டுகள் சென்றன.

கி பி 985. ஜூன் மாதம்.
மதுராந்தகன் மறைந்தான்.
அருண்மொழி அரசனானான்.
காலம் கனிந்தது.

மகாகாளி தமிழகத்தில் கடைக்கண் வைத்தாள்.
தமிழகத்தின் பொற்காலம் உருவானது.
உலகப்பேரரசர்களில் சிறப்பானவன் என்று சரித்திரஆசிரியர்களால் பாராட்டப்படும் ஒரு மாமன்னன் உருவானான்.
நம்மைப் போன்ற சரித்திர எழுத்தாளர்களுக்கு அவன் புரிந்த உதவி என்ன தெரியுமா?
தனது ஆட்சிக்குறிப்புகளை மெய்க்கீர்த்திகளாக செப்புத்தகடுகளில் எழுதி சரித்திரத்துக்குச் சோறு போட்டவன் அவன்.

“இவனுடைய சாதனைகளை விட இவனது ஆளுமையும், இயல்புகளும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்” – என்கிறார் சரித்திர ஆய்வாளர் நீலகண்ட சாஸ்திரி.

மதுராந்தகன் ஆட்சியிலேயே அருண்மொழி சோழநாட்டின் உள்கட்டமைப்பை (இன்ஃப்ராஸ்ட்ரக்சர்) வளப்படுத்தியிருந்தான். பலமான மற்றும் ஊக்கமுற்ற இராணுவம், பலமான கடற்படை எல்லாம் உறுதிபடுத்தப்பட்டு அருண்மொழி ஆட்சிக்கு வரும் போது தயார் நிலையில் இருந்தது.

அரசனானவுடன்.. ஒவ்வொரு எதிரியையும் ஒன்று விடாமல் களைவது என்று திட்டமிட்டான்.
எதிரிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தான்:

  • பாண்டியமன்னன் அமரப்புயங்கன்..
  • சேரமன்னன் பாஸ்கரவர்மன்..
  • குடகு நாடு
  • கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைபாடி
  • இலங்கை
  • சாளுக்கிய நாடு
  • சீட்புலி நாடு
  • வேங்கை நாடு
  • கலிங்க நாடு
  • மாலத்தீவு, இலக்கத்தீவு

இராஜராஜ சோழன் சரித்திரம் நமக்கு ‘அல்வா’ போல கிடைத்துள்ளது.. அதை ஒரே அத்தியாயத்தில் அடக்கலாமா? அவனது சாதனைகளை மேலும் ‘வச்சு’ செய்யவேண்டாமா! தொடரட்டும் சோழ நாட்டின் சரித்திரம்!.

திரை ரசனை வாழ்க்கை – 13- நம்மவர் – எஸ் வி வேணுகோபாலன்

நம்மவர் - தமிழ் விக்கிப்பீடியா

இயக்கம்: கே. எஸ். சேதுமாதவன்
கதை: கமலஹாசன்
இசை: மகேஷ் மாதவன்
நடிப்பு: கமலஹாசன்,கௌதமி
நாகேஷ்,ஸ்ரீவித்யா,
வெளியீடு நவம்பர் 2, 1994

———————————————இப்படத்தில் நடித்த நாகேஷுக்கு, சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதும், , தமிழ்நாட்டின் மாநில விருதின் சிறப்புப் பரிசும் கிடைத்தன.1994 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது இப்படத்திற்கு கிடைத்தது.

 

திவ ஸ்வப்னா என்கிற புத்தகம் பகல் கனவு என்று தமிழில் வந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் அற்புதமான கல்வியாளர் கீஜுபாய் பதேகா (1885-1939) அவர்களது அற்புதமான படைப்பு அது. இந்த நூலுக்கான அறிமுகவுரையில், தேசத்தின் மிகச் சிறந்த கல்வியாளர், என் சி இ ஆர் டி அமைப்பின் முன்னாள் இயக்குநர் பி கிருஷ்ண குமார் ‘பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் உருவாக்கிய கல்வி முறை, பள்ளி ஆசிரியர் ஒரு ஜடம் போல் இருப்பதையே விரும்பியது, சுதந்திர இந்தியாவின் ஆசிரியர்களும் அதே தடத்தில் நடைபோடுவதில் வியப்பில்லை, ஒரு லட்சம் கனவுகள், கேள்விகளோடு உள்ளே நுழையும் இளம் தளிர்களின் கற்பனைகள், வளர்த்தெடுப்பார் அற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன நம் பள்ளிகளில். 1932ல் முதலில் வெளியான இந்த நூல், அப்போதே இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு பேசப்பட்டது, இப்போது மறுபிரசுரம் ஆவது காலப் பொருத்தமானது’ என்று குறிப்பிடுகிறார்.

கல்லூரி ஆசிரியர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் நிலவும் சூழலை மெல்ல மெல்ல சலனப்படுத்தி, ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி நகர்த்த முடியுமா, தடைகள் எந்த உருவத்தில் வந்து நிற்கும், அதையும் அவர் எப்படி எதிர்கொள்வார் என்பதன் காட்சிப்படுத்தல் தான் நம்மவர் திரைப்படம்.

‘எனக்குரிய இடம் எங்கே’ என்ற அருமையான புத்தகத்தில் கல்வியாளர் பேரா ச மாடசாமி, தனது முதல் நாள் கல்லூரி வகுப்பறை அனுபவம் பற்றிய பதிவைச் செய்திருப்பார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மொழிப்பாடம் நடத்தத் தனது வாழ்க்கையின் முதல் வகுப்பறைக்குள் அவர் சென்று நிற்கையில், அறிமுகமற்ற மாணவர்கள் உலகில் அன்றே அவர் இலகுவாக நுழைய வாய்த்ததும், மிகுந்த மன நிறைவான நிலையில் வெளியே வந்த அவரை அப்போதே தனது அறைக்கு அழைத்த கல்லூரி முதல்வர், ‘எல்லாம் போச்சே….நம்ம கல்லூரி கவுரவம் போச்சே…இத்தனை சிரிப்பு, கைதட்டல், ஆரவாரம் எல்லாம் உங்கள் வகுப்பறையில் இருந்து தானே வெளியே கேட்டது. எல்லாம் போச்சே’ என்று கடுமையாகக் கடிந்து கொண்டாராம். ஆனால், முதல்வர் விருப்பத்திற்கேற்ற பாதையை சிந்திக்கவே செய்யாமல், இன்னுமின்னும் மாணவர்கள் இதயத்தில் இடம் பெறும் ஆசிரியராக, அவர் தனது பணியைத் தொடர்ந்ததையும், விரைவில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதையும், ஆனாலும் சளைக்காமல் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததையும் பேசிச் செல்லும் அந்த நூல்.

கற்றலின் இன்பத்தை, பொறுப்புணர்வின் பாடத்தை, நேயமிக்க தோழமையைச் செயல் விளக்கமாகக் கொண்டு பற்ற வைக்கும் ஆசிரியராக கமல் ஹாசன் அபாரமாக நடித்திருப்பார் நம்மவர் படத்தில். நிலை மறுப்பு, மறுப்பின் மறுப்பு என்று இயற்கையின் அடிப்படையை சமூக அறிவியலாளர்கள் விளக்குவார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைப் பாதைக்கு மாறாக எதிர்த்து நிற்கும் மாணவர் பாத்திரத்தில் கரன் அற்புதமாகச் செய்திருப்பார். அவரையும் மாற்றத்திற்கு உள்ளாக்கும் வேதியல் மாற்றம் தான் திரைப்படத்தின் ஒட்டுமொத்தக் கதை. ஆனால், அது இலகுவாக, சேதமின்றி நிகழ்ந்துவிடுவதில்லை.

அநீதிக்கு அடங்கிப் போகிறவர் அல்ல அந்த ஆசிரியர். அவரது ஆயுதம் அன்பு தான். அதை ஒளிர்விக்க, சில சில்லறை ஆயுதங்களையும் சமயத்திற்கேற்ப எடுத்து தான் தீர வேண்டி இருக்கிறது. அது தற்காப்புக்காக. அதன் அதிர்ச்சிக் காரணம் பின்னர் தான் திரைக்கதையில் சொல்லப்படுகிறது – அவர் மீது காதல் கொள்ளும் சக ஆசிரியை கவுதமி அவர் மீது அறியாமல் கோபம் கொள்ளும் இடத்தில் !

கல்லூரி நிர்வாகத் தரப்பின் பின்னணியில் தறிகெட்டு அலையும் கரன், போதை மருந்துகளின் உலகிற்கு மாணவரைப் பலியாக்கிக் கொண்டிருப்பவர். அந்த மாணவர்களையும், பின்னர் அவரையுமே மீட்டெடுக்கும் அசாத்திய வேலையை எடுத்துக் கொள்ள வேண்டிய இடத்திற்கு, இயல்பான கதையோட்டத்தின் போக்கில் வந்தடைகிறார் கமல். அதற்கு, மாணவி ஒருவர் எதிர்கொள்ளும் துயரமிக்க அதிர்ச்சி நிகழ்வும், அதைத் தொடரும் தற்கொலையும் தூண்டுதல் தருகின்றன. தனது நண்பனாக இருந்த சக மாணவன் ஆசிரியர் பக்கம் நகர்ந்ததால் பழிவாங்க, அவனது தோழியைக் கடத்தி போதை மருந்துகளுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தி விபச்சார வழக்கில் சிறைக்குள்ளும் கொண்டு தள்ளி விடுகிறார் கரன். கமல் அவளை பெயிலில் வெளியே அழைத்துக் கொண்டுவந்து வீட்டில் சேர்த்துச் சென்றபின், இரவு முழுக்கத் தந்தையிடம் புலம்பியவள், மறுநாள் அவரது நடை நேரத்தில் தூக்கில் தொங்கிவிடுகிறாள்.

பழி வாங்கத் துடிக்கும் தவறான திசையில் பயணம் செய்யும் மாணவனுக்கும், அவன் திசையை நல்வழிப்படுத்த அவனோடே மோதும் நேர்மையான ஆசிரியனுக்குமான இறுதிக் கட்டப் போரில் இரத்தம் சிந்தியும் அன்பின் கொடியை இரண்டு பக்கத்திலும் பறக்க விடச் செய்கிறது திரைக்கதை. அண்மையில் மறைந்த கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் அபாரமான படமாக்கம் நம்மவர்.

கண்மணி சுப்புவின் வசனங்கள் படத்தின் உயிர் நாடி. மிகவும் இயல்பாக நகைச்சுவையும், துயரச் சாயையும், நம்பிக்கை துளிர்ப்பையும் காட்சிக்குக் காட்சி மிக அளவாக எழுதப் பட்டிருப்பதும், திரைக்கலைஞர்கள் அதை அம்சமாக வெளிப்படுத்துவதும் சொல்லப்படவேண்டியது. கவுதமியின் காதல் ததும்பும் கண்களின் மொழியும், முறைத்துக் கொண்டு துடுக்காகவும், மிடுக்காகவும் நடந்து கொள்ளும் உடல்மொழியும் ரசனைக்குரியவை. கமல் – கவுதமி மட்டுமே இடம்பெறும் காட்சிகள் அற்புதமான கவித்துவமிக்கவை. மிகச் சில நிமிடங்களே வந்து போகும் கௌரவ வேடத்தில், ஸ்ரீ வித்யா மிகக் காத்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்துவது படத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று. கமல் கவுதமி காதலை அவர் கண்களாலேயே அவதானிப்பது அவருக்கே மட்டும் வாய்க்கும் தனிச்சிறப்பு. கரனுக்குச் சிறப்பான பெயர் பெற்றுத் தந்தது படம்.

படத்திற்காக விருது பெற்ற நாகேஷ், பிரபாகர் ராவ் பாத்திரத்தை அத்தனை அம்சமாக உள்வாங்கி அசத்தலாகச் செய்திருப்பார். மகளை இழந்த தருணத்தில் தொடரும் காட்சியில் (அது ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்று சொல்கின்றனர்) மகத்தான நடிப்பை வழங்கியிருப்பார் தமிழ்த் திரையின் ஒப்பற்ற கலைஞர் நாகேஷ். மாணவராக நடித்திருப்போரும் (திக்குவாய் பேசுபவராக வருபவர் உள்ளிட்டு) மிகப்பெரிய பங்களிப்பு செய்திருக்கும் படம். சேது விநாயகம், செந்தில், டெல்லி கணேஷ் உள்ளிட்ட கலைஞர்கள் அளவான பாத்திரங்களை அவர்களுக்கே உரிய முறையில் சிறப்பாகச் செய்திருப்பார்கள்.

மகேஷ் இசையமைப்பில், கல்லூரியைத் தூய்மைப்படுத்தும் ‘சொர்க்கம் என்பது நமக்கு’ பாடல் ஒரு கொண்டாட்ட கீதம் எனில், ‘பூங்குயில் பாடினால்’ பாடல், எஸ் பி பி – சித்ரா குரல்களில் அருமையான மெல்லிசை. பின்னணி இசையும், மது அம்பாட் ஒளிப்பதிவும், சதீஷ் படத் தொகுப்பும், கமலின் திரைக்கதையும் (வெவ்வேறு ஆங்கில மொழி படைப்புகளைத் தழுவியது என்று சொல்லப்படுவது என்றாலும்) நம்மவர் படத்தை முக்கிய திரைப்படமாக மிளிர வைத்திருப்பவை. விக்ரம் தர்மா பயிற்சியில் சண்டைக் காட்சிகளும் படத்தின் இன்றியமையாத அம்சமாக அமையப் பெற்றவை.

இரத்தப் புற்று நோயாளி என்பதைப் படம் வெளிப்படுத்தும் இடமும், அதை ஒப்புக்கொண்டும் மறுத்தும் நாயகன் வெளிப்படும் விதமும் கமல் நடிப்பின் முக்கிய முத்திரைக் காட்சிகள். சமூகத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை விதைப்பது அத்தனை சுலபமானது இல்லை என்று அழுத்தம் திருத்தமாகக் காட்சிப்படுத்தும் படம், அதே நேரத்தில், அது சாத்தியம் என்பதை அதைவிடவும் அழுத்தமாகப் பொறிக்கும் காட்சிகளையும் உள்ளடக்கி வந்திருப்பது.

உணர்வுகளோடு பிறந்தோம் என்று வரும் புலமைப்பித்தன் பாடல் வரி சொல்வது போலவே, உணர்வுகளைத் தீண்டும் படத்தில் சில காட்சிகள் உணர்ச்சிவசப்படவும் வைப்பது. ஆசிரியரையோ மாணவரையோ உயர்த்தவோ தாழ்த்தவோ செய்யாமல், ஆசிரியர் மாணவர் உறவைக் கொண்டாட வைக்கும் படம், பெற்றோர் – குழந்தைகள் உறவையும் பேசுகிறது. சமூகம் எங்கே வழி அடைபட்டு முட்டிக் கொண்டு தடுமாறுகிறது, எங்கே அதை நேர் செய்ய வழியும் திறந்து கொடுக்கிறது என்பதை அசாதாரண இயல்பு மொழியில் பேசுபவர் யாராயினும் நம்மவராகத் தான் இருக்க முடியும்.

 

 

 

கண்ணன் கதையமுது – 5 தில்லைவேந்தன்

The Birth of Krishna - Sacred stories of world religions

(தேவகியின் எட்டாவது குழந்தையின் வருகைக்கு அனைவரும் காத்திருந்தனர்)

தேவர்கள் வேண்டுதல்

காவலைக் கடுமை யாக்கக்
கட்டளை இட்டான் கம்சன்.
ஆவலும் கொண்டார் தேவர்.
ஆண்டவன் இறங்கி வந்து
தேவகி வயிற்றில் தோன்றும்
அதிசயம் காண வந்தார்
“தீவினை அழிப்ப தற்குச்
சீக்கிரம் வருக’ என்றார்.

மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

கின்னரர்கள் கந்தர்வர் மகிழ்ந்தார் பாடி.
கேழொளிரும் அரம்பையர்கள் நெகிழ்ந்தார் ஆடி
மன்னுபுகழ் முனிவருடன் சித்தர் ஞானி
வாய்மணக்க இறைபுகழை உரைத்தார் கூடி
பொன்னழகு மலரெடுத்து வான வர்கள்
பொழிந்தனரே மண்ணுலகின் மீது கோடி
ஒன்னலராம் தீயவரை அழித்து நல்லோர்
உறுதுணையாய்க் காப்பவனின் வருகை நாடி!

( கேழொளிரும் – நிறம் மின்னும்)

( ஒன்னலர் -பகைவர்)

பூவாடை அதுபோர்த்திப் பாயும் ஆற்றின்
பொங்கிவரும் புதுப்புனலில் மீன்கள் துள்ளும்
காவாழும் கருங்குயில்கள் களித்துக் கூவும்
காற்றினிலே மலர்மணமும் இசையும் மேவும்
ஈவாராம் நயனுடையார்க்(கு) உவமை யாகும்
இன்கனிகள் உவந்தளிக்கும் மரங்கள் யாவும்
தேவாதி தேவனவன் பிறப்பைக் காணும்
திசையெல்லாம் பேரொளியால் எழிலைப் பூணும்!

( நயன் – நன்மை/ சிறப்பு)

கண்ணன் பிறப்பு

ஆவணி எட்டாம் நாளில்
அமைந்தவோர் தேய்பி றையில்
ஓவற ஒளிர்ந்து மின்னும்
உரோகிணி நாள்மீன் அன்று
கோவலர் குலத்துச் செம்மல்
குவலயம் பிறப்பான் என்று.
மேவின ஒன்பான் கோளும்
மேன்மைகொள் உச்சம் நின்று.

(நாள்மீன்– நட்சத்திரம்)

(ஆவணி மாதம் கிருஷ்ண பட்சத்து அஷ்டமி நாள், ரோகிணி நட்சத்திரம் அன்று ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருந்தன)

. குழந்தையின் தெய்வீகத் தோற்றம்

கருநெய்தல் மலர்நிறமும், கைநான்கும், அணிமார்பில்
தெரிமருவும், இடையினிலே சிறுமஞ்சள் பொற்றுகிலும்,
திருமணியும் கழுத்திலங்க, திகழ்கதையும், சக்கரமும்,
ஒருசங்கும், எனப்படைகள் ஒளிமின்னத் தோன்றினனே

( தெரிமரு– விளங்கும் ஸ்ரீவத்ஸம் என்னும் மரு)

கங்கணமும், தோள்வளையும், கற்றையெனும் செறிகுழலும்,
பொங்கொளிசெய் வைரத்தின் பொன்முடியும், குண்டலமும்,
தங்குமெழில் தோற்றத்துச் சாயாத செங்கதிராய்,
அங்குதிக்கத் தாமரையாம் அகிலமது மலர்ந்ததுவே

பாற்கடல் பள்ளி கொண்ட
பரமனே பிறந்தான் என்று
நூற்கடல் கடந்த தந்தை
நொடியினில் கண்டு கொண்டான்
வேற்கணாள் மதலை நோக்கி
மேன்மைகொள் வடிவம் நீங்கி
ஏற்கநீ வேண்டும் கண்ணே
இயல்புறு தோற்றம் என்றாள்

தெய்வீகக் குழந்தை கூறியவை

என்னையே மகவாய்க் கொள்ள
இருவரும் விழைவு கொண்டு
முன்னதோர் பிறவி நோற்றீர்
மூண்டவப் பயனாய் வந்தேன்
இன்னுமந் நினைவு தோன்ற
இவ்வுருக் கொண்டேன் என்று
சொன்னவன் இயல்பாய்த் தோன்றும்
சின்னதோர் குழந்தை ஆனான்

இந்த நேரம் கோகுலத்தில்
ஏற்ற யசோதை பெண்மகவாய்
வந்து பிறந்தாள் மாயையவள்;
வளர வேண்டும் நானங்கு
தந்தை என்னை அங்குவிட்டுத்
தயக்கம் இன்றி அம்மகவை
எந்தத் தடையும் இல்லாமல்
இங்குக் கொண்டு விடவேண்டும்

.சிறைக் கதவுகள் திறந்து கொள்ளல்

காவலர் உறங்கிப் போகக்
கதவகள் திறந்து கொள்ள
யாவரும் அரண்ம னையில்
இன்றுயில் மயக்கம் ஆழ
மாவிலங் குடைந்து வீழ
மதலையை அன்னை ஏந்தி
ஆவலாய் அணைத்துக் கொண்டாள்
ஆசையாய் முத்தம் தந்தாள்!

( தொடரும்)

வளவ.துரையன் – ஒரு கட்டுரை – ஒரு கவிதை

உ வே சா 

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தமிழ் வினா - விடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா-  Dinamani

சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்து பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா மகாமகாபாத்தியாய டாக்டர் உ.வே.சா சாமிநாதையர் அவர்கள் ஆவார். அவரை மிகவும் கவர்ந்த காவியங்களில் ‘வில்லிபாரதமும்’ ஒன்றாகும்.

’அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் அமைந்துள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன’ என்று அவரே எழுதியிருக்கிறார்.

வில்லிபுத்துரார் பாரதத்தில் கீழக்கண்ட பாடலைப் படிக்கும்போது அவருக்கு ஓர் ஐயம் தோன்றியது.

”தண்டார் விடலை தாயுரைப்பத்

தாய்முன் அணுகித் தாமரைக்கைச்

செண்டால் அவள்பைங் குழல்பற்றித்

தீண்டா னாகிச் செல்கின்றான்

வண்டார் குழலும் உடல்குலைய

மானம் குலைய மனம்குலைய

கொண்டார் இருப்பர் என்றுநெறிக்

கொண்டாள் அந்தோ கொடியாளே”

இப்பாடல் சபா பருவத்தில் தருமன் சகுனியுடன் சூதாடித் தோற்றபின் நடக்கும் நிகழ்வைச் சொல்கிறது. இது சூதுபோர்ச் சருக்கத்தில் இருக்கிறது. துரியோதனன் ஆணைக்கேற்பத் துச்சாதனன் திரௌபதியைப் பற்ரி இழுத்துச் செல்லும் செய்தி இதில் கூறப்படுகிறது.

”தன் தாயான காந்தாரி, நீ போய் வா” என்று கூற துச்சாதனன் தாய் போன்ற திரௌபதியின் கூந்தலைத் தன் கையில் உள்ள செண்டால் பற்றி இழுத்துக் கொண்டு போனான். கொடி போன்ற திரௌபதியும் தன் கணவர் அங்கே இருப்பர் என்ற துணிவில் குழல் குலைய, மானம் குலைய, மனம் குலையச் சென்றாள்” என்பதுதான் இப்பாடலின் பொருளாகும்.

அச்ச்சமயதில் திரௌபதி விலக்காகித் தீண்டத்தகாத நிலையில் இருந்தாள். இதைத் “தீண்டாத கற்புடைய செழுந்திருவை” என்று வில்லியே குறிப்பிடுகிறார். அதனால்தான் துச்சாதனன் திரௌபதியைத் தீண்டாமல் செண்டால் பற்றிச் சென்றான் என்று வில்லிபுத்தூரார் குறிப்பிடுகிறார்.

டாக்டர் உ.வே.சா அவர்களுக்கு எழுந்த ஐயம் என்னவென்றால், “துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரௌபதி குழலில் இருந்த மாலைதான் செண்டா? தீண்டத்தகாத நிலையில் தலையில் மலர்மாலை அணிந்திருக்க மாட்டாளே? என்பதுதான். இதை அவர்கள் பல நாள் சிந்தித்தவாறு இருந்தார்.

பிறகு ஒருமுறை தற்பொழுது மயிலாடுதுறை எனப்படும் மாயூரம் அருகில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறுபாதி என்னும் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அவ்வூர் செல்லும் வழியில் கீழ்மேல் அக்கிரகாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறம் உள்ள குளத்தின் கீழ்க்கரையில் இருந்த பெருமாள் ஆலயத்திற்கு அவர் சென்றார்.

அறங்காவலர், டாக்டர் உ.வே.சா அவர்களை தரிசனத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அத்திருமாலின் திருநாமம் இராஜகோபாலன் என்று தெரிவித்தார்கள். உ.வே.சா பெருமாளைப் பார்த்தபோது அப்பெருமாளின் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று அதன் தலைப்பிலே இரண்டு வளைவுகளுடன் இருந்தது.

உ.வே.சா அறங்காவலரிடம், “அது என்ன” என்று கேட்டார். அவர் ”அதுதான் செண்டு” என்று விடை கூறினார். உடனே ‘செண்டா’ என்று கூறிய உ.வே.சா திகைத்து நின்று விட்டார்.

”எங்கே அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்” என்று அறங்காவலரிடம் வேண்ட, திருக்கோயிலின் பட்டர் கற்பூர தீபத்தால் அது நன்றாகத் தெரியும்படிக் காட்டினார்.

துச்சாதனன் தன் கையில் கொண்டிருந்த தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற செண்டால் திரௌபதியை இழுத்துச் சென்றான் என்பதை அறிந்து உ.வே.சா தம் ஐயம் நீக்கிக் கொண்டார்.

”இதுவரையில் நான் செண்டைப் பார்த்ததில்லை. பெருமாள் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது.” என்று உ.வே.சா. கூறினார்.

அதற்கு அறங்காவலர், “இந்தப் பெருமாளும் மன்னார்குடியிலுள்ள பெருமாளும் ஒரே அச்சு. அவர் கையிலும் செண்டு உண்டு. அவரது திருநாமமே செண்டலங்காரப் பெருமாள் என்பதாகும்” என்று கூறினார். தம் ஐயம் தீர்ந்த உ.வே.சா. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 

அனைத்து வகை தோல் நோய்களுக்கும் அருமருந்தாகும் பூவரச மரம்! | The Portia tree  Best medicine for all types of skin diseases

பூவரச மரம்

லேசான தூறலில் குளித்துப்
பளபளவென்றிருக்கும்
இப்பூவரச மரம்
பருவப்பெண் போல்
மதமதர்த்து நிற்கிறது.

ஒற்றைக்காலில் தவம் புரியும்
பச்சைநிறப் பெரிய கூடாரம்

பழுப்பு இலைகளே இல்லாமல்
விரிந்த பசுமைக் கம்பளம்

பசிய வானத்தில்
ஆங்காங்கே மஞ்சளான
பூக்கள் விண்மீன்களாய்

காற்று கூட உட்புக முடியா
கடினமான நெருக்கமுடன்
கிளைகள் இலைகள்

வெட்டி நட்டாலே போதும்
வேர்பிடித்துப் பிழைக்கும்
பீனிக்ஸ் பறவை

மைனாவும் காகமும்
கூடு கட்டி மகிழும் அடுக்ககம்

பல உடன்பிறப்புகள்
பாரினில் மறைந்துபோக

பதைபதைப்புடன் தன் இருப்பைக்
காத்துக் கொள்ளப்
போராடுகிறது இப்பூவரசு.

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

 

புத்தகச் சந்தை

Farmers allege irregularities in Uzhavar Santhai | Covaipost

 

அன்றைய நாட்களில் பெரிய கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் காய்கறிகளும், சுற்றி விளையும் உணவுப் பொருட்களும் வார சந்தையில் மட்டும்தான் வாங்க முடியும்.

கிராமங்களில் காய்கறிக்கென கடைகள் இருக்காது. வீட்டில், காட்டில் விளையும் காய் கறிகளை தெரிந்தவர்களுக்கு விற்றால் பாவம். கிராமத்தில் அனைவரும் தெரிந்தவர்கள்தானே. ஓசியில்தான் கொடுக்க வேண்டும். எனவே சத்தம் போடாமல் வண்டியில் ஏறி அவை பக்கத்து நகரின் மண்டிகளுக்கு சென்று விடும்.

அதே காய்கறிகள் மீண்டும் வண்டி பிடித்து சந்தையன்று விளை பொருளாக பிறந்த ஊர் வந்து சேரும்.

சில மைல்கள் சுற்றளவிலிருந்து, பொடி நடையாக சந்தையில் பொருள்களை வாங்கி தலையிலும் கைகளிலும் சுமந்தபடி நடந்து கொண்டே பேசிச் செல்வது ஒவ்வொரு வாரமும் நடக்கும் வைபவம். குடியானவர்க்கு அது ஒரு பொழுது போக்கும் ஆகும்.

சந்தை தினத்தன்று உழவு வேலைகள் அனைத்தும் மதியத்தோடு நிறுத்தப் படும்.

கிணத்தில் இறங்கி ஒரு சிறு குளியல் போட்டு மேல் சட்டையை தேடி எடுத்து போட்டுக் கொண்டு அவசரம் அவசரமாக கிளம்புவது வாரம் நடக்கும் வாடிக்கை.

குழந்தைகள் வீதி வரை தனக்கு வேண்டியதை நினைவு படுத்திக் கொண்டே தொடர்ந்து வருவர்.
மனைவி மார்களோ ‘அந்த உதவாக்கறையோடு சேர்ந்து கள்ளுக் கடை பக்கம் போயிடாதய்யா’, என தங்கள் கவலையை கொட்டித் தீர்ப்பார்கள்.
பல வீடுகளில் எதற்கு வம்பென பெண்களே சந்தைக்கு கிளம்பி விடுவார்கள்.

அவ்வார கொள்முதலில் கண்டிப்பாக பொரி உருண்டையுடன் பொரி கடலையும், காரச் சேவும் வீட்டில் காத்திருக்கும் குழந்தைகளுக்காக இருக்கும். சற்று அதிக பணத்துடன் வந்திருப்பவர் சந்தைக்கு வந்திருக்கும் மிட்டாய் கடையில் இனிப்புகள் வாங்கிச்செல்வர்.

சந்தைக்கு அடுத்த தினம் சில வீடுகளில் மீனோ மட்டனோ மணக்கும்.

என் சிறு வயதில் அம்மா பத்திரம், பத்திரம் என இரண்டு மூன்று தடவைகள் எச்சரிக்கை செய்து கொடுத்த ஐந்து ரூபாய்களை எடுத்துச் சென்று மணப்பாறை சந்தையில் இரண்டு பைகளில் சுமக்க முடியாமல் காய்கறி வாங்கிச் சென்றது ஞாபகம் வருகிறது. ஓசியில் கொசுறாக மறக்காமல் கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கூடவே பச்சை மிளகாயும் கிடைத்த நாட்கள் அவை.

மணப்பாறையில் ஒரு விசேசம், புதன் கிழமை காய்கறிச் சந்தையென்றால், வியாழன் மாடுகளுக்கான சந்தை. வியாழன்று வீதிகளில் மனிதர்கள் நடக்க சற்று யோசிக்க வேண்டும். அன்று மட்டும் வீதிகளின் மொத்த குத்தகை மாடுகளைக்கு மட்டுமே. மாடுகளின் வாயைத் திறந்து பற்களைப் பார்த்து சரியான வயதைச் சொல்வதற்கு எந்தப் பள்ளியில் படித்தார்கள் எனத் தெரிய வில்லை. மாடு விற்பவரும் வாங்குபவரும் தம் கைகளை ஒரு துண்டால் மறைத்து விரல்களால் பேரம் பேசும் கலையை கற்க வேண்டும் என்ற என் கணவு இன்று வரை நிறைவேர வில்லை. இனி வருத்தப்பட்டுப் பயனில்லை.

இன்று சந்தையில் குதிரைகளும் விற்பனைக்கு வருவதாக கேள்வி.
உற்பத்தியாளர், வியாபாரி, வாடிக்கையாளர் ஆகிய மூவரும் கூடும் இடம் சந்தை.

இன்றும் fair, mela, exhibition என வெவ்வேறு பெயர் தாங்கி உற்பத்தியாகும் பொருளனைத்திற்கும் சந்தை நடந்து கொண்டுதான் உள்ளன.
கடைசியாக வாரச் சந்தையை ‘கடைசி விவசாயி’ படத்தில் பார்த்தது.

தலைப்பிலிருந்து விளகி ஏதோ உளறிக் கொண்டுள்ளேனா? வேறு ஒன்றுமில்லைச. கடந்த வாரம் புத்தகச் சந்தை சென்று வந்தீர்களே அதைப் பற்றி சில வரிகள் எழுதுங்கள் என குவிகம் ஆசிரியர் பணித்தார். சந்தை என்றவுடன் என் நினைவுகள் எங்கெங்கொ சென்று விட்டன.

இந்த ஆண்டு சில தினங்கள் நடந்த புத்தக சந்தையின் மொத்த விற்பனை ரூபாய் 15 கோடிகளாம். கூகுள், ஆன்ட்ராய்ட் ஆட்சி செய்யும் காலத்தில் இது ஒரு நிறைவான செய்தி.

எத்துனை புதிய படங்கள் வந்தாலும் ஒரு பழைய MGR படம் வந்து கல்லா கட்டுவது போல ஒவ்வொரு ஆண்டும் கல்கியின் பொன்னியின் செல்வன் விற்பனையில் முதலில் நிற்குமாம். ஒரு மாறுதலுக்காக இவ்வாண்டு புதுமைப் பித்தன்.

எங்கு திரும்பினும் கண்களில் பட்ட இளைஞர் தலைகள், இப்புத்தக சந்தை இன்னும் நூறு வருடங்கள் மேலும் தொடரும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.
நான் கடந்த சந்தையில் வாங்கிய புத்தகங்கள் இன்னும் படித்து முடிய வில்லை. இவ்வாண்டு கண்டிப்பாக புத்தகச் சந்தை செல்வதில்லை என்ற முடிவுடன் இருந்தேன்.

நிறைவு நாள் நெருங்க, நெருங்க கால்கள் லேசாக நடுங்க ஆரம்பித்தன. மெதுவாக நடுக்கம் கைகளுக்கும் பரவியது. சரி, சென்று சுற்றிப் பார்த்துவிட்டு ஒரிரு புத்தகங்களோடு திரும்புவோம் என கிளம்பினேன்.

திரும்பி வரும் பொழுது இரண்டு கைகளிலும் பைகள் நிறைய புத்தகங்கள்.
கண்டிப்பாக அடுத்த ஆண்டு புத்தகச் சந்தை செல்லக் கூடாது.
பிரசவ வைராக்யம்.

திரௌபதி!- அன்னபூரணி

pooja sharma draupadi in mahabharat star plus | Wedding jewellery collection, Gorgeous bride, Indian bridal photos

இந்த மகளிர் தின நன்னாளிலே இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக விளங்கும் அரசி திரௌபதியைப் பற்றி நான் உணர்ந்து கொண்டவற்றை இங்கே பகிர விரும்புகிறேன்! 

நம் இந்திய தேசத்தின் கலாச்சாரத்தை நம் மக்களின் பண்பை ஆன்மீகப் பெருமைகளை இராமாயணம் மற்றும் மகாபாரதம் என்ற இரு மாபெரும் இதிகாசங்களின் மூலம் நாம் அறியலாம்! இரண்டு காவியங்களிலும் மனிதம் உள்ளது! இறைமையும் உள்ளது! இரண்டுமே இறைவனிடம் நாம் சரணடைய வேண்டும் என்ற சரணாகதி தத்துவத்தை நமக்கு போதிக்கிறது.

பாரதத்தின் நிலங்களினூடாக, இனக்குழுக்களின் கதைகளினூடாக, தேசங்களின் வரலாறுகளினூடாக நுணுக்கமான சித்தரிப்புகள் வழியாக விரிந்து செல்கிறது மகாபாரதம் என்னும் இதிகாசம்! தகவல்களையும் உணர்ச்சி மோதல்களையும் சுவைபடக் கூறி நம்மை எழுச்சியூட்டுகிறது.  இந்திய வரலாற்றைப் பற்றியோ தத்துவத்தைப் பற்றியோ மானுட உணர்ச்சிகளையோ மகாபாரதத்திற்கு வெளியே தேட வேண்டிய அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து!

என்னைக் கவர்ந்த கதாபாத்திரமாக மகாபாரதத்தின் கதாநாயகி, பாஞ்சால நாட்டின் இளவரசியும் அஸ்தினாபுரத்து மகாராணியுமான திரௌபதியே ஆவாள்.

திரௌபதி!

 

எந்த யுகத்திலோ அவள் பிறந்திருந்தாலும், அன்றிலிருந்து இன்று வரை அவள் ஒட்டு மொத்த இந்தியப் பெண்களின் பிரதிநிதியாகவே என் கண்களுக்குத் தெரிகிறாள்! ஆமாம்! இந்தியப் பெண்களுக்கு குழந்தைப் பருவம் மறுக்கப் படுகிறது! கன்னிப் பருவம் மறுக்கப்படுகிறது! கல்வி மறுக்கப்படுகிறது! சிலருக்கு கலவியும் மறுக்கப்படுகிறது! பலருக்கு அது திணிக்கவும் படுகிறது! அவர்களுடைய விருப்பங்கள் மட்டுமல்ல மறுப்புகளும் வெறுப்புகளும் கூட மறுக்கப்படுகிறது! அவர்களுக்குத்தான் எத்தனை சோகம், எத்தனை கண்ணீர், எத்தனை இடர்பாடுகள், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மனநிறைவையே காணாத பெண்கள் தன்னைச் சுற்றி இருப்போருக்காகவே வாழ்கிறார்கள்!

திரௌபதி! பாஞ்சால நாட்டின் மன்னன் துருபதனின் மகளானதால் திரௌபதி என்று பெயர் பெறுகிறாள். பாஞ்சால நாட்டின் இளவரசியானதால் பாஞ்சாலி என்று அழைக்கப்படுகிறாள். உண்மையில் இவளுடைய இயற்பெயர், கிருஷ்ணை!

கிருஷ்ணை என்றால் கறுப்பு என்று பொருள்படும்! பொருளுக்கேற்றவாறு அவளும் கறுப்புதான்! பொன்னிறத்தவள் என்றும் பொருள் கூறுவர்! ஆனால் பேரழகி! அவளுடைய நீண்ட கருங்கூந்தல் கார்மேகத்துக்கு ஒப்பாகும்! பிறை போன்ற நெற்றியும் மீன் போன்ற கண்களும், கோவைப் பழம் போன்ற சிவந்த அதரங்களும் சங்கு கழுத்தும், மூங்கில் போன்ற தோள்களும், பொய்யோ என்று சொல்லும்படியான அழகான இடையும் என்று வர்ணித்துக்கொண்டே போகலாம்! அவளுடைய எந்த அம்சத்திலும் ஒரு குறை கூட காணமுடியாதபடிக்கு அத்தனை அழகானவள் அவள்! அவள் மேலிருந்து எப்போதும் சுகந்த நறுமணம் வீசிக் கொண்டேயிருக்கும்.

அவள் துருபதனின் மகளாகப் பிறந்தவள்! ஆனால் துருபதனுக்கும் அவன் மனைவிக்கும் ஏற்பட்ட காதலால் பிறந்தவள் அல்ல! துருபதன் தன் பழிவாங்கும் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு கருவியாக, யாக அக்கினியிலிருந்து அவளை தோன்றச் செய்தான்!

எல்லாரும், “ஆசைக்கு ஒரு பெண் குழந்தை! ஆஸ்த்திக்கு ஒரு ஆண் குழந்தை!” என்று குழந்தை பெற்றுக் கொள்வார்கள்! ஆனால் மன்னன் துருபதன், தன்னை வஞ்சித்த துரோணரை அழிப்பதற்கென்றே கற்றறிந்த அந்தணர்களை வைத்து அக்கினி வளர்த்து அதிலிருந்து, துரோணரை வதைக்க ஒரு மகனையும், துரோணரிடமிருந்து அவருடைய பிரதான சிஷ்யனான அர்ஜுனனை மணந்து, அவரிடமிருந்து அவனைப் பிரிக்கவென்ற நோக்குடன் ஒரு மகளையும் தோற்றுவித்தான். (ஆனால், முதலில் துருபதனே துரோணரை வஞ்சித்து அவமானப்படுத்தினான்! அதற்குப் பாடம் புகட்டவே துரேணர் தன் மாணவர்களான பாண்டவர்களின் உதவியுடன் துருபதனை சிறைபிடித்தார் என்பதை ஏனோ மறந்தே போனான்!) அப்படிப் பிறந்த மகன், திருஷ்டத்யும்னன்! மகள், திரௌபதி!

 

திரௌபதியின் பிறப்பை வில்லிப்புத்தூரார் இப்படி எழுதுகிறார்.

பின்னுங் கடவுள் உபயாசன் பெருந் தீப்புறத்துச் சுருவையினால்
மன்னுங் கடல் ஆரமுதென்ன வழங்கு சுருதி அவி நலத்தான்
மின்னுங் கொடியு நிகர் மருங்குல் வேய்த்தோண் முல்லை வெண் முறுவல்
பொன்னும் பிறந்தாள் கோகனகப் பூமீதெழுந்த பொன் போல்வாள்.

பொருள்:

அதன்பின்பும் (திருஷ்டத்யும்னன் தோன்றிய பின்) தெய்வத்

தன்மையை உடைய உபயாசன் என்னும் அம்முனிவன் பெரிய யாக அக்கினியிலே, சுருவை என்னும் ஓமத்துடுப்புக் கருவியைக்

கொண்டு பெருமை பொருந்திய  பாற்கடலில் தோன்றிய அருமையான அமிருதம் போல ஆகுதி செய்த மிக இனிய தேவர் உணவாகிய வேத முறைமை தவறாத அவிர்ப்பாகத்தினது நற்பயனால் மின்னலையும் பூங்கொடியையும் போன்ற இடையையும் மூங்கில் போன்ற தோள்களையும் முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுமுடைய  பொன் போல் அருமையான அழகிய ஓர் பெண்ணும் செந்தாமரை மலரினின்று மேலெழுந்த திருமகளை ஒப்பவளாய் தோன்றினாள்.

கோகம் – சக்கரவாகப்பறவைகள்! செல்வத்துக்குரிய

தலைவியாதலாலும், பொன்னிறமுடைமையாலும்,பெறுதற்கருமையாலும், பொன் என்று திருமகளுக்கு ஒரு பெயர்! திரௌபதி மகாலக்ஷ்மியின் அம்சம் என்கிறார் வில்லிப்புத்தூரார்.

துருபதன் அவளை என்ன சொல்லி படைக்கிறான்? இந்த உலகின் அவமானங்கள் அனைத்தையும் அவள் அடைய வேண்டும்! அப்படி அடைந்தாலும் அத்தனை அவமானங்களையும் அவள் வென்று வர வேண்டும் என்று வேண்டியே அவளை தோற்றுவிக்கிறான்!

நெருப்பின் மகளாகப் பிறந்த துருபதனின் மகள் கன்னிகையாகவேதான் இந்த மண்ணுலகிற்கு வருகிறாள். தீயிலிருந்தே பிறந்தாலும், மனித உருவமெடுத்தாலும் அவளுக்கு மனிதர்களின் தீய குணங்கள் இல்லை! அது என்னவென்றும் அவளுக்குத் தெரியாது!

அதனாலேயே அவள் நிறைய சங்கடங்களுக்கு ஆளாகிறாள்!

நமக்கெல்லாம் மகாபாரதத்தில் பகடையை உருட்டி சூழ்ச்சி செய்தவன் சகுனி என்று நன்றாகத் தெரியும்!

ஆனால் கண்ணுக்குத் தெரியாத பகடையை உருட்டி ஆளாளுக்கு சூழ்ச்சி செய்து தங்களுடைய ஆசைகளை தீர்த்துக் கொண்டனர் என்று தெரியுமா? இவர்களின் சூழ்ச்சிக்கெல்லாம் பலிகடாவானவள்தான் இந்த அபாக்கியவதி பாஞ்சாலி என்று தெரியுமா?

ஆமாம்! ஏனெனில் அவளுக்கு தீயைத் தெரியுமே தவிர, ஆசை, கோபம், வெறுப்பு, பழி, பாவம், வஞ்சகம், சூழ்ச்சி போன்ற தீய எண்ணங்களைத் தெரியாது! அவள் தீயிலிருந்து பிறந்ததால் புனிதமானவள்! அன்பு, பாசம், நேசம், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் குணம், வீரம் போன்ற புனிதமான பண்புகளையுடையவள்! அதனால்தான் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள்! ஆனாலும் தன் நற்பண்புகளை அவள் ஒருபோதும் கைவிட்டதில்லை!

துருபதன், துரோணரை பழி வாங்க பகடையை உருட்டி திரௌபதியை தோற்றுவிக்கிறான்!

குந்தி தன் மகன்கள் அரசாள வேண்டும்! அதற்காக அவர்கள் ஒற்றுமையாக இருத்தல் அவசியம் என்று பகடையை உருட்டி திரௌபதியை ஐவரின் மனைவியாக்கினாள்!

பீஷ்மர் தன் பிரம்மச்சரிய விரதம் பாழாகக் கூடாதென்றும், அஸ்தினாபுரத்தை காப்பேன் என்ற தன் சபதம் நிறைவேறவும் பகடையை உருட்டி துரியோதனன் செய்யும் தீய செயல்களை கண்டிக்காமல் விடுகிறார்! விளைவு? துரியோதனனின் மனதில் கொழுந்துவிட்டெறியும் பகையினால் தன் தம்பிகளின் மனைவியையே மானபங்கப்படுத்தத் துணிகிறான்!

திருதிராஷ்ட்டிரன் தன் மகனுக்கு அரசாட்சி வர வேண்டும் என்று பகடையை உருட்டி சகுனியையும் துரியோதனனையும் கண்டிக்காமல் விடுகிறான்! விளைவு! சூதாட்டத்துக்கு யுதிஷ்ட்டிரனை அழைத்து அனைத்தையும் அவனை இழக்க வைத்து திரௌபதியை களங்கப்படுத்தத் திட்டமிடுகிறான் துரியோதனன்!

இப்படி ஆளாளாளுக்கு பகடை உருட்டுவதால் அந்த பகடைகளுக்கு பலியானவள் திரௌபதி! ஆனாலும் அவள் எதையும் தாங்கும் இதயத்தோடு வாழ்கிறாள்!

அக்கினியிலிருந்து கன்னிகையாக பிறந்ததால் அவளுக்கு குழந்தைப் பருவம் கிடையாது! அதனாலேயே தாயன்பு, தந்தையன்பு கிடையாது! சகோதரனுடன் தோன்றினாலும் சகோதர பாசம் கிடையாது! அவள் சகித்துக் கொள்கிறாள்!

அர்ஜுனனின் மனைவியாக ஆவாய்! என்று சொல்லியே அவளை வளர்க்கிறான் துருபதன். ஆனால் சுயம்வரம் என்ற ஒரு நாடகத்தை நடத்துகிறான்! அங்கும் அவளுடைய விருப்பம் கேட்கப்படவில்லை! அர்ஜுனன் சுயம்வரத்தில் திரௌபதியை வென்றாலும் குந்தியின் வார்த்தைப் பிழையால் பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகிறாள்! அவள் வேறு வழியின்றி இந்த நிலையை ஏற்கிறாள்!

அரசியாக இருந்தாலும் அரச வாழ்வு மறுக்கப்படுகிறது! ஆனால் வனவாசத்தையும் அவள் சலனமின்றியே ஏற்கிறாள்!

ஐவரின் மனைவியாக இருந்தாலும் அவளுக்கு காதல் மறுக்கப் படுகிறது! தன் ஐந்து கணவர்களின் மூலம் ஐந்து குழந்தைகளுக்குத் தாயாக ஆனாலும் அவளுக்கு பிள்ளைக் கனியமுதும் மறுக்கப்படுகிறது! அவள் மனவருத்தப்பட்டாலும் ஜீரணித்துக் கொள்கிறாள்!

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தருமம்! ஒருவனுக்கு மேற்பட்ட ஆடவனுடன் ஒரு பெண் உறவு கொண்டால் அவள் பதிவிரதை கிடையாது என்கிறது தர்மசாஸ்த்திரம்! அப்படியிருக்கையில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்றால் அவளுக்கு எத்தனை அவச்சொல் வந்திருக்கும்?! அத்தனையையும் தாங்குகிறாள்.

ஆனால் வியாச முனிவர் அவள் ஐவருக்கு மனைவியானாலும் அவள் தினம் தினம் காலையில் எழுந்ததும் தன் கன்னித் தன்மையைப் பெறுவாள் என்று வரமளிக்கிறார்! அதனால் அவள் நித்யகன்னியாவாள்!

இந்திய மரபில், பஞ்ச கன்னிகைகளாகச் சொல்லப்படும் அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ஆகியோரின் பெயரைக் காலை வேளையில் நினைவு கூர்வதே பாவங்களை அழிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.

‘அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ததா பஞ்சகன்யா: ஸ்மரனோ நித்ய மகாபாதக நாசனம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மேற் சொன்ன ஐந்து பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டிருந்தவர்கள்.

அகலிகை – கெளதம முனிவரின் மனைவி. இவள் அழகில் ஆசை கொண்ட இந்திரன் முனிவர் வேடத்தில் வந்து இவளிடம் கூடினான்.

தாரா – வாலியின் மனைவி. இராமனால் வாலி கொல்லப்பட்ட பின்பு சுக்ரீவன் மனைவியாகிறாள். (வால்மீகி இராமயாணப் படி)

குந்தி – பாண்டுவின் மனைவி. துர்வாச முனிவர் வழங்கிய வரத்தால், சூரிய பகவான் மூலம் கர்ணனையும், தர்மதேவன் மூலம் யுதிர்ஷ்டனையும், இந்திரன் மூலம் அர்ச்சுனனையும், வாயு பகவான் மூலம் பீமனையும் பெற்றாள்.

மண்டோதரி – இராவணன் இறப்பிற்குப் பிறகு விபீஷணனுக்கு மனைவியானாள். (வால்மீகி இராமயாணப் படி)

சீதையின் பரிசுத்தத்தை பரிசோதிக்க அவளை அக்னிப்ரவேசம் செய்யச் சொல்லி ராமன் கட்டளையிடுகிறான். சீதையும் அவன் கட்டளைக்கு அடிபணிந்து அக்னிப்ரவேசம் செய்து தன்னை நிரூபிக்கிறாள்!

அப்படியென்றால், திரௌபதி புனித அக்கினியிலிருந்தே தோன்றியவளாயிற்றே! அவள் எவ்வளவு புனிதமானவளாக இருக்க வேண்டும்? ஆனாலும் அவள் வேசியென்று கர்ணனாலும் கௌரவர்களாலும் இகழப்படுகிறாள்!

அவள் குருவம்சத்தின் குலவது! (குலத்தின் மருமகள்!) (இந்திய தேசத்தில் மருமகள்களுக்கு என்றைக்கு மதிப்பளித்தார்கள்?)

மாபெரும் குருவம்சத்தின் தர்ம தாதாவான பிதாமகர் பீஷ்மர், குலகுரு கிருபாச்சாரியார், குரு வம்ச இளவரசர்களின் குருவாக விளங்கும் துரோணாச்சாரியார், தரும நெறி பிறழாத அமைச்சராக விதுரன், மாமன்னன் திருதிராஷ்ட்டிரன், மற்றும் பெரியோர்கள் பொதுமக்கள் என பலர் கூடியிருந்த கௌரவர் சபையில், பராக்ரமாசாலிகளான அவளுடைய ஐந்து கணவர்கள் முன்னிலையில் அவள் வேசியென்று கௌரவர்களால் இகழப்படுகிறாள்! அவமானப்படுத்தப்படுகிறாள்! அவளுடைய ஆடை பறிக்கப்படுகிறது! அவளுடைய ஐந்து கணவன்மார்கள் உட்பட அத்தனை பேரும் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தார்களே ஒழிய ஒருவரும் இந்த குற்றச் செயலை எதிர்த்து போராடவில்லை! அவ்வளவு ஏன்? அதை எதிர்த்து ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்பது எத்தனை அவமானமான செயல்?

திரௌபதியை இப்படி கூறுகிறார் மகாகவி பாரதி!

பாவியர் சபைதனிலே, – புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை
ஆவியில் இனியவளை, – உயிர்த்து
அணிசுமந் துலவிடு செய்யமுதை,
ஓவிய நிகர்த்தவளை – அருள்
ஒளியினைக் கற்பனைக்கு உயிரதனைத்
தேவியை, நிலத்திருவை, – எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை
படிமிசை யிசையுற வே – நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுருவை – ஒரு
கமனியக் கனவினைக் காதலினை
வடிவுறு பேரழகை, – இன்ப
வளத்தினைச் சூதினிற் பணையமென்றே
கொடியவ ரவைக்களத்தில் – அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்.

எத்தனையோ நலன்கள் அவளுக்கு மறுக்கப்பட்டாலும் அவளுக்கு ஒன்றே ஒன்று பரிபூரணமாகக் கிடைத்தது! அது பரம்பொருளான வாசுதேவ கிருஷ்ணனின் புனிதமான நட்பு!

உடுக்கை யிழந்தவன் கைபோ லாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு!

என்ற வள்ளுவனின் வாக்கிற் கிணங்க, ஒவ்வொரு முறை அவளுக்கு இடுக்கண் ஏற்படும் போதெல்லாம் அந்தப் பரம்பொருளே வந்து அவளுடைய துயரைத் துடைக்கிறார்!

இங்கே கௌரவர் சபையிலும் அவளுடைய மானத்தைக் காக்க ஒருவரும் குரல் கொடுக்காத நிலையில் அந்த பரம்பொருளையே அவள் சரணடைகிறாள்! தன் கைகளிரண்டையும் தலைக்கு மேலே தூக்கி கரம் கூப்பி நின்று இனி நீயே கதி என்று கண்மூடி அவனையே நினைக்க, அவளுடைய மானம் காக்க இறைவன் அவளுடைய ஆடையை நீட்டித்துக் கொண்டே போகிறான்! துச்சாதனன் திரௌபதியின் ஒற்றை ஆடையை இழுக்க இழுக்க அது முடிவுறாமல் நீண்டு கொண்டே போகிறது! கடைசியில் அவன்தான் சோர்ந்து போகிறான்!

இது ஒன்றே போதாதா, அவள் பத்தினிதான் என்பதற்கு?

ஆனால் இன்றைய இந்தியப் பெண்களின் நிலை இன்னுமும் மோசம்தான்! இன்றைய பெண்களின் பெண்மைக்கு பிதாமகர்களாலும்  (சொந்த அப்பா, சித்தப்பா, மாமா, தாத்தா போன்ற சொந்தங்கள்), குலகுருவாலும் (போலிச் சாமியார்கள்), ஆசான்களாலும் (கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்), இன்னும் எத்தனை எத்தனையோ பேர்களாலுமே ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை!

எல்லா கொடுமைகளையும் தாங்கிக் கொண்ட அவளால் தன் பெண்மைக்கு கௌரவர்களால் ஏற்பட்ட அவமானத்தை பொறுத்துப் போக முடியவில்லை! அவள் அதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதவில்லை! ஒட்டுமொத்த பெண்சமுதாயத்துக்கு ஏற்பட்ட அவமானமாவே கருதுகிறாள்! அதனாலேயே கௌரவர்களை தண்டிக்க நினைக்கிறாள்! குருக்ஷேத்திர யுத்தம் தொடங்கக் காரணமாகவும் ஆகிறாள்.

யுத்தத்தில் தன் ஐந்து கணவர்கள் தவிர தன்னைப் பெற்ற தகப்பன் முதல் தான் பெற்ற பிள்ளைகள் வரை அத்தனை பேரையும் பறி கொடுக்கிறாள்!

கௌரவர்களை அழிக்க நினைத்தாலும் அவர்களின் மரணத்தின் போதும் அவள் மனம் வெதும்பி அழவே செய்கிறாள்! (என்னே அவள் தூய உள்ளம்!)

எத்தனையோ துன்பங்களைத் தாங்கிய பின்னும் யுத்தகளத்தில் வீரமாகக் கொல்லாமல், தூங்கும் போது பாசறைக்குள் வஞ்சகமாக வந்து கோழை போல தன் மக்களைக் கொன்ற துரோணரின் மகன் அஸ்வத்தாமனை, துரோணரின் மனைவியான குருபத்தினி தன்னைப் போல புத்திர சோகத்தால் வேதனைப் படக் கூடாதென்ற ஒரே காரணத்தால், மன்னிக்கிறாள் திரௌபதி! அவளுடைய தாயன்பும் குரு பத்தினியின் மேல் அவள் கொண்ட இரக்கமும் போற்றுதற்குரியதன்றோ!

யுத்தமெல்லாம் முடிந்து அஸ்தினாபுரத்து அரியணை ஏறிய பின்னரும் அவளுக்கு மன அமைதி கிட்டவில்லை! காரணம்! ஆரம்பத்தில் பரிவு காட்டிய கணவர்களில் பீமனைத் தவிர மற்ற நால்வரும் இப்போது வெறுப்பையே அவளிடம் காட்டினார்கள்! இளக்காரம் காட்டினார்கள்! (கொடுமையன்றோ!)

கடைசியாக மரண யாத்திரை செல்லும் போதும் அவளுடைய விருப்பம் கேட்கப் படவில்லை! அவள் உயிர் வாழ ஆசைப்படவில்லைதான்! ஆனால் தன் மரண யாத்திரையை அவள் தன் கணவர்களுடன் செல்லப் பிரியப்படவில்லை! ஆனால் அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை! அவர்களுடன் நடந்தாள்.

இமய மலை நோக்கி அவர்கள் ஒருவர்பின் ஒருவராக செல்ல, அவர்கள் பின்னே ஒரு நாயும் நடந்து சென்றது!

முதலில் நகுலனும் பின்னர் சகாதேவனும் விழுந்து இறக்கிறார்கள்! யுதிஷ்டிரனின் உத்தரவுப்படி யாரும் திரும்பிப் பார்க்கவில்லை!

திரௌபதியும் துவண்டு விழுகிறாள்! யுதிஷ்ட்டிரன் அவளைத் திரும்பிப் பார்க்கக் கூடாதென்று பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் உத்தரவிடுகிறான்! காரணம்? அவளுக்கு பாண்டவர்களில் அர்ஜுனனிடம் மட்டும் அதிக அன்பும் காதலும் இருந்ததாம்? (எப்படி இருக்கிறது இவன் காரணம்? அர்ஜுனன்தான் உன் கணவன் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவளை அழைத்து வந்து ஐவருக்கும் மனைவியாக்கின குந்தியைத்தானே தர்மவானான அவன் கோபப்பட வேண்டும்! அது சரி! இந்திய ஆண்கள் என்றைக்கு தங்கள் தாய் செய்யும் தப்பை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு மனைவிகளை குற்றம் சொல்ல காரணம் ஏதாவது வேண்டுமா என்ன?)

ஆனால் துவண்டு விழுந்த திரௌபதியை தன் மடிதாங்கிக் கொள்கிறான் பீமன்! ஆமாம்! அவன் ஒருவன்தான் அவளுக்காக கடைசி வரை பாடுபட்டிருக்கிறான்! பீமன் ஒருவனே அவளுடைய மகிழ்ச்சிக்கு வித்திடுகிறான். கீசகன், ஜராசந்தன் போன்ற கொடியவர்களினால் அவள் துன்புறும் போதெல்லாம் அவர்களை அழித்து அவளுக்கு மன அமைதியை தருகிறான்! துரியோதனன் முதல் அவனுடைய இளவல்கள் அத்தனை பேரையும் கொன்றவன் பீமன் ஒருவனே! அதுவும் திரௌபதியின் மன அமைதிக்காவே இதனைச் செய்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது!

பாஞ்சாலி சபதத்தில் அவளை துச்சாதனன் துகிலுரிந்தபின் அவள் கதறியழும்போது வரும் பீமனின் வசனம் என்னை மிகவும் கவர்ந்த பகுதி. தருமனைச் சாடும் அக்கோபத்தில் வெளிப்படுவது பீமன் திரௌபதி மீது கொண்டிருக்கும் ஆழமான காதல் தான். கோப வரிகளைப் படித்துவிட்டு நாம் நிச்சயமாக நெகிழ்ந்துதான் போகிறோம்! கடைசி வரை பீமன் திரௌபதியின் மேல் தான் வைத்த காதலை குறைத்துக் கொள்ளவே இல்லை!

ஆமாம்! இறுதி யாத்திரையின் போது திரௌபதி கீழே விழும் போது கூட, அவள் அடிபடாமல் பத்திரமாக(!) கீழே படுக்க வைத்துவிட்டு தன் அண்ணனின் உத்தரவின் பேரில் அவனைத் தொடருகிறான்! (வேறு வழி?)

கீழே விழுந்த திரௌபதி கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விடுகிறாள்! அப்போது அவளுடைய நெஞ்சம் துக்கம் தாளாமல் வெடிக்கிறது! அதிலிருந்து குருதி பெருகுகிறது! அந்தக் குருதியைக் கொண்டு அவள் தன் உற்ற நண்பனான வாசுதேவ கிருஷ்ணனுக்கு அந்த பனி மலையின் பாறையின் மேல் ஒரு கடிதம் எழுதுகிறாள்! “ஹே! கிருஷ்ணா! பாரதப் பெண்ணான நான், பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகிவிட்டேன்! இனி எந்தப் பெண்ணும் என் போன்ற கொடுமையை அனுபவிக்கக் கூடாதென்று உன்னை வேண்டிக் கொள்கிறேன்!” என்று எழுதிவிட்டு அவள் உயிர் துறக்கிறாள்.

தீயில் பிறந்தவள், பனியில் உயிரை விடுகிறாள்! அவள் பிறந்தபோது எப்படி கண்மூடி கரம் குவித்தபடி பிறந்தாளோ அதே போல மல்லாக்கப் படுத்த நிலையில் கைகளிரண்டையும் தலைக்கு மேல் தூக்கி கரங்கள் கூப்பி கண்கள் மூடி அந்தப் பரம் பொருளான வாசுதேவ கிருஷ்ணனை நினைத்தபடியே உயிரை விடுகிறாள்! (என்னே ஒரு தெய்வீகம்!)

வாசுதேவ கிருஷ்ணா! நீ இன்னும் அந்தக் கடிதத்தை படிக்கவில்லையா? பாரதத்தில் மட்டுமல்ல! பாரெங்கிலும் பெண்களுக்கு, பாலியல் ரீதியாக மட்டுமல்ல பல்வேறு வகையிலும் இழைக்கப்படும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல! இங்கே திரௌபதிகளின் அழுகுரல் ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருக்கிறதே! உன் செவிகளில் அந்த அவலக் குரல்கள் விழவில்லையா?

சீக்கிரமாக அந்தக் கடிதத்தைப் படித்து அழுது கொண்டிருக்கும்  திரௌபதிகளுக்கு பாதுகாப்பை வழங்கு கிருஷ்ணா!

திரௌபதி பட்ட கஷ்டங்களும், சந்தித்த அவமானங்களும் கொஞ்சமா என்ன? ஆனாலும் அவள் தனக்காக வேண்டாமல் நம் பெண்ணினத்துக்காக தன் வேண்டுதலை வைத்திருக்கிறாள்! எப்பேற்பட்ட தியாக சிந்தனை! இந்த உலகம் உள்ள வரை திரௌபதியின் தியாகங்கள் பேசப்படும்!

மனிதனென்பவன் தெய்வமாகலாம்! என்றார் கண்ணதாசன்!

அதை நம் தமிழர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்! அதனால்தான் திரௌபதியின் தியாகங்களை உணர்ந்தமையால் அவளை கடவுளாக வணங்கியும் அம்மனாக பூஜித்தும் இன்று வரை தமிழர்கள் வணங்கி வருகிறார்கள்!

என்றென்றும் அந்த பத்தினி தெய்வம் திரௌபதியம்மன் நம்மை காப்பாளாக!

 

ஞாபகத் தடுமாற்றம்-(+ குழந்தைகள் இருவர் ) மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

What Factors Raise Your Risk for Dementia? | Everyday Health

ரொஜர் பெடரர் பற்றிய விவரங்கள் ஒரு செய்தித் தாளில் குறிப்பிட்டு இருந்தது. அதைப் படிக்கத் தொடங்கியதும் எனக்குப் பல வருடங்களுக்கு முன்னால் என்னுடன் ஆலோசித்த குருநாதன் நினைவுக்கு வந்தார். அவரது மனைவி வனஜாவும்!

குருநாதன் டென்னிஸ் விளையாட்டு வீரன் மட்டும் அல்ல. குறிப்பாக ரொஜர் பெடரரின் பரம விசிறி, அவன் ஆடிய ஒவ்வொரு ஆட்டத்தைப் பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்.  உங்களுக்கு இவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

தனியார் நிறுவனத்தில் டைரக்டரின் காரியதரிசியாகக் குருநாதன் இருந்தார். மிகச் சுறுசுறுப்பாக வேலை வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வேலையில் அவ்வளவு அக்கறை, விளைவாக ஓய்வு பெற்றும் கூட வேலையில் இருக்க வைத்தார் டைரக்டர்! அதே ஓட்டம்!

அவசரமாக அன்றைக்குக் குருநாதன் டைரக்டர் மீட்டிங்கில் இருக்கையில் அந்த இடத்திற்குச் சென்றார். டைரக்டர் அவரை ஆச்சரியமாகப் பார்த்து “ம் சொல்லுங்க குருநாதன்” என்றார். மிக அவசியம் ஏதேனும் இல்லாமல் குருநாதன் இவ்வாறு வரமாட்டார் எனத் தெரியும். குருநாதன் ஸ்தம்பித்து நின்றார். எதற்காக வந்தோம்? ஒன்றும் புரியவில்லை. மன்னிப்பு கேட்டுச் சென்று விட்டார். இது என்னவென்று டைரக்டர் வியப்பு அடைந்தார். நம்பிக்கையானவர் என்பதால் பரவாயில்லை என விட்டு விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு பூஜை செய்து கொண்டு இருக்கையில் குருநாதன் வனஜாவை அழைத்து திப்பிலி கேட்டார். அவளுக்குப் புரியவில்லை. திரும்பத் திரும்ப குருநாதன் திப்பிலி தரச் சொன்னார். வனஜா கண் பிதுங்கி ஒன்றும் புரியாமல் அவரை பார்த்து இருந்தாள். குருநாதன் கோபித்துக் கொண்டு துளசி இலையை எடுத்து வந்தார். கையில் துளசியைப் பார்த்ததும் “ஓ துளசியா” என வனஜா சொன்னதும் எப்போதும் சொல்லாத பல வார்த்தைகளில் அவளைத் திட்டித் தீர்த்தார். வனஜா ஆடிப் போய்விட்டாள். “இப்படி இருந்ததே இல்லை. பாவம் வேலையில் என்ன தொந்தரவோ?” என நினைத்து விட்டு விட்டாள்.

குருநாதன் வேலை செய்து கொண்டு, கூடவே எப்போதும் போல டென்னிஸ் வீரர்களுக்குப் பயிற்சி தருவதையும் செய்து வந்தார். அவருடைய கனவே இங்குப் பயிற்சி பெறுபவர்களில் ஒருவராவது நாட்டுக்காக உலகளவில் விளையாட வேண்டும் என்பது தான். ரொஜர் பெடரரின் ஆட்டத்தை மையமாக வைத்தே பயிற்சி பெறுபவர்களின் ஆட்டத்தை மேம்படுத்துவார். என்றைக்காவது அவர்  ஆடுவதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என ஒரு குட்டி ஆசை! காலம் வரும் எனச் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

இப்படிப் போய்க்கொண்டு இருக்க, வனஜா அலுத்துக் கொண்டாள், “இவரிடம் வேலை ஒன்று சொன்னால் முடிக்காமல் வந்து விடுகிறார்” என வெளிமாநிலத்தில் வசிக்கும் மகனிடம் சொன்னாள். அவனோ வயசு, வேலைப் பளு எனச் சொல்லி சமாதானம் செய்தான், ஆனால் அவளுக்கு மனதிற்குள் சங்கடமாக இருந்தது.

வனஜாவுக்குப் புதிராகவே இருந்தது. ஏனென்றால் பலமுறை இப்போதெல்லாம் வேலையிலிருந்து குருநாதன் கைப்பேசியில் அழைத்து “இதை அனுப்பு, அது இருக்கா பாரு?” என்று ஏதோ ஒரு சாமானை  தான்  விட்டு வைத்த ஃபைலை டிரைவரிடம் கொடுத்து அனுப்பி வைக்கச் சொல்வதுண்டு. அவளுக்கு இது புதிதாக இருந்தது. இதுவரை பொருட்களை வைத்துக் கொள்வது, பொறுப்புடன் எடுத்துச் செல்வதைப் பற்றி குடும்பத்தையே கேலி செய்திருக்கிறார். இவரா இப்படி இருக்கிறார் எனப் புதிதாக இருந்தது.

இதில் இன்னொன்றும் சேர்த்தி. குருநாதன் செய்தித் தாளைப் படித்துக் கொண்டே காப்பி அருந்துவது என்று பல வருடப் பழக்கம். சமீபத்தில், அன்றையச் செய்தித் தாளைக் காட்டி அது அன்றையது இல்லை எனச் சத்தம் போட்டார். வனஜா தேதியைப் பார்த்து அன்றையது தான் எனச் சொன்னதும், “நீயும் அந்த செய்தியில் உள்ளவர்கள் போல என்னை ஏமாற்றி விடாதே” என்றார் குருநாதன். முதலில் இவ்வாறு கேட்க வனஜாவுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டு விளக்கம் சொல்லப் போகக் குருநாதன் செய்தித் தாளை அவள் முகத்தில் விசிறி அடித்து, குளிக்கச் சென்றதைப் பார்த்து நடுநடுங்கிப் போனாள்.‌

மகனை அழைத்துச் சொன்னாள். அவன் “அப்பாவை நீ தான் கோபப் படுத்தி விட்டாய்” எனச் சொல்லித் தட்டிக் கழித்து விட்டான். பரிதாபம்.

குருநாதன் அவசரமாக ஃப்ரிட்ஜ் பக்கம் வந்து, “ஆங்… எதற்கு இங்கு வந்தேன்?” என்று யோசித்து, கதவை முறைத்த படி தடாலென அதை மூடுவார். அந்த நேரத்தில் ஏதாவது கேட்டால் சுள்ளென்று எரிந்து விழுவார். 

யார் இதைப்பற்றி எது சொன்னாலும் குருநாதன் பதிலுக்கு, “எனக்கு ஒன்றும் இல்லை. வனஜா தான் ஏதோ கற்பனை செய்கிறாள்” என்பார். தான் மறந்துவிட்டதாகக் குருநாதன் ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவார்.

நாளாக நாளாக, வனஜாவுக்கு ஏதோ ஒரு புது மனிதன் போலக் குருநாதன் தோன்றினார். புதுசு புதுசாக அவருடைய நடத்தை, பழைய நடவடிக்கை மாறிக்கொண்டே இருந்தது. ஞாபகமும் தடுமாற்றமும் அதிகரித்தது.

குருநாதன் தினசரி வேலைகளான பல் துலக்குவது, ஷேவ் செய்து கொள்வது, குளிப்பது, சாப்பிடுவது, வேலைக்குப் போவது இவற்றைச் செய்து வருவதால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணம். கடந்த இரண்டு வாரங்களாகக் குளித்து விட்டு வருகையில் சோப் வாசனை வருவதில்லை, கேட்டால் முறைத்து விட்டுப் போவது விசித்திரமாக இருந்தது. உடலிருந்து ஏதோ வாடை வருவதையும் பற்றி அவரிடம் கேட்டல் குருநாதன் அப்படி ஒன்றும் இல்லை என்று விட்டார். தினந்தோறும் செய்யும் ஷவரம் முழுமையாக இல்லை.

தட்டைச் சுற்றி வெளியில் சாப்பாடு விழுவதைக் கவனித்த வனஜா, முதலில் வேலை அவசரம் என உதறிவிட்டாள். ஆனால் நாளாக நாளாகக் காப்பி குடிக்கும் போதும் தளும்பி விழுவதைக் கவனித்தாள். ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.

வேறொரு புது நடத்தை குருநாதனிடம் பத்து நாட்களாகத் தோன்றியது. யார் அழைப்பு மணி அடித்தாலும், தனக்கு ஏதோ அபாயம் எனச் சொல்ல ஆரம்பித்தார். வேலையிலும் யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டு இருப்பதாகப் புகார் செய்தார். 

நரம்பியல் மருத்துவரிடம் அழைத்து வந்தாள். கொஞ்சமும் விருப்பம் இல்லாவிட்டாலும் குருநாதன் ஒப்புக்கொண்டு வந்ததே பெரிது என் வனஜா நினைத்துக் கொண்டாள். குருநாதன் அறைக்குள் வருவதைப் பார்த்ததுமே மருத்துவருக்குப் பிரச்சினையை யூகிக்க முடிந்தது. நரம்பியல் பரிசோதனைகள் முழுதாக செய்தபின் மூளை ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்தார்.

அத்துடன் குருநாதனின் மனநிலைப் பரிசோதனைக்காக என்னிடம் அனுப்பி வைத்தார். எங்கள் துறையில் இப்படி முழு விவரங்களுடன் வருவோருக்கு மென்ட்டல் ஸ்டேட்ஸ் எக்ஸாமினேஷன் என்று செய்வதுண்டு.

அதைத் தான் செய்யத் தொடங்கினேன். ஆரம்பத்தில் பதில்களை அளித்து வந்தார். யோசனை செய்து கணக்கு, பொது நிலவரம் எனக் கேள்வி கேட்க உணர்வுகள் களங்க ஆரம்பித்தது. குருநாதன் தன்னால் இந்த “அசட்டுத்தனமான” கேள்விகளுக்கு அதாவது அன்றைய நாள், தேதி, இருக்கும் இடம், விலாசம் என்றதக்கு பதில் தருவதைக் குழந்தைத் தனம் எனச் சொல்லித் தட்டி விட, பதட்டம் காட்ட ஆரம்பித்தார். மீதமுள்ளதை ஒரு நாள் இடைவெளி கொடுத்துப் பிறகு செய்து முடித்தேன். அப்போதும் அதே பதட்டம், பல தவறான பதில்கள்.

மனநிலைப் பரிசோதனை முழுவதும் முடிந்த பின், குடும்பம், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் இப்படிப்பட்ட வளங்களைப் பற்றியும் அவரிடமும், வனஜாவிடமும் கேட்டு அறிந்து கொண்டேன்.  இந்தக் கண்டுபிடிப்புகள் சிகிச்சை முறையை வடிவமைப்பதில் உதவும்.

குருநாதனின் பரிசோதனை விளைவுகளை டாக்டரிடம் காண்பித்து முக்கிய அம்சங்களை எடுத்துச் சொன்னேன்.. அதே நேரத்தில் வனஜா ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்து வந்திருந்தாள். எல்லாவற்றையும் வைத்து குருநாதனுக்கு ஏற்பட்டிருப்பது டிமென்ஷியா, அதில் ஆல்சைமர்ஸ் (Dementia Alzheimer’s) என்றமுடிவுக்கு வந்தோம். அதாவது மூளையின் உயிரணுக்களில் சேதமோ இழப்போ உண்டாகி, அதனால் மூளையில் சரியான இணைப்புகள் நேராததால் டிமென்ஷியா ஏற்படுகிறது, அதாவது மூளை செயல்பாட்டுக் கோளாறின் அடையாளங்களாக ஞாபக மறதி, தட்டுக்கிட்ட செயல்கள் என்றெல்லாம் தென்படுகின்றன.

மூளையின் எந்த பாகத்தில் டிமென்ஷியா நேர்கிறதோ அதன்படி நடத்தையில் குறைபாடுகள் நேரும். பிரதான ஆதரவாக வனஜா இருப்பதால் அவளிடம் அனைவற்றையும் விவரித்தோம். இந்த செய்தி கேட்டு அவள் அதிகம் பதட்டப் படவில்லை, மாறாக ஓரளவு ஆறுதல் கூட இருந்தது, குருநாதன் செய்கைகளுக்கு ஒரு வர்ணனை, பெயர் கிடைத்தது என்று!

அவளுடைய கேள்விகள், குழப்பங்களை  ஸெஷன்களில் நாங்கள் தெளிவுபடுத்த, நிலைமையை ஓரளவு ஒப்புக் கொண்டு, சமாதானம் ஆக முயல முடிந்தது. இருந்தும் டிமென்ஷியாவைப் பற்றிய பல தகவல்களைத் தந்தேன்,.எளிதல்ல, இருந்தும் வேலைப் பளுவை ஒரு பக்கம் வைத்து இதையும் படித்துப் புரிந்து கொள்ள முயன்றாள். ஆமாம் வீராங்கனை மங்கம்மாவானாள் வனஜா!

குருநாதனிடம் பேசுகையில், தனக்கும்  ஒர் சில நேரத்தில் தனக்கு ஏதோ ஆகிறதோ எனத் தோன்றுவதாகக் கூறினார். குருநாதனிடமும் எல்லாவற்றையும் விவரித்தோம்.

அவருடைய டைரக்டருடனும் சற்றுத் தனிமையில் சந்தித்துப் பேசினோம். குருநாதன் இவ்வளவு ஆண்டுகளாக அவ்வளவு நேர்மையான உழைப்பாளராக இருந்ததால், வேலையிலிருந்து முழுதும் நீக்காமல், தொடர்ந்து தன் காரியதரிசிக்கு உதவி அளிக்க அனுமதித்து ஏற்பாடுகள் செய்தார். அவரது இந்தச் செய்கை குருநாதனுக்கு உதவும், வேலையில் மூளையைச் செலுத்துவது அதன் செயல்பாட்டைச் சற்று பாதுகாக்கும் என்பது எங்கள் நோக்கம்.

கணவன் மனைவி இருவருடனும் கூடி, இருப்பதைப் பாதுகாக்க மேற்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பட்டியலிட்டோம். அதிலிருந்து குருநாதன் தினந்தோறும் இதுவரை செய்யாத ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என முடிவானது. செடிகளை வளர்ப்பது இவர்களுக்குப் பல நன்மைகள் தரும் என்ற ஆராய்ச்சியை விளக்கி, அதைத் துவங்கினோம். துளசிச் செடிகளைக் குருநாதன் தானாக வாங்கி வந்து, நட்டு, வளர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்தோம். முதலில் வனஜாவிற்கு இதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவள் எந்த உதவியும் தரக் கூடாது என்று கட்டாயமாகச் சொன்னேன்.. வனஜாவிற்கு நான் இருதயம் இல்லாதவள் என்றே தோன்றியது. குருநாதன் செய்யச் செய்ய, அவரிடம் கடுகளவு நல்ல மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்துச்  சமாதானம் ஆனாள்.

சின்னச் செடி தந்த தைரியம் அடுத்ததாகக் குருநாதன் தன் பிரியமான ரொஜர் பெடரர் பற்றிய விவரங்களை வரைபடமாகச் செய்யத் தானாக முடிவெடுத்தார். இதை மிக ஆர்வத்துடன் செய்து வந்த குருநாதன் செயலை நாங்கள் அவனைவரும் வரவேற்க, அவர் மிகச் சந்தோஷம் அடைந்தார். இவற்றைப் பார்த்து வந்த வனஜா, ஒன்று புரிந்து கொண்டாள் – இவ்வாறு பிடித்தமான பயனுள்ள செயல்களில் ஈடுபடுவதில், ஏதோவொரு அளவிற்குக் குருநாதன் நலத்தைக் காக்கலாம் என்று!

இதுபோல மாதங்கள் போக, குருநாதனின் ஐயப்பாடுகள் அதிகரித்தது. பல சந்தேகங்கள். யாரோ தன்னைக் கவனித்து வருவதாக. ஜன்னலை, கதவை மூடிவிடுவதே புதியதோர் பழக்கம். வனஜா தெளிவுபடுத்தினாலும் ஏற்றுக் கொள்ள மறுத்த குருநாதன் கோபம் அடைந்து திட்டுவது அதிகரித்தது.

இதைத் தனியாகச் சமாளித்துப் பார்த்துக் கொள்வது வனஜாவுக்குக் கடினமாயிற்று. பிள்ளைகள் வர மறுத்துவிட்டார்கள். தவித்தாள். ஸெஷனில் இதை ஆராய்ந்தோம். வனஜா தவிப்பிற்கு ஈடு கொடுக்க,குடும்ப நண்பர்களுடன் குருநாதனின் நிலைமை என்னவென்று பகிரலாம் என்று நாங்கள் ஊக்கமூட்ட, அவள் அதைச் செய்தாள்.

இரட்டடிப்புப் பயன் கிடைத்தது. சொல்லச் சொல்ல, பல உரையாடல்கள். அவர்களுக்கு விளக்கம் அளிக்க, தன் மனதிலிருந்த பயம் விலகியது. வனஜா தனக்குத் தெரியாததை என்னுடனும், டாக்டரிடமும் பேசித் தெளிவு பெற்று அவர்களுக்குத் தெளிவு செய்தாள். பலரை இந்த டிமென்ஷியா பற்றிக் கற்பிக்க ஆரம்பித்தாள்.

இதைக் கேட்டவர்களுக்குப் புரிய வந்தது, வயதாகும் போது, எப்படிக் காது, கண்பார்வை இதில் பாதிப்பு ஏற்படக் கூடுமோ, அதேபோல் மூளையிலும் வயதின் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று. இது தனக்கும் நேரலாம், தனக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கும் நேரலாம். இதைப் பற்றி  மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்தால், நிலைமையைச் சமாளிப்பது எப்படி, பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாப்பது எப்படி என்பதற்கு விடை கிடைக்கக் கூடும், அவதிப் படுவோருக்குப் பயன் தரும் என்று புரிந்து கொண்டார்கள். மாறாக, இப்படி ஞாபகத் தடுமாற்றம், தட்டுக்கிட்ட செயல்கள் நேரும் போது, பலர் “பாவம், வயதாகி விட்டது, சகஜம் தான்”, என்று விட்டு விடுகிறார்கள், அல்ல வெளியே சொல்லக் கூச்சப் பட்டு, மற்றவருக்குத் தெரியாமல் சமாளிக்கப் பார்க்கிறார்கள்.

அது தான் வனஜா செய்யவில்லை. டிமென்ஷியா என்று அறிந்ததும், அதை ஒளித்து, வேறு விவரிப்பதைத் தவிர்த்தாள். இதனால் பலர் உதவ முன் வந்தார்கள். இருவர் தாங்கள் நடைப்பயிற்சி செல்லும் போது குருநாதனைச் சேர்த்துக் கொண்டார்கள். இந்த கூட்டமைப்பின் பலம் வளர வளர, இவர்களையே மேற்பார்வையாளராக முன் எடுத்துச் செல்ல நாங்கள் வனஜாவை ஊக்குவித்தோம். இதுதானே வேண்டியது, அதுவும் நம்மைப் போன்ற சமூகத்தில், கலாச்சாரத்தில். நாம் எப்போதும் அக்கம் பக்கத்தில், தெரிந்தவர்களுக்குக் கை கொடுப்பவர்களாயிற்றே!!

 

குழந்தைகள் இருவர் ( துணைக் கதை) – மாலதி சுவாமிநாதன் 

 

பள்ளி செல்ல மறுக்கும் குழந்தைகள்; செபரேஷன் ஆங்சைட்டி டிஸ்ஆர்டராக இருக்கலாம்: கவனமாக இருங்கள் | பள்ளி செல்ல மறுக்கும் குழந்தைகள் ...

அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வாசலில் இளநீர் விற்றுக் கொண்டு இருப்பவன் நகைத்தான். பார்த்தால் அவன் எதிரே ஒரு ஆறு வயதுள்ள பையன் இளநீரை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தான். “ம்ம்ம்…” என்று சப்புக் கொட்டிக் கொண்டிருந்தான். சென்றவர்களின் கவனம் திரும்பின. இவனைப் பார்த்துப் பார்த்து வியாபாரம் சுறுசுறுப்பாகப் போனது. இளநீர் விற்பவன் குஷியானான்.

அருகில் பையனுடைய பெற்றோரும் இளநீரை ருசித்து அருந்திக் கொண்டிருந்தார்கள். அம்மா பையனின் தலையை வருடிக் கொடுத்தவாறே கேட்டாள், “நல்லா இருக்கு இல்ல?” பதிலுக்கு “உம்” என்றான்.

முடித்தவுடன் மூவரும் காய்களை பக்கத்திலிருந்த சாக்குப்பையில்  போட்டார்கள். அம்மா இளநீர் விற்பவனிடம் திரும்பி “தேங்க்ஸ்” என்றாள். அவனும் கையை மார்பில் வைத்து தலையை ஆட்டினான்.

பையனைப் பார்த்து “அங்கிளுக்கு நன்றி சொல்லு” என்றாள். பையன் அவனைக் கண் ஓரமாகப் பார்த்துப் புன்னகைத்தான். அம்மா “சொல்லு” என்றாள். உடனே பையன் “சொன்னேன், அது பாஸ் பட்டனில் இருக்கு” எனச் சொல்லிக்கொண்டே பந்தை விசிறி போடுவது போல ஜாடை செய்து கொண்டே நடந்து சென்றான். அவர்கள் ஸ்கூட்டர் அருகில் போய் விட்டான்.

யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே மைதிலி கதவைத் திறந்தாள். “அடடே பட்டு! வா , வா, சுஜா வா” என்று தன் மருமகளையும் பேத்தியையும் உள்ளே அழைத்துக் கொண்டாள்.

இது மைதிலியின் ஓய்வு நேரம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததே. இருந்தும் சுஜாதாவும் மேகாவும் வந்திருந்தார்கள். மேகாவும் மைதிலியும் பாச மழை பொழிவார்கள். சுஜா இதைப் பார்த்து நெகிழ்வாள்! இன்றைக்கு அதை அனுபவித்தே ஆக வேண்டும் என மனதில் நினைக்க, வந்தாள்.

சுஜாவின் கணவன் அசோக் இதையெல்லாம் ரசிக்க மாட்டான். மைதிலியின் சுபாவமே புரியாதவன். அதனால் தான் இவர் இருவர் மட்டுமே. மைதிலி  தன்னால் முடிந்தவரை உதவி செய்பவள். நகரத்தின் பல பேருக்கு உதவுவாள். அனாதை இல்லங்களில் கதை சொல்லி, பாட்டுப் பாடம் சொல்லித் தருவாள். எல்லோருக்கும் தெரிந்தது, இந்த மூன்று மணிநேரம் மைதிலியின் நேரம், தொந்தரவு செய்யக் கூடாது என்று. மேகா மட்டுமே வரலாம்.

இப்போதும் மைதிலி மேகாவை தூக்கிக் கொண்டதிலேயே பற்று தெரிந்தது. குழந்தை கை கால்களைச் சுத்தம் செய்து நேரே சமையலறைக்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள். அப்போது தான் பாலை காய்ச்சி வைத்திருந்ததால் சட்டென்று எடுத்து வந்தாள். சுஜாவிடம் தனக்கும் அவளுக்கும் கலந்திருந்த காப்பியை எடுத்து வரச் சொன்னாள்.

சுஜா வந்தவுடன் கொஞ்சிக் கொண்டிருந்த மேகாவை இறக்கிய படி மைதிலி “பட்டு மேகா இனி ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் போகப் போறா” என்று சொல்லி சுஜாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

மேகா உடனே “இல்லை பாட்டி, நான் யூ கே ஜீ” என்றாள்.

சுஜா மேகாவைத் திருத்தி “யூ கே ஜீ முடிந்து விட்டது. அடுத்ததாக ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட்” என்றாள்.

மேகா இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள், தலையை ஆட்டிக் கொண்டே “இல்லம்மா, நீ பார்த்தே இல்ல, என் யூ .கே . ஜீ மிஸ் என்னைக் கட்டிண்டு நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்னு அழுதுகொண்டே சொன்னாள். நான் யூ.கே.ஜீ தான் மா.”

 

 

 

மதிற்சுவர் -S.L. நாணு

Melkote India May 9th Old Indian Stock Photo (Edit Now) 227034853

ஒரு வாரமாக ஆள் நடமாட்டம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கிறது.. ஆனால் வருபவர்களும் போகிறவர்களும் அவரைக் கண்டுக் கொள்வதே இல்லை.. அப்படியே பார்த்தாலும் பார்க்காதது போல் பார்வையைத் திருப்பிக் கொண்டு நகர்ந்து விடுகிறார்கள்..

அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.. வழக்கமாக தட்டில் விழும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணகயங்கள் குறையவில்லை.. அவருடைய இரண்டு வேளைக்கு அது போதுமானது.. மிச்சம் கூட இருக்கும்..

இருந்தாலும் இந்த திடீர் ஆள் நடமாட்டம் எதற்காக என்று அவருக்குப் புரியவில்லை..

அவர்.. பெயர் தெரியாது.. சுமார் எழுபத்தைந்து வயதிருக்கலாம்.. நோஞ்சான் கூடான உடம்பு.. தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருக்கும் முடி.. சவரம் செய்யப் படாத முகம்.. பழுப்பேறிய பொத்தல் பனியன்.. அழுக்கேறிய லுங்கி.. பக்கத்தில் அழுக்கு மூட்டை.. முன்னால் ஒரு அலுமினியத் தட்டு.. அதில் சிதறிக் கிடக்கும் சில்லறைகள்..

கடந்த பத்து வருடங்களாக அந்த வீட்டின் முன் மதிற்சுவரை ஒட்டித் தான் அவருடைய ஜாகை.. இரவு பகலென்று எந்நேரமும் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்.. குளிப்பதற்கும் மற்ற கடன்களுக்கும் மட்டும் பக்கதிலிருக்கும் பொது கழிப்பிடத்திற்கு போவார்.. மழை நேரங்களில் எதிர் வரிசையில் இருக்கும் அரசு பள்ளிக்கூடத்து வராண்டாவில் ஒதுங்கிக் கொள்வார்..

சொல்லப் போனால் அந்த வீட்டு மதிற்சுவரை அவர் தேர்ந்தெடுத்தற்கு முக்கிய காரணமே அதில் பதிந்திருக்கும் முருகன் விக்கிரகம் தான்.. சாதாரணமாக பிள்ளையாரின் படத்தைத் தான் மதிற் சுவரில் பதிப்பார்கள்.. இல்லை சின்ன பிள்ளையார் சிலையை சிறு பீடம் கட்டி வைத்திருப்பார்கள்.. ஆனால் இந்த வீட்டுக்காரர் கொஞ்சம் வித்தியாசமாக கோவில் மாதிரியே நிர்மாணித்து முருகன் விக்கிரகத்தைப் பதித்திருந்தார்..

சிறுவயதிலிருந்தே அவருக்கு முருகன் தான் இஷ்ட தெய்வம்.. மற்றவர்களையும் “முருகா” என்று தான் அழைப்பார்..

சொல்லப் போனால் போகப் போக அந்த இடத்தின் பேரில் அவருக்கு ஒரு பந்தம் ஏற்பட்டு விட்டது.. சொந்த வீட்டில் இருப்பது போன்ற பந்தம்.. பத்து வருடங்களாக அந்த இடத்தை அவர் வேறு யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை.. அந்த இடத்தில் உட்கார்ந்து மதிற்சுவரில் சாய்ந்துக் கொள்வார்.. முருகனின் அரவணைப்பில் சாய்ந்திருப்பது போல் தான் அவருக்குத் தோன்றும்.. அவராக யாரிடமும் வாயைத் திறந்து “தர்மம் பண்ணுங்க” என்று கேட்க மாட்டார்.. எல்லோரும் தானாக தட்டை நிரப்பிவிட்டுப் போவார்கள்.. எல்லாம் முருகன் வீற்றிருக்கும் அந்த சுவரின் ராசி தான் என்று அவர் நம்பினார்..

அவர் அங்கு வந்த புதிதில் அந்த வீட்டுச் சொந்தக்காரருக்கு அவரைப் பிடிக்கவில்லை.. முகம் சுளித்தார்.. ஆனால் அவர் சம்சாரம் முதலிலிருந்தே சிரித்த முகத்துடன் அவரை ஏற்றுக் கொண்டாள்.. அவள் கையால் அடிக்கடி அவருக்கு சாப்பாடு கிடைக்கும்.. அதுவும் பழைய சோறு இல்லை.. சுடச் சுட புதிய சோறு..

ஒரு முறை அரசியல் கட்சிக் காரர்கள் அந்த சுவரில் தேர்தல் அறிக்கை வரைய வந்தார்கள்.. ஆனால் அவர் தீவிரமாக அவர்களை சமாளித்து விரட்டினார்..

“இங்க யாரு இருக்காங்க பார்த்தீங்கல? எங்கப்பன் முருகன்.. இது கோவில் முருகா.. இதை அசிங்கப் படுத்த நான் அனுமதிக்க மாட்டேன்”

அதே மாதிரி தான்.. சினிமா போஸ்டர், இரங்கல் போஸ்டர்.. எதற்கும் அந்த சுவரில் இடம் கிடையாது.. அவரை மீறி யாரும் ஒட்ட முடியாது..

இதையெல்லாம் கவனித்த பிறகு அந்த வீட்டுச் சொந்தக் காரருக்கும் அவர் மீது ஒரு வித அன்யோன்யம் ஏற்பட்டு விட்டது.. அவரும் அடிக்கடி ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தார்..

அது மட்டுமல்ல.. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்களுக்கு அவருக்கு நிச்சயம் புது வேஷ்டி, துண்டு உண்டு.. ஆனால் புது வேஷ்டி கட்டி பிச்சை எடுத்தால் தட்டில் சில்லறை விழாது என்பதால் பழைய அழுக்கு லுங்கியைத் தான் கட்டுவார்.. எப்பவாவது கோவிலுக்கோ கடைக்கோ போகும் போது மட்டும் புது வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்வார்.. அப்படிப் போகும் போது கண்டிப்பாக முகச் சவரமும் செய்துக் கொள்வார்.. பார்ப்பவர்களுக்கு அவர் பிச்சைக் காரர் என்றே சொல்ல முடியாது.. கோவிலுக்குப் போகும் போது அங்கு வயதான பிச்சைக் காரர்களுக்கு உதவாமல் வர மாட்டார்..

அந்த வீட்டுச் சொந்தக் காரர்களுக்கு ஒரே மகள்.. அவர் அங்கு வந்த சமயம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.. அதன் பிறகு கல்லூரி படிப்பு முடித்து வேலைக்குப் போய் கல்யாணமும் நடந்து இப்போது கணவனுடன் அமெரிக்காவில் இருக்கிறாள்..

அவள் கல்யாணத்துக்கு அவருக்கு விசேஷ அழைப்பு.. அதுவும் புது வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரத்துடன் அழைப்பு.. முகச்சவரம் செய்துக் கொண்டு சந்தோஷமாகப் போனார்..

“எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்” என்று அந்த வீட்டுக்காரர்கள் மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தியபோது அவருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது..

”ஏன் தெருவுல இருக்கீங்க.. பேசாம எங்க வீட்டுல முன்னால ஒரு ரூம் இருக்கே.. அங்கயே வந்து தங்கிக்குங்க.. எதுக்கு வீணா வெயில்லயும் மழைலயும் கஷ்டப் பட்டுக்கிட்டு..”

பல முறை அந்த வீட்டுச் சொந்தக்காரர் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.. ஆனால் அவர் மறுத்து விட்டார்..

“உகும்.. இது என் முருகன் இருக்கிற இடம்.. என் கடைசி மூச்சு வரை இங்க தான் இருப்பேன்”

அந்த வீட்டு மதிற்சுவரில் கோவில் மாதிரியான அமைப்பில் நின்றிருந்த அந்த முருகன் விக்கிரகம் முக்காலடி உயரம் இருக்கும்.. கருங்கல்லில் செய்யப் பட்டு முகம் லட்சணமாக இருக்கும்.. கண்களில் ஒளி.. நேரில் பார்ப்பது போன்ற பிரமை ஏற்படும்.. திருப்பரங்குன்றத்தில் கோவில் வாசலில் ஒரு கடையில் வாங்கியதாக அந்த வீட்டுச் சொந்தக்காரர் ஒரு முறை அவரிடம் கூறியிருந்தார்..

“அப்பத் தான் இந்த வீடு கட்டிட்டிருந்தேன்.. வீடு நல்லபடியா முடியணம்னு என் இஷ்ட தெய்வம் திருபரங்குன்றம் முருகனை வேண்டிக்கிட்டு வெளில வந்தேன்.. உடனே எதிர் கடைல இந்த முருகன் விக்கிரகம் என் கண்ணுல பட்டுது.. என்ன பார்க்கறே? என்னைக் கூட்டிட்டுப் போ.. எல்லாம் நான் பார்த்துக்கறேன் அப்படின்னு முருகன் சொன்ன மாதிரி எனக்குப் பட்டது.. உடனே கேட்ட விலையைக் கொடுத்து வாங்கிட்டு வந்து இங்க கோவில் மாதிரி கட்டி நிக்க வெச்சிட்டேன்.. அதுலேர்ந்து இந்த முருகன் தான் எங்களுக்குக் காவல்.. இப்ப முருகன் கூட நீங்களும் எங்களுக்குக் காவல்”

“முருகா.. முருகா..”

தினமும் முருகனைக் குளிப்பாட்டி பாலாபிஷேகம் செய்து வித விதமாக அலங்காரம் செய்து,  பூமாலை அணிவித்து, மணி அடித்து கற்பூரம் காட்டி மகிழ்வாள் அந்த வீட்டு அம்மா.. அந்த தெவானுபவத்தை மெய் மறந்து அவர் பார்த்துக் கொண்டிருப்பார்..

இப்படியிருக்கும் போது தான் திடீரென்று ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வந்த அந்த வீட்டுச் சொந்தக் காரர் மயங்கி விழுந்தார்.. அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை..

அந்த அம்மா இடிந்து போய் விட்டாள்..

மகளும் மருமகனும் அமெரிக்காவிலிருந்து வந்து காரியங்கள் முடிந்து..

சில நாட்கள் மௌனமாகக் கழிந்தது.. அவரும் இயல்புக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்..

அதன் பிறகு ஒரு வாரமாக அதிகமான ஆள் நடமாட்டம்..

என்ன விஷயம் என்று அவரால் தெரிந்துக் கொள்ள முடியவில்லை.. அந்த வீட்டுச் சொந்தக்காரர் போனதிலிருந்து அந்த அம்மா வெளியிலேயே வரவில்லை.. மகளும் மருமகனும் தான் அடிக்கடி வெளியே போய் வந்தார்கள்.. கூடவே யார் யாரோ வந்து போகிறார்கள்..

சில சமயங்களில் அவர் மதிற்சுவர் வழியாக எம்பிப் பார்க்கும் போதெல்லாம் மகளும் மருமகனும் சிலருடன் ஏதோ விவாதித்துக் கொண்டிருப்பது தெரியும்.. தொலைவிலிருந்து அவருக்கு எதுவும் கேட்காது.. புரியாது..

மறுநாள் பொறுக்காமல் அந்த வீட்டில் வேலை செய்யும் ஆயாவை மடக்கினார்..

“என்ன நடக்குது இந்த வீட்டுல.. தினம் யார் யாரோ வராங்க.. ஏதேதோ பேசறாங்க..”

ஆயா அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்..

“உனிக்கு விசயமே தெரீயாதா? அய்யா பூட்டதுல அம்மா ரொம்பக் கலங்கிப் பூட்டாங்கோ.. இனிமேட்டு அவங்களை தனியா வுட முடியாதுன்னு அவுங்க பொண்ணும் மருமவனும் முடிவு பண்ணிட்டாங்கோ.. அத்தொட்டு அந்த அம்மாவையும் அவுங்கோ கூட அமேரிக்கா இட்டுகினு போகப் போறாங்கோ”

“அப்படியா?”

“ஆமா.. அதோட இந்த வூட்டை கட்டடம் கட்டறவங்க கிட்ட கொடுக்க முடிவு பண்ணிட்டாங்கோ.. அதுல ஒரு வூடு மட்டும் அம்மா பேருல இருக்குமாம்.. அவுங்க எப்பவாவது வந்தா தங்க..”

அவர் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்..

“இன்னும் பத்து நாளுல வூட்டைக் காலி பண்ணிருவாங்கோ.. பொறவு டமால் தான்.. வீட்டை இடிச்சிருவாங்கோ.. மொதல்ல இந்த சுவரைத் தான்யா இடிப்பானுங்கோ.. நீ வேற எடத்துக்கு போவ வேண்டியது தான்”

ஆயா சொன்னதைக் கேட்டு அவருக்கு உலகமே இருண்டு விட்டது..

“இந்த வீடு இடிபடப் போகிறதா?

எதற்கு? நன்றாகத் தானே இருக்கிறது..

சரி.. வீட்டை இடிக்கட்டும்.. அவர்கள் இஷ்டம்.. ஆனால் எதற்கு இந்தச் மதிற்சுவரை இடிக்க வேண்டும்? அதுவும் எங்கப்பன் முருகன் இருக்கும் இதை..

இடிப்பவர்களுக்கு என்ன தெரியும்? சுவரோடு சுவராக அவர்கள் முருகனையும் இடித்துத் தரைமட்டமாக்கி விடுவார்கள்..

ஐயோ.. கூடாது.. என் முருகன் இடிபடக் கூடாது.. என்னால் அதைத் தாங்க முடியாது.. தாங்க முடியாது.. என் உயிர் இருக்கிறவரை அது நடக்காது.. முருகா.. முருகா..”

மனம் அரற்ற.. கண்கள் இருள.. தலை சக்கரத்தை விட வேகமாகச் சுற்ற..

அப்படியே மயங்கி அந்தச் சுவரில் சாய்ந்தார்..

மறுநாள் காலையில் அந்த வீட்டு அம்மா வெளியே வந்தாள்..

”வீடு இடிபடப் போவதை அவரிடம் சொல்ல வேண்டும்.. அவரை வேறு பாதுகாப்பான இடம் பார்த்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.. அவர் சம்மதித்தால் ஏதாவது முதியோர் இல்லத்தில் கூடச் சேர்த்து விடலாம்.. இதோ.. கணிசமான தொகை.. இதை உங்கள் பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ளுங்கள்.. இனிமேல் நீங்கள் பிச்சை எடுக்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும்”

அடுத்தடுத்து நினைத்துக் கொண்டே கேட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சி..

வழக்கமாக அவர் உட்கார்ந்திருக்கும் இடம் வெறுமையாக இருந்தது.. அவருடைய துணி மூட்டை.. அலுமினியத் தட்டு.. எதையும் காணவில்லை..

“எங்கே போயிருப்பார்? ஒரு வேளை வீடு இடிபடப் போகும் விஷயம் தெரிந்து அவரே எங்கேயாவது போய்விட்டாரோ? அப்படிப் போனாலும் என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல்..”

சஞ்சலத்துடன் திரும்பியவள் உரைந்து நின்றாள்..

சுவரில் முருகன் இருந்த கோவிலும் வெறுமையாக இருந்தது..

 

அந்தச் சிறு அனாதை – ரஷ்ய மொழியில் தஸ்தயேவ்ஸ்கி – தமிழில் மீனா – மூலம் –

 

✓ dostoevsky portrait free vector eps, cdr, ai, svg vector illustration graphic art

 

மொழிபெயர்ப்பு : ரஷ்ய சிறுகதை

மூலம்      : பியோதர் தஸ்தயேவ்ஸ்கி Fyodor Mikhailovich Dostoevsky

தமிழில்     : தி.இரா.மீனா  

            

 

 

 

அந்தச் சிறு அனாதை

   (The Beggar Boy of  Christ’s Christmas Tree)

The Beggar Boy at Christ's Christmas Tree - Wikipediaகிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்பான குளிர் நாளில் அந்தப் பெரிய நகரில் நான் அந்த ஆறுவயது குழந்தையைப் பார்த்தேன். ஆறுவயதை விடக் கூட குறைவாக இருக்கலாம். தெருவில் பிச்சை எடுக்க அனுப்ப   முடியாத அளவுக்கு சிறிய குழந்தை. ஆனால் இன்னும் ஓரிரு வருடங்களில் கண்டிப்பாக அவன் விதி பிச்சை எடுப்பதாகத்தானிருக்கும்.

ஈரமான நடுக்குகிற நிலவறையில் ஒரு நாள் காலையில் அவன் கண் விழித்தான். அழுக்கான ஆடையால் சுற்றப்பட்டிருந்த போதிலும் அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். வெள்ளை ஆவி போல அவன் மூச்சு வந்து கொண்டிருந்தது ; ஒரு பெட்டி மேல் உட்கார்ந்திருந்தான்.நேரத்தைக் கடத்துவதற்காக அவன் வாயிலிருந்து மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.அது வெளியேறுவதை ஒரு வேடிக்கை போலப்  பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதிகமாகப் பசித்தது. காலையிலிருந்து  வைக்கோல் படுக்கையில் சீக்காய்ப் படுத்திருந்த அம்மாவின் அருகே போக அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். அம்மாவின் தலை தலையணைக்கு பதிலாக துணிமூட்டையில் கிடந்தது

அவள் அங்கே எப்படி வந்தாள்? வேறு எங்கிருந்தோ  அங்கு வந்த அவள் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும்.அந்த மோசமான விடுதியின் முதலாளி இரண்டு நாட்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருக்கிறான். இன்று விடுமுறை நாள்.மற்ற குடியிருப்புக்காரர்கள் வெளியே போயிருக்கின்றனர். ஒருவர் மட்டும் விடுமுறைக்காகக் காத்திருக்காமல்  இருபத்து நான்கு மணி நேரமாக குடிபோதையில் படுக்கையில் கிடக்கிறார்.

இன்னொரு மூலையில் எண்பது வயதான கிழவி மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு படுத்துக் கிடக்கிறாள்.  குழந்தைகளின் செவிலியாக அவள் எங்கேயோ வேலை பார்த்தவள்; இப்போது தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறாள். புலம்பியும், முனகியும், உறுமியும் அந்தச் சிறிய குழந்தையை பயமுறுத்துகிறாள்.அவள் தொண்டையிலிருந்து வரும் கடகட ஒலியால் அந்தச் சிறுவன் அவள் அருகே வர பயப்படுகிறான். நடை வழியில் குடிப்பதற்கு ஏதோ இருப்பதை அவன் கண்டுபிடித்தாலும், கைநீட்டி அவனால் அதைத் தொட முடியவில்லை பத்தாவது முறையாக அவன் தாயின் அருகே நகர்ந்து அவளை எழுப்பப் பார்க்கிறான். இருளில் நடுங்கிப் போகிறான்.

இருட்டு வந்து விட்டதெனினும் விளக்கேற்ற யாரும் வரவில்லை.உற்றுப் பார்த்து அம்மாவின் முகத்தை அறிகிறான். அவளிடமிருந்து எந்த அசைவு மில்லை. சுவரைப் போல அவள் குளிர்ந்து கிடந்தாள்.

“மிகவும் குளிராக இருக்கிறது” அவன் நினைத்தான்.

அசையாமல் சிறிதுநேரம் இருந்தான். சவத்தின் தோள்மீது அவன் கையிருந்தது .தன் கைவிரல்களை உஷ்ணப்படுத்திக் கொள்ள அவன் வாயால் ஊதினான்.அப்போது படுக்கையில் கிடந்த தன் குல்லாவைப் பார்த்து விட்டான். கதவை பார்த்தான். விடுதியின் தரைத்தளத்தில் அவர்களிருந்தனர்.

பக்கத்து வீட்டு கதவருகே இருந்து இருபத்து நான்கு மணி நேரமும் நாய் குரைத்துக் கொண்டிருக்கும். அதைக் கண்டு பயமில்லாமலிருந்தால் அவன் அங்கு போயிருப்பான்.

ஓ! என்ன நகரம்! இதைப் போல அவன் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அவன் இருந்த இடத்தில் கும்மிருட்டாக இருக்கும். அந்த முழு வீதிக்கும் ஒரு விளக்குத்தான். சிறிய தாழ்வான மரவீடுகள், எப்போதும் ஷட்டர் போட்டு மூடப்பட்டிருக்கும் ; இந்த நேரத்திலேயே இருட்டத் தொடங்கிவிடும். யாருமிருக்க மாட்டார்கள். எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி விடுவார்கள்; நாய்கள் கூட்டம் மட்டும் ஊளையிட்டுக் கொண்டிருக்கும். நூறு ,ஆயிரம் என்று அவை இரவு முழுவதும் ஊளையிட்டுக் கொண்டும், குரைத்துக் கொண்டுமிருக்கும்.ஆனாலும் அங்கு மிக வெதுவெதுப்பாக இருக்கும்! சாப்பிட ஏதாவது கிடைக்கும்.இங்கு… சாப்பிட ஏதாவது கிடைத்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்! சத்தம் என்றால் இங்கே பரபரப்புத்தான்.. என்ன அற்புதமான விளக்கு,மனிதர்கள் கூட்டம்! குதிரைகள்..வண்டிகள்! அதோடு குளிர் .. குளிர்..! களைப்பான குதிரைகளின் உடல்களில்  அழுக்கு படிந்திருக்கும். மூக்குகளிலிருந்து உஷ்ணமான காற்று வரும்.அவற்றின் கால்கள் மென்மையான பனியில் படியும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் எப்படி தள்ளிக் கொள்கிறார்கள்! “ஓ!இப்போது சாப்பிட ஏதாவது கொஞ்சம் கிடைத்தால் கூட எவ்வளவு நன்றாயிருக்கும்.அதனால் தான் என் விரல்கள் வலிக்கின்றன.”

                              II            

ஒரு போலீஸ்காரன் தலையைத் திருப்பிக் கொண்டு அந்தக் குழந்தையைப் பார்க்கக் கூடாதென அந்த இடத்தைக் கடந்தான்.

இங்கு இன்னொரு வீதி இருக்கிறது. ஓ!எவ்வளவு அகலமானது!இங்கே நான் நசுங்கிச் செத்து விடுவேன். எப்படி எல்லோரும் கூப்பாடு போடுகிறார்கள். ஓடுகிறார்கள், உருள்கிறார்கள்! விளக்கு..விளக்கு! அது என்ன? ஓ! எவ்வளவு பெரிய கண்ணாடி ஜன்னல்! ஓர் அறை, அந்த அறையின் கூரையைத் தொடுமளவுக்கு ஒரு மரம்; அது கிறிஸ்துமஸ் மரம். மரத்தினடியில் எவ்வளவு விளக்குகள்! தங்கக் காகிதங்கள், ஆப்பிள்கள் ! சுற்றிலும் அழகான பொம்மைகள், சிறிய குதிரை வண்டிகள்.. சிரித்தும் ,விளையாடியும், சாப்பிட்டுக் கொண்டும் அழகான உடையணிந்த சுத்தமான குழந்தைகள்.ஒரு சிறிய பெண் குழந்தை ஒரு சிறுவனோடு நடனமாடுகிறாள்.எவ்வளவு அழகாயிருக்கிறாள் அவள்! அங்கிருந்து இசையும் கேட்கிறது. கண்ணாடியின் வழியாக நான் கேட்கிறேன்.

அந்தக் குழந்தை ரசிக்கிறான்.. சிரிக்கவும் செய்கிறான்.அவன் இப்போது தன் விரல்களிலோ ,பாதங்களிலோ எந்த வலியையும் உணரவில்லை.கை விரல்கள் சிவப்பாகி விட்டன. அவற்றை அசைப்பது வேதனையாக இருக்கிறது; அவைகளை இனி மடக்க முடியாது. ஒரு நிமிடம் அழுகிறான். பிறகு நடந்து மற்றொரு அறையில் உள்ள ஜன்னலருகே போகிறான் அவன்அங்கும் மரங்களைப் பார்க்கிறான். மேஜையின் மேல் கேக்குகள், சிவப்பு மற்றும் மஞ்சள் பாதாம் பருப்புகள் போன்றவை இருப்பதைப் பார்க்கிறான். நான்கு அழகான பெண்கள் அங்கிருக்கின்றனர். யார் வந்தாலுமவர்களுக்கு கேக் கொடுக்கின்றனர்; ஒவ்வொரு நிமிடமும் கதவு திறக்க மனிதர்கள் வந்தவண்ணமிருக்கின்றனர்.அந்தச் சிறுவன் தவழ்ந்து முன்னே போய் திடீரெனக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். ஓ! அவன் உள்ளே போன போது அவனைப் பார்த்தவுடன் எத்தனை சப்தம்..குழப்பம்! உடனடியாக ஒரு பெண் எழுந்து வந்து ஒரு கோபெக்கை {நாணயம்}.அவன் கையில் வைத்தாள். வெளியே வருவதற்கு வாசல் கதவைத் திறந்து விட்டாள்.அவன் எப்படி பயந்து போனான்!

                               III   

அந்த கோபெக் அவன் கையிலிருந்து தவறி மாடிப்படியில் உருண்டது.அந்த நாணயத்தை கெட்டியாகக் கையில் அவனால் பிடித்துக் கொள்ள முடிய வில்லை.அவன் வெளியே வேக வேகமாக நடக்கிறான்.அவன் எங்கே போகி றான்? அவனுக்குத் தெரியவில்லை.அவன் ஓடிக் கொண்டே இருக்கிறான். கைகளை ஊதிக் கொள்கிறான்.அவன் கஷ்டத்திலிருக்கிறான். அவன் தனியாக உணர்கிறான்,பயமாக இருக்கிறது! திடீரென இது என்ன ! கூட்டமாக மக்கள் நின்றுகொண்டு ரசித்தபடியிருந்தனர்.

“ஒரு ஜன்னல்! கண்ணாடியின் பின்னால், சிவப்பு மற்றும் மஞ்சள் உடைகளில் உயிருடன் இருப்பது போலவே  மூன்று அழகான பொம்மைகள்! உட்கார்ந்திருந்தன. வயதான மனிதன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான். வேறு இரண்டு பேர் நின்று கொண்டு இசைக்குத் தகுந்தவாறு தலையாட்டி வயலின் வாசித்தார்கள்.அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உதடுகளை அசைத்தனர்.அவர்கள் உண்மையில் பேசுகிறார்களா? கண்ணாடி மூலமாக அவர்கள் பேசுவது மட்டும் கேட்கவில்லை.”

                        IV        

அவன் திடீரென யாரோ பறிப்பது போல உணர்கிறான்..ஒரு பெரிய வலிமையான பையன் அவனருகே நின்று கொண்டு தலையில் ஓர் அடி கொடுத்து அவன் தொப்பியைப் பறித்துக் கொள்கிறான்.

அவன் கீழேவிழுகிறான். அதே சமயத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்கிறது; அவன் பயத்தால் ஓரிரு கணம் அசையமுடியாமலிருக்கிறான். பிறகு மெதுவாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்டெழுந்து ஓடுகிறான். நீண்ட தூரம் குறுக்குப் பாதையில் ஓடி மரங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய  முற்றத்தில் ஒளிந்து  கொள்கிறான். மூச்சு விடுவது கூட கஷ்டமாகிறது.

திடீரென அவன் மிக வசதியாக உணர்கிறான்.அவனுடைய சிறிய கைகளிலும்,காலகளிலும் எந்த வலியுமில்லை; ஒரு அடுப்பின் அருகே இருப்பது போல அவன் வெம்மையாக உணர்கிறான். அவனுடல் நடுங்குகிறது.

“ஓ! நான் தூங்கப் போகிறேன்! தூங்குவது எவ்வளவு அற்புதமானது! சிறிது நேரம் இங்கிருந்து விட்டு பிறகு மீண்டும் அங்கு போய் அந்தச் சிறிய பொம்மைகளைப் பார்ப்பேன்.” அந்தச் சிறுவன் தனக்குள் சொல்லிக் கொண்டு சின்ன பொம்மைகளைப்பற்றி நினைத்துச் சிரித்துக் கொண்டான். “அவைகள் உயிருடன் இருப்பது போலவே இருக்கின்றன!”

பிறகு அவனுக்கு அம்மா பாடுவது கேட்டது.“அம்மா! நான் தூங்கப் போகிறேன். இங்கு தூங்குவது எவ்வளவு அருமையானது!”

“கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வா” என்று ஒரு மென்மையான குரல் கேட்டது.

அது தன் அம்மாவாக இருக்கவேண்டுமென்று முதலில் நினைத்தான்; ஆனால் அது அம்மாவல்ல. அப்படியானால் யார் அவனைக் கூப்பிடுவது?அவனால் பார்க்கமுடியவில்லை ஆனால் யாரோ ஒருவர் இருட்டில் குனிந்து தன்னைத் தழுவித், தோளில் தூக்கிக் கொள்வதாக உணர்கிறான்; அவன் தன் கையை விரிக்கிறான். உடனே.. ஓ..! என்ன வெளிச்சம்! என்ன ஓர் அருமையான கிறிஸ்துமஸ் மரம்! இல்லை, இது கிறிஸ்துமஸ் மரமில்லை;  இது போல அவன் பார்த்ததேயில்லை.

அவன் இப்போது எங்கேயிருக்கிறான்? எல்லாம் பிரகாசமாக இருக்கிறது, எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது, சுற்றி பொம்மைகள் இருக்கின்றன. ஆனால்..இல்லை, பொம்மைகள் இல்லை. சிறுவர்கள், சிறுமிகள்; அவர்கள்தான் மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்கள். அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி வந்து நிற்கின்றனர். அவர்கள் பறக்கின்றனர். அவனை அணைத்துக் கொள்கின்றனர்; அவனைத் தூக்கிக் கொள்கின்றனர்.அவனும் பறக்கிறான். அம்மா தன்னைப் பார்ப்பதையும், மகிழ்ச்சியாகச் சிரிப்பதையும் பார்க்கிறான்.

“அம்மா !அம்மா! இங்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது!” சிறுவன் அவளிடம் சொல்கிறான்.

அவன் குழந்தைகளை அணைத்துக் கொள்கிறான்.கண்ணாடி ஜன்னலுக்குப் பின்னாலிருக்கிற பொம்மைகளைப் பற்றி அவர்களிடம் சொல்ல விரும்புகிறான். “நீங்களெல்லாம் யார்?” அன்பாகக் கேட்கிறான்.

இது இயேசுவிடமிருக்கிற கிறிஸ்துமஸ் மரம். தங்களுக்கு என்று எதுவுமே இல்லாத குழந்தைகளுக்காக இயேசு எப்போதும் வைத்திருக்கிற மரம் அது.

அங்குள்ள சிறுவர், சிறுமியர் எல்லோரும் அவனைப்  போன்றே இறந்தவர்கள்  என்று தெரிந்து கொண்டான்.சிலர் செயின்ட் பீட்டர்பர்க் நகரத்தின் பொது இடங்களில் கூடைகளில் வைத்து கைவிடப்பட்டவர்கள்; சிலர் பசியால் செத்தவர்கள்.இங்கிருக்கும் எல்லோரும் சின்ன தேவதைகள். கிறிஸ்துவுடனிருப்பவர்கள், அவரும் அவர்களில் ஒருவராகத்தானிருக்கிறார். தன் கைகளை அவர்கள் மேல் விரித்து, அவர்களையும் அவர்களின் பாவப்பட்ட தாய்களையும் ஆசீர்வதித்து..

அந்தக் குழந்தைகளின் தாயரும் அங்கிருக்கின்றனர்.அழுகின்றனர்.

தங்களுடைய மகன் அல்லது மகளை அடையாளம் கண்டு அவர்களருகே போய்த் தழுவிக் கொள்கின்றனர்; தாயரின் கண்ணீரைச் சிறுகைகளால் துடைக்கின்றனர்.அழவேண்டாமென்று கெஞ்சுகின்றனர்.

கீழே ,பூமியில் காலையில்  அந்த  விடுதியின் காவலர்  குழந்தையின் சடலத்தை முற்றத்தில் பார்க்கிறார். அது மரக் குவியல்களுக்குப் பின்னால் விறைத்தும், இறுகியும் கிடக்கிறது.

தாயும் அங்கேயே கிடக்கிறாள். அவள் அவனுக்கு முன்னால் இறந்து விட்டாள்; கடவுளின் சந்நிதானத்தில் அவர்கள் மீண்டும் இணைந்திருக்கின்றனர்.

                                                               ———————-

ரஷ்ய மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளராகப் போற்றப்படும் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி (18211881) தத்துவம், உளவியல்,மதம் உள்ளிட்ட துறைகளை முன்வைத்து சிறுகதை நாவல்கள் எழுதியவர். Crime and Punishment,  The Idiot,   Demons , The Brothers Karamazov ஆகியவை அவருடைய அற்புதமான படைப்புகளில் சிலவாகும். யதார்த்தமே அவரது எழுத்தின் சிறப்பம்சமாகும்.

 

 

 

 

 

 

ஒரு மாலையின் எட்டு முத்துக்கள் – ரேவதி ராமச்சந்திரன்

மார்ச் 8 - சர்வதேச பெண்கள் தினம் : போராட்டத்திற்கான விதை விதைக்கப்பட்ட நாள்... - Indian Express Tamil

Facts About The Indian Armed Forces That'll Make You Respect Them | Roots of Indian

‘’அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு இல்லாதிருத்தல் அரிது” அதிலும் ‘மாதராய்ப் பிறத்தல் மனிதரின் பாக்கியம்’. ‘உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும், உயிரினுக்குயிராய் இன்பமாக்கிடும், உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா’, “நடமாடும் சக்தி நிலையம்” “துன்பத்தைத் தீர்ப்பது பெண்மை”, “ஆணும் பெண்ணும் சரி நிகரெனக் கொள்”, “தையல் சொல் கேள்” இப்படி பெண்ணின் பெருமை அளப்பரியது. எல்லா நாளும் பெண்களுடையது என்றாலும் உலகம் மகளிர் தினம் என்று ஒன்று கொண்டாடுவதால், வேறு வேறு துறையில் முன்னேறிக் கொண்டிருக்கும் எட்டு மகளிர்களை பேட்டி கண்டு அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வர ஆசைப்பட்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். இதைப் போல அநேகர் இருக்கலாம். அவர்கள்தான் இந்த நாட்டு முன்னேற்றத்திற்கு வழிகாட்டிகள்.

நமது மூவர்ணக் கொடி போல மூன்று வித எல்லைப்படைகள் உள்ளன. அதில் ஒன்றான விமானப் படையில் ஒன்பது வருடங்கள் பணி புரிந்து விருப்ப ஓய்வு எடுத்துள்ளவர்  இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்க்வார்டன் லீடர் சேத்னா குலியா. எம் ஏ (ஆங்கிலம்), எம்பிஏ, பிஎட் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது அரசு பாதுகாப்பு லைசென்ஸ் பெற்று சொந்தமாக ஏஜென்ஸி வைத்து நடத்துகிறார். மேலும் படிப்பு சம்பந்தமாக கன்ஸல்டண்ட்டாகவும், பேச்சாளர்களை ஊக்குவிக்குபவராகவும்   இருக்கிறார். ஒரு முறை விமானத்தை ஓட்டும்போது தரை இறங்க முடியாமல் பத்து மணி நேரம் வானத்திலேயே பறந்துள்ளார். விமானப்படையில் பணியாற்றும் இவரது கணவர் ஜம்முவில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது ஒரு வயது குழந்தையுடன் பஞ்ஜாபில் இடிந்து கிடந்த வீட்டை தனியாளாக சரி செய்து குடியேறியுள்ளார். புத்தகத்தில் மூழ்கும் இவர் கடைசியாகப் படித்து ரசித்தது பெங்குவின் பதிப்பகத்தில் சுதாமுர்த்தி அவர்களின் “வைஸ் அண்ட் அதர்வைஸ்”. தன்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ள உண்மை சம்பவத்தைக் கூறி அதனை எப்படி கடப்பது என்று எழுத்தாளர் சொல்வதாகவும், அது ஒருவரது வாழ்க்கை முறையை மேலும் செம்மைப்படுத்துவதாகவும், அறிவு சம்பந்தமாக யோசிக்க வைப்பதாகவும் இவர் உணருகிறார்.

இரண்டாவது முத்து குருக்ஷேத்ரா பல்கலைகழகத்தில் எல்லா செயல்களுக்கும் ஆதாரமாக உள்ள பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த அனுபமா மூர்த்தி. கணவர் விமானப்படையில் வொர்க்ஸ் மற்றும் ஆபேரஷனில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். காஸ் தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் இவைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் ஹரியானா மாநிலத்தில் 1991 முதல் அடிப்படையான விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். இராஜஸ்தானில் ஜோத்புருக்கு அருகிலுள்ள மிகவும் வெப்பமயமான பலோடி என்ற இடத்தில் இரண்டு மாதக் குழந்தையுடன் ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார். புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ள இவரைக் கவர்ந்த புத்தகங்கள் பல இருந்தாலும் பெங்குவின் ராண்டம் பதிப்பகத்தின் குஞ்சன் ஜெயின் எழுதியுள்ள “ஷீ வாக்ஸ் ஷீ லீட்ஸ்” முதன்மையானது என்று கூறுகிறார். இந்தப் புத்தகத்தில் 24 பகுதிகளில் வியாபாரம், விளையாட்டு, நடிப்பு, எழுத்துத்துறை, இவ்வாறு 24 வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்களது வெற்றியை நோக்கிப் பயணித்த பாதை ஆழமாக சித்தரிக்கப்பட்துள்ளது  என்றும் சுதாமூர்த்தி, இந்துஜெயின், மேரிகோம், மீராநாயர், சானியாமிர்சா போன்றவர்கள் இதில் அடக்கம் என்றும் கூறுகிறார். இந்தப் புத்தகம் ஒவ்வொரு பெண்ணிற்கும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத்  தூண்டுகோலாக இருக்கும் என்று கூறும் இவர் இதனை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப் புது எண்ணங்கள் தோன்றுகின்றன என்கிறார்.

மூன்றாவது முத்து நர்ஸிங் படித்த ஆர்மியில் வேலை பார்த்த ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கொடா நகரத்தைச் சேர்ந்த மேஜர் மீனாக்ஷி மோகல். விமான தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த நான்கு வயது குழந்தை அதீத காய்ச்சலாலும் வயிறு வலியாலும் துடித்த போது தன் சிறிய குழந்தையை, கணவர் விமானப் படையில் காஷ்மீரில் இருந்ததால், வீட்டில் வேலை செய்யும் ஒரு சிறுமியிடம் ஒப்படைத்துவிட்டு, காப்பாற்றியதை தனது படிப்பிற்கு கிடைத்த, கொடுத்த மரியாதையாக எண்ணுகிறார். புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ள இவர் பௌலோ கோயில்கோ எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஹார்பர் டார்ச் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள “தி ஆல்கெமிஸ்ட்” புத்தகத்தை மிகவும் விரும்புகிறார். இந்தப் புத்தகம் ஒருவரைத் தன்னுள் பார்க்குமாறு செய்கிறது என்றும் அதனால் இது சுய உதவிகரமாக இருக்கும் என்கிறார்.

நான்காவது முத்து குழந்தைகளுக்கு மயக்கமருந்து கொடுப்பதில் பட்டம் பெற்றுள்ள குஜராத்திலுள்ள சூரத் பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் உம்மேசல்மாசாக்கேர்வாலா. தனியார் மருத்துவமனையில் பணி புரியும் இவர் ஒரு முறை தனது ஒன்றரை வயது குழந்தையுடன் விபத்து நேர்ந்த ஒருவருக்கு சிகைச்சை செய்துள்ளார். அவரது உயிரைக் காத்த இவர் ‘நான் ஒரு தாய் மட்டுமல்ல மருத்துவராக இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையுள்ளவள் ஆவேன்’ என்று தனது பணியின் தன்மையைப் புரிந்து கடமை ஆற்றியுள்ளாள். புத்தகப் புழுவான இவருக்கு மிகவும் பிடித்தது ஆட்ரியா பதிப்பகத்தின் ராண்டா பைய்ர்னே எழுதியுள்ள “தி சீக்ரட்” என்ற நாவல் ஆகும். இந்தப் புத்தகம் அவருக்கு நல்ல சிந்தனையைத் தூண்டுவதாகவும், எந்த ஒரு கடினமான சூழலையும் எதிர் கொள்ள ஆற்றலைத் தருவதாகவும் கூறுகிறார்.

ஐந்தாவது முத்து அமெரிக்காவில் ஓஹியோ மாநில கல்லூரியில் பணி புரிந்து விட்டு தற்போது புது டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் பணி புரியும் லக்னோவைச் சேர்ந்த டாக்டர் பாவனா பிஸ்ஸா. குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக அமெரிக்காவில் பணி புரிந்த போது தன்னுடைய மூத்த பேராசிரியர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இது சில காலம் தொடர்ந்தது. ஒரு நாள் துணிச்சலை வரவழித்துக் கொண்டு ‘நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்’ என்று அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். புத்தகமும் கையுமாக இருக்கும் இவரைக் கவர்ந்த புத்தகம் அநேகம் இருந்தாலும் பிலோசாபிகல் லைப்ரரி 1946 இல் வெளியிட்ட பரமஹம்ஸ யோகாநந்தஜியால் எழுதப்பட்ட “ஒரு யோகியின் ஆடோபயோகரபி”  தன்னைக் கவர்ந்தது என்று கூறுகிறார். பல பேருடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்தப் புத்தகம் வாழ்க்கையை நோக்கும் தன்னுடைய கண்ணோட்டத்தையும் மாற்றி   இருப்பதாகப் பெருமைப்படுகிறார். இந்தப் புத்தகம்தான் வெளிநாட்டில் அமைதியான முறையில் மேலே சொன்ன நிகழ்வினை எதிர்நோக்கத்  துணையாக இருந்தது என்று கூறும் இவர் இந்தப் புத்தகத்தைத் தன் வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஒரு முறையாவது படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

ஆறாவது முத்து ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று உத்தர பிரதேசப் பள்ளியின் முதல்வராக இருக்கும் வங்காளத்தைச் சேர்ந்த மதுமிதா பானர்ஜி. பள்ளியின் சமையல் கூடத்தில் பிடித்த தீயை சமயோசிதமாக அணைத்து எல்லாக் குழந்தைகளின் உயிரையும்  காப்பாற்றியுள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல பயிற்சி நிறுவனங்களை நிர்வாகிக்கும் இவருக்குப் பிடித்த புத்தகம் ரூபா & கம்பனியால் வெளியிடப்பட்ட நைனா லால் கித்வாய் எழுதிய “30 விமென் இன் பவர்”. இந்தப் புத்தகத்தில் வேறு வேறு துறையில் உள்ள பெண்கள் எப்படி சுலபமாகவும், திடமனதோடும் தங்களது நிறுவாகத்தை நடத்தினார்கள் எனக் கூறி அதற்கு முன்னோடியாக இருப்பதால் தன்னை இந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்துள்ளதாகக் கூறுகிறார்.

ஏழாவது முத்து கேரளாவைச் சேர்ந்த சரித்திரத்தில் டாக்டர் பட்டமும், யோகாவில் எமஸ்சி பட்டமும் பெற்றுள்ள சுமதி ஹரிதாஸ். கேலிகட் பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகள் பணி புரிந்த இவர் தற்போது 67 வயதிலும் “வித்ய பாரதி அகில பாரதீய சிக்க்ஷா சமஸ்தானத்தில்” பணி புரிந்து வருகிறார். யோகா வகுப்புகளும் நடத்துகிறார். ஓய்வு பெற்ற கணவரும், 4 குழந்தைகளும் ஊக்குவிக்க சமூக சேவைகளும் செய்து வருகிறார். நேரத்தை சரியாக செலவழிப்பதும், நம்பகத்தன்மையும் எந்த ஒரு பெண்ணிற்கும் வெற்றியைத் தரும் என்று இவர் திடமாக நம்புகிறார். முதல்வராக இருந்த போது அரசியல் கழகங்கள் மாணவர்களைத் தூண்டி விட்ட போது மன உறுதியுடன் தன் நிலையிலிருந்து வழுவாமலும், கல்லூரியின் நடவடிக்கைகளுக்குப் பங்கம் வராமலும் எதிர் கொண்டதைத் தன் சாதனையாகக் கருதுகிறார். எந்தப் புத்தகம் தங்களைக் கவர்ந்தது என்ற கேள்விக்குத் தன்னால் பதில் அளிப்பது முடியாத காரியம் ஏன் எனில் தான் படித்த புத்தகங்கள் அனைத்தும் ஏதோ ஒருவிதத்தில் தன்னை முழுமையாக்குவதில் பங்கு வகிக்கின்றன என்கிறார். மிகவும் சிறந்தது என ஆதிகாவியம் இராமாயணத்தைக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும் புதுப் புது எண்ணங்கள் தோன்றுவதாகவும், முக்கியமாகப் பெண்கள் எந்தச் சூழலிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சுட்டுவதாகவும் கருதுகிறார். “கம்ப்ளீட் வொர்க்ஸ் ஆஃப் ஸ்வாமி விவேகானந்தா”, காந்திஜியின் “மை எக்ஸ்பரீமென்ட் வித் ட்ரூத்” இந்த இரண்டு புத்தகங்களும் வாழ்க்கையையும், இந்த நாட்டையும், மனித உறவுகளையும் பார்க்கும் கண்ணோட்டத்தைத் தருகின்றன என்று மனந்திறந்து கூறுகிறார்.

எட்டாவது முத்து பி ஏ படித்துள்ள நேபாள நாட்டு பிரஜை வைஷாலி குருங். 39 வயதாகும் இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் சோலன் என்ற இடத்தில் தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். சோலனில் என் ஐ ஐ டியில் 12 வருடங்களாகப் பணி புரிகிறார். ஒரு சமயம் தொழில் கல்வி படிக்காத 50 வயதிற்கு மேலுள்ள 22 அதிகாரிகளுக்கு கடுங் குளிரில் பயிற்சி அளித்துள்ளார். நேபாளத்தில் தனது குடும்பத்தை விட்டு இங்கு வாழும் இவருக்குத் துணை புத்தகங்களே என்று கூறும் இவருக்கு பிரான்செசகோ மிரல்ஸ் மற்றும் ஹேக்டர் அவர்களால் எழுதி இங்கிலாந்து ராண்டம் ஹவுசால் வெளியிடப்பட்ட ‘இக்கிகய்’ மிகவும் பிடித்தமான புத்தகம் என்கிறார். இது வாழ்க்கையை முழுமையாக்குவதற்கும், நீண்ட வாழ்விற்கும் ஓர் அர்த்தத்தை உணர்த்துகிறது எனவும், அதன் இரகசியத்தைத் தெரியப்படுத்துகிறது எனவும் கூறுகிறார்.

இந்த எட்டு முத்துக்கள்தானா என்றால் இல்லை கடலில் மூழ்கி நான் எடுத்தவை இவை. மாணிக்கங்கள், வைடூரியங்கள் என்று பலவும் உள்ளன. அதிலும் நமது எல்லையைக் காக்கும் வீரர்களின் துணைவிகள் எந்த ஒரு உதவியும் இல்லாமல், குளிரும் பனியிலும் தனியாகப் போராடி கணவரது சுமையைத் தன் தோளில் தாங்குவது போற்றற்குரியது. பல்வேறு தேசம், நாடு, மதம், கலாச்சாரம் இவைகளைத் தாண்டி இவர்கள் எல்லோரும் ஒரே மனித ஜாதி என்ற அடிப்படையில் மனிதத்தன்மையின் புனிதத்தைக் காப்பாற்றும் பெண்ணினம். இவர்களையும், இவர்களைப் போன்றவர்களையும் நாம் தலைவணங்கிப் பாராட்டுகின்றோம். இவர்கள் பல்வேறு இடங்களில் பரவி இருந்தாலும் இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் மனித நேயத்திற்கும் அதனை எடுத்துரைக்கும் நூல்களுக்கும் நாம் தலை வணங்குகிறோம்.

வாழிய பாரத நம் நாடு! வந்தே மாதரம்! பாரதி சொன்ன மாதிரி “தையலை உயர்வு செய்ய வேண்டும். “போற்றி போற்றி பல்லாயிரம் போற்றி”! “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று பாரதி அவர்களைக் கொண்டாடுகிறார். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா!

 

மலரும் மணமும் – மீனாக்ஷி பாலகணேஷ்

                                     

           சங்க இலக்கியம் – அறிவியல் தகவல்கள் இவற்றையும் குவிகத்தில் இணைக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் திரு. சுந்தரராஜன் அவர்கள் பல சமயங்களில் என்னுடன் பேசும்போது குறிப்பிட்டுள்ளார். முயற்சிக்கலாமே என எண்ணினேன். இது எனது முதல் எளிய முயற்சி. குறை-நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். (மீ. பா.)

                                           0000000

           “கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்,” என்று கூறிப் பொருள் ஈட்டச் சென்றிருக்கிறான் அவளுடைய அன்புக் கணவன். கார்காலமும் வந்துவிட்டது. தலைவனோ இன்னும் திரும்பவில்லை. தோழி இதைக்கண்டு கவலை கொள்கிறாள்.

           ‘அடடா, எப்படி நம் தலைவி அவன் பிரிவை இன்னும் தாங்கிக் கொள்ள போகிறாள்,’ என்று கவலைப் படுகிறாள். தலைவியோ அவளிடம் ஆறுதல் மொழிகள் பேசுகிறாள்:

           “தோழீ! குளிர்ச்சி நிறைந்த மழைக்காலத்திற்கே உரியதான பித்திகம் (பிச்சி) எனும் மலர்கள், அறிவில்லாதவை; தாம் சிவக்க வேண்டிய காலத்துக்கு முன்பே அவை சிவந்தன. அதனைப் பார்த்து இது கார்காலம் என்று நானா மயங்குவேன்? (ஏமாறுவேன்); மாட்டேன்.

           “(எனது கவலையெல்லாம்) இந்த மழைமேகங்கள் நடு இரவில் முழங்கும் ஓசையை, இன்னும் என்னிடம் வந்து சேராமல் இருக்கும் அவர் கேட்டால், ஏற்கெனவே பிரிவினால் வருந்துபவர், தன் வேலையை முடிக்காமல் திரும்பி விடப்போகிறாரே என்பதுதான்,” என்கிறாள்.

           பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத் 

           தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே

           யானே மருள்வேன் றோழி பானாள்    

           இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும் 5          

           என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே     

           அருவி மாமலைத் தத்தக்      

           கருவி மாமழைச் சிலைதருங் குரலே. (குறுந்தொகை- 94)

           சங்க இலக்கியங்களுள் எட்டுத்தொகையில் ஒன்றான குறுந்தொகையில் காணும் அழகான பாடல் இது! முல்லைத்திணையில் அமைந்த இந்தப்பாடல் தலைவி தோழியிடம் கூறுவதுபோல அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் கதக்கண்ணனார் எனும் புலவர்.

           மழைக்காலத்தில்தான் சிவக்க வேண்டிய பித்திகம் இடிமுழக்கம் கேட்டே சிவந்து விட்டதனால் அதனை அறிவில்லாதவை எனக் கூறுகிறாள் தலைவி!

           பித்திகம் எனும் மலர் பிச்சி, பித்திகை, செம்முல்லை எனப்படும். இந்தப்பூ மாலையில் மலரும். இதன் வெளிப்பகுதி சிவப்பாக இருக்கும்.

           ஐப்பசி, கார்த்திகை மாதங்களான கார்காலத்தில் மேகமூட்டத்தாலும் தொடர்ந்து பெய்யும் மழையாலும் பொழுதினை அறிய இயலாது; அப்போது பெண்கள் வீட்டில் வளரும் பித்திகக் கொடியிலிருந்து அரும்புகளைப் பறித்து ஒரு தட்டில் இட்டு வைப்பார்கள். அது சரியான மாலைப்போதில் மலர்ந்து மணம் வீசும்.  இதனைக் கொண்டு மாலையில் விளக்கேற்றும் நேரம் ஆயிற்று என்று பண்டைக்காலத்தில் மகளிர் அறிந்து கொண்டனர். இரும்பினாலான விளக்கில் திரியும் நெய்யும் இட்டு ஏற்றிவைத்து, நெல்லையும் மலரையும் தூவி தெய்வ வழிபாட்டை நடத்தினர் என நெடுநல்வாடை கூறுகிறது. போ(பொழு)தினை அறிய உதவுவதனால் மலர்களுக்குப் ‘போது’ எனும் பெயர் உண்டானதென வாகீச கலாநிதி கி. வா. ஜ. அவர்கள் கூறியுள்ளார்.          

மடவரன் மகளிர் பிடகைப் பெய்த

           செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்

தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்

திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ

நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது

மல்ல லாவண மாலை யயர (நெடுநல்வாடை-39-45; மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியது)

இவையனைத்துமே கண்முன் விரியும் இனிய காட்சிகள். சந்தனம் பூசிய மார்பில் பித்திகைமாலையையும் அணிவது அந்தக்கால ஆடவர் வழக்கம்.

           நமது மண்ணுக்கே உரிய மலர்களின் பெருமையை விரித்துக்காட்டுவன சங்க இலக்கியங்கள். இதில் நாம் காணும் ஒரு மணம்வீசும் மலர்தான் பித்திகம்.

           மலர்கள் தத்தமக்குரிய பொழுதுகளில் மலர்ந்து மணம் வீசத் தவறுவதே இல்லை என்பது லின்னே (Linnaeus) போன்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவு. மலர்களைக் கொண்டு, அவை மலரும் பொழுதைக்கொண்டு, ஒரு நாளின் அல்லது ஆண்டின் பொழுதை அறிந்து கொள்வது பழந்தமிழகத்தில் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இது தமிழர்களாகிய நாம் மிகவும் பெருமைப்பட வேண்டியதொரு செய்தி.

           தமிழிலக்கியங்களிலிருந்து இதற்கு என்னும் எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன.

           மலர்களும் அவற்றின் மணங்களும் மனித நாகரிகத்துடன், வாழ்வுடன் நெருக்கமான தொடர்புள்ளவை. இறை வழிபாடு, திருமணம், விழாக்கள், பண்டிகைகள் என அனைத்திலும் மலர்கள் தனிப்பட்ட இடத்தை வகிக்கின்றன.

           விரியும் மலர்களில் நறுமணம் எதனால் வருகிறது என்று நம்மில் சிலருக்கு எண்ணம் எழக்கூடும்! ஒன்றிலிருந்து ஒன்றாக நமது எண்ணங்கள் எங்கெல்லாமோ தாவி கருத்துக்களைத் தேடி அலைகின்றன அல்லவா? இதுவே இயல்பு!! இதுபற்றி அறிவியல் தொடர்பான செய்திகளைப் பார்க்கலாமா?

                                0000000

           மலர்களின் நறுமணம் அவற்றின் இதழ்களில், சில வேதிப்பொருட்களால் (volatile organic compounds) ஆன எண்ணைகளால் உண்டாகிறது. குளிர்ச்சியாக உள்ள மொட்டுக்கள் விரிந்து வரும்போது, வெப்பநிலை உயரும், அப்போது இந்த எண்ணைகள் ஒன்றோடொன்று கலந்து ஆவியாகி, ஒவ்வொரு மலருக்குமே தனித்ததான வாசத்தைப் பரப்பும். மலர்களுக்கு வாசம் எதற்காக? மகரந்தச் சேர்க்கைக்கு (Pollination) உதவும் வண்டினங்களைக் கவர்ந்திழுக்கத்தான்!!

           மலர்களின் நிறமும் வாசமும் வண்டுகள், பட்டாம்பூச்சி இனங்களைக் கவர்ந்திழுக்க வேண்டியே! வாசங்கள் தொடர்பான வேதிப்பொருள்கள் பலரகப்பட்டவை, ஒன்றைப்போல் ஒன்றிருக்காது. வாசனையால் கவரப்பட்டு மலர்களை நாடும் வண்டினங்கள் பரிசாகப் பெறுவது மலருள்ளிருக்கும் சுவையான தேனைத்தான்! ஒவ்வொரு வண்டினமும் (beetles), பட்டாம்பூச்சி (bees and butterflies) இனமும், அந்துப்பூச்சி (moth) இனமும் ஒவ்வொரு விதமான வாசனையால் கவரப்படும். குறைந்த தூரம், அதிக தூரம் வரை வாசம்வீசி பூச்சிகளைக் கவரும் வேதிப்பொருட்கள் உண்டு. இரவில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளால் இவை அறிந்து கொள்ளப்படும். தேனீக்களாலும், பட்டாம்பூச்சிகளாலும் மகரந்தச் சேர்க்கை செய்யப்படும் மலர்வகைகள் இனிய மென்மையான நறுமணம் கொண்டவை. மாறாக, வண்டினங்கள், வௌவால்கள் போன்றன அடர்த்தியான, அழுத்தமான, பழவகை வாசனைகளால் கவரப்படும்.

           எவ்வாறு இந்தப் பூச்சி இனங்கள் ஒரே வாரியான மலர்களுக்கு மட்டுமே சென்று தேனருந்தி, மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன என்பதுபற்றி இன்றுவரை அறிய இயலவில்லை. நறுமணங்களில் உள்ள சின்னஞ்சிறு வேறுபாடுகளின் மூலமே சரியான மலர்களைக் கண்டடைகின்றன இப்பூச்சிகள்! ஒரேதரமான பூக்களிலிருந்து சேகரிக்கப்பட்ட (தேனீக்களால்தான்; பின் மனிதன் அதை எடுத்துக் கொள்கிறான்!!) தேன் வாங்கக் கிடைக்கும். ஆப்பிள் மலர்கள், கலிஃபோர்னியன் பாப்பி, (Californian poppy) ஆரஞ்சுப்பழ மலர்கள், இன்னபிற. மிகச்சரியான வாசனை இழைகளை (tones) வெளிப்படுத்துவதன் மூலம், சரியான மலர்கள் மகரந்தச் சேர்க்கையை நடத்திக் கொள்கின்றன. அரும்பாக இருக்கும் மலரிதழ்களில் இவ்வாசனை வெளிப்படுவதில்லை. உதாரணமாக சிறிய மல்லிகை மொட்டுகளில் இவ்வாசனை இருக்காது. சரியாக மலர்ந்து இதழ்கள் பிரிந்து விரியும்போது வாசனையும் மிக உச்சத்தில் இருக்கும். மகரந்தச் சேர்க்கை நடந்து முடிந்ததும், மலரிதழ்கள், வாசத்தை இழந்து வாடி விடும். உதிர்ந்தும் விடும்.

           அது சரி! தேனீக்களும் மற்ற வண்டினங்களும் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட மலரில் தமக்கான உணவு (தேன்) உள்ளதெனத் தெரிந்து கொள்கின்றன? மலர்களின் நறுமணத்திற்குக் காரணமான இந்த வேதிப்பொருட்களை, தேனீயின் ‘வேதிப்பொருட்களை உய்த்துணரும் கருவி’ (chemoreceptors) இனம் கண்டுகொள்கின்றது. ஏனென்றால் மகரந்தச் சேர்க்கை ஒரே வகையைச் சார்ந்த மலர்களிடையேதான் நிகழ வேண்டும். இரவில் மலரும் மலர்கள் பளிச்சென்ற வெண்மை நிறம் கொண்டு திகழும். பூச்சிகளும் வௌவால்களும் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கும்.

           மலர்களின் வாசங்கள் பலவிதம். ஆப்பிள், செர்ரி மரங்களின் மலர்வாசம் வண்டுகளும், தேனீக்களும் விரும்பும்வண்ணம் இனிமையாக இருக்கும். அதே நேரம் இதே வகையைச் சேர்ந்த பேரிக்காய் (Pear) மரத்தின் மலர்வாசம் சகிக்க இயலாததாக இருக்கும். ஒருவிதமான அழுகல் வாசனையுடன் இது வண்டுகளைத் தன்பால் ஈர்க்கும். இதேபோல ‘பிணவாச மலர்’ (Corpse flower) என்று ஒன்றுண்டு. இந்தோனேஷிய காடுகளில் இவை வளரும். இம்மலரின் வாசம் அழுகும் மாமிசத்தின் வாசம்போல இருக்கும். அதுவே வண்டுகளைத் தம்பால் கவர்ந்திழுக்கும்!!

           வாசம் மிகுந்த மலரிதழ்களே பெர்ஃப்யூம் எனப்படும் நறுமணப்பொருட்களைத் தயாரிக்க உதவுகின்றன. தம்மை நறுமணம் சூழ்ந்திருக்கவேண்டும் எனும் ஆசைக்காக மகளிர் அக்காலத்தில் மலர்களை மாலைகளாக்கியும், தொடுத்தும் அணிந்தனர். இன்றும் அணிகின்றனர். இவ்வாச மலர்களே நறுமணப்பொருட்களான பெர்ஃயூம் தயாரிக்க முன்னோடிகளாயின எனலாம். இன்று இது மிகப்பெரியதொரு துறையாக வளர்ந்து பலகோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களாக வளர்ந்துள்ளது.

                                                     0000000

           அறிவியலிலிருந்து ஆன்மீகத்துக்கு வருவோம்! திருப்புடை மருதூர் ஈசருக்கு நாறும்பூ நாதர் என்று பெயர்; எப்படி வந்தது? அருமையான ஒரு கதையின் விளக்கம்: கருவூர்ச்சித்தர் சிவாலயங்களுக்கெல்லாம் சென்று அங்கு உறையும் சிவனைப் பணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் தாமிரவருணியின் கரைவழியாக வந்தவர், மறுகரையில் ஒரு கோவிலைக் கண்டார். அவர் ஆற்றினைக் கடந்துசென்று வழிபட முடியாதவாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவிலில் உள்ள இறைவனின் பெயர் சித்தருக்குத் தெரியாது. ஆனால் அந்தக்கோவிலைச் சூழ்ந்திருந்த நந்தவனத்தின் மலர்களிலிருந்து நறுமணம் காற்றில் மிதந்துவர, அதனை நுகர்ந்தவர், “நாறும்பூ நாதரே! (மணமிகுந்த பூக்களின் நடுவே உள்ள ஈசனே!) உன்னைத் தரிசிக்க அருளவேண்டும்,” என வேண்டியதாகவும், இறைவனும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, கருவூர்ச்சித்தர் தன்னைத் தரிசிக்க அருளியதாகவும் கூறுவர்.

           இன்றைய இலக்கியப்பயணம் சங்கப்பாடல், அறிவியல், ஆன்மீகம் என்று நிறைவுறுகிறது.

           அடுத்தது என்ன? தேட வேண்டும்! காத்திருப்போம்!!

                                           00000000000

          

 

அபூர்வங்கள்-3 ஆடல் காணீரோ? – ந பானுமதி

இவ்வருடம் மார்ச் ஒன்றாம் தேதி மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. ஓதுவதற்கு அரியவனான சிவன், மௌன குருவாக இருக்கையில் பிரும்மத்தை உணர்த்துகிறார். அவரே ஆவுடையுடன் கூடிய லிங்க வடிவத்தில் அருவுருவமாக இருக்கிறார். நம் கண்கள் கண்டு களிக்கவென்றே நடராஜராக ஆடுகிறார். உலகின் மிகச் சிறந்த கலைப்படைப்பு என்று நடராஜத் திரு உருவைத் தயக்கமில்லாமல் சொல்லலாம். ஆன்மீகமும், அறிவியலும் இணையும் அற்புத வடிவம். European Council for Nuclear Research (CERN) முகப்பில் நடராஜரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அது பிரபஞ்ச நடனம் (Cosmic Dance) என்று சொன்ன இயற்பியலாளர்கள் கார்ல் (Carl Segan) மற்றும் ஃபிரிட்ஜாப் கேபர் (Fritjob Capro) மேலும் அதைப் பற்றிச் சொல்லும்போது அணுத்துகள்களின் அதி அற்புதமான இயக்கத்தை (dynamism of sub atomic particles) ஆடலரசனின் வடிவமைப்பு எடுத்துக்காட்டுவதாகச் சொல்கிறார்கள்.

நம் மரபிலும் நடராஜ தத்துவம் இயற்பியலின் கூறுகளை உள்ளடக்கிய ஐந்தெழுத்து மந்திரம் என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனின் தாண்டவத்தினால் உலகம் இயங்கிக் கொண்டுள்ளது என்றும் விளக்கம் சொல்வார்கள்.
‘திருவடி நிலையும் வீசுஞ் செய்காலுஞ் சிலம்பு
முழுவளரொளியும் வாய்ந்தவூருமுடுத்த தோலு’
என்று நடராஜ தத்துவப் பாடலில் ந. சுப்ரமண்ய அய்யர் சொல்கிறார்.

‘மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…’

இது நடராஜப் பத்தில் சிவ தாண்டவத்தைத் துதிக்கும் பாடல். ஒவ்வொரு சொல்லும் அவர் ஆடும் நிலையைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு கால்களுள்ள மான் நால் வேதத்தைக் குறிக்கிறது. நால் வேதங்களும் அவர் கையில் அடங்குகிறது.

ஞான உருவான அவர் தீச்சுடரை ஏந்தி வழி காட்டுகிறார்.

நிலவினை இளம்பிறையெனச் சூடியிருக்கிறார். சந்திரன், வளர்வதும் தேய்வதுமான வாழ்வின் இயக்கத்தைச் சுட்டுகிறது.

இந்த உலகம் வளம் பெறுவதற்காக தூயவளான கங்கையை தன் சிரசிலிருந்து பெய்விக்கிறார். அவள் பாய்வதும் இயக்கமே.

சக்தியுடன் இணைந்த சிவன் தனி நடனம் செய்வதில்லை. சக்தியே இயக்கம். சிவகாமி அம்மையுடன் ஆடுகிறார். உமையும் சிவமும் இணைந்த கோலமே அர்த்த நாரீஸ்வரர் மற்றும் லிங்கத் திருக்கோலம். நடராஜ உருவத்தில் அம்மை சக்தியென ஆடுகிறார்.

திருமாலவன் மகிழ்ந்து இந்தக் கூத்தில் இணைகிறார்.

சிவனின் திருமார்பில் இலங்கும் முப்புரி நூலும் அசைந்தாடுகிறது.

மறை ஓதும் வித்தகனாகிய பிரும்ம தேவன் ஆடுகிறார்.

அகில உலகின் அனைத்துக் கோள்களும் தங்கள்

சுழற்சிப் பாதையில் அவர் இயக்கியபடி ஆடுகின்றன.

யானை முகத்தோனாகிய விநாயகர் ஆடுகிறார்.

சிவன் காதுகளில் இருக்கும் குண்டலங்கள் அசைந்தாடுகின்றன.

தண்டை அணிந்த பாதங்கள் ‘தீம், தத்தளாங்கு தக திமி தோம்’ என்ற லயத்தில் ஒலிக்கின்றன.

இடையில் அணிந்த புலியாடை அழகு மிளிர அவன்

ஆட்டத்தில் நிலை குலையாமல் துலங்குகிறது. புலியை ஏன் இங்கே சொல்ல வேண்டும்? விலங்கு உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் நாம் நமசிவாயத்தை நினைக்க வேண்டும் என்பதற்காகவே.

என்றுமே குமரன் அழகன் முருகன். அவனும் நடனத்தில் இணைகிறான்.

ஞானப்பாலுண்ட சம்பந்தர் உள்ளிட்ட அடியார்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம், பதினெட்டு சித்தர்கள், எட்டு திசையின் தேவதைகள் என அனைவரும் அவன் ஆடலினால் இயக்கம் பெறுகின்றனர்.

நந்தி தேவர் மத்தளம் கொட்டி ஆடுகிறார்.

அழகிய மங்கையர் நடனமாடுகின்றனர்.

ஆடலரசே, என்னுடைய வினைகள் முற்றும் தீர்ந்தோட விரைவாக என்னைக் காக்க ஆடி வர வேண்டும் நீ; ஐயனே, சிவகாமியின் அன்பிற்குரியவனே, பொன்னம்பலமாம் சிதம்பரத்தில் ஆனந்த நடமிடும் ஈசனே!

உலகம் இயங்குவதை சிவ நடனம் சுட்டிக் காட்டுகிறது.அவர் காலின் கீழ் முயலகன் இருக்கிறான்.

அண்டங்களின் மையத்தில் அவர் திருப்பாதம் ஒன்றை ஊன்றியிருக்கிறார். இடது பாதம் சக்தியின் பாதம். அத்தனை இயக்கத்திற்கும், ஆற்றலுக்கும் அவளே ஆதாரம் என்று தில்லை அம்பலவாணன் சொல்லாமல் சொல்கிறார்.

படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்ற ஐந்து இயக்கங்களையும் மான், மழு, மதி, புனல், மால், ப்ரும்மா, கணபதி, முருகன், சித்தர்கள், தேவர்கள், அடியவர்கள், கோள்கள், அனைத்துப் பிரபஞ்சங்கள் ஆகியவற்றை ஆட்டத்தின் மூலமாகக் குறிப்பிடும் இப்பாடல் தனிச் சிறப்பு வாய்ந்தது.

நின்றது அறிவின்மையின் மீது; தூக்கியது ஆர்க்கும் சிலம்பின் ஒலி; அதனுடன் ஓங்கி ஒலிப்பது டமருகம் என்ற முரசு. அதன் ஒலியில் பிறந்தது தமிழ் எனும் அமுதம் என்று சொல்வார்கள்.

அவர் கழுத்தைச் சுற்றிக் காணப்படும் நாகம், நம்மைப் பாவங்கள் செய்யாதே என்று எச்சரிக்கிறது. அவர் அணிந்திருக்கும் ஐந்து நாக ஆபரணங்கள், ஐந்து பூதங்களைக் குறிக்கும், ஐந்து தொழில்களைக் குறிக்கும், ஐந்து புலன்களையும் குறிக்கும் குறியீடு.

அவரது திருமுகத்தில் இலங்கும் கண்கள் ஆதவனையும், மதியையும் போன்றவை. அவரது நடனத்தில் அலை பாயும் அந்தக் கற்றைக் குழல்கள் சிற்ப ஞானத்தின் அற்புதம். அது மட்டுமல்ல மூவகை ஆகாயத்தைக் குறிப்பதும் அதுவே. நாம் காணும் ஆகாயம், மனோ ஆகாயம் மற்றும் சித் ஆகாயம். வானம், மனம், தகராகாசம் (இதயத்தில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது) என நாம் புரிந்து கொள்ளலாம்.

வா(முகம்)சி (மான்) (மழு) சி

ம (புலித்தோலாடை)

ந (வலது பாதம்)

இதை நீங்கள் ‘நடராஜ’ என்ற சொல்லிற்கும் பொருத்திப் பார்க்கலாம். மேலும் அந்தக் கோடுகளை இணைத்தால் மனக் கண்ணில் அவர் உருவத்தினைப் பார்க்கலாம்.

இருபதாம் நூற்றாண்டில் பருப் பொருட்களின் உள் இயக்கங்கள் பற்றிய ஆய்வுகள் வளர்ந்தன. அணுவின் உட்பொருட்கள் தனிப்பட்டவைகளாக இல்லை என்பதையும், பிரிக்கவியலாத செயற்கூறுகளின் உள் வினையாற்றல் என்றும் இயற்பியல் சொல்கிறது. இந்த உட் செயற்பாடுகள் தடங்கலில்லாத சக்தியை உற்பத்தி செய்து, மாற்றி, உருவாக்கி, அழித்து செயல் புரிந்து கொண்டே இருக்கிறது. இந்த உள் இயக்கம் நிலைத்த பருப் பொருளை வடிவமைக்கிறது. நிலைபெற்றுள்ளது எனத் தோன்றினாலும், குறித்த லயத்தில் அவைகள் இயங்குவதால் தான் உலகே இருக்கிறது.
முடிவிலா இந்த ஆடலில் அனைத்தும் நடக்கிறது.

சரக் கோட்பாடு (String Theory) சொல்கிறது: தாள லயத்துடன் இருக்கும் சரங்களால் இந்த உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சரங்களில் இருக்கும் துகள்கள் எதிர்மின்னணு (Electron), குவார்க் (Quark) போன்ற துகள்களைக் காட்டிலும் மிகச் சிறியது. அவை மாறுபட்ட அலைவரிசைகளில் இயங்கி பொருட்களுக்கு அவ்வவற்றிற்கான எடையும், வடிவமும் தருகின்றன.

‘அவர் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ அல்லவா?

பானுமதி.ந

கம்பன் கவிநயம் – எஸ் எஸ் ( நிறைவுப் பகுதி)

 

கம்பன் கவி நயம் என்ற அண்டா பாயசத்தில் ஒரு தேக்கரண்டி  இந்தப் பகுதியில் பார்த்தோம்.

கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 124 படலங்களையும், 10,534 பாடல்களையும் கொண்டவை.

பெருமதிப்பிற்குறிய சிங்கப்பூர்  அ கி வரதராஜன்  அவர்கள் கம்ப ராமாயணத்தின் அனைத்துப் பாடல்களையும்  விளக்கத்துடன் கூறி வருகிறார். 

நிறைய இடங்களில் அறிஞர் பெருமக்கள் முற்றோதல் முறைப்படி அனைத்துப் பாடல்களையும் படித்து வருகின்றனர். 

குவிகத்தில் ராமமூர்த்தி ஆரம்பித்து வைக்க மற்ற  நண்பர்களும் தொடர்ந்து  தங்களுக்குப் பிடித்த இரு பாடல்களைப் பற்றி எழுதினார்கள்.

சொல்லப்போனால்  கம்பனின்  அனைத்துப் பாடல்களும்  நயம் இழையும் பாடல்கள்தான்.10534 முத்துக்கள் கொண்ட  முத்துக்குவியல். அதில் சிலவற்றைக் கையில் வைத்து அழகு பார்த்தோம்.

இந்த மாதம்  கம்பராமயணத்தில்  முதல் பாடலும் நிறைவுப் படலத்தில் (விடைதரும் படலம்)  இந்தப் பகுதியில் உள்ளன. இத்துடன் நாமும் கம்பருக்குத் தாற்காலிக விடை கொடுத்து மற்ற சங்கக் கவிதைகள் , காப்பியங்கள் போன்றவற்றை அடுத்த மாதங்களில் காணலாம்.  

கம்பனின் முதல் பாடல்:

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

உலகம் யாவையும்-எல்லா உலகங்களையும்;

தம் உள ஆக்கலும்-தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும்;

நிலை பெறுத்தலும் -நிலைத்திருக்குமாறு காப்பதையும்; நீக்கலும்-அழித்தலையும்;

நீங்கலா அலகு இலா விளையாட்டு உரையார் – என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய;

அவர் தலைவர் – அவரே தலைவ ராவார்;

அன்னவர்க்கே நாங்கள் சரண் – அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.

மங்கலச் சொல்லொடு தொடங்கவேண்டும் என்பது மரபு; அம்மரபின்படி ‘உலகம்’ என்ற மங்கலச் சொல் கவிச்சக்கரவர்த்தியின் வாக்கில் முதலாக எழுகிறது.

இனி இறுதியாக வரும் பாடல்கள், இவற்றை மிகைப் பாடல்கள் என்றும் சொல்வார்கள்

 (கம்பனுடையது அல்ல என்று நினைக்கும் பாடல்களை இப்படி ஒவ்வொரு மிகைப்பாடல்கள் என்று காண்டத்தின் பின்னும் தொகுப்பது வழக்கம்.)
வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக; நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க;
தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க, எங்கும்
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்,
சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி. 
வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! 
இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 

 

பாட்டி சொன்ன கதை எஸ். கௌரிசங்கர்

பாட்டி சொன்ன பழமொழிகள்..!

“பாட்டி! கதை சொல்லு பாட்டி”

“பிரபு, லதா! பெரிய பாட்டியை தொந்தரவு பண்ணாதீங்க! நேரமாச்சு, போய் படுங்க”

“பானு, ஏதோ ஆசைப்பட்டு கதை கேக்குது புள்ளைங்க. கேக்கட்டும் விடு”

“ஆமாம் வந்த அன்னிலேருந்து தினமும் கதை சொல்லியாச்சு, கேட்டாச்சு. போதும் எல்லாம்”

“அட இன்னும் ஒரு வாரம்தான். நீயும் புள்ளைங்களும் உங்க ஊருக்குப் போயிட்டீங்கன்னா, அப்புறம் அங்கே கதை சொல்ல இந்தப் பெரிய பாட்டியும் இல்லை. கேக்கறதுக்கு இங்கே புள்ளைங்களும் இருக்கப் போறதில்லை. நான் யாருக்கு இனிமே கதை சொல்லப் போறேன்?”

“அதுசரி! பெரியம்மா! தினமும் இவங்களுக்கு இந்த இருபது நாளா ராத்திரி புதுசு புதுசா கதையெல்லாம் சொல்லி கெட்ட பழக்கம் பண்ணி வைச்சிருக்கீங்க. சென்னைக்குப் போனதும், இவங்களுக்கு தினமும் நானும் கதை சொல்ல வேண்டியிருக்கும்”

“அம்மா! அங்கே நீ ஒண்ணும் கதையெல்லாம் சொல்ல வேண்டாம். நம்ம வீட்டிலே  டி.வி., வீடியோ கேம்ஸ் எல்லாம் இருக்கு. இங்கே அதெல்லாம் ஒண்ணுமே இல்லையே?”

“லதா! இங்கே வந்து நல்லா வாயாடக் கத்துக்கிட்டே நீ! ”

“சரி! போகட்டும் பானு, குளந்தைதானே! ஆசைப்பட்டுக் கேக்குது. நான் சொல்றேன். புள்ளைங்களா! இன்னிக்கு ஒரு கதை கேப்பமா? ஒரு ஊர்லே ஒரு ராஜா இருந்தாராம்…….”

“ஐயோ! ராஜா கதை கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு பாட்டி. வேறே கதை சொல்லு”

“இந்தக் கதை வேறே ராஜா கதை…. பரீச்சித்து மகாராசா கதை…..சொல்லட்டுமா?”

“பாட்டி! அந்தக் கதை நாலு நாள் முன்னாலேயே சொல்லிட்டே.  எலுமிச்சம் பழத்திலே பாம்பு வந்து ராஜாவைக் கடிச்ச கதை… தெரியும் பாட்டி”

“ஓ! அந்தக் கதையும் சொல்லிட்டேனா? சரி…. இன்னொரு கதை சொல்றேன். பஞ்ச பாண்டவங்க இருந்தாங்கள்லே… அவுங்களுக்கு குரு துரோணரு. அவருக்கு ஒரு புள்ளை. அசுவத்தாமன்னு பேரு. பெரிய வில் வித்தைக்காரன். மகாபாரத சண்டை நடந்திச்சிலே? அதிலே துரோணரை எப்படி கொன்னாங்கன்னா…”

“அதுவும் தெரியும் பாட்டி..அஸ்வத்தாமங்கிற யானையைக் கொன்னுட்டு, துரோணர் புள்ளை அஸ்வத்தாமன் செத்துப் போயிட்டான்னு பீமன் பொய் சொல்லிட்டான். அதைக் கேட்டுட்டு துரோணர் வில்லைத் தூக்கி எறிஞ்சிட்டு சோகமா உட்கார்ந்திருக்கிற போது அவரு தலையை வெட்டிட்டாங்க. தன் அப்பாவை கொன்னதுக்கு அஸ்வத்தாமன் பாண்டவங்க புள்ளைங்களைக் கொன்னு பழி வாங்கிட்டான். இந்தக் கதையும் போன வாரமே சொல்லிட்டே பாட்டி…”

“அப்படியா! சொல்லிட்டேனா? எல்லாம் மறந்து போயிடுது. நீ நல்லா நாபகம் வச்சிருக்கியே!”

“சரி! பிரபு, போதும். எல்லாக் கதையும் பெரிய பாட்டி சொல்லியாச்சு. இனிமே கதை எதுவும் இல்லை. போய் படுங்க போங்க”

“இருக்கட்டும் பானு. நான் இன்னிக்கு வேறே கதை சொல்றேன்… இதுவரைக்கும் யாருக்கும் சொல்லாத கதை….ம்ம்ம்.. எப்படி ஆரம்பிக்கலாம்? ம்… சரி! ஒரு ஊர்லே ராமசாமி, ராமசாமின்னு ஒருத்தர் இருந்தாரு…”

“ராமசாமியா! நம்ம ஊர் பெருமாள் கோவில்லே இருக்காரே, அந்த ராமர் சாமியா?”

“அவரு சாமிடா கண்ணு! இவரு ஆசாமி. பெரிய பணக்காரரு. நெறைய நிலபுலம், தோப்பு தொரவுன்னு வைச்சிருந்தாரு. பத்து தலமுறை பரம்பரை சொத்து. பெரிய வீடு, வாசல்ன்னு  ஊர்லேயே பெரிய மிராசுதாரு. அவருக்கு ஒரு தம்பி இருந்தாரு”

“அவரு பேரு லட்சுமணசாமி. சரியா பாட்டி?”

“ஏய்! பிரபு! என்ன அவசரம். பாட்டி சொல்லுவாங்க கேளு!”

“நீ ராமன் தம்பி லட்சுமணன்னு சரியா சொல்லிட்டே. ஆனா இவன் பேரு அது இல்லை. கலியமூர்த்தி. கலியன்னு எல்லோரும் கூப்பிடுவாங்க….அண்ணன் மேலே அவனுக்கு ரொம்ப மரியாதை, பக்தி. அவரு சொல்லுக்கு மறு சொல்லு சொல்ல மாட்டான். அவரு சொன்னதை அப்படியே மாறாம செய்வான். அண்ணனும் தம்பியும் ராமர் லட்சுமணர் மாதிரி அப்படி ஒத்துமை”

“கேளு! நீயும் லதாவும் எதுக்கெடுத்தாலும்  சண்டை போடுறீங்களே? கூடப் பொறந்தவங்கன்னா அவங்க மாதிரி ஒத்துமையா இருக்கணும். புரியுதா?”

“பானு!மேலே கதையக் கேளு!  இப்படியே ரொம்ப வருஷம் ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கும் போது, கலியனுக்கு கலியாணம் ஆச்சு. கொஞ்ச நாள் போனதும் புதுசா வீட்டுக்கு வந்தவ தகறாரு பண்ண ஆரம்பிச்சா. பெரியவர் தம்பியை ஏமாத்திட்டு, குடும்ப சொத்தையெல்லாம் தன் இரண்டு புள்ளைங்களுக்கே சேர்த்து வைக்கிறாருன்னு ஒரு சந்தேகத்தைக் கிளப்பி அவரு கிட்டேயே சண்டை போட ஆரம்பிச்சா.  கலியன் மொதல்லே அவளைக் கண்டிச்சான். ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு சொக்குப் பொடி போட்டு மயக்கி அவ தன் புருஷனை கைக்குள்ள போட்டுகிட்டா. அவனும் சொரணை கெட்டுப் போயி அவ பேச்சைக் கேட்டுகிட்டு சொத்தைப் பிரிக்கச் சொல்லி அண்ணனோட தகறாறு பண்ண ஆரம்பிச்சான்”

“பெரியம்மா, என்ன கதை இது? புராணக் கதையா, இல்லை உங்க கட்டுக் கதையா?”

“இரு, இரு! முழுசா கேளு பானு! அண்ணன் தம்பிக்குள்ளே இருந்த  சின்னச் சின்ன வாய்த் தகறாறு பெரிசாப் போயி, கைகலப்பிலே கொண்டு போயி விட்டுடுச்சு. ஒரு நாள் வீட்டிலே பெரியவர் தனியா இருக்கும் போது, பெரிய சண்டையாய் வந்துடுச்சு. சண்டை முத்திப் போயி, சின்னவன் பெரியவரை உதைக்கப் போயி அவரு செத்தே போயிட்டாரு”

“ஐயோ! செத்து போயிட்டாரா? சும்மா உதைச்சதிலே செத்துட்டாரா?’

“பின்னே? உதைச்சதிலே படாத இடத்திலே பட்டா செத்துதானே போவாங்க?”

“பாட்டி! நீ சொல்றது ஒண்ணுமே புரியலை. எப்படி பெரியவரு செத்தாரு?”

“லதா! வேண்டாத கேள்வியெல்லாம் கேட்காதே! பாட்டி சொல்றதைக் கேட்டுகிட்டு சும்மா இரு”

“சரி! விடு! சின்னப் பொண்ணுதானே! சொன்னாலும் அதுக்குப் புரியப் போறதில்லை”

“லதா நீ கொஞ்சம் சும்மா இரு! கதை ரொம்ப இண்டரெஸ்டிங்கா போயிகிட்டு இருக்கு. ஒரு கொலை நடந்திருக்கு. அப்புறம் என்ன ஆச்சு, பாட்டி?”

 “அப்புறம் என்ன? போலீஸ் வந்துச்சு. சின்னவனை புடிச்சிகிட்டு போயிட்டாங்க. ஊரே சோகமாயிடுச்சு”

“அப்போ சின்னவரை ஜெயில்லே போட்டுட்டாங்களா? தண்டனை கொடுத்தாங்களா பெரியம்மா”

“ம்… பானு, உனக்கும் கதையிலே சுவாரசியம் வந்துருச்சா? இரு ஒவ்வொண்ணா சொல்றேன். அந்த ஊர்லே இன்னொரு பெரிய மனுஷன் இருந்தாரு. அவரு கலியனுக்கு ரொம்ப வேண்டியவரு. சின்னப் புள்ளையிலேயிருந்து இரண்டு பேரும் சிநேகிதங்களா பளகினவங்க. அவரும் சொத்து சுகம் உள்ளவருதான். ஊரே ரெண்டு பட்டு கிடக்கும் போது, என்ன செய்யறதுன்னு தெரியாம சின்னவன் பொண்டாட்டி “காப்பாத்துங்க”ன்னு வந்து அவரு கால்லே விளுந்தா..”

“அவரு பேரு என்ன பாட்டி?”

“அது ஏதோ ஒரு பேரு…ஏதோ ஒரு புள்ளையார் பேருன்னு வைச்சிக்கோயேன். கதையைக் கேளு! அந்த நல்ல மனுஷனும் அவ மேலே பரிதாபப்பட்டு ‘என்னோட சிநேகிதனை நான் எப்படியாவது காப்பாத்தியே தீருவேன்’னு சொல்லி அவளுக்கு வாக்குக் கொடுத்திட்டாரு”

“பாவி, அவளாலேதானே அவ புருஷன் தன் அண்ணனோட சண்டை போட்டு, கொலைக் கேசிலே மாட்டிகிட்டாரு. அவளைத்தான் ஜெயில்லே போடணும் பெரியம்மா”

“போடலியே! போடலியே! சரி, அவளை விடு! அவ எப்படியோ போகட்டும்.  சின்னவனோட சிநேகிதரு டவுன்லே பெரிய வக்கீலாப் பார்த்து கேசை கொடுத்தாரு. கலியனை முதல்லே தன்னோட சொந்த ஜாமீன்லே வெளியே கொண்டு வந்தாரு. அவரு இப்படி செஞ்சதினாலே அண்ணனோட குடும்பத்துக்கும் இவருக்கும் மனஸ்தாபம் ஆயிடுச்சு.  ‘சின்னவரைக் காப்பாத்த வேண்டாம்’னு பெரியவரோட  இரண்டு பசங்களும் கேட்டுகிட்டாங்க. இவரு ஒத்துக்கலை. அது அந்த இரண்டு குடும்பத்துக்கும் தீராத நிரந்தரப் பகையாவே ஆயிப் போச்சு. இவரை பயமுறுத்திப் பாத்தாங்க. இவரு மசியலை. ‘தன்னோட சினேகிதனைக் காப்பாத்தி அவன் கையிலே இரும்பு காப்புக்குப் பதிலா தங்க காப்பு போட்டு ஊருக்குள்ளே அளைச்சிகிட்டு வருவேன்’னு அவுங்க எதிரிலேயே சபதம் போட்டாரு…..”

“கதை ரொம்ப நல்லா இருக்கு பாட்டி. நிறுத்தாம மேலே சொல்லு”

 “சொல்றேன். நெனவுபடுத்தித்தானே சொல்லணும்…அப்புறம் கேசு நாலு வருஷம் நடந்துச்சு. கேசுக்கும் டவுனுக்குப் போய் வர்ரதிலேயும் இவரு கையிலே இருந்த பணமெல்லாம் கரைஞ்சிச்சு. அதைப் பத்தி கவலைப்படமா தன் சொத்தையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வித்து வித்து பணத்தை தண்ணியா செலவளிச்சாரு. போலீஸ்காரங்களுக்கும் வக்கீலுக்கும் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாரு”

“ஐயோ! பாவம். சிநேகிதருக்காக அவரு எப்படி பாடுபட்டிருக்காரு பெரியம்மா. அப்புறம் என்ன ஆச்சு? சின்னவரு தப்பிச்சாரா இல்லையா?”

“ஆ! கேசு முடிஞ்சு தம்பி அண்ணனைக் கொலை பண்ணினதுக்கு நேரடி சாட்சி எதுவும் இல்லைன்னு சொல்லி அவரை விடுதலை பண்ணிட்டாங்க. தான் சபதம் போட்டது போலவே, கலியன் கையிலே தங்கத்திலே காப்பு போட்டு ஊர்லே ஊர்வலமா அழைச்சிகிட்டு வந்தாரு”

“பெரிய ஹீரோதான் போல இருக்கு பாட்டி”

“என்னவோ போ! ஆனா அதுக்கு அப்புறம்தான் அவருக்குக் கெட்ட நேரம் ஆரம்பிச்சுது”

“என்ன ஆச்சு பெரியம்மா?”

“பெரியவரு குடும்பத்துக்கும் இவருக்கும் பகையாயிடுச்சின்னு சொன்னேல்லே? அது ரொம்பப் பெரிசாயிடுச்சு. இவரைப் பளி வாங்க அவங்க காத்துகிட்டு இருந்தாங்க. ஒரு நாள் ஊர்லே கோயில் திருவிளா.  ஊர் ஜனமெல்லாம் கோயில்லே கூடி இருக்கு. இவரு அவசர வேலையா டவுனுக்கு போயிருந்தாரு.  ரயில்லே ஊருக்குத் திரும்பி டேசன்லேருந்து இருட்டிலே வய வரப்புலே வந்துகிட்டு இருந்த போது, செத்துப் போன அந்தப் பெரியவரோட இரண்டு புள்ளைங்களும் வளியை மறிச்சு அவரை அங்கேயே குத்தி கொன்னு போட்டுட்டாங்க……..”

“ஐயோ! அப்படியா ஆயிப் போச்சு? பாவிப் பசங்க! பாவம், சிநேகிதனுக்கு உதவி செஞ்ச அந்த நல்ல மனுஷனுக்கா இப்படி ஆவணும்? கொடுமை….”

“அம்மா! அந்த அஸ்வத்தாமன் கதையிலே வர்ர மாதிரி இதிலேயும் அப்பாவைக் கொன்னவங்களை புள்ளைங்க பழி வாங்கிட்டாங்க இல்லை? கதை இண்டரெஸ்டிங்கா இருக்கு…நெட்ஃப்ளிக்ஸ்லே ஒரு படம். அதிலேயும் இதே மாதிரிதாம்மா.. ஒரு டாக்டர் வந்து……”

“சரி! போதும். உங்க டி.வி. படக் கதையெல்லாம் இருக்கட்டும். நேரமாயிடுச்சு. போய்ப் படுங்க..”

“அம்மா, பாட்டி கதை இன்னும் முடியலை…. அப்புறம் என்ன ஆச்சு பாட்டி?”

“மீதிக் கதை என்னன்னு பாட்டி கிட்டே கேட்டு நாளைக்கு நான் சொல்றேன். ம்… எழுந்திரிங்க”

“போம்மா, நீ ரொம்ப மோசம்.…. சரி! நாளைக்கு மீதிக் கதையை மறக்காம சொல்லணும், சரியா?  வா லதா போலாம்”

“சரி பெரியம்மா.. குழந்தைங்க போயிட்டாங்க. இப்போ சொல்லுங்க.. அப்புறம் என்ன ஆச்சு?”

“என்ன ஆச்சு? அந்த நல்லவரோட குடும்பம் சீரளஞ்சு போச்சு”

“அந்தக் கொலைகார பசங்களை போலீஸ்லே புடிச்சுக் கொடுக்கலையா?”

“இல்லை… கொலை நடந்ததுக்கு சாட்சி சொல்ல ஒருத்தரும் வரல்லை… ஊர்லே பாதி பேருக்கு பணத்தைக் கொடுத்து வாயை அடைச்சிட்டாங்க… மீதி பேரை மெரட்டி படிய வைச்சாங்க. போலீஸ்காரங்க ஏதோ கேஸ்ன்னு போட்டாங்க.. ஆனா ஒண்ணும் நடக்கலை”

“அவரு காப்பாத்தினாரே அந்த சின்னவரு கலியன் கூட சாட்சி சொல்ல வரலையா?”

“இல்லை… சொத்துக்கு ஆசைப்பட்டு அவனும் அந்தக் கொலைகாரப் பசங்களோட சமாதானமாப் போயி அவங்ககூட சேர்ந்துகிட்டான்.”

“பாவி! அந்த நன்றி கெட்ட பயலுக்குப் போய் அந்த நல்லவரு உதவி செஞ்சாரே? அது சரி, பெரியம்மா, இந்தக் கதையைப் போயி எதுக்கு பசங்ககிட்டே சொல்றீங்க? அவங்களுக்கு என்ன புரியப் போவுது?”

“அவங்களுக்குப் புரியாட்டா என்ன? உனக்குப் புரியுமில்லே? என் கதையை நான் வேறே யார் கிட்டெ சொல்லி அளுவேன்?”

“என்ன சொல்றீங்க பெரியம்மா?”

“ஆமாம் பானு.. அந்தக் கதையிலே வந்த நல்லவருதான் என் புருஷன்…….”

“ஐயோ! அவரா? நம்ம விநாயகம் பெரியப்பாவா?”

“ஆமாம்.  நல்ல மனசோட தன் சொத்தையெல்லாம் அளிச்சு தன் சிநேகிதனைக் காப்பாத்தினாரு என் புருஷன். அந்த சிநேகிதனே அவருக்குத் துரோகம் செஞ்சிட்டான்…………”

“அழாதே பெரியம்மா…”

“அவரு செத்துப் போகும் போது எனக்கு இருபத்தெட்டு வயசு…கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகியும் என் வயித்திலே ஒரு புளு பூச்சி கூட வளரலே. இருந்த சொத்தெல்லாமும் போயி நிர்கதியா நின்னேன். ஊர்லே ஒரு பய எங்களுக்கு ஆதரவுக்கு வரலை…என்னைப் பெத்தவங்களும் முன்னலேயே செத்துப் போயிட்டாங்க. கடைசியிலே ஒரு நாள் உங்க அப்பாவும் அம்மாவும் வந்து அவங்க கூட என்னை அளைச்சிகிட்டு வந்திட்டாங்க. இதோ நான் தங்கச்சி வீட்டுக்கு வாள வந்து அம்பது வருஷம் ஆயிப் போயிடுச்சு.”

“பெரியம்மா! உங்க புருஷன் உங்க சின்ன வயசிலே இறந்து போயிட்டார்னு தெரியும். ஆனா இந்தக் கதையெல்லாம் தெரியாது. நீங்கதான் எனக்கும் என் தம்பிக்கும் அம்மாவுக்கு மேலே ஒரு பெரிய அம்மாவா இருந்தீங்க. எங்க அம்மாவைவிட உங்க கிட்டேதான் நாங்களும் புள்ளைங்களா வளர்ந்தோம். ஆனா உங்க வாழ்க்கையிலே இப்படி ஒரு சோகம் இருக்கும்னு இதுவரையிலே எங்களுக்குத் தெரியாது பெரியம்மா. அம்மாகூட சொல்லலை”

“சரி! சரி! பானு! அதுக்காக இப்போ என் கதையைக் கேட்டுட்டு நீ அளுவாதே. என் கதையை வேறே யார்கிட்டே நான் சொல்வேன். என் புள்ளைங்ககிட்டேதானே சொல்ல முடியும். அதான், ஏதோ இன்னிக்கு தோணுச்சு.. மனசிலே இருந்ததையெல்லாம் சொல்லி கொட்டிட்டேன். நீ அளுவாம கண்ணைத் தொடச்சிகிட்டு போய்ப் படு. ரொம்ப நேரமாயிடுச்சு… போ கண்ணு”  

குட்டீஸ் லூட்டீஸ்-சிவமால்

இதற்காகவாவும் இருக்கலாமோ?

என் குடும்பமும், நண்பன் சேகர் குடும்பமும், அவன் வீட்டில் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். என் மகள் மிதிலா திடீரென்று, ‘ஆன்டீ.. நீங்க அப்பளாம்

எந்த பிராண்டு வாங்கறீங்க..?’ என்று கேட்டாள். ‘ஏன்மா.. அப்பளாம் நன்னாருக்கா… நீங்க வீட்டிற்குப்  போகும்போது ஒரு கட்டு தரேன்..என்றாள் சேகர் மனைவி.

.’நோ.. நோ.. இல்லே ஆன்டி.. அப்பளம் ரொம்ப ரொம்ப மட்டமா இருக்கு… டேஸ்டே இல்லே… அதன் ப்ரான்ட் தெரிஞ்சுதுன்னா நாங்க வாங்கும்போது அதை வாங்கறதை அவாய்டு பண்ணலாம் இல்லையா.. அதற்குத்தான் கேட்டேன்..என்றாள்.

ஒரு நிமிடம் அயர்ந்து நின்ற நாங்கள், ‘பக பகவென்று சிரிக்க ஆரம்பித்தோம்.

இப்படியும் ஒரு கோணமா….!!!

 

கடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

R Govindraj - YouTube

 

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா? 

‘முகத்தில் முகம் பார்க்கலாம்’ – தங்கப்பதுமை படத்தில் சிவாஜி, டி ஆர் ராஜகுமாரி நடிக்க, டி எம் எஸ், பி லீலா பாடும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் (விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை) ’முகம்’ பற்றிய சிந்தனைகளைக் கிளறியது! முகம் உண்மையிலேயே அகத்தில் எழும் உணர்ச்சிகளைக் காட்டும் கண்ணாடிதான் – மேலும் முகம் ஒருவரின் குணத்தையும் குறிக்கக் கூடியது (ஒருவரது ‘மற்றொரு முகம்’ – மற்றொரு குணம்!) என்ற சிந்தனையைக் கொடுக்கிறது பட்டுக்கோட்டையார் பாடல்!

முகம் என்பது ‘முகத்தல்’, ‘முகர்தல்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்த காரணப்பெயர் – வதனம் என்னும் சொல்லும் முகத்தையே குறிக்கிறது – ‘வதனமே சந்திர பிம்பமே’ என்ற பாகவதர் பாட்டில் வரும் அதே வதனம்தான்!

ஒவ்வொருவருக்கும் அவரது முகம் பிரத்தியேகமானது. முகங்களைச் சரியாக அடையாளம் காணும் பகுதி மூளையின் டெம்பொரல் மற்றும் ஆக்சிபிடல் மடல்களில்(Lobes) உள்ள நியூரான்களின் வேலையே. இவை விபத்துகளிலோ, கட்டி,

ஸ்ட்ரோக் போன்றவைகளாலோ பாதிக்கப் படும்போது, தெரிந்த முகங்களை அடையாளம் காணமுடியாமல் போகலாம் – இதற்கு ‘ப்ரோசோபக்னோசியா’ (Prosopagnosia) என்று பெயர். கண்ணாடியில் பார்த்து, உங்களையே ‘இது யார்?’ என்று கேட்டுக்கொள்ளும் நிலை வரலாம்!

முகத்தில் சின்னச் சின்னதாக 43 தசைகள் இருக்கின்றன என்பது சிலருக்குச் செய்தியாக இருக்கக் கூடும்! முகபாவங்களில் காட்டப்படும் உணர்ச்சிகளுக்கும், வார்த்தைகள் இல்லா மெளன மொழிக்கும் இவையே காரணம்! மகிழ்ச்சி, கோபம், வீரம், அச்சம் போன்ற முகபாவங்களுக்கு (21 என்கிறது கூகிள்சாமி!) இந்தத் தசைகளின் ஒருங்கிணைந்த அசைவுகளே காரணம். மூளையின் டெம்பொரல் மடலின் ‘ஃப்யூசிஃபார்ம் கைரஸ்’ என்னும் அடுக்கில் இந்த உணர்ச்சிகளின் கண்ட்ரோல் உள்ளது. மனதின் உணர்ச்சி நிலைக்கேற்ப, முகத்தில் சிரிப்போ, கோபமோ, வருத்தமோ தெரிகிறது! எனக்குத் தெரிந்து முகத்தின் 43 தசைகளையும் சரியான விகிதத்தில், உபயோகித்தவர் நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே!!

ஒருவருடைய முகம், அவருடைய குணாதிசயங்களை – Character – காட்டுமா? அரிஸ்டாடில் காலம் முதல் இந்தக் கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. முகத்தைப் பார்த்து, குணங்களையும், குலம் கோத்திரங்களையும் கூறுகின்ற அறிவியல் ‘ஃபிஸியோக்னோமி’ (Physiognomy) எனப்படுகிறது. ஆனால், என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா அகராதி, இதனை ஒரு ‘போலி அறிவியல்’ (Pseudoscience) என்கிறது – நம்ம ஊர் கைரேகை சாஸ்திரம், கிளி ஜோசியம் போன்ற, ‘முக ஜோஸியம்’ என்பதைப் போல சித்தரிக்கின்றது.

ஜப்பானியர்கள், முகத்தின் மேல் பகுதி உடல் மற்றும் ஆவியின் நிலையையும், நடுத்தரப் பகுதி (புருவம் முதல் மூக்கின் நுனி வரை) மனநிலையையும், கீழ்ப் பகுதி (மேல் உதடு முதல் கன்னம் வரை) ஒரு நபரின் தன்மையையும் பிரதிபலிப்பதாகக் கருதுகின்றனர்!

பெரிய மண்டை அறிவு ஜீவியையும் , பரந்த நெற்றி புத்திசாலித்தனத்தையும், நல்ல தீர்க்கமான தாடை மன உறுதியையும், கண்கள் மன அழகையும், அழகில்லாத பற்களும், தோலும் கெட்ட குணங்களையும் காட்டுவதாக ஒரு கருத்து உண்டு. இது உண்மையா, பொய்யா என்று தெரியாது; ஆனால் முகத்தைப் பார்த்து, ஒருவரை எடை போடுவது என்பது ஆதிகாலத்திலிருந்தே இருந்திருக்கிறது. இந்தியன் திரைப்படத்தில், கவுண்டமணி, கிரேசி மோகனைப் பார்த்துப் பேசுவதாக சுஜாதா எழுதியுள்ள ஒரு டயலாக், இதன் அடிப்படையில்தான் என்று நம்பலாம்.

பலவிதமான புருவங்கள் (இப்போது இது சாத்தியமில்லை – எல்லாப் புருவங்களும் அழகிய ‘வில்’லாய் செதுக்கப் படுவதால்!), கண்கள், மூக்குகள் (மேல் நோக்கி தூக்கிய மூக்கு கோபக்காரர் என்கிறது – கூர்மையான மூக்கு அறிவாளி என்கிறது), தாடை, உதடுகள், காதுகள், முடியின் நிறம் போன்றவற்றின் அமைப்பு, ஒருவரின் குணாதிசயங்களைச் சொல்லக்கூடியவை என்பது வழக்கத்தில் இருக்கிறது. இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில், இவற்றில் பல பரம்பரையாக – Hereditory – வரக்கூடும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அப்படியே சில குணாதிசயங்களும்!

முகத்தில் கண்கள் சொல்லும் செய்திகள் நிறையவே இருக்கின்றன. சொல்வது உண்மையா, பொய்யா என்பதைக் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்! கருவிழிகளை விட, நிறம் சிறிது குறைவாக உள்ள கண்விழிகளைக் கொண்ட பெண்களுக்கு வலிகளைத் தாங்கும் சக்தி கூடுதல் என்கிறது ஒரு செய்திக் குறிப்பு. அடர்ந்த பழுப்பு நிறம் கொண்ட விழிகளைக் கொண்டவர்கள் இயற்கையிலேயே தலைவர்களாகக் கூடியவர்கள் என்கிறார் எடின்பரோவைச் சேர்ந்த சைக்காலஜிஸ்ட், அந்தோணி ஃபல்லோன்! பெரிய கண்கள் உடையவர்கள் மகிழ்ச்சியாகவும், திறந்த மனமுடையவர்களாகவும், கலைத் திறன் உடையவர்களாகவும் இருப்பார்களாம். அதனால்தான் ‘கண்களை நம் ஆன்மாவின் ஜன்னல்கள்’ என்கிறார்கள்! ‘ “Watch closely the eyes of him who bows the lowest” (அதிகப் பணிவுடன் இருப்பவனின் கண்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்) என்கிறது ஒரு போலந்து நாட்டுப் பழமொழி! கண்களில் கள்ளம் இருக்கலாம்!

தீ விபத்திலோ, கேன்சர் ஆபரேஷனினாலோ மாறிய முகங்களைப் பார்க்கத் தயங்குவது, அவர்கள் முகத்தைப் படிக்க முடியாததனால்தான் என்று உளவியல் செய்தி சொல்லுகின்றது.

‘போட்டோஜெனிக்’ முகம் -கண்கள், உதடுகள், மூக்கு எல்லாம் அமைப்புடன் symetrical ஆக இருந்தால் புகைப்படங்களில் நன்றாக வரும் முகம்! படம் எடுக்கும் போது, போட்டோகிராஃபருடன் சண்டை ஏதும் இல்லாதிருப்பது நல்லது. நல்ல காமெரா, லைட்டிங் எல்லாம் முகத்தை அழகாகக் காட்டும்! மற்றபடி போட்டோவுக்கும், குணங்களுக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை!

ஆஸ்திரேலியாவின் ஆலன் ஸ்டீவ்ஸ், சைக்காலஜிஸ்ட், முக வசீகரத்தை வைத்து, 7 குணநலன்களைக் கண்டுபிடிக்கலாம் என்கிறார். அகலமான முகம் உள்ளவர்கள் தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள் என்கிறார். கண்களின் அளவு, இடையே உள்ள தூரம், மூக்கின் நீள அகலங்கள், உதடுகளின் அமைப்பு, தலையின் வடிவம் இவற்றையும், அவர்களது குணநலன்களையும் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். சுவாரஸ்யமான கட்டுரை, வாசித்துவிட்டு வீட்டிற்கு வரும் உறவினர், நண்பர்களின் முக ராசியை ஆராயலாம்!

பொதுவாகவே அழகான முகம் உடையவர்கள் மனமும் அழகாக இருக்கும் என்று ஏதோ கட்டுரையில் படித்த ஞாபகம். இதையே சோ அவர்களும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இரண்டு வழியிலும் விதிவிலக்குகள் உண்டு என்பதுதான் உண்மை!

அறிவியல் பூர்வமாக இல்லாவிட்டாலும், சில முகங்கள் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துவிடும். அவர்களது குணங்களும். இப்படிப்பட்ட முகம்தான் வேண்டும் என்று நாம் கேட்டுப்பெற முடியாது (சில சினிமாக்களில் இது சாத்தியம்!). ஆனால் மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் கொண்டு நல்லனவற்றையே சிந்திக்கமுடியுமானால், நம் முகம் எப்போதும் அழகாகப் பிரகாசிக்கும் என்பதை நான் நம்புகிறேன்.

“At fifty everyone has the face he deserves” – Orwell.

(‘The human face reconsidered’ by John Brophy,

‘Reading faces’ by Leopolo MD & Samm Sinclair – வாசிக்கலாம்!)