சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வு – ஏப்ரல் 2023 – ஈஸ்வர்

 

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

 


‘மங்க்கி கேட்ச் ‘ – ஜார்ஜ் ஜோசப்  – உயிரெழுத்து  –  ஏப்ரல் 2023

இதனை ஏப்ரல் 2023 மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்வு செய்கிறேன். 

ஆசிரியர் ஜார்ஜ் ஜோசப் இன்னும் பல படைப்புக்கள் தருவார் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கிறார்.  – ஈஸ்வர் 

——————————————————————————————————————————————————

2023 ஏப்ரல் மாதம் வெளிவந்த கதைகளை ஒரு சேரப் படித்தது ஒரு நல்ல அனுபவம். சிறு கதை என்பது நாம் படிக்க ஆரம்பித்த கால இலக்கணங்களுடன் நின்று விடுவதில்லை. கரு, களம், சொல்லும் முறை எல்லாவற்றிகும் மேலாக வடிவம் மாறிக்கொண்டு வருகிறது என்பது நிதர்சனம்.

கதைகளில் சில

  1. மருள் – பிரபாகரன் சண்முக நாதன்                  விகடன். 12.04.2023

கதையின் தலைப்பை ஒரு அரிவாள் வடிவில் எழதப்பட்டுள்ளது.

தேர், திருவிழா,  நாவைத் தொங்கப் போட்டுக் கொண்டு, யார் மீதாவது இறங்கி ஆடும் சாமி, என கிராம வாடை அதிகம். இருந்தாலும் இப்படியும் இன்னும் இருக்கும் கிராமக் கதை, திருவிழாவைப் போல் சுவையாகவே நம்முள் இறங்குகிறது. அண்ணிக்கும் கருப்பர் இறங்க, அம்மாவுக்கும், அண்ணிக்குமான பிணக்கும் குறைய ஆரம்பித்தது.  பரவாயில்லையே. கருப்பன் வந்து இறங்கினால் இன்னும் நிறைய தமிழ் குடும்பங்கள் சண்டைகள், பிணக்குகள் நீங்கி, இன்றும் நன்றாக மகிழ்ச்சியுடன் இருக்கலாமே என்று தோன்றாமல் போகாது. சுவை குறையாமல் நகரும் எழுத்து. கதையின் தலைப்பை

  1. அப்பா என்றொரு மனுசன் ரிஷபன் குங்குமம் 14.04.23

சொல்லப் போனால் அப்பா என்று எப்பொழுது அழைத்திருக்கிறான். நினைவில் இல்லை.   நிறைய வீடுகளில் நிலவும் அப்பா – மகன் உறவு பற்றிய கதை “உனக்குப் புரியாது. சில விஷயங்கள்லாம் அனுபவிச்சாத்தான் புரியும்.” சீரான நடையில் இன்றைய குடும்பங்களில் பல அப்பாக்களின் நிலையை அழகாக உணர்த்தும் கதை.

 

  1. மேடம் இன்னிக்கு  சிவ பிரகாஷ்  

வேலைக்கான கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞன். தினமும் காதங்கள் பட்டுவாடா செய்ய வரும் புதிய தபால் ஊழியர் பெண். “மேடம், இன்னிக்கு ஏதாவது எனக்குத் தபால் உண்டா?.” கேட்பதும் அவளும் சளைக்காமல் ‘இல்லை’ என்று சொல்வதும் வழக்கமாகிவிடுகிறது

கொஞ்சம் கொஞ்சமாக அவளே அவனை விரும்ப ஆரம்பித்து விடுகிறாள். அவளே அவனுக்கு ‘ ஐ லவ் யூ’ என்று தன் கைப்பட எழுதி, கடிதத்தை அவனிடம் கொடுக்க விழைகிறாள்  இரண்டு மூன்று தினங்கள் அவனைப் பார்க்கவே முடிவதில்லை. பார்க்கின்ற அன்று அவள் அவனிடம் தன் கடிதத்தைக் கொடுக்க முற்படும் முன் அவன் சொல்லும் செய்தி தான் கதையின் ஹை லைட். .. அசத்தலாக எதுவும் இல்லை என்றாலும் படிக்கலாம். கதையின் இறுதி வரிகள், நாட்டின் இன்றைய நடப்பை சரியாகப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது சிறப்பு.

 

  1. சுவை – எஸ் பர்வீன் பானு      விகடன் 04.05.23

தை மழை, நெய் மழை. என்ற தொடக்கமே ஒரு  சுவை தருகிறது.  பரஸ்பரம் இருவரும் பொய் சொல்லிக் கொண்டார்கள். அது அவர்களுக்கும் தெரிந்திருந்தது. இந்த சமாதானப் பொய்கள் மட்டும் இல்லாமல் போயிடுந்தால், உலகம் எப்போதோ உப்பு இப்பாத கருவாடாய் நாறிப் போய் இருக்கும்.   இதற்கு மேல் சொல்வது   ‘சுவையைக்’ கெடுத்து விடக் கூடும். படித்துத்தான் பாருங்களேன்

 

  1. ஆண்களை நம்பாதே – சுப்ரஜா        குங்குமம் 07.04.23

கதையின் தலைப்பு கதையைபற்றிய ஒரு ஊகத்தை அளிக்கிறது.  கும்பகோணத்தில் தினம் கோவில் சென்றுவரும் மாதவி, அவள் விரும்பும் மாமன் மகன் நந்து. அவனுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. சென்றவன் தொடர்பே கொள்ளவில்லை. இவளே முகவரி தெரிந்துகொண்டு சந்திக்கிறாள். கடிதம் எழுதாததற்கு வேலைப்பளு காரணம் என்கிறான். நண்பர்களோ எப்போதும் உங்கள் புராணம் தான். உங்கள் சமையல் பற்றிதான் என்கிறார்கள். நந்துவிடம் ’இவங்களுக்கு சமைத்துப்போடவா நான் வருவேன். சற்று தூரத்தில் வீடு பார் என்று சொல்வதோடு கதை முடிகிறது.    நம் ஊகம் பொய்க்கிறது.

கதை சொல்லப்பட்டு இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது.

  1. ‘மங்க்கி கேட்ச் ‘ ஜார்ஜ் ஜோசப் உயிரெழுத்து  ஏப்ரல் 2023

குழந்தைப் பெண் தனுவைப் பற்றிய கதை இது.  பொதுவான வராந்தா கொண்ட மூன்று குடித்தனங்களில் சிறிய போர்ஷன். அதில் வசிக்கும் குழந்தைப் பெண் தனு. மூன்றரை வயதுக்குரிய புத்தி கூர்மை இல்லை. ஒன்றுமே தெரியவில்லை. மற்ற குழந்தைகள் படிக்கும் கான்வென்ட் பள்ளி சீட் தர மறுக்கிறது.

இப்படி சமூகத்தில், மற்றவர்களால் நிராகரிக்கப்படும் ஒரு பெண் குழந்தையை, அவள் முகத்தில் குறிபார்த்து, பெரிய ப்ளாஸ்டிக் பந்தை வைத்து. மங்கி கேட்ச ஆடும், மூன்று சிறுவர்களின் விளையாட்டான கதை மனங்களை நெகிழ வைக்கும் இப்படைப்பு. சொல்லப்பட்ட விதத்திலும் இக்கதை தனித்து நிற்கிறது.   ஏப்ரல் 2023 மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்வு செய்கிறேன் ஆசிரியர் ஜார்ஜ் ஜோசப் இன்னும் பல படைப்புக்கள் தருவார் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கிறார். 

இடம் பொருள் இலக்கியம் – 5. வவேசு

திருப்புமுனை ஆண்டு

வளரும் கவிதை: வீரத் துறவி விவேகானந்தர்!

1963 மிகவும் சிறப்புடைய ஆண்டு.  சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா நடந்த ஆண்டு. நாங்கள் ( நானும் எனது இணை சகோதரன் கணேசனும்) ஸ்ரீ இராமகிருஷ்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறோம். மறக்க முடியாத ஆண்டு. சுவாமிஜியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்காகப் பள்ளியே விழாக்கோலம் பூண்டிருந்தது. சுவாமிஜியின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் நாள் மிகப் பெரிய இளைஞர் ஊர்வலமும், சென்னை இராமகிருஷ்ணா மடத்தில் பல வேறு திறப்புவிழாக்களும் , கருத்தரங்கங்களும் போட்டிகளும் , கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருந்தன.

ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் நடத்தும் ஆண்களுக்கான மூன்று உயர்நிலைப் பள்ளிகளும். இரண்டு பெண்கள் பள்ளிகளும் எங்கள் பகுதியான தியாகராய நகரில் அமைந்து இருந்தன. அத்தனை பள்ளிகளும் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்த இருந்தன. எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த எங்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய அனுபவம். சிறு வகுப்புகளில் இருந்தே நானும் கணேசனும் மாணவர்க்கான போட்டிகளில் கலந்து கொள்வோம் பரிசுகளும் வாங்கியுள்ளோம். பொதுவாக நான் பேச்சுப் போட்டியிலும் கணேசன் ஓவியப் போட்டியிலும் பரிசுகள் பெறுவது வழக்கம்..

Kattabomman to Kamal Haasan, the meesaikkaara Tamizhans who preceded  Abhinandan | The News Minute

பள்ளி ஆண்டுவிழா நாடகங்களில் எங்கள் இருவர் பங்கும் எப்போதும் இருக்கும். ஏழாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் :வீரபாண்டிய கட்டபொம்மன் “ திரைப்படத்தில் வரும் கட்டபொம்மன் – ஜாக்ஸன் துரை உரையாடலை சிறப்பாக நடித்து ( நான் கட்டபொம்மன், கணேசன் ஜாக்ஸன்), விழாவுக்கு தலைமை வகித்த அன்றைய முதலமைச்சராக இருந்த கர்மவீர்ர் காமராஜர் கரங்களினாலே பதக்கமும் சான்றிதழும் பெற்றோம்.

பிறகு தலைமை உரையில், கட்டபொம்மனின் வீரத்தைப் புகழ்ந்து காமராஜர் பேசிய போது அது எங்களையே சொன்னது போல எண்ணிப் பெருமை அடைந்தோம். “ அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா ? அல்லது நீ மாமனா மச்சானா ? யாரைக் கேட்கிறாய் வரி ? எதற்குக் கேட்கிறாய் திறை ?” என்ற வரிகளும் , அதற்காக மீசையை முறுக்கிக் கொண்டதும், மஞ்சள் அரைப்பது போல் உடலை வளைத்துக் கைகளால் அம்மி அரைப்பது போல் ஆக்‌ஷன் காட்டியதும் பல நாட்கள் என் நெஞ்சிலிருந்து மறையவே இல்லை. நல்ல “டீக்”காக உடை அணிதவதில் ஆசை கொண்ட என் சகோதரன் கணேசனுக்கு இன்னொரு விதமான மகிழ்ச்சி.. “சூட்டும்” கோட்டும்” “ஹாட்டு”மாய் மேடையில் தோன்றும் வாய்ப்பு.

மேற்படி நாடகப் புகழ், எங்களைப் பள்ளியிலே மிக முக்கியப் புள்ளிகளாக மாற்றிவிட்டன. அன்று தொடங்கி அடுத்த ஓராண்டில், எந்த வகுப்பில் ஆசிரியர் வரவில்லை என்றாலோ அல்லது ஏதோ ஃப்ரீ அவர் என்றாலோ எங்களை அழைத்து அந்த வச்னங்களை பேசச் சொல்வார்கள். சில நேரங்களில் எங்கள் பள்ளியின் நீண்ட “காரிடாரில்” நாங்கள் எங்கள் வகுப்பறைக்குப் போகும் போது, வழியில் சில அறைகளில் உள்ள ஆசிரியர்கள், நாங்கள் செல்வதைப் பார்த்துவிட்டு , ”உள்ளே வந்து வசனம் பேசிவிட்டுப் போங்க” என்று ஆர்வத்தோடும் அன்போடும் கூப்பிடுவார்கள்.. பரிசாகச் சில நேரம் பால் பாயிண்ட் பேனாக்களும், சாக்லேட்டுகளும் கிடைத்ததுண்டு. இப்போது நினைத்தால் நடிகர் திலகம் பேசியதை விட அதிகம் தடவைகள் நாங்கள் பேசியுள்ளோம் என்று தோன்றுகிறது.

ஏழாம் வகுப்பைக் கடந்து எட்டாவது சென்ற பின் அந்த வருட பள்ளி ஆண்டுவிழாவுக்கு நாங்கள் இருவரும் ஏதேனும் கலை நிகழ்ச்சி தயாரித்து அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் விரும்பினார்கள். அதன் விளைவாக நகைச்சுவை நடிகர் கே ஏ. தங்கவேலு திரைப்படத்தில் நிகழ்த்திய “குசேலோபாக்கியானத்தை” நாங்கள் செய்தோம்.

சுவையான காமெடி உள்ள “ஸ்க்ரிப்ட்”. குசேலருக்கு 27 குழந்தைகள் என்று சொல்லும் பாகவதர் (தங்கவேலு)) “ அஸ்வினி பரணி கார்த்திகை .ரோகிணி மிருகசீர்ஷம் திருவாதிரை .என்று வேகமாகப் பாடி இறுதியில் “ரேவதி” என்று நிறுத்துவார். உடனே கூட்டத்திலிருந்து ஒரு சிறுமி எழுந்து அருகே வந்து “கூப்பிட்டேளா மாமா ?” என்பாள்  ( பள்ளியில் இந்த வேடத்தில் யார் நடிப்பது என்பதற்கும் போட்டி இருந்தது) 

குசேலர் வறுமையை விவரிக்கும் பாடல் ஒன்று வரும்

ஆடை இல்லாத ஓர் பாலகன் – திங்க

சீடை வேண்டுமென்று கேட்டனன்

கோடை இடி கேட்ட நாகம் போல் –தாயும்

குலுங்கிக் குலுங்கி அழுதனள்

 

இது போன்ற பாடல்களை கையில்  சிப்ளாக்கட்டை வைத்துக் கொண்டு நான் பாடுவேன் ; என் சகோதரன் கணேசன் பின்பாட்டு பாடுவான். இருவருக்கும் பஞ்சகச்ச ”மேக் அப்” கழுத்தில் மாலை எல்லாம் உண்டு.இதற்கும் பள்ளியில் பல இரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். இந்தப் பின்னணியில்தான் விவேகானந்தா நூற்றாண்டு விழா வந்த்து.

சுவாமி விவேகானந்தா நூற்றாண்டு விழாவுக்கு எங்கள் பள்ளி கீழ்க்கண்ட திட்டங்களை வகுத்தது.

1.மாணவர் பேரணி –என்.சி.சி. ஏ.சி.சி. யூனிட்கள். தி.நகர் ஆண்கள் மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் பனகல் பூங்காவிலிருந்து தொடங்கி மயிலை ஸ்ரீ இராமகிருஷ்னா மடம் வரை நடக்கும் பேரணி.

  1. எங்கள் பள்ளியில் ( ராமகிருஷ்ணா மெயின்) ஒரு அறிவியல் கண்காட்சி ( Science Exhibition) வைப்பது.

3.விவேகானந்தர் புகைப்படங்கள் கொண்ட கண்காட்சி நடத்துவது.

  1. சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துவது.
  2. கட்டுரை,பேச்சு, .பாட்டு, ஓவியப் போட்டிகள்.

இப்போது நினைத்துப் பார்த்தால்தான் பள்ளியில் படிக்கும் போது இளவயதில் இது எத்தனை பெரிய வாய்ப்பென்று புரிகிறது. ஆனால் இதன் முக்கியத்துவம் புரியாமலேயே நானும் என் சகோதரனும் மேற்சொன்ன அத்தனை நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டோம். மேலும் சாரணர் படையில் இருந்ததால் இராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று அங்கும் சேவைகள் செய்து நல்ல பெயரும் நற்சான்றிதழ்களும் பெற்றோம்.

எங்கள் வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை. கல்வி கலை, இலக்கியம், இசை நாடகம் அனைத்திலும் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் அன்றைய எங்கள் ஆசிரியர் வே.மு. மந்திரமூர்த்தி என்னும் “மந்திரம்” சார்.

எங்கள் இருவரோடு இன்னும் ஆறேழு மாணவர்களை ஒரு குழுவாக அமைத்து எங்களுக்கு இராமகிருஷ்ணா விவேகானந்தா இலக்கியத்தைக் கற்றுக் கொடுத்தவர். குருமகராஜ், சுவாமிஜி ஆகிய இருவர் மீதும் அப்பற்ற தூய பக்தி கொண்ட அவரைப் போன்ற ஒருவரைக் காண்பது மிக அரிது. சுவாமிஜியைப் பற்றிப் பேசும் போது விழிகள் மேலே செருக ஒருவித யோக நிலையில் ஆழ்ந்துவிடுவார்.  தனி மனித வாழ்க்கையிலும் மிக ஒழுக்கமானவர். மாணவர்களை அன்போடு வழிநடத்துவார். அவர் கோபித்துக் கொண்டு பேசியதை நாங்கள் பார்த்ததே இல்லை.  ஆங்கிலம் , வரலாறு , அரசியல், கணக்கு என அனைத்துப் பாடத்திலும் வகுப்பெடுக்கும் திறமை மிக்கவர். தமிழில் மிக அழகாகப் பேசக் கூடியவர். பாடல்கள் எழுதி இசையமைத்துப் பாடக் கூடியவர். விளையாட்டுத் திடலில் எங்களுக்குக் கால்பந்து கற்றுக் கொடுத்துள்ளார்.

“ஏன் சார் உங்களுக்கு கால்பந்து விளையாட்டு மிகவும் பிடித்துள்ளது ?” என்று கேட்ட போது அவர் சொன்ன பதிலை இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

“அது சுவாமிஜிக்கு பிடித்த விளையாட்டு” என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார். பிறகு ஒருநாள் சுவாமிஜியின் கட்டுரைகளைப் படித்துக் காட்டுகையில் , கால்பந்து விளையாட்டின் மூலமும் ஒருவன் எவ்வாறு மனஒருமைப்பாட்டைக் கற்றுக்கொள்ளலாம் என்ற வரிகளைச் சுட்டிக் காட்டினார். இராமகிருஷ்ணர் , சாரதாதேவி. சுவாமிஜி ஆகிய மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும்  பாடல்களாக வடித்துள்ளார்.

“கண் வளர்ந்தாரே கணப் பொழுதினிலே” என்ற நீலாம்பரியும், “கதாதரா உன்னைக் கலந்துறவாடும் காலம் வாராதா/” என்ற தர்பாரிகானடாவும் இன்றும் உயிர்ப்புள்ள பாடல்களாக என் நெஞ்சில் இசைத்துக் கொண்டுள்ளது.

இதையெல்லாம் சொல்ல ஒரு காரணம் உண்டு. தங்கவேலு நகைசுவை குசேலோபாக்கியானத்தைப் போட்டு பேர் வாங்கிய எங்களை வேறு தலைப்புக்குள் திருப்பியவர் மந்திரம் சார். அவர் எழுதிய ஸ்ரீ இராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாற்றுப் பாடல்களைக் கொண்டு எங்கள் குழு இசை சொற்பொழிவு நடத்தியது. நான் தான் கதை சொல்பவன்,. கணேசன், பிரபு, பாலகிருஷ்ணன் ஆகியோர் பாடல்கள் பாடுவார்கள். நிகழ்ச்சி சுமார் ஒன்றரை மணி நேரம் நிகழும்.

பாடல்களை இசையமைத்து அவர் கற்றுக் கொடுக்க நாங்கள் கற்றுக்கொண்டு பாடுவோம். பல நாட்கள் இதற்காக எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். பள்ளி விடுமுறை நாட்களில் மேற்கு மாம்பலத்தில் இருந்த அவரது இல்லத்திற்கே சென்று அந்த வீட்டுக் கிணற்றடியில் அமர்ந்து நாங்கள் பயிற்சி செய்துள்ளோம். அது போன்ற நேரத்தில் அவரது அன்னையார் அன்போடு எங்களுக்கு உணவு அளித்தது இன்றும் நெகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த இன்னிசை சொற்பொழிவு நிகழ்ச்சி அந்த ஆண்டு முழுவதும் பல்வேறு இடங்களிலும் பள்ளிகளிலும் இடம் பெற்றது. இப்போதும் நினைவில் பசுமையாக நிற்கும் பரவச அனுபவங்கள்..

1980 களில் தொடங்கி 1995 வரை தொலைக்காட்சியில் எனது பல நிகழ்ச்சிகளை அவர் பாராட்டியுள்ளார். எனது பாடல்களை கே.ஏ. ஜேசுதாஸ், எஸ்.பி.பி., சித்ரா போன்றவர்கள் பாடக் கேட்ட எனது ஆசிரியர், முதிர்ந்த வயதில் அவரை அவரது இல்லத்தில் சந்தித்த போது, நேரிலே பாராட்டி பெருமை கொண்டார்.

காலில் வீழ்ந்து வணங்கிய நான் “ எல்லாம் நீங்கள் போட்ட விதைதானே “ என்றேன்.

வழக்கமான சிரிப்போடு “ நல்ல நிலத்தில்தான் போட்டுள்ளேன் “ என்றார்.

அடுத்த ஒரு வாரத்தில் அவர் அமரரான செய்தி வந்தது. இந்தப் பதிவின் மூலம் மீண்டும் அஞ்சலி செலுத்துகிறேன்.

 

 

உலக இதிகாசங்கள் – இலியட் – எஸ் எஸ்

 

Achilles and Hector Painting by Evgenii Galaburda | Saatchi Artஅக்கிலிஸ் கிரேக்கருக்கு ஆதரவாகப் புறப்பட்டுவிட்டான் என்றதும் டிராய் நகரின் அழிவு நிச்சயம் என்பதை  உணர்ந்த டிராய் நகர வீரர்கள் அதர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். ஆனால் தன் வீரத்தின் மீது அதீத  நம்பிக்கை கொண்ட ஹெக்டர் மட்டும்   அக்கிலிஸ் வந்தாலும் சரி அவனுக்கு ஆதரவாகக் கடவுளர்கள் வந்தாலும் சரி கிரேக்கர் படை முழுவதையும் அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றான்.

ஹெக்டரின் நண்பனும் படைத்தளபதிகள் முதன்மையானவனுமான பாலிடாமஸ் ஹெக்டருக்கு அறிவுரை  கூறத் தொடங்கினான்.

” அகேம்னனனுக்கும் அகீலிசுக்கும் பிரச்சினை இருந்தவரை நமது வெற்றியில் சந்தேகமேயில்லை. ஆனால் அக்கிலிஸ் கொடிய அரக்கன். வீரர்களோடு மட்டும் அவன் போரை  முடிக்கமாட்டான் , நமது இலியம் நகரை எரித்து பெண்டு  பிள்ளைகளைக் கூண்டோடு  கொலை செய்யவும் தயங்காத கிராதகன் அவன். அதனால் நாம் இப்போது பின்வாங்கி நமது  கோட்டைக்குள் புகுந்து    பாதுகாப்பான முறையில் போர் செய்யவேண்டும். அவர்கள் கப்பலுக்கு அருகில் நாம் இருந்து போரிட்டால்  அவர்களுக்கு  நம்மைத் தாக்குவதும் அழிப்பதும் சுலபமாக இருக்கும்”

ஹெக்டர் இதைத் திட்டவட்டமாக நிராகரித்தான்.

“வெற்றி வாகை நம் கைக்கு அருகில் இருக்கும்போது பின்வாங்கிச் செல்வது கோழைத்தனம். கிரேக்கர்களை அவர்கள் கப்பலிலேயே கொன்று புதைக்க வேண்டும் என்று வெறியோடு நான் இருக்கிறேன். ஆக்கிலிசுடன் நேருக்கு நேர் மோதி அவனை அழிக்கவும் தயாராக இருக்கிறேன்”  என்று கூறி  ஹெக்டர்  வீரர்களைப் போருக்கு  தயார் நிலையில் இருக்கும்படி  ஆணையிட்டான்.

அதே சமயம் கிரேக்கப்படையில் அக்கிலிசின் வீர முழக்கம் காட்டுத்தீயைப் போல் பரவியது. ஹெக்டரின் தாக்குதலால் நிலை குலைந்து மரண காயத்துடன் துடித்துக் கொண்டிருந்த கிரேக்க வீரர்களும் தளபதிகளும் அந்தக் குரல் கேட்டதும் தங்களைக் காக்கத்  தானைத் தலைவன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் குரல் வந்த இடத்திற்கு ஓடோடி வந்தனர். இரு பெரும் அஜாக்ஸ் , ஓடிசியஸ் ஹெலனின் கணவன் மெலிசியஸ்  ஏன் அக்கிலியசை விரட்டி அடித்த அகெம்னனும்  வந்து சேர்ந்தனர்.

தன் கிரேக்கப் படையில் பல நண்பர்களைக் காணாத அக்கிலியஸ் துடித்தான். தன் கோபத்தினால் ஹெக்டர் தன் உற்ற நண்பன் பெட்ரோகுலசுடன்  எண்ணற்ற வீரர்களைக் கொன்றுவிட்டான் என்பதை அறிந்தது துயரத்தில் துடித்தான்.

” அருமை நண்பா ! அகெம்னன் ! நமக்குள் ஏற்பட்ட பிணக்கால் அதனால் ஏற்பட்ட என்கோபத்தால்  எண்ணற்ற நண்பர்கள் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன். என்னை மன்னித்துவிடு ! டிராய் நாட்டை அடிமைப்படுத்தி அந்தக் கொடியவன் ஹெக்டரின் உடலைச் சின்னாபின்னமாக்காமல் இனி நான் உறங்க மாட்டேன்.   உண்ணவும்   மாட்டேன்” என்று வீர சபதம் எடுத்தான்.

அகெம்னனும்  முன் வந்து, “நண்பா! இதற்குக் காரணம் என் தவறுதான். உன் பரிசுப் பொருள்களையும் பிரியமான பெண்ணையும் நான் கவர்ந்தது மன்னிக்க முடியாத செயல். உன்னிடம் அந்தப் பொருட்களையும்  பெண்ணையும் இப்போதே கொண்டு வந்து கொடுக்க ஆணையிடுகிறேன். உன் தலைமையில் நமது கிரேக்கப் படை நாம் இழந்த புகழை மீண்டும் அடையவேண்டும். டிரோஜன்களை அழிக்கவேண்டும். ஹெலனையும் மீட்கவேண்டும். ” என்று வேண்டி நின்றான். கிரேக்கப் படை வீரர்கள் அனைவரது உடலிலும் புதிய ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது. அனைவரும் ஒரே குரலில் ” வெற்றி நமதே ” என்று குரல் எழுப்பினர்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் தன் அகலக் கண்களால் விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜீயஸ்.  தனக்குப்  பிரியமான  அக்கிலிஸ் போர்க்களத்திற்குச் செல்ல முடிவு செய்துவிட்டான் என்பதை அறிந்ததும் இலியட் போர் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டார். .

இனி காற்றை அக்கிலிஸுக்குச் சாதகமாக வீச வேண்டும் என்றும்  ஜீயஸ்  தீர்மானித்தார்.

இருப்பினும் வெற்றிக் கனியைச்  சுலபமாகக் கிரேக்கர் அடைந்துவிடக்கூடாது என்பதில் அவர் எச்சரிக்கையாக இருந்தார்.

அதனால் அந்த  இலியட் மகா யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொண்ட அனைத்துக் கடவுளர்களையும் அழைத்தார்

.” கடவுளர்களான உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. மனிதர்கள் நடத்தும் யுத்தத்தில் நாம் நேரடியாகப் பங்கு கொள்வது சரியல்ல. இருப்பினும் உங்களில் சிலருக்குக் கிரேக்கர் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு டிராஜன் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.  நானே இரு அணிகளுக்கும் மாறி மாறி உதவி புரிந்து கொண்டிருந்தேன். ஆகவே நீங்கள் இரு அணிகளாகப் பிரிந்து தத்தம் அணிக்கு வெற்றி வாய்ப்பு பெற என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்யுங்கள். உங்கள் கட்சி வீரர்களைத் தயார் செய்யுங்கள்.  நான் உத்தரவிட்டதும் கடவுளர்களான நீங்கள் அனைவரும் போர்க்களத்திலிருந்து விலக வேண்டும்.  இறுதிப்போர்  மனிதர்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் போராகவே இருக்கவேண்டும். யார் யார்  மடியவேண்டும் என்பதை ஏற்கனவே தீர்மானித்த விதி முடிவு செய்யட்டும்.” என்று உத்தரவிட்டார்.

அவர் உத்தரவைக் கேட்ட கடவுளர்கள் இரு குழுக்களாகப் பிரிந்தனர்.  அதீனி , ஹீரா, பொசைடன் மற்றும் பலர் கிரேக்கரை ஆதரிக்கப் பறந்தனர். ஏரிஸ் , அப்போலோ , ஈனியாஸ் போன்றோர்  டிரோஜன்களுக்குத் துணையிருக்கச் சென்றனர்.

இருவரும் தங்கள் அணிகளுக்கு உற்சாகத்துடன் போர் வெறியையும் ஊட்டினர். விளைவு இதுவரை காணாத மிக மிக பயங்கரமான போருக்கு அந்தக் கடலும் கப்பல்களும் வீரர்களும் தயாராயினர்.

அக்கிலிஸ் ஹெக்டரைக் கொன்று அவன் ரத்தத்தைக் கடவுளுக்குப் பலி கொடுக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போர்க்களத்திற்கு விரைந்தான். ஆனால் ஹெக்டரைக் காக்க விரும்பிய அப்போலோ ஈனியாஸ் என்ற மற்றொரு கடவுளை அக்கிலிசுடன் போரிடத் தூண்டி அனுப்பினான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹீராவும் அதினியும் அக்கிலிசைக் காக்க திட்டம் தீட்டினர். உணவு உண்ண மறுத்த அக்கிலிசுக்கு அவனை அறியாமலேயே அமிர்தத்தையும் தேனையும் ஊட்டினர். அது அக்கிலிசுக்கு இன்னும் ஆயிரம் குதிரைகளின்  பலத்தை அளித்தது.  அதைத்  தவிர அக்கிலிசை மறைமுகமாக எந்தக் கடவுளும் தாக்காதவாறு துணை போகவேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

பசியுடன் இருக்கும் சிங்கம் குகையிலிருந்து புறப்பட்டு வேட்டைக்குச் செல்லப் புறப்பட்டதைப்போல அக்கிலிஸ் எதிரிப் படை மீது பாய்ந்தான். ஹெக்டரை அவன் கண்கள் வலை போட்டுத் தேடின. அனால் ஹெக்டருக்குப் பதில் ஈனியாஸ் கடவுள்  தன்னுடன் போரிட வருவதைக் கண்டு ஒரு கணம் திகைத்தாலும்  கொலை வெறியுடன் ஈனியாசைக் கொல்லப்  பாய்ந்தான்.தன்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் அக்கிலிசின்முன் தோல்வியுற்றுக் கிடப்பதைக் கண்ட ஈனியாஸ் தவித்தான். கிரேக்கர்களுக்கு உதவ வந்த பொசைடன் தங்கள் கடவுளர்களின் ஒருவனான  ஈனியாஸ் மனிதன் கையால் மரணமடையக் கூடாது என்ற எண்ணத்தால் ஒரு பனிப் படலத்தை உருவாக்கி  ஈனியாசை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.   இது கடவுளர்களின் சூழ்ச்சி என்பதை உணர்ந்துகொண்ட அக்கிலிஸ் தனது வீரர்களை முன்னேறித் தாக்குமாறு உத்தரவிட்டு ஹெக்டரைத் தேடி போர்க்களத்தின் மத்திக்கு விரைந்தான்.

போகும் வழியின் அக்கிலிஸின் வீரம் கொழுந்து விட்டு எரிந்தது. கண் நில் பட்ட அத்தனை டிரோஜன் வீரர்களைக் கொன்று குவித்தான். பல போர்களில் வீரம் காட்டிய  எண்ணற்ற டிரோஜன் தளபதிகளின் நெஞ்சில் இரக்கமின்றித் தன் ஈட்டியைப் பாய்ச்சி வாளால் வெட்டி   மடியச் செய்தான்.

ஹெக்டரின் தம்பிகளில் ஒருவன் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடும்போது அக்கிலிஸ் ஈட்டியால் அவன் வயிற்றில்  குத்தி குடலை உருவி மாலையாக அணிந்து கொண்டான்.  அதைக் கண்ணுக்கு முன் கண்ட ஹெக்டர் தம்பிக்காகக் கலங்கினாலும் அக்கிலிசை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்ற கோபத்தில் அவன்முன் பாய்ந்தான்.

ஹெக்டரின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த  அக்கிலிசும் அவனைக் கண்டதும் சிம்ம கர்ஜனை புரிந்தான்.

Two mythological heroes, Achilles and Hector, fight with swords. Vector  image isolated on white background. Stock Vector | Adobe Stock

இருவருக்கும் இடையே அதி பயங்கரமான போர் நிகழ்ந்தது.

குறி தவறாதத்  தன் ஈட்டியை அக்கிலிஸின் நெஞ்சுக்குக் குறிவைத்து முழு பலத்துடன் வீசினான். கிரேக்கப் படை ஒருகணம் ஸ்தம்பித்து நின்றது. அதை எதிர்பார்த்த அதீனிக் கடவுள் அந்த ஈட்டியை செயலற்றுப் போகும்படி செய்தாள்.

கடவுளால் காப்பாற்றப்பட்ட அக்கிலிஸ் கடுங்கோபத்துடன் ஹெக்டரை அழிக்க வாளை உயர்த்திக்  கொண்டு பாய்ந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை.  டிரோஜன் பக்கம் இருக்கும் கடவுளர்கள் அந்த நிமிடமே ஹெக்டர் அழிந்தான் என்று முடிவு கட்டினர். போர்க்களத்தின் பின்னணியிலிருந்து அப்போது அந்த இடத்துக்கு வந்த அப்போலோவும்  ஹெக்டர் இருக்கும் அபாய  நிலையக் கண்டு ஒருகணம்   திகைத்தான். சட்டென்று ஒரு பனிப் படலத்தை உருவாக்கி ஹெக்டரைத் தூக்கிக் கொண்டு போர்க் களத்தின் மற்றொரு கோடிக்குச் சென்றான்.

இது அப்போலோவின் வேலை என்பதைப் புரிந்துகொண்ட அக்கிலிஸ் அந்தக் கோபத்தை அங்கிருந்த மற்ற டிரோஜன் வீரர்களுடன் காட்டி அவர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். காலில் விழுந்து கெஞ்சி உயிர்ப்பிச்சை கேட்ட தளபதியின்  கல்லீரலில் குத்தி அக்கணமே மரணமடையச் செய்தான்.

அக்கிலிஸ் சென்ற இடமெல்லாம் கருப்பு மண் குருதியில் நனைந்து சிவப்பாகியது. ரத்த ஆறு ஓடியது.  நதிக் கடவுளின் மடியில் தஞ்சம் அடைந்திருந்த ஆயிரக் கணக்கான  டிரோஜன் வீரர்களை அக்கிலிஸ் கொன்று குவித்தான். அதனால் கோபம் கொண்ட நதிக்கடவுள் பெரும் வெள்ளத்துடன் அக்கிலிசை அழிக்க வந்தது. அதைக் கண்ட ஹீரா நெருப்புக் கடவுளை ஏவி நதியைத் துரத்தினாள் .

கடவுளர்களும் மனிதர்களும் சேர்ந்து அந்த பூமியை ரண பூமியாக்கிக் கொண்டிருந்தனர்  

(தொடரும்) 

 

 

 

 

 

   

சரித்திரம் பேசுகிறது! – யாரோ

 

இரண்டாம் ராஜேந்திரன்

இரண்டாம் இராஜேந்திர சோழன் – Rajendra Chola II - தமிழர் உலகம்

கொப்பத்து பரணி Probably first bharani in tamil literature – தித்திக்கும்  தேன் தமிழே !!!

முன்கதை: வருடம் 1054. கொப்பம் போர்க்களத்தில் சோழ-சாளுக்கிய போர் வெகு உக்கிரமாக நடந்தது. வெற்றியின் வாயிலில் இருந்த சோழ மன்னன் ராஜாதிராஜனின் உடல், சாளுக்கிய வில்லவர்களால் அம்புகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டு, அவன் யானை மீதிருந்து சாய்ந்தான். சோழப்படை தள்ளாடி, நிலை குலைந்தது. இனி தொடர்வோம்.

சோழநாட்டின் சக்கரவர்த்தி ராஜாதிராஜன், போர்க்களத்தில் யானை மீதிருந்து இறந்து வீழ்ந்ததைக் கண்ட சோழப்படை, திக்பிரமை அடைந்தது. புறங்காட்டி ஓடத் தொடங்கியது. சாளுக்கியப்படை பெரும் உற்சாகத்துடன் சோழப்படையைத் துரத்தத் தொடங்கியது. இதைப் பார்த்த அவன் தம்பியும், பட்டத்து இளவரசனுமான (இரண்டாம்) ராஜேந்திரன் தன் குதிரையிலிருந்து இறங்கினான். அண்ணன் விழுந்ததைக் கண்டு அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது ராஜாதிராஜன் உடலில் விழுந்து அவன் மீதிருந்து வழிந்து கொண்டிருந்த ரத்த ஊற்றைப் பெருக்கியது.

‘மன்னன் ராஜாதிராஜன், தனது மகன்களை விட்டு விட்டு, தம்பியான தன்னை பட்டத்து இளவரசனாக்கியது’ அவன் மனதில் அழியாதிருந்தது.

‘இந்த அன்புக்கு நான் கைம்மாறு செய்தே ஆக வேண்டும்.’ என்று எண்ணினான்.

‘சக்கரவர்த்தி ராஜராஜர், தந்தை ராஜேந்திரர் இவர்களது பெருமுயற்சியால் உலகறிய வளர்ந்த சோழப்பெருநாட்டுக்கு இப்படி ஒரு இடியா! நூறு ஆண்டுகளுக்கு முன், ராஜாதித்தர் தக்கோலத்தில் யானை மீது இறந்ததால், சோழர் அடைந்த பெருந்தோல்வி, ராஜேந்திரனின் மனக்கண்ணில் நிழலாடியது. அத்துடன், தந்தை முதலாம் ராஜேந்திரர் சொன்ன அறிவுரையும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவர் சொன்னது இது தான்:

‘ராஜாதித்தர் யானைமேல் இறந்தார். இறந்த உடனே, சோழப்படை நிலைகுலைந்து மாபெரும் தோல்வியைத் தழுவியது. அந்த நிலை நமக்கு என்றும் வாராமல், இளவரசர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து சோழநாட்டைக் காக்க வேண்டும். இது நீங்கள் அனைவரும் எனக்குத் தரும் சத்தியம். செய்வீர்களா?” – தந்தையின் இந்த அறிவுரை எண்ணத்தில் வந்ததும் இரண்டாம் ராஜேந்திரனின் நெஞ்சு உறுதியானது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். சாய்ந்திருந்த அண்ணன் தலையிலிருந்த அந்தப் புராதானமான சோழக்கிரீடத்தை மெல்ல எடுத்தான். அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டான். ‘சிவபெருமானே! உனது அருளால் எங்கள் சோழ குலம் வெற்றி பெறட்டும். இப்பொழுதே நான் இந்த சோழ முடியை ஏற்கிறேன்” என்று கூறினான்.

ராஜேந்திரன் தனது பட்டத்து யானை மேல் ஏறினான். சோழக்கிரீடத்தைத் தலையில் சூட்டிக்கொண்டான். பட்டாபிஷேக முழக்கமாகப் போர்முரசைக் கொட்டுவித்தான். புதிய மன்னனைக் கண்ட வீரர்கள் கிளர்த்தெழுந்து திரண்டனர். ராஜேந்திரன், படைகளை ஒருங்கிணைத்தான். “அஞ்சேல், அஞ்சேல்! வெற்றி நமதே “ என்று முழங்கி, “உயிரால் ஒன்றுபடுவோம். சோழநாட்டைக் காப்போம். வெற்றிவேல்! வீரவேல்!” என்று போரைத் தொடங்கினான்.

ராஜாதிராஜனைச் சூழ்ந்து வில்வளைத்து அவனைக் கொன்ற சாளுக்கிய வில்லாளர்கள் திடுக்கிட்டனர். ‘புலி வீழ்ந்தது .. கதை முடிந்தது என்று நினைத்தோமே.. இப்படி ஒரு பூதம் கிளம்பியிருக்கிறதே” என்று நொந்தனர். ஆகவமல்லன், அவர்களை விரைவில் மீண்டும் ஒன்று சேர்த்தான். “வீரர்களே! இது நமக்கு நல்ல சமயம். இந்த ‘இரண்டாம் ராஜேந்திரனை’யும் உங்கள் அம்புகளால் முடித்துவிட்டால், பிறகு இந்தச் சோழர்கள் தலையெடுக்கவே முடியாது” என்று கூவி தனது வில்லவர்களுக்கு உற்சாகம் அளித்து, ராஜேந்திரனுடைய யானை மீது அம்பு தொடுக்க ஆணையிட்டான். ஆகவமல்லனும் இந்த வில்லவர்களுடன் சேர்ந்து கொண்டான். மீண்டும் அம்பு மழை பொழியத் தொடங்கியது.

ராஜேந்திரனது யானையின் நெற்றியில் அம்புகள் தைத்தன. ஆகவமல்லனின் அம்புகள் ராஜேந்திரனின் குன்று போன்ற புஜத்திலும், தொடையிலும் தைத்துப் புண்படுத்தின. அருகிலிருந்த யானைகளிலிருந்த பல சோழ நாட்டு வீரர்களும் இறந்து விழுந்தனர்.
ராஜேந்திரன் ரத்தம் உடலில் வழிந்தது. புலி போல கர்ஜித்தான். தன் காயங்களைக் காட்டியே தன் வீரர்களுக்கு வீரமூட்டி ஆர்ப்பரித்துப் போரிட்டான். பல சாளுக்கிய படைத்தலைவர்களை வேலால் குத்திக் கொன்றான். சாளுக்கிய படைத்தலைவர்கள் ஜயசிங்கன், புலகேசி, தசபன்மன், அசோகன், ஆரையன், மொட்டையன், நன்னி நுளம்பன் என்ற அனைவரையும் கொன்றான். மகா காளி தாண்டவம் போல ராஜேந்திரன் சென்ற இடங்களெல்லாம் சாளுக்கிய பிணங்கள் விழுந்தன. ஆகவமல்லன் இந்த போர் உக்கிரத்தைக் கண்டு திரும்பி ஓடினான்.

பின்னாளில் வந்த ‘விக்கிரம சோழ உலாவில்’ இந்த கொப்பத்துப் போரைப்பற்றி கூறுகையில், “ஒரு களிறு கொண்டு ராஜேந்திரன் ஆயிரம் களிறுகளைக் கைப்பற்றினான்’ என்று கவிக்கிறது. மீதம் இருந்த சாளுக்கிய படைத்தலைவர்களான வன்னியத்தேவன், துத்தன், குண்டமை, மற்றும் சாளுக்கிய அரசகுமாரர்களும், போர்க்களத்தில் நிற்க முடியாமல் புறங்காட்டி ஓடினர். சாளுக்கிய பட்டத்து அரசியரான சாங்கப்பை, சத்தியவ்வை இருவரும் கைப்பற்றப்பட்டனர்.

ராஜேந்திரன், தோல்வியை வெற்றியாக்கி, தனது புது ஆட்சியைப் புகழ்ச்சியாக்கினான். சாளுக்கியர்கள் விட்டுச்சென்ற பட்டத்து யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், சாளுக்கியரின் வராகக் கொடியும், பெரும் நிதிக்குவை, மற்றும் பெருவாரியான ஆயுதங்கள் அனைத்தும் ராஜேந்திரனின் வசமானது. பகைவரது அம்புகள் தைத்த புண்கள் ஆறும் முன்னரே, அப்போர்க்களத்திலேயே மன்னனாக வீராபிஷேகம் செய்து முடி சூட்டிக்கொண்டான். ‘இதற்கு முன் எவரும் போர்க்களத்திலே முடி சூட்டிக்கொண்டதில்லை’ என்று சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் எழுதுகிறார். வெற்றிக்குப் பின், ராஜேந்திரன், கொல்லபுரம் (கோலாப்பூர்) என்ற சாளுக்கிய நகரில் வெற்றித்தூண் நிறுவினான்.

வாசகர்கள் ஒரு விஷயத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும். சோழர்களது வீரம் பார்த்தோம். அதே நேரம் சாளுக்கியர்களது வீரமும் திறம்படவே இருந்தது. வீழ்ந்தாலும், தாழ்ந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்து, பலமான சோழர்களை போருக்கு இழுத்தனர். முதலாம் ராஜேந்திரன் காலம் தொட்டு, பல சாளுக்கியப் போர்களை, சோழர்கள் சந்திக்க நேரிட்டது. தோல்வி, அவமானங்களால் சாளுக்கியர்கள் துவண்டு விழவில்லை. கொப்பத்து தோல்விக்குப் பிறகு, அவர்கள் விரைவில், மீண்டும் துள்ளி எழுந்து, துடிப்போடு சோழரைத் தாக்க முற்படுவார்களா? வருவார்கள். அவர்கள் மட்டுமல்ல, தெற்கே பாண்டியர்களும் துடிப்போடு வீரத்தைக் காட்டுவார்களா? காட்டுவார்கள். அந்தக்கதைகளையும், சோழநாட்டுக்கு வரவிருக்கும் சோதனைகளையும், சரித்திரம் விரைவில், விவரமாகப் பேசும்.

 

தவறான எண்” – அப்துல் ரஹ்மான்

கவிஞர் அப்துல் ரகுமான் எழுதிய “ஆலாபனை” கவிதை தொகுப்பில் “தவறான எண்” என்றொரு கவிதை

Aalaabanai | PDF

“தவறான எண்”

 

தற்செயலாய் ஒருநாள் தொலைபேசியில்

தவறான எண்ணில் சிக்கினான்

இறைவன்

“என்ன ஆச்சரியம்! இறைவனா?

நீ தேடினால் கிடைப்பதில்லை

இப்படித்தான் எதிர்பாராத வகையில்

சிக்கிக் கொள்கிறாய்

தொலைபேசியை வைத்துவிடாதே

பல நாட்களாகவே

என் இதயத்தைக் குடையும்

சில கேள்விகளை

உன்னிடம் கேட்க வேண்டும்” என்றேன்

கண்ணீரைப் போல்

கேள்விகள் பொங்கி கொண்டு வந்தன

எங்கள் காரியங்களில் குற்றம் பிடிப்பவனே!

எந்த சபிக்கப்பட்ட மண்ணால் எங்களை படைத்தாய்?

ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியை ஏன் வைத்தாய்?

உனக்கே பணிய மறுத்த சாத்தானை பலவீனமான எங்களின் எதிரியாக ஏன் ஆக்கினாய்?

அந்த பிரளயப் பொழுதில் தன் பேழையில் சேமிக்க நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்ததில் நோவா தவறு செய்துவிட்டாரா?

இங்கே என்ன நடக்கிறது என்று பார்!

இதோ! உனக்கு வீடு கட்டுவதற்காகவே உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!

இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா?கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?

இந்த ராம் யார்? ரஹும் யார்?

பெயரில் என்ன இருக்கிறது என்றவன் பேதை பெயரால் அல்லவா இத்தனை பிரச்சனைகள்?

பெயர்களில் நீ இருக்கிறாயா?

நீ அன்பு என்றால் இந்தப் பகை யார்?

நீ சாந்தி என்றால் இந்த வெறி யார்?

நீ ஆனந்தம் என்றால் இந்த துயரம் யார்?

நீ சுந்தரம் என்றால் இந்த அசிங்கம் யார்?

நீ உண்மை என்றால் இந்தப் பொய் யார்?

நீ ஒளி என்றால் இந்த இருள் யார்?

எரியும் வீடுகள் உன் தீபாராதனையா?

கொப்பூழ்க் கொடிப் பூக்கள் உனக்கு அர்ச்சனையா?

ரத்தம் உன் அபிஷேகமா?

இது எந்த மதம்? எந்த வேதம்?

இவர்களா உன் பக்தர்கள்?

தீமை அதிகரிக்கும் போதெல்லாம் அவதரிப்பேன் என்றாயே ?

இதை விடக் கொடிய காலம் ஏது?

எங்கே காணோம் உன் அவதாரம்?

இன்னும் எதற்காகப் பூக்களை உண்டாக்குகிறாய்?

இன்னும் எந்த நம்பிக்கையில் குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறாய்?

ஆலய மணி ஓசையும் மசூதியின் அழைப்பொலியும்

காற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம் இவர்களுக்கு எப்போது விளங்கும்?

கடைசியாகக் கேட்கிறேன்

நீ ஹிந்துவா? முஸ்லிமா?

“ராங் நம்பர்” என்ற பதிலோடு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சங்க இலக்கியம் ஓர் எளிய அறிமுகம் – பதிற்றுப் பத்து பாச்சுடர் வளவ. துரையன்

 

பதிற்றுப்பத்து ( 56-57) pathitrupathu in tamil - YouTubeபதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாறுகளை எடுத்துரைக்கின்றன.

உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டுப் பேர் பற்றிய வரலாறுகளே நமக்குக் கிடைக்கப்பெற்ற பதிற்றுப்பத்து 80 பாடல்கள் வாயிலாகப் பெறமுடிகிறது. இந்நூல் சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.

இந்நூலின் பாடல்கள் அக வாழ்வோடு இணைந்த புற வாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றியவை ஆகின்றன. சேர மன்னர்களின் குடியோம்பல் முறை, படைவன்மை, போர்த்திறம், பகையரசர்பால் பரிவு, காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும், கவிஞரைக் காக்கும் பண்பு, பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சித் திறன்களையும் சித்தரிக்கின்றன.
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1904ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.

இத்தொகுப்பு நூலில் குமட்டூர்க் கண்ணனார், பாலைக் கௌதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர்க் கிழார் ஆகிய புலவர்கள் பாடிய பாடல்கள் அடங்கி உள்ளன.

பதிற்றுப்பத்து

பதிற்றுப் பத்து என்னும் பெருங்கடலில் சில முத்துகளைக் காண்போம். ஏழாம் பத்தில் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வழியாதன் புகழ் பாடப்படுகிறது. அவன் மிகச்சிறந்த வீரன். வேள்விகள் செய்வதில் விருப்பம் கொண்டவன். அவன் வேள்வி செய்ததை,

”ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன் உறப்பெறற்கு, அவற்கு
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈந்து
புரோசு மயக்கி” என்று ஏழாம் பத்தின் பதிகம் [6—10] காட்டுகிறது.

கபிலர் பாடியுள்ள இந்த அடிகளில் வரும் ’புரோசு’ என்னும் சொல் வேள்வி செய்யும் புரோகிதரைக் குறிக்கும். அந்தப் புரோகிதர்கள் விரும்பியவாறு நடந்துகொண்டு அவர்களின் மனம் மயங்கச் செய்வதால் தன்னைப் ”புரோசு மயக்கி” என்று கூறிக் கொள்வதில் அம்மன்னன் பெருமை கொண்டானாம். ஓத்திர நெல் என்பது வேள்வியை நடத்தும் புரோகிதருக்குத் தரப்படும் நெல். அதாவது ஓதும் தொழிலைச் செய்பவருக்குத் தரப்படும் நெல்லாகும். ஆற்று நீர் பாய வெட்டப்பட்ட வாய்க்காலின் மடைவாயிலில் நீரைத் தடுக்க உதவும் பலகை “ஓ” எனப்படும். அந்த ஓ திறந்து நீர் பாய்ந்து விளைந்த நெல் ஓத்திர நெல்லாகும். அது ஒகந்தூர் என்னும் ஊரில் விளைந்தது. அந்நெல் விளையும் ஒகந்தூரையே சேர மன்னன் இறையிலியாக அளித்தானாம்.

பதிற்றுப் பத்தின் ஆறாம் பத்து ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் எனும் மன்னன் பற்றிக் கூறுகிறது. இதைப் பாடியவர் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் என்பவர் ஆவார். ”ஆடுகோட்பாடு” என்னும் அடைமொழி சேரலாதனின் ஆடல், வருடை ஆடு [மலையாடு] என்னும் இரு பொருள்களைத் தருவதாக உள்ளது. அம்மன்னன் ஆடல் கலையில் வல்லவனாக இருந்தான் என்பதை,

”முழா இமிழ்” துணங்கைக்குத் தழூஉம் புணை ஆக
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை ஈந்து” [பதிற்..பத்து—52:14-15]

எனும் பாடல் அடிகள் காட்டுகின்றன. அதாவது முழவு முழங்கிக் கொண்டிருக்கிறது. மகளிரும் மைந்தரும் புணை [கட்டுமரம்] போலக் கைகளால் தழுவிக் கொண்டு துணங்கைக் கூத்து ஆடினர். சேரமன்னனும் ஆடினான் என்பது பொருளாகும்.

இந்தச் சேர மன்னனின் வளமான வருடை ஆடுகள் கவர்ந்து செல்லப்பட்டு தண்டகாரணியப் பகுதிக்குக் கொண்டு போய் ஒளித்து வைக்கப்பட்டன. மன்னன் படை எடுத்துச் சென்று அவற்றை மீட்டு வந்து தொண்டிப் பகுதியில் வைத்து அவற்றைக் காத்தான். அதனாலும் அவன் ஆடுகோட்பாடு என்னும அடைமொழிக்கு உரியவன் ஆகிறான். இச்செய்தியை,

”தண்ட காரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்து” [ஆறாம் பத்து-பதிஉகம் 3-4]
என்னும் பாடல் அடிகள் காட்டுகின்றன.

பரணர் பாடி உள்ள ஐந்தாம் பத்தில் மகளிர் வருணனை இயல்பாக உள்ளது. அவர்களின் உச்சிக் கொண்டை கவரிமானின் கொண்டை முடிபோல முடித்து வைக்கப்பட்டிருந்ததாம். கார்மேகம் போல விரிந்த கூந்தலைக் கொண்டவர்கள். ஊஞ்சல் ஆடுவதை விரும்பும் செவ்விய அணிகலன்களை அணிந்தவர்கள். அவர்கள் காட்டின் பக்கம் வருகின்றனர். ஏன் தெரியுமா? உரலைப் போல பருத்த கால்களையும், விளங்கும் கொம்புகளையும் பெரிய கைகளையும் உடைய மத யானைகள் அங்கு புகுந்துள்ளன. அக்கூட்டத்தைக் காண அவர்கள் வந்துள்ளனர். ஆனால் அவற்றுள் புதியனவாய் வந்திருக்கும் இளங்களிறுகளாலே விரும்பப்படும் பிடி யானைகளை மட்டுமே எண்ணிப் பார்க்க விரும்புகின்றனர். எண்ண முயன்றும் முடியவில்லை. எனவே எண்ணுவதையே கைவிட்டுவிடுகின்றனர். இப்படி ஒரு சிறுகதையையே இப்பாடல் அடிகள் காட்டுகின்றன.

”கவா மூச்சிக் கார்விரி கூந்தல்
ஊசல் மேவல் சேழியை மகளிர்
உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்
பெருங்கை மதமாப் புகுதரின் அவற்றுள்
விருந்தின் வீழ்படி எண்ணுமுறை பெறாஅ”

ஐந்தாம் பத்தில் பரணர் பாடிய ஒரு பாடலுக்கு ’ஊன்சுவை அடிசில்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அரசன் மாற்றார் மீது படை எடுத்துச் செல்கிறான். மிகப்பெரிய மறவர் படை அவனுடன் கிளம்புகிறது. பாசறை அமைத்துத் தங்குகிறார்கள். அங்கு அரசனும் ஒரு வீரனாகக் கருதப்படுகிறான். அரசனுக்குச் சோறு வேறு, படை வீர்ருக்குச் சோறு வேறு என்று உணவைப் பிரித்துக் கொள்ளாது அனைவருக்கும் ஒரே சோறாக இடப்படும் ஊன்சுவை அடிசில் என்று இப்பாடல் காட்டுகிறது.

”நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சிய
பிணம் பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடிச்
சோறு வேறு உண்ணா ஊன்சுவை அடிசில்
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
முள்ளிடுபு அறியா ஏணித் தெய்வர்”

“பகைவர் நாடுகளைக் கைப்பற்றும் திண்மையான தோள்களை உடையவனும் களத்தில் பிணங்களை மிதித்துத் துணங்கைக் கூத்து ஆடியவனும் ஆகிய சேர மன்னன் அரசனுக்குரிய சோறு வேறென்னாது அனைவருக்கும் ஒன்றாகவே சமைத்த ஊன்குழையச் சமைத்துப் பெருவிருந்தளித்தான்” என்பது பொருளாகும்.

வழிச்செல்பவர்களுக்கு ஆங்காங்கே விளைந்திருக்கும் பலாப்பழங்கள் உணவாகின்றன. அப்பலாப் பழங்களின் புறத்தே வண்டினங்கள் மொய்த்திருக்கும். அவற்றின் இனிய சுவை மாறாதிருக்கும். அம்மரத்தின் பட்டைகள் அரிவாளால் அறுக்க முடியாதவை. தேன் பொருந்தியிருக்கும் அவை முட்டையின் வடிவம் பெற்றிருக்கும். இக்காட்சியைத்தான், ஆறாம் பத்தில் உள்ள மரம்படு தீன்கனி” என்னும் பாடல் அடிகள் காட்டுகின்றன.

”மிஞிறுபுறம் மூசவும் தீஞ்சுவை திரியாது
அரம்போழ் கல்லாமரம் படுதீங்கனி
அஞ்சேறு அமைந்த மூண்டை விளைபழம்
ஆறுசெல் மாக்கட்கு ஒய்தகை தடுக்கும்”
தீ, கடன், பகை ஆகிய மூன்றையும் மிச்சம் வைக்காமல் அறவே தீர்த்துவிட வேண்டும் எனச் சொல்வார்கள். சேரன் செங்குட்டுவன் அதன்படித் தன் பகைவரை வென்றபின் அது போதுமானது என்று நினைத்திருப்பான் அல்லன். எஞ்சியிருக்கும் பகையைத் தேடி அழித்திடுவான். அப்படி அவன் போரில் வெற்றி பெற்றதைப் புலவர் பாடி அவனிடமிருந்து களிறுகளையே பரிசிலாகப் பெறுவார்களாம்.

இதை, “அட்டானானே குட்டுவன் அடுதொறும்
பெறானாரே பரிசிலர் களீறே” [ப.பத்து-47]

என்னும் பாடல் அடிகள் காட்டுகின்றன. அதே பாடலில் விறலியர் ஆடும் மாளிகை பற்றி அழகான உவமைகளும் நிரம்பிய வருணனை இருக்கிறது. மலையின் மேற்பகுதியிலிருந்து அருவி வீழ்வது போல, மாடங்களிலிருந்து காற்றில் அசைந்தாடும் கொடிகள் தொங்கும். சுரைக் குடுக்கையில் நெய் ஊற்றி அதில் திரியைப் போட்டு விளக்கேற்றி இருப்பார்கள். ஊற்றப்பட்ட நெய்யானது சுரையிடத்தே நிரம்பி வழியும். அதனால் நெருப்புச் சுடர் மிகவும் பருத்துத் தோன்றுமாம்.

இதோ பாடல் அடிகள்
”நரைமிசை இழிதரும் அரவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவின்
சொரிசுரை கவரம் நெய்வழிபு உராயின்
பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல”

ஆறாம் பத்தில் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடலிலிருந்து சில அடிகளைப் பார்ப்போம்.

”செம்பொறிச் சிலம்பொடு அணிந்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
கோள்வல் முதலைய குண்டு கண்ணழகி
வானுற ஓங்கிய வலைந்து செய்புரிசை
ஒன்னாத் தெய்வர் முனைகெட விலங்கி
நின்னின் தந்த மன்பினயல் அல்லது
முன்னும் பின்னும் நின்முன்னோர் ஓம்பிய
எயில்முகப்படுத்தல் யாவது? வளையினும்
பிறுது ஆறு செல்பதி!….” [ப. பத்து—53]

மன்னனிடம், “நீ இந்த வழியில் செல்லாதே!, அங்குள்ள கோட்டை வாயிலில் சிலம்புகளும் தழையாடைகளும் தொங்கிக்கொண்டிருக்கும். அக்கோட்டை எந்திரப் பொறிகளால் காக்கப்படுகின்றது. வீழ்ந்தவரை உணவாக்கிக் கொள்ளும் முதலைகளை உடைய ஆழமும் அகலமும் உள்ள அகழி அங்கு உண்டு. உன் முன்னோர் முன்பு காத்து வந்த கோட்டைதான் அது. உன் படையை அங்கு செலுத்தல் எப்படி முடியும் எண்ணிப்பார்த்து வேறு வழிச்செல்வாயாக” என்று மன்னனுக்கே வழி கூறும் பாடல் அடிகளைப் புலவர் பாடுகிறார். மேலும் அவர் எவ்வழிச் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.

“வேறு வழியில் அணுகினால் அங்கே கணைய மரத்தால் பின்பக்கம் வலிமை சேர்க்கப்பட்டு இரும்பாணிகளாலே இறுகப் பிணிக்கப்பட்ட கதவுகளை உடைய கோட்டை இருக்கும். மத நீர் பெருகும் உன் யானைகள் அக்கதவுகளைக் கண்டால் முன்பு வேங்கை மரத்தைப் புலி என்று கருதி பாய்ந்து தாக்கி அழித்தது போல அக்கதவுகளை மோதிச் சாய்க்கும். அக்களிறுகள் உயர்ந்த தம் துதிக்கைகளைச் சுருட்டியபடி பாகரேந்தும் தோட்டியையும் மதியாது சென்று, வெற்றிக் கொடியானது அசைந்தாடக் கதவுகளைச் சிதைக்கும். அப்போது அவற்றை அடக்குதல் இயலாது” என்பதை இப்பாடல் அடிகள் காட்டுகின்றன.

”எழு உப்புறத் தரீஇப் பொன்பிணிப் பலகைக்
குழூஉ நிலைப் புறவின் கதவுமெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளிர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தொட்டி நீவி
மேய்படு வெல்கொடி நுடங்கத்
தாங்கலாளே ஆங்குநின் களிறே”

பதிற்றுப்பத்தில் உழவு பற்றியும் பேசப்படுகிறது. சேரமானின் செல்வம் பற்றிக் கூறும் 58-ஆம் பாடலில் இதைக் காணலாம்.

”வான வரம்பன் என்ப கானத்துக்
கரங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேயம் பெரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வண்கை வினைஞர்
சீருடைப் பல்பகடு ஒலிப்பப் பூட்டி
நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின்
அலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகண்கண் வைப்பின் நாடுகிழ வோனே”

”வானவரம்பன் என்னும் சேர மன்னன் நாட்டின் காட்டில் சில்வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவை அடிப்பகுதியில் இருக்கும் வேலமரங்கள் இருக்கும் புன்செய் நிலம் அது. அங்கு உழுது விதைத்துப் பயிர் செய்பவர்கள் வலிமையான கைகள் அமைந்த உழவர் பெருமக்கள் ஆவர். அவர்கள் பல எருதுகளை அவற்றின் கழுத்து மணிகள் ஒலிக்கப் பூட்டி உழுவர். அவர்கள் கலப்பைகளின் கொழு செல்லும் இடங்களில் கிடக்கும் ஒளிக்கதிர்களை உடைய மணிக் கற்களைப் பெறுவார்கள்” இதனால் சேர நாட்டின் செல்வச் செழிப்பையும் அறிய முடிகிறது.

இவ்வாறு பதிற்றுப் பத்து அக்கால மன்னர்களின் வீரம், கொடை, செல்வம் ஆகியவற்றைக் காட்டுகிறது.

 

 

குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி – சாய் நாத் கோவிந்தன்

 

 

குறுக்கெழுத்துப் போட்டி

 

இந்த மாதத்திற்கான  போட்டியின் இணைப்பு இங்கே !

https://beta.puthirmayam.com/crossword/0EFC5A54AF

சரியான விடை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலி நண்பருக்கு (குலுக்கல் முறையில்) ருபாய் 100 பரிசளிக்கப்படும்.

 

இடமிருந்து வலம்

குறிப்புகள்:

5. பிரணவ மந்திரம் (2)
6. நேரத்தை காட்டுவதற்கு பயன்படும் கையில் கட்டப்படும் ஒரு கருவி (1, 5)
7. மட்பாண்டங்கள், செங்கல் போன்றவை செய்ய பயன்படும் ஒருவகையான மண் வகை (4)
8. பாணம் – கணை – அஸ்த்திரம் (3)
9. நடன நடிகை சாந்தியின் பட்டப்பெயர் (அ) முன்பெயர் (3)
11. உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கை (3)
13. நேரம் தாண்டிச் செய்தல்; நேரம் கடத்துதல் (4)
16. ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப நாட்டிற்கு செலுத்தும் வரி (6)
17. இடித்துக்கொள்வதால் ஏற்படும் இனிமையற்ற உணர்வு (2)
18. முருகன் கையில் இருப்பது (2)

மேலிருந்து கீழ்

1. விலங்குகளின் முடியினைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு நெசவு இழை (4)
2. நீராவி, டீசல் இவற்றின் மூலமாக தண்டவாளத்தின் மேல் செல்லும் வண்டி (5)
3. தொடக்கத்தின் எதிர்பதம் (3)
4. பாவம் செய்பவர்கள் இங்கு செல்வார்களாம் (4)
10. நடன நடிகை சாந்தியின் பட்டப்பெயர் (அ) முன்பெயர் (3)
12. குற்றாலத்தில் உள்ள ஒன்பது அருவிகளில் ஒன்றாகும் (4)
14. செய்தி; தரவு, அறிவு எனும் கருத்துப் படிமங்களோடு தொடர்புள்ள சொல்லாகும் (4)
15. காடு (3)

 

சென்ற மாத குறுக்கெழுத்துப் போட்டியின்   சரியான விடை :

 

சரியாக விடை எழுதியவர்கள்  :

  1. ஹரி 
  2. கிருத்திகா சதீஷ் 
  3. ஆர்க்கே 
  4. ஜானகி சாய் 
  5. ராமமூர்த்தி 
  6. இந்திரா ராமநாதன் 
  7. ரேவதி ராமச்சந்திரன் 
  8. வைத்யநாதன் 
  9. கல்யாணராமன் 
  10. துரை தனபாலன் 
  11. ஜெயா ஸ்ரீராம் 
  12. நாகேந்திர பாரதி 

 

இவர்களில்  குலுக்கல் முறையில் வெற்றி பெற்று பரிசு ரூபாய் 100 பெறுபவர்: ஆர்க்கே 

வாழ்த்துகள்  ஆர்க்கே !! 

திரைக் கதம்பம் – ஏப்ரல் 2023 சிறகு ரவிச்சந்திரன்

ருத்ரன்

Rudhran Full Length Movie Tamil 2023 | Raghava Lawrence | Sarath Kumar | GV  Prakash | Kathiresan | J - YouTube

1950ல் வெளியாக வேண்டிய படம்! ஒரு விஷயம் பழசாக இருந்தா பரவாயில்லை! மொத்தமுமே பரணை தூசி தட்டிய விசயமா இருந்தா எப்படி? இது யூ டியூப் விமர்சகர் அருணின் வாக்கு. மற்றபடி ராகவா லாரன்ஸாகட்டும் பிரியா பவானி சங்கராகட்டும், சரத்குமாராகட்டும் கொடுத்த பாத்திரத்தை நேர்த்தியாகத்தான் செய்திருக்கிறார்கள். பல காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகரின் உழைப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.

பல மசாலா படங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தது போல் இருக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா. எரிச்சலைத் தரும் படம் – இண்டியா டுடே!

 

சொப்பனசுந்தரி

சொப்பன சுந்தரி - விமர்சனம் {2.75/5} - Soppana Sundari Cinema Movie Review : சொப்பன  சுந்தரி - பணமா? பாசமா? | Movie Reviews | Tamil movies| Tamil actor actress  gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and ...

லாட்டரியில் பம்பர் பரிசாகப் பெறும் மகிழுந்தினால் ஏற்படும் சிக்கல் தான் கதை!
மூன்று பெண்களின் அதிரடி பாய்ச்சலில் சற்று நகைச்சுவையை தூவி நம்மை சூதில்லாமல் கவ்விக் கொள்கிறது படம்! திரைக்கதையின் மேல் வைத்த பெருத்த நம்பிக்கை வீண் போகவில்லை! பரிசாகக் கிடைத்த மகிழுந்தின் பின்னால் இத்தனை சிக்கல் என்று எதிர்பார்க்காமல் மாட்டிக் கொள்ளும் மூன்று பெண்கள். சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை – தி ஹிந்து

செமை காமெடி குத்து. ஆனால் நம்மை விழ வைக்கவில்லை. யாரும் நடிப்பில் சோடை போகவில்லை. டெக்னிகல் குழு சில இடங்களில் படத்தை உயர்த்துகிறது. குறிப்பாக இசை செமை! இயக்குனர் நம்மை சாய்க்க செய்த முயற்சி புஸ்!– டைம்ஸ் ஆஃப் இந்தியா.
திருவின் குரல்

எந்த லாஜிக்கும் இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுக்கப்பட்ட படம். இதில் அருள்நிதி மட்டும் போராடி என்ன பயன் – ஃபில்மி கிராஃப்ட் அருண்! சுவையான தருணங்களை சரியாக மீட்டெடுக்கத் தவறி விட்ட படம் என்பது டைம்ஸின் வாதம்! அரசி மருத்துவமனையில் நடக்கும் அராஜகங்களைத் தட்டிக் கேட்கும் இளைஞனுக்கு நேரும் சிக்கல்கள் தான் படம். ஆனாலும் அதை முறையாகச் சொல்லத் தெரியவில்லை இயக்குனர் ஹரிஷ் பிரபுவால் – தி ஹிந்து!

சுவாரஸ்யமான படமாக ஆரம்பித்து ஓரளவு நம்மைக் கட்டிப் போட்டு முடிச்சை இறுக்காமல் தளர விட்டு விட்டது படம். கடைசி பகுதியில் சற்று ஒன்ற வைக்கிறது. ஆனால் விட்டது விழலாகி விட்டது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

 

கப்ஸா ( கன்னடம் / தமிழ் )

கன்னட நடிகர் உபேந்திரா நடித்துள்ள கப்ஸா திரைப்படம் மார்ச் 17 ஆம் தேதி  திரையரங்குகளில் வர உள்ளது. | actor Shriya Saran shared about her character  - Tamil Filmibeat

விடுதலைப் போராட்ட வீரரின் மகன் நிழல் உலக் தாதாவாகும் கதை! சுவையான திருப்பங்கள் இந்தப் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன! –ஷ்ரேயா சரனின் மதுமதி பாத்திரம் உணர்வுகளை உள்ளடக்கியதாக இருப்பது ஈர்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
கேஜிஎஃப்பை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை – இண்டியன் எக்ஸ்பிரஸ்!
சில திருப்பங்கள் ரசிக்க வைக்கின்றன. மதிப்பெண் எழுபது விழுக்காடு -இந்தியா டைம்ஸ்!


ஆகஸ்டு 16 1947

August 16 1947' திரை விமர்சனம்

சுவையற்ற திரைக்கதை படத்தைக் கொன்று விடுகிறது! யாராவது இயக்குனருக்கு சொல்லியிருக்கலாம்..எழுதியதை எல்லாம் எடுக்க வேண்டியதில்லை! எடுத்ததை எல்லாம் காட்ட வேண்டியதில்லை என்று! பொன்.குமாருக்கு யாராவது சினிமா எப்படி எடுக்கப்பட வேண்டும் என்றுகற்றுக் கொடுக்க வேண்டும்! – தி ஹிந்து.
சுதந்திர காலத்து உடைகள், வீடுகள், கிராமத் தெருக்கள் என்று அசத்தியிருக்கிறது கலை இயக்கம். கௌதம் கார்த்திக் ஓரளவு நடிக்கிறார். புதுமுகம் ரேவதி இன்னொரு மண் வாசனை. காட்சிகளை இழுத்துப் பிடிக்காமல் இழுவையாக ஆக்கியது பெரும் குறை. மையக் கரு புதுமை. அது மட்டும் தான்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மக்களுக்குப் புரியாதோ எனும் பயத்தில் விளக்கவுரைகளாக காட்சிகளை எடுத்ததில் இப்படத்தைக் கெடுத்து விட்டது – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

தஸரா ( தெலுங்கு/ தமிழ் )

மூன்றாவது பாடலின் தமிழ் வெர்ஷனை வெளியிட்ட 'தசரா' படக்குழு | Tamil cinema  dasara movie update

கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொள்ளும் படங்கள் சமீபமாக நல்ல கதைகளைக் கொண்டதாக இருப்பது ஆறுதல். இதிலும் செமை காட்டு காட்டி இருக்கிறார் நடிப்பில்! முரட்டுத் தனமான நட்பு என்பது திரைக்கு புதுசு! நானி அருமையாக நடித்திருக்கிறார்! கண்ணுக்கு அழகாக படமாக்கப்பட்ட படம். அடுத்து என்ன எனும் ஆர்வத்தைத் தூண்டும் காட்சி அமைப்புகள்! இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா தாக்குப் பிடிப்பார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

நல்ல வேகத்தில் போய் சமயத்தில் தடம் புரளும் படம் – இந்தியன் எக்ஸ்பிரஸ்!
சாதி அரசியலை கையிலெடுத்து அருமையான பங்களிப்பை நானி, கீர்த்தி சுரேஷிடம் வாங்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள் – தி ஹிந்து!

சாகுந்தலம் ( தமிழ் / தெலுங்கு)

சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு

நோய் வாய்ப்பட்டு ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்த சமந்தா ரூத் பிரபு நடித்த படம்! சிறந்த சினிமா அனுபவம். ஆனால் சொன்ன விதம் சற்று காலை வாரி விடுகிறது! சாகுந்தலத்தின் பார்வையாள அனுபவம், திரை அரங்குகளில் பார்க்கும்போது சிறப்பாக இருக்கும்! பிரம்மாண்ட ஜோடனைகள், தீராத விழி விரியும் போர்க் காட்சிகள்; சிறப்பான உடை அலங்காரங்கள்; இவை எல்லாம் சேர்ந்து ரசிகனை ஒரு மாயா உலகத்திற்கு இட்டுச் செல்லும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

சமந்தா ரூத் பிரபு சகுந்தலையாக நெருங்கி வருகிறார். படம் அவரைத் தாண்டி சராசரிக்கும் கீழே இருந்து, ரசிகனை பாதாளத்திற்கு இழுத்து விடுகிறது! திரைக்கதையோ, வி எஃப் எக்ஸோ, முப்பரிமாணமோ இதற்கான முதன்மைக் காரணங்கள்! இயக்குனர் குணசேகருக்கு ஆசை இருக்கும் அளவுக்கு வித்தை இல்லை! அசகாய சூரர்களின் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் தமிழ் ரசிகர்கள் இதையும் பார்ப்பார்கள் எனும் அசட்டு தைரியத்தில் எடுத்து காட்சிகளில் பிரம்மாண்டம்! கதையில் கோட்டை என்று ஆகி விட்டது!-தி ஹிந்து

எதுவுமே சரியில்லை சமந்தாவைத் தவிர – ஹிந்துஸ்தான் டைம்ஸ்!

அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்த்தா பரதனாக கட்டக் கடைசியில் வரும் காட்சிகள் மட்டும் ஜுவாலையாக புறப்பட்டு நம்மை இழுக்கின்றன! – இண்டியன் எக்ஸ்பிரஸ்!

யாத்திசை

யாத்திசை - தமிழ் விக்கிப்பீடியா

பெரும் பொருட் செலவு வேண்டாம். நட்சத்திர பங்களிப்பு வேண்டாம். துவளாத இறுக்கமான திரைக்கதையும் காட்சிகளும் போதும்! ஒரு நல்ல சரித்திரப் படத்தை எடுக்க என்று நிரூபித்திருக்கிறது யாத்திசை! ரணதீர பாண்டியனை எதிர்த்து போராடும் எய்னார் குல வீரன் கோத்தியின் பயணம் தான் கதை. சேயோன் மிரட்டுகிறார் கோத்தியாக! இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வ காட்சிகளும், பாண்டிய எய்னார் போர் காட்சிகளும் இருந்திருந்தால் வேறு தளத்திற்குப் போயிருக்கும் படம். ஆனாலும் எடுத்த வரையில் சரித்திரப் பட ரசிகர்களுக்கு இது தெவிட்டாத தினை மாவும் தேனும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

சொல்ல வந்ததை சமரசம் இல்லாமல் சொல்லியே தீர வேண்டும் எனும் உறுதியுடன் செயல் பட்டிருக்கிறது யாத்திசை குழு! சில இடங்களில் மணிரத்திரனத்தின் நளினத்தையும் அழகியலையும் இழக்கிறது என்றாலும், தன் பலத்தில் உயரப் பறக்கிறது தரணி ராசேந்திரனின் இயக்கக் கொடி! தரையில் கால்களை வைத்து படமெடுக்கும் யதார்த்த சினிமாவுக்கு இன்னொரு வரவாக வந்திருக்கிறது இந்தக் குழு! – தி ஹிந்து!
ஒரு அரசனின் அழுக்குப் பக்கங்களை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கிறது யாத்திசை! சக்ரவர்த்தியின் இசைக் கோர்வை, மென் துடிப்புகளை மீட்டாமல், பட்டவர்த்தனமாக இருப்பது ஒரு குறை. அது பல சமயங்களில் படத்தை கை நழுவ விட்டு விடுகிறது. – சினிமா எக்ஸ்பிரஸ்!

தெய்வ மச்சான்

விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Virakesari.lk

ரசிக்கக் கூடிய படம். பார்த்து முடித்தபின் புன்னகை முகங்களில் இருந்து அகலாது! பல படங்கள், பாசமலர் தொட்டு அண்ணன் தங்கை பாசத்தை தழுவினாலும், இதில் சேர்க்கப்பட்டிருக்கும் நகைச்சுவை வேற லெவல்! தபால் கார்த்தி ( விமல்) தங்கைக்கு ( அனிதா சம்பத்) மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஏற்படும் சங்கடங்கள் தான் கதை! ஒரு வழியாக மாப்பிள்ளை கிடைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் கனவில் வரும் ராட்சச குதிரை வீரனின் எச்சரிக்கையால் மனம் துவளும் கார்த்தி என்ன செய்தான் என்பது க்ளைமேக்ஸ்!
ஒரு பாசக்கதையை எப்படிச் சொல்ல வேண்டும் என்று இயக்குனர் மார்ட்டினுக்கு தெரிந்திருக்கிறது. முதல் பாதியின் வறட்சியை பின் பாதியில் பால சரவணனுடன், விமல் சேரும் காட்சிகளில் நகைச்சுவையை அள்ளித் தெளித்து ஈடு கட்டி இருக்கிறார். சபாஷ்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

எல்லாம் சரி!ஆனால் இருக்கும் தருணங்களை நகைச்சுவை வீணையால் மீட்டத் தவறி விட்டார் இயக்குனர். கல்யாண விருந்தாக மாறியிருக்க வேண்டியது கையேந்தி பவனாக மாறி விட்டது! – சினிமா எக்ஸ்பிரஸ்.

யானை முகத்தான்

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'யானை முகத்தான்' படத்தின் ரிலீஸ் தேதி  அப்டேட்..!!! - Cinemamedai

இயக்குனர் ரெஜிஷ்ஷின் படம் ஒரு மாஸ்டர் பீஸ்! அதன் பலங்கள் கனமான வசனங்களும், நல்ல உணர்வுகளும்! பழைய படங்களான அறை எண் 305ல் கடவுள், வினோதய சித்தம் போன்றவைகளை நினைவுக்கு கொண்டு வந்தாலும், விழிகளை திரையை விட்டு அகலா வண்ணம் இட்டுச் செல்லும் திரைக்கதை சூப்பர்! ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி என்று மூவரும் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள். இசையில் தவழும் மெலடிகள் உயர்த்துகின்றன இப்படத்தை! -டைம்ஸ்!

உயர்ந்த லட்சியங்களோடு எடுக்கப்பட்ட படம், பாதி கிணறு தான் தாண்டி இருக்கிறது! ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார் எனும் தத்துவம் சரிதான்! ரசிகனுக்குள் ரசனை இருக்கிறது என்று யோசிக்கத் தவறி விட்டார்கள்! -சினிமா எக்ஸ்பிரஸ்.
இறைவனின் முகவரி சொல்லும் யானை முகத்தான்- தினமணி!

தமிழரசன்

Tamilarasan

கதை எழுதும்போதே இது கைவிடப்பட்ட, ஒரு மருத்துவ அதிசயம் நேராமல் பிழைக்காத நோயாளி என்று தெரிந்திருக்க வேண்டும் இயக்குனர் பாபு யோகேஸ்வரனுக்கு! படமாக எடுத்து எவ்வளவு பிராண வாயு கொடுத்தாலும் பலனில்லாமல் உயிரை விட்டு விடுகிறது. எண்ணற்ற கதாபாத்திரங்கள்! அதில் நடித்த விஜய் ஆன்டனியோ, சங்கீதாவோ, சுரேஷ் கோபியோ கொடுத்த பாத்திரத்தில் உயிரைக் கொடுத்து நடித்தாலும், படம் மரணித்துப் போவதை தடுக்க முடியவில்லை. யோகி பாபு இந்தப் படத்தில் தேவையில்லை. அவரை ஒட்டாவிட்டால் கூட ஒட்ட வைத்தால் படம் ஓடும் எனும் மூட நம்பிக்கை, இதில் வெளிறிப் போய் விட்டது. பாதி படம் வரை பாத்திர அறிமுகத்தில் செலவிட்டு விட்டு தரையிறங்கிய விமானம் போல அங்கேயே நிற்கிறது படம். காசை வீணாக்க வேண்டாம் வேறு ஒரு நல்ல படத்தை இரண்டாம் முறை பாருங்கள் – ஃபிலிம் கிராஃப்ட் அருண்!

எந்த வித ஆய்வும் செய்யாமல், அநியாயமாக சம்பாதிக்கும் மருத்துவமனையின் முதன்மை மருத்துவரைக் கடத்தினால் போதும் எனும் அசட்டு நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம். ஊசி மருந்து உள்ளே சொட்டு சொட்டாகப் போவது போல அலுப்பை விதைக்கிறது படம்!– டைம்ஸ் ஆஃப் இந்தியா.

விஜய் ஆன்டனிதான் இதயம். ஆனால் மற்ற அவயங்கள் செயல்படவே இல்லை! குட்டை குழப்பலாக தமிழரசன். -சினிமா எக்ஸ்பிரஸ்.

புர்க்கா

கலையரசன் நடிக்கும் 'புர்கா' படத்தின் முன்னோட்டம் வெளியீடு | Virakesari.lk

மணமான ஒரு வாரத்தில் விதவையாகும் நஜ்மாவைத் தேடி வரும் அன்னிய இளைஞன் சூர்யா! செவிலியாக தன் கடமையைச் செய்ய, கலவரத்தில் கத்திக் குத்து பட்ட அவனுக்கு சிகிச்சை அளிக்கப் போக, அவர்களுக்குள் நடக்கும் உரையாடலில், இஸ்லாமிய கொடிய விதிமுறைகள் பேசு பொருளாகி, இறுதியில் நஜ்மா தன் துக்க தருணங்களைக் குறைத்து, தன் கனவை நோக்கி பயணப்பட்டாளா என்பது முடிச்சு!

கலையரசன் சூர்யாவாகவும் மிர்னா மேனன் நஜ்மாவாகவும் நடிப்பில் தங்கம் வென்றிருக்கிறார்கள். ஆச்சர்யமில்லை! இது நியூ யார்க் திரைப்படப் போட்டியில் பரிசு வென்ற படம். ஆஹா ஓடிடி தளத்தில் இந்த மாதம் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2

உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் செய்த வசூல்

Ponniyin Selvan 2 Review : விறுவிறுப்பான முதல் பாதி: எதிர்பாராத திருப்பங்கள்: கல்கியின் காவியத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்த மணிரத்னம்

எந்த ஒரு நடிகரின் ரசிகரும் குறை சொல்ல முடியாதபடி அனைவருக்கும் வெட்டி தைக்கப்பட்ட சட்டை போலப் பாத்திரங்கள். அதில் பொருந்திப் போகும் கலைஞர்கள். இது மணிரத்தினத்தின் டச்!

ஆனாலும் சீயான் விக்ரம், தன் உழைப்பை பளிச்சிட வைக்கிறார் நடிப்பில். மகா கலைஞன் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். அடுத்து ஒரு பார்வையில் வன்மத்தை காட்டியிருக்கும் நந்தினி ஐஸ்வர்யா ராய். இன்னும் நாயக அந்தஸ்த்திற்கு உயர்ந்திருக்கும் இசைப்புயலின் ‘அகநக’ தெறிக்க விடுகிறது. முதல் பாகத்தை விட ஈர்ப்பு அதிகம், கதையை படித்தாலும் படிக்காவிட்டாலும்! ஒரு குறை! ரகுமான் எனும் நடிகரை சொந்தக் குரலில் பேச விட்டிருக்கலாம். மாற்று கட்டைக் குரல் ஒட்டவேயில்லை! -ஃபில்மி கிராஃப்ட் அருண்!

முதல் பாகத்தில் ஆயத்தங்களைக் காட்டி விட்டு கதையின் இதயத்தைத் துளைத்திருக்கிறார் மணிரத்தினம். வந்தியத்தேவன் குந்தவை காதல் காட்சிகள் நெல்லை அல்வா! பின்புலத்தில் ஒலிக்கும் பாடலும் இசையும் நெய் முந்திரி! கரிகாலன் நந்தினி காட்சிகள் விக்ரம் ஐஸ்வர்யா அருகு காட்சிகள், இன்னமும் ரவிவர்மனால் வேறு தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. போதும் சொந்தக் கதை என்று நடுவில் ஒரு போர் காட்சியை பரபரப்புக்காக இணைத்திருக்கிறார் மணி! நாவலைப் போலவே ஈரத்துணி தான் க்ளைமேக்ஸ்! அதிலும் கொஞ்சம் மொடமொடப்பை விதைக்க முயன்றிருக்கிறார்கள் மணி, ஜெயமோகன், குமரவேல் கூட்டணியர்! மூன்றரை நட்சத்திர மதிப்பீடு ( 70 விழுக்காடு) கொடுத்திருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா!

நாவலைப் படித்தவர்களுக்கு சற்று ஏமாற்றம் வரலாம். ஆனால் சினிமா எனும் ஊடகத்தைப் புரிந்து வைத்திருக்கும் மணிரத்தினம், திரையில் இதெல்லாம் எடுபடாது என்பதை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார். அதனால் எதை எப்படிக் காட்ட வேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.

உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை வைத்த வகையில் பொ செ 2 இந்த நூற்றாண்டின் சரியான சரித்திர படமாக மாறும் வாய்ப்பு உள்ளது. கிரீன் மேட் காட்சிகளை நாடாமல் அச்சு அசல் சோழ தேசம் போல நம்ப வைக்கும் களங்களைத் தேடிப் படம் பிடித்தது இயக்குனரின் நேர்மையைக் காட்டுகிறது. ஒரு வினாடி கூட தொய்வில்லாத திரைக்கதை வெற்றிப் பதாகையை உயர்த்திப் பிடித்திருக்கிறது – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

பாகுபலியை விட சிறந்த படம் – இண்டியா டுடே.
பாகம் ஒன்றை விட இன்னும் கச்சிதமாக பரபரப்பாக இருக்கிறது பொ செ 2. நேர்க்கோட்டில் பயணிக்கு இந்த பாகம் இன்னும் சரியான புரிதலைக் கொடுக்கிறது! ரவிவர்மனின் ஓளிப்பதிவு அழகியலை திகட்டும் அளவிற்கு ஊட்டுகிறது! – என் டி டிவி.

இந்த மாதக் கவிஞர் – கே பி காமாட்சி (காமாட்சிசுந்தரம்) – முனைவர் தென்காசி கணேசன்

                           K.P.Kamatchi [Villain Actor-Poet] | Antru Kanda MugamK.P.Kamatchi [Villain Actor-Poet] | Antru Kanda Mugam

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இணையான பாடலாசிரியர் என்று தயாரிப்பாளர் ஏ வி மெய்யப்ப செட்டியார் கூறியது

கண்ணதாசனை விட என் மனதில் நின்றவர் என்று இசை அமைப்பாளர சுதர்சனம்
கூறியது

இந்தக் கவிஞரின் பாடல் வரிகளை மனத்தில் உள்வாங்கி, இசைகேற்ப பாடல் எழுதும் ரகசியத்தைக் கற்றுக்கொண்டேன் – வாலிபக் கவிஞர் வாலி கூறியது.

இவர் இறந்த செய்தியைக் கேட்டு ஓடி வந்து, பின்னர், இடு காட்டுக்கு அவரின் உடலைச் சுமந்த நால்வரில் இருவர் – நடிகர்திலகம் மற்றும் மக்கள் திலகம்.

இத்தனைப் பெருமைகளும் கண்டவர் தான் கவிஞர் கே பி காமாட்சி.

காஞ்சிபுரம் அருகே காவேரிப்பாக்கததில் பிறந்து, நாடகக் குழுவில் சிறுவயது முதலே நடித்தவர். 22 வயதிற்குள், 1000 மேடைகளில் நடித்தவர். பள்ளி செல்லாதவர். அற்புதமான நடிகர் – பின்னாட்களில் கவிஞரானார்.

சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் இவர் மேற்கத்திய உடையில் நடித்த நடிப்பைப் பார்த்த பணக்கார முதலியார் ஒருவர், தனது மகளை இவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.

பராசக்தியில், சிவாஜியால் தாக்கப்பட்டு,கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாதே என்ற திட்டு வாங்கிய பூசாரியாக நடித்தவர் இவர்தான்.

நாடக மேடையை விட்டு, அப்புறம் பாடல்கள எழுதத் தொடங்கினார்.

புதுப் பெண்ணின் மனத்தைத் தொட்டுப் போறவரே
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டு போங்க
இள மனதை தூண்டிவிட்டுப் போறவரே
அந்த மர்மத்தைச் சொல்லிவிட்டு போங்க

என்ற பராசக்தி படப்பாடல், அதில் அறிமுகமான நடிகர் திலகம் போலவே, மக்கள் மனதில் இன்றும் இருக்கிறது.

அதேபோல, ஶ்ரீதர் – சிவாஜி இணையில் அமரதீபம் படத்தில் இடம்பெற்ற

தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு

பூங்கொடியே நீ சொல்லுவாய்
பூங்காற்றே நீ சொல்லுவாய்

என்ற பாடல் மெட்டும் அழகு. வரிகளும் அழகு. பாடிய ராஜா, சுசீலாவும் அழகு. இளமை துள்ளும் சிவாஜி சாவித்திரியும் கொள்ளை அழகு.

தொடர்ந்து, எதிர்பாராதது படத்தில்

வந்தது வசந்தம்
வந்தது வசந்தம்
வாழ்வினிலே என்று ஒரு பாடலும்,

சிற்பி செதுக்காத பொற்சிலையே
எந்தன்
சித்தத்தை நீ அறிவாயோ

என்ற பாடலும் இவர் எழுதியதுதான்.

இந்தப் பாடல் பதிவின்போது, அருகில் இருந்த படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி உமாபதி (ஆனநத் தியேட்டர் உரிமையாளர் மற்றும் முதல் சினிமாஸ்கோப் படமான இராஜராஜசோழன் படத் தயாரிப்பாளர்) சிற்பி எப்படி பொற்சிலையை செதுக்குவான் – கற்சிலை தான் சரியாக இருக்கும் என்றாராம். கவிஞர் ஏற்றுக்கொள்ளாமல், கவிதைக்கு பொய் அழகு என்றாராம்.

ஒர் இரவு படத்தில்

என்ன உலகமடா
ஏழைக்கு நரகமடா
தன்னல பேய்களுக்கே
தங்கச் சுரங்கமடா

கட்டத் துணி இன்றி
ஏழைகள் வாட
மிராசுகள் வீட்டு சன்னலில்
திரைச் சீலைகள் ஆட

என்ற பொதுவுடமை வரிகள் இன்றைக்கும் பொருந்துகிறது அல்லவா.

மருமகன் என்ற படத்தில், சி ஆர் சுப்பராமன் இசையில் இவரது பாடலை, சி எஸ் ஜெயராமன் பாடிய பின், அதை ஒதுக்கிவிட்டு, ஏ எம் ராஜாவை வைத்து பாடல் பதிவானது. காரணம், சின்னச் சின்ன வீடு கட்டி என்ற வார்த்தை முன்னவர் குரலில், கட்சி என்று ஒலித்ததாம், (வெற்றிலை சீவல் செய்த வேலை) .

அப்படியெல்லாம், தமிழ் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் இசை அமைப்பாளரும், கவிஞரும் .

நல்ல தம்பி, ராஜாராணி, சிங்காரி, நானே ராஜா, சிங்காரி, திகம்பர சாமியார் என பல படங்களுக்கு பாடல்கள் புனைந்தார்.

ஆரம்ப காலங்களில், பம்பாய் மெயில் போன்ற பல படங்களில், விடுதலை உணர்வு கொண்ட பல பாடல்கள் எழுதி இருக்கிறார்,

தேசத் தொண்டே தெய்வீகப் பணி என்று நீ அறிவாய்
தெரிந்து நடந்தால்
வருமே சுய ஆட்சி என உணர்வாய்

பாரத மணிக்கொடி வாழ்க
சுதந்திரம் நாடி
வணங்குவோம் கூடி

இழிவு கொண்ட மனிதர் என்பார்
எங்கள் இந்தியாவில் இல்லையே

கருணாமூர்த்தி காந்தி மகாத்மா , என்றெல்லாம் தேசம், தெய்வீகம் என்று எழுதி இருக்கிறார்.

உலகம் பலவிதம் படத்தில்,

கடவுள் ஒருவன் இருந்தால்
தன் கடமையை செய்ய வேண்டும் – அது
கஷ்டமாய் இருந்தால், மனிதனாய்ப் பிறந்து
ஒரு கணமேனும் வாழ வேண்டும்

என்ற பாடல் புதிய சிந்தனை கொண்டது. பின்னாட்களில் கண்ணதாசன், வானம்பாடி படத்தில், எழுதிய கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்ற வரிகளும் இதுபோலத்தான்.

வாழ்ககை படத்தில்,

உன் கண்ணே உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
ட ட டா ட ட டா , என்ற பாடலும்,

ஆனந்த கோபாலனுடன் ஆடுவேன்
நான் ஆடுவேன் என்ற பாடலும், வைஜயந்தி நடிப்பும் மறக்க முடியுமா என்ன ?

சிங்காரி என்ற படத்தில்,

ஒரு சாண் வயிறு இல்லாட்டா
உலகில் ஏது கலாட்டா

என்ற பாடலும் அப்போது மிகவும் பிரபலமான ஒன்று.

வழக்கம்போல், பல கவிஞர்கள், நாயக, நாயகியர் போல், தேன் உண்ட வண்டு என்று எழுதிய கவிஞர், மது உண்டவராக மாறி, மதுவே அவரின் உணவானது – அப்புறம் அவரின் உயிர் பறித்த எமன் ஆனது.

56 ஆண்டுகளே வாழ்ந்தாலும், கே பி காமாட்சி அவர்களின் பாடல்களுக்கு என்றென்றும மரணம் இல்லை என்பதே உண்மை.

மீண்டும் அடுத்த மாதம், இன்னொரு கவிஞரோடு சந்திப்போம்.

நன்றி

 

 

 

 

அதிசய உலகம்-9 – -அறிவுஜீவி

தூக்கம் உன் கண்களை…

Studying how grizzly bears hibernate could lead to medical advances

“அல்லி! அது என்னமோ தெரியல!. தூக்கம் தூக்கமா வருது. பெரும் தூக்கம்!” என்று அலுத்துக்கொண்டாள் அங்கயர்க்கண்ணி மாமி. அல்லிராணி சிரித்தாள். “மாமி.. பெரும் தூக்கம் என்று சொன்ன உடனே எனக்கு நினைவு வருவது இந்த சயன்ஸ் நியூஸ் தான்” என்றவள், “மாமி, ஹைபர்னேஷன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றாள். மாமி உடனே “ஆமாம். கரடிகள் குளிர்காலத்தில் ஹைபர்னேஷன் செய்து தூங்குமாம். அந்த நேரத்தில், பெண் கரடிகள், குழந்தைகள் கூட பெத்துக் கொள்ளுமாம்” என்றாள். அல்லி ஆச்சர்யப்பட்டாள்.

“சூப்பர் மாமி! நிறையப் படிச்சிருக்கீங்க! கரடிகள் நூறு நாட்கள் வரை ஒன்றும் சாப்பிடாம, தூங்கி, அப்புறம், வசந்த காலத்தில் புது உத்வேகத்துடன் விழிக்குமாம்” என்றாள். “நம்ம கும்பகர்ணனைப்போல! அப்புறம் அந்தக்கால முனிவர்களும், ஒன்றும் சாப்பிடாமல், யோக நிலையில் யுகங்கள் கழிப்பார்களாமே” என்றாள். அல்லி சொன்னாள், ”சரி தான் மாமி. அந்த உறக்க நிலையில் அவர்களுக்கு மெடபாலிசம் குறைந்து, உடல் குளிர்ந்து இருக்குமாம். சரி இப்ப விஷயத்துக்கு வருகிறேன். எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம், மற்றும் தூர கிரகங்களுக்கு மனிதன் செல்லும் போது, நிறைய உணவு தேவைப்படும். மனிதனும் ஹைபர்னேஷன் செய்தால், உணவும் தேவைப்படாது. கிராவிட்டி இல்லாத பயணத்தில் தசை (muscle) இழப்பு ஏற்படும். இந்த ஹைபர்னேஷனால் அதுவும் தவிர்க்கப்படும்” என்றாள்.

மாமி கேட்டாள், “மனிதர்களும் ஹைபர்னேஷன் செய்யமுடியுமா?”. அல்லி, “அதற்குத் தான் சயன்டிஸ்ட்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அது சரி மாமி! இந்த சமாசாரத்தைப்பற்றி ஏதாவது சினிமா வந்திருக்கா?” என்று குறும்பாகச் சிரித்தாள்.

“இல்லாமல் என்ன? சில்வெஸ்டர் ஸ்டாலன் நடித்த 1993 திரில்லர் ‘டெமாலிஷன் மேன்’. அப்புறம் 2016 பாசெஞ்சர்’. அப்புறம் அந்தக்காலத்திலேயே எச் ஜி வெல்ஸ் எழுதிய ‘ஸ்லீப்பர் அவேக்ஸ்’ என்ற நாவலில் 200 வருடம் தூங்கி ஒருவன் விழிக்கும் கதை ஒன்று” என்று விரித்தாள் மாமி. அல்லி சொன்னாள்: ‘மனிதன் கற்பனை செய்கிறான்.. பிறகு அதை நனவாக்குகிறான். இந்த ஹைபர்னேஷனால் மனித குலம் பயன் பெரும்”.

“பறவையைக் கண்டான்.. விமானம் படைத்தான் “ என்று பாடி முடித்தாள் மாமி.

இது ஒரு அதிசய உலகம்!

 

https://www.bbc.com/future/article/20230509-will-we-everhibernate-in-space

 

அறிவியல் கதைகள் – பானுமதி ந

 

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி

Solar Eclipse 2023: சூரிய கிரகணம்..6 ராசிக்காரர்களின் வாழ்க்கையை புரட்டி  போடப்போகும் கிரகங்கள் | Surya Grahan 2023 Rasi Palangal: Planets that will  change the life of the 6 Zodiac signs ...

காலங்கார்த்தாலயே என்ன வெய்யில், என்ன வேர்வை! என்று சொல்லிக் கொண்டே அப்பா காய்கறிப் பைகளுடன் உள்ளே வந்தார்.

‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே’ என்று சரவணன் பாட்டுப் பாடி அவரைச் சீண்டினான்.

“உங்க வயசுல நாங்களும் ஆட்டம் போட்டோமில்ல, அதுதான் இப்படி தோல் கருத்துடுத்து”

‘ஆமா, இல்லாட்டி பால் வெள்ளைதான் உன் அப்பா’, என்று தன் பங்கிற்குக் சேர்ந்து கொண்டாள் அம்மா.

“அம்மா, பால்ல சக்கரை போடலியா?” என்று கேட்டான் சரூ.

“இன்னிக்கி, சக்கரையும், உப்பும் கட்{“

“ஏம்மா, அப்ப என்னத்தச் சாப்ட்றது?”

“முளை கட்டினப் பாசிப் பயிறு, மலைப்பழம், பானகம் தான் இன்னிக்கு ப்ரேக்பஸ்ட். வெல்லம் சேத்துக்கலாம். 11 மணிக்கு நீர் மோர், உப்பில்லாம”

“அப்போ, லஞ்ச்?”

‘குளுகுளுன்னு தயிர்சாதம் மாதுள முத்தும், திராக்ஷையும் போட்டு. நோ தாளிச்சுக் கொட்டல், நோ சால்ட்’ என்றார் அம்மா.

“சாயந்த்ரம், ராத்திரிக்கு மெனு என்ன?” என்று உள்ளே வந்து கொண்டிருந்த சஞ்சய் கேட்டான்.

‘வாடா, வாம்மா பவானி. சாயந்த்ரம் நான் செஞ்ச பிஸ்கெட்டும், பாலும். ராத்திரிக்கு தேங்காய் அவல். சரூவுக்கு இப்பத்தான் குடுத்தேன். நீங்க பால் சாப்ட்றேளா?’

‘இப்பத்தான் குடிச்சுட்டு வந்தோம்.’ என்றாள் பவானி

“எனக்கு அரை கப் கொடுங்கோ” என்றான் சஞ்சய்.

பவானி சிரித்தாள்- ‘இவனுக்கு நாலு குடல்’

“ஆமா, ஆன்டி, ஏன் சால்ட், சக்கரையெல்லாம் இன்னிக்கிக் கிடையாதுன்னு சொன்னேள்?”

‘இன்னிக்கி சித்ரா பௌர்ணமி. சித்ரகுப்தன் பொறந்த நாள். அதுக்கான விரதத்துல உப்பு கூடாது. அவர் யார்ன்னு தெரியுமா?’

“எமனோட அஸிஸ்டென்டுன்னு அம்மா சொல்லுவா.”

‘கரெக்ட். நாம செய்யற நல்லது கெட்டதெல்லாம் இவர் தான் பதிவு செஞ்சு எமங்கிட்ட படிச்சுச் சொல்லுவார்.’

“சரூ, நோட் திஸ் பாயின்ட்” என்றார் அப்பா.

“அம்மா, இன்னிக்கி சந்த்ரக்ரஹணமும் கூட. ஆனா, இந்தியால தெரியாது. புத்த பூர்ணிமா கூட இன்னிக்குத்தான்.”

“கிரஹணம் எப்படி வரதுன்னு தெரியுமா?” என்றார் அப்பா.

‘சூர்யன், சந்திரன், பூமி இவாளோட சுழற்சியில ஒரு கோட்டுக்குள்ள வரும் போது இப்படி நடக்கும். பூமிக்கும், சூர்யனுக்கும் இடையில நிலா வரும் போது, பூமியோட சில பகுதிகள்ல சூர்யன் தெரியாமப் போயிடும் அது சூர்ய கிரஹணம். பூமியோட நிழல்ல நிலா நுழந்துன்னா அப்போ அது தெரியாமப் போகும், அது சந்த்ர கிரஹணம். ஆமா, ஆன்டி, சித்ரா பௌர்ணமிக்கான கதை ஒன்னும் இல்லையா?’

‘அது இல்லாமயா? இந்திரனுக்கும், ப்ரஹஸ்பதிக்கும் ஒரு வாக்குவாதம். இந்திரன், தன் குருவை அவமானப்படுத்திட்டார். அவர் சாபம் கொடுத்தனால நம்ம மதுரல இந்திரன் பொறந்து படாத பாடுபட்டு, அப்றம் சிவனைக் குறிச்சு தவம் செய்றார். கடம்ப மரத்தடிலேந்து சிவன், லிங்க ரூபமா வந்து இந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அந்த நாள் சித்ர குப்தனின் பொறந்த நாள். அவர் ஏட்டுல எழுதறது, சித்ர எழுத்து, ரகசியமானது- அதனாலத்தான் சித்ர குப்தன்னு பேரு. காஞ்சிபுரத்ல அவருக்கு ஒரு கோயில் இருக்கு. பால் பொங்கல் நைவேத்யம் செய்வா, நெறைய தாமர மால சாத்துவா.’

“இதையும் தெரிஞ்சுக்கணும், சைன்ஸ்சையும் தெரிஞ்சுக்கணும்’ எத்தன டைப் கிரஹணம் இருக்குன்னு நீ சொல்லு பவானி.”

‘அங்கிள், நாலு டைப். முழுசா மறையறது, ஒரு பாகம் மறையறது, மோதிரமா வளையமாத் தெரியற ஒன்னு, எல்லாம் கலந்த ஒன்னு.’

“குட், 2023ல விசேஷமான சூர்ய கிரஹணம் வந்துதே, அதப்பத்தி.”

‘நான் சொல்றேன் அங்கிள். இந்த வருஷம், ஏப்ரல் 20ம் தேதி ‘ஹைபிரிட்’ சூர்ய கிரஹணம் வந்தது. பூமில சில இடங்கள்ல மோதிர வளையமாத் தெரிஞ்ச அதுவே, இன்னும் சில இடங்கள்ல முழுசாவே மறைஞ்சது.’

‘ஏன் அப்படி?’

சரூ சொன்னான்: இதை பூமியின் ‘ஸ்வீட் ஸ்பாட்’ அப்படின்னு சொல்றாங்க. அமாவாசையின் நிலாவும், சூர்யனும் கிட்டத்தட்ட ஒரே அளவுல இருக்கும். நிலா, பூமிய விட்டு தொல தூரத்ல தென்பட்ற இடங்கள்ல, கிரஹணம் மோதிர வளையமாத் தெரியும். சந்திரனோட நிழல் பூமில மொத்தமா கவியறச்சே சூர்யன் முழுசா மறைஞ்சு அப்புறமாத் தெரியும்.

“ஆமா, அங்கிள், இத ஏன் அபூர்வம்னு சொல்றாங்க?”

“பூமியோட வளைஞ்ச பரப்புல, நிலாவோட நிழல் விழற கோணத்தைப் பொறுத்து, கிரஹணம், முழுசாவும், பாதியாவும், வளையமாவும் தெரியறதில்லையா, அதனாலத்தான்.’

‘இந்த 21ம் நூற்றாண்டுல 224 சூர்ய கிரஹணம் தெரியுமாம். அதுல ஏழு ஹைபிரிட் வகை. 2031, நவம்பர், 14ஆம் தேதியிலதான் அடுத்த ஹைபிரிட் சூர்ய கிரஹணம்.’

‘இன்னொரு சேதி, தென் பசிபிக் கடல் பகுதியில சூர்யன் விரைஞ்சு பயணிக்கறச்ச, நிலாவோட நிழல் மேற்கு ஆஸ்த்ரேலியா, இந்தோனேசியால விழுந்த இந்த ஹைபிரிட்டப் பாத்து படம் பிடிச்சுருக்காங்க, அற்புதமா இருக்கு.’ என்றார் அம்மா.

‘எல்லாம் சரிம்மா, சித்ரா பௌர்ணமி இல்லையா? ராத்திரி பால் பொங்கலும், தேங்காய் அவலுமா கொண்டாடுவோமே? இல்லேன்னா, தேங்காய்ப்பாலோட நம்ம பால்ல வேக வச்ச சாத்துல பால் பொங்கலாய் செஞ்சு தரயா, ப்ளீஸ். என்றான் சரூ

“எங்க சுத்தியும் ரங்கனச் சேவிச்சுடுவ நீ” என்றான் சஞ்சய். சிரிப்பு அலை மோதியது.

https://cdn.mos.cms.futurecdn.net/bor3yvm9WCaweEiH8ovsK5-1200-80.jpeg.webp

 

நடுப்பக்கம் – நீதி – சந்திரமோகன் –

Neethi | 1972 | Sivaji Ganesan , Jayalalithaa , Sowcar Janaki | Tamil  Golden Hit Full Movie .... - YouTube

(இந்தப் படத்துக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்மந்தம் என்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்) 

நீதிபதி ராமானுஜம், ஒரு பெறு மூச்சுடன் தன்னை சுற்றி அலமாரிகளில அடுக்கி வைத்திருந்த சட்ட புத்தகங்களை பார்க்கிறார். அவருக்கு தெரியும் அவைகளால் உதவ முடியாது என்று. அவருடைய பிரச்சனை என்ன என்று தெரிவதற்கு முன் சற்று அவரைப் பற்றி பார்ப்போம்.

வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்து தன் தந்தையின் அடிச்சுவட்டில் நீதிபதிகள் மதிக்கும் மூத்த வழக்கறிஞர் ஆக உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுக் கொண்டு இருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் மதிக்கும் நீதிபதியாக தீர்ப்புகள் வழங்கிக் கொண்டு இருக்கிறார். பலரால் பேசப்படும் சில வழக்குகளில் இவரது தீர்ப்பை கேட்பதற்கென்றே இவர் அமரும் ஐந்தாம் எண் அறையில் வக்கீல்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதில் தங்கள் வழக்குகளில் வாய்தா வாங்காமல் கோட்டை விட்ட வக்கீல்களும் அடங்குவர். கோர்ட் பியூன் சயலன்ஸ் என்று கூவாமலேயே கோர்ட் நிசப்தமாக இருக்கும். அந்த நிசப்தமே பக்கத்து அறைகளில் சத்தமாக பேசப்படும்.

அப்படிப்பட்ட நல்ல மனிதருக்கு பிரச்சனை என்றால் நாம் கூட உதவலாமே என நீங்கள் எண்ணினால் அது தவறு. அவர் சொந்த பிரச்சனைகளை சுமந்து கொண்டு கோர்ட்டுக்கு வர மாட்டார்..

வீட்டிற்குபோகும் பொழுது  காய்கறி வாங்கிச் சுமந்து செல்வதை பல வக்கீல்கள் பார்த்திருக்கிறார்கள்.

ஏன், போன வாரம் டிரைவர் வரவில்லை. புதிதாக உயர்நீதி மன்றம் வரை வரும் மெட்ரோ ரயிலில் இறங்கி வருகிறார்.

உங்களுக்கு ஞாபகமிருக்கும், பிரபலமான ஒரு வழக்கில் திருக்குறளை மேற்கோள்கள் காட்டி தீர்ப்பு வழங்கினார் ஒரு நீதிபதி. அதன்காரணமாய் சில காலம் வீட்டில் கரண்ட், தண்ணீர் இல்லாமல் தலைப்பாகையை தலைக்கு வைத்து வராந்தாவில் தூங்கினார். சுபாவத்தில் அவரும் இவரும் அண்ணன் தம்பி மாதிரி.

  நீதிபதி ராமானுஜம் சற்று கண்களை மூடுகிறார் யோசிப்பதற்காக. அதைப் பார்த்து அவரது பியூன் சற்று கண்களை மூடுகிறார் உண்ட மயக்கத்தில்.

கடந்த மூன்று நாட்களாக ஒரு வழக்கில் நடந்து வரும் வாதப் பிரதிவாதங்களை அவர் மனது அசை போடுகிறது.

ஓ. அதுதான் அவர் பிரச்சனையா? என்ன வழக்கு என்று பார்ப்போம்.

ஈரோடு அருகே அமைதியான, அழகான ஒரு சிறு கிராமம். கந்தசாமி கவுண்டர் குடிசையை விட சற்று பெரிதான வீட்டில் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அளவான தேவைகளுடன் நிம்மதியான வாழ்க்கை. ஐயன் வாழ்ந்த வீட்டை தன் தம்பிக்கு விட்டு கொடுத்து விட்டார். பெரிய மகளை பள்ளியோடு நிறுத்தி விட்டார். நல்ல பையனா பார்க்கவேண்டும். இரண்டாவது பெண் எட்டாம் வகுப்பு.

சற்று தள்ளி சின்னத்தம்பி கவுண்டர் வீடு. அவருக்கு குழந்தைகள் இல்லை. மற்றபடி அதே செட்அப்தான். ஏனெனில் இருவரும் அண்ணன் தம்பிகள். தங்கள் ஐயனுக்கு வந்த எட்டு ஏக்கர் நிலத்தை இரண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னால் பிரித்துக்கொண்டார்கள்.

ஒரே வாய்க்கால்.

பவானி  ஆற்றிலிருந்து தேவையான தண்ணீர், ஐயனிடம்  கற்ற உழைப்புடன் சேர்ந்ததால் இருவருக்கும் பெரிய குறையொன்றும் இல்லை. அதன் பின் ரொம்ப ஒட்டுதலோ உறவோ இல்லை. பகையும் இல்லை. இருவரும் ஒன்றாய் ஓடி ஆடிய பூமிதான் அது.

ஆனால் இப்ப ஒருத்தர் நிலத்துல அடுத்தவர் மிதிச்சு போறதுக்கே ஆயிரம் யோசனை. ஒரு நாள் கருக்கல், வெள்ளி முலைக்கும் சமயம் கந்தசாமி கவுண்டர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருக்கிறார். எதிரே சின்ன தம்பி கவுண்டர் தனக்கு வரவேண்டிய தண்ணீரை  திருப்பி விட்டதாக சண்டை போடுகிறார்.

சண்டை முற்றுகிறது. அண்ணனை லேசாகத்தான் தோளில் கை வைத்து தள்ளினார். கந்தசாமி கவுண்டர் சற்று தடுமாறி விழுந்தார்.

கீழே இருந்த மண்வெட்டி தலையை பதம் பார்த்து ரத்த வெள்ளம். அவரது குடும்பம் அநாதையானது.

பாவம் சின்ன தம்பி கவுண்டரும் எதிர்பார்க்கவில்லை. அண்ணன் மீது மனதுக்குள் அதிகப் பாசம் வைத்திருந்தார். ஆடிப்போய் விட்டார்.போலீசிடமும், கோர்ட்டிலும் தானே அண்ணனை கொன்று விட்டதாக தலையில் அடித்து சத்தியம் செய்தார்.

செஷன்ஸ் கோர்ட்டில் தூக்கு தண்டனை ரிவிஷன் பெட்டிஷனில் பத்து ஆண்டு தண்டனையாக மாறி இப்பொழுது உயர் நீதி மன்றத்திற்கு வந்துள்ளது.

மூன்று நாட்களாக நடந்த விவாதத்தில் அரசு தரப்பு வக்கீல் தரணீதரன்  இது ஒரு திட்டமிட்ட கொலை. அரிதில், அரிதான (rarest of rare cases) வழக்காக கருதி  I P C Sec 302ல் அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க கேட்டு கொண்டுள்ளார்.

வாதிக்காக வாதாடிய வழக்கறிஞர் சபரி ஸ்ரீராம் (சட்டம் படித்த என் பையன் தாங்க. ஒவ்வொருவர் பையனுக்காக சினிமாவே எடுக்குறாங்க, நான் கதையில் கொண்டு வரக் கூடாதா)

மிக அறிவு பூர்வமாக வாதாடினார். இது திட்ட மிட்ட கொலையல்ல இ பி கோ  பிரிவு 299 ல் ஒரு குற்றமற்ற கொலையே (culpable homicide- not amounting to murder) எனவும்  குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டியும் தன் வாதத்தை முடித்து இருக்கிறார்.

நம் நீதிபதிக்கு நாளை வழங்கப் போகும் தீர்ப்பில் அது ஒரு பிரச்சனையே இல்லை. அவரால் ஊகிக்க முடியாத உண்மை இல்லை, அவருக்கு தெரியாத சட்டமும் இல்லை.

அவரது நினைவுகள் அனைத்தும் நாம் இதுவரை அதிகம் பேசாத கந்தசாமி கவுண்டரின் குடும்பத்தையே சுற்றி சற்றி வந்தன.

ஒரு தீர்மானத்துடன் தீர்ப்பை எழுதுகிறார்.

அடுத்த நாள் காலை. பக்கத்து அறைகள் கூட அமைதியாக உள்ளன.

கட்டை பிரித்து தீர்ப்பின் இறுதி பாராவை படிக்கிறார். நீங்களும் கேளுங்கள்.

அவர் வழங்கிய தீர்ப்பு இன்று வரை பேசப்படுகிறது.

“கந்தசாமி கவுண்டர் தன் தம்பி சின்ன தம்பி கவுண்டரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இது ஒரு தற் செயலான கொலை.

அண்ணனின் குடும்பம் அநாதை ஆயிற்று. நான் கீழ் கோர்ட்டில் கொடுத்த பத்து வருட சிறை தண்டனையை உறுதி செய்கிறேன்.

ஆனால் குற்றவாளி தண்டனையை கழிக்க வேண்டிய இடம் சிறைச்சாலை இல்லை. குற்றவாளியை சிறைக்கு அனுப்பினால் இரண்டு குடும்பங்கள் பாதுகாப்பற்று போய்விடும்.

அவர் தனது ஊரில் தன் அண்ணன் நிலத்தையும் சேர்த்து விவசாயம் செய்து அவர்கள் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும்.  இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் மணம் முடித்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு கணக்கை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்குகிறேன்.”

தீர்ப்பை கேட்டவுடன் கோர்ட்டில் தம்மை மறந்து அனைவரும் கைதட்டினர் மகிழ்ச்சியுடன்.

அரசு வக்கீலுக்கு மட்டும் சற்று சந்தேகம். சட்டப்புத்தகத்தில் தேடிக்கொண்டு இருக்கிறார் நீதிபதிக்கு சட்டத்தில் உள்ள அதிகாரத்தை.

சகுந்தலாவின் நெக்லஸ் – ரேவதி ராமச்சந்திரன்

Satyajit Ray's women more powerful than men: Aparna Sen

சத்யஜித் ரே அவர்களால் பெங்காலியில் எழுதப்பட்ட கதைகள் கோபா மஜூம்தார் அவர்களால் ஆங்கிலத்தில் ‘பெலூடாவின் சாகசங்கள் பாகம் 2’ என்ற கதைத் தொகுப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதிலுள்ள ‘சகுந்தலாவின் நெக்லஸ்’ என்ற கதை  சுருக்கி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.

துப்பறிபவர் பெலூடா என்கிற பிரதோஷ் மிட்டர், அவருடைய உறவினர் தபேஷ், நண்பன் லால்மோகன் கங்குலி மூவரும் தங்கள் நகரமான கல்கத்தாவை விட்டு விடுமுறைக்காக லக்னோ போகும் போது இரயில் வண்டியில் ஜயந்த் பிஸ்வாஸ் என்பவரை சந்திக்கின்றனர். தன்னைப் பற்றி அவர் கூறியதாவது – ‘ஜான் ரேனால்ட்ஸ் என்பவர் ஆர்மியில் இருந்தார். அவருடைய மகன் தாமஸ் ரேனால்ட்ஸ் என்பவரும் ஆர்மியில் சேர்ந்தார். நன்கு உருது பேசுவார். அவர் பரிதா பேகம் என்ற ஒரு முஸ்லிம் பாடகரைக் கல்யாணம் செய்து கொண்டார். அவருடைய முதல் பிள்ளை எட்வர்ட் ஒரு வக்கீலாக ஆனார், இரண்டாவது பிள்ளை சார்லஸ் தேயிலைத் தொடத்தைக் கவனித்துக் கொண்டார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ஆங்கிலோ இந்தியனான பெண் சகுந்தலா தேவி ஒரு பெங்காலி கிறிஸ்டியனைக் கல்யாணம் செய்து கொண்டாள். அவளுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். மார்கரெட் சுஷீலா என்ற முதல் பெண் சாமுவேல் சல்கனந்தா என்ற ஒரு கோவாவாசியைக் கல்யாணம் செய்து கொண்டாள், அவர் இசைக் கருவிகள் விற்கும் ஒரு கடை வைத்துள்ளார், இரண்டாவது பெண் பமீலா சுநீலா கிறிஸ்டியனான என்னைக் கல்யாணம் செய்து கொண்டாள், பையன் ரதன்லால் கல்யாணம் செய்யாமல் உள்ளான். நான் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்கிறேன். எனக்கு ஒரு பெண், மேரி ஷீலா, பத்திரிகைத் துறையில் ஆர்வம் உள்ளவள், பையன், விக்டர், என் வியாபாரத்தில் உதவாமல் இருக்கிறான். 

இடைமறித்து பெலூடா ‘ஒரு சமயம் மஹாராஜா சகுந்தலா தேவிக்கு ஒரு விலையுயர்ந்த நெக்லசைப் பரிசாகக் கொடுத்தார் இல்லையா’ என்று ஆர்வத்துடன் கேட்டார். ‘ஆமாம் மைசூர் மஹாராஜா சகுந்தலாவின் நடிப்பைப் பாராட்டி பரிசாகக் கொடுத்தார். அப்போதே அதன் விலை சில நூறு ஆயிரமாக்கும். ஆனால் நீங்கள் பிறப்பதற்கு முன்பே சகுந்தலா நடிப்பதை நிறுத்தி விட்டாள். பின் இது எப்படி உங்களுக்குத் தெரியும்!” ‘நான் இதை பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு பேப்பரில் படித்துள்ளேன். மேலும் அது காணாமல் போய் திரும்பவும் போலீஸால் கண்டு பிடிக்கப்பட்டது என்றும் எழுதியிருந்தது.’ ‘மிகவும் சரி. அப்போது சகுந்தலா உயிருடன் இருந்தாள். அவளது மறைவிற்குப் பிறகும் அந்த நெக்லசைப் பற்றி பல கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்’. ‘எனக்கு க்ரைம் மிகவும் பிடிக்கும்’ என்று சொல்லி பெலூடா தனது கார்டை நீட்டுகிறார். ‘என் நண்பன் லால்மோகன் பாபு ஒரு சிறந்த எழுத்தாளர்.’ ‘ஓ என் பெண் தங்களது  ரசிகை. தாங்கள் அவசியம் எங்களது வீட்டிற்கு வர வேண்டும்’. ‘கட்டாயம், அப்போது அந்த நெக்லசையும் காட்ட வேண்டும். நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கிறோம். அது எப்படி முதல் பெண்ணிற்கு கொடுக்காமல் இரண்டாவது பெண்ணிற்கு நெக்லஸ் கொடுக்கப்பட்டது!’ ‘என் மனைவியும் ஒரு சிறந்த நடிகை. அவள் அம்மா மாதிரியே வர வேண்டியவள். சகுந்தலாவிற்கு அவளை மிகவும் பிடிக்கும். ஆனால் அவள் ஒரு குடும்பத் தலைவியாகவே இருக்க விரும்புகிறாள்.’

காலை சிற்றுண்டிக்குப் பிறகு பிஸ்வாஸ் பக்கத்து பெட்டியில் பயணம் செய்யும் தமது நண்பரைப் பார்த்து வரச் சென்றார். அவர்களுக்குள் சிறிது உரத்த வாக்குவாதம் மாதிரி நடந்தது. பின் பிஸ்வாஸ் அவரை அழைத்து இவர்களிடம் வந்து ‘இவர் என் நண்பர் திரு சுகியாஸ், லக்னோவில் பெரிய வியாபாரி, கலைகளில் சிறந்த அறிவாளி. நாங்கள் இருவரும் பழைய கால நண்பர்கள்’ என்று அறிமுகம் செய்தார்.

பெலூடாவும் மற்ற இருவரும் லக்னோவில் தங்கியிருந்த ஹோட்டல் உணவு மிகவும் நன்றாக இருந்தது. பாரா இமாம்பரா, புல்புலையா, ரெஸிடென்சி என்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். அன்று மாலை பிஸ்வாஸ் கார்ட் அனுப்பியும், ஃபோன் செய்தும் அவர்களை அவருடைய 25 ந்தாவது வருட கல்யாண நாளுக்காக வரச் சொன்னார். அங்கே சென்ற போது அவருடைய மனைவி பமீலா சுநீலா, பெண் மேரி ஷீலா, பையன் விக்டர், மனைவியின் தமக்கை மார்கரெட் சுஷீலா, அவளுடைய கணவர் சாமுவேல் சல்கனந்தா இருந்தனர். பிறகு அவருடைய மைத்துனர் ரதன்லால், சுதர்சன் சாம் என்கிற ஓவியர் (இவர் அந்த வீட்டிலேயே தங்கியுள்ளார்) இவர்களையும் அறிமுகப்படுத்தினார். பெலூடா கேட்டுக் கொண்டதற்கிணங்க பமீலா சுநீலா ஷீலாவிடம் சாவி எடுத்து லாக்கர் திறந்து நெக்லசைக் கொண்டு வரச் சொன்னாள். ‘சாவி அங்கேதான் இருக்கும். உங்களுக்குக் கதவைத் திறந்த சுலேமான் உட்பட இங்கே எல்லோரும் மிகவும் நம்பிக்கையானவர்கள்’. நீலக் கலர் வெல்வெட் பெட்டியில் பளபளக்கும் அதைப் பார்த்து வியந்து மனமில்லாமல் திருப்ப, ‘ஷீலா இதை எடுத்த இடத்திலேயே வைத்து வீடு. விலை உயர்ந்த பொருள் அதிக நேரம் வெளியில் இருக்கக் கூடாது’ என்று பமீலா சுநீலா சொன்னாள். ரதன்லால் ஒன்றும் பேசாமல் இருந்தான். சிறிது நேரத்தில் ஓர் ஆள் வந்து சகுந்தலாவின் கடைசி படத்தின் ஒரு பாகத்தைத் திரையிட்டார். இருட்டான அந்த அறையில் ஒரு நிமிடம் சுகியாஸ் வந்து விட்டுச் சென்று விட்டார். அவரை இரவு விருந்து சாப்பிட்டுப் போகும்படி பிஸ்வாஸ் சொன்னார். நல்ல விருந்து சாப்பிட்டு விட்டு பார்ட்டியின் பாதியிலேயே பெலூடாவும் அவரது நண்பர்களும் ஹோட்டலுக்குத் திரும்பி விட்டனர்.

மறு நாள் காலையில் பிஸ்வாஸ் ஃபோன் செய்து நெக்லசைக் காணோம் என்றார். பெலூடா அங்கே சென்றார். போலீசும் வந்து இருந்தனர். வேலைக்காரர்கள் மூன்று பெரும் மிகவும் நம்பகமானவர்கள். எனவே எனவே பார்ட்டிக்கு வந்த யாரோதான் எடுத்திருக்க வேண்டும் என்று யோசித்தனர். பிஸ்வாஸ், அவர் மனைவி, இரு குழந்தைகள், ஓவியர் சாம், பிஸ்வாஸ் மனைவியின் சகோதரன், சகோதரி, சகோதரியின் கணவர், சுகியாஸ் எல்லோரும் விசாரிக்கப்பட்டனர். பிஸ்வாஸ் பையன், ஓவியர் சாம், சுகியாஸ் மூவருக்கும் பணத்தேவை அதிகம். மேலும் சுகியாஸ் புராதனப் பொருட்களை விற்பவர், அடகுக் கடையும் வைத்திருப்பவர். அவர் ஒரு முறை இந்த நெக்லசை விலைக்குக் கேட்டார். இவர்கள் எல்லோரும் சந்தேகப் பட்டியலில் வருகிறார்கள்.

போலீஸ் சென்ற பிறகு பெலூடா பிஸ்வாஸிடம் சில கேள்விகள் கேட்டார். அதிலிருந்து வேலைக்காரர்கள் நம்பகமானவர்கள், பிஸ்வாஸ் ஒரு பார்ட்னருடன் தனது வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிறார், சுகியாஸ் ஒரு முறை நெக்லசை தனக்கு விற்கும்படி கேட்டார், ஆனால் கொடுக்கவில்லை என்று தெரிய வந்தன. மார்கரெட் சுஷீலாக்குத் தெரியும் நெக்லசை தமது அம்மா இரண்டாவது பெண்ணிற்குத் தான் தருவார்கள் என்று பமீலா சுநீலா சொன்னாள். போலீஸ் வந்து கேட்டாகி விட்டது, என்னை அரெஸ்ட் பண்ண வேண்டுமென்றால் அதற்கு சாட்சியம் என்ன என்று விக்டர் எடுத்தெறிந்து பேசினான். சாமைக் கேட்டபோது அவர் தமக்கு வருமானம் என்று இல்லை, இந்தப் படங்களை விற்றுத்தான் சம்பாதிக்கிறேன், சகுந்தலா தேவி தான் இங்கே தங்க இடம் கொடுத்துள்ளாள், விக்டருக்கு சில கெட்ட சகவாசங்கள் இருப்பதால் அவனுக்குப் பணத் தேவை அதிகம் தேவைப் படுவதால் தமக்கு அவன்மீது சந்தேகம் இருப்பதாகச் சொன்னார்.

பிறகு பெலூடா சாமுவேல் சல்கனந்தா கடைக்குச் சென்றார். இது எங்கள் தாத்தா காலத்து கடை. கஷ்டப்பட்டு நடத்துகிறேன். என் பையன் கடையைப் பாரத்துப்பான் என்று நினைத்தேன். ஆனால் அவன் மருத்துவம் படித்து விட்டு அமெரிக்கா சென்று விட்டான். நெக்லசைப் பற்றி கேட்டதற்கு மார்கரெட்டுக்குக் கொடுக்காமல் பமீலா சுநீலாவிற்கு கொடுத்தது அவளுக்கு மிகுந்த மன வருத்ததைக் கொடுத்தது, விக்டர் இப்போது டிரக்சுக்கு அடிமையானதால் அவனுக்குப் பணத்தேவை அதிகம் என்று சொன்னார். மார்கரெட்டைக் கேட்டதற்கு தமக்கு வருத்தம் இருந்தது, ஆனால் இப்போது இல்லை, பமீலா சுநீலா மீது பொறாமைக்குப் பதில் இரக்கம் தான் வருகிறது, கடை சரியாக நடக்காததால் அவர்களது பொருளாதார நிலைமை நன்றாக இல்லை, நேற்று இவ்வளவு பெரிய பார்ட்டி எப்படி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை, பார்ட்டியின் நடுவில் விக்டர் எழுந்து சென்று விட்டு வந்தான் என்று சொன்னாள்.

ரதன்லால் தனது தாய் அந்த நெக்லசை யாருக்குக் கொடுத்தாலும் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று பொதுவாக முடித்துக் கொண்டார். அடுத்தது சுகியாஸ் வீட்டிற்குச் சென்றபோது அவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவர் பெலூடாவிற்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதில் ரதன்லால் தம்மிடமிருந்து பணம் வாங்கியதாகவும் அதைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதாகவும், தன்னை மிரட்டிக் கொண்டிருப்பதாகவும் எழுதியிருந்தார். போலீஸ் சுகியாஸை கொலை செய்தவனைப் பிடித்தது. அவன் ரதன்லால்தான் தனக்குப் பணம் கொடுத்து இப்படி செய்யச் சொன்னதாகக் கூறினான்.

 பெலூடா இப்போது தம்முடைய இறுதி முடிவைச் சொல்ல ஆரம்பித்தார். சுகியாஸ் கொலை வழக்கு முடிந்து விட்டது. அடுத்தது நெக்லஸ். இங்கு எல்லோருக்குமே ஏதோ ஒரு விதத்தில் பணத்தேவை இருக்கிறது. யார் மேல் சந்தேகம் அதிகம் என்று பார்த்தேன். பிஸ்வாஸ் வீட்டிற்கு கடைசியாகச் சென்ற போது ஒரு மண் தொட்டியில் செடி  அப்போதுதான் புதிதாக நட்ட மாதிரி இருக்க அதைத் தோண்டினால் அதன் கீழே நெக்லசைக் கண்டு பிடித்தேன். மறுபடியும் ஷீலாவை விசாரித்து நான் தெரிந்து கொண்டது அவளுடைய தாய் சுகியாயஸுக்கு நெக்லசை விற்க சம்மதித்து விட்டாள், ஆனால் பாட்டி பரிசாகக் கொடுத்த அதை விற்க மனமில்லாமல் ஷீலா அதை செடியில் புதைத்து விட்டாள். இந்த வீட்டை விட்டு அதைப் போக விடாமல் இருக்க இப்படிச் செய்தாள் என்று நெக்லசைக் காட்டி சொன்னார். சகுந்தலாவின் நெக்லஸின் அருமை தெரிந்தவள் மேரி ஷீலா மட்டுமே. இப்படிப்பட்ட பெண்ணை அடைய அவளது பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலிகள் என்று பெலூடா முடித்துக் கொண்டார்.  

மறு நாள் பெலூடா, தபேஷ்,  லால்மோகன் கங்குலி மூவரும் லக்னோவிலிருந்து கிளம்பி கல்கத்தாவிற்கு நிறைவோடு சென்றனர்.

   

.                                                      

 

                                                         

 

குவிகம் மே,2023 “படித்தவை எனக்கு நேர்கிறதோ?” ‘ – மனநல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

தனியார் கல்லூரியிலிருந்து ஒரு உதவிப் பேராசிரியர் தன் சான்றிதழ்களை மீட்ட கதை  ! | வினவு

பல வருடங்களாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் ஆங்கில இலக்கியம் படித்ததைப் பிரயோகித்து, கன்டன்ட் டெவலெப்பராக வேலை செய்து கொண்டிருந்தார் சந்த்ரு. எழுதுவது, பல தயாரிப்புகள், உரையாடல், தெளிவுபடுத்துவது என மும்முரமாய் வேலை. ஆங்கில இலக்கியம் மேல் கொள்ளை ஆசை சந்த்ருவிற்கு.

அதனாலேயே நெடுநாள் ஆசை, கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சொல்லித் தர வேண்டும் என. வாய்ப்பு வந்து சேர்ந்தது. ஊர் பக்கத்தில் உள்ள கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை கிடைத்தது. சந்த்ரு பேரானந்தம் அடைந்தார்.

ஆர்வமுடன் ஆசிரியராகப் பணி செய்து வந்தார். வகுப்பு மாணவர்கள் எல்லோரின் விவரங்களும் அத்துப்படி. கசப்பான அனுபவங்களின் சஞ்சலத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.

ஃபிப்ரவரி மாதத்திலிருந்து சந்த்ருவின் சுறுசுறுப்பு சரிந்தது போலத் தோன்றியது. புதிய வேலையின் அனுபவங்கள், மற்றும் அதிக ஓய்வு எடுக்காததின் விளைவுதான் என நண்பர்கள் ஆசுவாசப்படுத்தினார்கள். ஆண்டு இறுதி விடுமுறையில் சரியாகிவிடும் என்றார்கள்.

விடுமுறையில் ஏதோ சரியாகி வருவதாகத் தோன்றியது. புது வருடம் ஆரம்பமானது. சந்த்ரு பாடத்தைச் சொல்லித் தரத் தொடங்கினார். இரண்டு மாதத்திற்குள் கவிதைகளைச் சொல்லித் தரும் போதெல்லாம் தன்னை அறியாமல் அழுகை வருவது, வேதனைகளைக் கேட்கும்போது தாங்க முடியாத நிலை உண்டாவதை சந்த்ரு உணர்ந்தார். அதே சோர்வு.

இதைப் பார்த்த மாணவர்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.‌ அவர்களுக்குப் பலமுறை மனதிடம் உருவாக்க வர்க்ஷாப் செய்ய என்னை அழைத்திருந்தார்கள். எனக்கு வெளியூர் என்பதால் அது ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும். அந்த மாணவர்கள் மட்டுமே பள்ளியில் இருப்பார்கள். மற்றவர்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அதனால்தான் நான் சந்த்ருவைப் பார்த்ததில்லை. சந்த்ருவிடம் என்னைப் பார்க்க பரிந்துரைத்தார்கள்.‌

சந்த்ரு வந்தார். இருபத்தி எட்டு வயதினர், கூட வந்தவர்கள் அவருடைய நண்பன் மற்றும் இரு மாணவர்கள். அந்த இரு மாணவர்கள் தான் வர்க்ஷாப்பிற்கு வேண்டிய தேவைகளைக் கவனித்து உதவுவார்கள். அதனால் எனக்குப் பரிச்சயமானவர்கள்.

மூவரும் சந்த்ருவை அறிமுகம் செய்துவிட்டு, உடனேயே வெளியே காத்திருப்பதாகக் கூறி விலகினார்கள்.

சந்த்ரு தன் குழப்பத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். தன் குணத்தைச் சொல்ல வேண்டும் என ஆரம்பித்தார். அவர் போக்கில் விட்டேன். சிறுவயதிலிருந்தே யாரையும் துன்பத்தில் பார்த்தாலே மனம் கலங்கி விடுமாம். எல்லா ஜீவராசிகளுக்கும்தான், மனிதர்களுக்கு மட்டும் அல்ல. பெற்றோர் இளகிய மனமுடையக் குணத்தைப் பாராட்டினார்கள்.

கடந்த சில மாதங்களாகப் பல சூழலில் மனம் கலங்கிப் போகிறது என்றார். பிடித்தமான வேலையில் இது குறுக்கிடுவது பிடிக்கவில்லை. பாடம் சொல்லித் தரும்போது, கண்கலங்கி மனம் அந்தப் பகுதியில் மட்டுமே லயித்து அடுத்த கட்டத்திற்குப் போக முடியாமல் இருந்து விடுவதால், மேற்கொண்டு பாடத்தைச் சொல்லித் தர முடியாமல் போய்விடுகிறது என்றார். ஏதோவொரு சோகம் மனதைப் பாரமாக ஆக்குகிறது என்றதை விவரித்தார். ஏனோ இப்போதெல்லாம் கவிதையினால் இவ்வாறு அதிகமாக உணர்ச்சிவசப் பட்டுவிடுகிறேன் என்றார்.

மாணவர்களுடன் இவர் அன்பாக இருப்பதால், அவர்கள் இவரிடம் ஏதோ மாற்றம் இருப்பதைக் காண்பதாகக் கூறுவதினால், முன்பு போல் இல்லாமல் எரிச்சல் ஏற்படுகிறது என்றார். அவர்களுடன் இப்படி நேர்கிறது எனத் தன்மேல் கோபம். சாப்பாட்டு, குளியல் மற்றும் தினசரி கடமைகள் வெறுப்பூட்டுவதாகக் கூறினார். மீண்டும் மீண்டும் ஆங்கில இலக்கியத்தில் அதே கவிதையைப் படிக்க மட்டும் மனம் போகின்றதாம்.‌

இதை மையமாக வைத்து ஸெஷன்களில் ஆராயத் தேவை எனச் சொல்லி வாரந்தோறும் சனிக்கிழமை ஸெஷன்களுக்கு நேரத்தைக் குறித்துத் தந்தேன்.

வந்ததும் சந்த்ரு எடுத்து வந்திருந்த அத்தனை கவிதைப் புத்தகங்களையும் மேஜை மீது குவித்தார். டெனிஸன், ப்ளேக், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லீ, எட்கர் போ, எனப் பிரபலங்களின் கவிதைகள்! இவையெல்லாம் தன் மனதை உருக்கும் கவிதையெனக் கூறினார். அவற்றின் பல வரிகளைச் சரளமாகச் சொல்லி வந்தார். நான் சந்த்ருவை நிறுத்தவில்லை, கேள்வி கேட்கவில்லை. காத்திருந்தேன்.

தருணம் வந்தது. வரிகள் நீள, இதைக் கேட்டீர்களா என சந்த்ரு கேட்டு, கண்ணீர் மல்க, தாங்க முடியவில்லை எனக் கூறினார். ஆங்கில இலக்கியம் பரிச்சயம் இருந்ததால், அதற்குச் சமமாகக் கவிஞர்களின் மற்றும் சில படைப்புகளைச் சொல்லி சமாதானப் படுத்தினேன்.

இதையே மையமாக ஸெஷனில் எடுத்து பரிசீலனை செய்யத் தொடங்கினோம். இந்த இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது தந்தைக்கு இலக்கியத்தில் உள்ள ஈடுபாடு, மற்றும் அவர் நூலகராக இருப்பதினால் என்றார். இல்லத்தரசியான தாய் கதைகள் மூலமாக எல்லாவற்றையும் சொல்லித் தருவது வழக்கம்.‌ அதனால் தான் இலக்கியப் பற்று என விவரித்தார்.

இந்த காலகட்டத்தில் தான் இவ்வாறு உணர்ச்சிக்கு அடிமை ஆவதாகக் கூறினார். அதன் அடிப்படை காரணம் என்னென்ன என்ற தேடலை ஆரம்பித்து வைத்தேன். பலவிதமான வடிவத்தில் எழுதுவதைப் பிடித்தமான ஒன்றாகச் செய்துகொண்டிருந்த சந்த்ரு இதை சில மாதங்களாக நிறுத்தியதாகக் கூறினார். இதற்கும் மறுவாழ்வு தர, பள்ளி கால வகுப்பறையில், பிறகு கல்லூரியில் கவிதைகளை ரசித்த விதத்தை வர்ணிக்க, பள்ளிப் பருவம்-கல்லூரி காலம் எனப் பிரித்து ஆராய ஆரம்பிக்கப் பரிந்துரை செய்தேன்.

பள்ளிக் கால கவிதைகளை வரிசை செய்தபோது சந்த்ரு உற்சாகமாக எமிலி டிக்கின்சன் கவிதையைப் படித்த பின்பே வானத்தின் அழகை ஆறு வயதிலிருந்து ரசிக்க ஆரம்பித்ததை விவரித்தார். தொடர்ந்து, ஒவ்வொருவரின் கவிதையைப் படிக்க, சந்த்ரு இயற்கையின் பலபாணிகளைக் கவனித்து ரசிக்கலானார். தனக்கு மனித நேயம் கற்பித்ததும், மன அமைதி பெற்றதும் கவிதைகளால் என்றார்.

கல்லூரி காலமும் அதன் கவிதையையும் விவரிக்க ஆரம்பித்ததுமே மனம் வலிக்கிறது என்றார்.

ஏதோ தடைப்படும் போன்ற உணர்வதாகக் கூறினார். மேலும் அறிந்து கொள்ள, இதற்கு முன் நடந்ததை விவரிக்கச் சொன்னேன்.

விவரங்களைத் தருகையில், எழுதுவதைப் பற்றிக் கூறினார். எழுதிப் பல மாதங்கள் ஆகின என்றதையும் சொன்னார்.

கல்லூரி கட்டத்தைப் பற்றி எழுதி விவரிப்பது சுலபமாக இருக்குமோ எனக் கேட்டேன். இடையூறுகளை அடுத்த மூன்று ஸெஷனில் பகிர்ந்து அலசியதில் நம்பிக்கை பிறக்க, முயல முன் வந்தார் சந்த்ரு. அவருடைய போக்கில் போய்த்தான் விடைகள் பெறவேண்டும். ஸெஷன்கள் அந்த நோக்கில் முறையாகப் போனது.

செய்து கொண்டிருந்த ஆசிரியர் வேலையில் ஒரு திருப்தி, மாணவர்களுடன் நேர்ந்த உறவு. ஒவ்வொருவரையும் இன்னல்களை உட்பட, முழுமையாக அறிந்து கொண்டார்,. ஒவ்வொரு முறையும் கவிதைகளைச் சந்த்ரு கற்றுத் தர, இது இவனுக்குப் பொருந்தும், இது அவளுக்கு என மனக்கண்ணில் தோன்றும். நாளடைவில் அந்த கவிதையில் நேர்ந்தது போலவே அவர்களுக்கு ஆகிவிடுமோ எனக் கவலைப்பட்டு, மாற்றம் ஏதோ தென்பட்டதும், அவ்வாறே ஆகிவிட்டது என சந்த்ரு முடிவு செய்தார்.

இந்த மன ஓட்டத்தை ஸெஷனில் பல வாரங்களுக்கு ஆராய்ந்தோம். சந்த்ருவுக்கு புரிய ஆரம்பித்தது, கவிதையை லயித்துப் படித்ததால் மனதைத் தொட்ட நபர்களை அந்த இலக்கிய வடிவத்தில் அடையாளம் காண்கிறோம் என்று. ஒரு வரி மட்டுமே பொருந்திருக்கும், ஆனால் மெதுவாக முழுவதும் பொருந்துவது போல நினைத்துவிட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டது.

இதன் விளைவுதான் சந்த்ருவின் இன்றைய நிலை. இந்த அடிப்படை வடிவத்தைப் புரிந்து கொள்ள, சந்த்ருவை அவருக்குப் பிடித்த கலைமுறை வடிவில் இதை வர்ணிக்க முயலச் சொன்னேன்.

சந்த்ரு கன்டன்ட் ரைட்டர் பாணியைப் பயன்படுத்தி கவிதை-காரணி எனத் துல்லியமாக விவரித்திருந்தார். அளித்த வர்ணனைகள் மற்றும் சித்திரங்கள் வைத்துக் கடந்த ஏழு மாதங்களாக நேரும் அனுபவங்களை ஒப்பிடச் சொன்னேன். இந்தச் செயலை ஸெஷன்களில் செய்யும் பொழுது அனுபவங்களைப் பகிர்ந்து வந்தார். வீட்டிலும் செய்தார். தன் தவறான அணுகுமுறையினால் ஏற்பட்ட வித்தியாசத்தை சந்த்ரு அடையாளம் கண்டுகொண்டார். குழப்பத்தில் இருப்பதாகக் கூறினார்.

மறுபடியும் இவற்றையே ஸெஷனில் விவரித்துக் குறித்து வர, அதன் பற்றிய விவரிப்பு விஸ்தாரமாகச் சென்றது! இதே நேரத்தில் கல்லூரிப் பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்ததால், அன்றைக்கு நடந்ததை எடுத்துக் கொண்டோம். அதிலிருந்து சந்த்ரு விளக்கம் பெற்றார், கவிதை வரியினால் தன்மேல் ஏற்படும் தாக்கம் என்ன, தான் மற்றும் அதை எழுதியவர் அனுபவித்த உணர்ச்சிகள் என்ன, இது இரண்டையும் வேறுபடுத்த வேண்டும் என்று. கவியின் சொல்லை, கற்பனையைத் தனக்காகவே சொல்லப்பட்டதுபோல், தானே அனுபவித்ததுபோல் பாவிப்பதினால் விபரீதங்கள் ஏற்படுகின்றன என்று புரிய வந்தது.

இந்தத் தனிப்பயனாபடுத்தி (personalization) மட்டுமின்றி, கவிதையில் சொல்லப்பட்ட அனுபவங்கள், நிகழ்ச்சிகள் மற்றவருக்கும் பொருந்தும், அப்படியே நிகழ்ந்துவிடும் என்று பொதுமைப்படுத்தல் (over-generalization) செய்கிறோம், அதனாலேயே சில வரிகள் ஒருவருக்குப் பொருந்தினால், அவர்களுக்கும் அவை எல்லாமே நேர்ந்துவிடும் என்று கவலைப் படுகிறோம் எனக் கண்டுகொண்டார். இதனால்தான் அதிகமாக உணர்ச்சிவசப் படுகிறோம், தொடர்ந்து பாடம் சொல்லித்தர முடியாமல் போகிறது என்று தெரிய வந்தது.

இந்தப் புரிதலை நிலைநாட்ட, அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த
தனிப்பயனாபடுத்தல், பொதுமைப்படுத்தல் நிகழும் போதெல்லாம் கவனித்து, அடையாளம் கண்டுகொண்டு, அவ்வாறு எதற்காகத் தோன்றியது என்பதை எழுதி வரச் சொன்னேன்.

முதலில் மேலோட்டமாக எழுதி வந்தார். அவற்றை அலசியதில் தன்னுள் நிகழ்வதை மேலும் புரிந்து கொண்டார். போகப்போக, உணர்ச்சிகள் ஓடோடி விடுவதைக் கட்டுப்படுத்தி, வகுப்பில் நல்வழியில் எடுத்துரைக்க முடிந்தது.

சந்த்ருவின் நல்ல மனதினால் வகுப்பு மாணவர்கள் பல விதத்தில் நன்மை அடைந்தார்கள். சந்த்ரு சொன்னார், தான் “ஐயோ பாவம்” என்ற ஸிம்ப்பதி (sympathy) நிலையிலிருந்து விடுகிறோம், மாறாக, மேற்கொண்டு செயல்படுவதற்கு மற்றவரின் உண்மையான உணர்ச்சிகளைக் கண்டறியும் எம்பத்தி (empathy) தேவை, கற்றுக் கொள்வது எப்படி என வினவினார். இதற்கு அவர்கள் கல்வி நிலையத்தில் ஆசிரியர்களுக்குத் தரப்படும் பயிற்சியில், லே கௌன்ஸலர் பயிற்சி, மற்றும் மனநலனை மேம்படுத்த முறைகள் பற்றிய வர்க்ஷாப் சென்று முறையாகக் கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உற்சாகத்துடன் சேர்ந்தார்.

சந்த்ரு போன்ற ஆசிரியர்கள் எங்களைப் போன்ற மனநலனை மேம்படுத்தி வருவோருக்குப் பக்க பலமே. இவர்கள் மனநலனைக் காப்பதில் தரும் ஒத்துழைப்பினால், வகுப்பில் சூழலில் மனதிடம் மேம்படும். இவர்கள் என் தாரகை மந்திரமான “வரும் முன் காப்போம்” நோக்கத்திற்குக் கை கொடுப்பவர்கள்!

இது நடந்து ஒன்பது வருடம் ஆயிற்று. சந்த்ரு பல மாணவர்களின் சஞ்சலம் அடைந்த மனநலனை அடையாளம் கண்டு, அழைத்து வருவதும், நலனுக்காக முழு ஒத்துழைப்புத் தருவதும் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது.
*************************************

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்… (2)  – மீனாட்சி பாலகணேஷ்

பிச்சை புகினும் கற்கை நன்றே!

இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உதவித்தொகை, விண்ணப்பிக்கவும் | online  thanjai news | online tamil news | Tamilnadu News

         “வீட்டுப்பாடம் எழுதின நோட்டுப் புத்தகத்தை எல்லாரும் என் மேசையில் கொண்டுவந்து வையுங்கள்!” வகுப்பு ஆசிரியையிடமிருந்து உத்தரவு பிறந்தது. மடமடவென எல்லா மாணவிகளும் வரிசையாகச் சென்று எங்கள் நோட்டுப்புத்தகங்களை அடுக்கினோம். ஒழுங்காக அடுக்குகிறோமா எனக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்தபடி இருந்தார் கலைவாணி டீச்சர். அலமேலு தயங்கியபடியே தனது வீட்டுப் பாடத்தை அவற்றுடன் சேர்த்தாள். பாய்ந்து எடுத்தார் ஆசிரியை. “ஏய்! என்ன இது? என்னத்திலேயோ கிறுக்கிட்டு வந்திருக்கே? ஒழுங்கா ஒரு நோட்டுப் புத்தகத்தில எழுதற வழக்கம் இல்லையா?” எனச் சீறினார்.

         ஒரு இயலாமையுடன் தலைகுனிந்து நின்ற அலமுவின் கோலம்  என் மனதை வாட்டிச் சிதைத்தது. ஏன்? அவள் எழுதிய வீட்டுப் பாடத்தில் என்ன தப்பு? அவள் கையெழுத்து மணிமணியாகத்தான் இருக்கும். பின்….?

         மாணவிகள் நாங்கள் எல்லாரும் வீட்டுப்பாடத்திற்கென்று ஒரு நோட்டுப்புத்தகம் வைத்திருப்போம். சிலர் ஆண்டுத் தொடக்கத்தில் புதியதாக ஒரு இரண்டு குயர் நோட்டுப்புத்தகம் வாங்கி அட்டைபோட்டு லேபில் எல்லாம் ஒட்டி வைத்திருப்பார்கள். சிலர், வீட்டுப்பாடம் தானே என்று சென்ற ஆண்டு நோட்டுப் புத்தகங்களின் எஞ்சிய பக்கங்களைச் சேர்த்து பைண்டு செய்து தனியாக வைத்திருப்போம். இதை ஆசிரியை- பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொள்ளும்- கொள்வார். என்னுடையது இந்த ரகத்தைச் சேர்ந்தது. காகிதத்தை வீணாக்காமல்  உபயோகிக்க என் தந்தையார் சொல்லித்தந்த ஒரு நல்ல வழி இது.

         பாவம்! அலமுவினுடைய வீட்டுப்பாட நோட்டு என்னது தெரியுமா? நம்ப மாட்டீர்கள். தினசரி கிழிக்கும் நாள்காட்டி காலண்டர் உண்டே! அதன் பின்பக்கம்தான்! பாவம், அவ்வளவு வறுமைப்பட்ட குடும்பம். ‘வதவத’வென்று நான்கு தம்பி தங்கைகள். அவள் தகப்பனார் ஒரு சாப்பாட்டு விடுதியில் சமையல்காரர். அம்மா அங்கிங்கு வீடுகளில் சிரார்த்த சமையல், முறுக்கு சுற்றுவது, வடகம் போடுவது என்று அப்பப்போது வேலை செய்வாள். பெரிய வரும்படி கிடையாது என்பது வெட்ட வெளிச்சம். இரண்டுவேளை குடும்பம் ஒழுங்காகச் சாப்பிட்டாலே பெரிய விஷயம். இதில் பள்ளிக்கூடமா? படிப்பா? நோட்டா? புத்தகமா? எல்லாமே ஒரு கழைக்கூத்தாட்டம் தான்!

         அலமுவிடமிருந்தும், அவள் வீட்டிற்கு ஒரொரு சமயம் சென்றதிலிருந்தும் இதையெல்லாம் அறிந்து கொண்டிருந்தேன். என் பெற்றோர்கள் நான் அங்கு செல்வதனைத் தடை செய்து விட்டனர். ஏனென்றால், அலமுவின் அம்மா  அற்ப சொற்ப உணவை – அவளுடைய தகப்பனார் சிலபொழுதுகளில் கொண்டுவரும் கீரைவடை, பஜ்ஜி ஆகியவற்றையும், வீட்டிலுள்ள  நீர்மோர் சேர்த்த சாதத்தையும் மாவடுவுடன் -எனக்கும் பகிர்ந்தளிப்பார்களே- அதனால் அனாவசியமாக அக்குழந்தைகளின் பங்கில் துண்டு விழுவதனை என் தாயார் விரும்பவில்லை எனப் பின்னாளில் தெரிந்து கொண்டேன். எப்படிப்பட்ட இங்கிதம்!

         இப்போது வீட்டுப்பாடத்திற்கு வருவோம். அலமு என்ன செய்யப்போகிறாள்? குழப்பத்துடன்  உள்ளம் பதைபதைக்க அவளையே பார்த்தபடி இருந்தேன். “எல்லாரும் போர்டில் உள்ள கணக்கைப் போடுங்கள்,” என உத்தரவிட்ட ஆசிரியை, “என்ன இது அலமேலு? ஹெச். எம். ( தலைமை ஆசிரியை) பார்த்தால் இந்த ஒழுங்கீனத்திற்கு என்ன பதில் சொல்வது?” எனப் பாதி கரிசனத்துடனும், பாதி கண்டிப்பாகவும் கேட்டார்.  அலமு ‘திரு திரு’வென விழித்தாள்.

          வகுப்பாசிரியை அலமுவை வீட்டிற்கு அனுப்பி விட்டார். அடுத்தநாள் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வரும்படிக் கூறிவிட்டாள். அது அலமுவால் முடியாது என்பது எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் சட்டங்கள் சட்டங்கள்தாமே? அவற்றை மீற இயலுமா?

         எனது உள்ளம் தத்தளித்தது. மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்வரை நிலை கொள்ளவில்லை. அப்பாவிடம் அலமுவின் நிலைமையை விளக்கி, பழைய நோட்டுப்புத்தகங்களின் பக்கங்களைச் சேர்த்து பைண்டு செய்தவற்றில் ஒன்றினை எடுத்துக்கொண்டுபோய் அவளிடம் கொடுத்துவிட்டு வந்தபின்தான் நிம்மதியாயிற்று. “சமர்த்துப்பொண்ணே!” எனப் பாட்டி என்னை அணைத்துக் கொண்டாள்; அப்பா என் தலையைப் பரிவோடும் பெருமிதத்தோடும் வருடினார்.

         ***

         காலம் உருண்டோடியது. அவரவர்கள் தமது வாழ்க்கைப்பாதையில் சென்றோம்; செல்கிறோம். ஒரு ரயில் பயணத்தின்போது என் வயதொத்த ஒரு பெண்மணி என்னிடம், “நீங்க ரமா தானே?பொள்ளாச்சியில் இருந்தேள் இல்லையா?” என்றபோது அவரை நிமிர்ந்து உற்றுப்பார்த்தேன். இது……? “நீங்கள்…….,” என்னை முடிக்க விடவில்லை. “நாந்தான் அலமு!” படீரென்று போட்டுடைத்தபோது ஆச்சரியமும் கழிவிரக்கமும் நிரம்ப அவரை நோக்கினேன்.

         “இப்போ எங்கே? என்ன பண்ணறே? பண்ணறீங்க?”

         “ஸ்கூல் டீச்சரா இருந்து ரிடையர் ஆயிட்டேன். ஒரே பையன் கவர்ன்மெண்ட் வேலையில் இருக்கான். இது என் மருமகள்; பேர்த்தி அலமு; சொந்தக்காரா கல்யாணத்துக்குப் போயிட்டு வரோம்,” எனப் பிரமிக்க வைத்தாள் என் தோழி. எனக்குப் பேச எத்தனையோ இருந்து நாவெழவேயில்லை! எப்படிப்பட்ட எதிர்நீச்சல் போட்டு மேலான ஆசிரியைத்தொழிலில் வேறு ஈடுபட்டு, எளிமையின் சின்னமாக…. என் தோழி! பரவசத்தில் அவளை இறுக அணைத்துக் கொண்டேன்.

         எங்கள் இருவர் கண்களிலும் பழைய எண்ணங்களில் நீர் தளும்பியது. கேட்க வேண்டிய பல வினாக்கள் இருவரிடமும் கொள்ளைகொள்ளையாக; ஆனால் யாருக்கும் விடை தேவையில்லை; தானே இருவருக்கும் புரிந்துவிடும். நுணுக்கமான விளக்கங்கள் இங்கு தேவையேயில்லை.

         “ரமா, கேட்டிருக்கியா நீ? பிச்சைபுகினும் கற்கை நன்றே என்று சொல்லிக் கொடுத்தாங்களே, நம்ம டீச்சர்…..” அலமு என்ன சொல்ல வருகிறாள் எனப்புரிந்தது. இன்னும் இந்த ரயில் பயணத்தில் அதையெல்லாம் அறிந்துகொள்ள நேரமிருக்கிறது. கண்களைத் துடைத்துக்கொண்டு, “வாடீ, முதலில் சாப்பிடலாம்,” என அவரவர் சாப்பாட்டு மூட்டைகளைப் பிரித்தோம். அவளுடைய தயிர்சாதமும் மோர்மிளகாயும் தேவாமிர்தம். கீரைவடை வேறு! “அப்பா கிட்டயிருந்து நான் கத்துண்ட சமையல்டீ,” என வெள்ளையாகச் சிரித்தாள் அலமு…….

         ரயில் கூவிக்கொண்டே ஓடியது. நேரம் ஓடியது. எண்ணங்கள் ஓட்டமாக ஓடின. கணவர்களும் துணைசேர்ந்து கொள்ள எங்கள் பேச்சும் எதையெல்லாமோ தொட்டுத்தொட்டு ஓடிக்கொண்டே இருந்தது…..

         வாழ்க்கையெனும் ஓடம் எத்தகைய உயர்வான பாடங்களையெல்லாம் வழங்குகிறது! உள்ளம் சிலிர்த்தது.

         *****

 

 

 

 

 

 

 

“விரும்பிப் படித்த புத்தகம்” – மீ விஸ்வநாதன்

பெயர்: வழி வழி பாரதி
ஆசிரியர்: சேக்கிழார் அடிப்பொடி
டி. என். இராமச்சந்திரன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
கே.கே.நகர், சென்னை 600 083.
Phone: 044- 24896979
பக்கங்கள்: 340 விலை: ரூ 350 

மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியின் படைப்பாற்றலை வியந்து வியந்து அதை மேல்நாட்டுக் கவிஞர்கள் கீட்ஸ், ஷெல்லி, மில்டன்போன்றோர்களுடன் ஒப்பு நோக்கி சேக்கிழார் அடிப்பொடி டி. என். இராமச்சந்திரன் அவர்கள் மகாகவியின் கவிதை உலகம், அவரின் சீற்றமும், சிரிப்பும் என்று தேன் சொட்டச் சொட்ட அறிவுக்குத் தீனியாக எழுதிய பதினான்கு அற்புதமான கட்டுரைகள் கொண்ட தொகுப்புதான் இந்த நூல்.முதல் பதிப்பு 2000ஆம் ஆண்டில் வந்ததை சந்தியா பதிப்பகம் தனது முதற்பதிப்பாக 2023ஆம் ஆண்டில் வெளிட்டிருப்பது வாசகர்களின் பேறு என்றுதான் சொல்லுவேன்.

ஒவ்வொரு தமிழனும் படித்தறிந்து கொள்ள வேண்டிய கருத்துப் பெட்டகம் இப்புத்தகம். பள்ளிகளும், கல்லூரிகளும் இந்த அரிய நூலை வாங்கித் தங்களது நூலகத்தில் வைக்க வேண்டும். கருத்துப்பிழை, அச்சுப் பிழை யில்லாத இதுபோன்ற நூல்களை தமிழக அரசும் வாங்கி ஆதரவு தருவதன் மூலம் பதிப்பகத்தார்களுக்குச்  சிறந்த நூல்களைத்தான் தாங்கள் வெளிட வேண்டும் என்ற ஊக்கம் ஊறும்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% 
புத்தகம்: மகாபாரதம்
(மாபெரும் உரையாடல்)
ஆசிரியர்: ஹரி கிருஷ்ணன்வெளியீடு: சுவாசம் பதிப்பகம்
பக்கங்கள்: 480 விலை: ரூ 550

 

மகாபாரதம் ஒரு சமுத்திரம். அதன் ஆழ, அகலங்களை முற்றும் அளந்தறிந்தவர்கள் ஒருவரும் இருக்க முடியாது. அந்த மாபெரும் சமுத்திரத்தில் முத்தெடுக்கும் ஆர்வத்தில் மூழ்கித் துழாவி சிலமுத்துக்களோடு கரை சேர்ந்தவர்கள் சிலருண்டு. அந்தச் சிலரில் ஒருவர் ஹரி கிருஷ்ணன் அவர்கள். “தென்றல்” மின்நூலில் மகாபாரதம் குறித்துத் தொடர்ந்து எழுதி வருகிறார். அதன் முதல் தொகுப்புதான் இந்த நூல். இதில் முத்தான 103 முத்தான கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் அமுத ஊற்று. வாசகர்களின் நழுவிப் போன பல கேள்விகளுக்கு இதில் ஓரளவு பதில் நிச்சயம் கிடைக்கும். குறிப்பாக இளைஞர்கள், மாணவ, மாணவியருக்கு இந்நூல் பொக்கிஷம்.

அச்சுப்பிழை யில்லாத தரமான அழகான பதிப்புக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் முகப்போவியம் பாதாம் பாலில் குங்குமப்பூ.

ஒரு நிமிடக் குறும் படம்

விசில் என்ற இந்த குறும் படத்தைப் பார்த்ததும் ‘எப்படி நச்சென்று எடுத்திருக்கிறார்கள் என்று அவர்களைப் பாராட்டத் தோன்றும்

அடுத்த 15 ஒரு நிமிடக் குறும்படத்தில் பல  படங்கள்  நம்மை மயக்குகின்றன.

பார்த்து மகிழும் போதே நாமும்  ஏன் இப்படி குறும்படப் போட்டி நடத்தக்கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது. 

 

 

 

 

 

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்

டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 2015

      ‘ஏன் வனஜா.., ‘உங்க வீட்டுலே வேலை செய்யறவ, துளிக் கூட சத்தம் செய்யாம பாந்தமா பாத்திரங்களை யெல்லாம் தேய்த்து வெச்சுட்டுப்

போயிடுவா… அவ வரதும் தெரியாது.. போறதும் தெரியாது.. அப்படி ஒரு

மின்னல் வேகம்’னு உன் மாமியார் நேத்து எங்க வீட்டுக்கு வந்திருந்தபோது

வேலைக்காரியை ‘ஓஹோ’ன்னு புகழ்ந்து தள்ளினாங்க.. ஆனா அப்படி

ஒண்ணும் தெரியலையே…  பாத்திரங்களின் கடமுடா சத்தம் கேட்கத்தானே

செய்யுது…?’

      ‘ஓ.. அதுவா… எங்க வீட்டுலே வேலைக்காரி காலையிலே சீக்கிரம் வந்துடுவா..

அவ வரபோது நார்மலா என் மாமியார் ஹாலிலே பேப்பர் படிச்சிட்டிருப்பாங்க..

படிக்கும்போது ஒரு டிஸ்டர்பன்ஸும் இருக்கக் கூடாதுன்னு ஹியரிங் எய்டை

கழட்டி வெச்சுட்டுத்தான் படிப்பாங்க… பாத்திரம் தேய்க்கிற கடமுடா சத்தம்

என்ன.. பக்கத்துலே ஒரு அணுகுண்டு வெடிச்சாலும் அவங்களுக்குக் கேட்காது..

தெரியாது…’

 

      

 

 

 

 

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும்  இரண்டு  சிறிய பாடல்கள் இடம் பெறும்.

பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாகத்  தன்  கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

69. எதனாலே ?

மாங்காய் புளிப்பது எதனாலே ?
மாம்பழம் இனிப்பது எதனாலே ?
பாகல் கசப்பது எதனாலே ?
பாக்கு துவர்ப்பது எதனாலே ?

ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய் –
எறும்புகள் போவது எதனாலே ?
குக்கூ குக்கூ என்றழகாய்
குயில்கள் கூவுது எதனாலே ?

புள்ளிமான்கள் உடல்களிலே
புள்ளிகள் இருப்பது எதனாலே ?
மயிலின் தோகை விரிக்கையிலே
மயக்குது நம்மை எதனாலே ?

சூரியன் உதிப்பது எதனாலே ?
சந்திரன் வருவது எதனாலே ?
வானத்தில் ஆயிரம் நட்சத்திரம்
மினுக் மினுக் என்பது எதனாலே ?

இயற்கையில் அனைத்தும் அதிசயமே !
அடைவோம் அனுதினம் பரவசமே !
அனைத்தையும் இயக்கும் சக்தியிடம்
ஆனந்தமாக நாம் சரணடைவோம் !

*********************************************

 

70. என் ஆசை !

எனக்கொரு ஆசை உண்டம்மா –அதை
இன்று உன்னிடம் சொல்லுகிறேன் !
இந்தியாவின் புகழ் உலகெங்கும் –
பரவ வேண்டும் என விரும்புகிறேன் !

நாட்டு மக்கள் அனைவருக்கும் –நல்ல
கல்வி கிடைத்திட வேண்டுமம்மா !
உண்ண உணவும் இருக்க இடமும் –
ஆரோக்கியம் அனைவரும் பெற வேண்டும் !

வேலை தேடி வெளிநாடு செல்லும் –
அவலம் இங்கே தொலையட்டும் !
தாத்தா பாட்டி அம்மா அப்பா –
அனைவரும் ஒன்றாய் வாழட்டும் !

தூய காற்று சுற்றுச்சூழல் –
தூய்மையாய் அனைத்தும் விளங்கட்டும் !
வீடுகள் எங்கும் வெளியில் எங்கும் –
மகிழ்ச்சி பொங்கி ஓங்கட்டும் !

நானும் ஒருநாள் பெரியவன் ஆவேன் !
நல்ல மாற்றங்களை நான் அனுபவிப்பேன் !
இந்தியா என்ற என் தேசத்தை – என்
அன்னையைப் போல் நான் நேசிப்பேன் !

 

ஸொமேட்டோ தாய் – மனோகர்மைசூரு

How to sell Home food online on Swiggy or Zomato

சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in  tamil) இவருடைய ரெசிபி Shyamala Senthil- குக்பேட்

 

மதன் உள்ளூரில் பயிற்சி டாக்டர். வீட்டிலிருந்து வேலை செய்யும் இடம் கொஞ்சம் தூரம் என்பதால் வழக்கமாக வீட்டுச்  சாப்பாடு லஞ்ச் எடுத்துக் கொண்டுப் போவான். வாரம் ஒரு முறை நைட் டூட்டி இருக்கும் போது  மட்டும் வெளியேயிருந்து ஸ்மோடோ அல்லது ஸ்விக்கியில் ஆர்டர் பண்ணிச் சாப்பிடுவது வழக்கம்.

“ஹோட்டல் சூப்பர் புட் பாக்ஸ்-ல் மல்லிகை இட்லி ரொம்ப ஜோராயிருக்கும் என்று அன்னிக்கி ஆர்டர் பண்ணினேன். பேரு தான்  இட்லி. ஆனா , கல்லு மாறி இருந்தது.  சாம்பார் ஊத்தி நனய வச்சி சாப்பிட்டாத் தான் எதோ வாயில் போவும் . இட்லி பேரையேக் கெடுத்து விடுவானுங்கோ போலிருக்கு”. மதன் தன் தாயிடம் டின்னர் புராணம் வாசித்தான்.

இன்னொரு வாரம், இன்னொரு ஓட்டலில் ஆர்டர் பண்ணி சாப்பிட்டதைக் கதைத்தான் “மசாலா தோசைக்குச் சட்னி கொஞ்சம் கெட்டுப் போயிருக்கு. காத்தாலே பண்ணது. அப்படியே வீசிட்டேன் . சிங்கிள் ஸ்டார் ரேட்டிங் தான் கொடுத்தேன். அதுக்கு  கீழே இல்லேயே?”. இப்படி வாரா வாரம் தன் ஹோட்டல் அனுபவம் பற்றி வீட்டில் விவாதம் நடக்கும்.

அம்மா ஒரு நாள் ஆலோசனைச் சொன்னாள். “டேய்!, ‘அடுமனை ஹோம் மெஸ்’ என்று இருக்கு. வீட்டிலிருந்து அவங்க நடத்தறாங்க. அதிலே வாட்ஸப்-லே ஆர்டர் கொடுக்கலாம். நம்பர் கொடுக்கிறேன். ஐட்டம்ஸ்  ரெண்டு தான் இருக்கும். நைட்-க்கு நாலு மணி முன்னாடியே  ஆர்டர் பண்ணனும்.. நல்லா இருக்குன்னு கேள்விப் பட்டேன். அந்த மெஸ் நம்ம வீட்டுக்கு பக்கம் தான். நேரடியா போய்  கம்ப்ளைண்ட் பண்ணவும் முடியும். ட்ரை பண்ணிப் பாரேன் “.

அந்த வாரத்தில் அம்மா சொன்ன மாதிரி, ஹோம் மெஸ்-ஸில் ஆர்டர் செய்தான். இரவில் அம்மாவிடம் விவரித்தான். “சூப்பர். சூப்பர். காளான் பிரியாணி சாப்பிட்டேன். ஒரு சில ஹோட்டல்ல எண்ணெய்  போட்டு த்  தாளிச்சுருப்பாங்க. இங்கே எனக்கு பிடிச்சா மாரி காரமும் ஜாஸ்தி இல்லாம பதமா இருந்தது. நீ பண்ற மாதிரி இருக்கும்மா “.

ஏழட்டு வாரங்கள் நல்லப்படியாகப் போய்க் கொண்டிருந்தது. அந்த  வாரம் மதன் நண்பன் சுரேஷ் அவனிடம் வந்து ” டேய், இன்னிக்கு உன் நைட் டூட்டி நான் பார்க்கிறேன். நாளைக்கு எனக்கு வேற வேலை இருக்கு. எக்ஸ்சேன்ஜ் ப்ளீஸ் ” என்று கெஞ்சினான்.

“சரி, நான் டின்னர் ஆர்டர் பண்ணியாச்சு. 3 சப்பாத்தி, மட்டர் பன்னிர் குருமா வரும். நீ சாப்பிட்டுக்கோ. நான் வீட்டிலே சாப்பிடுறேன்.” மதன் சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும் சமயம், அம்மா அப்போது தான்  வெளியே போய் விட்டு கதவை திறந்துக் கொண்டுருந்தாள் .

“என்னடா, டூட்டி இல்லையா”  என்று அம்மா வினவ, மதன் பதில் சொல்லாம உள்ளே நுழைய குருமா வாசனை மூக்கைத் துளைத்தது. “என்னம்மா, இன்னிக்கு ஸ்பெஷல்?”.

” சப்பாத்தி, மட்டர் பன்னிர் குருமா.  உனக்கு பிடிச்ச ஐட்டம்ஸ் தான். குளிச்சிட்டு வா . சாப்பிடலாம்”.

மதனுக்கு அதிர்ச்சியுடன் ஒரு சந்தேகம்.  “அம்மா, அந்த ஹோம் மெஸ்ஸுக்குப் போய்  ‘தேங்க்ஸ்’ சொல்லிட்டு வரணும் . அது எப்படி எங்க அம்மா மாதிரி செய்யறீங்கன்னு பாராட்டணம்”. 

“அதெல்லாம் வேணாம். ஒரு சீக்ரெட் உண்மை சொல்லிடுறேன்.  நீ ஆர்டர் பண்ணி சாப்பிட்டது எல்லாம் நான் செஞ்சு அனுப்பினது தான். உனக்கு ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்னு நான் தான்  அந்த  மெஸ்  கூட  ஒரு அரேஞ்மென்ட் பண்ணிக்கிட்டேன். நீ நாலு மணிக்குள் ஆர்டர் செய்யற. நா உடனே அதுக்கு வேண்டிய சமையல் செய்து அவங்ககிட்டக் கொடுத்திடுவேன். அவங்க பேக் பண்ணி உனக்கு டெலிவரி செய்வாங்க. எப்படி ஐடியா?”

“சூப்பர்மா! ரொம்ப அசத்திட்டே போ! ஸொமேட்டோ தாய் ஆயிட்டே”. மதனின் குளிர்ச்சியான வார்த்தைகளில் நனைந்தாள் தாய்.

அப்(பொடி)படிப் போடு – முனைவர் தென்காசி கணேசன் –

mooku podi story

நான் பேச இருப்பது, பொடி விஷயம் அல்ல. அந்தக் காலத்தில் மிகப் பெரிய விஷயம். பொடி போடுபவர்கள் அறிவாளிகள் என்று கூட கூறுவார்கள். அதனால் தான், அது, அந்தஸ்து விஷயமாகவும் இருந்தது. அவஸ்தையான பழக்கங்களில் ஒன்றாகவும் இருந்தது.

எனது மாணவ பருவங்களில், எங்கு பார்த்தாலும் விளம்பரம் ; ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் விளம்பரங்கள் , பார்த்த நினைவு உண்டு.

சிறுவரை பொடியர் என்று கூறுவதுண்டு

பெண்டிர் தம் ஆடவர்க்கு சொக்குப் பொடி போடுவதுண்டு

ஆனால், பொடி என்றாலே நினைவிற்கு வருவது

TAS ரத்தினம் பட்டணம் பொடி ஒன்றே !

இதே போல, SR பட்டணம் பொடி, NS பட்டணம்பொடி, அம்பாள் பட்டணம் பொடி இப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள்.   பொடியினைப் போடா மூக்கு, புண்ணியம் செய்யா மூக்கு என்று தமிழ்தாத்தா உ வே சா அவர்கள் ஒரு கவிதையே எழுதினார்கள் என்பார்கள்.

பொடி போடுவது என்பது பெரிய கலை. சாதாரணமாக, கடையில் (அப்போதெல்லாம் shop கடை என்பார்கள் . இரண்டும் ஒன்றுதானே . ஜெனரல் பேன்சி ஸ்டோர் தான் அது) , சீப்பு, பேஸ்ட், சோப்பு, பவுடர், ஹார்லிக்ஸ் முதல், கடை முதலாளி கல்லா அருகில், ஒரு சின்ன பரணி (பீங்கான் ஜாடி தான்) 3 இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு சின்ன கரண்டி (உத்தரணியை விட  சிறிய அளவு கொண்ட தலை பகுதி ) நீளமாக அதில் இருக்கும். வருபவர்கள், 3 பைசா முதல் 25 பைசா வரை வாங்கி போவார்கள். நான், 70களில் எங்கள் ஊர்  தென்காசி கோயில் எதிர் பஜாரில் மணி விலாஸ் போன்ற கடைகள், மண்டபத்தில் உள்ள சங்கரய்யா நாயுடு கடையில்  பார்த்து இருக்கிறேன். 6 அல்லது 7 தடவை அந்த கரண்டியால் போட்டாலும், தங்கப்பொடியை விட குறைவாகவே விழும், பொதுவாக வாழை மட்டை (காய்ந்து போனது) அதை சிறு மடக்கு மடக்கி, அதில் வாங்கிப் போவார்கள். சிலர், உருட்டையாக அல்லது தீப்பெட்டி போல எவர்சில்வரில் சிறிய  டப்பா வைத்திருப்பார்கள். அது மேலிருந்து திறந்து மூடுவது போல இருக்கும். வசதிக்கேற்ப, வெள்ளியில், தங்கத்தில் கூட  சிலர் வைத்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில் உழைப்பாளிகள் ஒருபுறம்  இதை உபயோகித்தாலும், அந்தஸ்து உள்ளவர்களின் அடையாளம் என, அத்தர், ஜவ்வாது, சென்ட், இவற்றுடன் இதுவும்   ஒன்றாக இருந்தது.

உழைக்கும் வர்க்கத்தில் பல பெண்மணிகள் – கீரை மற்றும் காய்கறி விற்பவர்கள், தயிர் விற்பவர்கள், பொடி உபயோகிப்பார்கள். எப்படி இருந்தாலும், பொடி போடுபவர்கள் அருகில் செல்ல எல்லோருக்கும் ஒருவித தயக்கம் உண்டு. ஒன்று அந்த நெடி  – அது தும்மலை ஏற்படுத்தும் . ஒவ்வாத வாசனையை தரும். இரண்டாவது, அவர்கள் கையில் கைக்குட்டை அல்லது துண்டு, சில நேரங்களில் இடுப்பில் உள்ள வேட்டி/புடவை தலைப்பு  நுனி – ஒன்றும் இல்லை என்றால், அருகில் உள்ள தூண், சுவர், தரை என, பொடி சேர்ந்த சளி கையை ஈஷி  விடுவார்கள் என்ற அருவருப்பு,

ஜலதோஷம் மற்றும் மூச்சு விடுவதற்கு நல்லது என்று பலர் கூறினாலும், இது ஒரு தீய பழக்கமாக தான் கருதப்பட்டது. அந்தக் காலத்தில், பலே பாண்டியா படத்தில், சிவாஜியை மாப்பிள்ளையாக்க  (நீயே உனக்கு என்று  என்ற பாடலுக்கு முன் ) எம் ஆர் ராதா, சிவாஜியை பார்த்து கேட்பார், மாப்பிளைக்கு, புகையா, பொடியா,  குடியா  எதாவது உண்டா என்பார். காரணம், அந்தக் காலத்தில் புகை மற்றும் பொடி பழக்கத்தினால், புற்றுநோய் வர வாய்ப்புண்டு என்பார்கள். முதல்வராக இருந்த அண்ணாதுரை அவர்களுக்கு புற்று நோய் வர, அவரின் பொடி மற்றும் புகையிலை பழக்கம் என்று அப்போது செய்திகள் வந்தன,

எப்படியோ, பல சங்கீத கலைஞர்கள் – கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், சின்னபபா, மஹாலிங்கம் என பல திரைக் கலைஞர்கள், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், GN பாலசுப்ரமணியம் என பல சங்கீத வித்வான்கள், ஜி ராமநாதன், எம் எஸ் வீ போன்ற பல இசை அமைப்பாளர்கள், பொடி  போடும் பழக்கத்தில் இருந்தார்கள். அரியக்குடியின் மிக பிரபல புகைப்படங்கள் மற்றும் மாலி வரைந்தது, அவர் பொடி போடுவது, பொடியை உறிஞ்சுவது, கையை உதறுவது என பல பாவங்களில் அந்தக் காலத்தில் தீபாவளி மலர்களில் வந்திருக்கிறது. MKT குரலில் ஒரு nasal வாய்ஸ் வரும். அது அந்தப்  பொடியால் தான். ஆனால், அதுவே, அவரின் style ஆனது. TMS, அவரைப் போல பாட வேண்டும் என்று அந்த வாய்ஸ் கொண்டுவருவார். ராதே உனக்கு போன்ற பல பாடல்களில் அது தெரியும். காபி, டீ, சிகரெட் போல, பொடியை உறிஞ்சிய பிறகு, ஒரு புதுவித உற்சாகம் மற்றும் உத்வேகம் வருகிறது என்பார்கள்.  ஜி ராமநாத ஐயர் , MSV,  போன்ற இசை மேதைகள், ஆர்மோனியத்தை கையில் பிடித்தபின், பொடியை ஒரு இழு என உறிஞ்சியபின், ராகம், வேகமாக வரும் என்பார் வாலி போன்ற பல கவிஞர்கள்.

அதேபோல், அண்ணாதுரை, பொதுக்கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும்  முன், பொடியை ஒரு உறிஞ்சு, உரிஞ்சிய பிறகே, பேச தொடங்குவாராம். கையில், பொடிமட்டை இருந்தால், ஒரு மாதிரியாக இருக்கும், என்று, பேச வரும்போது, கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் இடையில் பொடியை வைத்து, பேசும்போது இடையில் உறிஞ்சுவராம். அதேபோல , முழங்  கைகளில் இருபுறமும், பொடியை தடவி வைத்து, பேச்சுக்கு நடுவில், கையை மூக்கிற்கு அருகில் கொண்டு செல்வது போல் உறிஞ்சி விடுவார் என்பார்கள். பொடி போட்டு போட்டு, அவர் குரலே , கொஞ்சம் நாக்கை மற்றும் மூக்கை மடித்து பேசுவது போல் ஆனது. அதுவே, கழகத்தின் பாணி ஆகிவிட்டது. பொடி போடாதவர்களும், அதேபோல நாக்கை வளைத்து, மூக்கை இழுத்து , கரகர குரலில் பேச தொடங்கிவிட்டார்கள்.

பிரெஞ்சு தளபதி நெப்போலியனும், பொடிக்கு அடிமை என்பார்கள். இந்தப் பழக்கம், அந்தக் காலத்தில் வீட்டில் அல்லது பொது இடங்களில், சீட்டு விளையாடுபவர்கள் பலரிடம் உண்டு. சீட்டு விளையாட்டு தொடங்குமுன், ஒரு செம்பில் நீர், (புகையிலை கொப்பளிக்க) , பொடி மட்டை  இரண்டும் இருக்கும். பாதி ஆட்டத்தில், பொடி தீர்ந்துவிட்டால், எங்களை போன்ற சிறுவர்கள் கையில் காசு கொடுத்து, ஓடிப்போய், பட்டணம் பொடி வாங்கி வா, செல்லம், என்பார்கள். இதில் ஒரு லாபம் என்னவென்றால், ஆட்டத்தில் ஈடுபாடு என்பதால், மிச்சக்காசு 2 அல்லது 3 பைசா, கேட்க மாட்டார்கள். அல்லது, நீயே வைத்துக்கொள் ராஜா என்பார்கள். பெரும்பாலும், அக்ரஹாரத்து மிராசுதார், மைனர், பண்ணையார் என பலர் இருப்பார்கள். (அந்தப் பக்கம் போவது என் வீட்டுக்கு தெரிந்தால், என் தந்தை, பின்னி விடுவார் – அது தனிக் கதை )

1981 களில் கூட , இந்த பழக்கம் இருந்தவர்கள் மற்றும் பொடி கடைகள் இருந்தன. 1981 டிசம்பரில் வெளியான குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் கூட, வேலை வெட்டி இல்லாத விசு, ஒரு பையனைக் கூப்பிட்டு, கடையில் போய் , பொடி வாங்கி வா என்பார். எந்த brand எனக் கேட்க, விசு அவர்கள், மூக்குக்குள்ள போகனும் – எதுவாக இருந்தால் என்ன என்பார்.

என் தந்தை சொன்ன ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. பொடியும் ஒரு பழக்கமே என்றும், அதில் இருந்து மீளுவது என்பது கடினமே என்பார். அவருக்கு தெரிந்த மிகப்பெரிய செல்வந்தரான வக்கீல், நெல்லையில் இருந்தார். அவருக்கு பொடி போடும் பழக்கம் உண்டு, அவரின் செல்வாக்கிற்கு, அவர், தங்கத்தில், பொடி டப்பா வைத்திருந்தார். ஒரு தடவை, வயலில் நெல் அறுவடையின் போது, அவர் கொண்டு போயிருந்த பொடி முழுவதும் காலி ஆகிவிட்டது. வயல் ஊருக்கு வெளியே இருந்ததால், கடைக்கு சென்று வாங்கி வருவது கொஞ்சம் கஷ்டம்.  அவருக்கு எதோ ஒன்றை இழந்த உணர்வு. பொடி இல்லையே என்று கொஞ்சம் சோர்ந்து போன போது, வயற்காட்டில் இருந்த விவசாயிகளில் ஒருவன், அவனிடம் மட்டையில் இருக்கிறது என்று கூற, அவர் முகத்தில் புது உற்சாகம் ஏற்பட, வாங்கிக்கொண்டார்.  அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்த உணர்வு தோன்ற, அவனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவன் வந்து கொடுத்தான். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கூப்பிட்டபோது, அவன், கொஞ்சம் இருங்கய்யா – வாரேன் என்று  அனைவர் மத்தியில் அவன் அப்படி கூறியது, அவரைப் பாதித்தது. என்ன நினைத்தாரோ, இந்த பாழாப்போன பழக்கம் இருக்க கண்டு தானே, இப்படி மரியாதையை இழக்க வேண்டி இருக்கிறது, இனி இந்த பொடியை தொட மாட்டேன் என்று பையில் இருந்த தங்க பொடி  டப்பாவை தூக்கி ஓடையில் வீசி எறிந்தார்.  அருணகிரிநாதருக்கு, தமக்கையால், துளசி தாசருக்கு, தாரத்தால் , ஒரே வார்த்தையில் ஞானம் வந்தது போல, அவருக்கும், சம்சாரி (விவசாயி) சொன்ன ஒரு வார்த்தையால்  ஞானம் அன்று வந்தது என்பார் என் தந்தை.

எது எப்படியோ, இந்த தலைமுறை அறியாத விஷயங்களில் இதுவும் ஒன்றானது, உருப்படி(பொடி )யான விஷயம் தானே !! போதை பழக்கங்களில் ஒன்று குறைந்ததே !

 

கண்ணன் கதையமுது-19 -தில்லை வேந்தன்

 

Hare Krishna Festivals GIF by Hike Sticker Chat

(அரக்கர்கள் பலரைக் கொன்றழித்த கண்ணன், பலராமன் இருவரின் ஆற்றலைக் கண்ட ஆயர் சிறுவர்கள் மகிழ்ந்தனர்.
கழுதை வடிவில் இருந்த தேனுகாசுரன் இறந்த பின்னர், அவர்களுக்குக் காளியன் என்ற பாம்பினால் தொல்லை உண்டாயிற்று…..……..)

காளியன் என்னும் பாம்பு

ஆற்றின் அருகில் ஆங்கோர் மடுவில்
அச்சம் விளைக்கும் காளியனாம்
சீற்றம் மிக்க நெடிய அரவோன்
சிந்தும் மூச்சில் நஞ்சுடையோன்
கூற்றம் போன்றோன் குடும்பத் தோடு
குளிர்ந்த நீரில் குடியிருந்தான்
காற்றில் பறக்கும் புள்ளும் மூச்சுக்
காற்றுப் பட்டால் மடிந்துவிழும்.

 

காளியன் வாழ்ந்த மடு

அகலம் எட்டுக் கல்லென்பர்
ஆழம் கடலின் உள்ளென்பர்
முகிலாய்ப் புகையும் மேல்பரவும்
மூச்சின் நஞ்சு போய்விரவும்
திகழும் உயிர்கள் இடம்விட்டுச்
சேய்மை நோக்கிச் சென்றனவே
இகல்சேர் குணத்தான் வாழ்மடுவின்
இரண்டு புறமும் பாழ்நிலமே

கல் – mile
சேய்மை – தொலைவு
இகல் – பகை

அல்லும் பகலும் அம்மடுவில்
ஆட்டம் போட்டான் காளியனே.
புல்லும் பூண்டும் முளைக்காவே
புள்ளும் விலங்கும் நெருங்காவே
செல்ல மாந்தர் அஞ்சினரே
சிந்தை நடுங்கித் தவிர்த்தாரே
கொல்லும் நச்சுப் பல்லெண்ணிக்
குமைந்து நெஞ்சம் தவித்தாரே.

 

காளியனை அடக்க மடுவில் கண்ணன் குதித்தல்

அடங்க மறுத்த காளியனின்
அல்லல் இழைக்கும் தன்மையினை
மடங்கல் மாற்ற மனங்கொண்டான்
மாடு மேய்க்கப் போகையிலே
கடம்ப மரத்தின் மேலேறிக்
கைகள் தட்டி ஒலியெழுப்பி
நடுங்க வைக்கும் அம்மடுவின்
நடுவில் பாய்ந்து குதித்தானே

மடங்கல்- சிங்கம்(போன்ற கண்ணன்)

கறுத்த மதலை குதித்தவுடன்
கதித்த நீரும் விண்ணுயரத்
தெறித்துச் சிந்தத் திவலைகள்போய்த்
திசைகள் எட்டும் நனைத்தனவே
வெறுத்துச் சினந்த வெவ்வரவோன்
விரைந்து வந்து துடித்தெழுந்து
நிறுத்திப் பிடித்து நெரிப்பதற்கு
நீண்ட வாலைச் சுழற்றினனே

கதித்த – எழுந்த

வெடிக்கும் சினத்தால் நஞ்சுமிழ்ந்து
விரைந்து வந்த காளியன்மேல்
நொடிக்குள் ஏறி விரிபடங்கள்
நோகக் கண்ணன் குதித்தனனே
முடிக்க நினைத்து மிகமுயன்றும்
முகத்தைக் கொத்த இயலாமல்
அடிக்கும் அரவோன் வால்பற்றி
அழகன் ஆட்டம் தொடங்கினனே

.
காளிய நர்த்தனம்!

(பாம்பின் மேல் கண்ணன் நடனம்)

முத்தொளிரும் வெண்ணகையான் மொய்முகில்மைக் குழலுடையான்
கொத்துதற்குச் சீறிவந்த கொடியவனாம் காளியனின்
மெத்தவிரி படத்துமிசை விரைந்தேறிக் குதித்ததன்மேல்
தித்தித்தோம் தித்தித்தோம் திருநடனம் செய்தனனே

அடித்தெழுந்த வால்முறுக்கி ஆற்றலால டக்கியே
பிடித்திருந்த பாம்பேறிப் பின்னிநின்ற கால்களால்
பொடிச்சிறுவன் ஆடுகின்ற பொலிவுகொண்ட நாட்டியம்
வெடித்தெழுந்த தாமரையின் வியனழகை ஒத்ததே

சீறுகின்ற பேரரவோன் சிந்துகின்ற நஞ்சினால்
ஊறடைந்து கறுப்புநிறம் உற்றதுவே மடுநீரும்
வீறுகொண்ட நீலவண்ணன் வேறுவேறு நடைகளை
மாறிமாறி ஆடியதால் வானவர்கள் வழுத்தினார்.

சத்தமிட்டுக் காற்சதங்கை சலசலக்க வானிடியும்
மத்தளமாய்த் தானொலிக்க வல்லரவோன் சோர்வடையக்
கொத்துமலர்ப் பாதங்கள் குதித்தெழுந்த தாளநடை
தத்தித்தோம் தகதித்தோம் தத்தித்தோம் தகதித்தோம்

ஐந்தலைய பைந்நாகம் ஆத்திரத்தால் ஆர்ப்பரிக்கப்
பைந்தண்கார் விண்முகிலும் பையமழைத் துளிதெளிக்க
மைந்தனவன் ததிங்கிணத்தோம் வளர்நடையில் மேல்குதிக்க
நைந்தரவோன் உடல்நலிந்து நாவறண்டு நடுங்கினனே

 

பிழையுணர்ந்த காளியன் தஞ்சம் அடைதல்

பிஞ்சுக் கால்கள் திருநடனம்
பெரிய இடிபோல் தலைமேலே
கொஞ்சம் கொஞ்ச மாயிறங்கக்
குலைந்த அரவோன் செருக்கழிந்தான்.
கொஞ்சும் குழந்தை வடிவத்துக்
கோமான் பெருமை உளத்தறிந்தான்.
தஞ்சம் அடைந்தேன் என்பிழையைத்
தாங்கள் பொறுக்க வேண்டுமென்றான்.

கண்ணன் அறிவுரையும், காளியன் கடலுக்குச் செல்லுதலும்.

பாழும் பகைமை விட்டுவிட்டாய்
பாதம் பணிந்து தொட்டுவிட்டாய்
ஆழி செல்வாய் இப்பொழுதே
அமைதி கொண்டு குடும்பத்தார்
சூழ இருப்பாய் என்றருளத்
தொழுத அரவோன் உடனகன்றான்.
வாழி குலத்தின் விளக்கென்று
வாழ்த்தி ஆயர் மகிழ்ந்தாரே!

(தொடரும்)

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

தென்னாங்கூரில் ஓர் விட்டல் மகராஜ்!

மருத்துவக் கல்லூரி நண்பர், வந்தவாசியில் நல்ல பிராக்டீஸ், பல ஆன்மீக, சமூக

சேவைகளுக்கு ஆதாரமாக இருப்பவர் டாக்டர் ஶ்ரீதர். அவரும் அவர் மனைவி டாக்டர் சுசீலாவும் நான்கைந்து வருடங்களாகத் தென்னாங்கூர் பெருமாளை சேவிக்க அழைத்தபடி இருந்தார்கள். அதற்கொரு வாய்ப்பு கிடைக்க, தென்னாங்கூர் சென்றுவந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது!

தென்னங்கூர்  டவுன்   – திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில், காஞ்சீபுரம் – வந்தவாசி வழியில் உள்ளது. வயல்களும், இயற்கை எழிலும் கொஞ்சும் இடம்.  திருவண்ணாமலியிலியிலிருது 85 கிமி. காஞ்சீபுரத்திலிருந்து  36 கிமி தூரத்தில் உள்ள அழகிய இடம். இங்கு ஶ்ரீ பாண்டுரங்கன் – ஶ்ரீ ரகுமாயி தாயார் உறை திருக்கோயில் அமைந்துள்ளது. 

‘தக்‌ஷிண ஹாலாஸ்யம்’ – ‘ஞானிகள் ஞானமுதம் அருந்தும் இடம்’ – என்று குறிப்பிடப்படுகின்ற இடம். காடுகள் நிறைந்த இடம் என்பதால், ‘ஷதாரண்ய க்‌ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த இடத்தில்தான் மூன்று வயதுக் குழந்தையாக, பாண்டிய மன்னனால் கண்டெடுக்கப்பட்டவர் மதுரை மீனாட்சி அம்மன் என்ற புராணக் கதையும் உண்டு. அதைக் குறிக்கும் வகையில் இங்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆலயம் ஒன்றும் உள்ளது.

கொஞ்சம் கோயிலின் பின்னணி:

ஒரு புராண நிகழ்வு: “நீங்களா அல்லது உங்கள் பெயரா, எதற்கு வலிமை அதிகம்?” (’Thyname or Thyself’) என்று நாரதர் மகாவிஷ்ணுவைக் கேட்கிறார். அதற்கு மகாவிஷ்ணு ,”நான் வைகுண்டத்திலும் பள்ளி கொள்ளவில்லை, யோகிகளின் இதயங்களிலும் இல்லை. யாரெல்லாம் என்னைப் பக்தியுடனும் அன்புடனும் அழைக்கிறார்களோ, என் நாமாவைச் சொல்லிப் பாடுகின்றார்களோ அவர்களுக்கு முன்னால் நான் நின்றுகொண்டிருக்கிறேன்” என்றாராம். இதைத்தான் ஶ்ரீசுகப்பிரம்ம ரிஷி, “கலியுகத்தில், கேசவனின் பெயரையும், பெருமைகளையும் பாடுவது ஒன்றே அவனை அடைவதற்கான பக்தி வழி” என்கிறார். 

இறைவன் மீது பக்திப்பாடல்களையும், நாமாவளிகளையும் பாடும் முறை ‘நாமசங்கீர்த்தனம்’ – இசையுடன் கூடிய எளிய பக்தி மார்க்கம். நாம் வாழும் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நல்லவை, தீயவை எவை? போன்றவற்றைப் பற்றிய தெளிவான சிந்தனையுடன். அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட வாழ்க்கை வாழ்வதற்கு வழி செய்பவை ‘நாமசங்கீர்த்தனங்கள்’.

ஜோதிர் மடாதிபதி சுவாமி சிவரத்னாகிரி  (ஆதி சங்கரர் நிறுவிய 4 மடங்களில் ஒன்று) அவர்களின் பிரதம மாணவர் திரு. ஞானானந்த கிரி சுவாமிகள். கர்நாடக மாநிலத்தின் கோகர்னா வை அடுத்த மங்கலாபுரியில் பிறந்து, இந்தியா முழுவதிலும், மற்றும் திபெத், நேபாளம், பர்மா, இலங்கை என பயணம் செய்து ஆன்மீக நெறிகளை வளர்த்தவர். 1966 முதல் திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலூரில் தபோவனத்தில் தங்கி அருளாசி வழங்கியவர். 

ஞானானந்தருடைய பிரதான சீடர் திரு ஹரிதாஸ் கிரி சுவாமிகள் – சம்பிரதாய பஜனைகள் பாடும் திரு அண்ணாஜி அவர்களின் புதல்வர் – சின்ன வயது முதலே நாமசங்கீர்த்தனங்கள் பாடுவார்.  ஹரிதாஸ் சுவாமிகள், தன் குரு ஞானானந்த கிரி சுவாமிகளைச் சந்தித்த நிகழ்ச்சியே மெய்சிலிர்க்க வைப்பது. ஒருநாள் மலை உச்சியிலிருந்து கீழே சில நெருப்பு ஜ்வாலைகளைக் காண்கிறார் ஹரிதாஸ். கீழே சென்றால் அங்கு தீயிருந்ததற்கான எந்த சுவடும் இல்லை. சில தினங்களில் அதே ஜோதி ரூபத்தில் ஒருவர் வந்து வீட்டின் கதவைத் தட்டிச் செல்கிறார். இதைக் கேட்ட ஹரிதாஸ் அவர்களின் தந்தை, அவரைத் தன் குரு ’சுவாமி ஞானானந்த கிரி’ அவர்களிடம் அழைத்துச் செல்கிறார். குருவைக் கண்டவுடன் கண்ணீர் பொங்க அழுது வணங்குகிறார் ஹரிதாஸ் – ஜோதி வடிவமாக வந்து தன்னை அழைத்தவர் தன் குருவே என அறிந்துகொள்கிறார். குருவின் ஆசிப்படி, நாமசங்கீர்த்தனம் மூலம் பக்தியையும், சனாதன தர்மத்தையும் மக்களிடையே எடுத்துச் செல்கிறார், ஶ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகள். 1994, செப்டம்பர் 4 ஆம் தேதி, இமயமலை ருத்ரப்பிரயாகில் ஜலசமாதி அடைகிறார்.

ஹரிதாஸ் சுவாமிகளின் கனவில் தோன்றி குரு வழிநடத்த,  பந்தர்பூர் கருவரையில் இருந்து ஒரு கிருஷ்ணனை – விட்டல் என அழக்கப்படும் ஶ்ரீகிருஷ்ணர் – இறைவனின் உத்தரவின்படி, தமிழ்நாட்டின் தென்னாங்கூரில் பிரதிஷ்டை செய்து கோயிலும் கட்ட முடிவு செய்கிறார். பாண்டுரங்கன் -ரகுமாயி கோயில், ஞானானந்தகிரி பீடம், இரண்டு அன்னதானத்திற்கான இடங்கள், கோசாலா, நாமசங்கீர்த்தனம் செய்வதற்கான பெரிய ஹால் என அமைந்துள்ள பக்தி பூர்வமான இடம் இது!  “தக்‌ஷிண பந்தர்பூர்” என்று அழைக்கப்படுகிற க்‌ஷேத்ரமாக உள்ளது.

ஶ்ரீ பாண்டுரங்கா – ஶ்ரீ ரகுமாயி  (விஷ்ணு – மஹாலக்‌ஷ்மி) மூர்த்தங்கள் முழுவதும் சாலக்கிராமத்தில் உருவானவை. விட்டல் 12 அடி அடிஉயரத்தில்  (3 அடி உயரம் பந்தர்பூர் கோயிலில் குழந்தையாக), 10 அடி உயர ரகுமாயித் தாயாருடன், கண்கவர் கருமை நிறத்தில் விஸ்வரூபக் காட்சி இங்கே! சுதர்ஸனச் சக்ர ஆழ்வார், யோக நரசிம்மர், மற்றும் ஶ்ரீனிவாச பெருமாள் உற்சவ மூர்த்திகளாய் கர்பகிரகத்தில் எழுந்தருளியுள்ளார்கள்! நித்ய உத்சவ மூர்த்தி கோவிந்தராஜ பெருமாள். உடன் ருக்மினி, சத்யபாமா! கல்யாண உற்சவம், அன்னப் பாவாடை உற்சவம், கோகுலாஷ்டமி, ஆருத்ரா பெளர்ணமி, ரதோத்சவம் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

கோயிலின் பிரதான கோபுரம்  மகாராஷ்ட்ரா கோயில்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.  பூரி ஜெகன்னாத் கோயில் கோபுரம் மாடல். 120 அடி உயரம்;  9 1/2 அடி உயரக் கலசம்; அதன் மேல் காவிக்கொடி. கிழக்கு நோக்கிய கோபுரம். தமிழ்நாட்டில் வித்தியாசமான கோபுரம்! 

நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்கள், சாளுக்கிய ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளன. கிழக்குப்பக்கம் பலி பீடம், அழகிய சபா மண்டபம் (16 தூண்கள் – ஒவ்வொன்றிலும் விட்டல் – ரகுமாயியின் வித விதமான அலங்காரங்களுடன் காட்சி கொடுக்கும் வண்ணப் படங்கள், கண்னைப் பறிக்கும் அழகுடன்!). நாமசங்கீர்த்தனம் மற்றும் மெடிடேஷனுக்கான மண்டபம்.

கோயிலின் உள்ளே மகாமண்டபத்தில், கண்ணைக் கவரும் கிருஷ்ண லீலா, ராஸலீலா படங்களுடன், ஃபைபர் கிளாஸ் பெயிண்டிங்கில் கூரை, மற்றும் சுவர்கள் மனதைக் கவர்கின்றன. ‘விட்டல் இருக்குமிடம் அரண்மனை போல இருக்க வேண்டும்’ என்று சுவாமி ஹரிதாஸ் அவர்கள் விரும்பிச் செய்ததாக கோயில் நிர்வாகம் செய்யும் சம்பத் பட்டாச்சாரியார் கூறினார். பஞ்சலோகத்தில் இரண்டு பக்கமும் துவார பாலகர்கள் – வெள்ளியில் வேலைப்பாடுடன் கதவுகள், அர்த்த மண்டபம், கர்பக்கிரகம் – அர்த்தமண்டபத்தின் கூரையில் தசாவதாரம்  (ஃபிபர் கிளாஸ் பெயிண்டிங்கில்) என மிக அழகு! ஆசியாவிலேயே இங்கு மட்டும்தான் கிருஷ்ணரின் பாலலீலா ஓவியங்கள் ஃபைபர் பெயிண்டில் உள்ளதாக குறிப்பு ஒன்று கூறுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம். ராஜ அலங்காரம், வெங்கடாசலபதி-அலர்மேல் மங்கை, குருவாயூரப்பன் (பலவிதமான் பழங்களுடன்), ஶ்ரீராமர் அலங்காரம், ஶ்ரீ வேணுகோபாலன் அலங்காரம், பாற்கடலில் சயன அலங்காரம், வெண்ணைக் காப்பு அலங்காரம், காளிங்க நர்த்தன அலங்காரம் என சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

 இங்கு தலவிருட்சம், ‘தாமாலா விருட்சம்’ ஆகும். உத்தரப்பிரதேசத்தில் சகேத், ஒரிசா மாநிலத்தில் சாஷீகோபால், மற்றும் தென்னாங்கூர் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது இந்த விருட்சம்.   தமாலா மரம் — துவாபர யுகத்தில், கிருஷ்ண பகவான் இந்த மரத்தில் அமர்ந்து குழல் இசைக்க, பர்ஸானாவிலிருந்து ராதை வந்து அவரை அடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பக்தியடன் இவ்விருட்சத்தை 12 முறை சுற்றி வந்தால் வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

விட்டல்-ரகுமாயி சன்னதியில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் – மனமுருகி நாமசங்கீர்த்தனம் இசைக்கிறார்கள் – கேட்கிறார்கள். எப்போதும் மகிழ்ச்சியும் மங்களகரமும் பரவியுள்ள அருமையான சூழல் மனதுக்கு மிகவும் இதமானது.

காலையும் இரவும் பூஜை, ஆரத்தியைக் கண்டு களித்தோம். ஞானந்தகிரி குருபீடம், நாமசங்கீர்த்தன மண்டபம், அன்னதான மண்டபங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

முதல்நாள் மாலை வரும் வழியில், அகரம் கிராமம், வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மணிமண்டபத்தை தரிசித்தோம். 

தென்னாங்கூர் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆன்மீகத் தலம்!