Monthly Archives: August 2018
அட்டைப்படம் – ஆகஸ்ட் 2018
தலையங்கம் – கலைஞர்
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழக அரசியல் வானில் மறக்கமுடியாத நட்சத்திரத் தலைவர்கள் ராஜாஜி, காமராஜ், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா.
இவர்களைப்போல மக்கள் மனதில் இடம் பிடித்த தலைவர்கள் இனி தோன்றுவார்களா என்பது ஒரு முக்கியமான கேள்விக்குறி !
அவர்களில், இந்த மாதம் 7ஆம் தேதி நம்மை விட்டு மறைந்து சென்ற கலைஞர் மிகவும் வித்தியாசமானவர்.
சாமான்யர்
நாத்திகர்
தமிழ் வித்தகர்
கவிஞர்
கலைஞர்
கதாசிரியர்
ராஜதந்திரி
இவர் அரசை இந்திராகாந்தி அரசு பதவி நீக்கம் செய்தது.
அதே இந்திராகாந்தி துணைகொண்டு எம் ஜி ஆர் அரசை இவர் பதவி நீக்கம் செய்தார்.
எம் ஜி ராமச்சந்திரனால் 13 வருடம் வனவாசம் சென்றார்.
எம் ஜி ஆர் மறைவுக்குப் பிறகுதான் இவரால் கோட்டையைப் பிடிக்க முடிந்தது.
நாட்டு மக்களை உடன் பிறப்பாகக் கருதினார் – நாட்டுக்குத் தலைவரானார்
தன் மக்களுக்கே நாடு என்று கருதினார் – பாசத்தந்தையானார்
தன் துணையின்றி காங்கிரஸ் இந்தியாவை ஆளமுடியாது என்ற நிலைக்கு தி மு காவைக் கொண்டுவந்தார்
அந்த எதேச்சாதிகாரத்தில் பல ஊழல்கள் பிறக்க வழி வந்தன.
ஆனாலும் இவரை ஊழல் வழக்கில் கைது செய்யமுடியவில்லை
மாறாக இவர் ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை செல்லவைத்தார்
இவருக்குத் தோல்வியும் வெற்றியும் மாறிமாறி வந்தன .
ஆனாலும் தோல்வியில் துவளாதவர்.
எழுதிக்கொண்டே போகலாம் கலைஞரின் நெஞ்சின் நீதியை!
முடிந்தது ஒரு சகாப்தம்.
சரித்திரம் படைத்த கலைஞரின் இறுதி ஊர்வலக்காட்சியின் காணொளி இங்கே ! ( நன்றி : நியூஸ் கிளிட்ஸ் )
கலைஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது படித்த கவிதை இரங்கற்பா மிகவும் பிரபலமானது. அதையும் எம் ஜி ஆர் அவர்கள் இறந்தபோது அவர் பேசிய பேச்சும் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
உன்னால் சாவு வாழ்கிறது! -வைதீஸ்வரன்
DYING SWAN
1962 என்று நினைக்கிறேன். ரஷ்யாவின் புகழ் பெற்ற Bolshoi Ballet நடனக் குழு இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சிகளை அளித்தது, அந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிரசித்தி பெற்ற அமர காவியம் என்று இன்றும் சொல்லப்படும் நிகழ்ச்சி DYING SWAN என்கிற நாட்டிய நாடகம்.
நீண்ட கால்களும் மிக நளினமான உடல்வாகும் கொண்ட பெண்கள் அன்னப் பறவைகள்போல் உடலை அலங்கரித்துக்கொண்டு மேடையில் ஒரு கவிதையையே நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த நாடக நீரோட்டத்தின் மையப் பொருளாக இரண்டு அன்னங்களின் காதல் சரித்திரம் மிக நேர்த்தியாக நெகிழ்ச்சியுடன் நடனங்களில் பிரத்யட்சமாகும்.
காதலினால் இரு உயிர்களுக்கிடையே தோன்றும் நேசம்…ஏக்கம் பரிவு ஊடல் பிரிவை நினைந்த சோகம் மரணம்…மரணமும் வெல்ல முடியாத அந்த உயிர்களின் பிணைப்பு இப்படி எல்லாவித உணர்வுகளையும் பிரதிபலித்து அருமையான சங்கீதப் பின்னணியில் நிகழும் இந்த நாட்டிய நாடகம் பார்ப்பவரின் நெஞ்சத்தை மௌனமான துக்கத்தில் ஆழ்த்தும்.
இந்த நாட்டிய காவியத்தைப் பார்த்தபின்பு இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. அப்போது எனக்குள் எழுந்த சில கவிதை வரிகள் இப்போது மீண்டும் கிடைத்தது. இப்போது அது உங்களுக்காக… ……அன்புடன்…..
An afterthought of DYING SWAN
——————————————–
மூப்பின் முடிவே!
பிறப்பை நோக்கி
விரையும் பெருந்துடிப்பே!
அரச கம்பீரத்துடன்
சாவைத் தழுவிக் கொள்ளும்
வாழ்வின் உன்னதமே!
மௌனத்தில் துயில் கொள்ளும்
உயிரின் பேரிசையே!
அன்னமெனும் வெண்மைக்குள்
விம்முகின்ற ஆனந்தப் பூங்காற்றே!!
………………………
உன்னால் சாவு வாழ்கிறது!
பிளாக் ஹோல் – குறு குறு குறும்படம்
சும்மா சொல்லக்கூடாது; படம் ஜிவ்வுன்னு இருக்கும் !
சரித்திரம் பேசுகிறது! –யாரோ
குமார குப்தன்
காளிதாசன் மறைந்துவிட்டான்.
இரண்டாம் சந்திரகுப்தனும் மறைந்துவிட்டான்.
ஒவ்வொரு மன்னன் மறைந்தபோதும்…
அடுத்த மன்னனுக்கான அடிதடி என்பது – எழுதாத உலக நீதி ஆகிவிட்டது.
இதில் பொற்காலத்தைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்!
வென்றவர்கள் சரித்திரத்தில் பொன்னாகப் பதிந்தனர்…
தோற்றவர்கள் காலச்சக்கரத்தில் காணாமல் போயினர்…
யார் எப்படி வென்றார்கள் என்பதுபற்றி எப்போழுதுமே சரித்திரம் பல கதைகளைக் கூறுகிறது.
யார் வென்றாலும் அதில் நாம் சுவையான கதையை மட்டும் எடுத்து அசைபோடுவோம்!
சரி… நம் கதைக்குப் போவோம்..
கி பி 415:
நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான் இரண்டாம் சந்திரகுப்தன்.
மூத்த மகன் கோவிந்த குப்தன்!
பட்டத்து இளவரசன்!
மகாராணி துருவா தேவியின் மகன் அடுத்தவன் – குமார குப்தன்!
மன்னனுக்கு ‘கார்த்திகேயன்’ (நமது முருகப்பெருமான்) மீது அளவுகடந்த பக்தி.
அதனால் துருவாதேவியின் மகனுக்கு குமார குப்தன் என்று பெயரிட்டிருந்தான்.
சந்திரகுப்தனின் ஆட்சியில் கோவிந்த குப்தன், குமார குப்தன் இருவரும் பல போர் முனைகளில் வெற்றி சூடிக் கொடுத்தனர்.
சந்திரகுப்தனின் பொன்னான ஆட்சி அன்று ஒரு நாளில் முடிந்தது.
வழக்கம்போல நாடெங்கிலும் சோக வெள்ளம்..
எதிரி மன்னர்கள் ‘அடுத்து என்ன நடக்கும்’ என்று ஆவலுடன் காத்திருந்தனர்…
ஜகஜ்ஜோதியாக ஜொலிக்கும் உஜ்ஜயினி நகரம் – அன்று பொலிவிழந்து கிடந்தது.
மகாராணிகள் தங்கள் தங்கள் மகனுக்கு மன்னனாக என்ன வாய்ப்பு என்று ஆலோசித்திருந்தனர்.
அதை விட தங்கள் மகனுக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்தினர்.
ஏனென்றால்..
இளவரசர்களுக்கு…கிடைத்தால் அரியணை! கிடைக்காவிட்டால் கல்லறை!
பொதுவாக… மூத்தவனுக்கு வாய்ப்பு அதிகம்.
கோவிந்தன் மன்னனானான்!
நாட்கள் சில கடந்தது..
சரித்திரத்தில் ஒரு இடம் பிடிக்குமுன் கோவிந்த குப்தன் கல்லறையில் இடம் பிடித்தான்.
ஏன்.. எப்படி என்ற கேள்விகளுக்கு சரித்திரம் பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது..
நமக்கு எதற்கு வம்பு…சரித்திரம் அடுத்து என்ன சொல்கிறது என்று மட்டும் பார்ப்போம்..
துருவா தேவியின் மகன்… குமார குப்தன்… மன்னனானான்.
“குமாரகுப்தன் வெள்ளி நாணயம்”
விரைவில் குமார குப்தனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
குமார குப்தன் – கந்த பிரானின் பக்தன்- தன் மகனுக்கு ஸ்கந்தன் என்று பெயரிட்டான்.
30 வருடங்கள் நகர்ந்தது…
இளவரசன் ஸ்கந்த குப்தன் – மாவீரனாக வளர்ந்திருந்தான்.
போரில்லா வாழ்க்கை – காரணமாக மக்கள் பெருமூச்சுவிட்டுத் தங்கள் வாழ்வை மேம்படுத்திய காலம்..
அமைதியான நதியிலே ஓடம்- என்பதுபோல் அரசாங்கம் நடந்து வந்தது.
ஓடம்.. அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்.
அது போல் நர்மதைக்கரையில் மால்வா நாட்டில் ஒரு புரட்சி வெடித்தது.
மேற்கில் ஊழிக்காற்றுபோல் ஹூணரென்ற புயல் தாக்கத் துவங்கியது.
குப்தப்பேரரசின் பெரும்படை மேற்கைப் பாதுகாக்க அனுப்பப்பட்டது.
போர் மேகங்கள் குப்த நாட்டில் வானத்தை ஆக்கிரமித்தது..
குமார குப்தன் – வயோதிக குப்தன் ஆயிருந்தான்..
ஆனால் அவனுக்கு இருந்த ஒரு பெரும் பலம் … ஸ்கந்த குப்தன்
“ஸ்கந்தா! எதிரிகள் நாற்திசையிலும் சூழ்ந்திருக்கின்றனர்” குமாரகுப்தன் குரலில் வருத்தத்தை விட ஆதங்கம் மேலோங்கியிருந்தது.
“சரித்திரம்..குப்தரது தங்க காலத்தைத் தொலைத்தவன் நான் என்றா என்னைப் பற்றிச் சொல்லும்?”
ஸ்கந்த குப்தன்: “தந்தையே! எந்த ராஜ்யமும் அழியாமல் வாழ்ந்ததில்லை.. ராம ராஜ்யமும் ஒரு நாள் முடிந்தது.. மௌரியர்களும் அழிந்து போயினர். அது போல் குப்தர்களும் ஒரு நாள் காணாமல் போவர்…”
குமார குப்தன்: “….”
ஸ்கந்த குப்தன்: “இதனால் என்னை பயந்தவன் என்றோ .. கோழை என்றோ எடை போடவேண்டாம். சுற்றி வரும் பகை போகப் போர் புரிவேன். உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன்”
குமார குப்தன் : “….”
இப்பொழுது ஸ்கந்த குப்தன் கூறிய வார்த்தைகள் சரித்திரமாகியது..
ஸ்கந்த குப்தன்: “இன்னும் இரண்டு வருடங்களில் பகையனைத்தையும் தொலைத்து விடுவேன்..பிறகு, ஒரு மந்திரித்த ராஜ குதிரையை நாடு முழுதும் வெற்றிகரமாக உலவவிட்டு…அதை பலிசெய்து …நீங்கள் அஸ்வமேத யாகம் செய்வீர்கள். இப்படிதான் உங்கள் பெயர் சரித்திரத்தில் இடம்பெறும். அத்துடன் நமது குல தெய்வம் கார்த்திகேயன் உருவத்துடன் தங்க நாணயம் வெளியிடுவீர்கள். அத்துடன் மகேந்திராதித்யா என்ற பட்டப் பெயருடன் விளங்குவீர்கள். உங்கள் காலத்தில் அகில உலகும் புகழும்படி ஒரு பெரிய பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும். அது நாளந்தா பல்கலைக்கழகம் என்று பேர்பெற்று விளங்கும். மேலும் சுத்தமான தேனிரும்பினால் செய்யப்பட்ட பெரும் தூண் ஒன்று எழுப்பப்படும் . காலத்தில் அழியாத அந்தத் தூணில் உங்கள் வீரதீரங்கள் பறைசாற்றப்படும்…இவை அனைத்தும் நடைபெறாமல் என் உயிர் போகாது.”
(பின்னாளில்…
- குத்புதீன் ஐபக் என்ற சுல்தான் அந்த பெரும் தூணைச்சுற்றி மசூதி எழுப்பினான்.
- நாளந்தா பல்கலைக்கழகம், ஆப்கானிஸ்தானிலிருந்து வட இந்தியாவின்மீது படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய படைத் தளபதியால் சூறையாடாப்பட்டு, முற்றிலும் தீக்கிரையானது.
குமாரகுப்தனது கண் கலங்கியது – உள்ளம் நெகிழ்ந்தது..
‘மகன் என்றால் இவனன்றோ மகன்- இதைவிட எனக்கு வேறு பாக்கியம் என்ன இருக்கிறது’!
மகனை ஆரத் தழுவிக்கொண்டான்.
(நாளந்தா பல்கலைக்கழகம்)
நர்மதா பள்ளத்தாக்கு…
ரம்யமான மாலை நேரம்.
குப்த ராஜ்யத்தின் விளிம்பில் இருந்த நாடு.
நாடு என்பதைவிட காடு அது என்றுதான் சொல்லவேண்டும்.
நர்மதா கரையோரக் காடுகளில் வாசித்த காட்டு வாசிகளின் தலைவன் பெயர்:
புஷ்யமித்ரன்.
முகத்தில்.. சந்தன வீரப்பன் போல புதர் மீசை..
கண்களில் .. அனல் பறக்கும் கொடிய பார்வை..
நெஞ்சில்.. குப்தப் பேரரசையே விழுங்க ஆசைக் கனல்..
அவன்..
குப்த தானியக் கிடங்குகளை சூறையாட்டம் ஆடுவான் ..
குப்த ராணுவக் கிடங்குகளை அவர்கள் அறியாத இரவு நேரம் வேட்டையாடி ஆயுதங்களைக் கைப்பற்றுவான்..
குப்தர்களின் கருவூலங்களைத் தாக்கித் தங்க நாணயங்களை அபகரித்துக் கொள்வான்.
பணமும், பலமும் சேர்ந்ததால்… அனைவரும் அவனைக்கண்டு நடுங்கினர்..
அருகில் இருந்த நாடு ‘வகடக ராஜ்ஜியம்’ .
அங்கு குமாரகுப்தனின் சகோதரி பிரபாவதி குப்தா மகாராணி. அவளும் அரசாண்டு காலமானாள். அவளது மூத்த மகன் திவாகரசேனா – அரியணை ஏறுமுன் அகால மரணமடைந்தான். அடுத்த மகன்கள் தாமோதரசேனா- மற்றும் பிரவாரசேனா இருவரும் கூட்டு அரசராயினர்.
அவர்களுக்கு குமார குப்தன் சொந்த மாமன்தான்… ஆனாலும் வகடக அரசர்களுக்கு மண்ணாசை விடவில்லை..
புஷ்யமித்திரனை வைத்துக் குப்த ராஜ்யத்தைக் களவாடத் திட்டமிட்டனர்.
காலம் எப்படி யாரைக் கொல்லும் என்பதை யாரோ அறிவர்!
இரு வகடக மன்னர்களும் ஒரு விபத்தில் காலமாயினர்.
இளவரசன் ஒருவன் மன்னனானான்.
மாதம் ஒன்று தாண்டவில்லை..
அவனும் பூமியைத்தாண்டி காலன் கோட்டை சென்றான்!
இப்பொழுது அவனுடைய மகன்..
புத்தம்புதிய இளவரசன் தேவசேனா..
அவனுக்கோ வயது 8.
மந்திரி ஹஸ்திபோஜன் அரசாங்கத்தைக் கவனித்துக்கொண்டான்.
அவன் நர்மதா நதிக்கரையில் மால்வா நாட்டில் புஷ்யமித்திரனைச் சந்தித்தான்.
கூட்டணி அமைந்தது…
கொள்ளை … கொள்ளை… கொள்ளை..
அது குப்தராஜ்யத்தைக் கரையான் அரிப்பதுபோல் அரிக்கத் தொடங்கியது.
குப்த கருவூலம் மெல்லக் கரையத் தொடங்கியது.
ஒரு நாள் இரவு:
அமாவாசை நாள்.
காரிருளைக் கிழித்து நட்சத்திரங்கள் மினுமினுத்தது.
புஷ்யமித்திரன் காட்டு மாளிகையில் பெரும் யோசனையில் இருந்தான்.
‘அடுத்த குப்த ராஜ்யத்தின் சூறையாடல் எங்கு’ என்பதுபற்றி.
அதே நேரம்.. காட்டின் விளிம்பில் சிறு கூடாரம்.
அதில்..மண் தரையில் ஒருவன் பாய் விரித்துப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.
நடு இரவுதாண்டி இரண்டு சாமம் கடந்தது.
உறங்கிக் கொண்டிருந்தவன் கண் விழித்தான்.
கூடாரத்தை விட்டு வெளியே வந்து- தீப்பந்தத்தை லேசாக ஆட்டினான்.
காட்டிலிருந்து அருவிபோல படைவீரர்கள் திரண்டனர்.
காட்டு மாளிகையைச் சுற்றி வளைத்தனர்.
சிறிது நேரத்தில் காட்டு மாளிகை தீப்பிடித்து எரிந்தது..
புஷ்யமித்திரன் உறக்கத்தைவிட்டு வாளை எடுத்தான்.
அவனது வீரர்களும் திரண்டனர்.
அந்த இரவில்- தீப்பற்றி எரிந்த மாளிகையின் வெளிச்சத்தில் போர் நடந்தது.
புஷ்யமித்திரன் காயப்பட்டான்.. பிடிபட்டான்..
“ஸ்கந்த குப்தா! நீயா” –என்று புஷ்யமித்திரன் வியப்புடன் கூவினான்.
அஞ்சாநெஞ்சன் என்று அறியப்பட்ட புஷ்யமித்திரன் முகம் அன்று அச்சத்தைக் காட்டியது…
காயம்பட்ட புஷ்யமித்திரன் கீழே விழுந்து கிடந்தான்.
ஸ்கந்த குப்தனின் கால் புஷ்யமித்திரன் மீது பதிந்தது…
ஸ்கந்த குப்தன்: “புஷ்யமித்திரா! சரித்திரத்தில் உனது ஆட்டம் இன்றுடன் முடிந்தது.. இனி குப்த நாட்டுக்கு உன்னால் ஒரு தொல்லையும் இல்லை. கல்லறை செல்லும்வரை உனக்கு இனி சிறைதான். மேலும் உன்னுடன் கூட்டு சேர்ந்த வகடக மன்னன் இனி என் வாளுக்கு இரையாவான். வகடக ராஜ்ஜியம் இத்துடன் முடிந்தது”!
ஸ்கந்தன் உஜ்ஜயினி சென்று தந்தையிடம் விபரம் அனைத்தையும் கூறினான்.
“தந்தையே! ஒரு பிரச்சினை தீர்ந்தது.. இனி காந்தாரம் சென்று ஹூணரது படையெடுப்பை முறியடிப்பேன்”
சொன்னதைச் செய்தான்!
தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினான்.
ஒரு மகன் உறுதியுடன் தந்தைக்கு உதவி செய்தால்… எந்த தந்தை தான் வெற்றியாளராக மாட்டார்?
மன்னன் மனம் அமைதியடைந்தது…
“இனி நான் நிம்மதியாக உயிர் விடுவேன்” – என்றான் குமார குப்தன்.
இருப்பினும்..
ஹூணர்களைத் தோற்கடிக்க ஸ்கந்தன் படையெடுப்புகள் குப்தரது கஜானாவை காலி செய்தது- அவனது நினைவுக்கு வந்தது..
‘இனி குப்தரின் எதிர்காலம் என்னவாகுமோ?’
இறக்குமுன் – குமார குப்தனுக்கு – ஸ்கந்த குப்தன் அன்றொரு நாள் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது:
“ராம ராஜ்யமும் ஒரு நாள் முடிந்தது”
‘குப்த நாட்டின் முடிவும் அதுபோல முடியும்’ என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது.
அந்த நினைவுடன்… அவன் உயிரும் பிரிந்தது!
அடுத்து வரும் கதைகள் என்னவாயிருக்கும்?
விரைவில்…
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
விஷ்வகர்மாவின் ஆணைப்படி சூரியதேவனுக்கும் ஸந்த்யாவிற்கும் தனித்தனியாக சாந்துக்குளியல் ஏற்பாடு செய்யப்பட்டது.
நான்கு சேவகர்கள் சாந்து மண்டபத்தில் சூரியதேவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
சூரியதேவன் வந்த பறக்கும் கூண்டு அந்த மண்டபத்திற்கு வந்ததும் அந்த நால்வரும் சூரியதேவன் கூண்டிலிருந்து வெளியே வருவதற்கு வசதியாகக் கதவைத் திறந்து அவரை வரவேற்று சாந்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களின் தலைவன் சூரியதேவரை வணங்கி ,
” சூரிய தேவரே! இந்த சாந்துக் குளியலின் மகத்துவத்தைப்பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும்படி விஷ்வகர்மா அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்.
பொதுவாக காந்தச் சிகித்சை நடைபெற்றபிறகு உடல் முழுவதும் பற்றி எரிவதுபோன்ற உணர்ச்சி ஏற்படும். அது சந்திர காந்தக் கல்லின் மூலம் உடலை சாணை பிடிப்பதால் ஏற்படும் வெளி பாதிப்பு. அப்படிச் செய்வதன் மூலம் தங்கள் உடலின் வெப்பத்தைக் குறைக்க முடிந்ததது. அதே சமயம் உடலுக்குள் ஓடும் நரம்புகள் அனைத்தும் முடுக்கி விடப்படும். இது சிகித்சையின் எதிர்மறை விளைவு. இந்த இரண்டு விளைவுகளையும் சமன் செய்யவேண்டியது மிக மிக முக்கியம். அதற்கு உங்கள் ஒத்துழைப்புத் தேவை ” என்று பவ்யமாகக் கூறினான்.
சூரியதேவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். காந்த சிகித்சையோ அதன் வீரியத்தைக் குறைக்கும் மாற்று சிகித்சையான சாந்துக் குளியலோ எதுவும் தன்னைப் பெரிதும் பாதிக்காது என்று அவனுக்குத் தெரியும். ஸந்த்யாவின் மீது அவனுக்கு ஏற்பட்ட காதல் அவன் இதயத்தை முழுதும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் அவனுக்குச் சந்தேகமின்றிப் புரிந்திருந்தது. அதனால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பரபரவென்று பற்றி எரிவதுபோன்ற உணர்வு இருக்கிறது என்பதை உணர்ந்தான். அதுமட்டுமல்லாமல் அவன் நாடி நரம்புகளும் தூண்டப்பட்டு அவை ஸந்த்யாவின் தேகத் தேடலையே எதிர்நோக்கி இருக்கின்றன என்பது அவனுக்குத் தெள்ளெனத் தெரிந்திருந்தது.
காலையில் அவன் உதிக்கும்பொழுது பூலோகத்தில் ஆயிரமாயிரம் தாமரை மலர்கள் மலர்வதைப் பார்த்துப் பரவசமடைந்திருக்கிறான். ஆனால் அவன் ஸந்த்யாவின் தேகத்தைத் தொட்டுத் தழுவும்போது அவள் வெள்ளை உடலில் குபீர் குபீர் என்று ரத்தம் பாய்வதால் ஏற்படும் சிவப்புக் குமிழிகள், நரம்புகள் புடைப்பதால் ஏற்படும் பச்சை ஆறுகள் , பொன்னிற மயிர்க்கால்கள் சிலிர்ப்பதால் தோன்றும் பொன் மழை எல்லாவற்றிற்கும் மேலாக அமிர்தத்தைக் கடைந்து வைத்த அவள் இதழும் நெஞ்சகமும் இடையும் அவனுக்கு அளித்த பரவசத்திற்கு எதுவும் ஈடாகாது என்பதை நன்கு உணர்ந்துகொண்டான். அவளின்றித் தான் இயங்க முடியாது என்று அவன் நன்கு உணர்ந்ததன் காரணமாகவே இந்த சந்திர காந்தச் சிகித்சைக்கு ஒப்புக்கொண்டான்.
இந்த் சாந்துக் குளியல் அவன் காதல் வேகத்தையும் குறைத்துவிடுமோ என்றும் பயந்தான்.
இருப்பினும் விஷ்வகர்மாவின் சேவகர்கள் கேட்டுக்கொண்டபடி அந்த அறையிலிருந்த தங்கப் படுக்கையில் தன் ஆடைகளைக் களைந்து படுத்தான். அவன் தலைக்கு மேலே ஒரு பொன்னாலான பாத்திரம் கட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து பால் போன்ற ஒரு திரவத்தை மெல்லிய நூலிழைபோல அவன் நெற்றியில் வழிய வைத்தார்கள். அது ஏற்படுத்திய சுகானுபாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே இலேசாக சூடு செய்த எண்ணையை எடுத்துக்கொண்டு இருவர் சூரியதேவனின் கழுத்திலிந்து கால்வரை மெதுவாகவும் சற்று அழுத்தமாகவும் தொடர்ந்து தடவினார்கள். அவர்களின் கரங்களில் இருந்த மாயமோ நளினமோ வேகமோ ஏதோ ஒன்று அல்லது எல்லாமும் அவனை ஒரு மயக்க நிலைக்கு ஆளாக்கியது.
சூரியதேவன் கண்களை மூடிக்கொண்டான். புறக் கண்கள் மூடியதும் அகக் கண்கள் திறந்தன. ஸந்த்யாவே அவனுக்கு இரு புறமும் நின்று அவனுக்கு அந்த வாச எண்ணையைத் தடவுவதுபோன்ற மயக்க நிலை உண்டாயிற்று.
அதன் பின்னர் ஒரு பசுமையான சாந்தை அவன் உடல் முழுவதும் பூசினர். அதன் குளிர்ச்சி தன் வெப்பத்தை முழுதும் அழித்து நிலவைப் போல குளிர வைத்துவிடுமோ என்றும் பயந்தான்.
அவன் தலையில் வழிந்து கொண்டிருந்த பால் போன்ற திரவம் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. அவன் தலையில் பொதிந்திருக்கும் நரம்பு மண்டலம் அனைத்தையும் அமைதிப்படுத்தியது.
அப்போது விஷ்வகர்மா அறைக்குள் நுழைந்தது மயக்கத்திலிருந்த சூரியதேவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. விஷ்வகர்மாவைக் கண்டதும் சாந்தைப் பூசி முடித்த சேவகர்கள் அனைவரும் அவர் கண் ஜாடைக்கு இணங்கி அறையைவிட்டு வெளியேறினர்.
விஷ்வகர்மா தன் கையிலிருந்த வசியக் கோலால் சூரியதேவனின் உடலைத் தொட்டும் தொடாமலும் மெல்லத் தடவினார். கொஞ்சம் கொஞ்சமாக சூரியதேவன் தன் வசியத்திற்கு வருவதை உணர்ந்த அவரது கண்களில் மகிழ்ச்சி கரைபுரண்டது. அதில் கோடானுகோடி ஆசை தெளித்தது.
மெதுவாக சூரியதேவனின் மூடிய கண்களைப் பார்த்து ” சூரியதேவரே!” என்று அமைதியான குரலில் மூன்று முறை அழைத்தார்.
“சொல்லுங்கள்; நான் என்ன செய்யவேண்டும்?” – அவன் குரல் ஈனசுரமாக ஒலித்தது.
“மகாபிரும்மருத்ரன்.. மகாபிரும்மருத்ரன்.. மகாபிரும்மருத்ரன்..” என்று விஷ்வகர்மாவின் வாய் முணுமுணுத்தது.
அதே சமயம் ஸந்த்யாவின் தாய் விஷ்வகர்மாவின் ஆணைக்கு இணங்கி ஸந்த்யாவின் வாயில் மருந்தினை ஊற்றுவதற்காக வலம்புரிச் சங்கை அவள் வாயருகே கொண்டுசென்றாள். பாவம் அந்தத் தாய்க்குத் தெரியாது. அந்த மருந்து தன் மகள் வயிற்றில் அப்போதுதான் துளிர்விட்ட மூன்று கருக்களையும் கலைக்கும் மருந்து என்று.
எது எப்போது எப்படி நடக்கும் என்று ஊகிக்க முடியாத அந்த வேளையில் ராகு காலம் உதித்தது.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
தேவ ரகசியம் மனிதர்களுக்குப் போய்விடுமோ என்ற பயத்தை எமன் விதைத்திருந்தது அனைவர் மனதிலும் பதிந்திருந்தது. ஆரக்கிள் என்பது குறி சொல்லும் தேவதை என்றும், அது பின்னால் நடக்கப்போவதை முன்னாடியே தெரிவிக்கும் என்ற கதையை தத்தாம்ஸானந்தா ஆரக்கிள் என்றால் என்ன என்பதை விளக்கவே கூறினார். ஆனால் அது தேவர்களுக்குத் தகவல் பாதுகாப்பைப்பற்றி இப்படி ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்று தத்தாம்ஸானந்தா முதலில் உணரவில்லை.
பாதுகாப்புப்பற்றிய விவரத்தை ஏற்கனவே தெரிவித்து அனைவரது ஒப்புதலையும் பெற்ற தத்தாம்ஸானந்தா ‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி ‘ என்பதுபோல ஆரக்கிள் கதையை சொல்லப்போக, அவர்களுக்கு மீண்டும் தகவல் பாதுகாப்பு பயம் வந்துவிட்டதே என்று கவலைப்பட்டார். பாதுகாப்புப்பற்றிய பயத்தைப் போக்காதவரையில், தனக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தார் தத்தாம்ஸானந்தா.
குறி சொல்லும் அந்த ஆரக்கிளுக்கும் இப்போது இருக்கும் ஆரக்கிள் தகவல் மையத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கினார்.
இன்னும் பல கடினமான ஜார்கனை எல்லாம் போட்டு தகவல் பாதுகாப்பு என்றால் என்ன என்பதைப்பற்றி எடுத்துக் கூறினார். ‘ஏண்டா கேட்டோம் என்று முருகனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைத்துத் தேவர்களுக்கும் தோன்றியது. பரமசிவன் தத்தாம்ஸானந்தாவைப் பேசாமல் இருக்க பேசாமல் அவரை நெற்றிக்கண்ணால் எரித்து விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தார். அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பார்வதி மெதுவாக அவர் காதருகில் ‘ ஆ ஊன்னா நெற்றிகண்ணைத் திறக்காதீங்கோ’ என்று எச்சரித்தாள். விநாயகருக்கோ முருகன் மேல் கோபம். கேள்வியைக் கேட்டது மட்டுமில்லாமல் ரெண்டு கண்ணை மட்டும் திறந்துகொண்டு பாக்கி பத்துக் கண்ணையும் மூடிக்கிட்டு தூங்குகிறானே என்று. எமனும் சித்திரகுப்தனும் நெளிய ஆரம்பித்தார்கள். சரஸ்வதியும் லக்ஷ்மியும் தாங்கள் பூலோகம் சென்றபோது பார்த்த சரஸ்வதி சபதம் சினிமாவைப்பற்றி மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். பரந்தாமனுக்குக் கவலையே கிடையாது. அந்த இடத்தையே பாற்கடலாகப் பாவித்துப் பள்ளி கொண்டுவிட்டார்.
ஒரு வழியாக தத்தாம்ஸானந்தா தனது கதா காலட்சேபத்தை முடிக்கும்போது , தகவல் பாதுகாப்பு என்பது உங்கள் அனைவரது கைகளில் தான் இருக்கிறது என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். எல்லோரும் திடுக்கிட்டு முழித்தார்கள்.
ஆம். நீங்கள்தான் இந்த தகவல் மையத்திற்கு அதிபதி. யார் யாருக்கு , எந்த அளவுக்குத் தகவல் தெரியலாம் என்பதை நீங்கள் முடிவு செய்துவிட்டால் அதன்படி ஆரக்கிளில் டேட்டாபேஸ் பாதுகாப்பு வளையங்களை அமைத்துவிடலாம். உதாரணமாக பிறப்பு ரகசியத்திற்குப் பொறுப்பாளராக பிரும்மா இருக்கலாம். அதைப்போல இறப்பு ரகசியத்துக்குக் கண்காணிப்பாளராக சிவபெருமான் இருக்கலாம். எமனுக்கு அன்றைய பொழுதில் யார் மடிவார்கள் என்ற தகவல் மட்டும் கிடைத்தால் போதுமானது. இறப்பவர்களின் பாவ புண்ணியத் தகவல் மட்டும் சித்திரகுப்தனுக்குப் போதும். எல்லாத் தகவல்களும் மேகத்தில் இருக்கும் ஆரக்கிள் டேட்டாபேஸில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். சித்திரகுப்தன் தகவல்களைப் பார்த்துவிட்டுத் தன்னுடைய சிபாரிசுகளைக் குறிப்பிட்டால் போதும். எமபுரிப்பட்டணம் சென்று ஒவ்வொருவருக்கும் சித்திரகுப்தன் பாவ புண்ணியக் கணக்கைப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதனால் ரிடன்டன்சி என்று சொல்லப்படும் ஒரே வேலை திரும்பத் திரும்பச் செய்வது ஒழியும். மேலும் பாவ புண்ணியங்கள் அது நடக்கும்போதே டேட்டாபேசில் ஏறிவிடும். ஆனால் எது பாவம் எது புண்ணியம் என்பதை நீங்கள் முதலிலேயே முடிவு செய்யவேண்டும்.
இரண்டாவது கட்டமாக சித்திரகுப்தன், எமன் இருவர் தலையீடும் இல்லாமல் நேரடியாகவே ஒரு மனிதன் தான் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப சொர்க்கமோ அல்லது நரகமோ நேரடியாகப் போய்விடுவான். எமனும் சித்திரகுப்தனும் இந்தத் திட்டத்தால் தங்கள் வேலை பறிபோய் விடுமே என்று நெளிந்தனர். அதை உணர்ந்த தத்தாம்ஸானந்தா, இந்தத் திட்டத்தினால் எமன் சித்ரகுப்தன் இருவருக்கும் பளு குறைவதனால் அவர்கள் சொர்க்கம் நரகம் இரண்டையும் சிறப்பான முறையில் நிர்வகிப்பதுடன் அவற்றை மேம்படுத்தவும் முடியும் என்றும் அதற்குத் தனியாக புது பிராஜக்ட் அமைக்க வேறு டீம் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
பூலோகத்தில் எல்லாவற்றையும் இணையதளம் மூலமாகச் செய்யும்போது மேலோகம் என்று சொல்லப்படும் இந்த உலகில் இன்னும் பழைய முறையில் வேலைகளைச் செய்து வந்தால் அது சரியாகாது என்று வாதத்துடன் தன் நீண்ட உரையை முடித்தார் தத்தாம்ஸானந்தா.
திட்டக்குழு அங்கத்தினர்கள் அனைவரும் அதை ஒப்புக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்துகொண்டு திட்டத்திற்குக் கொள்கை அளவு ஒப்புதல் அளித்தனர்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை – பிராஜக்ட் ரிபோர்ட் தயார் செய்து அங்கத்தினர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவதாகவும் தத்தாம்ஸானந்தா கூறினார். பிராஜக்ட் ரிபோர்ட் தயார் செய்யத் தனக்கு உதவியாக வியாசரையும் பிள்ளையாரையும் அனுப்பும்படி ஒரு கோரிக்கையையும் முன் வைத்தார்.
அதுவரை ஏனோதானோவென்று இருந்த பிள்ளையார் திடுக்கிட்டார். ஏற்கனவே மகாபாரதம் எழுதப் போய் தனது ஒரு கொம்பு உடைந்து போய் வீரபாகு, முருகன் இவர்கள் தன்னை ஒற்றைக் கொம்பன் என்று கேலி செய்வது பொறுக்கமுடியாமல் இருந்தார். இப்போது இன்னொரு கொம்பும் ஓடிந்தால் இவர்கள் என்னவெல்லாம் சொல்வார்கள் என்று தயங்கி நின்றார். முருகன் தனக்கு இந்த வேலை வந்துவிட்டால் பேசாமல் கோபித்துக்கொண்டு மலைக்குப் போய்விடலாமோ என்று நினைத்தார். ‘இந்த முறை பழனி வேண்டாம். ஊட்டி கொடைக்கானல் போவது என்றும் யோசிக்க ஆரம்பித்தார்.
கிளையண்டின் மனோபாவத்தை நன்கு அறிந்த தத்தாம்ஸானந்தா பிள்ளையாரிடம் ஒரு லேப்டாப்பையும் மவுசையும் கொடுத்தார்.
“நீங்கள் உங்கள் கொம்பை முறித்து எழுதவேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கு மவுஸ் ஏற்கனவே நன்கு பழக்கம். கொஞ்சம் டிரெய்னிங் கொடுத்தால் வியாசர் சொல்லச் சொல்ல நீங்கள் எழுதிக்கொண்டே வரலாம்” என்றார். அதுமட்டுமல்ல இந்த ‘எமபுரிப்பட்டணம் பிராஜக்ட்’ அங்கத்தினர் அனைவருக்கும் ஒரு ஆப்பிள் 10 போனும் தரப்படும். நீங்கள் பிராஜக்ட் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள உபயோகமாயிருக்கும். அத்துடன் பூலோகத்தில் மிகவும் பரவலாக இருக்கும் ஒரு பயன்பாட்டையும் தருகிறோம்.” என்றார் தத்தாம்ஸானந்தா.
” மிஸ்டர் தத்தாம்ஸானந்தா ! அது மட்டும் வேண்டவே வேண்டாம் ” என்று அலறினார் திரிலோக சஞ்சாரி நாரதர் !
கதை சொல்லல் – கதை கேட்டல் – கதை வாசிப்பு –
“கதை சொல்லும் கலை” ( இதை கிளிக் செய்தால் அந்தப் புத்தகத்தை இணையதளத்தில் படிக்கலாம்) என்ற புத்தகத்தை முருகபூபதி அவர்கள் எழுதி பாரதி புத்தகாலயம் மூலம் வெளியிட்டிருக்கிறார்.
அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் . அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான கருத்துக்கள் நம் பார்வைக்கு:
கதைசொல்லல், கதை வாசிப்பு இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தமிழகத்தில் மேடைப்பேச்சு கேட்க வரும் கூட்டம் ஏன் வாசிப்புக்கு இல்லை, மேடைப்பேச்சாளர்கள் அளவுக்கு வருமானமும் புகழும் ஏன் எழுத்தாளர்களுக்கு இல்லை, ஏன் எழுத்தாளர்களை மேடைப் பேச்சாளர்களாக ஆக்க இடைவிடாது முயல்கிறார்கள் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டால் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளமுடியும். ஏறத்தாழ அனைவருமே குழந்தைப் பருவத்தில் பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள். கோயில்களிலும் கூத்தரங்குகளிலும் கதைகளைக் கண்டு, கேட்டு ரசித்தவர்கள். அவர்களிலிருந்து ஏன் வாசகர்கள் மிகமிகக் குறைவாக உருவாகி வருகிறார்கள்?
கதை கேட்பதென்பது ஒரு செவியனுபவம். கதை வாசிப்பது விழியனுபவம், மொழியனுபவம். இரண்டும் முற்றிலும் வேறு. மாறுபட்ட மூளைத் திறன்களால் எய்தப்படுபவை. மாறுபட்ட பயிற்சிகளைக் கோருபவை. கதை வாசிப்பு என்பது குழந்தைக்கு வாசிப்பை நேரடியாக அறிமுகம் செய்வது. நாம் வாசித்துக் காட்டி மிக மெல்லக் குழந்தையை வாசிப்புக்கு இட்டுச் செல்வது. கதை சொல்வது கேள்வியாளனாகவே குழந்தையை வடிவமைப்பது.
கதை வாசிப்பு, கதை சொல்லல் இரண்டுமே ஆரம்ப. கட்டத்தில் கதை என்ற வடிவை, கதையை கற்பனையில் விரித்தெடுக்கும் அனுபவத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்வதற்கு அவசியமானவை. ஆனால் எப்போது குழந்தை கதைச் சுவையை அறிந்துவிட்டதோ அதன்பின் அதை வாசிப்பை நோக்கிக் கொண்டுசெல்லவேண்டும். அதுவே அமர்ந்து அந்தரங்கமாக வாசிக்கப் பயிற்சி அளிக்கவேண்டும். அக்குழந்தையே வாசகனாக ஆகும். கதைமட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தை வாசிப்பில் சுவையிலாது போகக்கூடும்
ஏனென்றால் கதை சொல்லும்போது நம் உணர்வுகளையும் நாமே அளிக்கிறோம். அது ஒரு நிகழ்த்துக் கலையென்று ஆகிவிடுகிறது. கதை வாசிப்பின்போது அது உணர்வற்ற மொழிவெளிப்பாடாக மட்டுமே உள்ளது. அதை உணர்வாகவும் காட்சியாகவும் மாற்றிக்கொள்ளும் பொறுப்பு குழந்தைக்கு வருகிறது. கதை சொல்லும்போது ஓர் உரையாடல் நிகழ்கிறது. குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப கதை வளர்கிறது. அது நிகழ்த்துக் கலையின் இயல்பு. கதை வாசிப்பில் அம்சம் இல்லை. அது புத்தகம்போலவே முடிந்துவிட்ட வடிவம். வாசகனுக்கேற்ப அது மாறாது. அதை வாசகன்தான் மீட்டி வளர்த்துக் கொள்ளவேண்டும்.
ஆகவே ஆரம்ப நிலையில் கதை சொல்லல், பின்னர் கதை வாசிப்பு, அதன்பின் நேரடி வாசிப்பு என்பதே குழந்தையை வாசிப்புக்குப் பயிற்றுவிக்கும் வழியாக இருக்கமுடியும்.
என்ன அழகான கருத்தோவியம் ! நம் குழந்தைகளுக்கு முதலில் கதை சொல்லப் பின்னர் அவர்களையே வாசிக்கத் தூண்டுவோம்.
இதுதான் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் அனைவரும் செய்யவேண்டிய பணி !
செய்வோம் !
அம்புப்படுக்கை விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி
இந்த ஆண்டிற்கான(2018) யுவ புரஸ்கார் விருதுபெற்றுள்ள Suneel Krishnan அம்புப்படுக்கையை வாசித்து முடித்தேன்.
(வெளியீடு:
யாவரும் பதிப்பகம்)
” அம்புப்படுக்கை” என்றவுடன் தன்னிச்சையாக பீஷ்மர் நினைவுக்கு வருகிறார்.
சுனில் கிருஷ்ணன் முன்னுரையில்…
// பீஷ்மர் காலத்தின் முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும்போதுமெனக் கதறி அரற்றவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராகப் பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச் செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றை தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப்போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி தனது கேள்விகளுக்கு விடைதேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது, இக்கதை மாந்தர்களைப்போல.//
இத்தொகுப்பில் பத்து கதைகள்.
அதில் முதல் கதை ” வாசுதேவன்” இக்கதையை படித்த அன்று என்னால் தூங்க முடியவில்லை. பிழைப்பது அரிது என நூறு சதவீதம் தெரிந்தபிறகும் ஏதோவொரு நம்பிக்கையில் எந்த உணர்வுமற்றப் படுத்திருக்கும் உயிர்.
சற்றே கை/ கால் விரல்களை அசைத்தால்கூட ஒரு நம்பிக்கை( துளி) துளிர் விடுவதை விரைவில் குணமாகிவிடுவான்/ வாள் என பெரு நம்பிக்கையாக மாற்றிக்கொள்ளும் அந்நபர் சார்ந்த மனிதர்களை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். அதனாலே எனக்கு அந்தக் கதையப் படித்த அன்று வேறு கதைகளைப் படிக்க முடியவில்லை.
// எஞ்சியிருப்பவர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும் ,செல்வத்தையும் உறிஞ்சுவதைத் தவிர
என்ன பயனுள்ளது இந்த உயிருக்கு? உண்மையில் என் உயிருக்கு என்ன பயன்? அல்லது பிறக்கும்,மரிக்கும் எந்த உயிருக்கும் தான் என்ன பயன் இருந்திட முடியும் விளங்கவில்லை.//
தானும், நண்பனுமாகப் படுக்கையில் கிடக்கும் ” வாசுதேவனுக்கு” ஆயுர்வேத சிகிச்சை செய்யப்போகும் ஒருவனின் அனுபவம்.
இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதையென்று சொல்வேன் .
* ” பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்”
தன் பேத்தியின் அழுகுரல் கேட்டவுடன் பதறி எழுந்து வருகிற லெட்சுமண செட்டியார், மருமகள் வேலைக்குப் போவதால் அக்குழந்தையை முழுநேரமும் பார்த்துக் கொள்கிறவர்.
தன் பேத்திக்காக, நாக்குக்கோ மனசுக்கோ வாகாக இருக்கிறதென்பதற்காக // பொன்னழகைப் பார்ப்பதற்கும் //என்கிற ஆயர்பாடி மாளிகையில் எனத்தொடங்கும் பாடலை
பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் எனப்பாடுகிற தாத்தா!
தான் இரண்டு நாள் ஊரிலில்லாதபொழுதில் பேத்தியைத் தூங்க வைக்க செல்பேசியில் spbகுரலில் அதே பாடலை கேட்டுப் பழகி தான் வந்தபிறகும் அதையே பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டாளோ என நினைத்துக் கலங்கிப்போகிற அந்தப்பெரியவரின் உணர்வுகள் ..அருமை.
ஒருநாள் அக்குழந்தை எதற்கும் சமாதானமாகாமல்
அவர் , பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் ” எனப்பாடினவுடன் தாத்தாவைப் பார்த்துச் சிரிப்பதாகக் கதையை முடித்திருப்பது அழகோவியம்.
மூன்றாவதாக ” பேசும் பூனை”
செல்போன் ஒவ்வொருவரின் அத்யந்தமாகிவிட்டதைச் சொல்கிறது.
அப்படி ஆனதின் பின்விளைவுகளில் ஒன்றுதான் அந்தரங்கம் என்பதேதுமில்லாமல் அத்தனையும் கடைவிரிக்கப்படுவது. கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை விலகிப்போக வைத்து செல்போனின் செயலிகள் ஒரு மனுஷியை ஆட்கொள்வதை விவரிக்கிறது.
அடுத்ததாக ” குருதிச்சோறு”
அக்கதையில் விவரிக்கப்படுகிற ஸ்ரீ அன்ன சௌரக்ஷாம்பிகைபற்றிய கதை சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
எளிய மனுஷியான ” பாலாயி” தனக்குக் கிடைத்ததைப் பஞ்சத்தில் வாடுகிற, தன்னைத் தேடிவந்து கேட்கிற அத்தனைபேருக்கும் கொடுத்தருளுவதில் அன்னபூரணியாக இருக்கிறாள்.
கூண்டு, திமிங்கலம் ,ஆரோகணம் இந்த கதைகளை நான் மீண்டும் படிக்கவேண்டும்.
புனைவுகதைகளைப் புரிந்து ,ஆழ்ந்து படிப்பதற்குப் பழக்கம் வேண்டுமென நினைக்கிறேன்.
போலவே, 2016 கதை :
வின்ஸ்டன் ஸ்மித் & நரோபா இருவருக்குமிடையேயான உரையாடல் இடம்பெறுகிறது
இக்கதையைப் படித்து விமர்சிக்கவும், எனக்கு வெகுகாலமாகுமெனத் தோன்றுகிறது.
எல்லாக்கதைகளிலும் மரணம் அல்லது மரணத்தின் சாயை ஓரிழையாக வந்துகொண்டே இருக்கிறது. அதுபோலவே சர்ப்பமும், சாமியாடியும். நாகர்கோயில், கன்யாக்குமரிக்காரர்கள் எழுதும் கதைகளில் உலவிடும் யட்சி இவர் கதைகளிலும் இருப்பதுபோல எனக்குள் ஒரு பிரமை.
தொகுப்பப் படித்து முடித்ததும்.
இளம் தலைமுறை எழுத்தாளர்களில் பல நூறு கதைகளை எழுதிப் பழக்கப்பட்டதுபோன்ற சரளமான நடையும், மொழியும் வாய்க்கப்பெற்ற டாக்டர். சுனில் கிருஷ்ணனுக்கு (ஆயுர் வேத மருத்துவர்) என் வாழ்த்துக்கள்.
பொன்னியின் செல்வன் – பாம்பே கண்ணன்
நண்பர் பாம்பே கண்ணன், ஏற்கனவே கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் கதையை ஒலிப்புத்தகமாகக் கொண்டுவந்து மாபெரும் வெற்றி அடைந்தவர்.
பொன்னியின் செல்வனை எப்படியாவது திரைவடிவில் பார்க்க ஒரு டெலி பிலிம் எடுக்கவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு – தவம்.
எம் ஜி ஆர் கமலஹாசன் மணிரத்னம் இவர்களெல்லாம் முயற்சித்து முடியாமல் கைவிட்ட காவியம் இது.
பாம்பே கண்ணனும் அவரது நண்பர் வெங்கடராமனும் தங்கள் தரப்பில் ஐம்பது லட்சம் போட்டு மேற்கொண்டு ஐம்பது லட்சத்தை வாசகர்களிடமிருந்து ‘மக்கள் நிதி ‘ ( CROWD FUNDING) மூலமாகத் திரட்ட எண்ணியுள்ளனர்.
அதற்கான பணியைத் துவங்கிவிட்டனர்.
விஷ்பெர்ரி என்ற பம்பாய் நிறுவனம் இவர்களுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்டித்தர சம்மதித்து அதற்கான பணிகளைத் துவங்கிவிட்டது.
இதுவரை கிட்டத்தட்ட 3 லட்சம் வந்துள்ளன. இன்னும் 43 நாட்களில் எதிர்பார்த்த 50 லட்சம் வரவேண்டும்.
பொன்னியின் செல்வனை திரைவடிவில் பார்க்க நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.
குவிகம் தன் பங்கிற்கு 10000 ரூபாய் கொடுத்து இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வாழ்த்தியுள்ளது.
குவிகம் ஆசிரியரும் நண்பர்கள் உறவினர்கள் மூலமாக நிதி திரட்டவும் முடிவு செய்திருக்கிறார்.
குவிகம் வாசகர்களை பொன்னியின் செல்வன் ரசிகர்களிடம் இந்தச் செய்தியைச் சேர்ப்பித்து அவர்களை ஒரு கணிசமான தொகையை விஷ்பெர்ரி மூலம் கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அதற்கான லிங்க் கீழே:
/campaign/ponniyin-selvan/#/campaign-new
பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு இந்தத் திட்டத்திற்கு உதவுங்கள் : அதற்கான வீடியோ இங்கே!
ஐநூறு ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் வரை நீங்கள் தரலாம்!.
வாருங்கள் புதிய சகாப்தம் படைப்போம்!
சைனீஸ்தியா – மாறுணர்வு
அது என்ன மாறுணர்வு?
சத்தத்தை நாக்கால் ருசிப்பது – வண்ணங்களைக் காதால் கேட்பது போன்ற மாறுபட்ட உணர்வு.
குழந்தை பிறந்ததும் அதன் மூளை எல்லா உணர்வுகளையும் ஒரே மாதிரிதான் உணர்ந்துகொள்ள முடியுமாம்.
நாளடைவில் கண்கள் பார்க்கவும், காதுகள் கேட்கவும் , நாக்கு ருசியையும், மூக்கு வாசனையையும் பிரித்து உணரும் சக்தி மூளைக்கு எட்டுமாம்.
வயதான பிறகும் சிலருக்கு சத்தத்தின் மூலம் வண்ணங்களை உணரும் நிலை தோன்றினால் அதுதான் சைனீஸ்தியா *** என்று சொல்லப்படும் மாறுணர்வு.
குறும்படத்தைப் பாருங்கள்
ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது – வாழ்வை
இணைக்கும் பாலம் இது !
ஏதோ தத்திக்கொத்தி நானும் வேலை செய்ய ஆரம்பித்தேன். வானத்தை வில்லாக வளைக்கிற வேலையென்று இல்லாவிட்டாலும் நான் பதிவு செய்யும் விஷயங்கள்போலப் பல வேறு கிளைகள் பதிவு செய்தவை நிறுவனத்திற்கு சில முடிவுகள் எடுக்க ஆதாரங்களாக இருக்குமாம். ஒரு சில சமயங்களில் சில விளக்கங்களும் கேட்கப்படும்.
பதிவுகள் ஓரிரு வார்த்தைகளாக இருந்தால் ஏதோ சமாளித்து எழுதிவிடுவேன். மூன்றாவது வார்த்தை என்றாலே ஒரு நேர்கோட்டில் வராமல் கோணல் மாணலாக வந்து தொலையும். நேராக எழுத மிகுந்த முயற்சி செய்வேன். ஓரளவிற்கு வெற்றிதான்
நான் குடியிருந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு சிறுமி திண்ணையில் உட்கார்ந்துதான் வீட்டுப்பாடம் எழுதுவாள். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு ஏதோ சந்தேகம் கேட்டாள். நான் சொன்ன பதில் அவளுக்கு உபயோகமாக இருந்ததா என்று தெரியாது. ஆனால், எனக்கு ஒரு புதிய ஐடியா கிடைத்தது. அவள் எழுதும்போது எழுதவேண்டிய கோட்டிற்கு சற்று மேலே ஒரு ஒரு-அடி ஸ்கேலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு எழுதுவதைக் கவனித்தேன். எழுத்துகள் அந்த ஸ்கேலை முட்டுமாறு எழுதினால் எழுத்துக்கள் ஒரே அளவில் இருக்க, கீழே உள்ள கோட்டின் உதவியால் நேராக இருக்க, வார்த்தைகள் வரிசையாக ஒழுங்காகத் தோற்றமளித்தன. பிறகென்ன! மறுநாள் முதல் எனக்கு ஸ்கேல்தான் உபகரணம். கூட வேலை செய்யும் நண்பர் ஒருவர் என்னை ஸ்கேலாயுதம் என்றுகூட கேலி செய்வார்.
போஸ்ட் ஆபீஸ் நான் குடியிருந்த தெருவில்தான் இருந்தது. நான் அலுவலகம் போகும் நேரமும், தபால்காரர் தபால்களோடு வெளியே வரும் நேரமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அவருக்காக நான் சிறிது நேரம் காத்திருப்பது வழக்கம். ஏதோ ஒரு படத்தில் ஜெய்சங்கர்போல ‘ஒருவர் மனதை ஒருவர் அறிய .. ’ என்று பாடிக்கொண்டு வரமாட்டார். அவர் அந்தத் தெருவிலேயே ஒரு வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்து தெரு வாரியாகத் தபால்களைப் பிரிப்பார். கடிதம் எதிர்பார்க்கும் சிலர் அங்கு வந்து நின்றுவிடுவார்கள். அந்த சமயம் அவர் கோபிகா ஸ்திரீகள் சூழ்ந்த கண்ணன்போல எனக்குக் காட்சி தருவார்.
முதலில் அலுவலகத் தபால் என எனக்குக் கொடுத்துவிடுவார். யாரவது “எனக்கு தபால் உண்டா?” என்று கேட்டால் தேடி எடுத்துக் கொடுத்துவிடுவார். இல்லையென்றால், “இப்பத்தான் எழுதிக்கிட்டு இருக்காங்க போலிருக்கு.” என்பார். திங்கள் கிழமைகளில் பஸ்ஸை விட்டிறங்கித் தபால் ஆபீஸ் வழியாக வந்து கடிதங்களை வாங்கிக்கொண்டு அலுவலகம் வருவேன்.
நம்மில் பலருக்குக் காலையில் நியூஸ் பேப்பர வந்தால்தான் பொழுதே விடியும். என்றேனும் தினசரி இல்லை என்றால் என்னவோ போல்தான் இருக்கும். அதுபோல, தபால் வரவில்லை என்றால் அலுவலக மேலதிகாரி சேஷையனுக்கு ஒரு வேலையும் ஓடாது. என்றாவது எங்கள் அலுவலக வேலை நாளாகவும் தபால் அலுவலக விடுமுறையாகவும் இருந்தால், அரை மணிக்கு ஒருமுறை “இன்னிக்குத் தபால் கிடையாதில்ல?” என்று சொல்லிக்கொண்டு இருப்பார்,
ஒரு திங்கட்கிழமை ஊரிலிருந்து நேரடியாக ஆபீஸ் வந்துசேர்ந்தேன். பஸ் பிரேக் டவுன் காரணமாகச் சற்று தாமதம் ஆகிவிட்டது. அந்த பஸ்சிலேயே என்னுடன் மற்றொரு ஊழியரும் வந்தார்.. இருவரும் லேட். நேராக அலுவலகம் போய்விட்டோம். தபால்காரரும் ஊரெல்லாம் சுற்றித் தபால் கொடுத்துவிட்டு நேரம் கழித்தே எங்கள் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வந்தார். அதற்குள்ளாக சேஷய்யன் சார் ‘இன்னும் வரலியா?’, ‘இன்னும் வரலியா?’ என்று பலமுறை கேட்டுவிட்டார். அப்படி ஒன்றும் மிக முக்கியமான தபால் வந்து உலகம் மாறிவிடப் போவதில்லை என்றாலும் அப்படி ஒரு ஆரவாரம்.
தபால்காரரும் வந்தார். கடிதங்களை என்னிடம் கொடுக்க, நான் சேஷய்யன் சாரிடம் கொடுத்தேன்.
பத்து நிமிடம் கழித்து என்னைக் கூப்பிட்டார் சேஷய்யன். நான் உள்ளே போனேன்.
“உங்களுக்கு வேண்டியவங்க யாராவது மெட்ராஸில் இருக்காங்களா?” என்று கேட்டார்.
“என் அண்ணன் இருக்கிறான்” என்றேன்
“நீங்கள் மெட்ராஸில் ஒரு வாரம் தங்கவேண்டும். அவரோட தங்கிக்கொள்ளலாம் இல்லியா?” என்று கேட்டார். ஒன்றும் புரியவில்லை.
ஒரு கடிதத்தை என்னிடம் காட்டினார். அப்போது மெட்ராஸ் சென்னை ஆகவில்லை. சென்னை மாநிலம்தான் தமிழ்நாடு ஆகியிருந்தது. சென்னையில் இருந்த எங்கள் பயிற்சி மையத்தில் என்னை ஐந்து நாள் பயிற்சிக்கு வரச்சொல்லி இருந்தார்கள். புதியதாக வேலைக்குச் சேரும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பயிற்சி உண்டாம். இது தமிழ்நாட்டுக்கான மையம் என்பதால் மொழி ஒரு தடையாக இருக்காது என்று தோன்றியது.
சென்னை செல்ல 20 நாட்கள் இருந்தன. முதலில் சென்னை போய்வர இரயிலில் முன்பதிவு செய்யவேண்டும் என்றார்கள். வரும் தகவலை அண்ணனுக்குத் தெரிவித்துத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துகொள் என்று மற்ற ஊழியர்கள் அறிவுறுத்தினார்கள்.
தாமதம் செய்யாமல் அன்றே ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். முதலில் கடிதம். உண்மையைச் சொல்லப்போனால் இதற்கு முன் கடிதம் எழுதியது ஒரே ஒருமுறை. பள்ளியில் படிக்கும்போது (எட்டாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ) தான். உள்ளூரில் நடக்கும் திருவிழாவிற்கு நண்பன் ஒருவனை அழைப்பதாக வகுப்பில் உள்ள எல்லோரும் எழுத வைக்கப்பட்ட பாடத் திட்ட கடிதம். தபாலாபீஸ் காணாத கடிதம்.
எல்லோரும் ‘நண்பனுக்கு’ , ‘வாசுவிற்கு’, ‘அன்புள்ள ராமுவிற்கு‘ என்று தொடங்கியிருந்தார்கள். ஒரு மாணவன் மட்டும் ‘அன்பு நண்ப’ என்று தொடங்கியதிற்கு ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார். அந்த மாணவன் யாரென்று தெரிவிக்கவில்லை. அது நான்தான். விஷயம் என்னவென்றால், எனக்கு ‘அன்பு நண்பன் கண்ணனுக்கு’ என்றுதான் தொடங்க எண்ணம். கவனக் குறைவால் பாதியிலே நிறுத்திவிட்டு அடுத்த வரிக்குப் போயிருக்கிறேன்.
அந்தக் கடிதத்தில் என்ன குற்றம் குறையிருந்தாலும் பெரிய பிரச்சினை இல்லை. மதிப்பெண் சற்று குறையும். இப்போது நமக்கு வேண்டும் என்கிற தகவல் கிடைக்கவேண்டும் என்றால் நம் கடிதம் தெளிவாக இருக்க வேண்டும் அல்லவா?
போகட்டும்… இப்போது பிரச்சினைகள் இரண்டு.
- ஆபரேஷன் முன்பதிவு:- நான் மாவட்டத் தலைநகர் புகைவண்டி நிலையம் போகவேண்டும். படிவத்தைச் சரியாகப் பூர்த்தி செய்து டிக்கட் வாங்கிக்கொள்ள வேண்டும். தேதியும் வண்டியும் குழப்பமின்றித் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். நல்ல வேளையாக சென்னைக்குத் தினம் மாலையில் ஒரு வண்டிதான்.
- ஆபரேஷன் தபால்:- அண்ணனுக்குத் தகவல் தெரியவேண்டும். அவன் முகவரி தெரியாது. வீட்டிற்குக் கடிதம் எழுதி , நான் வரும் விவரம் அண்ணனுக்குத் தெரிவித்து, எப்படி அவனை சந்திப்பது, தங்குவதற்கு என்ன ஏற்பாடு என்று கேட்டுவைத்துக் கொள்ள வேண்டும். நான் வாரமுடிவில் வீட்டுக்குப் போகும்போது விலாசமும் மற்ற விவரங்களும் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் .. ஆபரேஷன் தபால் முடிக்கலாம். தபால் அலுவலகம் சென்று விட்டேன். அஞ்சலட்டையை விட உள்நாட்டுக் கடிதம் என்னும் ‘Inland Letter’ எழுதிவிடலாம் என்று முடிவெடுத்தேன். ஊரில் எங்கள் அடுத்த வீட்டு மாமா எப்போதும் அஞ்சலட்டை தான் எழுதுவாராம். ஒரு அஞ்சலட்டைக்கு மேல் விஷயம் இருந்தால் இரண்டு அஞ்சலட்டை எழுதுவாரேதவிர உள்நாட்டுக் கடிதம் உபயோகிக்க மாட்டார். காரணம் மிக எளிது. அஞ்சலட்டை அப்போது 15 காசு. உள்நாட்டுக் கடிதம் 50 காசு. மூன்று அஞ்சலட்டை எழுதினாலும் 5 காசு மிச்சம்.
அவருக்கு இன்னொரு வித்தியாசமான குணாதிசயமும் உண்டு. மற்றவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்கக்கூடாது என்ற கோட்பாடு எல்லாம் அவருக்குக் கிடையாது. எங்களுக்கு வருகின்ற தபால் அவருக்கு முன்னால் கிடைத்துவிட்டால், “என்ன … உங்கள் சித்தப்பாவுக்கு பேரன் பிறந்திருக்கிறானாமே?” என்று கேட்டுக்கொண்டே கடிதத்தைக் கொடுப்பார். ஒன்றுவிட்ட அத்தை எப்போது கடிதம் எழுதினாலும், அவர் குடும்பத்தில் யாருக்கு என்ன உபாதை இருந்தது, எப்போது சரியாயிற்று என்று கட்டாயம் எழுதுவார். அதில் ஒன்றைப் பாராட்டவேண்டும், சென்ற கடிதத்தில் எங்கே முடித்தோம் என்று நினைவில் கொண்டு காலக்கிரமத்தை சரியாகத் தொடர்வார். அடுத்த வீட்டுக்காரர் கையில் அது போன்ற கடிதங்கள் அவ்வப்பொழுது மாட்டும். “அத்தையிடமிருந்து வர கார்டுக்குக் கூட டெம்பரேச்சர் இருக்கும்” என்பார் அந்த மாமா.
நான் அஞ்சலட்டைதான் எழுதும்படியாக ஆயிற்று. உள்நாட்டுக் கடிதம் இருப்பு இல்லையாம். அஞ்சலட்டையும் “ரிப்ளை கார்டு” தான் இருந்தது. வசதிதானே. அப்பாவோ அம்மாவோ பதிலெழுதக் கார்டு கவர் வாங்கப் போகவேண்டாமே! இல்லையே…, அண்ணனுக்கு எழுத தபாலாபீஸ் போய் வாங்கத்தானே வேண்டும்.
ரிப்ளை கார்ட் உபயோகித்துப் பார்ப்போமே என்று தோன்றியது. ஒரு அட்டையில் எனது விலாசமும் மற்றொரு அட்டையில் அப்பாவில் விலாசம் எழுதினேன். கவனமாக அப்பாவின் விலாசம் எழுதிய அட்டையில் விவரம் எழுதி ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துவிட்டு பெட்டியில் போட்டுவிட்டேன். வெற்றி….
ஆபரேஷன் முன்பதிவு:- நான் இரயிலில் பயணம் செய்தே , ஏன் பயணம் செய்ததே, மிகக் குறைவு. அதுவும் எப்போதும் பொது பயணிகள் பெட்டிதான், முன்பதிவு என்று ஒன்று உண்டு என்பதே வெகு நாட்கள் கழித்துத்தான் தெரியும். இரயிலில் ஏறுவதும் இறங்குவதும் எப்போதுமே ஒரு சர்க்கஸ்தான்.
இப்போது உள்ளதுபோல இணையம் கிடையாது. ஏன்.. பதிவுகள் கூட கணினிமூலம் கிடையது. முன்பதிவிற்கு மாவட்டத் தலைநகர் போகவேண்டும். அங்குதான் முன்பதிவு வசதி இருந்தது.. முன்பதிவு இயங்கும் நேரத்தில் அங்கே இருக்கவேண்டும் என்றால் , எங்கள் அலுவலகம் முடியும் முன்பே பஸ் பிடித்தால்தான் நடக்கும். சேஷய்யன் சார் பெருந்தன்மையோடு அனுமதி அளித்தார். இரண்டு பேனாக்கள் (சரியாக எழுதுகிறதா என்று பரிசீலித்து விட்டு) எடுத்துக்கொண்டேன். விண்ணப்பத்தில் எழுதவேண்டியவற்றை ஒரு தாளில் குறித்துக்கொண்டேன். (அதுவும் இரண்டு பிரதிகள். ஒன்று சட்டைப் பையில் ஒன்று கைப் பையில்.)
இரயில் நிலையத்தில் விண்ணப்பப் படிவம் எடுத்துக்கொண்டேன். மூன்று படிவங்கள் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது என்பது உட்கார்ந்து எழுத ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது ஒருபடிவத்தை நிரப்பினேன். ஒரே அடித்தல் திருத்தல். கைவசம் படிவங்கள் இருந்ததால் நிதானமாக அடுத்த படிவத்தை நிரப்பினேன்
மூன்றாவது படிவத்தில் திரும்பிவரும் பயணம் பற்றிய விவரங்களை எழுதும்போதுதான் – “ரிடர்ன் ஜர்னி’ என்னும் பகுதியை கவனித்தேன். மீண்டும் ஒரு படிவம் எடுத்துக்கொண்டு நிதானமாக நிரப்பி முடித்தபோதுதான் ஒரு ஞானோதயம்.. சரியாக எழுதியிருந்த இரண்டாம் படிவத்திலே காரியத்தை முடித்திருக்கலாம் என்று. (தாய் பூனைக்கும், குட்டி பூனைக்கும் சுவற்றில் இரண்டு ஓட்டைகள் போட்ட விஞ்ஞானியும் நானும் ஒன்றுதானே?)
அங்கிருந்த அந்த உதவியாளர் பூதாகாரமான ஒரு பேரேட்டை எடுத்தார். அதன் பக்கங்களைப் புரட்டும்போது அவை எளிதில் கிழியக்கூடிய மெல்லிய தாள்கள் என்பதை கவனித்தேன். நல்லவேளை! சில கூட்டுறவு அலுவலக பதிவேடுகள்போல கார்பன் வைப்பது – கிழிப்பது என்றெல்லாம் இல்லை. ஒரு இடைஞ்சலும் இல்லாது டிக்கட்டுகள் கிடைத்தன. சரியாகவும் இருந்தன. மாபெரும் வெற்றி.
மறுநாள் மதியம் நான் போட்டிருந்த ரிப்ளை கார்ட் எனக்கே திரும்பி வந்துவிட்டது . எந்த அட்டையில் எந்த முகவரி எழுதவேண்டும் என்று அதிலேயே அச்சடித்திருந்தார்கள். நான் மாற்றி எழுதி உள்ளேன். பாதி வழியிலேயே இரண்டு அட்டையும் இணைபிரியாமல் என்னிடமே திரும்ப வந்துவிட்டது. முதல் வெற்றி .. படு தோல்வியாக மாறிவிட்டது.
மறுநாள் விடுப்பெடுத்துக்கொண்டு நேரடியாக ஊருக்குச் சென்று அண்ணனுக்குக் கடிதம் எழுதி ஒருவாறாக வேலை முடிந்தது. அந்த ரிடர்ன் கார்டும், ரிடர்ன் ஜர்னியும் மறக்க முடியாத விஷயங்கள்.
இனி என்ன … மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்தான் ….
உணர்ச்சி – குறும்படம்
ராணி பாட்டி – பொன் குலேந்திரன்
அரியாலை (Ariyalai) யாழ்ப்பாணத்தில் இருந்து A9 கண்டி வீதியில் ஏறத்தாழ 4 கிமீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியில் முன்னொருகாலத்தில் மரஅரிவு ஆலைகள் பல காணப்பட்டதினாலேயே. இப்பகுதி அரியாலை என்றழைக்கப்பட்டது. இப்பகுதி கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது. யாழ்ப்பாணக் குடாக்கடலை நோக்கித் தவழ்ந்து செல்லும் கடலேரியும் அமைந்திருக்க, மேலும் தென் திசையில் பாண்டியன் தாழ்வு – கொழும்புத்துறையைச் சென்றடையும் வீதியும், மேற்கே கச்சேரி – நல்லூர் வீதியும், வடக்கே செம்மணி- வீதியையும் எல்லைகளாகக்கொண்டு அழகு மிளிரக் காட்சி தரும் கிராமம் ஒன்றினைக் காணலாம்
அந்தக் கிராமத்தில் பிரபல்யமான வேளாளர் குடியைச் சேர்ந்த செல்வராணி பாட்டிக்கு வயது தொன்னுற்று ஒன்பது என்று சொன்னால் ஒருவரும் நம்பப் போவதில்லை. இன்னும் அவளுக்கு ஒரு பல்லும் விழவில்லை. அவள் பல் தேய்க்கப் பாவிப்பது வெப்பம் தடி அல்லது ஆலம் விழுது. அவள் இருந்த பூர்வீக வீட்டில் இருந்து இருநூறு யார் தூரத்தில் கடலேரிக் கரைக்கு அருகே ஒரு பெரிய ஆலமரம். அம் மரத்துக்குக் குறைந்தது நூறு வயதுக்குமேல் இருக்கும். ராணி பாட்டி அந்தத் தள்ளாத வயதில் அவ்வளவு தூரம் நடந்து சென்று ஆலமரத்தில் உள்ள விழுதப் பிடுங்கப் பல் தேய்த்து , குளத்தில் குளித்து வருவது அவள் செய்யும் செயல்களில் ஓன்று. ராணி நீச்சல் தெரிந்தவள்.
அவள் வாழும் மூன்று அறைகள் உள்ள வீடு அவளின் தந்தை சங்கரலிங்கம் அவளுக்குக் கொடுத்த சீதனம வீடு . செல்வராணியின் புருஷன் ராஜலிங்கம், தெனியாயாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் சகல வசதிகளோடு பெரிய துரையாக வேலை செய்தார் . அமைதியானவர். கால் பந்தாட்ட வீரர் கூட. அவர் படித்தது பிரபலமான சுண்டுக்குளியில் உள்ள பரியோவான் கல்லூரியில்.. .
செல்வராணி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் படித்து. பத்தாம் வகுப்புப் பரீட்சையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களில் ஏ(A) க்கள் பெற்று, மேலும் படிப்பைத் தொடராது பதினறு வயதானபோதே தூரத்து உறவினரான ராஜலிங்கத்தைத் திருமணம் செய்தவர். சாதிப் பிரச்சனை அவர்களின் திருமணத்தில் இருக்கவில்லை, காரணம் ராஜலிங்கம் சங்கரலிங்கத்துக்கு தூரத்துச் சொந்தம்.
திருமணமாகிப் பதினைந்து வருடங்களுக்குள் அவள் மூன்று மகன்களையும் இரு மகள்களையும் ராஜாவுக்குப் பெற்றுக் கொடுத்தாள் . அவர்களை வளர்த்துப் படிப்பித்து நல்ல இடத்தில திருமணம் செய்துகொடுத்த பெருமை செல்வராணிக்குச் சேரும். படிக்கும்போதே தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டினாள்.
அரியாலை கிராமத்தில் பல பெண்களுக்குப் பிள்ளைப்பேறு பார்த்த மருத்துவிச்சி ராணி பாட்டியை தெரியாதவர் அவ்வூரில் இல்லை. ராணி கைராசிக்காரி. அவள் கை பட பிள்ளை பிறந்தால் ஒரு பிரச்சனையும் தாயுக்கு இருக்காது. அதோடு போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவளத் துணையும் ( Counselling) செய்தாள். போர் காரணமாக கனடாவுக்குப் புலம் பெயர்ந்தும் அவளின் சேவை தொடர்ந்தது.
தன் ஊரில் ஒரு காலத்தில் செய்த சேவைக்கு அவள் பணம் வாங்கியதில்லை . அப்படி இருந்தும் பிரசவம் பார்த்த குடும்பம் அவளின் மருத்துவிச்சிக் கூலியையும் ஒரு சேலையும் கொடுக்கத் தவறுவதில்லை . அவள் நச்சுக் கொடி அறுத்த குழந்தையின் காது குத்து விழாவுக்கு அவளை அழைக்கவும் தவறமாட்டார்கள்.
செல்வராணி கால் சுளுக்கு பார்ப்பதிலும் கெட்டிக்காரி. அவள் காலால் பிறந்ததால் அவள் சுளுக்குப் பார்த்தால் மூன்று நாட்களில் சுளுக்குப் போய்விடும் என்பது ஊர் மச்கள நம்பிக்கை.
தெய்வ நம்பிக்கையும், ஆவி நம்பிக்கையும் வேரூன்றியுள்ள நாட்டுப்புறச் சமூகத்தில் நம்பிக்கை மந்திர மருத்துவமும் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதனால் சில சமயம் ராணி பாட்டி பார்வையும் பார்த்து மந்திரித்துத் தலையில் திருநீறு போட்டால் தேகத்தில் இருக்கும் நோய் ஓடி ஒளிந்துவிடும். அவளுக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது ஊர் பேச்சு.
இரு காதுகளிலும் பிரகாசமாக மின்னும் பெரிய தோடுகள். மூக்கில் ஒரு மூக்குத்தி. சுருக்கு விழாத தோல் . முகத்தில் ஒரு புன்சிரிப்பு. இதுதான் செல்வராணிப் பாட்டியின் தோற்றம் .
ராணி பாட்டியின் பேரன் ரமணன் ஒரு டாக்டர். மரபணுப் பொறியியல் துறையில் மரபணுவால் தோன்றும் நீரிழிவு, நீரக வியாதி, புற்று நோய், இருதய நோய் போன்றவற்றின் அடிப்படைக் காரணத்தைக் காண சில வைத்தியர்களோடு ஆராய்ச்சி செய்துவந்தான். தன் பாட்டியும், அவளின் மூதாதையரான கொப்பாட்டன், பாட்டன், தந்தை நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள், வியாதிகள் இல்லாது வாழ்ந்தவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு நாள் தன் பாட்டியோடு அவன் உரையாடும்போது,
” பாட்டி உங்கள் மூதாதையர் நீண்ட காலம் வாழ்ந்து மரணித்தவர்கள். அவர்கள் இந்துக்களானபடியால் அரியாலையில் உள்ள செம்மணிச் சுடலையில் தகனம் செய்ததாகப் பாட்டா சொல்லி அறிந்தேன். அது உண்மையா?”
” உண்மைதான் ரமணா. நான் படித்த கல்லூரியில் படித்த 19 வயது கிருஷாந்தி என்ற மாணவியை 1996 இல் கூட்டாக இராணுவத்தினர் கற்பழித்து அந்த செம்மணிச் சுடலையில், அவளையும், அவளின் தாய், தம்பி, இன்னுமொரு உறவினரையும் கொலைகாரர்கள் புதைத்த சம்பவம் எனக்கு இன்றும் என் நினைவில் இருக்கிறது. அந்த மாணவியின் தாயை எனக்குத் தெரியும். கற்பழித்துக் கொலை செய்த ஆறு பேருக்கு 1998 ல் மூன்று நீதிபதிகள் மரணதண்டனை விதித்தார்கள். 19 வருடங்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் உயிரோடு ஜெயிலில் இருக்கிறார்கள். காரணம், அவர்கள் இராணுவத்தினர் என்பதால் .
“ இதுதான் தர்மம் இல்லாத சுயநலம் கலந்த அரசியல். அது சரி பாட்டி! இந்த வயதிலும் பாடி, நீங்கள் மக்களுக்கு சேவைகள் செய்து வருகிறீர்கள். உங்கள் மரணத்துக்குப் பின் தொடர்ந்து மக்களின் நீண்ட வாழ்வுக்குச் சேவை செய்யலாம் அல்லவா?”
“ நீர் சொல்வது எனக்கு புரியவிலை ராசா, சொஞ்சம் விளங்கத்தான் சொல்லுமேன்” ராணி பாட்டி பேரனுக்கு சொன்னாள்.
“ பாட்டி உங்கள் மூதாதையர் உங்களைப்போல் நீண்ட ஆயுள் உள்ளவர்களாக வாழ்ந்தார்கள் . இது என் கருத்துப்படி நீண்ட வியாதி இல்லாத வாழ்வு மரபணுவோடு தொடர்புள்ளது. இதுபற்றிய ஆராய்ச்சியில் மூன்று வைத்தியர்கள் சேர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் மரணத்தின் பின் உங்கள் உடலை மரபணு பொறியியல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தத் தானம் செய்வதைப்பற்றி நீங்கள் ஏன் இன்னும் சிந்திக்கவில்லை?”
“நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி நீ சொல்லியிருகிறாய் ரமணா. என் உடல் எரிந்து ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாது சாம்பலாகுமுன் மருத்துவ ஆராய்சிக்குப் பயன்படுத்தி வருங்காலத்தில் மானிடர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க உதவட்டும் . இதைப்பற்றி நான் விரைவில் முடிவெடுக்கிறேன்” என்றாள் டாக்டர் ரமணனின் ராணி பாட்டி.
****
ஏப்ரல் மாதத்தில் அவளின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட 5 பிள்ளைகள், 10 பெரப்பிள்ளைகள், 4 பூட்டப் பிள்ளைகள். 2 கொப்பாட்டப் பிள்ளைகள், இனத்தவர்கள், ஊர் சனங்கள், ஆக மொத்தம் 51 பேர் கொண்டாட ஆயித்தங்கள் செய்தார்கள். அவள் பிறந்தது முதலாம் உலக யுத்தம் முடிவுபெற்ற 1918 ஆம் ஆண்டு.
ராணி பாட்டி, ஊரில் பல பெண்களுக்கு மருத்துவிச்சி வேலைசெய்து குழந்தையின் தொப்புள் கொடி அறுத்த பலர் இப்போ வைத்தியர்கள், பொறியிலாளர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் . ஆசிரியர்கள் வணிகர்களாக இருக்குறார்கள். பிரசவம் பார்த்து ஆண் பெண் குழந்தைகளைத் தாயின் வயற்றில் இருந்து சிசேரியன் ஒப்பரேசன் இல்லாமல் உலகுக்கு கொண்டு வந்தவள் ராணி பாட்டி
****
அனறு 2018 ஏப்ரல் 14 ஆம் திகதி நூறாவது பிறந்த தின விழா கொண்டாட்டம். அவள் பிறந்தது தமிழ் புத்தாண்டு தினத்தில். அவள் வீட்டில் ஒரே கூட்டம். கணவனை மூன்று வருடங்களுக்கு முன்பே அவள் இழந்தும், அவள் விதவை கோலத்தில் சமூகத்தில் தோன்ற அவள் விரும்பவில்லை.முற்போக்கு கொள்கைகள் உள்ளவள் . வெள்ளை சேலை அணியவில்லை. நெற்றியில் உள்ள குங்குமத்தை நீக்கவில்லை. பார்த்தவர்கள் அவளை விதவை என்று சொல்லமாட்டார்கள் .
அன்று ஜூலை மாதம் வழமை போல் புனர் வாழ்வு என்ற தலைப்பில் சிறு கதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரவு தூங்கப் போனவள், காலையில் கண் விழிக்கவில்லை. நித்திரையில் அவள் விரும்பியதுபோல் அவளின் உயிர் பிரிந்தது. ராணி பாட்டியின் கட்டிலுக்கு அருகில் உள்ள மேசையில் ஒரு கடித உறை இருந்தது . அதை மூத்த மகன் எடுத்துப் பிரித்தபோது அதற்குள் ஒரு கடிதம் இருந்தது.
அக்கடிதம் ராணி பாட்டி தன் முத்து முத்தான எழுத்தில் எழுதிய ஒரு பக்கக் கடிதம். மகன் அதை எல்லோருக்கும் வாசித்துக் காட்டினான்.
” இந்தக் கடிதம் நானாகவே தீர்மானித்தபின் எழுதிய கடிதம். நான் என் மரணத்தின் பின் என் உடலை மரபணு பொறியியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்த தானம் செய்துவிட்டேன். இதற்கான சட்ட ஒழுங்குகளை ஏற்கனவே என் பேரன் டாக்டர் ரமணன் செய்துவிட்டான். நான் தேவையான பத்திரங்களில் கையெழுத்து வைத்துவிட்டேன். டாக்டர் ரமணனும் அவனின் மனைவியும் அதற்கு சாட்சிகளாக கையெழுத்து ஏற்கனவே போட்டு விட்டார்கள் . என் கணவர் இருந்திருந்தால் அவரும் சாட்சியாகக் கையெழுத்து போட்டிருப்பார் . அவர் மரணிக்க முன் அவரோடு பேசி அவரின் சம்மதத்தையும் பெற்றுவிட்டேன்.
இனி நீங்கள் என் மரண வீட்டுக்கு ஆடம்பரமாக விலை உயர்ந்த சந்தனப் பெட்டி எடுத்து. அதில் என் உடலை மலர் வளையங்கள் ஓடு பார்வைக்கு வைத்து, வீண் செலவு செய்யவேண்டாம். அந்தப் பணத்தை நான் உளவளத்துணை செய்த, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழும் நிலயத்துக்குக் கொடுங்கள். வேண்டுமென்றால் உங்கள் விருப்பப்படி எனக்கு நினிவாஞ்சலி வைப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.
இப்படிக்கு
செல்வராணி ராஜலிங்கம்
ராணி பவனம்
சுண்டுக்குளி வீதி, அரியாலை –
யாழ்ப்பாணம்.
அம்மா கை உணவு (6) -ஜி.பி. சதுர்புஜன்
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
- ரசமாயம் ஜூலை மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- போளி புராணம் !
போளி நல்ல போளி – இதோ
பாத்திரமே காலி !
நெய் தடவித் தின்றால்
நிறுத்த முடியா போளி !
பார்த்தால் ரொம்ப சாது – வெறும்
சப்பாத்தி போல் இருக்கும் !
வெல்லம் தேங்காய் போட்டால் – அதை
வெளுத்துக் கட்டத் தோன்றும் !
மேற்கு மாம்பலம் வந்தால்
நினைவில் நிற்கும் போளி !
சும்மா வாயை மென்றாலும் – சுவை
நாவில் நிற்கும் போளி !
நேரம் காலம் இல்லை – இரண்டு
போளி உள்ளே தள்ள !
தின்னத் தின்னத் தோன்றும்
திகட்டாதிந்த போளி !
மென்மையான மனிதர்
மெலிதாய் போளி தின்பர் !
வயது கூடி விட்டால் – அவர்
மென்று மென்று தின்பர் !
வெங்கட்ரமணா போளி – அது
தலையணை போல் இருக்கும் !
தேங்காய்ப் பூரணம் அதிலே – சற்று
தாராளமாய் இருக்கும் !
நாள் கிழமை வேண்டாம் – நான்
எந்நேரமும் தின்பேன் !
இரண்டு போளி தின்றால் – அவை
இன்னும் இரண்டு கேட்கும் !
பருப்பு மற்றும் தேங்காய் என
வகை வகையாய்ப் போளி !
கார மூடில் இருந்தால் – அதற்கு
காரா போளி உண்டு !
மேலும் எழுத மாட்டேன் – எனக்கு
உடனே வேண்டும் போளி !
நாக்கில் ஊறும் நீரை – உடன்
தணிக்க வேண்டும் போளி !
போளி நல்ல போளி – இதோ
பாத்திரமே காலி !
நெய் தடவித் தின்றால்
நிறுத்த முடியா போளி !
@@@@@@@@@@@@@@