Monthly Archives: September 2016
இருமுகன் – சுடச்சுட விமர்சனம் – குவிகம் சிறப்பு நிருபர் (நமர் அவிஸ்)
ஒரு அயர்வு தரும் வேலைநாளின் முடிவில் சட்டென்று அலுவலக நண்பர்கள் முடிவெடுத்து எங்காவது போவது வழக்கம். அப்படித்தான் இந்த வெள்ளிக்கிழமை செகண்ட் ஷோ இருமுகன்
ஆனந்த் ஷங்கர் எடுத்த கதைக்களம் நல்ல கதைக்களம். ஒரு ஆளை ஐந்து நிமிடத்திற்குப் பறந்து பறந்து அடிக்கும் சக்தி தரும் மருந்து. அதை பயங்கரவாத அமைப்புகளுக்கு வில்லன் விற்கிறான். ஹீரோவும் வில்லனும் ஒரே உரு. கொஞ்சம் முற்பகை. இறுதியில் சுபம். ஆனால் சமீபமாக விக்ரமைச் சுற்றி சயின்ஸ் ஃபிக்ஷனும், மருந்து சோதனைகளுமாகவே வருகிறதே என ஒரு எண்ணமும் வராமலில்லை.
விக்ரமைப் பொறுத்தவரை வயது அவரைக் கண்டால் கடன்கொடுத்தவனைக் கண்டவன்போல் ஓடி ஒளிகிறது. உடற்கட்டு செம்ம. நயன் அள்ளிக் கொண்டு போகிறார்.
நயனுக்கு அறிவாளி, அப்பாவி எது கொடுத்தாலும் போகிற போக்கில் செய்துவிட்டுப் போய்விடுவார். படத்தில் நித்யா மேனன் எழுத்துக் கூட்டிப் படிப்பதுபோல் பேசுகிறார். ஆனால் பொம்மை போன்ற முகம் பேசுகையில் காதெல்லாம் கொஞ்சம் கம்மியாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் பாவம் ஸ்டண்ட் காட்சியில் பூச்செண்டோ கண்ணாடியோ வந்தால் உடைந்து போகுமல்லவா? அதுபோல அந்தப் பதுமை பாதியிலேயே போய் விடுகிறது. மனசு வைத்திருக்கலாம்.
தம்பி ராமையாவை மைனாவில் பிடித்த சிரிப்பு போலீஸ் விடவில்லை இன்னும். கருணாகரனின் அனாயாசமான நடிப்பை வீணடித்திருப்பதாய் தோன்றியது. நாசர் எப்போதும் விமரிசனத்துக்குள்ளேயே வரக்கூடாது. எப்போதும்போல் அருமை.
இசை வில்லனுக்கான ட்ராக்குகளில் பொருந்தியிருக்கிறது. பாடல்கள் இன்னும் கவனித்திருக்கலாம்.
கதை தமிழுக்குப் பழசு என்றாலும் சரியான ஆளிடம் ஒப்படைத்திருப்பதால் அற்புதமாக வந்திருக்கிறது. ஹீரோ விக்ரமை விட வில்லன் விக்ரம் உடல்மொழியில் அசத்துகிறார். நர்ஸ் உடையணிந்து ஆஸ்பிடலில் இருக்கையில் போலீஸ் ஒருவன் ஜொள்ளு விடுவதைக் காண்பிப்பது நச்.
குறைகள் அங்கங்கே தென்பட்டாலும் படம் ஒரு அறுசுவை எண்டர்டெயினர் வகை.
இனிப்பு : நயன்தாரா, விக்ரமின் உடற்கட்டு, வசனங்கள்
காரம் : ஹீரோ விக்ரமை ஏதோ ஜில்லா வஸ்தாது மாதிரி எதற்கெடுத்தாலும் அடிப்பதாய்க் காண்பிப்பது
கசப்பு : அங்கங்கே இசை, க்ளீஷேவான சீன்கள்
உப்பு : சரிவரக் கலக்காமல் இருக்கும் வேதியியல். லாஃபிங் கேஸ் பயன்படுத்துதல் போன்ற சீன்களைத் தவிர்த்திருக்கலாம்.
புளிப்பு : சும்மா சுர்ரென்று ஏறிய சீன்கள் இருந்தன. தொய்விலிருந்து அதுதான் தட்டிக் கொண்டு வந்தது. நயன்தாரா அதை செவ்வனே செய்திருக்கிறார்.
துவர்ப்பு : எல்லாவற்றையும் விட துவர்ப்புதான் ரொம்ப நேரம் தெரியுமல்லவா? நித்யா மேனன் கொஞ்சம் துவர்க்கிறார். விக்ரமின் தாடி எனக்குத் துவர்க்கிறது.
இருமுகன் : ஜாலிக்காகப் பார்க்கலாம்
படம் டிக்கட் கிடைக்காதவர்கள் இந்த டீசரைப்பார்த்து ஆறுதல் அடையுங்கள் !
சரித்திரம் பேசுகிறது – யாரோ
சேரன்
பொதுவாக… இந்திய சரித்திரம் எழுதுபவர்கள் சொல்வது இது தான்:
அசோகருக்குப் பிறகு – சில நூற்றாண்டுகள் ‘வட இந்தியா’ இருண்ட காலமாக இருந்தது –என்று சொல்லி பிறகு குப்த சாம்ராஜ்யம் பற்றி கதை சொல்ல ஆரம்பித்து விடுவர்.
அப்படியானால், தமிழகத்திற்குச் சரித்திரமே இல்லையா என்ன?
நந்தர்கள், மௌரியர்கள் வடக்கே கோலோச்சியபோது தமிழ் மன்னர்கள் என்ன சும்மாவா இருந்தார்கள்?
என்ன செய்வது? அசோகர்போல் தமிழக மன்னர்கள் விளம்பரம் செய்ததில்லையே!
ஆனாலும் அந்த இருண்ட கால சமயம் தமிழகத்தின் நற்காலமாகத் தான் இருந்திருக்கிறது.
எனினும் ஆதாரம் எதுவும் இல்லாமல் அந்த சரித்திரம் தட்டுத் தடுமாறுகிறது!
தமிழர் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்… மாபெரும் அசோகனையும் விரட்டி அடிக்க முடியும் என்பதைப் பார்த்தோம்.
ஔவையார் ஆத்திசூடியில் சொன்னார் : ‘ஒற்றுமை என்றும் பலமாம்’
அதை எந்த தமிழ் மன்னன் கேட்டு வாழ்ந்தான்?
அப்படி வாழ்ந்திருந்தால் அது தமிழகத்தின் பொற்காலம் ஆகியிருக்குமே!
சேரன் சோழன் பாண்டியன் மூவரும் ஒருவர்க்கு ஒருவர் சண்டையிட்டே அழிந்தனர்.
முதலில் சேர நாட்டுக் கதைகளைச் சற்றுப் பார்ப்போம்.
இவைகள் எல்லாம் கி மு 300 – கி பி 100 வாழ்ந்த சேர மன்னர்கள் பற்றி.
பொதுவாக, சேர மன்னர்கள் தங்களைவிடப் பலம் கொண்ட சோழ – பாண்டிய மன்னர்களின் தாக்கத்தில் தோல்வி கண்டு தடுமாறினரென்றாலும் மக்களைப் பேணி – கலை வளர்த்து நல்லாட்சி தந்தனர்!
முதல் கதை:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் “இமய வரம்பன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.
வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இமயத்திற்கும்,குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.
கிரேக்க யவனர்கள் போர் வீரர்களுடன் மலபார் கரையில் கப்பலில் வந்ததை அறிந்த நெடுஞ்சேரலாதன் தனது கடற்படையுடன் சென்று தாக்கினான். கடலில் நடந்த இந்தத் தாக்குதலில் யவனர்கள் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடினர்.
முதுமைப் பருவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ்வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத்தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து * இவன் மாண்டான் எனப் புறநானூறு கூறுகிறது.
(* வடக்கு நோக்கி உட்கார்ந்து சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிரை விடுவது)
இரண்டாம் கதை:
அந்த சேர மன்னன் மாவீரன்.
மக்கள் பால் அன்பும் பரிவும் கொண்டவன்.
வீரத்துடன் மானத்தை உதிரத்தில் கரைத்தவன்.
மாபெரும் கவிஞன்.
அவன் கவிதை கேட்க அவன் அரசவையில் புலவர்களே பேரார்வம் காட்டுவர்.
இதயத்தை நெகிழச் செய்யும் கவிதைகளை நொடியில் தொடுப்பதில் மன்னன்.
கதையில் ஒரு குறுங்கதை (சரித்திரத்திலிருந்து புராணம் சொல்வோம்) :
திருவானைக்காவல் என்னும் தெய்வத்தலம். அங்கு வெள்ளை நாவல் மரத்தின் தாழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. சிவபெருமானை வழிபட வந்த சிலந்திக்கும் யானைக்கும் நிகழ்ந்த பகையால் சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. சிலந்தியின் செயலால் சினங்கொண்ட யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. சிலந்தி இறந்தது. அதே சமயத்தில் யானையும் சிலந்தியின் விஷம் தாங்காமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. சிவபெருமான் அருளால் அந்த சிலந்தி சோழன் செங்கணானாகப் பிறந்தது.
உலகின் முதல் ஸ்பைடர்மேன் (spider man) அவன் தான் போலும்!
போர்க்களத்தில் பெரும்வீரனும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் செங்கணான்
குறுங்கதை முடிந்தது.
நமது சேர மன்னனுக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை வளர்ந்தது.
சேர மன்னன் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் சோழன் செங்கணானோடு போர் துவங்கினான். சேரனின் வீரம் போர்க்களத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. அவனது யானைப்படை சோழ சைனியத்தை அழிக்கத் துவங்கியது. சோழனின் குதிரைப்படையும், காலாட்படையும் திறம்படப் போரிட்டது.
வீரம் மற்றும் வெற்றியைத் தேடித் தருமா?
சோழன் செங்கணான் சேரனுடன் தனித்துப் போரிடுகையில் சேரன் பிடிபட்டான்.
சோழனால் சிறைபிடிக்கப்பட்டான் சேர மன்னன்.
சேரன் அவமானத்தால் துடித்தான்!
என் மார்பில் இந்த சோழனின் வேலோ வாளோ பாய்ந்து என் குருதியைக் குடித்து உயிரைப் பறித்திருக்கக் கூடாதோ?
கண்கள் கட்டப்பட்டுக் குதிரையில் கட்டப்பட்டு சேர மன்னன் உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான்.
புலவர் பொய்கையார் என்ற சங்கப் புலவர்.
தமிழ்நாடெங்கிலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது.
அவர் சேர சோழ பாண்டிய மன்னர்களது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர்.
இந்தப் போரை போர்க்களத்திலேயே நேருக்கு நேர் பார்த்தார்.
எந்த மன்னன் தோற்றாலும் தமிழன்தானே தோற்கிறான்.
மன வலி கொண்டார்.
சோழன் செங்கணானைச் சந்திக்கச் சென்றார்.
சோழன் புலவரை முக மலர்ந்து வரவேற்றான்.
பொய்கையார்:
“சோழ மன்னா! உன்னைப் போன்ற சிறந்த சிவனடியார் உளரோ? போரில் நீ சிவனது ருத்ர தாண்டவம் போலப் போரிட்டுக் கண்கள் சிவந்தாய் செங்கணானே’ என்றார்.
செங்கணான்:
“பொய்கையாரே! உங்களது வருகையும் வாய் மொழியும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பாடலைக் கேட்க பேரார்வத்துடன் உள்ளேன்”
பொய்கையார் செங்கணானின் போரைச் சிறப்பித்து ஒரு ‘களவழி நாற்பது’ கவிதை பாடினார்.
புகழ்ச்சி எவரையும் போதையில் ஆழ்த்தத் தயங்குவதில்லை..
சிவ பக்தியே எப்பொழுதும் மனதில் கொண்ட செங்கணானையும் அது ஆட்கொண்டது.
“மிக்க மகிழ்ச்சி! என்ன கொடுத்தாலும் உங்கள் கவிக்கு ஈடாகுமா? தாங்களே கூறுங்கள்! பரிசு என்ன என்று. எதுவானாலும் கேளுங்கள்.. தருகிறேன்”
பொய்கையார்:
“மன்னர் மன்னா! சேர மன்னன் வீரமும் மானமும் மிகுந்த சிறந்தவன்! மாபெரும் கவிஞன்! அவன் உங்கள் பகைக்குத் தகுந்தவனல்லன். அந்த மறத் தமிழனைச் சிறையிலிட்டுத் துன்புறுத்துவது தங்களைப் போன்ற சிவநேசனுக்கு உகந்ததில்லை”
செங்கணான் நெகிழ்ந்தான்!
“புலவரே! வேலும் வில்லும் செய்யாத வித்தையை உங்கள் சந்தக் கவிதை செய்தது விந்தையிலும் விந்தை! தாங்களே என் வீரர்களுடன் சென்று சேரனை சிறை மீட்டுங்கள்”
பொய்கையார்:
“அரசே! என்னே உன் கருணை! நீ சரித்திரம் உள்ளளவும் பாடப்பெறுவாய்!”
புலவர் சிறைக்கு விரைந்தார்.
சிறையில் சேரன் கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுச் சிறைக் கம்பிகளில் கட்டப்பட்டிருந்தான்.
மாவீரனாக இருக்கலாம்!
மானத்தை உதிரத்தில் கலந்தவனாகவும் இருக்கலாம்!
ஆனால் – அரையடி வயிறு செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது!
தாகம் அவன் கண்ணை அடைத்தது!
காவலாளிகள் இருவர் சிறை வாசலில் அமர்ந்திருந்தனர்.
“காவல் வீரனே! சற்று இங்கே வா” சேரனின் குரல் தாழ்ந்திருந்தது.
வீரன் சேரனைத் திரும்பிப் பார்த்தான்”
“தாகமாக உள்ளது. கொஞ்சம் தண்ணீர் தருகிறாயா”
அவன் வாழ்வில் இரந்து கேட்டததில்லை!
இரப்பதற்கு பதிலாக இறந்தே போயிருக்கலாமே!
வீரன் தன் துணை வீரனைப் பார்த்து:
“மகாராஜா ஆணையிடுகிறார் பார்த்தாயா?” மெல்லச் சிரித்தான்.
மற்றவன்:
“இவர் அட்டக்கத்தி மகாராஜாடா!”
முதல்வன்:
“ஆமாம் இவர் கவிஞர் சக்கரவர்த்தி! ஓலையில் கவிதைச் சண்டை போடுபவர்!”
“ஆமாம். அதனால் தான் போர்க்களத்துக்கு வாளுக்குப் பதிலாக ஓலையும் எழுத்தாணியும் கொண்டு சென்றார் போல”
இருவரும் பெரும் சிரிப்புச் சிரித்தனர்.
எள்ளி நகையாடிக்கொண்டே சென்றனர்.
காலம் கடந்து.. மெல்ல… இருவரும் நீர்க்குவளையுடன் வந்து சேர்ந்தனர்.
சேர மன்னன் மனது துயரத்தில் துவண்டது:
“பிறந்த குழந்தை இறந்துவிட்டாலும்,
பிறக்கும்போதே சதைப் பிண்டமாகப் பிறந்துவிட்டாலும்
அந்தக் குழந்தையைப் போரில் காயப்பட்டது போல்
வாளால் கீறிப் புதைப்பர்.
அப்படியிருக்க…
இப்போது நான் காயமில்லாமல் பிடிபட்டுக் கிடக்கிறேன்
நாயைச் சங்கிலியால் கட்டியது போல் நான் இருக்க
என் வயிற்றுத் தீயைத் தணித்துக்கொள்வதற்காகத்
தண்ணீரை இரந்து கேட்டுப் பெற்றிருக்கிறேன்
இப்படிப்பட்ட ஈனப்பிறவியை எந்த மன்னனாவது பெறுவானோ?’
நீர்க்குவளையைக் கையில் ஏந்தினான்.
நீரை உண்ணவில்லை
இந்தக் கவியை எழுதினான்:
“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?”
கவிதை வெளி வந்ததும் உயிரும் உடலை விட்டு வெளியே வந்தது.
பொய்கையார் அவன் விடுதலைக்காக ஓடி வந்தார்.
சேரன் “கணைக்கால் இரும்பொறை”யின் பூதவுடல் கண்டார்!
கண்களில் நீர் வார்த்தார்
காலத்தால் அழியாத அந்தக் கவிதையைக் கண்டார்!
தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.
சரி நேயர்களே! பள்ளியில் சரித்திரத்தை வெறுத்த வாசகர்கள் யாரேனும் இருந்தால் இனிமேல் இந்த இதழைப் படிக்க வேண்டியதில்லை.
அடுத்த இதழில் சரித்திரம் கூறும் கதை கேட்போம்.
இனி பொதுவாக மற்ற சேர மன்னர்களைப் பற்றி ஒரிரண்டு வரிகள்.
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு. இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் ( மகாபாரதப் போர் தான் ) பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் எனக் கூறுகின்றார்.
உதியஞ்சேரலாதன்
உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். இவன் நாட்டை விரிவுபடுத்தினான். முதியோர்களைப் பேணினான். சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்டபொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர்.
பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான்.
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தன்னை விடுவித்துக்கொண்டு வலிதிற்போய் அரியணை ஏறினான்.
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
காப்பியாற்றுக் காப்பியனார் ( முதலில் காப்பி போட்டவர் இவர் தானோ ? அல்லது இவர் காப்பிக் கடை வைத்திருந்தாரா? ) என்னும் புலவர்….சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்…. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேரன் செங்குட்டுவன்
சேரன் செங்குட்டுவன் சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன்.
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது.
சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.
கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்தில் கல் எடு்த்துக் கங்கையில் புனித நீராட்டிக் கொண்டுவந்து வஞ்சியில் கோயில் எடுப்பதே நோக்கமானாலும், தமிழர்தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்து, கங்கை ஆற்றில் புனித நீராட்டுகிறான் சேரன்
(சேர நாட்டு நாணயங்கள்)
அந்துவஞ்சேரல் இரும்பொறை
அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான்.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். அரிசில்கிழார் என்னும் புலவர் இவரைப் பாடியுள்ளார்.
தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.
இளஞ்சேரல் இரும்பொறை
இளஞ்சேரல் இரும்பொறை மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான். அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.
குட்டுவன் கோதை
குட்டுவன் கோதை சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.
சேரமான் வஞ்சன்
சேரமான் வஞ்சன், என்பவன் சேரர் மரபைச் சேர்ந்தவன். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்.
மருதம் பாடிய இளங்கடுங்கோ
சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர்.
சேரமான் கணைக்கால் இரும்பொறை இவன் கதை சோகக் கதை –அதை சற்று முன் பார்த்தோமே!
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.
மாக்கோதை காசுகள்
நன்றி: http://wheretheworldisgoing.blogspot.com/2010/09/blog-post_20.html
வாசகப் பெருமக்களே! தமிழர் சரித்திரம் அறிய இந்த இதழை முற்றிலும் படித்த உங்கள் ஆர்வமும் பொறுமையும்தான் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது!
இனி முற்கால சோழர் சரிதம் பற்றிப் பேசலாம்!
இச்சென்னை மாநகரிலேயே.. ( பரத் பொன்னுசாமி)
நாமக்கலில் இருந்து ஓர்
இடம்பெயர்தல் கதை..

காபி – சுக்லாம்பரதரம்
( கருத்து – புலவர் வயித்தியலிங்கன் அவர்கள்)
விநாயகர் துதி
சுக்லாம்பரதரம் – வெண்மையான ஆடையை அணிந்தவர்
விஷ்ணும் – எல்லா இடத்திலும் வியாபித்திருப்பவர்
சசிவர்ணம் – சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் – நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் – மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் – தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே – எல்லா தடைகளும் நீங்கட்டும்
காபி
சுக்லாம்பரதரம் – வெண்மையான ஆடை உடைய பாலில்
விஷ்ணும் – எல்லா இடத்திலும் வியாபித்திருப்பது
சசிவர்ணம் – டிகாக்ஷன் கலந்ததும் காபி சசிவர்ணமாகிறது – சந்திரன் நிறம் – பொன்னிறம்
சதுர்புஜம் – சூடான காபியை போட்டுத்தர இருகரங்கள் – (மனைவி?) + அதை ஆற்றிக் குடிக்க இரு கரங்கள்
ப்ரசன்ன வதனம் – குடித்த பின் ஏற்படும் மகிழ்ச்சியான திருமுகம்
த்யாயேத் – (காபியே) உன்னை தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே – அன்றைய நாள் எல்லா தடைகளும் நீங்கி சுலபமாக கழியட்டும்!
நாலைந்து வருடத்திற்கு முன்னால் அவ்வையார் அதியமானைத் தேடி தர்மபுரிப் பக்கம் போனபோது வழியில் ஒரு கையேந்திபவனில் கும்பகோணம் டிகிரிக் காப்பி குடித்துவிட்டுப் பாடிய பாட்டு இது!
பாலும் வெந்நீரும் டிகாக்ஷனும் சர்க்கரையும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – அருமையான
காப்பி என்ற அமிர்தத்தைக் குடித்தபின் நீயெனக்கு
ஹேப்பிஎன்ற சொல்லைத் தா.
( இது நம்மோட அதிகப் பிரசங்கித்தனம் )
கார்ட்டூன்ஸ் – லதா
உண்மைச் சம்பவம் – ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லமாட்டோம் !
அது ஒரு அழகான சுற்றுலாத் தலம்!
அன்றைக்கு மதியம் நானும் என் மனைவியும் கடலில் நீச்சலடித்துவிட்டு சற்று ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக அருகில் இருந்த பாறையில் அமர்ந்திருந்தோம். எங்களைச் சுற்றி சுமார் 50 பேர் இருந்தார்கள்.
அருகில் ஒரு பெண். கொஞ்சம் வித்தியாசமாகக் காணப்பட்டாள்.
அவள் மெல்ல நடந்தாள். அவள் தலை பொன் வண்ணத்தில் குட்டையாக பாப் செய்யப்பட்டிருந்தது. அந்த மதிய நேரத்திலும் அவளது சிவப்பு லிப்ஸ்டிக் மற்றும் மேக்கப் எல்லாம் மிகவும் கச்சிதமாக இருந்தது. அவள் கடற்கரைக் குளியலுக்குத் தகுந்தவாறு நீச்சலுடையில் இருந்தாள். அவள் ஆசியப் பெண் என்பது நன்றாகவே தெரிந்தது. வயது இருபத்தைந்து, இருக்கலாம். எங்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய அழகான கேமராவை எடுத்து செல்ஃபி ஸ்டிக்கில் சொருகிக் கொண்டாள். சுதந்திரப் பெண்மணிச் சிலையின் தீப்பந்தத்தைப் போல அந்தக் காமிராவை உயர்த்திப் பிடித்தாள். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று நாங்கள் ஊகிக்குமுன் அவள் அப்படியே தொபுகடீர் என்று தண்ணீருக்குள் குதித்தாள்.
சில வினாடிகள்.
தண்ணீருக்கு மேல் கையில் கேமராவுடன் வெளியே வந்தாள். நல்ல செல்ஃபிப் படம் வந்திருக்கக்கூடும்.
அவள் தலை தண்ணீரில் மறைந்தது, டிக் டிக் என்று வினாடிகள் போய்க் கொண்டிருந்தன. இன்னும் சில வினாடிகள்.

இது தான் கார்னிகிலியா என்ற இத்தாலியின் சான்ஸே இல்லாத அழகான கடற்கரைக் கிராமம். புகைப்படப் பிரியர்களுக்கு அல்வா. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் . ரம்மியமான பகல் பொழுது. வெது வெதுப்பான 33 டிகிரி வெயில். தண்ணீரில் 28 டிகிரி இருக்கலாம். அதிகக் குளிரில்லை. வானமும் மேகமூட்டம் எதுவும் இல்லாமல் பளிச் என்று இருந்தது. அழகான மத்திய தரைக் கடல். பாறைகள் நிறைந்த கடல்வெளி. இரு மலைப் பாறைக் குன்றுகள். கிட்டத்தட்ட இருபது அடி தூரத்தில் கடல் அலைகள் அந்தப் பாறைக் குன்றில் மெதுவாக மோதிக் கொண்டிருந்தன. இயற்கையாகவே அந்தப் பாறைகளில் ஆங்காங்கே தண்ணீரில் குதித்து விளையாட நீச்சல் பலகைகள் அமைத்தது போல் இருந்தது. கடலில் குஷியாகக் குதித்து நீச்சலிட இதைவிட அருமையான இடம் கிடைப்பது அரிது.
இன்னும் சில துல்லிய தகவல்கள். தண்ணீர் கிட்டத் தட்ட 30 அடி ஆழம் இருக்கலாம். உயிர் காக்கும் காவலர்கள் பக்கத்தில் யாரையுமே காணோம். செங்குத்தான அந்தப் பாறைகள் கரடுமுரடாக இல்லாமல் கொஞ்சம் வழுவழு என்று வேறு இருந்தன. தண்ணீரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லத் தேவையானவை கயிறு அல்லது ஏணி . அவை இரண்டும் எங்களுக்கு அருகில் இல்லை.
சில வினாடிகள் கழித்து அந்தப் பெண்ணின் பொன்னிறத் தலை தண்ணீருக்கு மேல் தெரிந்தது. எங்கேயோ ஏதோ தப்பு என்று புரிகிறது; ஆனால் என்ன என்று தெரியவில்லை . அவள் கை இன்னும் அந்த செல்ஃபி ஸ்டிக்கைப் பிடித்தவண்ணமே இருந்தது. அவை ஆடவில்லை -அசையவில்லை . அவள் கால்கள் தெரியவில்லை.அப்படியே நின்றவாறே இருந்தாள். அவள் நீச்சலடிக்கவும் முயலவில்லை. சில வினாடிகளில் அவள் தலை மீண்டும் தண்ணீரில் மறைந்தது.
சுற்று தூரத்தில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் நீச்சலுடையில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் பாறைகளில் சாய்ந்து சூரிய வெப்பத்தைப் பருகிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சும்மா ஜாலியாக நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அகலமான கடல்வெளியில் ஹோ என்ற கடல் காற்றின் இரைச்சல் வேறு. முப்பது நாற்பது அடி சுற்றுவட்டாரத்தில் எங்கள் மூன்று பேரைத் தவிர வேறு யாருமே இல்லை.
.நானும் என் மனைவியும் அந்த சிவப்பு லிப்ஸ்டிக் முகம் மறுபடி ஒருமுறை கடலுக்கு மேலே வருவதைப் பார்த்தோம். ஓரிரு நொடிகள் தான். மறுபடியும் அவள் தலை தண்ணீருக்குள் முழுகப் பார்த்தது. ” நீ ஒகேயா?” என்று கத்தினேன். என் குரலில் இருந்த பயம் எனக்கே தெரிந்தது.
மறுபடியும் அவள் தலை வெளியே வந்தது . வாயை அகலத் திறந்துகொண்டு மூச்சுவிடத் திணறுவது போல் இருந்தது. கொஞ்சம் தண்ணீரையும் குடிக்கிறாளோ? அவள் தலை மீண்டும் தண்ணீருக்குள் முழுகியது. என்னால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. தண்ணீருக்குள் குதித்தேன். என் மனைவி பாறையில் அவளுக்கு எவ்வளவு தூரம் அருகில் வர முடியுமோ அந்த இடத்துக்கு வந்தாள்.
காற்றுக் குமிழிகளைத் தேடி அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன். தண்ணீருக்கு அடியில் இருந்தாள். அவளைத் தூக்கினேன். அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்குவதற்காகத் தண்ணீருக்கு வெளியே வந்தாள். நான் அவளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு பாறைக்கு அருகில் வந்தேன். அங்கே என் மனைவி ஒரு கையால் அந்த வழவழப்பான பாறையைப் பிடித்துக் கொண்டு மறு கையை அந்தப் பெண்ணிடம் நீட்டினாள். அந்தப் பெண் சட்டென்று என் மனைவியின் கையைப் பற்றிக் கொண்டாள். அந்த மின்னல் அதிர்ச்சியில் தானும் தண்ணீரில் விழுந்து விடுவோமோ என்று என் மனைவிக்குத் தோன்றியது. . நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. என் மனைவி தன் முழு பலத்தையும் திரட்டி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக அவளை அந்தப் பாறையில் பத்திரமாகக் கரையேற்றினாள்.
” என்னாச்சு ? நீ ஒகேயா? ” என்று அவளிடம் என் மனைவி கேட்டாள். அவள் மெதுவாக மூச்சு வாங்கிக் கொண்டே கூறினாள். “தாங்க்ஸ்”. மறுபடியும் மூச்சை இழுத்துக் கொண்டு ” தாங்க்ஸ் . இப்போ நான் ஓகே.” என்றாள்.
பரவாயில்லை. ஆங்கிலம் தெரிந்த பெண். அவள் வார்த்தைகளும் புரிந்தன.
தண்ணீரிலிருந்தபடியே , ” என்ன ஆயிற்று?” என்று கத்தினேன்.
“எனக்கு நீச்சல் தெரியாது. உங்க ரெண்டு பேர் உதவிக்கும் நன்றி” என்று சொல்லிக் கொண்டே மெதுவாக எழுந்தாள். கால்கள் தடுமாறின. ஆனால் ஆபத்தில்லை. பிழைத்துக் கொண்டாள்.
“நிறைய பேர் தண்ணீரில் மிதக்கறதைப் பாத்தேன். ஆழம் இருக்காதுன்னு நினைச்சு சும்மா குதிச்சேன்” என்று சொல்லிக் கொண்டே எங்களை விட்டுச் சென்றாள்.
“சும்மா குதிச்சேன்”
……….
அரை மணி நேரத்துக்கு முன்:
நானும் என் மனைவியும் அந்தக் கடலில் குளித்துக் கொண்டிருந்தோம்.
அவள்: சும்மா இங்கே வா. ஆழமாத் தான் இருக்கும். காலை லேசா உந்தினா போதும் . அப்படியே தண்ணியில மிதக்கலாம் ”
நான்: உனக்கென்ன ஈஸியா சொல்லிட்டே. . நான் இப்ப தான் முதல் தடவையா காலில தரை தொடாத இடத்துக்கு வந்திருக்கேன். “
அவள்: இதில ஒரு கஷ்டமும் இல்லை. நீ இதை ஈஸியா செய்யலாம். ஆனா உனக்கு பயம்”
நான்: ” கரெக்ட் தான். அது சரி.. நீ எப்பவாவது பாறையிலிருந்து தண்ணீரில குதிச்சிருக்கியா?”
அவள்: ” அவ்வளவு உயரத்திலிருந்தா? சாரி! அது வேற சமாசாரம் ”
நான்: ” அந்த மாதிரி தான் எனக்கும்.”
அவள்: ” நாம ரெண்டு பேரும் பயத்தைப் பாத்துப் பயப்படாம இருக்க பயிற்சி எடுத்துக்கணும்.”
நான் இன்னும் அந்தக் கடலிலிலேயே இருந்தேன். பயம் இல்லாமலில்லை. தரையில் கால் படவில்லை தான் . நீச்சல் குளத்தின் ஆழமான பகுதி என் மனக் கண்ணில் தோன்றியது. சற்று தூரத்தில் ஏணிப்படிகள் தெரிந்தன.
மெதுவாக நான் மிதக்க ஆரம்பித்தேன். ஏணியை நோக்கிச் சென்றேன்.
எனக்குப் பதிலாக நீச்சல் தெரிந்த என் மனைவி குதித்திருக்க வேண்டும்
நான் பாறையிலிருந்து அந்தப் பெண்ணைத் தூக்கி விட்டிருக்க வேண்டும்
அந்தப் பெண்ணும் ஜாக்கிரதையா இருந்திருக்க வேண்டும்.
ஆனால் , சில சமயங்களில் நாம் அதிகமாக யோசிப்பதில்லை
“சும்மா குதித்து விடுகிறோம்”
பின்குறிப்பு:
” தண்ணியில விழுந்தவங்களைக் கையைப் பிடிச்சுத் தூக்கக்கூடாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனா அவ தலை முடி ரொம்ப அழகா வாரியிருந்தது; அதை எப்படிக் கலைக்கறதுன்னு தயக்கமா இருந்தது.” என்று என் மனைவி சொன்னாள், அந்த சிவப்பு லிப்ஸ்டிக்காரி எங்களை விட்டுப் போன பிறகு !
கர்ண மோட்சம்
திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கதை வசனத்தில் உருவான குறும்படம் கர்ண மோட்சம் .
இதை இந்த மாதக் குறும்படமாக வெளியிடுகிறது குவிகம் .
(நன்றி யூடுயூப்)
குட்டீஸ் லூட்டீஸ் — சிவமால்
பல் வரிசை !
என் பெண் மிதிலா வரைந்த ஓவியத்தைப் பார்த்து
திடுக்கிட்டு, ‘என்னம்மா.. இந்தப் பெண்ணுக்கு மேலே
ரெண்டு வரிசை, கீழே ரெண்டு வரிசை பற்கள் வரைஞ்-
சிருக்கே..?’
‘நீதானேப்பா எல்லோருக்கும் முப்பத்திரண்டு பல்
இருக்கும்னு சொன்னே.. அதை மேலே ஒரு வரிசை,
கீழே ஒரு வரிசையிலே வரைய இடம் போதலே.. அதுதான்
ரெண்டு வரிசை வரைஞ்சிட்டேன்’ என்றாளே பார்க்கலாம்.
எனக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.
சட்டென மலர்ந்த பவளமல்லி பூக்கள் – லதா ரகுநாதன்
வெகு நேரமாக பஸ்ஸுக்குக் காத்திருந்ததில் அவளுக்குக் கால்கள் நிறையவே வலித்தது. வெள்ளை போர்ட் பஸ் தூரத்தில் வருவது தெரிந்தது… சாளேஸ்வரம்… கண்ணாடி இல்லாமல் படிக்கமுடிவதில்லை… கிட்டப் பார்வை, தூரப்பார்வை….இருந்துவிட்டுப் போகட்டும்….. பார்வையே இல்லாது இருந்தாலும் பரவாயில்லை, காதும் கேட்காவிட்டால் அபாரம் … என்ற நிலைக்கு மருமகள் செய்கைகள் தள்ளிவிட்டிருந்தது…..
கட்டி இருந்த கிழிந்து போன தேவேந்திரன் புடவை சோப்பைப் பார்த்து மிக அதிக காலம் ஆகி இருக்கும் என்று சிக்கு வாடை காட்டிக்கொடுத்தது.
“இந்த பஸ் போகுமா….??”
போனில் எதையோ பார்த்து கேனத்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்த பையன் வேண்டா வெறுப்பாகத் தலையைத் தூக்கிப் பார்த்து…. தலை அசைத்தான்.
அது மேலும் கீழும் போலும், வலது இடது போலவும் இருக்கச் செய்தது அவன் கற்ற கலையே….
“ போகுங்களா…??”
”ம்……”
”எங்கே அந்த ஒடிசலா ஒரு அம்மா இருந்தாங்களே…அம்மா…சேவா கேன்த்ரா இஸ்டாபிங் இதான்….எறங்கிக்கிங்க…..”
சேவா கேன்த்ரா பார்வை எட்டும் தூரம் வரை நீண்டு கிடந்தது. ஒத்தையடி மண் பாதைபோல் ….பேருக்கு அங்காங்கே சிமின்ட் திட்டுக்கள். உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் பெயரையும் வயதையும் வெள்ளை பெயின்ட் தடவல்களில் பெருமைப் பட்டபடி….
தன் பெயர்… அது என்றோ மறந்துவிட்ட ஒன்று …. மரங்களைப் போல் யாரும் பெருமைப்படுத்த வேண்டாம்… மாற்றாமல் இருந்திருக்கலாம்… சனியன், கழுத்தறுப்பு, வேலைக்காரி, தண்டச்சோறு…. இன்னும்….. மறந்துதான் போய்விட்டது அவைகளும்…. இவ்வளவு இருந்தால் …..???
“யாரும்மா அது…?’
அதட்டலாகக் கேட்கப்பட்டது.
இது என்ன புதுசா…? அன்பான குரல் பேசப்பட்டிருந்தால் அங்கேயே உடைந்து அழுதிருக்கக்கூடும். வறண்டு வெறிக்கும் கண்களில் எங்கேயோ அந்தக் கண்ணீர் துளி உற்பத்தித் தொழிற்சாலை அமைத்திருக்கக்கூடும்..
“அம்மாவப் பாக்கணும்….”
” யாரு… உன் அம்மாவையா… உனக்கே எட்டு கழுத வயசிருக்கும் போல…?”
” இல்ல… பிரின்சிபால் மேடத்தை….”
”பார்ரா… இச்கோலு படிக்க வந்தியா…..?”
பதிலுக்குத் தடுமாறியபடி நிற்க…..
மெலிதான ஒரு பெளடர் வாசம் முன்னே வர…
“யசோதா…. வாயாடாத… இன்னும் ஒரு தடவை இப்படி செய்வதைப்பார்த்தேன் …… அது சரி…யாரும்மா நீங்க…?”
”புகலிடம் தேடி வந்திருக்கேன்….”
” இங்கியா….. யார் சொன்னாங்க…?”
”தெரிஞ்சவங்க….”
கைகளில் ஒரு மஞ்சள் பை…. அழுத்தமாகச் சுற்றப்பட்டு…இன்னும் அழுத்தமாகக் கைகளில் பிடிபட்டு….. தோள்பட்டையில் கிழிந்த ப்ளவுஸ், நுனியில் நூல்களாகத் தொங்கிய புடவை… எண்ணை தீபாவளிக்குக் கூட காணாத பரட்டை முடிக்கற்றைகள்…நெற்றியில் கருப்பாக ஒரு புள்ளி சாந்து பொட்டு…கழுத்தில் தங்க நிறத்தில் ஒரு நாளில் மினுக்கி, இன்று முலாம் கரைந்து மூலப் பொருளாகப் பல்லிளித்த ஒற்றைச் சங்கிலி……
”தப்பா வந்திருக்கீங்கம்மா….இங்கே யாரையும் இப்போ சேக்கரதில்ல….”
”அம்மா அப்படிச் சொல்லக்கூடாது…வீட்டை விட்டு வந்துட்டேன். திரும்பப் போக முடியாது .”
” ஓ… அப்போ வேகன்சி இருந்தாலுமே நீங்க சேர முடியாது..இங்கே யாரும் இல்லாத அநாதைங்களுக்குத்தான் புகலிடம்…வீடு இருக்குங்கிறீங்க….யாரு அது?’
” என் மகன்தான்… உயிரோடுதான் இருக்கான்… என்ன… அவன் பார்வையிலே நான்தான் செத்துட்டேன்.. அப்போ… யாரும் இல்லை தானே…..”
” பாருங்கம்மா…ரூல்ஸ் மாத்த முடியாது..கேட்டீங்களா…போங்க போங்க…”
அவள் கண்களில் பசியைப் பார்த்திருக்கக்கூடும்….
”காலையிலே எதுனாச்சும் சாப்டீங்களா….டீ இவளே… பொங்கலும் காப்பியும் கொடு…தின்னுட்டுப் போகட்டும்”
”ரொம்ப நன்றீங்கம்மா… சாப்புட்றேன்…அதுக்கு ஏதானும் ஒரு வேல செய்ய அனுமதிங்க…”
சிறிது நேரம் இவளைப்பார்த்தாள்….
” சரி… எங்கே போவீங்க…?”
”தெரியலை… அந்த வீட்டுக்குப் போக முடியாது….”
”என்ன வேல செய்வீங்கோ…?”
“நன்னா சமைப்பேன்”
”பிராமின்ஸ்ஸுங்களா?”
”ஆமாம்…”
”இங்கே அவங்க யாரும் கிடையாது… கறி சோறு ஏதும் செய்யமாட்டோம்..ஆனால் ஸேவா கேன்திரா நடுநிலைப்பள்ளி இருக்குது. அதுலே சமையல் வேலை செய்யறீங்களா…? இங்கே தங்க அனுமதியும் கிடைக்கும். “
” அப்பா..எவ்ளோ நாள் ஆச்சு…இப்புடி ஒரு சமையல் சாப்பிட்டு….சமையலுக்கு ஆள் இருக்கா….?”
”அது…வந்து……” மாட்டுப்பெண் தடுமாற……..
” மா…சொல்லேம்மா… நம்ம வீட்டுலே ஒரு ஆல் இன் ஆல் வேலைக்காரி வீட்டோடு இருக்கிறாள் என்று…… பேத்தி சொல்லிற்கு மகன் அசெளகர்யமாகத் தலை ஆட்ட……
எங்கோ ஒரு நூலிழையாக ஒட்டி நின்ற பந்தம் சடாரென்று அறுபட்டு நின்றது.
“சுமாரா சமைப்பேன்..சாப்டு பார்த்துட்டுச் சொல்லுங்கோ…..”
”சரி… டீ…இவளே…மாமிய ஓல்ட் ஏஜ் ஹோமுக்கு அழைச்சுப்போ…..”
இதில் அவ்வளவாக ஏற்பு இல்லாத பெண் ஒருத்தி முன்னே நடக்க….
கொஞ்சம் தயங்கினாலும் போகச்சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் இவள் பின் ஓட…..
முப்பதுக்கு முப்பது விஸ்தாரமான பெரிய ஹால். இரு புறமும் சிறியது சிறியதாகச் சின்னச் சின்ன அறைகள்.
” தா… ஓரமா குந்து. துன்ன எடுத்தாறேன்…..”
”யாருடி….இது?”
”அக்காங்….புது அட்மிஸன் தான்”
”பாருடி… எடமில்லம நாமே அவஸ்தையிலே இருக்கம்…. இவ வேறயா…?”
“பல்லி கணக்கா தான் இருக்கா… சுவத்துல ஒட்டிடலாம்…சபக்குனு…”
பெரிய கூட்டம் சுற்றி அமைந்தது
அவளுக்கு அவர்கள் பேசுவது அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால் தன்னை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது சர்வ நிச்சயமாகப் புரிந்தது.
” அய்யோ….அம்மாடி…நாசமா போறவளே….தண்ணியா கொட்டற… இரு வெளியார வந்து ஒன் தலையிலே பக்கெட்ட போடல……நான்……..”
” பின்ன என்னாடி…எம்புட்டு நேரமா கக்கூசுக்குள்ள என்னா பண்ணுற..? அவள் அவள் இங்கே நாறிகிட்டு கெடக்கா……”
“அய்ய… என்னா பயந்துட்டியா புது அட்மிஸனு…. ஒனக்கும் ஒருநா தலையுல தண்ணி விழும்…பாத்துக்க…”
”யாருடி…என் பாடீஸ எடுத்தது…?”
”நான்தேன்….நா மறைச்சு வெச்ச சாக்லேட் எடுத்து தின்ன இல்ல… பனிஸ்மென்ட்…….”
”பன்னாட… புத்திய காண்பிச்சுட்ட பாத்தியா…. புதுச போட்டு நா எடுப்பா நிக்கிறது ஒனக்கு ஆவுல….”
”பொத்திகிட்டு போவியா….”
” அட , இத தனியா வேற சொல்லணுமா… ஒண்ணும் போடாத என்னாத்த காட்டுறது….. பொத்திகிட்டு தான் போவணும்….”
புதிதாக வந்த பல்லி என்று நாமகரணம் இடப்பட்ட அவள் மறக்கப்பட்டு…அங்கே…..”கொல்”
“அய்ய…. நிறுத்துங்கடி…. இந்த புது அட்மிஸன் எப்புடி சமைக்கிறாங்க பாக்கணுமாம் . இந்தாடி… யாரு சமையல் டூட்டி… இநத அம்மாவையும் சேத்துக்க….”
”நீங்க பிராமின்ஸ்ஸா….?’”
” ஆமாம்…”.
” சரிபட்டு வராது அக்கா…”
” அக்காங்…நானும் அதைத்தான் நெனச்சேன்….நமக்கு ஏன் பாலிடிக்ஸ்ஸு….சமையல் முழுசா செய்யட்டும்… வெசயம் சபைக்கு வந்துடுமில்ல….”
“இந்தா…இப்ப நாப்பது பேரு துன்ன வருவாங்கோ… ஒண்டியா சமைப்பியா…?”
“புது எடம். பாத்திரம் பண்டம் பழகணும்…கொஞ்சம் ஒத்தாசையா இருந்தா….”
”மாமீ…. தெரியும் …நீங்க லேசுப்பட்ட ஜாதியில்ல….ஒத்துவராது….போய்கினே இருங்க….”
” இல்ல… சமையல் ருசி பார்க்கறேன்னு சொல்லியிருக்கா…. ஏதாவது செய்யறேன்….”
கத்திரி பொடி இடித்த கறி, முருங்கை அரைத்துவிட்ட சாம்பார் அங்கே வாசமளிக்க ஆரம்பித்தது.
”இன்னாடி…. இன்னா கறி…?”
”ஆங்…. கத்திரிக்காய் தான்..”
” மனுசன் துன்னுவான்….வாரம் முழுசூட்டும் இத்தேதாநாடி….”
”புது அட்மிஸன் செஞ்சிருக்கு….துன்னுப்பாரு…..”
அப்போதே அங்கே தங்க அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது….
“எங்கே நான் இருந்துக்கறது…?”
”இதப் பாரு… யாரு ரூமிலேயும் எடமில்ல….இத்தோ…ஒரு ஓரமா இருந்துக்க”
மகன் வீட்டில் கக்கூஸ் வாசலில் ஒரு கிழிந்துப்போன புடவையை விரித்து, அதன் தலப்பை சுருட்டி தலைக்கு வைத்து, ஒண்ணுக்கு வீச்சத்தையும் மீறி லேசாக கண் அசந்த நேரம் “சனியன் பரத்திண்டு தூங்கறது பார்” என்று காலை மிதித்துச்செல்லும் மருமகள் நினைவுக்கு வந்தது .
இங்கேயும் யாருக்கும் பிடிக்கவில்லை…. துரத்திவிட்டுவிடுவார்கள் என்றே தோன்றியது. ஜாதி வேறு பிரச்சனை. எப்போதோ பாடி வைத்து விட்டு போய்விட்டார்கள்…மாதராய் பிறப்பதற்கு மா தவம் செய்தல் வேண்டும்…..
“ஏய்…. அம்மா ஆபீசுக்கு கூட்டியாரச் சொன்னாங்க… வா….”
” உங்களை சமையல் வேலைக்கு எடுத்துவிட்டேன்.சாப்பாடு, படுக்கை,தங்க வசதி எல்லாம் உண்டு. உங்க வேலைக்குக் கொடுக்கப்படும் சம்பளம் இதற்காக எடுக்கப்படும். மீதம் இருந்தால் கைகளில் கொடுப்போம்.. “ ஏதோ சொல்லிக்கொண்டே போனார்கள். மையமாக தலை அசைப்பு மட்டும் கொடுத்தாள்.
” என்னை போகச்சொல்ல மாட்டேள் இல்ல…”
அவள் திரும்பிச் சென்ற போது அவள் மஞ்சள் பை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கப்பட்டுக் கிடந்தது . போட்டோ ஒன்றும் வீசப்பட்டுக் கிடந்தது. பொறுக்கி எடுத்தபோது சில கண்ணீர் துளிகளுடன் பளபளத்தது.
“ஏய்… புது அட்மிஸனு… ரொம்ப தான் பிலிம் காட்டாத….தோ பார்ரா….என்னமோ பெரீய்ய சொத்து வச்சிருக்க…நாங்க எடுத்துட்டோம்….இங்கப் பாரு… நீ தான் எங்க சோறுக்குப் போட்டியா வந்திருக்கே…. ரூல்ஸ்படி நாங்கதான் அழுவோனும்…..வா…வா…குந்து…”
வேலை முடிந்து யாவரும் இருந்தார்கள். எங்கோ தூரத்தில் தவளையின் கறக். அழுது வடிந்த ஓர் மஞ்சள் விளக்கு. தலைக்கு மேல் முழு நிலவு….
”அய்ய…. யாருநாச்சும் பாடறது….”
”ரோசி….பாடு…நல்லாத்தானே பாடுற….”
”புது அட்மிஸன் பாடுமா…கேளு….”
மெல்லப் பாடினாள்…. சின்ன வயதில் ரேடியோவில் கேட்டு, பின் மகன் தூங்கப் பாடி… எப்போதாவது ஓர் அரிய நேரத்தில் கணவனுக்காகவும் பாடிய…அமுதைப் பொழியும் நிலவே…..
எல்லோரும் சுற்றி….மிக அருகில்… சுற்றி அமர்ந்தார்கள்.
சட்டென்று இரவில் மலர் விடும் பவழமல்லிகையாக, நட்பும் அங்கே மலர்விட்டது.
வால் – அழகியசிங்கர்
வால்
ஞானம் என் நண்பர். அவருடன் நேரம் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தேன். வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. ஓரளவிற்குமேல் பேசி முடித்தபின்னும், பேசியதையே இன்னும் பேசிக்கொண்டிருந்தோம். மழை ஒரு வழியாக நின்றபிறகு வீட்டிற்குக் கிளம்ப எத்தனித்தேன்.
ஞானம் அப்போது சொன்னார். “உனக்கு வால் முளைத்து விட்டது!” என்று. எனக்கு அவர்மீது தாங்கமுடியாத கோபம். அவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அல்ல. அவர் கண்டுபிடித்துவிட்டாரே என்று. நான் பதில் பேசாமல் நழுவினேன். சொன்னவுடன் அவர் என் முகமாற்றத்தைக் கவனித்திருக்கலாம்.
இரண்டு வாரங்கள் கழித்து திரும்பவும் ஞானத்தைப் பார்க்கச் சென்றேன். இருவரும் வழக்கம்போல் பல விஷயங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தவர், நடுவில் ஆத்திரம் வந்ததுபோல், “உனக்கு வால் முளைத்துவிட்டது” என்றார்.
இந்த முறை நானும் அவரைப் பார்த்துக் கோபத்துடன், “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.
“நீ மறைக்கலாம். ஆனால் என் பார்வைக்கு அது தெரிந்துவிட்டது, நண்பனே” என்றார்.
நானும் கோபம் தணியாமல், “வால் இருந்தால் என்ன?”என்று கேட்டேன்.
“அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. நீ சாமர்த்தியமாய் மறைக்கிறாய். ஆனால் எனக்குத் தெரியும் உனக்கு வால் முளைத்திருப்பது.”
அன்று முதல் அவருடன் நான் பழகிய முறையில் வித்தியாசம் ஏற்பட ஆரம்பித்தது. அவரும் இதைப் புரிந்துகொண்டிருப்பார். அவர் என்னைவிட வயதில் பெரியவர். அவரிடம் எனக்கு மதிப்பும், மரியாதையும் எப்போதும். பல விஷயங்களில் நாங்களிருவரும் ஒரே கருத்துடையவர்கள். திரும்பவும் அவரைப் பார்க்கச் செல்லும்போது என் உடைமேல் உடை அணிந்து வாலை மறைத்துக்கொண்டேன். அடக்கமாகச் சிரித்தேன். அதிகமாகப் பேசுவதைத் தவிர்த்தேன்.
அவரும் என்னுடன் பேசுவதிலிருந்து மிகமிக மாறிவிட்டார்.
மிஸஸ். ஞானம் என்னைப் பார்த்து, “என்ன நீங்கள் முன்பு மாதிரி இங்கு வருவதில்லை” என்று கேட்டார்.
“இல்லை எனக்கு ஒழிவதில்லை. வீட்டில் பிரச்சினை” என்றேன்.
ஞானத்துடன் பேசும்போது காரணத்துடன் பேசத் தெரிந்து கொண்டேன். உண்மையில் அவரைப் பார்க்க ஏதாவது காரணம் இருக்கும். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசுவதில்லை. அவர் முறைத்து ஒருவரைப் பார்க்கும்போது, எதிராளியை ஊடுருவதுபோல பார்வையில் தீர்க்கம் இருக்கும்.
நான் வாலை மறைத்துக்கொண்டிருக்கும் விதம் அவருக்குத் தெரியாது. அவரும் அதைக் குறிப்பிடவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அவருக்கு என் வால் இருப்பது பற்றி குறிப்பிட்டது மறந்து போயிருக்கக்கூடும். இரண்டு, அது குறித்து பேச விரும்பாமல் இருக்கலாம். இரண்டாவது காரணம் சரி என்று பட்டது.
ஒரு நாள் அவர் குறிப்பிட்டார்.
“நான் சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதே! உன் வாலை வெட்டிவிடு”
கேட்டு நான் சிரித்தேன்.
“அது முடியாது. இருந்துவிட்டுப் போகட்டும் வால்.”
அவர் பேசாமலிருந்தார் நான் சொல்வதைக் கேட்டு. இப்படி எதையாவது சொல்லிவிட்டு, என் பொறுமையின்மையை அவர் சோதிப்பதாகத் தோன்றியது.
“இது மோசமான உலகம். ஒரு மனிதன் வால் இல்லாமல் இருப்பதை பார்ப்பது அரிது” என்றார் அவர்.
“மனித தர்மங்கள் குலைந்துவிட்டன. ஒவ்வொருவரும் வால் வைத்துக்கொள்வது அவசியம்”
“நான் மனித தர்மங்களைப் பற்றிக்கவலைப்படவில்லை. ஆனால் எனக்கு வால் முளைக்கவில்லை” என்றார் ஞானம்.
“நீங்கள் எப்படி முயற்சி செய்தாலும், உங்களுக்கு வால் முளைக்காது” என்றேன்.
“எப்படி?” என்றார் ஞானம் வியப்போடு.
“உங்களுக்கு வயதாகிவிட்டது. வால் முளைக்காது. வேண்டுமென்றால் போலியாய் வாலை ஒட்ட வைத்துக் கொள்ளலாம்.”
“ஓஹோஹோ” வென்று பலமாகச் சிரித்தார் அவர்.
அவருடைய சிரிப்பலைகளால் உட்கார்ந்த இடமெல்லாம் அதிர்ந்து. அறையில் எதிரொலித்தது. மிஸஸ் ஞானம் பயந்து விட்டார்.
“என்ன ஆயிற்று உங்களுக்கு?” என்று ஞானத்தைப் பார்த்து பதட்டத்துடன் கேட்டார்.
“ஒண்ணுமில்லை, இவன் சொல்றான். எனக்கு வால் முளைக்காதாம்”
“ஆனால் மிஸஸ் ஞானத்திற்கு வால் முளைத்து விட்டது” என்றேன் நான்.
மிஸஸ் ஞானத்திற்குக் கோபம் “எப்படித் தெரியும் உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று என்னை முறைத்தார்.
“எனக்குத் தோன்றுகிறது. உங்கள் பேச்சு பழக்கவழக்கங்கள் மூலம் அறியலாம். ஏன் ஞானத்துக்கும் இது தெரியும்” என்றேன்.
ஞானம் நான் சொன்னதை ஆமோதிப்பது போல் தலையாட்டினார்.
“அப்படியென்றால் உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வால் முளைக்கலாம், என்கிறீரா?” என்று கேட்டார் மிஸஸ் ஞானம்.
“நிச்சயமாக. ஒருவருக்கு வால் முளைத்ததை அவரால் புரிந்துகொள்ள முடியும். மறுப்பது வேண்டுமென்று மறைக்கிற விஷயம்.”
“எப்படி…?”
“நமக்கு வால் முளைத்த விதத்தை நம்மால் எளிதில் உணரமுடியும். அதை நம்புவதில்லை.”
மிஸஸ் ஞானம், நான் சொன்னதை எப்படிப் புரிந்துகொண்டார் என்பது தெரியவில்லை. அவர் சாதாரணப் பெண்மணி. டி.வி.பார்த்துக்கொண்டு லோக்கல் சினிமாக்களைப் பற்றிப் பேசிக்கொண்டு, எல்லாப் பெண்களையும் போல நகை, புடவை முதலிய விஷயங்களில் ஆர்வம் உள்ளவராக இருப்பவர். என் மனைவியும் அப்படித்தான்.
வழக்கம் போல நான் ஞானத்தைப் பார்க்கப் போவதில்லை. அதற்கு எந்தக் காரணமும் இல்லை. சில சமயம் ஞானம் இருப்பதே மறந்து போய்விடும். சந்திப்பதற்கு எந்தக் காரணமும் இல்லாததால், தோன்றும்போது சந்திக்கத் தோன்றும். வீட்டில் நான் இல்லையென்றால், எங்கே ஞானத்தைப் பார்க்கப் போயிருப்பான் என்பார் என் அப்பா. எந்த விஷயத்தையும் உடனே ஞானத்தைப் பார்த்துச் சொல்லாமலிருக்க முடியாதே? என்பாள் மனைவி. அப்படிச் சொல்வதும் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது.
வெகு நாட்கள் கழித்து நான் ஞானத்தைப் பார்க்கச் சென்றபோது, தூக்க முடியாத கனத்துடன் வாலுடன் ஞானம் காத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவருக்குச் சந்தோஷம்.
“என்ன இப்படித் தூக்க முடியாத கனத்துடன் வாலைத் தைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
“எல்லோருக்கும் வால் இருக்கும்போது, எனக்கு மாத்திரம் வால் இல்லாமலிருப்பது சரியில்லை. அதனால் ஒரு வாலை ஒட்டி வைத்துக்கொண்டேன். இப்போதுதான் எனக்குத் திருப்தி.”
“உங்களுடைய செயற்கை வாலைப் பார்த்து எனக்கு வருத்தம். ஆனால் வால் என்ற ஒன்று உள்ளதே? என் வீட்டில்கூட, என் மனைவி, குழந்தைகளுக்கு வால்கள் முளைத்துவிட்டன. அப்பாவிற்கு வால் உதிர்ந்து கொண்டிருக்கிறது” என்றேன்.
ஞானம் சிரித்தபடி இருந்தார் . அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.
செல்வத்துள் செல்வம் – விவேகானந்தன்
STROREACH என்கிற அமைப்பின் கீழ் சில சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு பெசன்ட்நகர் பீச்சில் ( ஆறுபடை முருகன் கோயில் அருகே) 20-30 இளைஞர்கள் ஆங்கிலத்திலோ தமிழிலோ கதைகள் படித்து கலந்துரையாடும் வழக்கம் நடைபெற்றுவருகிறது. குவிகம் ஆசிரியர் குழுவும் சென்று கேட்டு இன்புற்று வருகிறார்கள். அதில் படிக்கப்பட்ட ஒரு கதைதான் இது:
( கதையில், முக்கியமான ஒன்றைப்பற்றிச் சொல்லாமல் முடித்திருப்பது இதன் சிறப்பு)
“எட்டு மணி ஆச்சு, எந்திரி கண்ணா…” என்ற குரலுக்கு அலுப்பு முறித்தான் அன்பு. அன்று விடுமுறை. ஆனாலும் அன்று பள்ளிக்குச் சென்றாக வேண்டும். வழக்கம்போல எழுந்ததும் தன் அறையிலுள்ள பரணைப் பார்த்தான்.
சிறு பிராயத்தில் இருந்தே அவன் தந்தையின் தோள்மீது அமர்ந்து அந்தப் பரணைப் பிடித்துத் தொங்குவது அவனுக்குப் பிடித்த விளையாட்டாக இருந்தது. நாளடைவில், தானே வளர்ந்து அதைப்பிடித்துத் தொங்குவது அவனது இலட்சியமாகவே ஆகியிருந்தது. அதற்கு எவ்வளவு வளர வேண்டும் என்று தினமும் தனக்குத்தானே கணக்குப் போட்டுக்கொள்வான். ஆனால் சில வாரங்களாக அவனால் அதைச் சரியாக ஊகிக்க முடியவில்லை. தொடமுடியாத வானம் போலத் தோன்றியது அந்தப் பரண்.
“அங்க என்ன வேடிக்க? Parent teachers meet போக வேணாமா?” என்றது சற்றே கடினமான குரல்.
குளியலறை போதிமரம் அவனுக்குப் பல சிந்தனைகள் கொடுத்தது. வழக்கமாக நல்ல மதிப்பெண் பெறும் மாணவன்தான். சென்ற மாதத் தேர்வில் கூட நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். ஆனால் காலாண்டுத் தேர்வில் அவை நன்றாகக் குறைந்துவிட்டிருந்தன. அவனது வெண்ணிறத் துண்டு அவனுக்கு விடைத்தாள்போல் காட்சியளித்தது.
“இங்க்லீஷ் தமிழ் கூடப் பரவாயில்ல, கொஞ்சம் தான் கொறஞ்சிருக்கு. மத்ததெல்லாம் பாதிக்குப் பாதி தான் வாங்கிருக்க?” என்று அப்பா, அவன் மேல் விழுந்த வெந்நீர் போல் கொதித்தது நினைவுக்கு வந்தது.
தனக்கு உண்டான அசௌகரியங்களையும், செய்யாத வேலைக்கு சாக்குப்போக்குகளையும் அடுத்தவரிடம் சொல்லக் கற்றுக்கொள்ள அவனுக்குப் பத்து வருடம் போதவில்லை. “கொறஞ்சிடுச்சு…” என்று முணுமுணுத்தான்.
“அதான் ஏன்னு கேக்குறேன்.” என்று அவர் கோபக்கனல் கக்கியதில் அவனது உடல், தற்போது உள்ளதுபோல் வியர்வையில் நனைந்துவிட்டிருந்தது. பூட்டிய கதவின் வழியாக வெளியேறத் துடிக்கும் எறும்பு போல அவ்விடம் விட்டு அகலத் தவித்துக்கொண்டிருந்தான்.
காலத்தால் செய்த குறுக்கீட்டினால் அவனைக் காப்பாற்றிய அம்மாவின் “கெளம்பியாச்சா?” என்ற கூவல் கேட்டவனுக்கு கிடைத்த ஞானம் போதும் எனப்பட்டது.. ஆனது ஆகட்டும் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு கிளம்பிவிட்டான்.
“போன மாசம் முழுக்க திட்டு வாங்கி இருக்கேன். Science miss தான் class miss-ஆ வரணுமா?” என்று மனதிற்குள் குமுறிக்கொண்டு செல்ல வேண்டிய அறைக்குள் நுழைந்தான்.
“அன்புவோட parents-ஆ, உக்காருங்க…” என்றவர், மேசை மீது அடுக்கப்பட்டிருந்த பச்சை நிற அட்டைகளில் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து, “தெறந்து பாரு. போன monthly test-க்கும் quarterly-க்கும் ஏன் இவ்ளோ வித்தியாசம்?” என்று முறைத்தார்.
“கேக்குறாங்கல்ல? சொல்லு.” என்ற அதட்டல் அவனுக்குப் பழக்கப்பட்ட குரல்.
“Classwork-ல இல்லாத question வந்துருச்சும்மா.” என்று தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தாயிடம் தஞ்சம் புகுந்தான்.
“அதெல்லாம் இல்ல சார், Last bench, first bench எங்க உக்கார வச்சாலும் board-ல எழுதிப் போடறத copy பண்ண மாட்டேன்கறான் சார். Remarks எழுதிருக்கேன், படிக்க சொல்லுங்க அவன” என்று பச்சை அட்டையை நோக்கிக் கைகாட்டினார்.
அன்பு அதை முகத்திற்கு நேராக வைத்துப் படிக்க முயன்றான்.
“ஏன் அதை வச்சி முகத்த மறைக்கிற?” என்ற குரல் மட்டுமே அவனுக்குக் கேட்டது. அவ்வட்டையை கீழே இறக்கிப் பிடித்த அன்பின் முதுகு கேள்விக்குறி போல் வளைந்திருந்தது. அட்டையோ அவன் மூக்கை வருடிய வண்ணம் இருந்தது. அவனது புருவங்களின் இடையில் ஏற்பட்ட சுருக்கங்களின் அழுத்தம் அவன் தந்தையின் இதயத்தைப் பிழிந்து கண்கள் வழியே சாறை வெளியே எடுத்துக்கொண்டிருந்தது.
இலக்கியவாசல் – செப்டம்பர் 2016
செப்டம்பர் 2016 நிகழ்வு – 10ஆம் தேதியே நடைபெற்றுவிட்டது. (வழக்கமாக மூன்றாவது சனிக்கிழமை அன்று தான் நடைபெறும்)
இதன் தலைப்பு – “இன்று – இளைஞர் – இலக்கியம் ”
கதை – கவிதை – கருத்து ஆகியவற்றை மாதேவன் ( STOREACH புகழ் ) தொகுத்து வழங்க இளைஞர்கள் அசத்தினார்கள் !!
இதைப் பற்றி FACEBOOK இல் மாதேவனின் போஸ்ட்டும் , மற்றும் நமது கருத்தும்:
இன்று இளைஞர் இலக்கியம் – (Sep 10, 2016)
On behalf of கா விசயநரசிம்மன், Vithya Danaraj, Yeseyeweyea Raman, Uma Jayabalan, Ishvar Krishnan, Sundar Gopalakrishnan,Kayalvizhi Karthikeyan, Avinash Ramachandran and Eswar Vengadesaperumal, Asariri Thanks Kuvikam Ilakiyavasal and its foundersSundararajan Subramaniam and Kirubanandan Srinivasan for coming up with something like this.
Thank you all for your support in making the event an interesting one. Better sessions to come! 🙂
Sundararajan Subramaniam : In fact , we should thank you for bringing hall full of youngsters for this meeting. Many young faces have come forward to read stories and poems . There used to be a feeling among old timers that தமிழ் இனி மெல்லச் சாகும் . But after seeing the performance of youngsters yesterday , I have felt that Tamil will flourish well generations after generations. Thanks to all.
எது சரி? – சாந்தி ராகவாச்சாரி
ஹை கோர்ட் வளாகம் . என்னுடைய சேம்பருக்கு வெளியே நண்பர் ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருந்தேன் .என் நண்பரின் நண்பர் ஒருவருக்கு, பாமிலிக் கோர்ட்டில் ஏதோ வேலையாம் .என்னிடம் அதைப் பற்றிக் கேட்க வருகிறார்கள். பாமிலிக் கோர்ட்டில் வக்கீலுக்கு அவசியம் இல்லை . சரி நேரில் சொல்லிக்கலாம் என்று வரச் சொல்லியிருந்தேன் .உள்ளே போய் உட்காரலாம் என்று திரும்பினப்ப தூரத்தில் ஒரு பெண் என்னைப் பார்த்து கையை ஆட்டியபடி வந்தாள்.தெரிஞ்ச முகம். டக்குன்னு நினைவுக்கு வரல. கிட்ட வந்து ,என்ன அக்கா , அடையாளம் தெரியலையா ? என்றாள்.
அட , வைஷ்ணவி ,
கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே .ஒரு பத்து நிமிஷம் பக்கத்துச் சேம்பர்ல ஒருத்தரைப் பாத்துட்டு வந்துடறேன். இருப்பீங்களா ?
இன்னும் 2 மணி நேரம் இங்கதான் இருப்பேன் . வா ” என்று நான் சொன்னவுடன் சிரித்தபடி கிளம்பினாள் .
வைஷ்ணவி ..பாத்து 7 வருஷம் இருக்கும்.முன்னைவிட இப்பக் கொஞ்சம் குண்டாய் ஆனா அழகா இருக்கா. என்ன நகை ஸ்டாண்ட் மாதிரி நகையை மாட்டிகிட்டுருந்தாள்.
நான் படிச்சு முடிச்சுட்டு ஒரு சீனியர் வக்கீலிடம் ஜூனியராக இருந்தேன் இந்த வைஷ்ணவி ஒரு நாள் அவள் அப்பாவுடன் எங்கள் ஆபீசுக்கு வந்திருந்தாள்.எந்தப் புகைப்படலமும் இல்லாமல் அன்று நடந்தது காட்சிக்குக் காட்சி நினைவில் இருந்தது .
ஒண்ணுமே பேசாமல் எங்கள் முன் உட்கார்ந்திருந்தாள் .
சொல்லுமா, என்ன வேணும் உனக்கு ” என்று கேட்டார் என் சீனியர் .
“டிவோர்ஸ் வேணும்”
தொடர்ந்து அரை மணி நேரம் போராடிய பின் அவளைக் கவுன்சிலிங் செய்யும் பொறுப்பை என்னிடம் தந்தார்.
விவரம் இதுதான்.
காலேஜ் இரண்டாம் வருஷம் படிக்கும்போதே வீட்டுக்குத் தெரியாம ஒரு பையனை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணியிருக்கா. பழையபடி இரெண்டு பேரும் அவங்க அவுங்க ஹாஸ்டலுக்குப் போய்ட்டாங்க . வேலை கிடைச்சவுடன் வீட்டில சொல்லி வாழ்க்கையைத் தொடங்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க .
( அலை பாயுதே படம் வரத்துக்கு முன்னாடி நடந்தது. மணிரத்தினம் பொறுப்பல்ல ) படிப்பு முடிஞ்சு 2 வருடம் இது வீட்ல வாயத் தொறக்கலை. அந்தப் பையனுக்கு இன்னும் வேலை கிடைக்கல . வீட்டில இப்ப அலையன்ஸ் பிக்ஸ் பண்ணற டைம்ல விஷயத்தை வெளில சொல்லிருக்காள். இதல்லாம் அவள் அப்பா என்கிட்ட சொன்னது .
சரிம்மா, லவ் பண்ணித்தானே ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டே. இப்ப எதுக்கு டிவோர்ஸ் ” என்று கேட்டேன் அவள் அப்பாவை வெளியில் அனுப்பிவிட்டு .
முகத்தை நிமித்தலை. பதிலும் சொல்லல.
அப்பா பயமுறுத்தறாரா?? அவனுக்கு வேலை இல்லைன்னு பயப்பிடுறியா?? அவனுக்கு வேலைக்கு ஏற்பாடு பண்றோம் . அவனோட சேர்ந்து வாழறியா??
அப்பாவால உங்களை ஒண்ணும் பண்ண முடியாது .”
இது எதுக்குமே அவள் பதில் சொல்லல. “எனக்கு அவன் வேண்டாம். ப்ளீஸ் டிவோர்ஸ் வாங்கிக் குடுத்துடுங்க.”
கிளிப் பிள்ளைபோல் இதையே திருப்பித் திருப்பிச் சொன்னாள்.
இங்க பாரு வைஷ்ணவி , பணம்தான் பிராப்ளம்னா , அவனுக்கு நல்ல வேலை கிடைக்கற மட்டும் நானும் என் பிரெண்ட்ஸும் மானிட்டரியா சப்போர்ட் பண்றோம் ( சமூக சேவை !!)
எதுக்கும் அவள் அசைஞ்சு கொடுக்கலை.
ரெண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் என் தோல்வியைச் சீனியரிடம் ஒப்புக் கொண்டேன். அவர் வைஷ்ணவிக்கு ஒரு வாரம் டைம் தந்தார்.அதற்குப் பிறகும் டிவோர்ஸ்தான் வேணும்னா கேஸ் எடுத்துக்கறேன்னு சொல்லி அவங்களை அனுப்பிட்டார்.
ஒரு மாதம் சுத்தமாய் வைஷ்ணவியை மறந்து வேறு வழக்குகளில் மூழ்கி விட்டோம் . அப்புறம்தான் தெரிந்தது .. அவள் வேறு ஒரு வக்கீலிடம் சென்று மியூச்சுவல் டிவோர்ஸ் கேட்டிருக்கான்னு.
அந்தப் பையன் அதுக்கு எப்பிடி சம்மதித்தான் ?அவனைக் கன்வின்ஸ் பண்ண யூஸ் பண்ண மெத்தெட் என்னவாயிருக்கும்? பாவம் அந்தப் பெண் . வீட்டில அவங்களைப் பயமுறுத்திருப்பாங்க, என்று நாங்கள் எங்களுக்குள் புலம்பிக்கிட்டோம் .
சேரில் சாய்ந்து கண்ணைமூடிக் கொண்டு பழைய நாட்களை அசை போட்டுக்கொண்டிருந்தேன் .
பேசலாமான்னு கேட்டுகிட்டே வைஷ்ணவி வந்தாள் .
கொஞ்ச நேரம் பேசாம என்னைப் பார்த்துகிட்டு இருந்தாள்
உங்களுக்கெல்லாம் என்மேல கோவம்தானே ” என்று கேட்டாள்.
சே சே . உன்னை உங்க வீட்ல எப்பிடிப் பயமுறுத்திப் பணியவச்சாங்கன்னு , உங்க அப்பா மேலதான் ஆத்திரம் ., என்றேன்.
ஐயோ அப்பா ரொம்ப நல்லவரு . முதல்ல கோவப்பட்டாரு . அப்பறம் எனக்குப் பொறுமையா எடுத்துச் சொன்னாரு .
“என்னத்தை எடுத்துச் சொன்னாரு ” என்றேன் கேலியாக
அவனும் நானும் கிட்டத்தட்ட ஒரே வயசுக்காரங்க . அவன் ரொம்ப ஏழைப்பட்டவன் . கல்யாணத்துக்கு ஒரு அக்கா வேற இருந்தாங்க .அவன் எப்ப செட்டில் ஆவான்?? நாங்க எப்ப எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கறது ?
ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணும்போது தெரியலையான்னுக் கேக்காதீங்க . அப்ப லவ் பண்ண வேகம் .
ஒரு பக்கம் பிரெண்ட்ஸுக உசுப்பேத்திவிட்டாங்க . செய்யறது தப்பா, சரியான்னு தெரியாத வயசு. அப்பா நிறைய எடுத்துச் சொன்னாரு.
100 பவுன் நகையும் டாக்டர் மாப்பிள்ளையும் ரெடியா இருக்கறப்ப , காதலுக்காகக் கஞ்சிக் குடிச்சுட்டு , பத்துப் பாத்திரம் தேய்ச்சுக்கிட்டு , கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிலப் புள்ளைப் பெத்துக்கப் போறியான்னு.
அன்னிக்குப் பேசாததையும் சேர்த்து வச்சுப் பொரிஞ்சு தள்ளினாள் .
வாயடைச்சுப் போனேன் .
நாங்க பேசிக்கிட்டிருக்கும்போது என்னோட கிளையண்ட் உள்ள வந்து கோவில் குங்குமமும் துளசியும் கொடுத்தாள். கண்ணால அவளை உட்காரச் சொல்லிட்டு திரும்ப வைஷ்ணவியப் பார்த்தேன் .
என்னக்கா ,பணம்தான் பெருசான்னுக் கேக்கிறிங்களா ? பணமும் வசதியும் பழகாமல் இருந்திருந்தா , காதலை மட்டும் கையிலப் பிடிச்சுக்கிட்டு வாழ்ந்துருப்பேனோ என்னோமோ ?? பொறந்ததிலேருந்து பழகின விஷயம்.
காதல் பெருசுன்னு அன்னிக்கி ஓடிருந்தா , அஞ்சு ஆறு வருஷத்திலே வெறுத்துப் போய் டிவோர்ஸ் வாங்கியிருப்பேன் . அவனைச் சுத்தமா வெறுத்துருப்பேன் . அப்பிடி வெறுத்துப் போய்ப் பிரியறதுக்கு முளையிலேயே கிள்ளிப்பிட்டேன். எப்பயாவது மனசு உறுத்தும் .
உறுத்தல் இல்லாம யாரால வாழ முடியும் ?
பட பட வெனப் பொரிந்தவளை அசந்து போய்ப் பார்த்தேன்.
நான் என்னைப் பத்தியே பேசிக்கிட்டுருக்கேன் . உங்களுக்கு எத்தனை குழந்தை ?
ஒரு பொண்ணு
எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. உங்களப் பாத்ததுல ரொம்பச் சந்தோஷமக்கா . நான் கிளம்பறேன் . இந்தாங்க என் வீட்டு அட்ரஸ் . கண்டிப்பா பொண்ணையும், அண்ணனையும் கூட்டிக்கிட்டு வாங்க ” என்று விசிட்டிங் கார்டு தந்துவிட்டுப் புயலாய்ப் போனாள்.
கணவன் சிட்டியின் லீடிங் ஐ ஸ்பெஷலிஸ்ட் .
அப்படியே உட்கார்ந்து இருந்தவளை ” மேடம் ” என்ற குரல் எழுப்பியது.
அச்சச்சோ , கிளைண்ட்டை மறந்துட்டேன் .
” என் புருஷன்கிட்டப் பேசிப் பார்த்தீங்களா ”
பேசினம்மா ..அவரு ரொம்பப் பிடிவாதமா இருக்காரு . டிவோர்ஸ்தான் வேணுமாம் ”
இல்ல மேடம் . நான் அவரை ரொம்ப லவ் பண்றேன் .. அவருக்கும் என் மேல உள்ள காதல் குறையல .. ஏதோ கெட்ட நேரம் . அவரு இப்பிடி இருக்காரு . சக்கரத்தாழ்வார் அவரு மனசைக் கண்டிப்பா மாத்துவாறு..
எப்பிடியாவது என்னை அவர்கூடச் சேத்து வச்சுடுங்க மேடம் ” என்று தலைக் கவிழ்ந்து அழ ஆரம்பித்தாள் .
வாட் அன் ஐரானி. இவள் பேரும் வைஷ்ணவிதான் .. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு , ஒரு குழந்தை . அவன் வேலை வெட்டிக்குப் போகாம தினம் குடி, அடி ,உதை . இப்ப ஒரு பொண்ணோட தொடர்பு வெச்சுகிட்டு இவளை விவகாரத்துப் பண்ண கேஸ் போட்டிருக்கான்.
இவளானா , தினம் சக்கரத்தாழ்வாரைச் சுத்தி வந்தால் கல்யாணம் நிலைக்கும்னு சுத்திட்டு, டிவோர்ஸ் வேணாங்கறா.
இந்த ரெண்டு வைஷ்ணவி ல எந்த வைஷ்ணவி சரி ??
எந்த ஜட்ஜுகிட்ட நான் தீர்ப்புக் கேக்கறது ??
அசை -சுந்தர்
அவசரம் அவசரமாக விழுங்கி
வெந்தது வேகாதது பாதிபாதியாய்
சுவை கொஞ்சமும் உணராமல்
கிடைச்சது நிலைக்குமோ என்றபயத்தில்
பற்கள் நாக்கை ஒதுக்கிவிட்டு
இரைப்பை ரொப்பினா போதும்
அப்பாடா என்ற திருப்தியில்
மாட்டைவிடக் கேவலமானவன் நான் !
ஆனாலும் மாட்டுக்கு அறிவுண்டு
முழுங்கினதைத் திருப்பி எடுத்துவந்து
வாய்க்கே அதையும் கொண்டுவந்து
காலைச் சுகமாப் பரப்பிக்கொண்டு
வாலையும் மெதுவாய் ஆட்டிக்கொண்டு
தாடை ஆசையா அசைய அசைய
அசை போடும் அழகு வித்தையை
சாமி எனக்குச் சொல்லித் தரலை !
ஆனா நினைவுகளைப் பிடித்து
திரும்பத் திரும்பக் கொண்டுவந்து
அசைபோடத் தெரியுமே எனக்கு
நானும் புத்திசாலிதான் ஹையா
மாட்டுக்கு கொடுத்தான் ஓர் அசை !
எனக்குக் கொடுத்தான் வேற அசை !