இலக்கிய வாசல் – 12 வது நிகழ்வு – அறிவிப்பு

பன்னிரெண்டாம் நிகழ்வு

நாடகங்கள்-நேற்று இன்று நாளை

Image result for ஞாநி

சிறப்புரை:     திரு ஞாநி 

தொடர்ந்து கலந்துரையாடல்

வழக்கம் போல் சிறுகதை  ஒன்றும் –  கவிதை ஒன்றும் படிக்கப்படும்

அனைவரும் வருக !

இடம்: J G கண்ணப்பன் வாசுகி அரங்கம்,

68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,

(ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்)

சென்னை 600004 

சனிக்கிழமை 19 மார்ச் 2016,  மாலை 6.30 மணி

அனைவரும் வருக 

 

ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )

swami1

 

“நேனு  பேரு  அருண் ஷர்மா. டெல்லி பஜ்ரங்கபலி ஹெட்டு . என்ன  இப்படி சொஸ்த்தமா  சென்னைத் தமில்லே  பேசரான்னு  உனக்கு   வொண்டரா இருக்குடா? நான் பச்சாவா இருந்த அன்னிக்கு மெட்ராசிலே மூணு கிளாஸ் பாஸ் பண்ணியிருக்கான்.”

வி ஐ பி லவுஞ்ச்சில் அந்த சிவப்புக் குர்தாக் காரரோட சட்டை, வேஷ்டி குங்குமப்பொட்டு,  பம்ப்ளிமாஸ் முகம்,  தொப்பி, பான் போட்ட வாய் , அவரோட நடவடிக்கை  எல்லாமே ஆச்சரியமா இருக்கும் போது அவருடைய சென்னைத் தமிழ்  மட்டும் பெரிசா எனக்கு ஆச்சரியமா இல்லை.

அவர் சொன்ன பிறகு  தான் தெரிஞ்சுது அவர் தமிழ்லே பேசிக் கிட்டிருக்கார்னு. ஏதோ தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் கலந்த திராவிட மொழியை ஹிந்தியில் தொட்டுக்கிட்டு பேசற மாதிரி இருந்தது. சௌகார்பேட்  சேட் மாதிரி நம்பிள்கி நிம்பிள்கி  அப்படீன்னு பேசாம இருந்தவரைக்கும் சரி.அவர் ஏன் பேசறார்னே புரியலை. அப்பறம் தானே அவர் என்ன பேசறார்னு புரியறதுக்கு.ஷியாமும், ஷிவானியும் அவரை ஏதோ வித்தை காட்றவர் மாதிரி பார்த்துக்கிட்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டிருந்தாங்க. நல்ல வேளை பயந்துக்கலை.

“சிங்கப்பூர் ஏர்போர்ட் மேலே மோடிஜி கூட மாதாஜியும் மேடமும் மீட் செஞ்சு  டீ கொடுத்துச்சே,தெலுசா? “

இதுக்கு மேலே அவரைத் தமிழ் பேச விட்டா எனக்குத் தமிழ் சுத்தமா மறந்து போயிடும். அதனால நான் ஹிந்தியில் பேச ஆரம்பித்தேன். நானும் கான்பூரில நாலு வருஷம் குப்பைகொட்டியிருக்கேன். ஷர்மாஜி ரொம்ப குஷியாயிட்டார்.

ஷாலுவோட குருஜினி தமிழ் நாட்டுக்கு வர்ரதுக்கு முன்னாடி குஜராத்தில காந்திநகர்லே இருந்தாங்களாம்.  அப்போ அங்கே மோடிஜி  தான் குஜராத்துக்கு முதலமைச்சர் .காந்திநகர் தானே குஜராத்தோட தலைநகரம்.  குருஜினியை  மோடிஜிக்கு நல்லா தெரியுமாம். காந்திswamiநகரில் குருஜினியின் கோமாதா பூஜைக்கு மோடிஜி கூட வந்திருக்காராம்.

அதுக்குள்ளே சர்மாவின் போன் அடித்தது. “கொஞ்சம் இருங்கோ அமிட்ஜி கூப்பிடறது.” என்று சொல்லி ஹிந்திக்கு எண்   ஏதோ ஒன்றை அழுத்தினார். ” யாரு, அமிதாப் பச்சனா ? ” என்று நான் கேட்க,  நஹி ! அமித் ஷா ” என்று சொல்லிவிட்டு லவுஞ்சின் ஓரத்துக்குப் போனார்.

” யாருப்பா இவர்? ராமாயண் சீரியல்ல வர்ற அனுமார் மாதிரி இருக்கார்? – ஷிவானிக்குக் கொழுப்பு கொஞ்ச நஞ்சமில்லை.

‘டீ லூசு ! அவருக்குக் கேட்டிருந்தா உன்னை பே  ஆப் பெங்கால்ல தூக்கிப் போட்டிடுவாரு”ஷ்யாம் மிரட்டினான்.

நான் குறுக்கே புகுந்தேன். “ஷ்யாம்! நீ சொல்றது தான் தப்பு. அவர் ஷிவானி சொன்னதைக் கேட்டா அப்படியே குஷி ஆயிடுவார். ஏன்னா அவர் பஜ்ரங்கபலி தலைவர்”

“பஜ்ரங்க்பலின்னா என்னப்பா பாகுபலியோட பிரதரா ?” ஷிவானி  கேட்டாள்.

“ஆஞ்சநேயருக்கு இன்னொரு பேரு, பஜ்ரங்கி  பாயிஜான் ‘ படம் டிவியில பாக்கலே? “

“கரெக்ட். அப்பா! இவரைப் பாத்தா சல்மான்கான் மாதிரி தான் இருக்கு.” என்றான் ஷ்யாம்.

” ஷ்யாம், இதுக்கு வேணுமுன்னா அவர் கோவிச்சுக்கலாம். “

“ஏம்ப்பா, இன்னும் அம்மாவைக் காணோம்?. நாம ஏன் இங்கே உக்காந்திருக்கிறோம்? பிளேன் வர்ற இடத்துக்கே போலாம்  ” ஷிவானி சிணுங்க ஆரம்பித்துவிட்டாள்.

” ஏன் குழந்தை அழுறாங்க?  ஏதோ பஜ்ரஞ்கின்னு பேச்சு கேட்டுதூ? ” என்று  அமித் ஷா வோடு பேச்சை முடித்துவிட்டு வந்த சர்மா கேட்டார்.

இந்த அரைகுறை தமிழ் பேசறவங்க எப்பவும் கார் ரயில் அதையெல்லாம் வர்ராருன்னு சொல்வாங்க,  மனுஷங்களை அதுவும் குறிப்பா பெரியவங்களை வருது போகுது இல்லாட்டி வர்ரான்னு  சொல்வாங்க. திருத்தவே முடியாது. நாமளும் அப்படித்தான் ஹிந்தியில ஆண்பால் பெண்பால் எல்லாத்தையும் உல்டாவா சொல்வோம்.

ஒண்ணுமில்லே ஷர்மாஜி ! உங்களைப் பாத்தா அப்படியே ஹனுமார்ஜி மாதிரியே இருக்குதாம் ” என்று நான் ஹிந்தியில் சமாளிபிகேஷன் செய்ய அவர் புல்லரித்துப்போய் ஷிவானியைத் தூக்கித் தோள் மேல் வைத்துக் கொண்டார். விட்டா அப்படியே ஸ்ரீலங்கா ஏர்வேய்ஸ்சுக்குப் போட்டியா பறந்தே போயிடுவார் மாதிரித் தோன்றியது.

South Indian woman smiling : Stock Photo

அதற்குள் டிராலியில் பொட்டிகளைத் தள்ளிக் கொண்டு குருஜினியும் ஷாலுவும் அந்த லவுஞ்சுக்குள் பிரவேசித்தார்கள். ‘மாதாஜி’ என்று இவர் கத்த ஷர்மாஜி என்று குருஜினி கத்த – இந்த இரண்டு கத்தலுக்குப் பிறகு அந்த ஏர்போர்ட் வளாகத்தில் இருந்த  இரண்டு கண்ணாடிகள் விழுந்து நொறுங்கின.

( அடுத்த நாள் ஏர்போர்ட்டில் கண்ணாடி 59,60 வது தடவையாக முறையே விழுந்தன என்று    எல்லா பத்திரிகைகளும் பிரசுரித்தன.ஆனால் அதற்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை)

‘கண்டேன் சீதையை ‘ என்ற பாணியில் ஷர்மாஜி குஷியாகி மாதாஜி காலில் விழுந்தார். அது தான் சாக்கு என்று ஷிவானி ஓடிப்போய் ஷாலுவைக்  கட்டிக் கொண்டாள்.ஷியாமும் ஓடிப்போய் அம்மாவுடைய ஹேன்ட்பேகை வாங்கி அங்கேயே திறந்து பார்க்க ஆரம்பித்தான். யாரும் இல்லையென்றால் அவன் முதுகில் என் கை பாய்ந்திருக்கும்.  குருஜினியும் ஷர்மாஜியும் குஜராத்தியில் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் சத்தமா பேசினாலும் எனக்கு சுத்தமா ஒண்ணும் புரியலை.

ஷாலு  அவர்கள் இருவரும் பேசுவதையே மாறி மாறி ஏதோ புரிவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரகாஷ் ராஜ் பாணியில், ” இங்கே என்ன நடக்குது? ” ன்னு கத்தணும் போல இருந்தது எனக்கு.

ஷர்மாஜி ஷாலுவிடம்,  நீங்க உங்க வீட்டுக்குப் போய் விஷயத்தை உங்க ஹஸ்பெண்டிடம் சொல்லுங்க. அவர் உதவியோட நீங்க வெற்றிப் பாதையில் போகலாம்’ என்று  ஹிந்தியில் சொல்ல ஷாலு ஹிந்தி புரியாமல் முழி முழியென்று முழித்தாள். அப்போது தான் அவள் ஹிந்தியில் விஷாரத் எழுதியிருக்கிறாள் என்று அவள் அப்பா கல்யாணத்துக்கு முன் சொன்னது பொய்யின்னு எனக்குத் தெரிஞ்சுது.       ஆளாளுக்குப் பேசிக்கிட்டேபோறீங்க. என்னன்னு  சொல்லுங்களேன். சஸ்பென்ஸ் தாங்கலே” என்று கோபமா சொல்ல முயற்சி செய்தேன். ஆனால் அது காமெடி பீஸ் மாதிரி தான் வெளிவந்தது.

“மாதாஜியை நானே வீட்டிலே கொண்டு போய் விட்டிடறேன். ஷாலு மேடம், நீங்க நிதானமா யோசிச்சு வையுங்க. நாளைக்கு மத்தியானம் உங்க வீட்டுக்கு லஞ்சுக்கு நானும் மாதாஜியும் வர்ரோம்” என்று அழகான ஆங்கிலத்தில் அவர் சொன்னது, என்னடா, அவர் வீட்டுக்கு சாப்பிட வாங்கண்ணு கூப்பிடறமாதிரி  சொல்றாரேன்னு தோணிச்சு.

ஷாலு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே என் பின்னாடி வந்தாள். நான் என் பொண்டாட்டியையும்  குழந்தைகளையும் பொட்டிகளையும் இழுத்துக் கொண்டு காருக்கு வந்தேன்.

” பத்து நாளிலே நீங்க மூணு பேரும் இளைச்சுப் போயிட்டீங்க ” என்று ஷாலு சொன்னாள். ” நீயும் தான் இளைச்சுப் போயிட்டே ” ன்னு சொன்னதும் தான் அவளுக்கு நிம்மதியாச்சு. உண்மையில எல்லாரும் ஒரு கிலோ எடை கூடித் தான் போயிருக்கோம். ஷாலுவும் வெயிட் போட்டிருக்கிறாள் என்பதை அவள் ஜாக்கெட்டே சொல்லுது.

“அப்பா பிளீஸ், நாங்க மூணு பேரும் பின் சீட்டில உக்கார்ந்துக்கிறோம்” என்று சொல்லி விட்டு பொட்டிகளை டிக்கியில் வைத்துவிட்டு அவர்கள் பின் சீட்டில் ஏறிக் கொண்டார்கள். நான் காரை ஸ்டார்ட் செய்துவிட்டு உடனே ஆப் பண்னினேன்.

” ஷாலு ! ” சிங்கப்பூர் – ஏர்போர்ட்- மோடி – ஷர்மா- குருஜினி- குஜராத்தி இதெல்லாம் என்ன ? எனக்கு ஒண்ணும் புரியலை. என்னன்னு சொல்லு அதுக்கப்பறம்  காரை ஸ்டார்ட் பண்றேன்” என்றேன்.

” சுருக்கமா  சொல்றேன். கேட்டுக்கோங்கோ!  என்று ஷாலு சொல்ல ஆரம்பிக்கும் போது என் போன் அடித்தது. வேற யாரும் இல்லை. என் அருமை மாமனார் தான்.

” மாப்ளே! ஷாலு வந்துட்டாளா? நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? எனக்கு தலையெல்லாம் சுத்துது மாப்ளே!” என்று சொன்னார்.

‘அவராவது ஏதோ கேள்விப் பட்டிருக்கிறார். நான் எதுவும் இன்னும் கேக்கவேயில்லை’  எனக்குக் கெட்ட கோபம் வந்தது. ” உங்க பொண்ணு கிட்டேயே பேசுங்கோ ” என்று சொன்ன என்னை மறிச்சு ” வேண்டாம் மாப்ளே! வேண்டாம்! அவ ஏற்கனவே சொல்லிட்டா! இரண்டு குழந்தை பெத்தபிறகு இனிமே டிரவுசர் எல்லாம் போட்டுகிட்டு, வேண்டாம் மாப்ளே வேண்டாம். அவ அம்மாவுக்கும் இது சுத்தமா பிடிக்காது’ என்று சொல்லி வாயை மூடுவதற்குள்  அவர் போன் பிடுங்கப்பட்டு ஷாலுவின் அம்மா – என் மாமியார் பேசினார். ” மாப்பிள்ளை, தப்பா நினைச்சுக்காதீங்கோ, ஷாலு செய்றது தான் கரெக்ட். இந்த மனுஷனுக்கு விவஸ்தையே போறாது. நேத்திக்கு பக்ஷி ஜோசியம் பாத்தேன்,   ஷாலு ஓஹோன்னு வருவா அப்படின்னு அவன் சூசகமா சொன்னான். ” என்று கூறினாள் என் மாமியார்.

 சரி, விஷயம் தலைக்கு மேலே போயிடுச்சு . நமக்கு ஒண்ணும் புரியலை. வீட்டுக்குப் போய் நிதானமாக் கேட்டுக்கலாம் ” என்று  முடிவு செய்து காரைக் கிளப்பினேன்.

வீட்டுக்குப் போகும் போதே குழந்தைகள் தூக்கம் பிடித்துவிட்டன. பிளைட்டில் அவள் சாப்பிடாமல் பையில் போட்டுக் கொண்டு வந்த சாப்பாட்டு ஐட்டங்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாள் ஷாலு. ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட், கட்லட், ஜூஸ் , குழந்தைகளுக்கு இதுவே போதும் என்று சொல்ற அளவுக்கு சந்தோஷம்.  “ஹப்பா உதக்கு பிஸ்கத்து” பாதி சாப்பிட்டுக் கொண்டே பேசியதில் ஷிவானிக்கு வார்த்தை குளறியது. ஷ்யாம் பையைத் திறப்பதிலேயே குறியா இருந்தான்.

வீட்டுக்கு வந்ததும் வாட்ச்மேன் உதவியால் பெட்டிகளையும் குழந்தைகளையும்  எடுத்துக் கொண்டு    உள்ளே நுழைந்தோம்.” இருப்பா வாட்ச்மேன் , இந்தா நீ கேட்டது ” என்று சொல்லி அவனுக்கு ஒரு வாட்ச் கொடுத்தாள்.  “ஜாக்கிரதையா வைச்சுக்கோ, சிங்கப்பூர் வாட்ச் இது” என்று சொன்னாள். “அம்மா! அம்மா தான். போன தடவை ஐயா டெல்லிக்குப் போகும் போதே சொன்னேன் வாங்கி வரலே. அது நல்லதாப்  போச்சு, இப்ப சிங்கபூர் வாட்சே  கிடைச்சிருச்சு, ஐயாவுக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்று போகிற போக்கில் என்னைக்  குத்திவிட்டுப் போனான்.  அவனுக்கென்ன ஒரு விலையிலா வாட்ச் கிடைச்சுது.

” பரவாயில்லை . பத்து நாளிலே வீட்டைக் குட்டிச்சுவர் பண்ணாம நல்லாவே வைச்சிருக்கீங்க ” என்று எஃப் ஐ ஆர் போட்டாள் ஷாலு. இதுக்காக இன்னிக்கு காலைலிருந்து நானும் பசங்களும் எவ்வளவு மெனக்கிட்டிருக்கிறோம்? வசிஷ்டர் வாயாலே பிரும்ம ரிஷின்னு பட்டம் கிடைச்சா மாதிரி இருந்தது. ” ஆனாலும் குப்பையெல்லாம் கட்டிலுக்கு அடியில் போட்டிருக்கக் கூடாது” என்று அடுத்த பாலில் ஒரு சிக்ஸர் அடித்தாள். இப்போ  வசிஷ்டர்  வாயாலே பிரும்ம ராக்ஷஷன்னு பட்டம் கிடைச்சா மாதிரி இருந்தது.

ஷாலு,!  சிங்கப்பூர் போய்ட்டு வந்தப்பறம் உன்கிட்டே ஒரு ஒரு கிக் ஜாஸ்தியாயிருக்கு ” என்று சொல்லி அவளை மெல்ல என் பக்கம் இழுத்தேன். “ஐயோ ஷிவானி வந்துடுவா  ” என்று வழக்கமா சொல்ற பாட்டைப் பாடினாள்.  பிறகு லைட்டையும்  அவளையும் மெல்ல அணைத்தேன். என்னருகே படுத்துக் கொண்டாள். “என்னாச்சு வழக்கமா லைட்டை அணைச்சதும் நீங்க சொல்ற ஜோக்கைச் சொல்லலே . இருட்டிலே நான் ரொம்ப அழகாயிருக்கேன்னு.”

” ஷாலும்மா .. உண்மையிலேயே நீ இன்னிக்கு ரொம்ப  ரொம்ப அழகா  இருக்கே”

“அது சரி, சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலே என்ன நடந்ததுன்னு இப்போ சொல்லட்டுமா? என்று என் காதருகே கொஞ்சினாள்.

“அதெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் ” என்றேன்.

அடுத்த நாள் அது என்னவென்று எனக்குத் தெரிந்த போது தூக்கிவாரிப்போட்டது ! 

(பிறகு)

வானத்தைத் தொட்டவர்:

வானத்தைத் தொட்டவர்: சாகித்திய அகாடமி விருது பெற்ற கௌரி கிருபானந்தன்

கௌரி கிருபானந்தன் எழுதிய “மீட்சி” என்ற தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்திற்கு 2015 வருடத்திற்கானசாகித்திய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது கிடைத்திருக்கிறது.

Meetchi
“மீட்சி” என்பது 2015 வருட சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ள, “விமுக்தா என்ற பெயரில் திருமதி ஓல்கா” எழுதிய தெலுங்கு நாவலின் மொழிபெயர்ப்புப் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமுக்தா என்ற கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்திரதாரியாக சொல்லப்பட்டவை.

எண்டமூரி வீரேந்தர நாத் மற்றும் யத்தன்பூடி சுசிலா ராணி போன்ற எழுத்தாளர்களின் எண்ணற்ற தெலுங்கு நாவல்களை கௌரி கிருபானந்தன் சுவை படத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பில் உயிரோட்டம் இருக்கும். தேன் போல் இனிக்கும்.

gowri.kirubanandan2
விருதைப் பற்றி அவருக்குத் தெரிந்த போது அவர் அமெரிக்காவில் இருந்தார். “ நான் எதிர்பாராதது. எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
கௌரி.கிருபானந்தன் சிகரத்தைத் தாண்டி வானத்தைத் தொட்டுவிட்டார். அவர் இன்னும் நிறைய விருதுகள் பெற வேண்டும்,

என் . ஸ்ரீதரன் அவர்கள் வல்லமை என்ற வலைத் தளத்தில் இப்படிக் குறிப்பீட்டிருக்கிறார். மிகவும் பொருத்தமானது. (நன்றி)

சரித்திரம் பேசுகிறது ( யாரோ)

புத்தர் முதல் அலெக்சாண்டர் வரை…

 

இதிகாசங்களைத் தொடர்ந்து இந்திய சரித்திரத்தைத் தொடர்வோம்.

இந்தியா என்று சொல்கிறோமே, அந்த வார்த்தை எப்படி எப்பொழுது வழக்கத்தில் வரத் தொடங்கியது?

சம்ஸ்கிருத இலக்கியங்களில் அப்படி ஒரு பெயரே இல்லை!

பெளத்த சமண எழுத்துக்களிலும் அது இல்லை!

தென்னாசியாவின் எந்த மொழிகளிலும் இது குறிப்பிடப்படவில்லை!

சிந்து நதியை indus என்றனர் ஆங்கிலத்தில்.

ஆக – சிந்து நதியின் அருகில் இருந்த நாடு இந்தியா என்று முதலில் அழைக்கப்பட்டுப் பின்னர் பெருந் துணைக் கண்டமே இந்தியா என்று ஆனது

இது ஆங்கிலேயரின் நாம கரணமேயாகும்!

எனினும், இந்த சொல்லிலக்கணப்படிப் பார்த்தால் – இந்தியா என்ற பெயர் பாகிஸ்தானுக்குத் தான் பொருத்தமாக இருந்திருக்கும்! அங்கு தானே சிந்து நதி ஓடுகிறது!

(இப்படி ஏதாவது உளறி அடி வாங்கப் போகிறேன் என்று நீங்கள் நினைப்பது என் கண்ணில் விரிகிறது! என்ன செய்ய! – எழுதத் துணிந்துவிட்டால் நாமார்க்கும் அஞ்சோம்!)

கிறித்துவர்கள் ஏசுநாதரின் பிறப்பை ஒட்டிக் ‘காலத்தை’ அமைத்தனர்.

புத்த சமய எழுத்தர்கள் புத்தரின் பரி நிர்வாணத்தை (மறைவை) ஒட்டிக் ‘காலத்தை’ அமைத்தனர்.

பல கோட்பாடுகள் புத்தரின் மறைவு கி மு 350 – 400 அல்லது  483-486 அல்லது   544க்கு முன் என்று கணிக்கிறது.

இதில் 544க்கு முன் என்பது ஸ்ரீலங்கா பாரம்பரியத்தில் இருந்து வந்தது. இதைத் தள்ளுபடி செய்யலாம்.

மேலும் இந்திய பாரம்பரியம் கி மு 486 என்றும், சீன பாரம்பரியம் கி மு 483 என்றும் கூறுவதால் இதை ஒரு முடிவாக நாம் கொள்ளலாம்.

ஆனால், சமீபத்திய ஜெர்மன் அறிஞர்கள் கருத்துப்படி அசோகரின் பட்டாபிஷேகத்திற்கு (கி மு 268) 130 வருடம் முன்பே புத்தரின் மறைவு ஏற்பட்டிருக்கவேண்டுமாம்.

ஏதோ ஒரு தேதி இருந்து விட்டுப் போகட்டுமே – விஷயத்திற்கு (matterக்கு) வாய்யா என்று நீங்கள் பொருமுவது புரிகிறது! சரி … சரி…

புத்தர் , அலெக்சாண்டர் இருவரும் பெரும் சரித்திர நாயகர்கள். அவர்களைப்பற்றிக் காண்போம்.

புத்தர்

(Courtesy: By Michel wal – Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=6039874)

sari1

சித்தார்த்த கௌதமா – சாக்ய மன்னர் பரம்பரையில் கபிலவஸ்துவில் சுத்தோதனருக்கும் மாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த சில நாட்களிலேயே தாய் இறக்கவே, சித்தி ‘மஹா பிரஜாபதி’ யின் வளர்ப்பில் வளர்ந்தார். மன்னர் சுத்தோதனர்,  மகன் பெரிய மன்னராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதனால் மத சம்பந்தமானது மற்றும் ‘மனித துயரங்கள்’ பற்றி மகன் அறியாமலிருக்க வழி செய்தார். பதினாறு வயதில் யசோதரா என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.

sari2

29ம் வயதில் சித்தார்த்தர் அரண்மனையை விட்டு வெளி வந்து குடிமக்களைச் சந்தித்து மக்களின் ‘துயரங்கள்’, ‘மூப்பு’ , ‘நோய்’, ‘இறப்பு’ இவைகளை அறிந்து அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

அந்த பாதிப்பில் ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளியேறி துறவியானார்.   மகத நாட்டுத் தலைநகர் ‘ராஜக்ரஹாவை’ அடைந்தார். துறவு வாழ்வுப்படி வீதியில் பிச்சை (பிக்ஷா- ஐயோ…pizza அல்ல Bhiksha!) எடுத்து உண்டார்.   இதைக் கேள்வியுற்ற பேரரசன் பிம்பிசாரர்  –தனது சிங்காதனத்தை சித்தார்த்தருக்குத் தர விழைந்தார்.  மறுத்த புத்தர் – ஞானோதயம் பெற்ற பின் மறுபடியும் மகதத்திற்கு வருவதாகக் கூறி விடை பெற்றார்.

இங்கே சற்று அரசியல் பேசுவோம்.

பிம்பிசாரர் மகதத்தின் மாமன்னன்.

பிற்காலத்தில் மௌரிய அரசு செழிக்க மகதத்தை உருவாக்கி அடிகோலியவர் பிம்பிசாரர்.

அங்க தேசத்தைப் படையெடுத்து வென்று, தன் ஆட்சியில் கொண்டு வந்தார்.

ராஜக்ரஹா என்ற தலைநகரை உருவாக்கினார்.

புத்தரின் நண்பன் மற்றும் பாதுகாவலராக இருந்தார்.

sari3

திருமணம் செய்தே பல அரசுகளை அடைந்தார் (இது எப்படி இருக்கு!)

கோசல நாட்டு இளவரசி கோசல தேவியைத் திருமணம் செய்து ‘கோசலத்தை வரதட்சிணையாகக் கொண்டார்.

லிச்சாவி (lichchavi) இளவரசி – வைஷாலி அரசன் சேடகனின் மகள். அவளை மணந்து வைஷாலி நாட்டையும் பெற்றார்.

இதற்கிடையில் ‘அமரப்பள்ளி’ என்ற பெண் ,அழகிப்போட்டியில் வென்ற பேரழகி.

அவளுடனும் இவரது காதல்!

அரசன் என்றாலே ‘மச்சம்’ என்று தப்புக் கணக்குப்போட வேண்டாம்.

மேற்கொண்டு படியுங்கள்.

மகன் அஜாதசத்ரு சிங்காதனதிற்க்காகத் தந்தையை சிறை செய்து பட்டினி போட்டான்.

கொடுமைப் படுத்தினான்.

sari4

(அகழ்வாராய்ச்சி ஆதாரம்)

தாயிடம் ஒரு நாள் பேசும் போது தன் தந்தை தன்னை எத்தனை பாசத்தோடு வளர்த்தார் என்பதை அறிந்து கொண்டான்.

‘சரி.. பாசம் வாய்ந்த தந்தையை சாவடிப்பது சரியல்ல… விடுதலை செய்யலாம்’

முடிவெடுத்த அஜாதசத்ரு, போர் வீரர்களை , தந்தையை விடுதலை செய்ய அனுப்பினான். குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்த பிம்பிசாரர் படை வீரர்கள் வருவதைப்பார்த்து ‘சரி .. என்னை  போட்டுத்தள்ள மகன் முடிவு செய்தான் ‘ என்று எண்ணித் தானே உயிர் துறக்கிறார்.

(வேறு சில கருத்துக்களில் – அஜாதசத்ரு தந்தையை எவ்வாறு சித்ரவதை செய்து கொன்றான்  என்று விளக்குகிறார்கள். அதை எழுதக் கை கூசுகிறது. எழுதாமல் விடுகிறேன்)

அரசன் அன்று கொல்வான்.  தெய்வம் நின்று கொல்லும்..

பின் குறிப்பு:  அஜாதசத்ருவின் மகன் உதயபத்ரா. அவன் நாட்டாசையால் – அஜாதசத்ருவைக் கொடூரமாகக் கொன்றான்.

அன்பே உருவான புத்தரின் கதை கூறும் போது இந்த கேடு  கெட்ட அரசியல் நமக்கெதற்கு!

சித்தார்த்தர் கதைக்குத் திரும்புவோம்.

சித்தார்த்தர் துறவறத்தில், குருக்கள் வழியாக யோகாசனம் கற்றார். மேலும் ஞானோதயம் பெற ‘எல்லாவற்றையும் துறப்பது (உணவு உட்பட) என்று முடிவு செய்தார். நாளொன்றுக்கு ஒரு இலை மட்டும் உட்கொள்வார்.  இப்படிப் பசித்து, உயிர் போகும் நிலை அடைந்து, ஒரு நாள் நதி நீரில் குளிக்கும் போது மூழ்கி இறக்கும் நிலை அடைந்தார். அருகில் இருந்த சுஜாதா என்னும் கிராமியப் பெண்மணி அவரைக் காத்து ‘பாயாசம்’ ஊட்டி உயிர் காத்தாள்!

சித்தார்த்தர் தனது வாழ்வுமுறையை ‘மறு பரிசீலனை’ செய்தார்! பட்டினி கிடந்து ஒரு எல்லை  செல்லாமல் ஒரு ‘நடு வழி’யில் செல்வது தான் சரி என்று உணர்ந்தார். ஞானோதயம் பெற யோக வழியில் செல்ல முடிவெடுத்தார்.

போதி மரத்தடியில் தனது 35 ம் வயதில், 49 நாள் தவமிருந்து ஞானோதயம் அடைந்தார்.   புத்தர் பிறந்தார்.

சங்கம் அமைத்து அதில் புத்த துறவிகளைச் சேர்த்தார். பிறகு 45 வருடக் காலம் பெரும் பயணம் கொண்டு புத்தக் கொள்கைகளைக் கற்பித்தார்!

சுத்தோதனர் துறவு கொண்ட மகனை கபிலவஸ்து வருமாறு அழைத்தார். ஒன்றன் பின் ஒருவராகப் பத்து தூதர்களிடம் கடிதம் அனுப்பினார். ஒன்பது தூதர்கள் புத்தரைச் சந்தித்ததும் அவரது சீடராகி அங்கேயே தங்கி விட்டனர். கடிதம் சேர்க்கப்படவே இல்லை. பத்தாவது தூதரும் புத்தரைச் சந்தித்ததும் அவரது சீடரானார். ஆனால், கடிதத்தை புத்தரிடம் கொடுத்தார் (அப்பாடியோ!)

புத்தர் தனது சீடர்களுடன் கபிலவஸ்து சென்றார். அங்கு அரண்மனையில் பல்சுவை விருந்து அமைக்கப்பட்டிருந்தது. புத்த கூட்டங்கள் வீதியில் பிச்சை எடுக்கத் தொடங்கினர்.

சுத்தோதனர்:  என்ன இது? நமது அரசவை பரம்பரையில் ஒருவரும் பிச்சை எடுத்ததாக வழக்கமே இல்லையே!

புத்தர்: இது இப்பொழுது புத்தரின் பரம்பரை… அரசவை பரம்பரை அல்ல. பிச்சை எடுப்பது எங்கள் கடமை!

இந்த கபிலவஸ்து வருகையில் பல அரச குடும்பத்தினர் புத்தரின் சீடர்களாகினர்.

ஏழு வயது மகன் ராகுல் புத்தரின் சீடனானான்.

பின்னாளில் சுத்தோதனர் மரணப்படுக்கையில் இருக்கையில் புத்தர் சென்று அவருக்குத் தர்மத்தைப் போதித்தார். சுத்தோதனர் மரணத்திற்குப் பிறகு பல அரசப் பெண்டிர் புத்த சங்கத்தில் சேர்ந்து துறவிகளாக விரும்பினர். புத்தரின் வளர்ப்புத்தாய் ‘மஹா பிரஜாபதி’ யும் அவர்களில் ஒருவர். புத்தர் பெண்கள் துறவியாவதற்கு உடன்படவில்லை. அந்த அரசவை மகளிர் அவரது சங்கத்தைப் பின் தொடர்ந்து சென்றனர். புத்தரின் தலைமை சீடர்கள் பெண்களுக்கு ஆதரவாகப் பேசினர். முடிவில் புத்தர் பெண்களைத் துறவியாக்க அனுமதித்தார்.

45 வருட தர்ம போதனைக்குப்பின் தனது 80ம் வயதில் புத்தர் தான் ‘மஹா பரி நிர்வாண’ நிலை (இறப்பற்ற நிலை) அடைவதாகப் பிரகடனம் செய்தார். குஷிநகரில் – சுண்டா (Cunda) என்ற கொல்லன் அளித்த கடைசி உணவை உண்ட உடன் உக்கிரமான நோயுற்றார். புத்தர் தனது பிரதம சீடனை அழைத்து தனது இறப்புக்கு அந்த கொல்லன் அளித்த உணவு காரணமல்ல என்பதை அவனுக்கு விளக்குமாறு பணித்தார். தனது மறைவிற்குப் பிறகு எந்தத் தலைவரையும் பின்பற்ற வேண்டாம் என்று சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.

புத்தருடைய பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. அவரது புகழுடம்பு சரித்திரத்தில் என்றும் அழியாதது.

 

அலெக்ஸாண்டர்

அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு இந்திய சரித்திரத்தில் ஒரு சிறு குமிழி. பெரிய அரசியல் வெற்றி அல்ல. இதை ஐரோப்பிய சரித்திர வல்லுனர்கள் ஊதிப் பெரிதாக்கி விட்டனர். இந்திய எழுத்தர்கள் அலெக்ஸாண்டர் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

அலெக்ஸாண்டரின், இந்தியப் படையெடுப்பு வெற்றியை விட மிக முக்கியமானது அவன் இந்தியா வந்து அடைந்தது தான். இந்தியா வந்து சேருமுன்னே அவன் கண்ட மற்ற வெற்றிகள் மிகப் பெரியவை.

அலெக்ஸாண்டரின் தந்தை பிலிப் (Philip) மாசிடோனியாவின் மன்னன். அலெக்ஸாண்டர் பதின்மூன்றாம் வயதில் அரிஸ்டாட்டில் என்ற புகழ் மிக்க தத்துவ ஞானியிடம் பாடம் பயின்றான்.

sari5

பத்து வயதாக இருக்கும்போது ஒரு அடங்காக் குதிரை அரண்மனையிலிருந்தது. அப்படிப்பட்ட குதிரை தேவையில்லை என்று அனுப்ப மன்னர் முடிவு செய்தார்.

sari6

 அலெக்சாண்டர் அந்த குதிரையை அடக்கித் தன் சொந்த குதிரையாக்கினான். தந்தை மிக மகிழ்ந்து ‘ மகனே உனக்கு மாசிடோனியா போதாது!  பெரும் உலகில் உனது ஆட்சி பரவ வேண்டும்’ என்றார். பின்னாளில் இந்தக்குதிரை (புசபாலஸ்-bucephalas) களம் பல கண்டு இந்தியாவில் மாண்டது! அதன் பெயரில் இந்தியாவில் நகரம் ஒன்று அமைத்தான்!    

மாசிடோனியாவிலிருந்து புறப்படு முன் கிரேக்க நாடுகளில் பற்பல போர்களை வென்றான். மாசிடோனியாவிலிருந்து புறப்பட்டு அதுவரை கனவிலும் நினையாத அரசுகளை வென்றான். அனடோலியா (Anatolia) எனப்படும் இந்நாள் துருக்கி (Turkey)  கி மு 334 ல் வீழ்ந்தது. அதன் பிறகு சிரியா, பாலஸ்தீன் வழியாக எகிப்து, லிபியா வை வென்றான். இது கி மு 332 ல்.

பாரசீகம் (achaemedid) அன்று மிகப்பெரிய வல்லரசு. அது இன்றைய ஈரான், துருக்கி, குவைத் ,சிரியா, ஜோர்டான், இஸ்ரேல், லெபனான், ஆப்கானிஸ்தான், எகிப்து, லிபியா, மற்றும் ஐரோப்பியாவில் பல்கேரியா, உக்ரைன், ரஷ்யா, ஆர்மேனியா, ஜார்ஜியா மற்றும் மத்திய ஆசியா என்று உலகின் மிகப்பெரும் வல்லரசாக விளங்கியது.

அலெக்ஸாண்டரின் பத்து வருடப் படையெடுப்பு இந்த வல்லரசைக் குலைத்தது.

பாரசீகப் பேரரசன் டேரியஸ் III (Darius)ஐ அழித்து வெற்றி கொண்டான். இப்பயணங்களில் பெரும்பாலும் எதிரியை விட குறைந்த படைபலம் இருந்தும் சாமர்த்திய ராணுவ முறைகளால், பெரும் வீரத்தால், பெரும் வெற்றி கிடைத்தது.   (phalanx) நெருக்கமாயமைக்கப்பட்ட சேனை என்பது ஒரு சக்தி மிகுந்த வியூகம் . 

sari7

இப்படி அமைந்த படை எதிரிகளின் படையின் முகப்பை உடைக்கும்.

இந்தியா:

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே!  அலெக்சாண்டர் வருவதற்கு முன்னமே அவரது போர்ப் பிரதாபங்கள் இந்தியாவில் பிரசித்தி பெற்றிருந்தது. ஆக- அவன் படைகள் இந்தியா நுழைய நுழைய – சிற்பல குறுநில மன்னர்கள் பணிந்தனர். அலெக்சாண்டர் சிந்து நதியைக் கடந்து அம்பி எனும் தக்ஷசிலா (Taxila) பேரரசின் அரசனை சந்தித்தான். அம்பி அலெக்சாண்டருக்கு வெகுமதிகளையும், யானை மற்றும் படை உதவிகளையும் கொடுத்தான். அம்பி அலெக்ஸாண்டரிடம் சக்தி வாய்ந்த மன்னன் ‘போரஸ்’ஐப் பற்றிக் கூறினான்.

‘வெளி நாட்டுக்காக இந்திய மண்ண்ணுக்குத்  துரோகம் செய்த முதல் இந்திய மன்னன் அம்பி’ என்று சரித்திரம் கோடி காட்டுகிறது.

அம்பியின் தக்ஷசிலா – சிந்து நதியிலிருந்து ஜீலம் நதி வரை பரவியிருந்தது. ஜீலம் நதி தாண்டி ‘போரஸ்’ என்ற மாமன்னன் ஆண்டு வந்தான். அச்சமற்று, கம்பீரமாக, சக்தி பொருந்திய போரஸ், அம்பி போல் இல்லை. ‘புரு’ வம்சத்தில் வந்தவன். மாவீரன்.

அலெக்சாண்டர் போரசிடம் தன்னை சந்தித்துக் கப்பம் கட்டுமாறு கூறியனுப்பினான். போரஸ் ஆமோதித்து இந்த சந்திப்பை வரவேற்றான்! ஆனால் ‘இந்த சந்திப்பு நிகழ மிகச் சரியான இடம் போர் முனை தான்‘ என்றான்!

கி மு 326 ல் இந்த போர் ‘ஜீலம் நதி யுத்தம் ‘ (battle of Hydaspes) நடந்தது. போரஸ் இதில் தோற்றான் என்பதில் வல்லுநர்கள் கருத்தொருமிக்கிறார்கள்.

பருவ மழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இந்திய சேனை மழையில் போர் புரிவதில் தடுமாறினர். போரசின் ரதப்படை  சகதியில் அகப்பட்டுத் திணறின. அலெக்ஸாண்டரின் (phalanx) ‘நெருக்கமாயமைக்கப்பட்ட சேனை’ பெரும் சேதத்தை விளைவித்தது. யானைகள் காயமடைந்து இரு பக்கங்களையும் தாக்கியது. காயப்பட்ட போரஸ் பெரும் யானை ஒன்றிலிருந்து போர் புரிந்தபோது பிடி பட்டான்.

sari8

(போரஸ் சரண்)

அலெக்சாண்டர்: ‘உன்னை என்ன செய்ய வேண்டும்?’

போரஸ்:  ‘ஒரு அரசனுக்குத் தகுந்த முறையில்’

அலெக்சாண்டரை போரஸின் மாவீரம் வெகுவாகக் கவர்ந்தது. பரந்த மனதுடன் – போரசை அவன் நாட்டிற்கே மீண்டும் அரசனாக்கி  ஜீலம் நதி தாண்டிய வேறு சில பகுதிகளையும் கொடுத்துக் கவுரவித்தான். (பின்னாளில் அலெக்ஸாண்டரின் மறைவுக்குப் பின்னர் அவனது தளபதி ஐடமுஸ் (Eudemus) போரசைக் கொலை செய்தான்).

 

அலெக்சாண்டர் மேற்கு இந்தியா பகுதியோடு உலகம் முடிந்ததென்று கருதியிருந்தான். சிந்து நதிக்குக் கிழக்கே கங்கை நதி தாண்டி ‘நந்தா’ என்ற மகத அரசும், அதன் கிழக்கில் இன்றைய வங்காள அரசும் இருப்பது அறிந்தான்.

அந்த நாடுகளின் செல்வக்கொழிப்பை அறிந்து அவைகளை வெற்றி கொள்ள ஆவல் கொண்டான். அவர்களின் பிரம்மாண்ட படை பலம் அவனது சாகச உள்ளத்துக்குப் பெருந்தீனி அளித்தது. அவைகளை வெற்றி கொள்ளக் கங்கை நதியைத் தாண்டச் செய்த முடிவை அவனது வீரர்கள் எதிர்த்தனர். தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினர். தளபதிகளும் அதே கருத்தைக் கூறி மன்றாடினர். முடிவில் அலெக்சாண்டர் ஒப்புக்கொண்டு திரும்ப முடிவு செய்தான்.

அலெக்சாண்டர் தோல்வி அடைந்ததே இல்லை என்று சரித்திரம் சொல்லும். ஆனால் இந்த ஒரே ஒரு முறை – தன் மக்களாலே தோல்வியுற்றான்!

பாபிலோன் நகரை அடைந்து  அரேபியா படையெடுப்பை நடத்தத் திட்டமிட்டான். அதற்கு முன் இறந்தான். காய்ச்சல் வந்து இறந்தான் என்பர் சிலர். விஷமிடப்பட்டு இறந்தான் என்பர் சிலர். 33 வயதில் அந்த ‘உலக நாயகன்’ உயிர் துறந்தான்!

இந்திய சரித்திர ஏட்டின் ஒரு சகாப்தம் முடிந்தது. மறு அத்தியாயம் மகதத்தில்

துவங்கவுள்ளது! இன்னும் பேசுவோம்!

 

(references:

https://en.wikipedia.org/wiki/Timeline_of_Indian_history

https://en.wikipedia.org/wiki/Gautama_Buddha

https://en.wikipedia.org/wiki/Alexander_the_Great

)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விஜய் சேதுபதி + கார்த்திக் சுப்புராஜ் + குறும்படம் = துரு

Director Karthik Subbaraj in December, 2012.jpg

விஜய் சேதுபதியும் கார்த்திக் சுப்புராஜும்  பீட்ஸா  படத்தில் பட்டையைக் கிளப்பியிருப்பாங்க !

இப்போது அதே காம்பினேஷனில் ‘காதல் கடந்து போகும்’ என்ற படம் வந்துள்ளது!

முதல் முதல்ல அவர்களின் குறும்படம் எப்படி இருந்தது தெரியுமா?

பார்த்து ரசியுங்கள்  ” துரு “

 

அந்த இரண்டு நிமிடங்கள் ….! ——- நித்யா சங்கர்

                                –

      என்ன ஆயிற்று..? எல்லாம் சரியாகத்தானே போய்க் கொண்டிருந்தது..!

      ‘ மாங்கல்யம் தந்துணானேனா..’ என்று மாங்கல்யச் சரடை மாப்பிள்ளையிடம் நீட்டிக் கொண்டு,  ஆள்காட்டி விரலை உயரே தூக்கி,  ‘ கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..’ என்று கூறப் புறப்பட்ட புரோகிதரின் விரலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, கடுகடுத்த முகத்தோடு சிடுசிடுவென புரோகிதரின் காதில் ஏதோ முணுமுணுத்தான் மாப்பிள்ளை முகுந்தன்.  அவரும் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடியே என்ன செய்வதென்று தெரியாமல் ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

      கெட்டிமேளம் கொட்டுவதற்கான சைகையை எதிர்பார்த்திருந்த நாதஸ்வர வித்வான்கள், அச் சைகை வராதது கண்டு குழப்பத்தோடு ஏதேதோ பாட்டுக்களை வாசித்துக் கொண்டிருந்தனர்.

      மாப்பிள்ளை முகுந்தன் வாட்சைப் பார்த்துக் கொண்டு அருகிலிருந்த அவன் தந்தையிடம் ஏதோ கூறிக் கொண்டிருந்தான்.  மேடையில் நிலவிய திடீர் நிசப்தத்தால், மாங்கலய தாரணத்தை ஆவலோடு எதிர் பார்த்துக் காத்திருந்த, அத் திருமண மண்டபத்தில் இருந்த சுற்றமும், உறவினரும் குழப்பத்தோடும், சிறிது கவலையோடும் நிசப்தமாக உட்கார்ந்திருந்தனர்.  திடீர் நிசப்தத்தைக் கவனித்த பெண்ணின் தகப்பனார் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். மேடையில் அவர்கள் மிகவும் சன்னமாகப் பேசும் பேச்சு மண்டபத்திலுள்ளோர் காதுகளில் தெளிவாக விழவில்லை. 

      ‘ இல்லைடா..  தேர் ஈஸ் சம்திங் ராங்…  மாப்பிள்ளையைப் பார்.. வாட்சை வாட்சைப் பார்க்கிறார்.  ரொம்ப சீப்பான வாட்சை வாங்கிக் கொடுத்திட்டாங்களோ..? அதனாலே மாப்பிள்ளை கோவிச்சிட்டிருக்காரோ..? என்றார் என் பின் வரிசையில் உட்கார்ந்து இருந்த ஒருவர்.

      அதற்குள் மாப்பிள்ளையிடம் மன்றாடிக் கொண்டிருந்தார் பெண்ணின் தந்தை.  மாப்பிள்ளை முகுந்தன் மணப்பெண் ரதியின் கழுத்தைக் காட்டிக் காட்டி என்னவோ சன்னமான குரலில் பெண்ணின் தந்தையிடம் கூறிக் கொண்டிருந்தான்.

      ‘ நோ வே.. இது வரதட்சணைப் பிரச்னைதான்.  அங்கே பார்.. மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தைக் காட்டிக் காட்டி ஏதேதோ சொல்கிறார்.  பெண் வீட்டார் சொன்னபடி கரெக்டாக நகைகளைப் போடவில்லையோ..? என்றார் மற்றொருவர்.

      மேடையில் என் நண்பன் இதையெல்லாம் பார்த்தபடி நின்றிருந்தான். ‘ என்னதான் நடக்கிறது..? இங்கே வந்து சொல்லேன்’ என்று அவனை சைகையால் அழைத்தேன்.

      ‘ கொஞ்சம் பொறு வருகிறேன்..’ என்று அவனும் பதிலுக்கு சைகை செய்தான். ‘ என்ன நடக்கிறது?’ என்ற சஸ்பென்ஸ்தான் நீடித்தது.

      பெண்ணின் தகப்பனார் குழப்பத்தோடும், கவலையோடும் மாப்பிள்ளையின் தந்தையின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்,

      மாப்பிள்ளையின் தந்தையும் தன் மகனிடம் ஏதோ மன்றாடினார்.  முகுந்தன் அதே கடுகடுப்பான முகத்துடன் மணப் பெண்ணின் கழுத்தைக் காட்டிக் காட்டி ஏதேதோ தன் தந்தையிடம் சொன்னான்.

      ‘ ஏம்பா! எனக்கென்ன தோணரதுன்னா.. மணப் பெண்ணுக்கு ஒரு தங்கச்சி இருக்காள் இல்லையா..? அவள் யாரோடவாவது ஓடிப் போயிட்டாளா.. அதுதான் இவ்வளவு சீரியஸா விவாதிக்கிறாங்களா..? மானம் போயிடுமேன்னு இந்தக் கல்யாணத்தை அரேஞ்ச் பண்ணின பெண்ணின் தகப்பனாரும், பையனின் தகப்பனாரும் ‘ ஏதோ நடந்தது நடந்து போச்சு.. அதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்.  இப்போ தாலியைக் கட்டு’ என்று சொல்கிறார்களோ.. என்ன கொடுமைடா இது?’ என்றார் மூன்றாமவர்.

      எனக்கு எழுந்து அந்த மூன்றாமவரை ஒரு சாத்து சாத்தலாம் என்று தோன்றியது.  அவர்கள் பேச்சு மண்டபத்தில் யாருக்குமே கேட்கவில்லை.  என்னவென்றே புரியவில்லை.  அதற்குள் இப்படி அபத்தமான அதீத கற்பனையா..? கடவுளே…!

      அதற்குள் மேடையில் சலசலப்பு அடங்க, மாப்பிள்ளை புரோகிதரின் விரலை ரிலீஸ் செய்ய,  புரோகிதரும் தனது ஆள்காட்டி விரலை உயர்த்தி, ‘ கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்று கணீரென்று முழங்கினார்.

      அவர்களும் இந்தக் குழப்பத்தில் – கற்பனையில் – இருந்தார்களோ என்னவோ, நாதஸ்வர, தவில் வித்வான்கள் சில வினாடிகள் நிதானித்துக் கெட்டி மேளம்- சகல வாத்தியம் – முழங்கினர்.  மாப்பிள்ளையும் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போடக் கல்யாணம் இனிதாக முடிந்தது.  

      மாங்கல்ய தாரணம் முடிந்ததும் என் நண்பன் என்னை நோக்கி ஒரு புன்முறுவலுடன் வந்தான்.

      “ என்னடா… என்ன ஆச்சு? என்ன கன்ப்யூஷன்?”

      “ ஒன்றுமில்லேப்பா.. முகூர்த்த நேரம் ஒன்பதிலிருந்து பத்து மணி வரைன்னு போட்டிருந்தாங்க..  ஆனா மாப்பிள்ளைக்குத் தெரிஞ்ச ஜோசியர், ‘ ஒன்பது நாற்பதிற்குத் தாலி கட்டினா ரொம்ப விசேஷம்னு’ சொல்லி இருந்தாராம்.  மாப்பிள்ளை இதை முன்கூட்டியே புரோகிதரிடம் சொல்லியிருந்தும், அவர் ஏதோ நெனப்பில் ஒன்பது முப்பத்தெட்டிற்கே தாலியை எடுத்துக் கொடுத்துட்டார். பட், மாப்பிள்ளை ‘ இது எங்க லைஃப் பிரச்சினை.  அவ கழுத்திலே மாங்கல்யம் ஒன்பது நாப்பதுக்குத்தான் ஏற வேண்டும்’ என்று பிடிவாதமாக சாதித்து ஒன்பது நாப்பதுக்குத் தாலியைக் காட்டினார்..” என்றான் சிரித்தபடி.

      நான் மெதுவாக என் பின் வரிசையைப் பார்த்தேன்.  கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்ட மகான்கள் யாரையுமே அங்கே காணவில்லை.  எங்கோ ஓடி ஒளிந்து விட்டார்கள் போலும்.

      ‘ஒன்பதிலிருந்து பத்து மணி வரை நல்ல முகூர்த்த நேரமாக இருக்க ஒரு இரண்டு நிமிடங்கள் முன்னாலோ பின்னாலோ இருந்தால் என்னா..? அதற்காக இப்படியா..?’

      எனிவே.. ஆல் ஈஸ் வெல் தட் எண்ட்ஸ் வெல்…

நகைச்சுவை மன்னர்கள் : பாக்கியம் ராமஸ்வாமி

இன்றையப் பெருசுகளால் பெரிதும் அன்றும் – இன்றும் – என்றும் விரும்பப்பட்ட  அப்புசாமி – சீதாப்பாட்டியைப் படைத்த  பாக்கியம் ராமசாமியின் வாழ்க்கைக் குறிப்பு

(
BhakkiamRamasami

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி, சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும். 

அவரது சிறப்புகள்:

அவர் சிருஷ்டித்த அப்புசாமி, சீதாப்பாட்டி  கதை முதன்முதலில் குமுதத்தில் வெளிவந்த ஆண்டு 1963.)

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990’ம் ஆண்டு ஓய்வு​பெற்றார். 

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். 

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்று பாராட்டுப்​பெற்றவர். இலக்கிய.க் கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவைகள் ​பேசியிருக்கிறார். ‘ஞானபாரதி’ ‘எழுத்துச் செம்மல்’ போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர்.

 ‘பாமரகீதை’ என்னும் சிறு நூலை பகவத் கீதையின் கருத்துக்களாக ஜராசு என்ற பெயரில் எழுதியுள்ளார்.

சிறுவர்களுக்காக வால்ட் டிஸ்னி தயாரித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் கார்ட்டூன் படத்துக்குத் தமிழில் வசனம் எழுதியுள்ளார்.

நகைச்சுவையைத் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் ‘அப்புசாமி டாட் காம்’ என்ற வலைத் தள பத்திரிகை நடத்தி வருகிறார்.

நலிவுற்ற நகைச்சுவை எழுத்தாளர்களின் ​மேம்பாட்டுக்கும், அனைவரது நகைச்சுவையையும் தொகுக்கும் பணிக்காகவும் ‘அப்புசாமி – சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’ என்ற அமைப்பையும், அப்புசாமி – சீதாப்பாட்டி இசைக் கூடல்’ என்ற அமைப்பையும்  சமீபத்தில் துவங்கி நடத்தி வருகிறார்.

அவரது ஆடியோ புத்தகம் ஒன்றை காத்தாடி ராமமூர்த்தி அப்புசாமியாகக் குரல் கொடுக்க பாம்பே கண்ணன் தயாரித்திருக்கிறார். இதன்  யூ டியூப் வடிவத்தைக் கேளுங்கள்:

 அப்புசாமியாகக் காத்தாடி ராமமூர்த்தி பங்கேற்கும் ஆடியோ கதைககள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. டி வி தொடர்களும் வந்துள்ளன.

அப்புசாமி கதைகளில் கூடவே வருபவர்கள் : சீதாப்பாட்டி, ரசகுண்டு, பீமாராவ் , அரை பிளேடு அருணாசலம், கீதாப் பாட்டி, பொன்னம்மா டேவிட் போன்றவர்கள்.

அப்புசாமியின் அல்பத்தனம், சீதாப்பாட்டியின் ஆங்கிலம் மற்ற அவரது சிஷ்ய கோடிகளின் மடத்தனம் எல்லாம் சுத்த கலீஜா இருக்கும்.

நசுங்கின ஈயச்  சொம்பு போன்ற அவரது முகத்தை வரைந்து அதன் மூலம் பிரபலமான ஓவியர் ஜெயராஜ் தனது டிரேட் மார்க்காக வைத்திருந்தது அப்புசாமி-சீதாப்பாட்டியின் ஸ்கெட்ச் தான்.

பாக்கியம் ராமசாமியின்
அப்புசாமி கதைகள்

Appusamiyum Africa Azhagiyum - அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்Veerappan Kaatil Appusamy - வீரப்பன் காட்டில் அப்புசாமி

அப்புசாமியும் ஆப்பிரிக்கா அழகியும் என்கிற நாவலைப் பற்றி நூல் உலகம் என்ற இணையத் தளம் இப்படிக் கூறுகிறது:

அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்!  இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச் சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இடீலி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து, ‘மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்’ என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்.

நொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்கொண்டிருந்த அப்புசாமிக்கு, இடீலி யைப் பார்த்ததும் பரம குஷி. அப்படியே ‘பச்சக்’ என்று அவளுடன் சட்னிபோல் ஒட்டிக்கொண்டு விட்டார். அப்புறம் என்ன? ஒரே கன்னாபின்னா ரகளைதான்!

இடீலியுடன் சேர்ந்து ஆப்பிரிக்க டூயட் பாடுகிறார். கொதிக்கும் அண்டாவில் இறங்குகிறார். ஆப்பிரிக்க மொழி பேசுகிறார். சீதாப்பாட்டிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார். கூடவே, பல இடியாப்பச் சிக்கல்களிலும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்.

உளுந்து வடையையே உருப்படியாக முடிக்கத் தெரியாத அப்புசாமியால், வீரப்பன் கொடுத்த உடும்புக் கறியை எப்படிக் கடிக்கமுடியும்?

வீரப்ப மீசையோடு, அவனது உடையையே அணிந்துகொண்டு, துப்பாக்கியோடு அந்தக் காட்டில் அலைந்து திரிந்து அழிச்சாட்டியம் செய்யும் தைரியம் அப்புசாமிக்கு எப்படி வந்தது?

அப்புசாமி காட்டிலிருந்து அனுப்பிய கேசட்டில், கெக்கேபிக்கேத்தனமாகக் கூறப்பட்டிருந்த செய்தி என்ன? அப்புசாமியைப் பார்க்க நக்கீரன் கோபால் ஏன் போகவில்லை?

– See more at: http://www.noolulagam.com/product/?pid=2243#sthash.umdp0Tpw.dpuf

விருந்து தயார். வந்து ஒரு கை பாருங்கள்!

 

 

 
 

சௌந்தரராஜனின் முகநூல் படங்கள்

 

நண்பர் சௌந்தரராஜனுக்கு நல்ல கலை உணர்வு அதிகமாயிருக்கிறது என்பதற்கு அவர் முகநூலுக்காகத் தேர்ந்தெடுக்கும்  புகைப்படங்களே சான்று.

எத்தனை அழகான படங்கள் !

அந்தப் படங்களை  முகநூலில் பார்க்கும்  போதே  அவை  நம் கண்ணையும் கருத்தையும்  கவரும்.  

சில படங்கள் சங்கக் கவிதை போல இருக்கும்.

இன்னும் சில படங்கள் புதுக்கவிதை போல பளீரென்று தெறிக்கும்.

கொஞ்சம் படங்கள்  ஓவியங்கள்  போல கொஞ்சும்.  

அவர் ரசனைக்கு நன்றி கூறி அவற்றுள் சிலவற்றைப்   பகிர்கிறேன். 

9, 99, 999,

இந்த எண்களைத் தமிழில்   படியுங்கள்

9

90

900

ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று தானே சொல்கிறோம்?

சங்க கால மக்கள் இவற்றை வேறு மாதிரி சொல்லி வந்தார்களாம். அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் பொருத்தமாகவே  இருக்கிறது.

பரிபாடலில் ( திருமால் 3: 77-79) திருமாலைப் புகழ்ந்து பேசும் பாடல் ஒன்று உள்ளது .

அது இப்படி துவங்குகிறது,

பாழ்என கால்என பாகுஎன ஒன்றுஎன

இரண்டுஎன மூன்றுஎன நான்குஎன  ஐந்துஎன

ஆறுஎன ஏழுஎன எட்டுஎன தொண்டுஎன

 

ஆக , நாம் ஒன்பது என்றழைக்கும் 9 ஐ அவர்கள் தொண்டு என்றே அழைத்தார்கள் என்பது புலனாகிறது.

மேலும் பாழ் என்றால் 0, கால் என்றால் 1/4 ,பாகு என்றால் 1/2 . அருமை ! அருமை!!

இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து நாம் 90ஐ தொண்ணூறு என்றும், 900ஐ தொள்ளாயிரம் என்று அழைப்பது தவறு என்று கூறப்படுகிறது.

ஏனென்றால்,

பத்து, இருபது, முப்பது,நாற்பது, ஐம்பது,அறுபது,எழுபது, எண்பது, இவற்றிருக்குப் பிறகு ஒன்பது, என்று தான் இருக்க வேண்டும். நாம்  தொண்ணூறு என்று சொல்கிறோம். அது தவறு

அதைப்போல நூறு, இருநூறு. அந்த வரிசையிலும் 900 ஐ தொள்ளாயிரம் என்று சொல்கிறோம். அது தவறு அதைத் தொண்ணூறு என்று தான் சொல்லவேண்டும்.

9000 ஐ தான் தொள்ளாயிரம் என்று சொல்லவேண்டும்.

இப்படிச் சொல்கிறார் முனைவர் பாக்யமேரி என்ற ஆசிரியர்  தன் தமிழ் இலக்கிய வரலாறு என்று நூலில்!

லாஜிக் சரியாகத் தானே இருக்கிறது !

கலைஞர்  தேர்தலில் வெற்றி பெற்றால்,  பொங்கலைத் தமிழ் ஆண்டின் துவக்கம் என்று அறிவித்ததைப் போல இந்த எண்களையும் மாற்றலாம் !   

 

 

சைனா டீ – குறும்படம்

 

சைனா டீ  என்ற குறும்படம். ஒரு கலக்கல் காமெடி. சூடான  நடிப்பு . வாசனையுள்ள கதாபாத்திரங்கள். கிளாசைக் கலக்கிக் குடிச்சா அப்படியே கிளாசிக். செம கிக். கட்டிங் போட ரெடின்னா குறும்படம் பாருங்க!

 

ஹோசசிகுரு

 
விவசாயத்தில் முதலீடு செய்து லாபமும் காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
 
அது எப்படி முடியும் ?  என்று கேட்பவர்களுக்கு அசோக் ஜெயந்தி, ஸ்ரீராம் சிட்லூர், ஸ்ரீநாத் ஷெட்டி என்ற மூன்று இளைஞர்கள் பதில்  அளிக்கிறார்கள் என்று பெட்டர் இந்தியா இணைய தளம் கூறுகிறது.  
 
இவர்கள் மூவரும் தங்கள் பொறியியல் துறையை விட்டுவிட்டு விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்வது எப்படி என்று செய்து காட்டி மற்றவர்களையும் வழிப் படுத்துகிறார்கள்.
 
தற்போது இவர்கள் விவசாயத்தில் மக்கள் முதலீடு செய்யும் வகையில்  ஒரு நிறுவனத்தை நிறுவியிருக்கிறார்கள். இதற்குக் கன்னடத்தில் ஹோசசிகுரு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இளந்தளிர் என்று அதற்குப் பொருள். இவர்கள் கோடான கோடி பெறுமான  விவசாய நிலத்தை நிர்வகித்து  விவசாய விளை பொருட்கள், தோட்டப் பயிர்கள், மரங்கள், நாற்றுப் பண்ணை என்று பல வகைகளில் அவற்றை மேம்படையச் செய்திருக்கின்றனர்.
 
தரிசாக உபயோகமில்லாமல் இருக்கும் நிலங்களில்  விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்து அவற்றில் லாபமும் அடையச் செய்வது இந்த நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது.
 
இந்த விவசாய முதலீட்டுத் திட்டத்தில்,
 
முதல் படி,  முதலீட்டுக்குத்  தக்க விவசாய நிலத்தைத்  தேர்ந்தெடுப்பது  
 
இரண்டாவது படி, தேந்தெடுக்கப்பட்ட பயிருக்குத் தக்கவாறு நிலம் , சொட்டு நீர்ப் பாசனம், மண் செறியூட்டல், ஆழ் நிலக் குழாய்கள் , வேலை செய்ய உதவியாளர்கள்  போன்றவற்றைத் தயார் செய்தல்
 
மூன்றாவது படி,  இந்த விளை நிலங்களையும், மற்ற பயிர் வளர்ப்பு – பாதுகாப்பு செய்கைகளை இந்த நிறுவனமே முதல் மூன்று மாதங்களுக்கு நிர்வாகித்தல். அதற்குப் பிறகு முதலீட்டார்கள் தாங்களாகவே விவசாயத்தைத் தொடராலாம் அல்லது இந்த நிறுவனத்திடமே நில நிர்வாகத்தை ஒப்படைக்கலாம்.
 
இந்த நிறுவனம் நவீன விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தி குறைவான செலவில் நிறைய மகசூல் பெறும் பயிர்களை  விளைவிப்பதில் வெற்றி கண்டு அவற்றைச்  செயல் படுத்தி வருகிறார்கள்.
 
குறைந்த முதலீடு செய்பவர்களுக்கு குறுகிய காலப் பயிர்களான வாழை, தர்பூசணி, இஞ்சி, பப்பாளி போன்றவற்றை விளைவிக்கச் செய்கிறார்கள்.
 
பெரும் முதலீட்டார்களுக்குப் பண்ணை நிலங்கள் வாங்கி அவற்றில் தேக்கு, சந்தனம் போன்ற மரங்களைப் பயிர் செய்கிறார்கள்.
 
இவர்கள் விவசாய அறிஞர்களையும்  விஞ்ஞானி களையும் கலந்து ஆலோசித்தே  திட்டங்களைத் தயார் செய்கிறார்கள்.
முதலீட்டாளர்கள் தங்கள் நிலங்கள், பயிர் பற்றிய விவரங்களை  உடனுக்குடன் இணைய தளத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளவும் வசதி செய்திருக்கிறார்கள்.
 
தற்போது இந்த இளந்தளிர் நிறுவனம் பங்களுருக்கு வெளிப்  புறத்திலும் ,  ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்திலும்   2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயப் பண்ணை அமைத்திருக்கிறார்கள்.
 
நிலத்தை அதன் தன்மை கெடாதவாறு செய்து விவசாயத்தை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது தான் இத் திட்டத்தின் முக்கிய அம்சம்.
 
இதில்  வரும் வருமானத்திற்கு வருமான வரி  கிடையாது என்பது இதன் சிறப்பு அம்சம்.
 The Better India (94)

பீபி-கா-மக்பரா ( ஜே ராமன்)

 

இந்த  நேர் பிரதி உலகப் புகழ் தாஜ் மஹால் அல்ல.  அதைப் போலவே உருவாக்கிய மொகலாயக் கட்டடம்.

இது பீபி-கா-மக்பரா  என்று அழைக்கப்படும். இருக்குமிடம் அவுரங்காபாத்திலிருந்து 5 கிமீ தொலைவில்.

இந்த அழகிய மசோலியம் ,மொகலாய  மன்னன் அவுரங்கசீப் (1658-1707) மனைவி ராபியா -உல்-தௌரானி  அல்லது டிராஸ் பானு பேகத்தின் நினைவுக்காகக் கட்டப்பட்டது.

அரச குமாரர் அசாம் ஷா அவரது தாயின் நினைவாக கிபி 1651-1661 நூற்றாண்டுகளில்  இதை எழுப்பியிருக்கிறார்.

இதை  வடிவமைத்து உருவாக்கியவர் அடா-உல்லா என்னும் கட்டிடக் கலைஞர் என்றும்,  ஹான்ச்பெட் ராய்  என்னும் பொறியியலாளர் என்றும் பிரதான நுழை வாயிலில் கிடைத்த கல்வெட்டுகளினால் தெரியவருகிறது.

பின்புறம் அமைந்துள்ள அழகிய மலைத் தொடர்களின்   வடிவங்களிலும்  பசுமையான தோட்டங்களின்  மத்தியிலும்  இந்த சமாதியைப் பார்த்து  ரசிப்பது  ஒரு பிரமிப்பான அனுபவமே!

இதனைக் கட்டிமுடிக்க  ரூபாய்  6,68,2037-7,    1651-1661 ஆண்டுகளில் செலவாயிற்று என்றும் தெரியவருகிறது.

இந்த மசோலியம்  தாஜ் மஹாலைத் தோற்கடிக்கத்  தொடங்கியபோதிலும், தரம்கெட்ட நகல் வடிவமாக முடிவடைந்தது.

காரணம் தாஜ்மகாலின்  அஸ்திவாரம் ஆழமான காதலில் போடப்பட்டது. அது அசல். அதனால் உலக அதிசயங்களில் ஒன்றானது.

இந்த பீபி கா மர்க்காரா போட்டிக்காகக் கட்டப்பட்டது. அசல் அசல் தான். நகல் நகல் தான்.

 

இதைப் பார்க்கும் போது ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரியகோவிலும் அதே வடிவில்  அவன் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுர சிவன் கோவிலும்  நினைவுக்கு வருகிறது.

தந்தையின் கோவிலைவிடப் பெரியதாக இருக்கக்கூடாது என்று சற்று சிறியதாகக் கட்டினானாம் ராஜேந்திரன். பாண்டியர் படையெடுப்பால்  இது  மிகவும் சிதிலமடைந்து காணப் படுகிறது.  மராட்டியர் பராமரிப்பால்  தஞ்சைக் கோவிலுக்கு மெருகு கிட்டியது.

தஞ்சைக் கோவில்

002

கங்கை கொண்ட சோழபுரக் கோவில்

032

 

படைப்பாளி – மா அரங்கநாதன் ( எஸ் கே என்)

 

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த, புதுச்சேரியில் வாழ்ந்து வந்து, பிறகு சென்னையில் குடியேறிய  மா. அரங்கநாதன் என்னும் படைப்பாளியின் கதைகளை ஒரு முறை நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தபோது சற்று வித்தியாசமான கதைகளும், அவற்றைச்  சொல்லும் முறையும் கவனத்தை ஈர்த்தது. 2009 ல் வெளிவந்துள்ள  அவரது அறுபதிற்கும் மேற்பட்ட  சிறுகதைகள் தொகுப்பு  நல்ல வாசிப்பு அனுபவமாக இருந்தது.   ஐம்பதுகளில் தொடங்கி  பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை போன்ற இதழ்களில் எழுதத் தொடங்கி உள்ளார்.. சாகித்ய அகாதமிக்காக மொழி பெயர்ப்புகள் செய்துள்ளார். பல பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடப் புத்தகங்களாக   இடம் பெற்றுள்ளன. ‘பரளியாற்று மாந்தர்’ என்னும் நாவல் தவிர பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். ‘மூன்றில்’ இலக்கிய அமைப்பை நடத்தி வந்திருக்கிறார். அதே பெயரில் வந்த சிற்றிதழ் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். ஒரு சில கதைகள் தவிர மற்றவற்றில் முத்துக்கறுப்பன் என்னும் பெயரில்தான் இவரது கதாநாயகன் இருப்பான்.  நிகழ்வுகளை மட்டுமே சார்ந்த கதைகளாக இல்லாமல் வாழ்வின் புதிர்களைக் காண்பிக்கும் கதைகள்

***   ***  ***

“தேங்காய்” என்னும் இவரது கதை

அசலூரில் அரசாங்க வேலை பார்க்கும் முத்துக்கறுப்பனின் தந்தை, சிவசங்கரன் இறந்து போகிறார். . மூத்த மகனான வேலுவிற்கு உள்ளூரிலேயே வேலை. வருமானமும் குறைவு.  சற்றுப் பேச்சுத் தடுமாற்றமும் உண்டு. பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் பிள்ளை தான் பெண்வீட்டாரிடம் பேசி வேலுவிற்கு மணமுடித்து வைத்தார். அந்தத் திருமணத்தை முன்னின்றும் நடத்தி வைத்தார்.

சிதம்பரம் பிள்ளைக்கு வேலுவிடம் இருந்த நெருக்கம் முத்துக்கறுப்பனிடம் கிடையாது. முத்துக்கறுப்பனுக்கும் அவரிடம் ஒரு பயம். என்னவென்று சொல்லவியலாத பயம். இவனது திருமணத்தில் பக்கத்து வீட்டுகாரராகவே பங்கெடுத்துக்கொண்டார்.

“அவன் ரொம்ப பெரியவன் மாதிரி ஆயிட்டான் – நம்மையெல்லாம் எங்க மதிக்கிறான்” என்று சௌகர்யமாக ஒதுங்கிக்கொள்வார்.

சிவசங்கரனின் காரியங்கள் மளமளவென்று நடந்துகொண்டிருந்தது. சிதம்பரம் பிள்ளைதான் முன்னேயிருந்து காரியங்களைக் கவனித்தார். அவர் குரல்தான் தூக்கியடித்துக்கொண்டிருந்தது. செத்தவரின் விருப்பப்படி அவருக்கு செல்லமான ஆத்தங்கரைத் தென்னந்தோப்பில் தான் அடக்கம் செய்ய முடிவாகியது.       

ஊருக்குப் பெரியவர் என்பதால் மட்டுமல்ல, அங்குள்ள எல்லாருடனும் ஒரு விதத்தில் தொடர்புடையவரது கடைசி ஊர்வலமாதலால், அது சுவாமி புறப்பாடு மாதிரி  தோன்றியது, வீட்டு வாசலிலும் தெருவிலும் நின்ற பெண்கள் கும்பிட்டுக்கொண்டனர். இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த குழந்தைகளின் கைகளைச் சேர்த்து வைத்து கும்பிடச் செய்தவர்களும் உண்டு. ஊர்கிழங்கள் தங்களுடையதை ஒத்திகை பார்த்தன.

காடேற்று, தேங்காய்க் கிழமை, பயிற்றுக் கிழமை, பதினாறாம் நாள் சடங்கு என்று காரியங்கள் நடந்தன.

இரவு,  பெண்டுகள் அழுவதற்காக அழைக்கப்பட்டார்கள். முறைப்படி ஒப்பாரி வைத்தார்கள்.

“கத்திரிக்காய் எங்களுக்கு

கைலாயம் உங்களுக்கு    .  

வாழைக்காய் எங்களுக்கு

வைகுண்டம் உங்களுக்கு”

என்று பாடி பரலோக பதவி அளித்தார்கள்

பெரிய மனிதர்கள் மற்றுமுள்ள காரியங்களைக் குடும்பத்தினரை வைத்துப் பேசலானார்கள். அதை அந்த வீட்டில் பேசவேண்டாமென்று, சிதம்பரம் பிள்ளை தன்வீட்டிற்கு எல்லோரையும் அழைத்தார்.

“அவன் வாயில்லாப் பூச்சி- சர்க்கார் வேலையும் இல்லே- நமக்கு இரண்டு பேரும் ஒண்ணுதான் .ஆனா மேற்கொண்டு பார்த்தா, வேலுதான் கஷ்டப்பட்டிருக்கான்” என்று தொடங்கினார் சிதம்பரம் பிள்ளை.. ” ஆனா இந்த விஷயத்தில முத்து ஏதாவது நினைச்சுக்கக் கூடாது. அவனையும் ஒரு வார்த்தை கேட்டுடணும்”

முத்துக்கறுப்பனின் மனைவியோ, வாயைப் பொத்திக்கொண்டு “இந்த மனிதருக்கு என்ன கெடுதல் செய்தீங்க- இப்படி ஈரல் குலையைப் பிடுங்கறாப்பில கேக்காரே ” என்று முணுமுணுத்தாள்.

ஆனால், முத்துக்கறுப்பனோ “எல்லாம் மாமா சொல்றாப்பிலேயே வைச்சுகிடுவோம்- நான் மாட்டேன்னா சொல்லப்போறேன்” என்றான்.

தென்னந்தோப்பின் மீதான பாகத்தை விட்டுக் கொடுப்பதன் மூலம்  முத்துக்கறுப்பன் தனக்கு ஒரு பாரம் இறங்கிவிட்டது போலத் தென்பட்டான். சாவுச் செலவு பூராவும் மூத்தவன்தான் ஏற்றுக்கொண்டான் என்று நம்பிவிடுவது எளிதான விஷயம்.

வயல் வெளிகள் மேலுள்ள உரிமையும் அப்படித்தான் என்ற எண்ணமும் ஏற்பட்டது.

திடீரென வெளியில் ஏதோ அமளி.

இன்று அதிகாலை தேங்காய் திருடும்போது ஒருவன் அகப்பட்டானாம். அவனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

கருக்கலிலேயே மரத்தில் ஏறி, அங்கிருந்தபடியே ஒரு கயிறு மூலம் கீழே மெதுவாக இறக்கிவிடுவானம். இறங்கி வந்து வயல் வரப்பு வழியாக அவன் ஊர் சென்று விடுவானாம்.

“என்ன முத்து! நீதான் டவுன்லே இருக்கியே. இது மாதிரி பார்த்திருக்கியா?” என்று ஊர் மூத்தவர் கேட்கிறார்.

முத்துக்கறுப்பன் அசட்டுச் சிரிப்போடு பார்க்கையில் சிறிது வியர்த்தது. ஆற்றங்கரை காற்று நன்கு வீசிக்கொண்டிருந்தது. தேங்காய்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த நார் நீண்டு தொங்கிக் கொண்டிருந்தது. நீண்டு…

நீண்டு சென்றது அது- அவனது பயம் துளித் துளியாகக் கண்ணாடியில் படிந்த பனியாகத் துடைக்கப்படுகிறது. வெள்ளை வெளேரென ஓர் ஏழு வயதுப் பையன் துள்ளி அந்த ஆற்றங்கரைப் பகுதியில் செல்வது மங்கலாகிறது. அது அற்புதமான ஓர் அதிகாலைப் பொழுது.

பலூன் போல ஒரு குலை மரத்திலிருந்து இறங்குகிறது. இரண்டு கால்கள் இறங்கி வருவது தெரிகிறது. அந்த நடை இவனுக்குப் பரிச்சயமாகத் தோன்றுகிறது. மேட்டில் ஏறித்தான் வரவேண்டும். பக்கத்தில் வந்தால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த ஆள் வேறுபுறம் திரும்பிப் போய்விடுகிறார்.

முத்துவிற்கு நடுக்கம். அவரை

வீட்டில் பார்த்தால் எப்படிப் பேசுவது என்ற எண்ணம் தோன்றி நடுக்கம் அதிகமாகிறது. ஆனால் ஏழு வயது சிறுவன் வீடு போகாமலிருக்க முடியாது.

றுநாள் வீடு திரும்பும் போது தென்னந்தோப்பைக் கடந்து போகிறார்கள், முத்துக்கறுப்பனும் அவன் மனைவியும்.

“உங்க பேரில என்னதான் அப்படியொரு ஆங்காரமோ தெரியலை அந்தப் பாவி மனிசனுக்கு” என்று திரும்பவும் ஆரம்பித்தாள் மனைவி

“அது அப்படியில்லே- நாந்தான் பதினஞ்சு வருஷமா பயந்துகிட்டிருந்தேன்னு நினைச்சேன். அப்படியில்லே. அவர்தான் அதிகமா நடுங்கிக்கிட்டு இருந்திருக்காரு” என்று சொல்ல நினைத்தான் முத்துக்கறுப்பன்.

என்று முடிகிறது.

படிக்கவேண்டிய இவரது பல கதைகளில் இணையத்தில் கிடைப்பவற்றில் சில  

மூன்றில்      ஞானக்கூத்து

 

 

 

 

 

 

 

ஆயிஷா – இரா . நடராஜன்

ஆயிஷா [Ayeesha].

தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.

பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா… இந்த யதார்த்தத்தைப் போட்டு  உடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியைப் புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.

இன்றும் லட்சக்கணக்கானவர்களைக் கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு,   இரா. நடராசனை, ‘ஆயிஷா நடராசன்’ என்றே அறிய வைத்த கதை.

– கணையாழி வழி – ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.

– ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.

– நிகர் முதல் வாசல் வரை – 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கிப் பரவலாக எடுத்துச் சென்றன.

– அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாயப் பாடமாக்கப்பட்டது.

– அதைத் தவிர ஏழு தன்னதிகாரக் கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.

– ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

 

 

இலக்கிய வாசல் – 11 வது நிகழ்வு பற்றிய தகவல்


IMG_1696

“பொன்னியின் செல்வனின் வெற்றியின் ரகசியம்” என்ற தலைப்பில் இலக்கிய வாசலின் பதினொன்றாம் நிகழ்வு பிப்ரவரி 20, சனிக்கிழமை அன்று,  தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கப்பட்டது .

சுந்தரராஜன், வந்திருக்கும் தலைமைப் பேச்சாளர்  திரு பாம்பே கண்ணன்  அவர்களையும் மற்றும் விழாவிற்கு வந்திருக்கும் அன்பர்களையும் வரவேற்றார்.

IMG_1677
கவிஞர்  ஆரா ‘பொன்னியின் செல்வனில்’ வரும் கதையுலக மாந்தர்களை வைத்து ஒரு கவிதையைப் படைத்து அதனைக் கேட்பவர்கள் அனைவரும் ரசிக்கும் அளவிற்குப் படித்தும் காட்டினார்.

 

திருமIMG_1685தி விஜயலக்ஷ்மி,   திரு.சுந்தரராஜன்எழுதிய “ராஜராஜ சோழன் உலா” என்ற சரித்திரக் கற்பனைக் கதையை அழகாகப் படித்துக் காட்டினார்.

கவிதையும் கதையும் பின்னால் வரப் போகிற நிகழ்விற்கு மிகவும்  பொருத்தமாக இருந்தன.

திரு பாம்பே  கண்ணன் பொன்னியின் செல்வனின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லி  அதன் கதை, நயம், பேராசிரியர் கல்கி அவர்களின் எளிய நடை, பாத்திரப்படைப்பு,சரித்திரத்தையும் கற்பனையையும் கலந்த விதம் , கதாநாயIMG_1686கன் வந்தியத் தேவனின்  யதார்த்த நிலை,யாராலும் கணிக்கமுடியாத அபூர்வமான வில்லி நந்தினியின் பாத்திரப் படைப்பு,நாட்டின் பேரரசரையும் இளவரசர்களையும் கொல்ல முயலும் சதித் திட்டம், இளவரசனின் அகோல மரணம், கொலைப் பழி விழுந்த கதாநாயகன், இப்படி எத்தனையோ  காரணங்க.ளை பொன்னியின் செல்வனின் வெற்றிக்குக் காரணமாகக் கூற முயன்றாலும் , இறுதியில் கல்கி அவர்கள் குறிப்பிட்ட ‘ கடவுளின் அனுக்கிரகத்தால் தான் இப்படி ஒரு வெற்றிகரமான  நாவலைப் படைக்க முடிந்தது ‘ என்ற கருத்தையே  வலியுறுத்தினார்.
டாக்டர் நடராஜன் , கல்கி தாசன் என்ற பெயரில்
எழுதிக்  கல்கியில் பிரசுரமான ஒரு கவிதை அவையில் படிக்கப்பட்டது.

வந்திருந்த அனைவரும் பொன்னியின் செல்வனில் தங்களுக்குப் பிடித்தப் பாத்திரப் படைப்புக்களைப் பற்றிப் பேசினர். கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலில் வாசகரின் வயதிற்குத் தக்கவாறு பாத்திரங்களின் பெருமையைப்  புலப்பட வைத்துள்ளார் என்பதற்குIMG_1683

20 வயதில் படிக்கும் போது வந்தியத் தேவனையும்,

30 வயதில் அருண்மொழிவர்மனையும்,

40 வயதில் ஆதித்த கரிகாலனையும்

50 வயதில் பழுவேட்டரையறையும்

60 வயதில் சுந்தர சோழரையும்

ரசிக்கும்  அளவிற்குப் பாத்திரங்களைப் படைத்துள்ளார் என்பது கூறப்பட்டது.

மொத்தத்தில் கல்கிக்கும்  பொன்னியின் செல்வன் நாவலுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நிகழ்வு நடைபெற்றது.

IMG_1681

குட்டீஸ்  லூட்டீஸ் —– சிவமால்

மாற்றி யோசி..!

‘ அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்ங்க.. ‘ உன் கழுத்திலே தாலி ஏறினதும் நான் கண்ணை மூடிடுவேன்;னு உடம்பு முடியாம படுத்துட்டிருக்கிற அவளைப் பெத்த அம்மா கதறி அழுதபடியே சொல்லியும் மசியறதாகவே தெரியவில்லையே…  வருகிற வரன்களையெல்லாம் தட்டிக் கழிச்சிட்டே இருக்காளே” என்றாள் என் மனைவி, டி.வி.யில் வந்து கொண்டிருந்த சீரியலைப் பார்த்தபடியே.

நானும், என் மனைவியும், என் பத்து வயது பெண்ணும் சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

சிறிது மௌனமாக இருந்த என் பெண் மிதிலா, “ அம்மா! அந்த அக்கா கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதுக்குக் காரணம் அவங்க அம்மாதான்.  ‘ உன் கழுத்திலே தாலி ஏறினதும் நான் கண்ணை மூடிடுவேன்னு’ சொன்னா பாசமுள்ள எந்தப் பெண்ணுக்கும்மா கல்யாணம் பண்ணிக்கத் தைரியம் வரும்? அதையே, அந்த ஆன்டி, ‘ உன் கழுத்திலே தாலி ஏறினா, நானும் டென்ஷன் குறைஞ்சு மகிழ்ச்சியால் உடம்பு தேறி இன்னும் நூறு வருஷம் இருப்பேன்னு சொல்லட்டும். அந்த அக்கா வர வரன்கள்ளே ஒண்ண தேர்ந்தெடுத்து சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்குவா” என்றாளே பார்க்கலாம்.

பிரமித்து நின்றோம் நாங்கள்.  என்ன ஒரு அனாலிஸிஸ் . இதுதான் பாசிடிவ் திங்கிங் என்பதா?

 

 

 

 

தலையங்கம் – விஜய் மல்லையா – பாலன்

 

வில்லன்களெல்லாம் ஹீரோவாக பவனி வரும் இன்றைய நாளில் விஜய் மல்லையா தான் சமீபத்திய ஹீரோ.

சரக்கு விற்றுக்  கோடி கோடியாய்ச்  சேர்த்து இந்தியாவின் முதன்மை பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் பின்னர் பறக்க ஆசைப்பட்டு  கிங் பிஷர் ஆகாயவிமான சர்வீசில் தன்னை இணைத்துக் கொண்டார். பணம் பறந்தது, கடன் எகிறியது. இன்று அவர் 9000 கோடிக்கு மேல் கடனாளி. வங்கிகளுக்கு  அவர் தன்னுடைய  சொந்த ஜாமீன் கொடுத்ததால் அவரது மற்ற சொத்துக்களிலிருந்து தங்கள் கடனை வசூலிக்க வங்கிகள் தீவிரம் காட்டிவருகிறது. அவரை  ‘பணம் வைத்துக்கொண்டே தர  மறுக்கும் கடனாளி ‘ என்று வங்கிகள் அறிவித்துள்ளன. 

அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வங்கிகள் நீதி மன்றத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் போதே அவர் இந்தியாவிற்கு “டா டா பை பை” என்று கூறிவிட்டு லண்டனுக்குப் பறந்து போய் விட்டார். இனி அவராக வந்து பணம் கொடுத்தால் தான் ஆச்சு. 

வராக் கடனில் மூழ்கித் தத்தளிக்கும் இந்திய வங்கிகளுக்கு இந்த மாதிரி தராக் கடன் சோதனைக்கு மேல் சோதனை தான். 

எதிர்க்கட்சி ஆளுங்கட்சியையும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியையும் குறை கூறிக்கொண்டு பிறகு ஒன்றுமே நடக்காதது மாதிரி துடைத்துக்கொண்டு போய் விடுவார்கள். 

ஆனால் தஞ்சாவூர் பாலன் என்ற விவசாயி  வாங்கிய  7 லட்சம் ரூபாய் டிராக்டர் கடனுக்கு ஐந்து லட்சம் கட்டியும் பாக்கி வரவில்லை என்று காவல்துறையினர் அவரை அடித்து உதைத்து டிராக்டரை பறிமுதல் செய்திருக்கிறார்கள். 

ஏழைக்கும் பணக்காரனுக்கும் நீதி கூட தனித்தனி தான். !!

 

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா