மாத்தி யோசி….மாத்தி யோசி…. மாத்தி யோசி …

நாளை மே  16 தமிழகத்தில் தேர்தல் நாள்.

மாறி மாறி வரும் தி மு க -அ தி மு க என்ற துலாம் பலகை ஆட்டமா?   

இல்லை இந்த ஆண்டு அம்மா மீண்டுமா? 

இரண்டும் இல்லாத மூன்றாவது அணிக்கு  வாய்ப்பு இருக்கிறதா ?

கவர்ச்சி நடிகை கவர்ச்சியைக் காட்டி மக்களை இழுப்பது போல அரசியல்வாதிகளும் இலவசங்களைக் காட்டி நம்மைக் கவரப் பார்க்கிறார்கள். 

கருத்துக்கணிப்பு இப்போது விலை போகிறது. கட்சிகள் சொல்லுவது போலக் காட்சிகள் எழுதப்படுகின்றன.  

ஓட்டைக் கூடக் காசு கொடுத்து வாங்கலாம் என்று அரசியல் வாதிகள் துணிந்து செயல்படுகிறார்கள். 

தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தலைவர்களோடு ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து அலறுகிறார்.  

ஊடக  விளம்பரங்களில் நாகரிகம் நசுங்கி மிதிபடுகின்றது. 

எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது . பண்பு கிடையாது. நல்ல உணர்வுகள் கூடக் கிடையாது.

இணையதளங்களிலும், எல்லாக் கட்சிகளும் ஒருவரை  ஒருவர் எவ்வளவுக்கு அசிங்கம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள்.

படித்தவர் –  படிக்காதவர், பணக்காரன் – ஏழை , ஆண் –  பெண் அனைவரும் அசிங்கப் படுத்துகிறோம். அசிங்கப் படுகிறோம்.

எங்கே நாம் போகிறோம். ? போகப்போக இவை இன்னும் மோசமாகப் போகுமேயன்றி நல்லபடியாக மாறும் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.   

ஆபாசம் இல்லாத தேர்தல் நடக்காதென்றால் தேர்தல் இல்லாத ஜனநாயகம் சாத்தியமா என்று மாத்தி யோசிக்கலாமே?