கலக்கிய குட்டையில் சிக்கும்
இலக்கிய மீன்கள் தெளிந்தால்
அவையே இலக்கிய தேன்கள்
குட்டையைக் கலக்கி குளத்தைக் கலக்கி
கடலைக் கலக்கி கலக்கி பிடிக்கும் மீன்களை
விற்றுப் பிழைக்கும் சிலர் நடுவே
மனதைத் தெளிவிக்கும் இலக்குகள் கொண்டே
இளக்கி இளக்கி இலக்கியத்தை இளக்கி
வடிக்கும் தேனை நினைவில் கொண்டு
மயக்கியதை மயங்கியதை மனதில் கொண்டு
பரப்பியதெல்லாம் இலக்கணமாய் இலக்கியமாய்
மனமெனும் கடலில் மூழ்கிக் குளித்தே
முத்தெடுத்தே சத்தான சாரமெல்லாம்
விளக்கி விளக்கி மனத்திரையில் கண்டதையெல்லாம்
விண்டுரைத்து இலக்கியப் பாதையில் இலக்குடன் போனால்
வலையில் சிக்கும் மீனும் தேனாய் மாறும்
கழுவும் மீனில் நழுவும் மீனாய்
கை தெறித்தே இலக்கியம் ஆகும்
மீனுக்கும் வானுக்கும் ஏது எல்லை
இலங்கையின் வாசல் அடைந்தான் அனுமன்
இலக்கிய வாசல் அடைந்தே நாமும்
எண்ணக் குவிகம் தனையே அடைந்து
எண்ணக் குவியல் குவித்தே மகிழ்ந்தால்
இலக்கிய வாசலுக்கேது எல்லை