இலக்கிய சிந்தனையின் சார்பில் (562 வது நிகழ்வு ) 28 ஜனவரி சனிக்கிழமை மாலை குவிகம் இதழின் ஆசிரியர் சுந்தரராஜன் தாம் எழுதிய “ஸ்ரீமந்நாராயணீயாம்ருதம் ” என்ற நூலின் ஆதாரத்தில் நாராயணீயத்தின் சிறப்புக்களைப் பற்றிப் பேசினார்.
முகநூலில் நண்பர்கள் எழுதிய பாராட்டுதல்களிலிருந்து அந்த நிகழ்வு பலருக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிகிறது.
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
அதைத் தொடர்ந்து குவிகம் இலக்கியவாசலின் (22 வது நிகழ்வு) லா ச ரா வின் அபிதா – வாசகர் பார்வையில்” என்ற கலந்துரையாடல் நடைபெற்றது.
லா ச ராவின் புதல்வர் ஸப்தரிஷி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் , சொல்லாடல்கள் அந்த நாவலில் திளைத்தவர்களை திக்கு முக்காடச் செய்தன . கிருஷ்ணமூர்த்தி, அழகியசிங்கர், தேவகோட்டை மூர்த்தி ஆகியோர் அபிதாவின் சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டே போனதில் நேரம் சென்றது யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிகழ்வு அபிதாவைப் படிக்காதவர்களை எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டச் செய்ததில் முடிந்தது.








