
கோக்கும் பெப்ஸியும் வேண்டவே வேண்டாம் – அது சரி
வேலன்டைன் தினத்தை என்ன செய்வது ? ம்..ம் யோசிப்போம்
வேலன்டைன் தினம் காதலர் தினம்
வீரமும் காதலும் தமிழரின் பாரம்பரியம்
அதனால் காதலர் தினத்துக்குப் பச்சைக் கொடி காட்டுவோம்
சில முன்னணிப் பெரிசுகள் தடுத்தாலும் சரி
நமக்குத் தேவை காதலர் தினம்
இதுவும் ஒரு ஜல்லிக்கட்டு தானே
இதிலும் உண்டே ஏறு தழுவுதல்!
காளையை அடக்குவது ஜல்லிக்கட்டு
அது தானே நடக்கிறது காதலர் தினத்திலும் !
கொஞ்சம் கற்பனைக் காரில் பறந்து செல்வோமா?
கனவு இருட்டைத் தொடர்ந்து செல்வோமா?

வாடி வாசலில் வருவது மாடல்ல நம் காதலன்
என்ன திமிர் ! என்ன கொழுப்பு ! என்ன வேகம் !
எத்தனைப் பெண்கள் அவனை அடக்க வருகிறார்கள் !
அவனைத் துரத்திக் கொண்டு ஒருத்தி வருகிறாள்!
அவன் மீது பாய்ந்து அவன் தோளைப் பிடிக்கிறாள்!
அவன் கழுத்தைக் கட்டித் தழுவிக் கொள்கிறாள்!
அவன் கரத்தைப் பற்றி இழுக்கிறாள்!
அவனுடன் ஏழடி ஓடி ஓடி வருகிறாள் !
அவனைத் தன் மார்புடன் இறுக்கிக் கொள்கிறாள்!
ஏறு தழுவி அவனை வீழ்த்துகிறாள் !
திமிருடன் வந்தவன் திண்டாடுகிறான் !
கிழிக்க வந்தவன் வெத்து வேட்டாகிறான்
திமிறிப் பார்த்தவன் திணறிப் போகிறான்! துள்ளி வந்தவன் வெட்கி நிற்கிறான்
வெற்றிப் பெருமிதம் அவள் நெஞ்சினில்
வென்றவளுக்குப் பரிசு வேண்டாமா?
தோற்றவன் தருகிறான் !
மஞ்சள் தடவிய மூக்கணாங்கயிறு! வாடி வாசல் ! வாடிய வாசல் !
கண் விழித்துப் பார்த்தால்
கனவல்ல நிஜம்!!
