கனிஷ்கர்

மௌரியர்கள் போயினர்.
சுங்கர்களும் போயினர்.
குறுநில மன்னர்கள் பலர் ஆண்டனர்… போயினர்.
ஒரு பெரும் சக்தி கொண்ட மன்னன் இல்லாவிடில் சரித்திரம் மௌனமாகி விடுகிறது.
அலெக்சாண்டர், சந்திரகுப்தர், அசோகர் இருந்த போது ஆர்ப்பரித்த இந்திய சரித்திரம் சில காலம் ஓய்வெடுத்து அமைதியாய் இருந்தது.

அதே நேரம்…ஐரோப்பா சரித்திரத்திலோ, மாபெரும் நிகழ்வுகள் நடந்தேறின!
ரோமாபுரிப் பேரரசு – அந்த மன்னர்களின் மாட்சியாலும், நாடக நிகழ்வுகளாலும் புகழ் பெற்றது.
இயேசுநாதர் வாழ்வும் தியாகமும் உலகத்தையே உலுக்கி எடுத்தது.
புத்த மதமும் ஓங்கி இருந்தது.
இந்து மதம் நீறு பூத்த நெருப்புப் போல் அடங்கியிருந்தது.

அந்நாளின் இந்தியாவானது … தக்ஷசீலம், சிந்து, காந்தாரம் (இந்நாள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்) என்று விரிந்து சிறப்புற்றிருந்தது.
இந்தப் பகுதிகளின் எல்லையில் பாரசீகம், கிரேக்கர்கள் என்று பல நாடுகள் இந்தியாவின் சரித்திரத்தில் பங்கு பெறத் துடித்திருந்தன.

மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட யுச்சி பழங்குடியின் ஒரு பிரிவினர் குஷானர்கள்.
அவர்கள் முதலில் சாகர்களை விரட்டிவிட்டு பாக்டிரியாவைக் (இன்றைய வடக்கு ஆப்கானிஸ்தான்) கைப்பற்றினர்.
பின்னர் காபூல் பள்ளத்தாக்கு வழியாக முன்னேறி காந்தாரப் பகுதியைக் கைப்பற்றினர்.
குஷாண மரபைத் தோற்றுவித்தவர் குஜூலா காட்பிசஸ் (முதலாம் காட்பிசஸ்).
காபூல் பள்ளத்தாக்கை கைப்பற்றினார்.
அவரது புதல்வர் வீமா காட்பிசஸ் (இரண்டாம் காட்பிசஸ்) வடமேற்கு இந்தியா முழுவதையும் கைப்பற்றி மதுராவரை சென்றார்.
முதல் முறையாக இந்தியாவில் தங்க நாணயங்களை வெளியிட்டார்.

s1

இனி கதை சொல்வோம்.

s2

கனிஷ்கர்:

காலம்: 144 AD
இடம்: புருஷபுரம் (இன்றைய பெஷாவர்)

கனிஷ்கர்

s3

(By Biswarup Ganguly – Enhanced image of, CC BY-SA 3.0,
https://commons.wikimedia.org/w/index.php?curid=54661761)
கனிஷ்கர் -‘தலையற்ற சிலை’

கனிஷ்கரது அரசவையின் மந்திராலோசனைக் கூடம்.
கனிஷ்கர் பொன் வேய்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.
மந்திரிகள், தளபதிகள், ஆலோசகர்கள் அரை வட்ட வடிவமாக ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

முதல் அமைச்சர் பேசினார்:

s4

(கனிஷ்கர் நாணயங்கள்)
‘கனிஷ்கர் மகாராஜாவின் தந்தை ‘சக்ரவர்த்தி வீமா’ தங்க நாணயங்களை வெளியிட்டார். இனி வரும் கனிஷ்கர் மகாராஜாவின் நாணயங்களில் பதிக்கப்படும் பட்டங்கள் பின் வருமாறு :
‘மகாராஜன்’,‘மன்னாதி மன்னன்’, ‘பேரரசன்’, ‘இறைவனின் மைந்தன்’, ‘உலகநாயகன்’, ‘ராஜராஜன்’’, ‘காவலன்’, சீசர்’
(இது நமது சொந்த சரக்கு இல்லை .. ‘India –A history by John Keay’ பார்க்கவும்.
இன்றைய அரசியல் கட்சிகள் (நாணயங்களுக்குப் பதிலாக) சாலையோர போஸ்டர்களில் இப்படித் தானே எழுதுகிறார்கள்!)

‘ஆஹா’ என்று அனைவரும் சிலாஹித்தனர்.

கனிஷ்கர் சற்றே வெட்கப்பட்டாலும், தம் புகழ் பரவுவதில் சந்தோஷப்பட்டு:
‘மகிழ்ச்சி’ – என்றான்!

முதல் அமைச்சர் தொடர்ந்தார்:
‘மற்றும் இந்த நாணயங்களில் கிரேக்க கடவுளரின் படங்கள் இருக்கும்’

கனிஷ்கர் குறுக்கிட்டான்:
“அமைச்சரே! அத்துடன் சிவன் – பார்வதி படங்களும் இருக்கட்டும்”!

‘என்ன?’ – அனைவர் முகங்களிலும் திக்பிரமை!

‘புத்தரின் தொண்டனான கனிஷ்கரா பேசுவது?’ என்று அனைவரும் வியந்தனர்.

கனிஷ்கரின் வதனத்தில் முறுவல் பிறந்தது… பரந்தது…
‘இந்த நாணயங்களை நாம் வெளியிட்டாலும்… இது இந்திய மக்களுக்கானது. நான் புத்தரின் பித்தனாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல அரசன் எல்லா மதங்களையும் அரவணைக்க வேண்டும். என் தந்தையாரே பெரும் சிவ பக்தன்’

முதல் அமைச்சர்: “அப்படியே செய்வோம் மகாராஜா!; அடுத்து நமது ஆட்சிபற்றிப் பேசுவோம்”

தொடர்ந்தார்:
‘கனிஷ்க மகாராஜா சென்ற வருடம் பதவி ஏற்ற பொழுது..
குஷானப் பேரரசில் ஆப்கானிஸ்தான், காந்தாரம், சிந்து, பஞ்சாப் ஆகிய பகுதிகள் இருந்தன. பின்னர் அவர் மகதத்தைக் கைப்பற்றி பாடலிபுத்திரம், புத்தகயா வரை முன்னேறிச் சென்றார். காஷ்மீர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.
சென்ற வருடம் சீனப் படைத்தலைவர் பாஞ்சோ என்பவரிடம் வெற்றியடையாமல் போனாலும் – இவ்வருடம் மீண்டும் படையெடுத்து பாஞ்சோவின் மகன் பான்யாங் –ஐ முறியடித்தார்.அதன் பயனாக காஷ்கர், யார்க்கண்ட், கோடான் ஆகிய பகுதிகளை கனிஷ்க மகாராஜா நமது பேரரசுடன் இணைத்துக் கொண்டார். மேற்கில் காந்தாரம் தொடங்கி கிழக்கே வாரணாசி வரையிலும், வடக்கில் காஷ்மீர் தொடங்கி தெற்கே மாளவம் வரையும் நமது பேரரசு பரவியிருக்கிறது. அரசே, இனி ஆட்சி விஸ்தரிப்பு குறித்துத் தங்கள் திட்டம் என்னவோ?”

கனிஷ்கர்:

‘அமைச்சர்களே, தளபதிகளே! உங்கள் திறம் கொண்டு நான் இந்த வெற்றிகள் அனைத்தையும் பெற்றேன். இனியும் வேறு பகுதி நமக்கு வேண்டுமா என்ன? இந்த பெரும் ராஜ்ஜியத்தை சிறப்பாக ஆள வழி செய்ய வேண்டும்”

கனிஷ்கர் மேலும் கூறினார்:

“நம் தலைநகர் புருஷபுரத்திற்குப் பிறகு ‘மதுரா’ ஒரு சிறந்த நகரம். அழகிய நகரம். அது நமது இரண்டாம் தலைநகர் போல. அதை நன்கு செழிக்கச் செய்வோம். நூறாண்டுகளுக்கு முன் – அசோகரின் பின்தோன்றல்கள் இது போன்ற பரந்த நாட்டை ஆள இயலாமல் அனைத்தையும் இழந்தனர்’ என்று இழுத்தார்…

முதல் அமைச்சர் குறுக்கிட்டார்:
“மன்னாதி மன்னா! அது அவர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் தானே…”

கனிஷ்கர் சிரித்தார்:

“அது உண்மை தான் மந்திரியாரே! ஆனாலும் முக்கிய காரணம் – பரந்த பகுதிகளை ஆளுவதற்குத் தகுந்த திறமையுள்ளவர்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை”

“….” மந்திரிகள் மௌனம் சாதித்தனர்.

கனிஷ்கர்:
“நமது நாட்டின் பல பிராந்தியங்களைக் காக்க சிறந்த ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவேன். எனது மகன் வஷிஷ்கா என்னுடன் சேர்ந்து இந்நாட்டை ஆள்வான். மதுராவிலிருந்து கொண்டு”.

அனைவரும் எழுந்து நின்று கரவொலி செய்து பாராட்டினர்.

கனிஷ்கர் அவர்களை அமரச் செய்தார். தொடர்ந்தார்.

“அடுத்து நாம் பேசப்போவது…நாட்டின் நிதி நிலைமை பற்றி..
இந்திய சரித்திரம் என்ன பேசுகிறது? அந்நாளில் நந்த ராஜ்யத்தில்.. கஜானா நிறைந்திருந்ததாம். காரணம் மக்களின் வரிப்பணம். மௌரியர்களின் செல்வமும் மக்கள் வரிப்பணம். பெரும் வரிப் பளுவை சுமக்க முடியாமல் மக்கள் துன்பப்பட்டனராம். நம் நாட்டில் அந்த நிலைமை வரலாகாது. புருஷபுரம் – காபூல் போன்று பல வர்த்தக வழிகள் அமைப்போம். கடல் வழிக்குத் துறைமுகங்கள் அமைப்போம். சீன, பாரசீகம், மற்றும் கிரேக்க நாடுகளுடன் ஏற்றுமதி இறக்குமதி செய்ய வணிகர்களுக்கு வழிசெய்து அதில் சுங்கம் விதித்து செல்வம் சேர்ப்போம்”.

மீண்டும் கரவொலி.. “மன்னர் வாழ்க “ என்று கோஷித்தனர்.

கனிஷ்கர்:

“அடுத்த சமாசாரம்: அனைவருக்கும் தெரியும். நான் புத்தரின் கோட்பாடுகளில் மனம் வைத்தவன் என்று. அசோகர் புத்த மதத்திற்குச் செய்ததுபோல் நானும் செய்ய வேண்டும். ஒரு படி மேலேயே போகவேண்டும். புத்தரை கடவுளாகவே பாவித்து வணங்கும் வழி முறைகள் செய்யப்பட வேண்டும். இது மகாயானம் என்று புகழ் பெறவேண்டும். மலர்கள், ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள், தீபங்கள் கொண்டு புத்தருக்கு வழிபாடுகள் நடத்தப்படவேண்டும். மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடும் சடங்குமுறைகளும் வளர்ச்சிபெற வேண்டும்.”

அரச சபையில் இருந்த அனைவரும் புத்த சமயத்தைச்   சேர்ந்தவர்கள்.
கனிஷ்கரின் இந்த நோக்கம் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கரவொலி பிறந்தது.

கனிஷ்கர்:
“புருஷபுரத்தில் உலகம் இதுவரை காணாத அளவு உயரத்தில் கருணைத் தெய்வம் புத்த பிரானின் திருஉருவம் எழுப்ப உள்ளேன் (638 அடி உயரம்).
மேலும், புதிய மகாயான புத்த சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு மத்திய ஆசியா, சீனா போன்ற நாடுகளுக்கு சமயப்பரப்புக்  குழுக்களை அனுப்ப வேண்டும். பல்வேறு இடங்களில் புத்த விஹாரங்களும் கட்டப்பட வேண்டும்.

மேலும் இம்மதத்தை விரிவாக்க, நான்காம் புத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யப் போகிறேன். காஷ்மீர் மாகாணம் (ஸ்ரீநகருக்கு அருகில்) குண்டலவன மடாலயத்தில் இம்மாநாடு நடைபெறும். இதில் 500 துறவிகள் பங்கு கொள்வர். அங்கு மகாயான கோட்பாடுகள் முழுவடிவம் பெறும்.”

கரகோஷத்துடன் அரசவைக் கூட்டம் இனிதே நிறைவுற்றது!

நம் கதை சரித்திரத்தை சொல்லி முடிந்தது.

ஒரு அரசன் இவ்வாறு தெளிவாக, திடமாக, வீரமுடன், அறிவுபூர்வமாக, மக்களை மதித்து, இறையருளோடு ஆட்சி செய்தால் வெற்றி பெற என்ன தடை!

s5

பின்னாளில் பெஷாவருக்கும் காபூலுக்கும் இடையே உள்ள சமவெளியில் கட்டப்பட்ட மாபெரும் புத்த சிலை இரண்டாயிரம் ஆண்டுகளைப் பார்த்த பின் கி பி 2001 ல் தாலிபான் பீரங்கியால் உடைபட்டுப் பின் ‘டைனமைட்’ டால் வெடிக்கப்பட்டுத் தூளாகியது.

சரித்திரம் அழுகிறது!

வேறு ஒரு கதை சொல்ல ‘சரித்திரம் துடிக்கிறது’!