
அசோகமித்திரனின் கட்டுரைகள்!

காலச்சுவடில் நாகேஷ் மறைவுக்கு அஞ்சலிக் கட்டுரைஎழுதியிருந்தார் அசோகமித்திரன். கிட்டத்தட்ட அதேசமயம் தி நகர் டாக் பத்திரிகையில், தன் தி நகர்நினைவுகளையும் பதிவு செய்திருந்தார்.
ராமகிருஷ்ணாபள்ளி நாட்களுடன், பனகல் பார்க், பாண்டி பசார்,டாக்டர் சாரி கிளினிக், சிவா விஷ்ணு கோயில் என என்நினைவுகளும் அவர் எழுத்துக்களுடன் பயணித்தன.
கிழக்குப் பதிப்பகம் அவரது கட்டுரைகளை வரிசைப்படுத்தி, இரண்டு குண்டு வால்யூம்களாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரைக் கலெக்ஷன் அவை – அவரதுவிசாலமான பார்வை, எளிமையான வார்த்தைக் கோர்வைகள், அகில உலக ஞானம், பரந்துபட்ட வாசிப்பு,அன்றாட வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை அணுகும்முறை, சமூக அக்கறை, தீவிர கவனிப்பு, இடையே இழைந்தோடும் மெலிதான அங்கதம் – வாசகனின் தோள்மீது கைபோட்டு அழைத்துச் செல்லும் நட்பான எழுத்துக்கள் – அவரை அறிந்தவர்களுக்கு அவருடன்பேசிச் செல்லும் அனுபவத்தைக் கொடுக்கக் கூடியவை!
அவரது சமீபத்திய, தமிழ் தி இந்து வில் வெளியான “புகைப்படம் போல் ஒரு வாழ்க்கை” ஓர் ஆத்மார்த்தமானகட்டுரை. ஜுரத்தில் அழிந்துவிட்ட பழைய நினைவுகள்,அறுபத்தைந்து ஆண்டுகளின் வாழ்க்கை, தன்கதைகளில் வாழும் யதார்த்தம், வரலாற்றைப் பழங்குப்பையாக (பழைய காகிதங்கள்,நூற்றுக்கணக்கில் புத்தகங்கள், டயரிகள், குறிப்புகள்,பழைய பத்திரிகை இதழ்கள்) ஜானகிராமனிடம் (பழையபேப்பர்காரன்?) போட்டுவிட்ட மனவலி, பழைய பிலிம்சுருள்கள், புகைப்படங்களை குப்பையில் போட்டுவிட்ட வருத்தம் – எல்லாம் வாழ்க்கைச் சித்திரங்களாகக் கண்முன் விரிகின்றன! (எழுதுவதைத் தவிர, அந்தக் காலத்தில் கையில் காமெராவுடன் போட்டோக்கள்எடுப்பது அசோகமித்திரனுக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்பது பலருக்குச் செய்தியாக இருக்கலாம்!).
‘நடைவெளிப் பயணம்’ – அசோகமித்திரன் குங்குமத்தில்எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு. இவை சமகாலத்தவை; அல்லது நான் வாழ்ந்த காலத்தவை. இந்த 83 ஆண்டுகளை நான் புரிந்துகொள்ளும் முயற்சியில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டவை. இவை படிப்போருக்கு ரசமாகவும் இருந்து, நம் காலத்தையே புரிந்து கொள்வது எவ்வளவு கடினமானது என்றும் நினைக்க வைத்தால் என் முயற்சி பயனில்லாமல்போகாது’ என்கிறார் முன்னுரையில்! ஒவ்வொரு கட்டுரையோடும், தான் படித்து ரசித்த புத்தகம் ஒன்றினை வாசகனுக்கு அறிமுகப் படுத்தும் சிறு குறிப்பு ஒன்று பெட்டிச் செய்தியாக எழுதுகிறார் – எளிமையான,ஆனால் ஆழமான குறிப்புகள் – வாசிக்கத் தூண்டும்அறிமுகங்கள்!
முன்னுரைகள் பற்றி…. என்ற கட்டுரையில்:
“அந்த நூலுக்கு அது எழுதப்பட்ட நாளிலிருந்து இருபதுஆண்டுகள் கழித்தும், அந்த முன்னுரை பொருத்தமாக இருக்குமா என்று எண்ணிப் பார்ப்பது நல்லது. அப்படிஎண்ணிப் பார்ப்பதற்குக் கதை எழுதுவதைவிட இன்னும்தீவிரமான கற்பனை தேவை”
எழுபதுகளிலேயே ‘ஒரு பிரசங்கம்’ கட்டுரையில் இன்றுஅதிக அளவில் பேசப்படுகின்ற பெண்ணீயக் கருத்துக்களை முன்வைத்து எழுதியிருப்பார் – சமரசம் எதுவுமில்லாமல்!
2016, செப் 22 அவரது பிறந்த நாளன்று அவர் எனக்களித்த பரிசு அவரது “பார்வைகள்” – கட்டுரை நூல்! முழுவதும்எழுத்தாளர்களைப் பற்றி – நேர்கொண்ட பார்வையுடன் ‘மனிதர்களை’ அலசியிருப்பார்.
அசோகமித்திரனின் எழுத்துக்கள் எளிமையாய்த்தோன்றும். ஆனால் அவை தீவிரமான, நுணுக்கமான எண்ணங்களின் பிரதிபலிப்புகள் –

அவர் எழுத்துக்களைப் போலவேஅவரும் எளிமையானவர்!
