
ஆர்கே நகர் திரைப்படம் பார்ட் 2 (பாகுபலி மாதிரி ) வருவதற்கு முன் கொடநாடு படம் வந்து சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதன் விமர்சனத்தைப் பார்ப்போம்.
முதல் சீனில் ஜெயாவும் சசியும் கொடநாட்டு வெள்ளை மாளிகையில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்! (லலல்லா பாட்டு). சிம்பாலிக்காக ஜெயா விடும் பட்டம் மாஞ்சா தடவிய சசிகலாவின் நூலால் அறுந்துவிடுகிறது.
அடுத்தது போயஸ் கார்டென் மாடிப்படி சீன் !
தொடர்ந்து வருவது மணிரத்தினத்தின் இருட்டடிப்பு சீன் மாதிரி அப்பல்லோ மருத்துவமனை சீன்! ஜெயா முகத்தையே காண்பிக்காமல் ஆட்கள் ஓடுவது, தலைவர்கள் வருவது, கட்சிக்காரர்களின் பிரார்த்தனைக் கூட்டம் இப்படிக் காட்டியே விறுவிறுப்பை ஏற்றுகிறார்கள். நடு நடுவில் சசிகலாவின் முகத்தைக் காட்டும்போது கொடுக்கப்படும் திகில் மியூசிக் !
அடுத்த சீன் ஜெயாவின் மரணக்காட்சி! பார்ப்பவர் கண்களைக் குளமாக மாற்றிவிடுகிறது. சசியின் மேக்கப் , தோற்றம், உடல்மொழி கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது நல்ல எடிட்டிங். இறுதியில் சசியின் ஒவ்வொரு உறவினர்களும் ஜெயாவைச் சுற்றி வளைத்துக் கொண்டு நிற்பது அபாரமான காட்சி!

ஜெயாவின் இறுதி ஊர்வலக்காட்சியின்போதே சசிக்கான பதவி ஏற்பு ஏற்பாடுகளைக் காட்டுவது படம் வேகமாகப் போவதை உணர்த்துகிறது.
சசி பெங்களூர் சிறைக்குப் போனவுடன் கொடநாட்டு பங்களாவில் கத்தும் ஆந்தையின் அலறல்! அப்படியே இடைவேளை!

பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு வந்தால் பன்னீரும் தினகரனும், பவர் ஸ்டாரும் சந்தானமும் போல வந்து போகிறார்கள் ! (கண்ணா லட்டு தின்ன ஆசையா) ஆர்கே நகர் எலெக்ஷன் , தினகரன் கைது கதைக்குச் சூடு ஏற்றுகிறது.
இடை இடையே கொடநாட்டு ஆந்தையின் அலறல்.
அந்த அலறல் நிற்கிறது. அப்படியே கழுத்துத் திருகப்பட்டு ஆந்தை மரத்திலிருந்து கீழே விழுகிறது.

அதற்குப்பின் படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போகிறது. காவலாளி கொலை, பணப் பெட்டிகள் திருட்டு. காவல்துறை தேடல். இவற்றில் சம்பந்தப்பட்ட இருவர் ஆக்ஸிடெண்டில் இறக்கும் கொடூரமான காட்சி.
காவல்துறை சிலரைக் கைது செய்து விசாரிக்கிறது. ஏன் அந்தக் கொலைகாரர்கள் காவலாளியைக் கொன்றார்கள் என்பது “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?” என்பதைவிட திரில்லிங்காக இருந்தது.
அப்படியே படத்தை முடித்துவிட்டு காவலாளியை யார் எதற்காகக் கொன்றார்கள் என்பதுதான் கொடநாடு பாகம் இரண்டு.
அது எப்போது வருமோ?
