நளன் கதை ‘நைடதம்’ என்ற பெயரில் மகாபாரத்தில் வந்த ஒரு நீண்ட பெருங்கதை!
கதைச்சுருக்கம்:
மகாபாரதத்தில் கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டை விட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அவர்களைப் பிரகதசுவர் என்னும் முனிவர் சென்று காண்கிறார். கவலையுடன் இருந்த தருமரைத் தேற்றுமுகமாக முனிவர் அவருக்குக் கூறியதாக இந் நூல் அமைந்துள்ளது.
நிடத நாட்டின் மன்னன் நளன். விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தி. இருவரும் அழகில், அறிவில், ஆற்றலில் மேம்பட்டவர்கள். ஒரு பேசும் அன்னப்பறவை ஒருவரைப்பற்றி மற்றவரிடம் எடுத்துச் சொல்ல நள தமயந்தி இருவரிடையே பார்க்காமலேயே காதல் பிறக்கிறது.
தமயந்திக்கு நடக்கும் சுயம்வரத்திற்கு நளன் செல்கிறான்.
தமயந்தியின் அழகைப்பற்றிக் கேள்வியுற்ற இந்திரன், வருணன், வாயு, எமன் போன்ற தேவர்களும் அவளைத் திருமணம் செய்ய சுயம்வரத்திற்கு வருகிறார்கள்.
அவளுக்கு நளன் மீதிருக்கும் காதலை அறிந்து தேவர்கள் நளன் உருவிலேயே நிற்கிறார்கள்.
தன் அறிவின் திறத்தால் தான் விரும்பிய உண்மை நளனையே தமயந்தி மணக்கிறாள்.
தேவர்களும் அவர்களை வாழ்த்திச் செல்லுகிறார்கள்.
ஆனால் சுயம்வரத்திற்குத் தாமதமாக வந்த கலிபுருஷன் ( சனி பகவானின் மாற்று உருவம்) நள தமயந்தி மீது கோபம் கொண்டு அவர்களைப் பிரித்தே தீருவேன் என்று சபதம் எடுத்தான்.. அதற்காகப் பல ஆண்டுகள் காத்திருந்தான்.
நளன் தமயந்திக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.
அப்போது ஒருமுறை பூஜைக்குக் காலைக் கழுவாமல் சென்ற நளனின் கால் வழியாக சனிபகவான் பிடித்து அவனுள் புகுந்து கொள்கிறான்.
தொடங்குகிறது காதலர்களுக்கிடையே ஏழரை ஆண்டு சோக நிகழ்வுகள்.
நளன் சூதாடி தன் நாட்டை இழந்து, குழந்தைகளை விதர்ப்ப நாட்டுக்கு அனுப்பிவிட்டு, தமயந்தியுடன் கானகம் செல்கிறான்.
தமயந்தி நலமாக வாழட்டும் என்று அவளை விட்டுப் பிரிந்து செல்கிறான்.
கார்க்கோடகன் என்ற பாம்பு நெருப்பிலிருந்து தன்னைக் காப்பாற்றிய நளனைத் தீண்டுகிறது.
விகாரமான குட்டை மனிதனாக நளன் மாறுகிறான்.
வேறொரு மன்னனிடம் தேரோட்டியாகவும் சமையல்காரனாகவும் பணிபுரிகிறான்.
தந்தை நாட்டில் இருக்கும் தமயந்தி நளனைக் கண்டுபிடிக்க நாலாபக்கமும் ஆட்களை அனுப்புகிறாள்.
தேரோட்டியாக இருப்பவன் நளனோ என்ற ஐயம் தமயந்திக்கு வருகிறது.
அவனை வரவழைக்கத் தனக்கு மறு சுயம்வரம் என்று அவனிருக்கும் நாட்டுக்கு மட்டும் சேதி அனுப்புகிறாள்.
மன்னனுக்காகத் தேரை ஓட்டி நளனும் வருகிறான்.
சனி அவனை விட்டு விலகும் காலமும் வருகிறது.
கார்க்கோடகன் கொடுத்த சட்டையை அணிந்து அழகே உருவான நளனாக மாறுகிறான்..
மீண்டும் சூதாடி நாட்டை வென்று தமயந்தி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.
இதை ஸ்ரீ ஹர்ஷர் என்பவர் சமஸ்கிருதத்தில் “நைடதம்” என்ற பெயரில் தனிக் காவியமாக எழுதினார்.
தமிழில் அதிவீரராம பாண்டியன் என்ற மன்னன் “நைடதம்” என்ற பெயரில் நளன் கதையை எழுதினான்.
புகழேந்தி என்ற புலவர் அழகிய வெண்பாவால் “நளவெண்பா” என்ற பெயரில் எழுதினார்.
சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந் நூலில், 405 வெண்பாக்கள் உள்ளன.
அழகு, ஆன்மீகம், இன்பம், துன்பம் அனைத்தும் கொண்ட நளதமயந்தி கதையை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் மார்ச் 31 அன்று இலக்கியச் சிந்தனை – குவிகம் இலக்கியவாசல் சார்பாக நளசரிதம் என்ற தலைப்பில் அருமையாக எடுத்துரைத்தார்.
அதே தலைப்பில் அவர் புத்தகமும் வெளியிட்டிருப்பது சிறப்பான அம்சம்.
அவரது மற்ற நூல்கள் :







