Image result for madurai meenakshi

 

மீனம்மா நானுன் தாஸனம்மா – உன்னூராம்
மதுரை யம்பதி வாஸனம்மா!

அவளிலையேல் அவனில்லை சக்தியின்றி சிவமில்லை
உன்னருள் இலையென்றால் அவனியிலே அசைவில்லை!

உனைப்பாடும் பக்தர்யாம் துன்பத்தில் உழல்கையிலே
மனசாந்தி சாந்தியென மனம்விட்டு கதறுகிறோம்
வன்முறைகள் எங்களையே விடாது வாட்டுகையில்
அன்புக்கும் அமைதிக்கும் இறைஞ்சியே ஏங்குகிறோம்!

வெறிகொண்ட மாந்தர்கள் நடுவில்யாம் நிற்கையிலே
பட்டால்தான் புரியுமென நினைப்பதுவும் முறைதானோ
அபயமென்று வந்தவரை சோதிப்பது சரிதானோ
உபாயமொன்று சொல்லியெமை காத்திடவே வேண்டாமோ!

ஆசையது அதிகமாக நெறிகெட்டு செல்கையிலே
அணையிட்டு தடுப்பதுன் கடமைதா னில்லையோ
அழுக்காறு ஆட்கொள்ள மனம்வெதும்பி வாடுகையில்
பொறாமையே வராமல் செய்திடவே வேண்டாமோ!

யாமெல்லாம் உன்னுடைய பிள்ளைகள் அல்லவோ
எமையெல்லாம் வதைப்பது உனக்குத்தான் நீதியோ
எப்போதும் உனைநினைக்க நீசெய்யும் சூழ்ச்சியோ – எமக்கு
நல்வாழ்க்கை அமைப்பதுன் கடமைதான் இல்லையோ!