நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
- ரசமாயம் ஜூலை மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- போளி புராணம் !

போளி நல்ல போளி – இதோ
பாத்திரமே காலி !
நெய் தடவித் தின்றால்
நிறுத்த முடியா போளி !
பார்த்தால் ரொம்ப சாது – வெறும்
சப்பாத்தி போல் இருக்கும் !
வெல்லம் தேங்காய் போட்டால் – அதை
வெளுத்துக் கட்டத் தோன்றும் !
மேற்கு மாம்பலம் வந்தால்
நினைவில் நிற்கும் போளி !
சும்மா வாயை மென்றாலும் – சுவை
நாவில் நிற்கும் போளி !
நேரம் காலம் இல்லை – இரண்டு
போளி உள்ளே தள்ள !
தின்னத் தின்னத் தோன்றும்
திகட்டாதிந்த போளி !
மென்மையான மனிதர்
மெலிதாய் போளி தின்பர் !
வயது கூடி விட்டால் – அவர்
மென்று மென்று தின்பர் !
வெங்கட்ரமணா போளி – அது
தலையணை போல் இருக்கும் !
தேங்காய்ப் பூரணம் அதிலே – சற்று
தாராளமாய் இருக்கும் !
நாள் கிழமை வேண்டாம் – நான்
எந்நேரமும் தின்பேன் !
இரண்டு போளி தின்றால் – அவை
இன்னும் இரண்டு கேட்கும் !
பருப்பு மற்றும் தேங்காய் என
வகை வகையாய்ப் போளி !
கார மூடில் இருந்தால் – அதற்கு
காரா போளி உண்டு !
மேலும் எழுத மாட்டேன் – எனக்கு
உடனே வேண்டும் போளி !
நாக்கில் ஊறும் நீரை – உடன்
தணிக்க வேண்டும் போளி !
போளி நல்ல போளி – இதோ
பாத்திரமே காலி !
நெய் தடவித் தின்றால்
நிறுத்த முடியா போளி !
@@@@@@@@@@@@@@
