Image result for பருப்புசிலி

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
  2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
  3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
  4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
  5. ரசமாயம் – ஜூலை 2018
  6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
  7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
  8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
  9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
  10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
  11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019

 

  • பருப்புசிலி பாசுரம்

 

பருப்புசிலி என்றொரு பதார்த்தமுண்டு – அட

என்ன ருசி சொல்லவொரு வார்த்தையில்லை !

மோர்க்குழம்போடு சேர்த்து குழைத்தடித்தால்

நிகரென்று எதுவுமே இல்லையடி !

 

ரசம் சாம்பார் என்று போரடித்தால் –

உசிலிதான் உதவிக்கு வந்திடுமே !

சிறப்புகள் நானும் சொல்லிடுவேன் – இந்த

தரணியில் இதற்கொரு நிகருமுண்டோ ?

 

இட்டிலித் தட்டினில் வேகும்போதே – மணம்

பரப்பி வரும் – வீடே கமகமக்கும் !

ஆவி பறக்க சோறெடுத்து – அதில்

பசு நெய்யும் பிசையவே போதை வரும் !

 

உப்பும் காரமும் நன்கு கொப்பளிக்க – அதில்

கொத்தவரைப் பிஞ்சாய்க் கலந்திருக்க

பச்சையும் மஞ்சளும் டாலடிக்கும் – கொடும்

பசியினைக் கிளறிக் கபகபக்கும் !

 

பருப்புசிலிக்கு மோர்க்குழம்பு – பெரும்

பொருத்தமடி ! பெரும் பொருத்தமடி !

கோபமணைக்கும் காதலைப் போல் – மோர்க்

குழம்பும் உசிலியைத் தழுவுதடி !

 

கூடவே ஒருபிடி கேட்குமடி – உசிலி

உச்சத்தை வேகமாய் காட்டுமடி !

கும்மென்று வயிறும் ஆச்சுதடி – உடல்

அக்கடா என்றே போச்சுதடி !

 

வழுக்குதடி – உள்ளே இழுக்குதடி – வெந்த

சேப்பங்கிழங்கு வழுக்கியே போகுதடி !

வெண்டையும் நன்றாய் சேருமடி – இதற்கு

வேறெதும் ஈடிணை இல்லையடி !

 

எப்படித்தான் முன்னோர் பிடித்தனரோ ? கண்டு

சுவைகளைத் தேடிக் கொடுத்தனரோ ?

காலம் காலமாய் அவர் கொடுத்த பெரும்

சுவைகளைப் போற்றிட வேணுமடி !