Image may contain: 3 people, including Jayaraman Raghunathan

Image may contain: 2 people, people sitting

தங்கள் ஆறாவது படைப்பாக நான்கு குறு நாடகங்களை அரங்கேற்றியது தியேட்டர் மெரீனா – சுஜாதா அவர்களின் மூன்று சிறுகதைகள் மற்றும் ஜெயராமன் ரகுனாதனின் ஒரு கதை – குறுநாடகங்களாக மேடையில் ஜவஹர் சேகர் இயக்கத்தில் நடிக்கப்பட்டன. அறிவியல் கதைகளை (Science Fiction) தமிழில் ஓரளவுக்குப் பிரபலமாக்கியது சுஜாதா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவற்றில் மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்து, நாடகமாக்கி, ஒரு விஷுவல் ட்ரீட்(மெண்ட்) கொடுக்க முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் தியேட்டர் மெரீனா என்றே சொல்ல வேண்டும்! ஜெ.ரகு மற்றும் தியேட்டர் மெரீனா குழுவினருக்கு வாழ்த்துக்கள்!.

இன்றைய அரசியல் பேசியபடியே ஒரு டீக்கடை பெஞ்ச் – அரசியல்வாதி, அவர் அல்லக்கை, பொதுஜனம் (ஒருவர்) – பேசியபடியே டீக்கடைக்காரர் ஒவ்வொரு கதையாக அறிமுகப்படுத்துவது நல்ல உத்தி மற்றும் காமிக் ரிலீஃப்! இந்த வசனங்களை எழுதியவர்(கள்) நகைச்சுவையுடன் இன்றைய அரசியலை அலசியிருக்கிறார்(கள்)! சில வசனங்கள் கரண்ட் பாலிடிக்ஸ் பேசுகின்றன. ஜவஹர் சேகர், பிரசன்னா, வெற்றி, கார்திக், முகுந்த் எல்லோருமே நல்ல ‘டைமிங்’ சென்சுடன் டயலாக் பேசினார்கள் – சேகர் சினிமா சிரிப்பு நடிகரை நினைவுபடுத்தும் கை ஆட்டங்களைத் தவிர்க்கலாம் – ஒரிஜினலாகவே அவருக்கு நல்ல காமெடி வருகிறது.

மகாபாரதச் சிறுகதை ‘நச்சுப் பொய்கை’ (நேற்று) – சுஜாதா தன் பாணியில், அதன் சீரியஸ் தன்மை குறையாமல் எழுதி, முடிவில் ஒரு அறிவியல் உண்மையைக் கூறி அசத்தியிருப்பார்! அப்படியே நாடக வடிவம்பெற்று, சுவை குறையாமல் நடிக்கப்பட்டது – கொஞ்சம் நையாண்டியைக் குறைத்திருக்கலாமோ என்று தோன்றியது; ஏனெனில், கதையில் நம்மை எதிர்பாராத அறிவியல் உண்மையைக் கூறிப் பரவசப்படுத்தும் சுஜாதா, இந்த கலாட்டாவில் மறைந்து விடுகிறார்.

ரகுநாதன் தன் ‘இரண்டாவது கதவு’ (இன்று) நாடகத்தை, வாத்தியார் பாணியிலேயே சொல்லியிருக்கிறார் – சபாஷ்! இந்தப் பிறவியில் பெண்களைக் கொடுமைப்படுத்துபவர்களுக்கு, நரகத்தில் எண்ணைக் கொப்பரைதான் என்பதை நகைச்சுவையாக சொல்கிறார் – கொடுமைக்கார கணவன், அப்பாவியாய் அடங்கி நடக்கும் அவன் மனைவி, மகன், மகள் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் – நரகத்தின் முதல் வாயிலில் செல்ஃபி எடுத்துச்செல்லும் பெண், நொண்டி, அரசியல்வாதி எல்லோரும் நொடியில் சிரிக்க வைக்கிறார்கள்! இளங்காதலர் உரையாடலில், ரகுநாதனுக்குள் உறைந்திருக்கும் சுஜாதா தெரிகிறார். வெல் டன் ரகு!

“கடவுள் பெட்டி” (இன்று) – பெட்டிக்குள்ளிருக்கும் கடவுள் வெளிவரும் அறிவியல் புதினம்! நாடகம் முழுதும் சுஜாதாவின் கைவண்ணம் தெரிகிறது. ஶ்ரீனிவாசன், தினேஷ், கிரிதரன் மூவருமே சிறப்பு – தினேஷின் ஆட்டத்துக்கு ஒரு எக்ஸ்ட்ரா சபாஷ்! ‘இறக்கிறானா, பறக்கிறானா’ வில் சுஜாதாவின் முத்திரை!

“தீபாவளி” (நாளை) – நாளைய ரோபோக்கள் உலகில், வர்ச்சுவல் பாத்திரங்கள் கொண்டாடும் தீபாவளியும், அதன் நகைச்சுவையும் (வழக்கமான தமிழ் நாடக பாணியில் வசனமும், நடிப்பும்!) – குறிப்பிட்ட நேரம் முடிந்தபிறகு, அவை மறைந்திட, மீண்டும் ரோபோ – இன்றைய அவசரமான, இயந்திர வாழ்க்கையில் நாம் எவற்றையெல்லாம் இழந்துவருகிறோம் என்பதை சுஜாதா, எதிர்கால இமாஜினரி மனிதர்களுடன் (இயந்திரங்களுடன்) தீபாவளியை இணைத்து எழுதியிருந்ததை, நல்ல முறையில் நாடகமாக்கியிருக்கிறார்கள்- அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தக்‌ஷினின் இசை நாடகத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது – கடவுள் பெட்டி டான்ஸ், தீபாவளி ரோபோ இசை எல்லாமே சிறப்பாக செய்திருக்கிறார்.

செட்ஸ், லைடிங் எல்லாமே கதைகளுக்கு ஏற்றபடி, அமைக்கப்பட்டிருக்கின்றன.

சுஜாதா நிச்சயமாக வாழ்த்தி மகிழ்ந்திருப்பார் – தன் அறிவியல் கதைகளை சிதைக்காமல் நாடகமாக மேடையேற்றியதற்காக!

மேலும் சுஜாதா கதைகளை நாடக வடிவில், விஷுவலாகக் காணும் சாத்தியக்கூறுகள் நிறையவே தென்படுகின்றன!

நல்ல முயற்சி – தியேட்டர் மெரீனா, ரகுனாதன் மற்றும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வாழ்த்துக்கு உரியவர்கள்!

டாக்டர் ஜெ.பாஸ்கரன்