தனிமையின் விரக்தியில்

விட்டம் பார்த்துக்கிடக்கும்போதும்

தள்ளாடி நடந்து

வீடு வந்து சேரும்போதும்

தாளாத போதையில்

தடுமாறி விழும்போதும்

“ஏ நிறைகுளத்தா(ன்)

எம்புள்ள பிழப்பு

ஊர் சிரிக்க ஆயிப்போச்சே” னு

கண்ணில் நீரொழுகப் புலம்புவாள் அம்மா

 

தற்கொலைக்கு முயன்று

வீடு மீண்ட வாரத்தில்

ஊரடங்கிக்கிடந்த

உச்சிப் பொழுதில்

‘மரியா’ பார்க்கவந்தபோது

வீட்டில் வேறு யாரும் இல்லை

ஒன்றும் சொல்லாமல் அழுதாள் அம்மா

இருவரும் மௌனமாயிருந்தோம்

 

“பெத்த தாயி செய்யுற காரியமான்னு

ஊரு பழி பேசுமே

எம் பழிய எங்க போய்த் தீப்பேன்

ஏ வண்டி மறிச்சா(ள்)

எம்புள்ள வாழ்கைய

நேராக்கமாட்டியா” னு

புலம்பிக்கிட்டே வீடுவிட்டகன்றாள்