Ramayan | Hanuman, Shri hanuman, Lord hanuman

கணையாழியைக் கண்ட சீதையின்  நிலை

 

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந்தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? 

 

நாலே வரிகளை உடைய வெண்பாவில் 14 அல்லது 16 வினைச் சொற்களை மட்டும் வைத்துப் பாடியவன் கம்பன் ஒருவனே.

இந்தப் பாடலில் 9  வினைச் சொற்கள் உள்ளன. 

 

பாடலின் பொருள்:

சீதை அம்மோதிரத்தை தன் கையால் வாங்கினாள்;

அதைத் தன் மார்பின் மீது பதித்துக் கொண்டாள்;

தலை மேல் வைத்துக் கொண்டாள்;

கண்களிலே ஒற்றிக் கொண்டாள்;

அதனால் அவளது தோள்கள் பூரிக்கப் பெற்றாள்;

மனம் குளிர்ந்தாள்;

உடல் மெலிந்தாள்;

உடலில் தோன்றிய காதல் வெப்பத்தாள் ஏங்கினாள்;

பெருமூச்சு விட்டாள்;

அவள் நிலை இத்தகையது என்று சொல்ல முடியுமோ  என்று கம்பன் வியக்கிறான்.

 

அதேபோல் இன்னொரு நயம் !

பசுபதிவுகள்: 1133. பாடலும் படமும் - 41

 

( நன்றி : பசுபதி சார்) 

இன்று போய் நாளை வா என்று ராமன் சொன்னதும் ராவணன்

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடிலங்கை புக்கான்

1) எட்டுத் திசை யானைகளோடு போரிட்ட மார்பையும்,
2) திருக்கயிலையையே பெயர்த்தெடுத்த தோள்களையும்,
3) நாரத முனிவர்க்குச் சரிக்குச் சரியாக இசை வாதம் செய்த நாவையும்,
4)மாலை அணிந்தகிரீடங்கள் பத்தையும் ,
5) சிவன் உவந்தளித்த சந்திரஹாஸம் எனும் வாளையும்,
6) தன் வீரத்தையும்
போர்க்களத்திலேயே போட்டு விட்டு இராமனிடம் தோற்று வெறும் கையோடு இலங்கையில் நுழைந்தான் இராவணன் என்கிறான் கம்பன்.
சொற்சிலம்பில் முதல்வன் கம்பன் !!