கோடைக் காலத்தின் ஒரு வரப் பிரசாதம், புத்துணர்ச்சி தரும் , தெளிந்த நீரோடை போன்ற அதிகாலைகளும், மயக்கும் செவ்வண்ண அந்தி மாலைகளும். இவ்விரண்டும் தமக்குள் யார் சிறந்தவர் என்று போட்டி போட்டால் எப்படி இருக்கும் என்ற ஒரு சின்ன கற்பனையே இந்த கவிதை.

ஊடல்

அதிகாலை வானம் அழகென்றாய்  நீ

இல்லை அந்தி வானம் தான் என்றேன் நான்

இப்படியாக தொடங்கியது நம்

அன்றைய பொழுது         

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழும்

அழகு அது என்றாய் நீ

நாணத்தால் முகம் சிவந்து ஒளிரும்

பெண்ணை விடவா என்றேன்

கதிரவன் உதித்தெழும் போது – அதன்

அழகை கண்டதுண்டா என்றாய்

முழுநிலவின் அழகை விட

மேலானது இல்லை என்றேன்

காலை வானத்தில் மேகம் இடும்

கோலங்கள் நளினம் என்றாய் – அவை

கண் சிமிட்டும் நட்சத்திரங்களை

வரவேற்கும் ஏற்பாடென்றேன்

இவ்வாறாக தொடர்ந்தது நம் ஊடல்

இறுதியில்

அதிகாலை நீயென்றும்

அந்தி வானம் நானென்றும்

முடிவானது ..