

இம்மாதக் கவிஞர் – வாலி (முனைவர் தென்காசி கணேசன்)
வாலிபக் கவிஞர் வாலி – 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையில் கவிக் கொடி நாட்டியவர். கண்ணதாசனுக்கு, அடுத்தபடியாக ,ஏன், இணையான கவிஞர் என்றே கூறலாம்.
சிவாஜி, எம் ஜி ஆர், ஜெமினி , எஸ் எஸ் ஆர், முத்துராமன, ஜெய்ஷ்ங்கர், ரவிச்சந்திரன் ,ரஜினி, கமல், அஜித், விஜய் ,சூர்யா சிம்பு, தனுஷ் வரை அத்தனை தலைமுறைக்கும் பாட்டு எழுதியவர். இயல்பான பாடல் வரிகளில், காதல், தத்துவம், வாழ்வு முறை, நகைச்சுவை என அத்தனையும் தந்தவர்.
.jpg)
வாசித்துத் தமிழ்கற்றோர்
வரிசையிலே யானில்லை;
யோசித்துக் கவிபுனையும்
யோக்கிதை தானில்லை;
நேசித்தேன்; நெஞ்சாரப்
பூசித்தேன்; நின்னடியில்
யாசித்தேன் அடடாவோ!
யானும் ஓர் கவியானேன்!
-என்று வாலி தன் தமிழ்ப் புலமையை இப்படி விவரிக்கிறார்.
சென்னையை முற்றுகை இட்டும் வாய்ப்பு கிடக்காமல் ஊருக்கு திரும்ப முடிவெடுத்தபோது, அவரின் அறைக்குள் நுழைந்த பி பீ ஶ்ரீநிவாஸ், அன்று ரெக்கார்டிங் ஆன பாடலைப் பற்றிக் கூற, வாலியின் முடிவு மாறியது – தமிழ்த் திரையில் ஒரு கவிஞர் வரலாறு உருவானது. அந்தப் பாடல் கவியரசர் எழுதிய – மயக்கமா கலக்கமா என்ற பாடல். அந்த வரிகள் வாலிக்கு ஒரு டானிக் ஆனது – அவரே பலமுறை இதைப்பற்றி கூறி இருக்கிறார்.
இவரின் பல பாடல்கள திரைப்படம் எனும் கட்டைத் த்தாண்டி இலக்கியம் என்னும் நிலையை தொட்ட பாடல்கள். வாலியா கண்ணதாசனா என்று சுவைஞர்களை திகைக்க வைத்த பாடல்கள்.
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
நான் அனுப்புவ்து கடிதம் அல்ல – உள்ளம்
அவளா சொன்னாள் இருக்காது
நூறாண்டு காலம் வாழ்க – நோய் நொடி இல்லாமல் வளர்க
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே
குயிலாக நான் இருந்தென்ன – குரலாக நீ வர வேண்டும்
அவகளுக்கும் தமிழ் என்று பெயர்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அன்புள்ள மான் விழியே ஆசையில் ஒரு கடிதம்
மலரே குறிஞ்சி மலரே
மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ
அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை
தூளியிலே ஆட வந்த வானத்து வெண்ணிலவே
அம்மாவென்று அழைக்காத உயிர் இல்லையே
ராம நாமம் ஒரு வேதமே
வளையோசை கலகல
பவளக் கொடியிலே முத்துக்கள்
பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்
காற்றில் வரும் கீதமே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
குமரிப் பெண்ணின் நெஞ்சத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
“உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா
“முஸ்தபா முஸ்தபா”
“காட்டுக்குயிலு மனசுக்குள்ளே”
மஞ்சம் வந்த தென்றலுக்கு
கல்யாண மாலை கொண்டாடும் வேளை
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை இந்த வாழ்வு
அத்தை மடி மெத்தையடி
பூவரையும் பூங்கொடியே பூமாலை சூடவா
வெள்ளிக்கிழமை விடியும் வேளை
உனது விழியில் எனது பார்வை
அவரின் உரையாடல்களில் கூட, யதார்த்தம் நிறைந்த நகைச்சுவை இருக்கும்.
எனக்கும் கண்ணதாசனுக்கும் சண்டை என்கிறார்கள் – உண்மையில் நாங்கள் இருவரும் நண்பர்கள் – எங்கள் இருவர்க்கும் , நண்பர் ‘கள்’ என்றார்
அதேபோல, கண்ணதாசனுக்கு ஆஸ்தான கவிஞர் விருது தந்தபோது, எம்ஜிஆரிடம் , வாலி, “அண்ணே நீங்க புதுசாக எதுவும் தரலை. ஏற்கனவே இருப்பதை கொஞ்சம் மாத்தி இருக்கீங்க. கண்ணதாசன் கவி அரசு. இப்ப அரசு கவி ஆக்கிட்டீங்க.” என்றார்
ஜெயலலிதாவைப் பற்றி – ஒரு புடவைக்கு எதிராக, இத்தனை வேஷ்டிகள், கோஷ்டிகளாக சேர்ந்ததே ! அதிசயம் தான் !
திரையுலகில் வெற்றி பெற்ற உடன் சொன்னது –
போன வருடம் சாப்பிட முடியவில்லை – காரணம் கையில் காசு இல்லை
இந்த வருடமும் சாப்பிட முடியவில்லை – கரணம் நேரம் இல்லை – மாறி மாறி பாடல் பதிவுகள் இறைவன் முருகனின் விளையாட்டு , என்பார்.
தாய், தந்தை உயிரோடு இருக்கும் வரை, இவர் திரைத்துறையில் கால் பதிக்க முடியவில்லை. அந்த வருத்தத்தை, விருத்தமாக –
அத்தனை வேண்டுதல்கள்
எனக்காக என் தாய் ஆண்டவனிடம் வைத்தாள்
எந்த கடவுளும் செவி சாய்க்காததால்
தானே தெய்வமாக மாறி
என்னை வாழவைத்தாள்
என்பார்.
இப்படி, அவரின் கவிதைகள், கட்டுரைகள், திரைப்படப் பாடல்கள் என எல்லாமே மிகச சிறப்பானது. அவர் திருவரங்கம தந்த தமிழ்க் கரும்பு. வாலியின் நறுக்குத்தெறித்ததாற் போன்ற சில சொற் சித்திரங்கள்…
ஒரு கவியரங்கில் கோவலன் வாழ்வை இரண்டு வரியில்..
“புகாரில் பிறந்தவன்
புகாரில் இறந்தவன்”
காரைக்குடி கம்பன் விழாவில் அனுமனைப் பற்றி..
“குரங்கென அதன் வாலில் தீவைத்தானே
கொளுத்தியது அவன் ஆண்ட தீவைத் தானே” என்பார்.
“அம்மா என்று அழைக்காத”, “இந்திய நாடு என்வீடு”, “தரைமேல் பிறக்க வைத்தான்”, “மாதவிப் பொன்மயிலாள்”, “பவளக்கொடியில்”, “சந்த்ரோதயம் ஒரு பெண் ஆனதோ”, “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே” என்றும் பாடல் எழுதுவார்.
“முக்காப்பலா”, “சக்கரவள்ளி கிழங்கு சமஞ்சது எப்படி?”, “சின்னராசாவே சிற்றெரும்பு என்னை கடிச்சது , நேத்து ராத்திரி எம்மா , “லாலாக்கு டோல் டப்பிமா”, எவண்டி உன்னைப் பெத்தான் என்றும் எழுதுவார்.
திரைப்படத்தில் இப்படி சில மோசமான பாடல்களை இயற்றுகிறீர்களே” என்ற கேள்விக்கு…
“எந்தப்பா திரைப்படத்தில்
விலை பெறுமோ
அந்தப்பா எழுதுகிறேன் இது
என்தப்பா” என்று சொன்னதுடன்,
“நான் திரையரங்கில்
பொருளுக்குப் பாட்டுரைப்பேன்,
கவியரங்கில் பாட்டுக்குப்
பொருளுரைப்பேன்” என்றும்,
“கவியரங்கில் வண்ண மொழிப்
பிள்ளக்குத் தாலாட்டும் தாய்,
திரையரங்கில் விட்டெறியும்
காசுக்கு வாலாட்டும் நாய்” என பதில் கூறுகிறார்.
ஒரு ஆன்மீகக் கவியரங்கில் ‘பிறப்பின் சுழற்சியை’…
“மண்ணிலிருந்து புழு புறப்பட்டது
புழுவைப் பூச்சி தின்றது
பூச்சியை புறா தின்றது
புறாவை பூனை தின்றது
பூனையை மனிதன் தின்ன
மனிதனை மண் தின்றது
மண்ணிலிருந்து மறுபடி
புழு புறப்பட்டது
புனரபி மரணம் – புனரபி ஜனனம்
பஜகோவிந்தம் – நிஜகோவிந்தம்!” எனப் பாடுகிறார்.
இவரின் பரிமாணம் மிக விஸ்தாரணமானது. 70 வயதை தாண்டிய நிலையில் அவர் எழுதிய பாடல்கள், இவரின் எண்ணத்தின் இளமையைக் காட்டும்.
காதல் என்னும் தேர்வெழுதி
காத்திருக்கும் மாணவன் நான் என்றும்
“காதல் வெப்சைட் ஒன்று கண்டேன் கண்டேன்
கண்கள் ரெண்டில் இன்று
காதல் வைரஸ் வந்து கம்ப்யூட்டர் போல்
நானும் கன்பியுஸ்(confuse) ஆனேன் இன்று, என்றும்
“பிரிட்ஜினில்(fridge) உள்ள பிரீசரைப்(freezer) போல
குளிர் தர ஒரு துணையுண்டு வா”. , என்றும்
அக்கடான்னு நாங்க உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை போட்டா தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நடை போட்டா தடை போட
நீங்க கவெர்மென்டா தடா உனக்கு தடா என்றும் பாடுவார் .
தமிழ் மொழியின் யாப்பில், மடக்கணி என்ற வகையில் கூட, திரையில் பாடல் தந்துள்ளார்.
வநத சொல்லே மீண்டும் வந்து வேறுபட்ட பொருள் தருவது மட்க்கணி ஆகும்.
இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்தக் கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ
இந்தப் பாடலில், 8 சொற்களை, 16 முறை பயன்படுத்தி அழகு செய்திருப்பார் வாலி.
அதேபோல, ஆரம்ப காலங்களில் இவரின் பாடல்கள், திமுக மற்றும் எம்ஜிஆரின் அரசியல் பயணத்திற்கும் உதவியது என்பார்கள். முகஸ்துதி கொஞ்சம் அதிகம் என்றே கூறுவார்கள்.
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் “
உதய சூரியனின் பாதையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
வாங்கையா வாத்தியாரையா பாடலில், 1967ல் காங்கிரஸ் கட்சி தோற்று, எம்ஜிஆர் இருந்த திமுகவை உயர்த்திப் பாடுவார் –
பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைத்தவர் எல்லாம் போனாங்க
மூலைக்கு மூலை தூக்கி எரிஞ்சோம்
தலைகுனிவு ஆக ஆனாங்க
வாங்கையா வாத்தியார் ஐயா என்று எழுதுகிறார்.
எம்ஜிஆர் குண்டடி பட்டு உயிர் திரும்பியவுடன்
நான் செத்துப் பொழச்சவண்டா
யமனைப் பார்த்து சிரிச்சவண்டா
நான் அளவோடு ரசிப்பவன்
எதையும் அளவின்றிக் கொடுப்பவன் , என்றும் எழுதினார்.
சிவாஜி அவர்கள் பிறந்த நாள் விழாவில், அப்போதைய அரசியலை கலந்து, கவிதை படைத்தார்.
(அன்றைய காங்கிரசில் சிவாஜிக்கு தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி என்று பேச்சுஇருந்தது. ஆனால், பழனியாண்டி என்பவர் தலைவர் ஆனார். சிவாஜிக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டது ). இதை,
பாரெல்லாம் வலம் வந்து
பதவி வாங்கிய பழனியாண்டியா நீ !
அன்னையையே சுற்றி வந்து
அமுதக்கனி பெற்ற கணேசன் நீ ! என்று பாடினார்.
எல்லாக் கவிஞர்களுக்கும் இல்லாத சிறப்பு, இறுதி மூச்சுவிடும் வரை படங்களுக்குப் பாடல் எழுதிய பெருமை அதாவது 82 வயது வரை பாடல்கள் எழுதியவர் -“சாதனையாளர்” என்ற சிறப்பு வாலி(ப) கவிஞருக்கு உண்டு.
இப்படிப் பல குறும்புகளால் குறும்பாக்கள் எழுதிய திருவரங்கம் தந்து திரை அரங்கம் வளர்த்த தமிழ்க்கரும்பு. பேசும் பேச்சிலும் அவரின் குறும்பு, தமிழாகவே வெளிப்படும். நடிகர்திலகம், ஒருமுறை அவரை Foreign -க்கு கூடவா என்று கேட்க, Passport -யே கிடையாது – இதுவரை வெளிநாடே சென்றதில்லை – போக விருப்பமும் இல்லை என்றாராம். அப்படியா என நடிகர் திலகத்துக்கு ஆச்சர்யத்துடன் கேட்க, Foreign நான்தான் போனதில்லை – என் உள், ஏகப்பட்ட Foreign போயிருக்கிறது என்றாராம்!
தனிக் கவிதை ஒன்று –
“இரண்டு மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டன
இந்த மனிதர்கள் நம்மைக் கொண்டு எத்தனைச் சிலுவைகளை
செய்கிறார்கள் – அனால் நம்மால் இவர்களுள் ஒரு ஏசுவைக் கூட
காண முடியவில்லையே”
அரசியல் சார்ந்த மற்றொரு கவிதை –
“மனிதர்களை எங்களால்
மந்திரிகளாக்க முடிகிறது;
மந்திரிகளைத்தான் மீண்டும்
மனிதர்களாக்க முடிவதில்லை”
அதேபோல,
தலையைச் சீவியவனின் தாகத்தைத் தணிக்கிறது இளநீர் ஆனால்,
தோலை உரித்தவனைக் கண்ணீர் விட வைக்கிறது வெங்காயம் !
இது தான் சுயமரியாதையோ! என்பார்.
கண்ணதாசன் இறந்த பிறகு,
“எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்.
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்”
திரைப்படத் தயாரிப்பாளர், வசனகர்த்தா, இயக்குனர், பாடகர், கர்நாடக இசை தெரிந்தவர், ஓவியர் இப்படிப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர் கவிஞர் வாலி.
கம்பராமாயணத்தை “அவதாரபுருஷன்” என்றும், மகாபாரதத்தை “பாண்டவர் பூமி” என்றும், பாகவதத்தை “கிருஷ்ணவிஜயம்” என்றும் அழகிய சிங்கர் சரிதம் என்று புதுக்கவிதைப் பாணியில் இவர் தந்த காவியங்கள் அருமை.
TMS அவர்கள், திருச்சியில் வாலி இருந்தபோதே,
கற்பனை என்றாலும். கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்,
ஓராறு முகமும் ஈராறு கரமும்,
என்ற பாடல்களை வாங்கி, அவரே இசை அமைத்துப் பிரபலப்படுத்தினார். .
அவரின் பாடல்கள், கவிதைகள் எல்லாவற்றிலும் இலக்கிய நயத்துடன் ஒரு எள்ளலும், துள்ளலும் ஒருங்கே இருக்கும்.
மாளாப்பசிதான் மனத்தின் வியாதி என்று
ஆடி அலுத்து அறிந்தான் யயாதி!
என்று கூறுவார்.
காதலைச் சிரிப்பாக, கொஞ்சம் காமத்துடன் சிறப்பாக கவிதையில் கூறுவது அழகு.
கன்னங்கள் வழி
தென்னங்கள் தரும்
அன்னங்கள் தான் பெண்கள்!
அங்கங்கள் வழி
பொங்குங்கள் தரும்
தங்கங்கள் தான் பெண்கள்
என்பார்!
இதுபோல் எழுதிப் பெண் உரிமைப் போராளிகளிடமிருந்து என்றும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளார்.
புத்தம் புதிய புத்தகமே
உனைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
என்ற இலக்கிய வரிகள் கொண்ட பாடலுக்கும்,
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
என்பதை அம்மாவுக்கு அறிவு கிடையாதா என்றும் பெண்கள் அப்போது எதிரப்பைத் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு கிராமத்திலே படத்தின் கதை வசனம் எழுதியபோது, பாலசந்தர், கமல், பாரதிராஜா, இளையராஜா, ஹிந்து ரங்கராஜன் அனைவரும் பாராட்டியதுடன், அதைப்படம் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சொன்னார். வாலி பதில் எழுதினார் – அப்படி என்ன இந்தக் கதை? கண்ணதாசன் கூறியதுபோல, மனிதனுடைய பிறப்பும், இறப்பும் தவிர, மற்றபடி எந்த விஷயமுமே மறுபரிசீலனைக்கு உரியது. இது 100/100 உண்மை.எனவே, தேசம் விடுதலை பெற்றபின், பல்வேறு சமூக நீதியின் கருத்துக்கள் சட்டமாக்கப்பட்டுள்ளன.
நாற்பதாண்டுகளுக்கு பின் இன்னும் ஒரு பரிசீலனை தேவைதானே! விஞ்ஞானத்திற்கும், மருத்துவத்திற்கும் மறுபரிசீலனைக்கு மாற்றம் பெறும்போது, சமூக நீதி, சட்டங்கள் புதிய பொலிவு பெற வேண்டாமா என்றார். ஒரே ஒரு கிராமத்திலே கதாநாயகி சாதி சமயமற்ற புதிய பொலிவு உருவாக்க, சமூக நீதியில் மாற்றமும், மறுபரிசீலனையும் வேண்டும் என்றார், படமும் வெளிவந்தது.
இப்படிப் பன்முக ஆளுமையைக் கொண்ட அற்புதக் கவிஞர்தான் வாலி அவர்கள்.
அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி
