இருவரும் விரைவாக வீட்டைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக ரோடு போட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தடைந்தனர். மணி 8.30 ஆனது. காலை சாப்பாடு இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சரியாக 9:00 மணிக்கு ரோடு போடும் வேலையை தொடக்கினார்கள்.
சேகரன் ரோடு போடுவதற்கு ஏதுவாக மண்வெட்டியை கொண்டு இரண்டு பக்கமும் உள்ள புற்களை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் . அவரது மனைவி அதனை எடுத்து ஒரு ஓரமாக குவித்து வைத்துக் கொண்டிருந்தார். மற்றவர்களும் தேவையான அளவு ஜல்லி, சிமெண்ட் போன்ற கலவைகளை கொண்டு வந்து வேலை செய்யும் இடத்தில் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.
சூரியன் உச்சியில் வந்து நின்று கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அனைவரும் மதிய உணவிற்காக வீட்டிலிருந்து கொண்டு வந்ததைக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். சரியாக இரண்டு மணி ஆனது.
அந்த ரோடு காண்ட்ராக்டர் அங்கே வந்து ,
“வாங்க வேலையை பாருங்க !
எந்திரிங்க ஐயா !எந்திரிங்க!
எந்திரிங்கம்மா போங்கம்மா!”
என்று கத்தினார்.
வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது சேகரனின் மனைவிக்கு காலில் ஏதோ கடித்து விட்டது. வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். என்ன கடித்தது என்று எதுவும் தெரியவில்லை! மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகுதான் பாம்பு கடித்திருக்கிறது என்பது உறுதியானது. சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது சிகிச்சை பலனளிக்காததால் சேகரின் மனைவி உயிர் பிரிந்தது. சேகரனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டிருந்தது. குழந்தைகளும் இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தையாக தங்களை பார்த்துக் கொள்வார்கள். இனி வீரம்மாள் இறந்த பிறகு சேகரனுக்கு துணை யார்? ஒன்றுமே புலப்படவில்லை! அவனுக்கு மனது மிகவும் வேதனை பட்டுக் கொண்டிருந்தது.
அவளைத் தென்னை ஓலை பாடையில் வைத்து ஊரின் வழியாக சுடுகாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
ஊர்காரர்கள் அவளுடைய பிணத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்தார்கள்.
“போங்கய்யா ஊரை சுத்தி போங்கய்யா!
எங்கள் தெருவில் நடந்து போக கூடாது!
உங்களுக்கு தனிச்சுடுகாடு இருக்கு அங்க போங்கய்யா”
என்று கூச்சலிட்டு கொண்டிருந்தார்கள்.
“என்னங்க சாமி நாங்கதானே இந்த ரோடு போட்டு வேலை செஞ்சுகிட்டு இருக்கோம் எங்களையே இந்த தெருவுல நடக்க விடாமல் பண்ணுறீங்களே!”
“நடக்க கூடாதுன்னா! நடக்க கூடாது! உனக்கு என்ன இவ்வளவு வாய் பேச்சு கேக்குது!”
அந்த மேல் சாதி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த கீழ் சாதி மக்களின் பிணத்தைக் கூடத் தெருவழியாக கொண்டு செல்லக்கூடாது என்று வழிமறித்தார்கள்.
தன்னுடைய மனைவியின் பிணத்தை கூட தெருவழியாக கொண்டு செல்ல இப்படி செய்கிறார்களே என்று சேகரனுக்கு மனம் நொந்து போனது!
ஒருவழியாகப் பிணத்தை சுமந்து கொண்டு 11 மைல் தாண்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் கிடந்த அந்த சுடுகாட்டில் தன்னுடைய மனைவியின் பிணத்தை எரித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.
அந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்த ஊரில் வாழ்வது மிகவும் சிரமம் என்று முடிவு செய்தனர்.இந்த ஊரில் மேல் சாதிக்காரர்கள் கொடுமை இங்கு அதிகமாக இருக்கிறது. இன்று சேகரனின் மனைவிக்கு நேர்ந்த கொடுமையைப் போல நாளைக்கும் நமக்கும் இந்த கொடுமை நேருமே நாம் அப்போது என்ன செய்வது? இந்த ஊரு நமக்கு வேண்டாம் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்வோம் என்று கண்ணீர் சிந்திக் கொண்டே சில நாட்களுக்குப் பிறகு ஊரை விட்டு புலம்பெயர்ந்து சென்றார்கள் அந்த அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்கள்.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு அடை மழை பிடித்தது. ஊரே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் வீட்டை விட்டு இன்னும் செல்ல முடியவில்லை மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டது மின்சார விளக்கு அனைத்தும் எரியாமல் போனது. மின் கம்பங்கள் கீழே விழுந்து விட்டன.
அந்த ஊர் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கி மாண்டு போனார்கள்
அந்த ஊரே தனிச்சுடுகாடு ஆனது……….
