
அழ வள்ளியப்பா
லிங்கி செட்டி தெருவில் வள்ளியப்பா வசித்துக் கொண்டிருந்த காலம். அது தான் தமிழகத்தில், சிறுவர் பத்திரிகைகள் புற்றீசல் போல புறப்பட்ட காலம்.
ஒரு சிறுவர் பத்திரிகை ஆசிரியராக இருப்பவர், அதே போல் இன்னொரு சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருப்பவரை போட்டியாளராக கருதிய காலம். பொறாமை அவர்களிடம் புகுந்த காலம்.
அந்தக் காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர் பத்திரிகைகளின் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த குழந்தை கவிஞர், மற்ற சிறுவர் பத்திரிகை ஆசிரியர்களை மிகவும் நேசித்து வந்தார். நேரில் பார்த்தபோது அவர்கள் பணியையும் பத்திரிகையும் பாராட்டி வந்தார். அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவியும் செய்தார்.
மற்ற சிறுவர் பத்திரிகை ஆசிரியர்கள், இவரை அதிசயப் பிறவி என்றே கருதினர். இந்த அதிசய மனிதர், பத்திரிகை ஆசிரியர்களை மேலும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு செயலைச் செய்தார். குழந்தை பத்திரிகை ஆசிரியர்களை ஒரு நாள் கவிஞர் தம் இல்லத்துக்கு வரவழைத்து விருந்து அளித்தார்.
நெருங்காமல் இருந்தே பழகிய ஆசிரியர்கள் முதன்முறையாக ஓரிடத்தில் கூடினார்கள். ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டார்கள். ஒன்றாக உணவருந்தினார்கள். உளம் திறந்து உரையாடி மகிழ்ந்தார்கள். எந்த நோக்கமும் இன்றிக் கூடிப் பேசி மகிழ்வதற்காகவே பத்திரிகையாளர்களைக் கூட்டிய கவிஞரின், செயல் புதுமையாகப் பார்க்கப்பட்டது. அதற்கு முன்னரோ பின்னரோ வேறு யாரும் செய்யாத புதுமை! அன்றுதான் ஆசிரியர்கள், குழந்தைக் கவிஞரை முழுமையாக புரிந்து கொண்டார்கள். சகோதர பத்திரிகையாளர்களைப் புரிந்து கொண்டார்கள். ஏன் தம்மைத் தானே புரிந்து கொண்டார்கள்.
குழந்தை இலக்கிய வரலாற்றில் இது ஒரு சிறப்பு மிக்க நிகழ்ச்சி. இதுதான் குழந்தை எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்கு அடிப்படையான நிகழ்ச்சி. வள்ளியப்பா வழங்கிய விருந்தைப் பற்றி ஒரு சிறந்த கட்டுரை “சிறுமி” என்னும் சிறுமிகளுக்காகவே வெளிவந்த ஓரணா விலையும் டெம்மி ¼ அளவில் 8 பக்கமும் கொண்ட பத்திரிகையில் ஒரு பக்க கட்டுரையாக வெளி வந்தது.
“அன்பு மனிதர் அழ. வள்ளியப்பா” என்னும் தலைப்பு கொண்ட அந்தக் கட்டுரையை, சிறுமி பத்திரிகையின் ஆசிரியர் “தமிழ்ப் பிரியன்” என்பவர் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையை படித்துத்தான், குழந்தை கவிஞர் புதுக்கோட்டையில் இல்லை சென்னையில் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்து கொண்டார்கள்.
ஏறத்தாழ இதே நேரத்தில் அப்போது பள்ளி மாணவராக இருந்த சௌந்தர், தாம் நடத்திய “ரேடியோ சிறுவர் வார இதழில்” கவிஞர் உருவத்தை அட்டைப் படத்தில் வெளியிட்டு, அவரைப் பற்றிய விவரங்கள் கொண்ட “வள்ளியப்பாவுடன் ஒரு மணி நேரம்” என்னும் கட்டுரையை எழுதி பிரசுரித்து இருந்தார்.
அதனால் சென்னையில் இருந்த குழந்தை எழுத்தாளர்கள், லிங்கி செட்டி தெருவை நோக்கி படையெடுத்தனர். அடிக்கடி கவிஞரைக் கண்டு பேசி, கருத்து பரிமாற்றம் செய்து, சிறுவர் இலக்கியம் மேம்படைய அவர்களுடைய நேரத்தைக் கழித்தனர்.
கவிஞரை அடிக்கடி கண்டு பேசி மகிழ்ந்த குழந்தை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க இருவர், தங்கமணியும், நெ.சி. தெய்வசிகாமணியும் ஆவர். தெய்வசிகாமணி, கவிஞர் வசித்த அதே தெருவில் சில வீடுகள் தள்ளி வசித்தார். தங்கமணி, கவிஞர் வசித்த சில தெருக்கள் தள்ளி வாழ்ந்து வந்தார். அதனால் இந்த இருவருக்கும் மற்றவர்களை விட கவிஞரை அதிகமாக காணும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் கவிஞரை காணும் போதெல்லாம் கவிஞர் வீட்டில் பல எழுத்தாளர்களை சந்தித்து வந்தனர்.
அதனால், இந்த எழுத்தாளர்கள் அடிக்கடி சந்திக்க, ஒரு சங்கம் அமைக்கலாமே என்று கவிஞர் இருவரிடம் கூறினார். பத்திரிகை ஆசிரியர்களின் கூட்டத்தை கூட்டிய போது, கவிஞரின் மனத்தில் அத்தகைய சந்திப்புகள் பல நிகழ்வதற்கு ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டிருந்தது.
எழுத்தாளர் பலரை அடிக்கடி சந்தித்தபோது அந்த எண்ணம் வலுப்பெற்றது. தங்கமணியும் தெய்வசிகாமணியும் சங்கம் பற்றி கூறிய போது தம் எண்ணத்தைச் செயலாக்குவதை விரைவு படுத்தினார் கவிஞர். அதன் பயனாக ஒப்பில்லாத ஒரு நிறுவனமாக உலகத்துக்கு ஒரு புதுமையாக “குழந்தை எழுத்தாளர் சங்கம்” உதயமானது.
“குழந்தை எழுத்தாளர்” என்னும் பெயரே வள்ளியப்பா கொடுத்த பெயர் தான். “குழந்தை பத்திரிகை” “குழந்தை பதிப்பகம்” என்னும் பாணியில், குழந்தைகளுக்காக எழுதுவோரை “குழந்தை எழுத்தாளர்” என்னும் பெயரிட்டு வழங்கியவர் கவிஞரே. அவரே “குழந்தை எழுத்தாளர் சங்கம்” என்னும் பெயரையும் உண்டாக்கினார்.
குழந்தை பத்திரிகை ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு அதனால் கவிஞர் அவர்கள் கூட்டத்தை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். குழந்தை எழுத்தாளர் எண்ணிக்கை அதிகம். அதனால் அவர்கள் கூட்டத்தை, தம் நண்பர் பழனியப்பாவின் வீட்டில் வைத்துக் கொண்டார்.
கவிஞர் பரந்த மனப்பான்மை கொண்டவர். அதனால், மாணவ எழுத்தாளர்கள் மற்றும் சிறுவர்களை மதித்து அழைப்பு அனுப்பினார்.
சென்னை ஆயிரம் விளக்கு “ரட்லேண்ட் கேட்” காலனியில், குழந்தை பதிப்பக அலுவலகம் இருந்த பழனியப்பாவின் வீட்டில், குழந்தை எழுத்தாளர்கள் கூடினார்கள்.
அந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், தமிழ் புத்தாண்டு நாள். குழந்தை இலக்கியத்தில் புதுயுகம் பூத்த நாளும் அதுவே. சித்திரை பிறந்த புத்தாண்டு நாளில், காலையில் அவரவர் வீட்டில் நடக்கும் விசேஷத்தையும் ஒதுக்கிவிட்டு, வள்ளியப்பாவின் அழைப்பை ஏற்று, பழனியப்பாவின் பங்களாவுக்கு வந்தார்கள். பிஞ்சு எழுத்தாளர் முதல் பழுத்த பழமான எழுத்தாளர் வரை அனைவரும் வந்தார்கள். வெளியூர்களிலிருந்தும் எழுத்தாளர்கள் வந்தார்கள்.
வந்தவர்களை வள்ளியப்பாவும், பழனியப்பாவும் வரவேற்றார்கள். பாக்களின் வரவேற்பு இனிமையும் இன்பமும் நிறைந்ததாகத் தானே இருக்கும். எழுத்தாளருக்குப் பழனியப்பா சிற்றுண்டி வழங்கினார். அதுவே விருந்தாக அமைந்தது.
இப்படித்தான் “குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்” உருவாகியது.
