பாட்டி திரைப்படம்

ஆசிரியர் கல்வி பெறும் கல்லூரியில் மாணவர்களின் வகுப்புகளில் நடப்பதின் கவனிப்பு (observation) ஒரு பங்காகும். உளவியல் மற்றும் குழந்தை வளர்ச்சி பாடங்களைச் சொல்லித் தரும் நான் என் வகுப்பின் பதினைந்து நிமிடங்களை இப்படிக் கவனித்ததைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைத்திருந்தேன்.

அதில்தான் ஸலீமா மும்தாஜ், நான்கு வயதான குழந்தை ராமனைப் பற்றிப் பகிர்ந்தாள். அவன் முட்டைப் படம் ஏதேனும் பார்த்ததும் “கமலா பாட்டி” எனக் கூச்சலிட்டு ஓடுவான் என்றாள். வகுப்பாசிரியர் சமாதானம் செய்யத் தடுமாறுவதாகவும் பகிர்ந்தாள்.

ராமனை வகுப்பில் கவனித்ததில் அவனுடைய வளர்ச்சியையும் புரிதலையும் கணிக்க முடிந்தது. மாடிப்படி ஏறி இறங்குவது, உடைகள்  அணிவிப்பில் உதவுவது, தானாக உண்பது, கதை சொல்வது, மற்றவர்களுடன் விளையாடுவது, உணர்வுகளைக் கூறுவது, இவை எல்லாமே வயதிற்கு ஏற்றவாறே  இருந்தது.

பெற்றோரான ரமணன், ரமாவைச் சந்தித்தேன். மூத்த மகள் ராகவியும் கூட வந்திருந்தாள்.

ராகவி வருட‌ ஆரம்பத்திலிருந்து ராமன், முட்டை சாப்பிடும் படங்கள் பார்த்ததுமே வாந்தி எடுப்பது போலப் பாவனைக் காட்டுவதைப் பற்றிக் கூறினாள். பெற்றோர், விளையாட்டாகச் செய்கிறான் என விட்டார்கள். பார்த்த பலரும் குழந்தைத்தனமான நிராகரிப்பின் விளைவாக இருக்கும் எனக் கூறியதை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் “கமலா பாட்டி” (அம்மாவின் தாயார்) எனக் கூச்சலிடுவது ஏன் என்று புரியவில்லை. மேலும் பாட்டியின் வீட்டிற்குப் போக மாட்டேன் என அடம் பிடிப்பான்.

ராமனின் வயதைக் கருதி, பெற்றோரிடம் ஏன், எதற்கு ராமனுடன் செஷன்கள் தேவை என்பதை விளக்கினேன். ஒப்புக்கொண்டார்கள்.

ஸெஷனில் ராமன் குடும்பத்துடன் பாசமாக இருப்பது தெளிவானது. பெரியவர்கள் சொற்படி நடந்து கொள்பவன், ஏற்றுக்கொள்பவன் முட்டை விஷயத்தில் மட்டும் எதிர்மறையான செயல். ராகவி-ராமன் ஒற்றுமையாகவே இருந்தார்கள்.

முட்டையை மையமாக வைத்து செஷனில் ப்ளே தெரபீ அதாவது குழந்தைகள் வயதுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பொருட்களை வைத்து அதை அவர்கள் உபயோகிக்கும் அல்ல விளையாடும் விதங்களிலிருந்து அவர்களின் நலன், திணறல், சங்கடங்களை அறிந்து கொள்ளும் விதமாகும், கூடவே மனநலனை மேம்படுத்தும் கருவியாகவும் பயன்படும்.  பிரச்சினைகளை விவரமாகச் சொல்ல முடியாத (சுமார் 6-8 வயதிற்கு உட்பட்ட) பச்சிளங்குழந்தைகளுக்கு இதை உபயோகிப்போம்.

கமல் தாத்தா (அம்மாவின் தந்தை) கமலா பாட்டியின்  வீடு அருகிலேயே இருந்ததால், அடிக்கடி குழந்தைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இப்போது கமலா பாட்டியின் வீட்டிற்கு ராமன் போக மறுத்த காரணம், அவளிடம் பயம், அச்சம் உருவானதால் என்று தெளிவானது. மேலும் கமல் தாத்தா அங்கிருந்து சென்று விட்டதாலும்.

கமலா பாட்டிக்கு “நோ” என்ற சொல் பிடிக்காது. அவள் சொல்வதைச் செய்யாவிட்டால் ராமனுடன் பேச மறுப்பாள். இதைத் தவிர்க்கவே பாட்டி சொல்வதையெல்லாம் கடைப் பிடிக்க முயலுவான் ராமன். சபாஷ் ராமன் என்று சொல்வாள். சொற்படி செய்வான். 

சபாஷ் என்பது பாட்டியின் லஞ்சம்! “இது செய்தால், அது கிடைக்கும்”. இதன் விதையே ஏக்கம்தான். தான் தேடும் உறவை உருவாக்கி அமைக்க, லஞ்சம் உபயோகிக்கப்படும். இதைப் பெற்றுக்கொள்ளவே குழந்தைகள் செய்வார்கள். இதன் மூலம் குழந்தைகள் மனதில் தவறான புரிதலை உருவாக்குகிறோம்.

கமலா பாட்டிக்கு அசைவம் பிடிக்கவே பிடிக்காதாம். சாப்பிட மாட்டாளாம். பார்த்தாலே வாந்தி வருவதைப் போலச் செய்வாளாம். ராமன் முட்டை சாப்பிட்டால் அவனுடன் பேச மாட்டாள். தன்னைப் பிடிக்காது என்று பொருள்‌ என்றும் கூறுவாள். பயமுறுத்தும் சொற்கள் பராமரிப்பில் தீங்கும் ஏக்கத்தையும் விளைவிக்கும்.

கமலா பாட்டியின் சபாஷ் கிடைக்க முட்டையைப் பார்த்தால் அவள் செய்வதையே செய்தான். அதற்கும் கமலா பாட்டி சபாஷ் என்றாள்! அந்த சபாஷ் நிலைக்கவே ராமன் செய்தான்.

பாட்டிக்கு நோ என்ற வார்த்தை பிடிக்காததால் ராமன் அந்த சொல்லைத் தவிர்த்தான். கமல் தாத்தாவும் பெரும்பாலும் அவ்வாறு சொல்லமாட்டார். ராமனிடம் பாட்டி பேசாமல் இருக்கும்போதோ அல்ல வேறு எதற்கோ தாத்தா மறுபேச்சு சொன்னால், கமலா பாட்டி பலத்த குரலில் அவரிடம் பேசுவதைக் கேட்கும்போது ராமன் பயம் பொங்குவதாகக் கூறினான்.

குழந்தைகள் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஏராளம் என்பதால் பெற்றோருடன் ஸெஷன்கள் அமைத்தேன்.

ரமணன், ரமா இருவருமே திறமையாக ரெக்ரூட்மெண்ட் செய்வதிலும் ட்ரைனிங் கொடுப்பதிலும் வல்லமை பெற்றிருந்த பிரபலமானவர்கள். இருப்பினும் நெடுநாள் கனவான கைவினைப் பொருட்கள் விற்பனையையும் ஆரம்பித்தார்கள். நன்றாக அமைந்தது. இரு தொழிலிலும் ஈடுபட வேலையில் கவனம் அதிகரிக்க, வேலையில் பல மணி நேரமும் கழிந்தது!

ராமன் ஏன் முட்டையைப் பார்த்ததும் இவ்வாறு செய்கிறான், திடீரென கமலா பாட்டியிடம் போக மறுக்கிறான் என்ற கேள்விக்குக் குழந்தை வளர்ச்சியைப் பற்றி வலையொளியில் (Internetல்) பார்த்தார்கள். பதில் இல்லை. இதைப் பல்வேறு கோணங்களில் ஸெஷனில் பார்க்கச் செய்தேன்.

ரமணன் ரமா உணவில் முட்டை சேர்த்துக் கொண்டதை பற்றிய விவரிப்பில் தொடங்கினேன். அசைவம் சாப்பிடுவது ரமணன்-ரமாவின் வேலையினால் எனச் சொன்னார்கள். உத்தியோகத்தில் பல சந்திப்பு. பிசினஸ் வளரப் பல திட்டமிடும் கூட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. வரும் சந்தர்ப்பங்களை நழுவிப் போகவிடாமல் எல்லோரிடமும் ஒப்புப் போவதைக் கடைப்பிடித்தனர்.

இதில் ரமணன்-ரமா இருவரின் ஒற்றுமையே,“வேண்டாம்” எனச் சொல்லாததில்தான்! வழங்கிய அசைவ உணவைச் சாப்பிட்டார்கள்.

திருமணம் செய்துகொண்ட காலத்திலேயே ரமணன்-ரமா அசைவ உணவு சாப்பிடுவது பெற்றோருக்குப் பிடிக்காது.  பெற்றோர் வீட்டில் இல்லாத போது சாப்பிட்டார்கள்.

ரமணன் தாம் மது அருந்துவதும் வேலை சம்பந்தப்பட்ட கூட்டங்களில் அளித்த போது ஏற்றுக்கொண்டதால் என்றார்.

ராமனுக்கு வேதனை,  பெற்றோருக்குப் பிடித்ததைத் தான் பாட்டிக்குப் பயந்து சாப்பிடாமல் போவதே. இதைக் கையாளத் தடுமாறியதில் கமலா பாட்டியிடமிருந்து விலகிப் போக முயன்றான்.

ரமணன்-ரமா தம் குறைபாட்டின் விளைவுகளை அடையாளம் கண்டுகொள்ள, மாற்றத் தொடங்கினார்கள். கண்மூடித்தனமாகப் பிடிக்காததை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட சுய உரை குழப்பம் ராமனை பாதித்தது. கமல் தாத்தாவிற்கோ மனைவியின் செயல்பாடு பிடிக்கவில்லை. அதை எடுத்துச் சொல்லத் துணிவில்லை. கடைசியில் கமல் வீட்டை விட்டுச் சென்று விட்டதாகக் கூறினார் ரமா. ஆகமொத்தம் பிரச்சினையை நேர்மறை முறையில் சந்தித்துச் செயல்படவில்லை.

ரமாவிற்கு தன்னுடைய பிராப்ளம் ஸால்விங் (பிரச்சினைகளுக்கு விடை காணும்) திறனை மேம்படுத்தத் தேவை எனப் புரிந்தது. பல்வேறு வழிகளை விடுத்தோம்.

ரமணன் தன்னுடைய மறுபேச்சுப் பேசாமல் செய்யும் குணம் ராமனிடமும் கண்டதாலும் அதனால் வேதனைப் பட்டதாலும் ஏற்பட்ட தன் சுய மரியாதைக் குறைபாடு மனதை உறுத்துவதாகக் கூறினார்.‌ மாமியார் பேச்சை மீற முடியவில்லை. ராமன் கமலா வீட்டிற்குச் செல்ல மறுத்ததும் விழித்துக் கொண்டார். பல உதாரணங்கள், நிகழ்வுகளை விவரிக்க ரமணன் தெளிவு பெற்றார்.

மற்றவர் ஆமோதிப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு ரமணனுக்கு உண்டு. ஆமோதிப்பு இல்லை என்றால் பரிகாசம் செய்வார்களோ, தனிமை விளைந்திடுமோ என்ற அச்சம். கமல் தாத்தாவும் தன்னைப் போலவே இருந்ததால் அதையே கடைப்பிடித்தார். பயனுள்ளதா இல்லையா என்று சிந்திக்காமல்!

கமலா-கமல் சண்டை, முட்டை சாப்பிடாமல் இருக்க அழுத்தம் இவை ராமனின் மனதில் அழுத்தம் ஏற்படுத்த, சுய பாதுகாப்பு (self- preservation) மார்க்கத்தில் குழந்தை அவளிடம் போக மறுத்தது.

ரமணனின் தாயார் சொளதா ராமனுக்குப் புரியும் வகையில் கதையாக அல்லது தன் வாழ்வின் உதாரணத்தைச் சொல்லிப் புரிய‌வைப்பாள். ராமன் முட்டையைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளப் பல வழிமுறைகளை அவர்களுடன் அமைத்து வைத்தேன். அதை அவர்கள் கடைப்பிடிக்க, ஸலீமா மும்தாஜின் வகுப்பில் ராமனின் நடத்தையில் மாற்றத்தைப் பார்த்தார்கள். ரமணனின் தந்தை ரகுவீர் சமஸ்கிருத பண்டிதர். அவர் சின்னஞ்சிறு கதைகள் ஸ்லோகங்களைச் செய்கைகளுடன் சொல்லித் தர, நேர்மறையை ராமன் கற்றுக்கொண்டான்.

இதற்கிடையில், கமலா-கமல் இவர்களின் கருத்து வேறுபாடு அதிகரித்தது. கமல் விவாகரத்து கோரினார். ரமா தடுமாறி விட்டாள். கமல் கமலாவைப் பிரபலமான ஜோடி சிகிச்சையாளர் ஒருவரை ஆலோசிக்கப் பரிந்துரைத்தேன்.