(முனைவர் தென்காசி கணேசன் தக்ஷிணாமூர்த்தி
பாரதி என்று கல்வியின்
உருவாய் நின்றாலும்
நீ பாரதீ தான் !
ஆம் நீயே ஒரு அக்னிக்குஞ்சு !
உனது சிற்றுளிப் பார்வை
செதுக்கியது இந்த சமுதாயத்தை!
பராசக்தி என்று கூவியே
மொழியால் ஊழித் தாண்டவம் ஆடியவன் நீ !
வாழ்வதற்கும் உனது வசதிகளுக்கும்
பராசக்தியிடம் கேட்கவில்லை நீ !
வல்லமை தாராயோ இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே என்று கேட்டவன் !
மண் விடுதலை
பெண் விடுதலை
ஆன்ம விடுதலை என்ற மூன்றும் பாடிய
இளைய ஆதிசங்கரன் நீ!
நாவினில் வேதம் உடையவள்
எங்கள் தாய் என்றும்
வேதம் நிறைந்த தமிழ்நாடு என்றும்
ஐயமின்றிப் பாடியவன் நீ !
அன்று நீ கவலைப்பட்ட
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் இல்லாத
மாந்தர் கூட்டம் இன்றும் தொடர்கிறதே
என்ற வேதனை தான் வாட்டுகிறது இன்னும்!
தாமிரபரணி தந்த தங்கக் கவியே
ஆனாலும் ஒன்று மட்டும் சொல்வேன் !
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் !
இது உலகப் பழமொழி!
பாரதி ! உன் நினைவு இருந்தால்தான்
எங்களுக்கே நெஞ்சே இருக்கும் !
இன்னும் ஒரு முறை சொல் .. (குவிகம் சுந்தரராஜன்)
பாரதி. சமுதாயம் வாழ்க வாழ்க வென்று.
இன்னும் பலமுறை சொல் சொல் சொல்
பாரதி பிடித்த கணபதி காலினை.
இன்னும் சிக்கென கொள் கொள் கொள்
பாரதி புகழ்ந்திடும் வேலன் கையில்
என்றும் மிளிர்வது வேல் வேல் வேல்
பாரதி துதித்த சக்தி கண்ணில்
இன்னும் தெறிக்கும் வில் வில் வில்
பாரதி கொஞ்சிய கண்ணன் பாதம்
இன்றும் கொள்வோம் தாள் தாள் தாள்
பாரதி கூவிய குயிலின் குரலை.
என்றும் கொஞ்சிடு புள் புள் புள்
பாரதி பாடிய பெண்ணின் பெருமையை.
இன்னும் சொல்வோம் மேல் மேல் மேல்
பாரதி ஓட்டிய ஞானரதத்தில்.
இன்னும் ஏறிச் செல் செல் செல்
பாரதி அருந்திய பாரதத் தாயும்
இன்னும் தருவாள் பால் பால் பால்
பாரதி இசைத்த பாடல் அனைத்தும்
என்றும் இனிக்கும் கேள் கேள் கேள்
பாரதி நடந்த காவியச் சோலையில்
இன்றும் என்றும் நில் நில் நில
பாரதி வெறுத்த அடிமை ஒழிய
இன்றே எடுத்திடு வாள் வாள் வாள்
பாரதி மிதித்த காலன் வரவை
என்றும் கொள்வாய் புல் புல் புல்
பாரதி சுட்ட கவிதை முறுக்கை
என்றும் சுவைத்து மெல் மெல் மெல்
பாரதி முகத்தில் முறுக்கிய மீசை
என்றும் கிளப்பும் தூள் தூள் தூள்
பாரதி பாரதி பாரதியே என்று
இன்னும் உரக்கச் சொல் சொல் சொல்

