
இது ஒரு ஹிந்திப் படம் சாந்தாராம் என்கிற மஹா படைப்பாளியின் படம். “நவ்ரங்”. பெயருக்கு ஏற்ப வண்ணக்கோலம். 60 /65 வருடத்துக்கு முன்னால் வந்த படம்.
ஒரு இளம் கவிஞர். அற்புதமான கவிதை எழுதுவான், பாடுவான். அவனுக்கு நல்ல ரசனை உள்ள, நன்றாக பழக, பேச, ஆடத்தெரிந்த ஒரு பெண் மனைவியாக வேண்டும் என்று ஆசை. ஆனால் ஜமுனா என்ற ஒரு கட்டுப்பட்டியான, ஆனால் அழகான ஒரு பெண்ணை கல்யாணம் செய்து விடுகிறார்கள். அவனுக்கு பெரிய ஏமாற்றம். ஆனால் மனைவி மீது அபரிமிதமான அன்பு உண்டு. அதனால் அவளையே ஒரு ஆடல், பாடல் தெரிந்த பெண்ணாக கற்பனை செய்து கொண்டு அந்த பாத்திரத்துக்கு “மோகினி” என்று ஒரு பெயரும் கொடுத்து கனவு காணுவான். தூக்கத்தில் கனவு கண்டு “மோகினி” என்று பெயர் சொல்லி அழைப்பான். ஜமுனாவுக்கு சந்தேகம். ஆனால் கனவில் இவளே வருவாள் ஆடுவார், பாடுவாள். அந்த பாடலும், ஆடலும்தான் பாதிப் படம். ஆனால் அற்புதமான பாடல்கள், அபாரமான படப்பிடிப்பு… “ஆதா ஹை சந்தரமா, ராத்து ஆதி” போன்ற பாடல்கள் (நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்).
இதற்கு இடையில் ராஜா இவனைப் பற்றி கேள்விப்பட்டு அழைத்துவரச் சொல்கிறார். அவனை கவிதை எழுதச் சொல்கிறார், பாடச் சொல்கிறார். அவனையும், அவன் திறமையையும், அவனின் அப்பாவித் தனத்தையும் மிக மிகப் பிடித்து விடுகிறது. அடிக்கடி அழைத்து பேசுவார் பாடச் சொல்வார் ரசிப்பார். மிக மிக நல்லவர் அந்த ராஜா. ஆனால் அவர் வெள்ளைக்காரர் களுக்கு கப்பம் கட்டி அவர்களுக்கு அடிபணிந்து ஆட்சி செய்து வந்தார்.
ஒருமுறை, ஒரு ஆங்கிலேய அதிகாரி வந்திருக்கும் போது, அவனைப் புகழ்ந்து பாடச் சொல்கிறார். கவிஞனுக்கு இது பிடிக்கவே இல்லை. அதனால் அவனையும் ஆங்கில அரசாங்கத்தையும் திட்டி பாட்டெழுதிப் பாடுகிறான். அதிகாரிக்கு சந்தேகம் வருகிறது. பாஷை புரியாததால், அவன் பாராட்டித் தான் பாடினான் என்று வேறு அர்த்தத்தை சொல்கிறார். அதிகாரி போன பின்னர் ராஜாவிடம் கோபித்துக் கொள்கிறான். அடிமையாக இருப்பது பற்றி கேட்கிறான். ராஜா, கொஞ்சம் கூட கோபிக்காமல் பதில் சொல்கிறார்.
ராஜாவாக என் கடமை மக்களை காப்பது, சந்தோஷமாக வைத்துக்கொள்வது. நான் வெள்ளையர்களை வெறுக்கிறேன், அடித்து விரட்ட நினைக்கிறேன். ஆனால் அவர்கள் கலத்துக்கு முன் நாம் ஒன்றும் இல்லை. என் வெறுப்புக்காக சண்டை போட்டு நாட்டு மக்களின் உயிரை பலி கொடுக்க விரும்ப வில்லை. மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள். அதை ஒரு ராஜாவாக காப்பது என் கடமை. வேறு வழி இல்லை என்று சொல்கிறார். அவனும் புரிந்து கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். ராஜா பரிசுகள் கொடுக்கிறார்.
வெகு நாட்களாக காணாததால் ராஜா அவனை அழைத்துவரச் சொல்வார். அவன் சோகமாக, மெலிந்து உடலோடு வருவதைப் பார்த்து “என்ன விஷயம்” என்று கேட்பார். அவன் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருப்பான். ராஜா மற்றவர்கள் மூலம் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்வார். மறுநாள் வரச் சொல்வார்.
மறுநாள் நிறைய மக்கள் கூட்டம் கூடிய சபையில் அவனை பாடச் சொல்லி வற்புறுத்துவார். கீழே ஆண்களும், மேல நிறைய பெண்களும் உட்கார்ந்து இருப்பார்கள். அவன் சோகமாக ஏதோ பாட ஆரம்பிப்பான் ” தூ…சுபீஹை கஹா மை துப்பாக்கி யாஹா. (நீ எங்கே மறைந்து இருக்கிறாய், நான் இங்கு தவிக்கிறேனே) என்று பாடி விட்டு நிறுக்துவான்…கொஞ்சம் நேரம் பின்னர் ஒரு சலங்கை சப்தம் கேட்கும். அது அவன் மனைவி நடந்து வரும் சப்தம் என்று அவனுக்குத் தோன்றும்… “யே கோன் பூல் சம்கா” (யார் பூவினால் ஓசைப்படுத்தினார்கள்) என்று தொடர் வான்… “ஜமுனா தூ ஹி மேரி மோகினி” என்று முடிப்பான்… அந்த அவை முழுவதும் கை தட்டும். எப்பேர்ப்பட்ட கணவன் உனக்குக் கிடைத்துருக்கிறான். என்று எல்லோரும் அவளிடம் சொல்வார்கள். அந்தப் பாடல் பெரிய பாடல். மிக மிக பிரம்மாண்டமாக படமாக்கப் பட்டிருக்கும். ஆடலும், பாடலும், வண்ணமுமான – “நவ்ரங்” … காலம் கடந்து நிற்கும் வண்ணக் கோலம்/கவிதை.
நேரம் / விருப்பம் / ரசனை இருந்தால் பாருங்கள்;
பாடல்கள் இதோ:
