கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற பெயரில் சென்ற 6 ஆம் திகதி, ஏப்ரல் மாதம் 2025 அன்று எற்ரோபிக்கோ நகரில் உள்ள Thistletown Community Centre மண்டபத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்டுப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் பேராசிரியர் இ.பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் வாசுகி நகுலராசா, காப்பாளர் நவா கருணரட்ணராசா, உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், ஒன்ராரியோ மாகாண அரசின் இணையமைச்சர் வியேஜ் தணிகாசலம், பல்லினப் பிரதிநிதிகளான டாக்டர் கிறிஸ்டி டங்கன், திரு. வின்சென்ட் கிரிசாந்தி, ஜான் செருசெல்லி மற்றும் ஒன்ராரியோ அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டின் போது, முதலில் முனைவர் பார்வதி கந்தசாமியின் வாழ்த்துரையும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் நிறுவுனர் கமலவதனா சுந்தாவின் நூல்அறிமுக உரையும் இடம் பெற்றன. அமைப்பின் நிறுவுனர் கமலவதனா சுந்தா அவர்கள் நூல் அறிமுக உரையின் போது, ‘எழுத்தாளர் குரு அரவிந்தனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு கனடாவில் நாங்கள் வெளியிடும் காலாண்டு சஞ்சிகையான ‘வதனம்’ இதழில் இதுவரை எழுதிக் கொண்டிருந்த பெண்களும், இளையோரும் தமிழ் இலக்கியத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். 26 தமிழ் பெண்கள் ஒன்று சேர்ந்து இந்த சாதனையை உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது, கனடிய மண்ணில் படைத்திருப்பதையிட்டு நாங்கள் பெருமைப் படுகின்றோம்.’ என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து தொகுப்பாசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் வெளியீட்டுரை இடம் பெற்றது. முனைவர் வாசுகி நகுலராசாவின் நூல் ஆய்வுரையைத் தொடர்ந்து கமலவதனா சுந்தா அவர்கள் ‘ஆறாம் நிலத்திணைச் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிட்டு வைத்தார்.
தொகுப்பாசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில், நேரடியாகவும் மெய்நிகர் வழியாகவும் நடந்த தனது சிறுகதை பயிலரங்கில் பங்கு பற்றிய எழுத்தாளர்களின் கதைகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், கனடாவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர் இப்பயிலரங்கில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் கனேடிய தமிழ் இளைய தலைமுறையினர் தமிழில் சிறுகதைகள் எழுதியிருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விடயமென்றும், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழி அழிந்துவிடுமோ என்ற சந்தேகத்திற்கு இடமில்லை என்பது போல இந்த இளைய தலைமுறையினரின் பங்களிப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் 26 கனடிய தமிழ்ப் பெண்களின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்ப்பெண்கள் ஏற்படுத்திய ஒரு சாதனையாகும் என்றும், இதுவரை புலம்பெயர்ந்த மண்ணில் 26 தமிழ் பெண்கள் எழுதிய தொகுப்பு ஒன்றும் வெளிவரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இச்சிறுகதைத் தொகுப்பில், பூமிகா அன்புதாசன், மாலினி அரவிந்தன், சன்ரா யூட் பாலேஸ்வரன், குலமணி பிரான்சிஸ், சசிகலா ஜீவானந்தன், மணிமேகலை கைலவாசன், பத்மா கரு, சுந்ரீஸ்வரி காசிப்பிள்ளை, கேதா கிருபராஜன், நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு, விஜயராணி மதியழகன், அர்ச்சனா மோகனகுமார், நவகீதா முருகண்டி, யோகநாயகி மூர்த்தி, கௌசல்யா பார்த்தீபன், கலைமகள் புஸ்பநாதன், விமலாதேவி புசுப்பநாதன், கஜலக்ஸி புவனேஸ்வரன், நஸ்வியா சற்குணராசா, சுமதி செல்வா, இளவரசி செந்தில்குமார், வாணிசிறி சிவபாதசுந்தரம், செல்வி சோதி, கமலவதனா சுந்தா, தருணி தியாகராசா, கவிநயா விஜயதர்சன் ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் சிறுகதைகளை எழுதிய இளைய தலைமுறையினர் கனடாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுப்பில் சிறுகதைகளை எழுதியவர்களுக்கு முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் வாசுகி நகுலராஜா, ஆசிரியை திருமதி விமலா பாலசுந்தரம் ஆகியோர் விருது வழங்கிக் கௌரவித்தனர். இதே போன்ற, எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் சிறுகதைப் பயிலரங்கில் பங்குபற்றிய 16 கனடிய தமிழ் பெண்களின் சிறுகதைகள் அடங்கிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் 2017 ஆம் ஆண்டு கனடா மிஸசாகாவில் உள்ள ‘சொப்கா பீல் குடும்ப மன்றத்தினர்’ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.