ஏனீட் – புத்தகம் 7 : இத்தாலியின் மண், போரின் விதை

நீண்ட கடல் பயணத்திற்குப் பிறகு அப்போதுதான் ஏனியஸ் மனதில் பெரிய நிம்மதி நிலவிக்கொண்டிருந்தது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தக் கடல் பிராந்தியமும் மிகவும் அமைதியாக இருந்தது. கப்பல்கள் மட்டும் கடலில் மெல்லிய அசைவிற்குத் தகுந்தவாறு ஆடிக் கொண்டே சென்றன.
தளத்தில் நின்று கொண்டு கடலின் அழகைத் தன் மகனுக்குக் காட்டிக்கொண்டிருந்தான் ஏனியஸ். மெலிதாக வீசிய காற்றில் பலவித பூக்களின் மணம் வந்தது. அவன் எதிர்பார்த்திருக்கும் இத்தாலி நாட்டின் கரை அருகிலிருக்கிறது என்பதை உணர்ந்த ஏனியஸ் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான். தான் ஸ்தாபிக்கப்போகும் தேசம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான். தன் தாய்க்கும் தந்தைக்கும் மனதிற்குள் நன்றி கூறினான்.
“இதுதான்… என் தந்தை காட்டிய தேசம். என் விதி நிறைவேறும் மண்.” என்று உரக்கக் கூவினான். நங்கூரத்தைப் பாய்ச்சுங்கள் என்று மாலுமிகளுக்கு உத்தரவிட்டான். கப்பல்கள் லாட்டியம் நாட்டின் கரையை தொட்டு நின்றன. .
ஏனியஸ் கரையில் காலடி வைத்தவுடன் தன்காலில் பட்ட மண்ணைக் கையில் எடுத்து முத்தமிட்டான். மண்ணைத் தொட்டு வணங்கினான்.
வீரர்கள் அனைவரும் அமைதியாக நின்றனர்.
கடல் பயணங்கள், புயல்கள், மரணங்கள்—அனைத்துக்கும் முடிவாக அந்தக் கடற்கரையில் ஒரு புதிய தொடக்கம் காத்திருந்தது.
அவர்கள் அந்தக் கடற்கரைக்கு வந்தபோது, அருகிலிருந்த காடுகளில் இருந்த ஒரு பெரிய மரத்தில் திடீரென ஒரு தீப்பொறி போல ஏதோ ஒரு வெளிச்சம் தோன்றியது. அது ஒரு நல்ல சகுனமாக ஏனியஸிற்குத் தோன்றியது.
அதே நேரத்தில், ஏனீயஸின் அங்கே பழுத்திருந்த பழங்களைப் பறித்து உண்டான். கையில் இருந்த ஒரு ஒரு அப்பத்தைத் தட்டாகப் பயன்படுத்திப் பழங்களைத் தின்றான்.
அப்போது அவன் சிரித்துக் கொண்டே , “அப்பா! நம் உணவுக்குத் தட்டாக வைத்த அப்பத்தையே நான் சாப்பிடுகிறேன் பார் ! என்று சொன்னான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட ஏனீயஸ் திடுக்கிட்டான்.
அவன் தந்தையின் குரல் நினைவுக்கு வந்தது: “மகனே, ஒருநாள் நீ உன் உணவுத் தட்டையே உண்ணும் நாளில், உன் பயணம் முடிவடையும்.” அப்போது அதன் பொருள் புரியவில்லை. இப்போது அவனுக்கு நன்றாகப் புரிந்தது.
ஏனீயஸ் எழுந்து நின்றான். “நண்பர்களே! நாம் தேடிய தேசமும் இந்த இடந்தான்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.
அதே நேரத்தில் அந்த லாட்டிஸ் தேசத்தை ஆண்ட மன்னன் லாட்டினஸ் தன் அரண்மனையில் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் அமைதியின் சின்னம் தெரிந்தது. அந்த அரண்மனை முழுதும் பண்டைய மரபுகளாலும் தெய்வீகச் சின்னங்களாலும் நிரம்பியிருந்தது.அப்போது ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்தது. அந்த தெய்வ வழிபாட்டுக் கூடத்தில் ஏற்றப்பட்டிருந்த தீப்பொறிகள் திடீரென உயர்ந்தன.
அதைவிட அதிசயம் என்னவென்றால் இளவரசி லவினியாவின் தலையிலும் தீப ஒளி எழுந்தது—ஆனால் அது அவள் அழகை அதிகரித்ததே தவிர அவளை ஒன்றும் செய்யவில்லை. அரண்மனை முழுவதும் ஒருவித அச்சம் பரவியது.
மன்னன் மனதில் “இது சாதாரண அடையாளம் அல்ல. இது விதியின் எச்சரிக்கை.” என்று உணர்ந்தான். மனதால் தன் தந்தையை வணங்கினான். அவர் அடிக்கடி சொல்லி வந்த செய்தி மீண்டும் குரல் அவன் செவியில் ஒலித்தது.
” உன் மகளை வெளிநாட்டவருக்கு மணமுடிக்க வேண்டும். அவனது சந்ததி உலகை ஆளும்.” அந்த நேரம் வரும்போது அவள் தலையில் தீப ஒளி தோன்றும்”
அதை அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போது ஏனியஸின் தூதுவர்கள் வந்திருப்பதாகக் காவலாளி தெரிவித்தான்.
மன்னன் அவர்களை உடனே அழைத்து வரும்படி உத்தரவிட்டான்.
ஏனியஸின் தூதுவர்கள் தங்கத்தினால் ஆன அணிகலன்களைப் பரிசாகக் கொண்டுவந்து கொடுத்து மன்னனை வணங்கினார்கள்.
“அரசர்க்கரசே நாங்கள் டிராய் நாட்டைச் சேர்ந்தவர்கள். கிரேக்கருடன் நடந்த போரில் எங்கள் நாடு வீழ்ந்தது. ஆனாலும் எங்கள் மானமும் வீரமும் அழியவில்லை. நாங்கள் புதிய தேசத்தைத் தேடி வருகிறோம். எங்கள் தலைவர் ஏனியஸ் உங்கள் அன்பை வேண்டி வந்திருக்கிறார் என்றார்கள்
மன்னன் மனம் உடனே சாந்தமடைந்தது. வந்திருந்தவர்களிடம் , “உங்கள் முகங்களில் விதியின் நிழலைக் காண்கிறேன்,”“ஏனீயஸ் எங்கே?” என்று கேட்டார்.
ஏனீயஸ் முன்னே வந்து பணிந்தான். அரசே! “நான் இங்கிருக்கிறேன். போர் இன்றி வாழ இடம் நாடி வந்திருக்கறேன்” என்று என்றும் மாறாத புன்முறுவலுடன் கூறினான்.
அப்போது “தந்தையே! என் தலையில் புதுவித தீப ஒளி தோன்றியிருக்கிறது . ஆனால் அது என்னை வணறும் செய்யவில்லை ” என்று கிளியைக் கொஞ்சும் குரலில் கூறிக் கொண்டு ஏனியஸிற்கும் தந்தைக்கும் நடுவில் வந்து நின்றாள் இளவரசி லிவினியா.
அவள் அழகு ஜொலிக்கும் அழகு. விண்ணிலிருந்து இறங்கிவந்த தேவதையைப் போல இருந்தாள். அவள் தலையின் தீப ஒளி ஏனியஸின் கண்களில் மின்னியது.
மன்னன் நிம்மதியாகச் சொன்னான். ” மகளே ! இந்த நேரத்தில் உன் தலையில் ஒளி உன் வருகை எல்லாம் விதியால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனக்கு வீதி மேல் உள்ள நம்பிக்கையைப் பற்றி உனக்குத் தெரியும். இன்று உனக்கு மிகவும் உகந்த நாள். உனக்கேற்ற மணாளன் உன்னைத் தேடி வந்த பொன்னாள்.”
தந்தையே! நான் ஒளியைப் பற்றிய பயத்தில் உங்களிடம் ஓடி வந்தால் நீங்கள் ஏதோ புதுக்கதை சொல்கிறீர்களே ” என்று புரியாத புதிருடன் நின்றாள் இளவரசி.
ஏனியஸ் அவள் அழகில் மயங்கிப் பேச வார்த்தையின்றி அமைதியாக நின்றான்.
மன்னன் ஏனியஸாய்ப் பார்த்து ” டிராய் நாட்டு இளவரசே! உங்களைப் பற்றி நான் நன்கு அறிவேன். உணமியில் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன். இதோ இவள் என் மகள் லவினியா! உங்களுக்கே உரியவள் . இது முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதியின் முடிச்சு” என்றார்.
ஏனியஸும் வலினியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
ஆனால் அதேசமயம் வானத்திலிருந்து ஜூனோ கடவுளும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் விதியை மாற்றி எழுதக் கூடியவள்.
“இல்லை!” என்று ஜூனோ கத்தினாள். “ட்ரோஜன்களுக்கு இத்தாலி கிடைக்கக் கூடாது! அப்படி ஒரு விதி இருந்தால் அதை நான் மாற்றுவேன்! இப்போதே அதற்கான வேலையைத் தொடங்கப் போகிறேன். ” என்று சொல்லிவிட்டு அலெக்டோ என்ற கீழுலகத்தின் துர்தேவதையை இருண்ட சக்தியை அழைத்தாள்
“அதோ பார்! லாட்டியம் நாட்டில் கொடூர அமைதி நிலவுகிறது. அந்த அமைதியைச் சிதைக்கவேண்டும் அமைதிக்குப் பதிலாக அங்குப் போரின் தீ கொழுந்துவிட்டு எரியவேண்டும். இதை எப்படி யார் மூலம் நிறைவேற்றுவாய் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் அது நடைபெறவேண்டும் இது என் ஆணை . ” என்று உத்தரவிட்டாள்.
நஞ்சு போன்ற மனத்தவள் அலெக்டோ! உடனே பாம்பாக மாறினாள்.
பாம்பு நேராக இளவரசியை மணமுடிக்கத் துடிக்கும் பக்கத்து நாட்டு இளவரசன் டர்னஸிடம் சென்று அவன் மார்பில் ஊர்ந்தது.அவன் மனதில் விஷத்தைச் சேர்த்தது. அவன் திடுக்கிட்டுக் கண்விழித்தான். “என்ன இது? என் உள்ளம் ஏன் இப்படிக் கொந்தளிக்கிறது?” என்று தடுமாறினான். “நீ திருமணம் செய்ய ஆசைப்பட்ட உன் மணமகளை ஒரு வெளிநாட்டவன் பறிக்க வருகிறான்! நீ சும்மா இருப்பாயா?” எழு! போரிட்டு அவனைக் கொன்றுவிடு” என்று உத்தரவிட்டது.
டர்னஸ் எழுந்தான். தன் வாளை எடுத்தான். ” எனக்கு லிவினிலியா இல்லையா? அப்படியானால் அவர்கள் என் வாளுக்குப் பதில் சொல்லட்டும் ! போர்! இதற்குப் பதில் போர் மட்டுமே!” என்று ஆவேசத்துடன் புறப்பட்டான்.
அலெக்டோ அடுத்ததாகச் சென்றது லிவினியாவின் அன்னை மகாராணியிடம். அவள் மனத்திலும் விஷத்தை விதைத்தாள். “உன் மகளை அந்நியனுக்கு கொடுக்க மன்னன் திட்டமிடுகிறான். அவளுக்கு டர்னஸ் தான் உரியவன்! மன்னனைத் தடுத்து நிறுத்து” என்று உபதேசம் செய்தது.
மகாராணியும் பித்துப்பிடித்தவளாக அரண்மனையில் ஓடினாள். “லவினியா எங்களுக்கே! ட்ரோஜன்கள் போகட்டும்!” என்று காட்டிக் கொண்டே மன்னன் இருக்குமிடம் விரைந்தாள்.
அலெக்டோ இத்துடன் நிற்கவில்லை. ஏனியஸின் மகன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது லாட்டினஸ் நாட்டின் செல்லப்பிராணியை—புனித மானை கொல்லும்படி அவன் அம்பைத் திசை திருப்பிவிட்டாள். அந்த ஒரு அம்பு , முழு நாட்டையும் பகைமைத் தீயில் தள்ளியது.
எங்கு பார்த்தாலும் “ட்ரோஜன்கள் நம் புனித மானைக் கொன்றார்கள்! அவர்களைப் பழிவாங்கு!”
வாட்கள் இழுக்கப்பட்டன. முதல் இரத்தம் சிந்தியது. லாட்டினஸ் மன்னன் வருந்தினான். தன்னை மீறி காரியம் நடக்க இருக்கிறது. இதுவும் விதிப் பயனே என்று உணர்ந்தான். எது நடக்குமோ அது நடக்கட்டும் இது விதியின் போர், என்னால் தடுக்க முடியாது.”என்று இருந்தான்.
டர்னஸ் தலைமை தாங்க லாட்டினஸ் நாட்டின் படைகள் எழுந்தன. ” டிரோஜன்களை நம் நாட்டைவிட்டுத் துரத்துவோம்” என்ற முழக்கம் “ஏனீயஸ்!” உனக்கு எங்கள் நாட்டிம இடமில்லை ” என்று கொக்கரித்தான் டர்னஸ்.
ஏனீயஸ் தூரத்தில் நின்று இதையெல்லாம் பார்த்தான்.
அவன் மெதுவாகச் சொன்னான், “நான் போரை நாடவில்லை.ஆனால் விதியை விலக்க முடியாது.”
வானம் இருண்டது. பூமி குமுறியது. போர் தொடங்கியது.

