சங்கீத சீசன் ஸ்பெஷல்

25, 30 வருடங்களுக்கு முன்னதாக சங்கீத சீசன் என்றாலே பலவிதப் பத்திரிகைகள் பல்வேறு செய்திகள் மற்றும் தகவல்களுடன் வாசகர்களை மயக்க வைக்கும். தினமணி பத்திரிகை, இசைச் சிறப்பிதழ் என்று வாராவாரம் சங்கீத சீசனில் பல்வேறு அற்புத தகவல்களைக் கொண்டு வெளிவந்தது. பலதரப்பட்ட கலைஞர்கள் மற்றும் சுவைஞர்கள் அனுபவங்கள் என இசை ரசிகர்களுக்கு இந்தப் பத்திரிகைகள் ஒரு நல்ல கச்சேரியைக் கேட்ட அனுபவத்தைத் தந்திருக்கின்றன.
வேடந்தாங்கலுக்கு எப்படி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் குறிப்பிட்ட மாதத்தில் வந்து செல்கின்றதோ அதேபோல டிசம்பர் /ஜனவரி மாதங்களில் சென்னையில் எல்லா இடத்தில் இருந்தும் சங்கீத கலைஞர்கள் மற்றும் சங்கீதப் பிரியர்கள் கூடுவார்கள் என்பதால் இதைச் சங்கீத மாதம் என்று கூறி விடலாம்.
பல இதழ்களில் படித்த, பிடித்த சில சுவையான தகவல்களை இசை விருந்தாக, ரசிகர்களுக்குத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாயால் புல்லாங்குழல்
சங்கீத வரலாற்றில் தியாகராஜர், தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி இவர்களைப் பற்றிய தகவல்கள் இன்றைக்கு இருக்கின்றன. ஆனால் அவர்கள் காலத்திற்கு முன்பும் முகம் தெரியாத பல கலைஞர்கள் இருந்து இருக்கிறார்கள். தஞ்சை மராட்டிய மன்னர் கால ஆவணங்களைப் படித்தால் பல சமாச்சாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
நாம் வாயால் புல்லாங்குழல் வாசிப்பதைக் கேட்கிறோம் ,1829 ஆம் ஆண்டில் சாஸ்திரி என்றவர் மூக்கால் புல்லாங்குழல் வாசித்தவர் என்றும் மராட்டி ஆவணத்தில் அவருக்கு இனாம் ரூபாய் 20 என்று செலவுக் கணக்கு எழுதப்பட்டிருக்கின்றது. பல கலைஞர்கள் அரசாங்கப் பணியாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் இசை ஆய்வுகள் செய்த அவர்களுக்கு சம்பளம் மற்றும் மானியங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றது என்றும் தகவல்கள் உள்ளன.
சங்கீத நால்வர்
பரதநாட்டியத்திற்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் இணையற்ற சேவை செய்த தஞ்சை நால்வர்களான பொன்னையா, சின்னையா ,சிவானந்தம் ,வடிவேலு இவர்களுக்கும் அன்றைய அரசு அதிகாரிகள் தொல்லை கொடுத்து அவர்களை மன்னருக்கு அருகில் கொண்டு செல்ல முடியாதபடி செய்ததால்தான் அவர்கள் தஞ்சாவூரை விட்டு நீங்கி திருவனந்தபுரத்துக்கு சென்று மன்னர் ஸ்வாதித்திருநாளின் சமஸ்தானத்தில் இருந்தார்கள் என்ற தகவலும் உண்டு.
சங்கீத கலாநிதி மதுரை சோமு
கர்நாடக இசையில், பல்வேறு இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்பதைச் செவியாறுதல் என்பார்கள். சங்கீத கலாநிதி மதுரை சோமுவிடம் இந்தப் பயிற்சி இயல்பாகவே இருந்தது. மகாராஜபுரம் விஸ்வனாதையர், முசிறி சுப்பிரமணிய அய்யர், GNB, அரியக்குடி, ராஜரத்தினம் பிள்ளை என்று எல்லா கச்சேரிகளையும் , இந்துஸ்தானிப் பாடகர் படேல் குலாம் அலிகான் எனப் பலரின் கச்சேரிகளைக் கேட்டதுடன், சித்தூர் சுப்ரமணியபிள்ளையிடம் சிஷயராகவும் இருந்தார். இந்த மேதை மட்டும்தான், தோடி என்று பாடிக் கைத்தட்டல் விழும்போது இது ராஜரத்தினம்பிள்ளைஉடையது என்பார். சிந்து பைரவி என்று வியக்கும் போது இது படேல் குலாம் அவர்களின் சங்கதி என்பார். இப்படி, ரசிகனை தன்னுடன் பயணிக்கவைக்கும் எளிமை அவரிடம் இருந்தது. இவரின் சிவரஞ்சனி, சுப பந்துவராளி ராக ஆலாபனையில் கண்களில் நீருடன் ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன்.
எழுத்தாளரின் தந்தையான சங்கீதப் பேராசிரியர்
நியூயார்க் புறப்பட்ட விமானத்தில் அவர் வீணையுடன் ஏறிய போது விமானத்தில் இருந்த எல்லா பயணிகளும் பணியாளர்களின் கண்களும் அவர் மேல் மொய்த்தது.
மேல்நாட்டு வாத்தியங்களையே பார்த்த கண்களுக்கு வீணையின் அமைப்பும் வேலைப்பாடுகளும் கவர்ச்சியாக இருந்தது.ஒரு மணி நேர இடைவெளிக்குப் பிறகு, தான் செல்லும் விமானத்தில் அவர் ஏற வேண்டும் என்பதால் பயணிகள் ஓய்வறையில் தங்கியிருந்தார்.
விமான நிலைய அதிகாரி ஒருவர் ,அவரை அழைத்து நீங்கள் உங்கள் வாத்தியத்துடன் சௌகர்யமாக உட்காருங்கள் என்று ஒரு இடம் கொடுத்ததுடன், விமானப் பணிப்பெண்கள் விமான ஓட்டிகள் என எல்லோரும் சேர்ந்து அவரிடம் உங்கள் வாத்தியத்தை பார்த்தால் வியப்பாக இருக்கிறது எங்களுக்கு வாசித்துக் காட்டுங்கள் என்று சொல்ல, உங்களுக்கு வாசிப்பதைவிட வேறு என்ன வேலை என்று வாசித்து ரசிகர்கள் பட்டாளத்தை மகிழ வைத்தவர் இசை மேதை டாக்டர் ராமநாதன் அவர்கள். அமெரிக்காவின் கனெக்டிகட் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதுடன், பேராசிரியராகவும் பணிபுரிந்தவர் டாக்டர் ராமநாதன். மதுரை சத்குரு சங்கீத சமாஜத்திலும் தலைவராக இருந்து இசைபப்பணி ஆற்றியவர்கள். .
அவரது மகள்தான் பிரபல வீணைக் கலைஞரும், எழுத்தாளருமான மறைந்த கீதா பென்னெட் . உன்னிகிருஷ்ணன், சௌம்யா, சீதா நாராயணன், வசுமதி நாகராஜன், சாவித்திரி சத்தியமூர்த்தி என அவரின் சீடர்கள் பட்டியல் ரொம்ப நீளம்.
