தமிழ்வாணன் 100
தமிழ்வாணன் இயற்பெயர் ராமநாதன். கறுப்புக் கண்ணாடி, தொப்பி இவரது அடையாளம். குமுதம் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை. இவரை கல்கண்டு இதழின் ஆசிரியராக்கினார். பக்கம் தோறும் ஏராளமான செய்திகளை நறுக்குத் தெரிந்தாற்போல் அளித்து தகவல் களஞ்சியமாக கல்கண்டை உருவாக்கி ஏராளமான வாசகர்களைக் கவர்ந்தார்.
‘துணிவே துணை’ இவரது தாரக மந்திரம். ‘மாஸ்ட் ஆப் ஆல் சப்ஜெக்ட்’ என்று பெயர் பெற்றார். தொடாத துறைகளே என்று சொல்லும் அளவுக்குபுத்தகங்களை எழுதிக் குவித்தார்..’மர்மக் கதை மன்னன்’ என்ற அடை மொழிக்குச் சொந்தக்காரர். இவரது சங்கர்லால் கதாபாத்திரம் நிஜம் என்று நம்பியவர்கள் ஏராளம்..தன்னையே கதாபாத்திரமாக்கி அவர் எழுதிய துப்பறியும் கதைகளை வாசிக்க இன்றும் வாசகர்கள் உண்டு.
ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து கொண்டு பிற பத்திரிகைகளில் தொடர் எழுதுவது அரிது.ஆனந்த விகடனில் ‘மணிமொழி என்னை மறந்துவிடு’ நாவலையும், தினமணி கதிரில் ‘ப்ரூச்’ என்ற நாவலையும், அமுதசுரபியில் ‘உன் மனம் காயோ பழமோ’ என்ற நாவலையும் தமிழ்வாணன் எழுதினார். மூன்றும் பரவலாக வாசகர்களால் பாராட்டப்பட்ட படைப்பு..கதாபாத்திரங்களுக்கு அழகிய தமிழ்ப் பெயர் சூட்டுவது இவரது தனிச் சிறப்பு.சினிமாத் துறையையும் அவர் தொடாமல் இல்லை.
தமிழ்வாணன் 1926,மே 22-இல் பிறந்தார். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு விழா ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தரையில் இறங்கும் விமானங்கள் 50
ஆனந்த விகடனில் 1975-76-களில் வெளியான நாவல் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’..திருமணத்துக்குப் பின் சில ஆண்டுகள் எழுதாமல் இருந்த எழுத்தாளர் இந்துமதியை அவரது அண்ணாநகர் வீட்டில் தேடிப்பிடித்து மணியன் மீண்டும் எழுத வைத்த தொடர் இது. ‘கலை ததும்பி நிற்கும் ஜீவனுள்ள நாவல்’ என்று முதல் பதிப்பில் அவர் பாராட்டுரை வழங்கியுள்ளார்.
பல பதிப்புகள் கண்ட படைப்பு. 50 ஆண்டுகளுக்குப் பிறகு கிளாஸிக் எடிஷனாக 2026 ஜனவரியில் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ளது. ஜெயராஜ் வரைந்த ஓவியங்கள் தங்களை வண்ணமயமாக்கிக் கொண்டு வந்திருப்பது இப் பதிப்பின் கூடுதல் சுவாரஸ்யம்.,.
வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்ற ரகசியத்தை ருக்மணி கதாபாத்திரம் வழியாகச் சொல்கிறார் நாவலாசிரியர்..’நமக்கு யார் கூடவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும் ‘என்பதே அந்த ரகசியம்.
வேலை தேடி அலையும் இளைஞன் விஸ்வம், நடுத்தரக் குடும்பம் என்பதால் சிறுவயதிலேயே வேலைக்கு செல்லும் அண்ணா பரசு, அவனது மனைவி ருக்மணி, விஸ்வத்தின் காதலி ஜமுனா அனைவரும் உயிரோவியமாய் மீண்டும் நம்முன் நடமாடுகின்றனர்.ருக்மணியின் அன்பும் பொறுமையும் குடும்பத்தை எப்படி வழி நடத்துகிறது என்பதே கதை.
‘நான் எதையுமே கற்பனையாக எழுதுவதில்லை.என் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நிஜமானவர்கள்’ என்கிறார் இந்துமதி. தரையில் இறங்கும் விமானங்கள் ராஜன் சர்மா இயக்கத்தில் தூர்தர்ஷனில் 13 வாரத் தொடராக ஒளிபரப்பானது. ரகுவரன், பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நடித்தனர்.
‘ஒவ்வொரு தலைமுறைக்கும் ஆவணமாய் நினைத்த போது எடுத்துப் பார்க்கும் பாடப் புத்தகத்தில் வைத்த மயிலிறகாய் ஒரு படைப்பு இருக்கும். ஒரு தலைமுறைக்கு அது தரையில் இறங்கும் விமானமாகவும் இருக்கலாம். இருக்கிறது. இருக்கும்’- அணிந்துரையில் இந்துமதியின் சக தோழரும் எழுத்தாளருமான மாலன் கூறியுள்ள வாசகம் மிகையல்ல.
கிருஷ்ணா டாவின்சி
குமுதம்.காம் இதழின் முதல் பொறுப்பாசிரியர் கிருஷ்ணா டாவின்சி. இயற்பெயர் வெங்கட கிருஷ்ணன். ரயில்வேயில் பயணச்சீட்டு ஆய்வாளராக இருந்த இவரது முதல் தொடர் கதை ‘மாயக் குதிரை’. கல்கி இதழில் வெளியானது. மனித நேய மிக்கவர். எப்போதும் சிரித்த முகம். கருத்துச் செறிவுள்ள படைப்புகளைத் தந்த இவர் சிறந்த பாடகரும் கூட. கிடார் வாசிப்பார்.
திரைப்படத் துறையிலும் கால் பதித்து கவனம் பெற்றவர்.’பூவுலகின் கடைசிக் காலம்’ இவரது சிறந்த படைப்புகளில் ஒன்று. 28 நாவல்கள் எழுதியுள்ளார். எலிக்காய்ச்சல் நோய்க்குப் பலியானார். மருத்துவமனையில் இருந்த போது அவர் எழுதிய படைப்பு ‘இசையானது’. கிருஷ்ணா டாவின்சியின் கடைசி நூலான அது அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் வெளியானது.
வைக்கம் முகம்மது பஷீர்
உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான மலையாள எழுத்தாளர் பஷீர்.மென்மையை உறுதிபடுத்த கடுமையை ஒரு போதும் மறைக்காதவர்.களங்கமே இல்லாத உலகத்தை நேசிக்கும் எழுத்தாளர் அல்ல அவர்.சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி தீமை என்ற புரிதல் கொண்டவர்
சுதந்திரப் போராட்ட வீரரான இவர் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். பகத்சிங் பாணியில் தீவிரவாத அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார். இவர் நடத்திய வார இதழ் ‘உஜ்ஜீவனம்.’ அரசு அமைப்புகளின் மேல் தனக்கிருந்த கோபத்தை கொட்டித் தீர்க்க’பெளரநாதம்’ என்ற வாரப் பத்திரிகையும் தொடங்கினார்.இந்தியா, ஆப்பிரிக்கா, அரேபியாவில் சில காலம் தேசாந்திரியாகவும் சுற்றினார்
இளம் பருவக் காதலை நுட்பமாகப் பதிவு செய்த ‘பால்யகால சகி’ நாவல் மூலம் சிறந்த படைப்பாளியாக அறியப்பட்டார். அடுத்த ஆறுஆண்டுகள் எதுவும் எழுதவவில்லை. நரம்புத் தளர்ச்சிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது இவர் எழுதிய ‘பாத்துமாவின் ஆடு’ முற்றிலும் சுயசரிதை.’சப்தங்கள்’ குறுநாவல் ஒரு தலை சிறந்த படைப்பு.
வறுமைச் சூழலில் இருந்தாலும் பழைய குடும்பப் பெறுமைகளைப் பேசிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’. ‘மதில்கள்’ சிறை வாழ்க்கையைப் பற்றிய ஆகச் சிறந்த கதை
.கடைசி காலத்தில் பேப்பூருக்கு குடிபெயர்ந்த அவர் ‘பேப்பூர் சுல்தான்’ என்று பரவலாக அழைக்கப்பட்டார்.’வெளிச்சத்தினு எந்தொரு வெளிச்சம்’ (வெளிச்சம் எவ்வளவு வெளிச்சமாக இருக்கிறது )-இது பஷீரின் தனித்துவ வாசகம்.
ரா.கணபதி
நைஷ்டிக பிரமசாரியாய் வாழ்ந்து மறைந்தவர் ஆன்மிக எழுத்தாளர் ரா.கணபதி.தமிழ்,ஆங்கிலம் சம்ஸ்கிருத மொழிகளில் புலமை மிக்கவர். .’ஜய ஜய சங்கரா’ தொடரை 1962-இல் கல்கியில் எழுதினார். மணியம் ஓவியத்துடன் வந்த இத் தொடர் பரவலாக வாசகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
வேதாந்தம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் ஆற்றல் அவருக்கு இளமையிலேயே இருந்தது. ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர், மீரா போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
காஞ்சி மகா பெரியவரின் அணுக்கத் தொண்டர்.’தெய்வத்தின் குர’ல் (7 பாகங்கள்) நூலை தொகுத்தளித்தவர். பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா வாழ்க்கை வரலாற்றை ‘ஸ்வாமி’ என்ற பெயரில் எழுதினார். ரமணர், யோகி ராம்சுரத்குமார் பற்றிய அவரது படைப்புகளும் சிறப்பு
மலர் மன்னன்
பிரபல தமிழ் இதழ்களில் 1960-80-களில் அடிக்கடி காணப்பட்ட பெயர் மலர் மன்னன். இயற்பெயர் சிவராம கிருஷ்ண அரவி ந்தன். சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர் நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் என பல்வேறு தளங்களில் இவரது படைப்புகள் வெளியாகின. ஜார்க்கண்ட் பகுதியில் 1870-1900 காலக்கட்டத்தில் வாழ்ந்த பிர்ஸா முண்டா என்ற வனவாசியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவலை தீபம் இலக்கிய இதழில் மலர் மன்னன் எழுதினார்.’கண் விழித்த கானகம்’ என்ற பெயரில் நூல் வடிவம் பெற்ற அந்த நாவல் பரவலாகப் பேசப்பட்ட படைப்பு.
ஆனந்த விகடனில் ‘மெல்லத் திறக்கும் மனக்கதவு’ என்ற வெகுஜனத் தொடரை எழுதி புகழ்பெற்றார்.மகாகவி பாரதியாரின் வாழ்க்கை சம்பவங்களை சிறுகதைகளாக எழுதினார்.’நாயகன் பாரதி’ என்ற தலைப்பில் அக்கதைகள் நூல் வடிவம் பெற்றது. தமிழ் இலக்கியம், பண்பாட்டிற்கான காலாண்டு இதழை 1/4 என்ற பெயரில் சிறிது காலம் நடத்தி கவனம் பெற்றார். மலர் மன்னன் ஒருகட்டத்தில் கதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டார்.
பின்னர் சமூகப் பிரச்னைகள், கலைகள், தத்துவம், பண்பாடு, அரசியல், ஆன்மிகம் தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார். சிறந்த மொழிபெயர்ப்பாளரான மலர் மன்னன் பல நூல்களை தமிழுக்கு கொண்டுவந்துள்ளார்.
கல்வியாளர் மறைந்த எஸ்.வி.சிட்டிபாபு பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ஆற்றிய பேருரைகளை நூல் வடிவில் தொகுத்தார்.’ இந்தியாவில் ‘உயர் கல்வி:இடர்பாடுகளும்கட்டுப்பாடுகளும்’ என்ற தலைப்பில் வெளியான அப் புத்தகம் கல்வியாளர்களிடம் மிகுந்த கவனம் பெற்றது .ஆரிய சமாஜத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இறுதிக் காலத்தில் துறவறம் மேற்கொண்டு மறைந்தார்.
ப.சிங்காரம்
தமிழின் முதல் புலம்பெயர் நாவலாசிரியர்.இந்தோனேசியா, மலேசியாவில் தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கழிந்தவர். இளம் மனைவியை குழந்தையுடன் தலைப் பிரசவத்தில் இழந்தவர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியா திரும்பி மதுரையில் வசித்தார். தினத் தந்தி செய்திப் பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.
இரண்டு நாவல்களை மட்டுமே சிங்காரம் எழுதியுள்ளார். இருப்பினும் சிறந்த புதின எழுத்தாளராக இன்றும் கொண்டாடப் படுகிறார்.’ கடலுக்கு அப்பால் நாவல்’ கலைமகள் புதினப் போட்டியில் முதல் பரிசு வென்றது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தின் நெருக்கடி நிலையை மையமாக வைத்து ஓர் அற்புதமான காதலை இணைத்து எழுதப்பட்ட நாவல் இது.’மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை’ என்று நாவல் முடியும்
சிங்காரத்தின் இரண்டாவது நாவல் ‘புயலிலே ஒரு தோணி’. இரண்டாம் உலகப் போரையொட்டி மலேசியா, இந்தோனேசியா பிரதேசத்தில் நிகழ்வதான படைப்பு. ஆகச் சிறந்த நாவல் என்று பல்வேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்றுள்ளது. நாவலை புத்தகமாக்க வெளியிட பட்ட வலி சிங்காரத்தை மீணடு்ம் இலக்கியம் படைக்கவே விடாது செய்து விட்டது. மீண்டும் எழுதுங்கள் என்ற கோரிக்கையை அவர் நிராகரிதது விட்டார். வாழ்க்கையின் பிற்பகுதியை பெரும்பாலும் தனிமையில் கழித்தார்,1997-ம் ஆண்டு தனது அன்றைய சேமிப்பு ஏழரை லட்சத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நன்கொடையாக அளித்து விட்டார்.
