சிரிப்பு

தீபாவிற்கு அடிக்கடி காரணமில்லாமலே சிரிப்பு வரும். சின்ன வயதிலிருந்து இன்னிக்கி வரை எப்போதும் சிரிப்பு தான். தூக்கத்திலும் சிரிப்பாள். பக பக வென்று வாய் விட்டு சிரிக்கும் சிரிப்பு அவளுடைய ஸ்பெஷாலிட்டி. அம்மா அடிக்கடி கத்துவாள் – அவுட்டுச் சிரிப்பு சிரிக்காதேடி!
நாளைக்கு அவளைப் பொண்ணு பார்க்க வருகிறார்கள். வரப்போகிறவன் எப்படி இருப்பான் என்று எண்ணி அதைமட்டும் மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வாள்.
வந்த மாப்பிள்ளை கத்திரிக்காய்க்கு கையும் காலும் வைச்சது மாதிரி இருந்தான். குபுக்கென்று சிரிப்பு வந்தது அவளுக்கு. ’ பெரிய எடம். சிரிச்சுக் கெடுத்திடாதே..“ அம்மா சிடுசிடுத்தாள்.
"எனக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு’ என்று சொல்லி அவளைப் பார்த்து மெல்ல சிரித்தான்.அந்த கத்திரிக்காய் மாப்பிள்ளை!
தீபாவின் சிரிப்பு நின்றது. அதற்குப் பிறகு அவளால் சிரிக்கவே முடிவதில்லை – ஆயுசு முழுவதும்.

