எது கவிதை
கற்கள் குவிந்தால் கட்டடம் ஆகுமா?
கற்குவியல் தான் ஆகும் !
சொற்கள் குவிந்தால் கவிதை ஆகுமா?
சொற்குவியல் தான் ஆகும் !
கற்களை வரிசையில் அடுக்கி வைத்து
இடைஇடை சாந்தினைப் பூசி வைத்து
சுண்ணம் அடித்து வண்ணம் பூசினால்
கற்குவியல் கோவிலாகும் !
சொற்களை வரிசையில் அடுக்கி வைத்து
இடை இடை சந்தத்தைப் பூசி வைத்து
தாள மென்னும் சுண்ணம் தடவி
நய மென்னும் வண்ணம் தீட்டி
அணி என்னும் அணிகலன் பூட்டி
எதுகை மோனை மினுமினுப்பு ஊட்டி
கட்டி வைத்தால் பிறப்பது கவிதை ஆகும் !
எழுத்தும் சொல்லும் யாப்பசையும் அணியும்
அழுத்தி வந்து அழகு காட்டினாலும்
கருத்து இன்றி கவிதை இருந்தால்
கழுத்து இல்லா உடல் அது ! பயனிலை ! பயனிலை !
தேவன் உள்ள பெட்டகம் கோவில் என்ற கட்டடம்
ஜீவன் உள்ள சொற்றொடர் கவிதை என்ற சித்திரம்
விதை இல்லா கவிதை சிதைப் பட்டு போகும்
கருத்து உள்ள கவிதை உறுத்து வந்து ஊட்டும் !!

