பாரதியார் “மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்று சொன்னார் என்று பலர் சொல்லித் திரிவார்கள்! எவ்வளவு தவறான வார்த்தை அவை! மக்கள் எப்படித் தவறான செய்தியைப் பரப்புகிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
அவர் சொன்னது இது தான்:
‘மெல்லத் தமிழினிச் சாகும்; மேற்கு மொழிகள் உலகில் ஓங்கும் ’ என்று மடையர்கள் அறிவற்றவர்கள் கூறித்திரிவர். அந்த சொல்லத் தகாத சொல்லைப் பொய்ப்பித்து எட்டுத் திசையெங்கும் சென்று கலைவளத்தைத் தமிழகத்திற்குக் கொண்டு வாருங்கள். கடவுள் ஆசியாலும் புலவர் முயற்சியாலும் இந்தப் பெரும் பழி தீரும். தமிழன்னை உலகத்தில் என்றும்கோலோச்சி இருப்பாள் !
என்பதே பாரதியாரின் கருத்து!
அவர் எழுதிய முழு பாடல் இது தான்:
”“கன்னிப் பருவத்திலே அந்நாள் – என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு – பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!
தந்தை அருள் வலியாலும் – முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் – என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!
"புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள் வலியாலும் – இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."
பக்கம் 3/25