ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்

கடைசியில் ஒரு டேபிள் காலியாக இருந்தது. நாலு பேரும் உட்கார்ந்து சாண்ட்விச், தோசை, காபி எல்லாம் ஆர்டர் செய்தார்கள். மார்க்கெட்டுக்கு மக்கள் வரத் தொடங்கி விட்டனர். “ அங்கே பார் மேரி ! நம்ம சிஷ்யன் எப்படிக் கலக்குகிறான் பார் ! நல்லா கவனித்துப் பார்த்தால் நம்ம பாடத்தில் கடைசி ஆயுதம் தெரியும் ! அவளை உற்றுக் கவனிக்கத் தூண்டினான் டோனி. மேரி ஒவ்வொரு தொழிலாளியையும், இப்படி அப்படி பார்த்துக் கொண்டே இருந்தாள். என்னவெல்லாம் வித்தை காட்டுகிறார்கள் என்று அதிசயித்துப் போனாள். இப்படி யாரும் ஜாலியா, குஷியா, சந்தோஷமா வியாபாரம் செய்து அவள் பார்த்ததே இல்லை. இடைக்கிடையே அவர்கள் அடுத்த ஆளை எப்படிக் கவரலாம் என்று யோசிப்பதும் புரிகிறது. பிரமிப்பாக இருந்தது மேரிக்கு!

முந்தா நாள் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனது ஞாபகம் வந்தது மேரிக்கு . ராத்திரி நேரம். குழந்தைகள் கண்ணில் தூக்கம் கப்பிக் கொண்டு வந்த நேரம். கவுண்டரில் சாமான்களைக் கொடுத்து விட்டு பில் போடுவதற்காகக் காத்துக் கொண்டு இருந்தாள். இருந்தது இரண்டே இரண்டு வாடிக்கையாளர்கள் தான். ஆனால் அந்த கேஷியர்களுக்குத் தான் எவ்வளவு அலட்சியம் ? குழந்தைகளுடன் நிற்கிறாளே, சீக்கிரம் முடிப்போம் என்று தோண வேண்டாம் ? கேஷில் இருக்கும் இரண்டு பெண்களும் ஊர்க் கதை உலகக் கதை எல்லாம் பேசிக் கொண்டே இருந்தார்கள். மேரிக்குப் பொறுமையே போய் விட்டது. குழந்தைகள் வேற “ சீக்கிரம் வாம்மா “ என்று சிணுங்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த மாதிரி நிச்சயம் இங்கே நடக்காது. இந்த டோனியின் ஆட்கள் வேறு உலகத்திற்கு மனசாலும் போக மாட்டார்கள். அவர்களின் எண்ணம், செயல் எல்லாம் எப்போதும் வாடிக்கையாளருடன் ஒண்ணா இருக்கும் . ஓ ……அது .தான்…..
“ மேரி ! நீ கண்டு பிடிச்சுட்டே ! எனக்குத் தெரியும் “ என்று சின்னப் பையன் மாதிரி கத்தினான் டோனி. “ இங்க பாருங்க உங்க அம்மாவை ! குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட் மேனேஜரை !” அவளைக் கிண்டல் செய்ய குழந்தைகள் கும்மாளமிட்டுச் சிரித்தார்கள்.
“ மேரி ! நானும் போன வாரம் ஒரு பெரிய கடைக்குப் போயிருந்தேன். நான் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வேலை செய்யும் மக்களைப் பார்த்தேன். அவர்கள் ஜாலியாகத் தான் இருந்தார்கள். சந்தோஷம் ! குஷி ! அரட்டை எல்லாம் இருந்தது. ஆனால் அவை எல்லாம் அவர்களுக்குள்ளே தான் இருந்தது. நம்மைப் போன்ற வாடிக்கையாளர்களை எல்லாம் ஒரு அந்நியனைப் போலத்தான் பார்த்தார்கள். அவங்க சந்தோஷத்தை நம் கூடப் பகிர்ந்து கொண்டார்கள் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? அவங்க கிட்டே எல்லா சமாசாரமும் இருந்தது. ஒண்ணே ஒண்ணைத் தவிர. அவர்கள் தங்கள் உலகத்தில் இருந்தார்கள். வாடிக்கையாளர் உலகத்துக்கு வரவில்லை . ‘ நீ வேறு நான் வேறு ‘ என்று இருந்தார்கள். ஒண்ணா இருக்கக் கத்துக் கொள்ளவில்லை. அந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
மேரி நோட்டுப் புத்தகத்தை எடுத்து ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் “ என்று எழுதிக் கொண்டாள்.
டோனி கிளம்ப ஆரம்பித்தான் “ மேரி நான் மீனங்காடிக்குப் போகணும் ! என் தோழர்கள் எல்லோரும் என் வேலையையும் சேர்த்துச் செய்கிறார்கள். அதிக நேரம் அப்படிச் செய்ய வைப்பது நியாயமில்லை. போவதுக்கு முன்னாடி கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்ல விரும்புகிறேன் “ பெரிய பீடிகை போட்டு நிறுத்தினான் டோனி.
“ சொல்லு டோனி ! கேட்க ஆவலாயிருக்கேன் !’
“ உன் ஆபீஸில் எப்படி இந்த ஐடியாக்களை எல்லாம் எப்படி செயல் படுத்தப் போறேன்னு புரியலை. ஒண்ணு மட்டும் முக்கியம் ! உன் மக்கள் கிட்டே இதைப் பற்றி பாடம் எடுப்பதை விட அவர்களுக்கு இதை நேரடியாகப் புரிய வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று தோணுது. ! ஜோ சொன்ன மாதிரி அவர்களையும் இங்கு வந்து பார்த்துத் தெரிஞ்சிக்க வைத்தால் என்ன?”
“ நீயும் ஜோவும் சரியான ஜோடி ! எப்படி இதை ஆரம்பிக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு அனுபவ பூர்வமா அவர்களுக்குப் புரிய வைக்கிறது தான் நல்ல வழி என்று முதலிலேயே தோணவில்லை.! அதுதான் சிறந்த வழி டோனி ! ரொம்ப ரொம்ப நன்றி டோனி ! இந்த நாளை நான் ஆயுசுக்கும் மறக்க முடியாது. இப்படி இந்த நாளை ‘ அந்த நாள் நெஞ்சிலே ‘ என்று பாடும் அளவிற்கு மாற்றியதற்கு எப்படி நன்றி சொல்வது ? “
வீடு திரும்ப வரும் வரைக்கும் ஜோ பேசிக்கொண்டே வந்தான். இவ்வளவு குஷியாக இருந்து அவனைப் பார்த்ததே இல்லை. ஜேனும் தான். மேரியும் அன்றைக்கு முழுவதும் குழந்தைகளுடன் அவர்கள் உலகத்தில் ‘ ஒண்ணா ‘ இருந்தாள் ! டோனியைப் பற்றி நினைத்தாள். எங்கோ பாடல் ஒலித்தது. ‘ உன்னை நான் சந்தித்தேன் ! நீ ஆயிரத்தில் ஒருவன் “ சரி ! சரி ! திங்கட்கிழமை வரட்டும் பார்க்கலாம் என்று முடிவு செய்தாள் மேரி. !

ஞாயிறு மதியம்
மேரி தனி உலகத்திற்குச் செல்லும் நேரம். ஞாயிறு மதியம் வந்தது. ஆவலோடு நோட்டுப் புத்தகத்தை எடுத்து குறிப்புக்களை விரிவு படுத்த ஆரம்பித்தாள்.!
உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்:-

இது நல்ல விதமாக ஆரம்பமாகி விட்டது. அந்த ‘ மெனு ஐடியா ‘ – இன்றைய – ஸ்பெஷல் – மிகவும் நன்றாகவே வந்திருந்தது. வெற்றியின் முதல் படி என்று சொல்லலாமா ? இது தான் முக்கியமான படி. இந்த எண்ணம் இல்லாமல் மற்றது எல்லாம் இருந்தும் பிரயோஜனமில்லை. இந்த எண்ணத்தை மேலும் வளர்க்கணும்.! இன்னும் நல்லா எல்லாருக்கும் புரியும்படி செய்யணும்.
ஆட்டம் கொண்டாட்டம்:-

இந்த மீனங்காடி பெரியவர்களின் விளையாட்டு மைதானம் போல் இருக்கிறது. இந்தத் தொழிலாளிகள் இப்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கும்போது நமது நிதிக் கம்பெனியிலும் இதைக் கண்டிப்பாகக் கொண்டு வரலாம்.!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே :-

வாடிக்கையாளர் எல்லோரையும் ஜாலியா இருக்கிறபடி செய்ய வேண்டும். பழைய பாஸ் ஜோசப் மாதிரி இருக்கக் கூடாது. அவர் மற்றவர் கிட்டே பேசும் போதும் ஏதோ டேப்பில் ரிகார்ட் செய்வது போலப் பேசுவாரே தவிர மனிதர் கூடப் பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பார் ! அப்படி இருக்கக் கூடாது. .
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் :-

இந்த மீனங்காடி தொழிலாளர்கள் எப்படி வாடிக்கையாளர் கூட ஒன்றிப் போய் விடுகிறார்கள் ? தங்களோட தனி உலகத்தில் இருப்பதே இல்லை.! அப்படியே வாடிக்கையாளர் மனதில் ஊடுருவி நிற்கிறார்கள். அவர்கள் கூட ரொம்ப நாள் பழகின சிநேகிதன் போலப் பேசுகிறார்கள்! பழகுகிறார்கள் ! இதை விட வேறு என்ன வேண்டும் ?
(தொடரும்)
பக்கம் 21/25
