
சூரிய ஒளி மின்சாரத்தைப் பற்றிச் சில குறிப்புகள்:
சூரிய ஒளியில் குளிக்க வெந்நீர் தயாரிக்கலாம் என்பது நிறைய பேருக்குத் தெரிந்தது. மொட்டை மாடியில் தகடுகளைப் பொருத்தி அதிலிருந்து மின்சாரம் தயாரித்து வீட்டின் தேவைக்கு உபயோகப் படுத்தலாம் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதற்கான செலவு அதிகம், மற்றும் அரசாங்கம் தரும் உதவித் தொகையைப் பெறுவது மிகக் கடினம் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.
மின்வெட்டு தீவிரமாக இருந்த காலத்தில் இதைப் பற்றி அதிகம் பேசினோம். தற்போது நிலைமை சற்று முன்னேறியவுடன் அதை மறந்துவிட்டோம்.
அந்தந்த வீடுகளில் கிடைக்கும் DC சூரிய ஒளி மின்சக்தியை அங்கேயே பயன்படுத்துவதால் ஆற்றல் இழப்பு மிக மிகக் குறைவே. ஆகவே சூரிய ஒளி மின் அமைப்புகளில் DC மின்சாரத்தில் இயங்கும் மின் விளக்குகள் (LED Bulbs) . மின் விசிறிகள் (DC FAN) மற்றும DC ஏர் கூலர்கள் (AIR COOLER WITH DC MOTOR) முதலியவறறைப் பயன்படுத்தலாம்.
வணிக ரீதியாக DC யில் இயங்கும் மின் விசிறிகள் LED விளக்குகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன,
இவற்றைத் தவிர வீடுகளில் கிடைக்கும் அதிகப் படியான சூரிய மின்சாரத்தை அரசாங்கத்துக்கு அளித்து நிகர மின் செலவைக் குறைக்க முடியும் என்பது இதன் மிகப் பெரிய விஷயம்.
சூரிய ஒளியைக் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் சிறு மின்னகம் அமைக்க முடியும் என்பது சமீபத்தில் செயலாற்றப்படும் முயற்சி. அந்தக் கிராமங்களில் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மின்னகத்தின் அளவை நிர்மாணிக்க வேண்டும்.

சாதாரணமாக ஒரு கிராம வீட்டுக்கு 2 யூனிட் மின்சாரம் தேவைப்படும். 100 வீடுகள் கொண்ட கிராமத்திற்கு 4 கிலோ வாட் சக்தி கொண்ட மின்னகம் தேவைப்படும். இது ஆண்டுக்கு சுமார் 33000 ரூபாய் பெறுமான மின்சாரத்தைத் தயாரிக்க உதவும்.
இது எப்படி செயல் படுகிறது என்று பார்ப்போம். சூரிய ஒளி குறிப்பிட்ட தகடுகளில் பிரதிபலிக்கும் போது மின்சாரம் தயாராகிறது. அந்த மின்சாரத்தை நமது இன்வர்டர் போன்ற மின் சமன் அமைப்பில் ( Power Controlling Unit ) இணைத்து அதை பேட்டரிக்கும் டிஸ்ட்ரிப்யூஷன் பெட்டிக்கும் (DB ) அனுப்ப வேண்டும். அந்த மின் சமன் அமைப்பு நமது டிரான்ஸ்பார்மர் போல செயலாற்றி வீடுகளுக்கும், கடைகளுக்கும், தெரு விளக்குகளுக்கும் மின்சாரம் வழங்கும்.
தேவையை விட அதிக மின்சாரம் கிடைத்தால் அதை பேட்டரிகளில் சேமித்து வைத்து இரவில் பயன் படுத்தலாம்.
மேலே உள்ள படம் இந்த அமைப்பை நன்றாக விளக்கும்!
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரும்மாண்ட அளவில் சூரிய ஒளி மின்னகங்களை அமைக்க அரசாங்கமும் டாடா, ரிலையன்ஸ் போன்ற பெரிய கம்பெனிகளும் முனைந்துள்ளன.
