image

தடையின்றி ஆடிடுவோம் சுதந்திர நாட்டினிலே 

படிப்படியாய் கனவுகள் பாரதிக்கன்று  – இன்றோ 

ஆடுகிறார் குடித்துவிட்டு சித்தம் தள்ளாட 

பாடுகிறார்  நஞ்சதுவும் நெஞ்சினிலே புரையோட 


சிந்துநதிக் கரையினிலே கேரள மங்கையுடன் 

சுந்தரத் தெலுங்கினிலே பாட்டிசைக்க – மக்களுடை 

சிந்தையினில் செய்கைதனில் ஒருமைப்பா டதுகாண 

பந்துக்களா யுறைகின்றார் பாரதியின் நாட்டினிலே !


இனவாரி மொழிவாரி மாகாணம் என்கின்றார் 

நான்பெரிது நீபெரிதென மல்லுக்கே நிற்கின்றார் 

எல்லையிலா பூசல்கள் பிரிவினையின் வாசல்கள் 

பலப்பல தொல்லைகள் சுதந்திரப் பாரதத்தில் !


விண்முட்ட உயர்ந்திடுவோம் விஞ்ஞான உதவியினால் 

மண்ணெல்லாம் பொன்னாகும் பயிர்களின் செழிப்பதனால் 

எண்ணிய பொருள்களெலாம் கிடைத்திடும் மலிவாக

மண்ணுலகின் விண்ணுலகு பாரதியின் நாடாகும் !


விண்முட்ட ஏறுவதோ பொருள்களின் விலையிங்கே

எண்ணிய பொருள்வாங்க மிகநீண்ட கியூஇங்கே

மண்ணெல்லாம் பொன்னாகும் இனிதான நாளெங்கே

பணமொன்றே மலிவாக இருக்கிறது இங்கே !


இல்லாத ஏழையினை செல்வனாய் உயர்த்திவிடும் 

நல்வாழ்வு கொண்டதுநம்  கவிஞனின்  சோஷலிசம்

இல்லாதார்   பெருகிவர  பெருஞ்செல்வர் கையோங்கும் 

நல்வாழ்வே காணாத  நம்நாட்டு  சோஷலிசம் !


சாதிகள் வேற்றுமை இல்லாத நாடங்கே 

சாதிபல இலையென்றால் அரசியலே இலையிங்கே

மதங்கள்பல  இருந்தாலும் வேற்றுமை யிலையங்கே

மதப்பூசல் இல்லாத நாளில்லை இங்கே !


தித்திக்கும் கனவோடு தியாகங்கள் பலசெய்து 

வித்திட்டார் சுதந்திர நாட்டிற்கு – நாமோ 

தித்திக்கும் கனவுகள் கனவுகளா யிருந்திடவே 

எத்துணை வழியுண்டோ அத்தனையும் செய்கின்றோம்!

பக்கம் ………………………………16