ஹாரப்பாக்கள் மறைந்து போயின. புது யுகம் பிறந்தது. கிமு 1700 லிருந்து கிமு 900 வரை வேத கால நாகரிகம் தழைத்தது. இக்காலத்தில் தான் வேதங்கள் தொகுக்குக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. இதை நிகழ்த்திப் பரவச் செய்தவர்கள் ‘ஆரியர்கள்’ என்ற இனத்தவர் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த ஆரியர்? இவர்கள் நிஜமா அல்லது வரலாற்றுப் பதிவாளர்களின் கட்டுக்கதையா? சமஸ்கிருத மொழியில் ஆரியர் என்பது ஓர் அடைமொழியாகத்தான் காணப்படுகிறது. ஒருவேளை இவர்கள் ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்போ என்றும் ஐயுற சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
பொதுவான கருத்து என்னவென்றால் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் குடிபுகுந்து , இங்கிருந்த உள்ளூர் வாசிகளை ( திராவிடர் மற்றும் மற்றவர் ) போரில் வென்று இங்கே குடியேறியவர்கள் என்பது தான்.
குதிரைகள் பூட்டிய ரதங்களுடன் ,அக்னி, இந்திரன் போன்ற தெய்வங்களை வழிபட்டு சமஸ்கிருத மொழி பேசி அதைப் பரப்பிய பெருவாரியான மக்கள் இவர்கள்.
நான்கு வேதங்கள் மட்டுமல்ல , நான்கு வகுப்புகளும் இவர்கள் துவங்கியது தான். கல்வி அறிவு பிராமணருக்கும் ஷத்ரியருக்கும் மட்டும் அளிக்கப்பட்டது.
இப்படிச் சில நூற்றாண்டு காலங்களாக இந்த வேத கால நாகரிகம் சிந்து, கங்கை சமவெளிகளுக்குப் பரவியது.
விவசாயம் வளர்ந்தது.
காடுகள் அழிக்கப்பட்டன. நாடுகள் உருவாகின.
மன்னராட்சி தொடங்கியது. அரசர்கள் ஆளத்தொடங்கினர். அவர்கள் அஸ்வமேத யாகங்களும் செய்தனர். ஒரு ராஜ குதிரையை நாடுகளில் உலவவிட்டு அது சென்ற இடங்களில் எல்லாம் கப்பம் வசூலித்து ( கொடுக்காவிட்டால் சண்டை தான் ) வருட முடிவில் அந்தக் குதிரையைத் தியாகம் செய்து முடிப்பார்கள்.
பழமையான ரிக் வேதம் தொகுக்கப்பட்டது. வேதம் என்றால் அறிவு என்று பொருள். அது தொழுகை, பாடல்கள், சமயச் சடங்குகள் என்று பல அம்சங்கள் கொண்டது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்று நான்கு வேதங்கள் விரிவாகத் தொகுக்கப்பட்டன.
சாம வேதத்திலிருந்து இசை பிறந்தது.
வேதங்கள் விளக்கத்திற்காக உபநிஷத்துக்கள் அமைக்கப்பட்டன.
இந்தப் பழைய வேத காலத்திலிருந்து நமது சரித்திரம் பேசுகிறது.
( சரித்திரம் மேலும் பேசும்)




