பொங்கியெழு முருகா !

 

 

 

 

காக்கின்ற கடவுளே முருகா – உன்னை நம்பியே நிற்கின்றோம் நாங்கள்

கறுப்புச் சந்தையிலே பணம்புரட்டும் மாந்தரில்
கனல்கக்கி யுனையெதிர்த்த கயவரைத் தெரியலையா!

நேர்மையே தர்மமென நேர்வழியில் சென்றுவிட்டு
அவதியுறும் நன்மக்கள் கூக்குரல் கேட்கலையா!

லஞ்சப்பேய் அவனன்றி ஓரணுவும் அசையாது – இங்கே
பஞ்சத்தின் கொடுமைகள் சொல்லிசொல்லி மாளாது
தஞ்சமென்று உன்முன்னே நிற்கின்றோம் இப்போது
அறம்வாழ மறம்வீழ நீஎழுவது எப்போது?

காசேதான் கடவுளெனும் தாரகமந்திரம் -நாம்
சுயநலக் கூட்டத்தின் சொடுக்கிவிட்ட பம்பரம்
அச்சமொடு ஜடமாக ஆகிவிட்டோம் யந்திரம்
நேர்மையின் வழிபோக எப்போது சுதந்திரம்!

புன்னகை போதும் பொங்கியெழு முருகா
மென்மையது போதாது வடிவேல் மருகா
நடத்திக் காட்டிடு இன்னுமொரு ஸம்ஹாரம்
பாடுபடும் எங்களுக்கு அதுவே ஆதாரம்!