பாவண்ணன்

pd1

மொழிபெயர்ப்புகள், கவிதைகள், நாவல்கள். குறுநாவல்கள், கட்டுரைகள், குழந்தைப் பாடல்கள், நூல்-திரை-நாடக விமரிசனங்கள் என பன்முகப் படைப்பாளியான பாவண்ணனின் சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி  பதினைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. தமிழக அரசின் குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது, இலக்கிய சிந்தனை நாவல் பரிசு, கதா விருது போன்று பல அங்கீகாரங்கள் பெற்ற இவர், பைரப்பாவின் மகாபாரதப் பின்னணி கன்னட நாவலின் மொழிபெயர்ப்பான “பருவம்’ நூலுக்காக 2005 சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது பெற்றவர்.

* * * * * * * * * *

இவரது நலிவு என்னும் சிறுகதை

அருமாந்தபுரம் ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் பாண்டிச்சேரியைப் பார்க்கிற பச்சைவண்ண கட்டிடத்தில்தான் இருதயமேரி கான்வென்ட் இருக்கிறது.

Image result for village school teacher in a tamil nadu christian school

என்று தொடங்குகிறது

அங்கு ஆசிரியையான லூசி அடவில்லாத கணவனாலும், நிரந்தரமற்ற வேலைகளாலும் இன்னல்களே வாழ்க்கையாக வாழுபவள்.

எப்போதும் பேருந்து கான்வென்டிற்குச் சற்றுத் தொலைவிலேயே நிற்கிறது. இறங்கியதும் நடக்கத்தொடங்காமல்  ஒரு கம்பத்தைப் பிடித்துக்கொண்டு புழுதி அடங்கும்வரை கைக்குடடையால் வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு நின்று விடுகிறாள்.   வாந்தி வருவதுபோல் இருக்கிறது. நடக்கக்கூடப்    பலவீனமாக இருக்கிறது. தினப்படி ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்கி சாப்பிட்டிருந்தாலோ, ஒரு மாதமாவது பெரியாஸ்பத்திரியில் பெட்டில் இருந்து சிகிச்சை பெற்றிருந்தாலோ குணமாகி இருந்திருக்கலாம். ஆஸ்பத்திரியில் சேரலாம என்று கணவனிடம் கேட்டபோது பதிலேதும் சொல்லவில்லை. நான்கு நாட்கள் வீட்டிற்கே வரவில்லை.

கணவன் ஜோசப் ஒருமுறை சஸ்பென்ஷனில் இருந்தபோதுதான் குழந்தை பிறந்தது. அந்தச் சமயத்தில்தான் இந்த வாந்தியும் தொடங்கியது. முன்பெல்லாம் வேலை பார்த்த பூச்சி மருந்துக்கடை, பேப்பர் ஃபாக்டரி காரணமாக வரும் சாதாரண வாந்தி என்று நினைத்தாள். 

அவள் வேலை பார்த்துவந்த  பூச்சி மருந்துக்கடைக்கும், அனாதை இல்லத்திற்கும் ஜோசப்பின் அம்மா வந்து தரக்குறைவாக சத்தம்போட்டது, சத்தம்போட்ட அம்மாவை ஜோசப் இழுத்துப்போட்டு உதைத்தது என கசப்பான அனுபவங்கள்தான் வாழ்க்கை. திரும்பவும் ஜோசப்பிற்கு சஸ்பென்ஷன். கான்வென்ட் சம்பளத்தில் பஸ் செலவு போகத்தான் குடும்பச் செலவுகளுக்கு. இடையிடையே காசு கேட்டுக்கணவனின் தொல்லை.

வரவர இந்த வாந்தியும் சோதனை செய்கிறது. நேற்று பாடம் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் குடலே அறுந்து போகிற மாதிரி வலிகண்டு புரட்டியது. வகுப்பறைக்குள்ளேயே அசிங்கமாகிவிடுமோ என்னும் பயம். இதோ வாசலுக்குப் போய்விடலாம் என்ற அவசரத்தில் நடக்க, வயிற்றில் மேஜை இடிக்க,  காலையில் சாப்பிட்ட கம்பு மாவுக்களி, மருந்து மாத்திரைகள் எல்லாம் வெளியில். ஒரே களேபரம் எல்லா மிஸ்களும், மதரும் வந்துவிட்டார்கள். பொன்னம்மா ஆயாதான் இரண்டு பக்கெட் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தாள். வகுப்பை அப்படியே விட்டுவிட்டு பஸ் ஏற்றி  அனுப்பிவிட்டார்கள்.

இந்தக் கம்பத்திலேயே சாய்ந்துகொண்டிருப்பதை விட மெதுவாக கான்வெண்டே போய்விடலாம் எனத் தோன்றுகிறது.

இடுப்புப்பக்கம் இற்றுப்போகிறமாதிரி வலிக்கிறது. கொஞ்சம் தாராளமாய் உட்கார்ந்தால் தேவலாம் போல் இருக்கிறது. மின்னுகின்ற தண்டவாளம் பார்வையில் பட்டு ‘கான்வென்டுக்கே போயிர்லாம், பக்கத்தில் தானே’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு நடக்கிறாள்.

குழந்தையின் ஞாபகம் வருகிறது. இந்த வேலையை வாங்கிக்கொடுத்த மேரி அத்தையும் அவள் புருஷனும் நினைவிற்கு வருகிறார்கள்.

ஜோசப், ஜோசப் அம்மா மாதிரி ஜனங்களும் இருக்கிறார்கள். மேரி அத்தை,  மேரி அத்தை புருஷன் மாதிரி ஜனங்களும் இருக்கிறார்கள். எல்லாம் மாதாவின் செயல்.

முதல் பெல் அடிக்கும் பொன்னம்மாளின்     ‘இப்போது பரவாயில்லையா?’ என்ற கேள்விக்கு ‘ம்..’ என்று பதிலளிக்கிறாள். ஸ்டாஃப் ரூமை நெருங்கும்போது எதிர் ஹாலிலிருந்து மதர் கூப்பிடுவது கேட்கிறது.

குட் மார்னிங், இப்ப எப்படியிருக்கு, நல்லாயிருக்கேன்’ , டேக் யுவர் சீட், பரவாயில்லை போன்ற உரையாடல்களுக்குப் பிறகு

‘தப்பா எடுத்துக்கக் கூடாது. நேத்து நீங்க போனப்புறம் ஒங்களைப்பத்தி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்னேன். ஒரு வியாதியை ரெண்டு வருஷமா வளர உட்டுக்னு இருக்கிறது ரொம்ப தப்பு. ஆரோக்யம்தான் எல்லாத்துக்கும் அடித்தளம். நீங்க அவசியம் டாக்டரைப் பார்க்கணும். நல்லா ஓய்வெடுக்கணும் சீக்கிரமா குணமாவனும். இன்னிக்குத் தேதி பதினாலுதான். ஆனா உங்க முழுச் சம்பளமும் இந்த பாக்கெட்ல இருக்கு’

‘மதர்…’

‘ஒங்களை நாங்க  வெளியேத்தறதா நினைச்சுக்கக் கூடாது. நீங்க மருத்துவம் செஞ்சிக்கதான் அனுப்பறம். ஒங்க உடம்பு குணமாக எல்லோரும் மாதாவை  பிரார்திக்கறம்.’

பேச ஒன்றுமில்லாமல் இரண்டு சொட்டுக் கண்ணீருடன் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு  வெளியே வரும்போது மதர் தோளில் தட்டிக் கொடுக்கிறாள்.

தொடை நடுக்கம் அதிகமாகவே வாசலைப் பார்த்து நடக்க இருந்த லூசி ஸ்டாஃப் ரூம் பெஞ்சில் உட்காருகிறாள்.

என்று கதை முடிகிறது.

பாவண்ணனின் பல கதைகள் எதார்த்தங்களையும், போராடுதல்களையும் இயலாமையையும் உள்ளது உள்ளபடி சித்தரிப்பவை. இவரது ‘ஜெயம்மா’ ,’கையெழுத்து’ போன்ற கதைகள் குறிப்பிடத் தக்கவை.