dr1

நில், கவனி, எடுத்துக்கொள்!

 Image result for medical shop atrocities in india

காலையில்  எஃப் எம்மில் டிஎம்ஸ் குரலில் எம்ஜிஆர் பாடிக்கொண்டிருந்தார் – ‘ஏமாறாதே, ஏமாற்றாதே’.

பாட்டை ரசிக்க விடாமல் செல்போன் அலறியது.  பச்சை வட்டத்தில் விரலைத் தேய்த்து, ‘ஹலோ’ – முடிக்குமுன் “சார் நான் …. பேசறேன். என் ரிலேஷன் ஒருத்தருக்குத் திடீரென்று முகம் ஒரு பக்கமாய்க் கோணி, கையும் காலும் ஸ்டிஃப்பா ஒரு பக்கமாய் இழுக்குது. வாயிலிருந்து சலைவா ஒழுகுது’ என்றார் – குரலில் பதட்டம்.
 
‘நினைவு இருக்கிறதா?
 
‘ம்..நல்லா கான்சியஸா பேசறான் – ஆனா பேச்சு குளறுது
 
‘யூரின், மோஷன் போய்ட்டாரா?
 
‘அதெல்லாம் இல்லை சார்
 
‘சரி, உடனே அருகில் இருக்கும் நர்சிங் ஹோமில் அட்மிட் பண்ணுங்க – ஹீ நீட்ஸ் ‘இன் பேஷண்ட்’ ட்ரீட்மென்ட். வலிப்பாக இருக்கலாம். இது தான் முதல் முறையா?
 
‘ஆமாம் சார். ஃபேமிலில கூட யாருக்கும் இல்லை சார்’ என்றது போனில் குரல் பதட்டம் குறையாமல்!
 
இது போன்ற எமர்ஜென்சிகளில், பேஷண்டை நேராய்ப் பார்ப்பதும், அட்மிஷனில் வைப்பதும் இன்றியமையாதவை.
 
அட்மிஷன், முதலுதவி, ஆப்சர்வேஷன் எல்லாம் முடிந்து, நார்மலாக வீடு போய்ச்சேர்ந்தார் – மறுநாள் மாலை கிளினிக்கில் என்னை வந்து பார்ப்பதாக ஏற்பாடு. அதற்கு முன்பாகவே மதியம் மூன்று மணியளவில் மீண்டும் அதேபோன்ற இழுப்பு வந்து விடவே, என் செல்போன் சிணுங்கியது. ‘ நேற்று ஊசியும், ட்ரிப்பும் போட்ட பிறகு சரியாகிவிடவே நாங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம்; இப்போது திரும்பவும் அதே அட்டாக்’ என்றார் பேஷண்டின் அப்பா.
 
எமர்ஜென்சியாக ஒரு மாத்திரையைக் கொடுக்கச் சொன்னேன். ‘அரை மணியில் குறையவில்லையென்றால் மீண்டும் அட்மிஷன்தான்.  என்னைக் கூப்பிடுங்கள்’ என்றேன்.
 
மாலை 7 மணி சுமாருக்கு என் கிளினிக் வந்தான் அவன். வயது இருபத்தி இரண்டு, தனியார் கம்பெனியில் வேலை; கெட்ட பழக்கங்கள் கிடையாது. ஒல்லியான உடல், முள் தாடி, முகத்தில் ஓரிரண்டு பருக்கள், கண்களில் சிறிது மயக்கம்.
 
‘ஏதாவது மருந்து எடுத்துக் கொள்கிறாயா?’ என்றேன்.
 
‘இல்லை’. 
 
பேசிக்கொண்டிருக்கும்போதே, முகம் ஒரு பக்கமாய்க் கோணியது, உடல் பைசா கோபுரம் போல சாய்ந்தது, உட்கார்ந்திருந்த ஸ்டூலிலேயே  கைகளும் கால்களும் விரைத்துக் கொண்டு, கோணலாகப் பறக்கும் பறவை போல் இறுகினான். கோணிய வாயிலிருந்து எச்சில் வழிந்தது. ‘ம்..ம்ம்..ஆஆ..ஐயோ’ பல்லைக் கடித்துக் கொண்டு அரற்றினான். நினைவு தப்பவில்லை! 
 
‘என்ன செய்யிது?
 
‘இழுக்குது’ வாய் குளரியபடி சொன்னான்.
 
இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் ஓரளவுக்கு நார்மலானான். நடந்து, பாத்ரூம் சென்று வந்தான். இன்னும் சிறிது விரைப்பு கால்களில் இருந்தது.
 
மீண்டும் ‘வேறு ஏதாவது மருந்து எடுத்துக்கொண்டாயா? ஆல்கஹால்?’ என்றேன்.
 
‘ அந்தப் பழக்கம் இல்லை சார். இரண்டு நாள் முன்பு நைட் டுயூட்டியில்  கையில் ஒரு காயம் பட்டது. அதற்கு வலி மருந்தும், ஆண்டிபயாடிக்கும் எடுத்துக் கொள்கிறேன்’ 
 
இது வலிப்பு இல்லை. சில மருந்துகளால் வரும் ஒருவகை நரம்பு இழுப்பு – EXTRAPYRAMIDAL REACTION – வாந்தி மாத்திரைகள், சைக்கியாட்டிரி மருந்துகள் ஒவ்வாமையினால் வரக்கூடும். 
 
இவன் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் இப்படி வருவதற்கு வாய்ப்பில்லை – இருந்தாலும் மருந்துகளைக் காட்டச் சொன்னேன். சீட்டுக் கொண்டுவரவில்லை – பெயரும் தெரியாது!  அட்மிட் செய்யச் சொன்னேன் – எல்லா மருந்துகளையும் நிறுத்தச் சொல்லி, சிம்பிள் செடேஷன் கொடுத்து ஆப்சர்வேஷனில் வைத்தேன்.
 
டியூட்டி டாக்டரிடம் சொல்லி, அவன் கைப் புண்ணுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்தினைப் போனில் சொல்லச் சொன்னேன் – குழப்பத்துடன் காத்திருந்தேன்.
 
டாக்டரின் போன் என் குழப்பத்தைப் போக்கியது – ஆனால் அதிர்ச்சியூட்டியது. 
 
அவன் எடுத்துக்கொள்ளும் மருந்து ‘ஹேலோபெரிடால்’ – மனநிலைப் பிறழ்வுகளுக்குக் கொடுப்பது – ANTIPSYCHOTIC – ‘இவன் ஏன் இதனை எடுத்துக்கொள்கிறான்?
 
கொஞ்சம் ஷெர்லாக் ஹோம் வேலை செய்து பார்த்ததில் விடுகதை முடிச்சு அவிழ்ந்தது!
 
நடந்தது இதுதான்:
 
கையில் சின்னக் காயம் பட்டது. அருகிலிருந்த 24 மணிநேர மருத்துவ மனையில் முதலுதவி செய்து கொண்டு, டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையை பக்கத்திலிருந்த மருந்துக் கடையில் வாங்கிப் போட்டுக்கொண்டு, வேலையில் தொடர்ந்தான்- அப்போது  விடியற்காலை இரண்டு மணி. மறுநாள் காலை இந்த இழுப்பு வந்தது. முதலுதவியில் சரியானது. புண்ணுக்கான மருந்தைப் பற்றி பேச்சே இல்லை! மறுபடியும் வலி மாத்திரையைப் போட்டுக் கொண்டார் – இழுப்பு வந்தது.  
 
எல்லாம் சரி – ஹேலோபெரிடால் எப்படி வந்தது? 
 
இங்குதான், நம் மக்களின் அறியாமையும், மருந்துக் கடைகளின் அலட்சியமும் தெரிய வருகிறது. டாக்டர் எழுதிக் கொடுத்த வலி மருந்தின் பெயருக்கும், ஹேலோபெரிடால் மருந்தின் ‘ட்ரேட்’ பெயருக்கும் ஸ்பெல்லிங்கில் மிகச் சிறிய வித்தியாசம்தான் – தூக்கக் கலக்கத்தில் கடைப்பையன் மாற்றிக் கொடுத்த மருந்தை இருவருமே சரி பார்க்கவில்லை – தவறான மருந்தால் வந்தது வினை!
 
‘இனி ஹேலோபெரிடால் எடுத்துக் கொள்ளக் கூடாது, அது உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. மருந்து வாங்கியவுடன் பெயர்களைச் சரி பார்த்து, வேண்டுமானால் மருத்துவரிடம் திரும்பவும் சென்று காண்பித்து, பிறகு உட்கொள்ளவும்’ என்ற அறிவுரையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் சென்று தன் அப்பாவுடன் வந்து நன்றி சொல்லிப் போனான் அந்த நல்ல பிள்ளை!
 
இப்படித்தான் ஒரு முறை மருந்துக் கடைக்காரர்  முகத்தில் பருவுக்குக் கொடுத்த மருந்துக்கு பதில், பைல்ஸுக்குப் போடும் மருந்தைக் கொடுத்துவிட, முகமெங்கும் சிவந்து, கோபமில்லாமலே என்னை முறைப்பதைப்போல் பார்த்தார் ஒரு வழக்கறிஞர்.  
 
கடையில் வாங்கிய மருந்து, டாக்டர் கொடுத்த மருந்துதானா என்பதை, ஒரு முறைக்கு இருமுறையாகச் சரி பார்ப்பதே இன்றைய நிலையில் தேவை!