சமுத்திரகுப்தர்

ஒரு மாவீரன் மன்னனாகி…

வெற்றிகள் கண்டு…

ராஜ்யத்தை வளர்த்த பிறகு..

அந்த வம்சம் பொற்காலமாகிறது.

போர்க்காலத்திற்குப் பின் வருவது பொற்காலம்!

 

சந்திரகுப்த மௌரியரின் வீரத்தின் நிழலில் அசோகரின் பொற்காலம் விரிந்தது..

பின்னாளில் ராஜராஜ சோழனின் மாவீரத்திற்குப் பின் இராஜேந்திர சோழனின் ஆட்சி சிறந்தது.

அது போல் சமுத்திரகுப்தனின் வீரமே குப்தர்களது பொற்காலத்திற்கு அடித்தளமிட்டது.

ஆங்கில சரித்திர வல்லுனர்கள் சந்திரகுப்த மௌரியனை
‘இந்தியாவின் ஜூலியஸ் சீசர்’ என்றனர்.

நமது சமுத்திரகுப்தனை ‘இந்தியாவின் நெப்போலியன்’ என்றனர்.

அப்படிப்   புகழ்பெற அவன் செய்ததுதான் என்ன?

நான்கு திசைகளிலும் படையெடுத்துச் சென்று மன்னர்களை அடி பணியச் செய்தான்.

அவனது புஜபலத்தைப் பற்றிப் பல கல்வெட்டுகள் பாராட்டுகின்றன.

(சமுத்திரகுப்தரின் நாணயங்கள்)

அது சரி… அது என்ன பெயர் ‘சமுத்திர’ குப்தன்?

படையெடுப்பில் கடல் வரை சென்றவனை சமுத்திரம் காத்து நின்றதாம்.

அதனால் அந்த அடைமொழி அவனுக்கு ஆடையானது..

அலகாபாத்தில் இருக்கும் அசோகா தூண் ஒரு சரித்திரப் பொக்கிஷம்.

அசோகர் எழுதிய அதே தூணில் சமுத்திரகுப்தன் சரித்திரமும் பொறிக்கப்பட்டது.

அந்த சரித்திரத்தின் எழுத்தாளன் சமுத்திரகுப்தனின் மந்திரி ஹரிசேனா.

அதில் சமுத்திரகுப்தனின் படையெடுப்பின் விவரங்கள் அடங்கியுள்ளன.

அவைகள் இல்லாவிடின் சமுத்திரகுப்தனை   நாம் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை.

மேற்கு திசை: இன்றைய உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் வென்றான்.

அவை அனைத்தும் குப்தசாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டது.

தென் திசை:

பன்னிரண்டு மன்னர்களை வென்றவன்…

முடிவில் காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் விஷ்ணுகோபனை வென்றான். அவனை மன்னனாக விட்டு வைத்து,  கப்பம் வசூலித்தான்.

கிழக்கு திசை:

இன்றைய மேற்கு வங்காளம், பீகார் பகுதிகள் குப்த சாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டது.

வடக்கு திசை:

இன்றைய டில்லி, நேபாளம், இமய பகுதிகள், சமுத்திரகுப்தனின் ஆதிக்கத்தில் சேர்ந்தது.

(சமுத்திரகுப்தன் போர்க்களம்)
ஸ்ரீலங்கா, அஸ்ஸாம், மற்றும் தென் இந்திய தீவுகள் பலவற்றிலிருந்தும் மன்னர்கள் சமுத்திரகுப்தனின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு வெகுமதிகளையும், அழகிய பெண்களையும் அனுப்பி வைத்தனர்.

அவன் படையெடுத்து வென்ற நாடுகளின் பெயர்களைப் பதிவு செய்தோமானால்…

இந்த ‘குவிகம்’ இதழ் ‘விரிந்து’ விடும்.

உங்கள் இரவும் விடிந்து விடும்…

உண்மை… இது கதை இல்லை.

மேலும் சமுத்திரகுப்தன் ஆக்கிரமிப்பு ஆசையால் மற்ற அரசுகளைத் தாக்கவில்லையாம்..

அமைதிக்காகவும் மனிதநேயத்திற்காகவும் உழைத்தவனாம்..

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்…

இவ்வளவும் செய்தவன் அதையும் செய்தான்…

‘அஸ்வமேத யாகம்’!.

அதற்கு… ஒரு லக்ஷம் மாடுகளை பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

(அஸ்வமேத நாணயம்)

அவனது பட்டங்கள்:

‘தோல்வியைக் கண்டிராத மன்னர்களைத் தோற்பித்தவன்’ – இந்தப்பட்டம் எப்படி?

அது மட்டுமா..

“பூமியின் நாற்திசை நாயகன்’..

கடைசியாக..

‘பூமியில் வாழும் தெய்வம்’

இவை அனைத்தும் சென்னை நகர் சுவர்களில் எழுதப்பட்ட கட்சி ‘போஸ்டர்’ அல்ல..

கல்வெட்டுகள்…

அட இவை அனைத்தும் நான் சொல்லவில்லை ஐயா… கல்வெட்டு சொல்கிறது…

அவன் விஷ்ணுவின் பக்தனாக இருந்தான்…

ஆனால் அவனது மக்கள் அவனை ‘விஷ்ணுவின் அவதாரமாகவே’ கருதினராம்.

அவனது ஆதிக்கம் முழு பிரபஞ்சத்திலும் இருப்பது மட்டும் இல்லாது
சுவர்க்கத்திலும் பரவியதாம்…

இது ஒரு வேளை அவன் மறைவிற்குப் பின் எழுதினரோ? (அப்பொழுது தானே சுவர்க்கம் செல்ல முடியும்)

ஆட்சிக்காலம் : கி.பி. 335-380:

நாற்பத்தைந்து வருடம் ஆட்சி செய்து புகழ் பெற்றான்..

அலெக்சாண்டர் வருகையிலிருந்து இந்திய கலாச்சாரத்தில் கிரேக்கம் ஊடுருவியிருந்தது.

மேலும் சமண, புத்த சமயமும் மன்னர்களை பாதித்திருந்தது.

அந்த சமயத்தில் இந்து மதத்தை நமது சமுத்திரகுப்தன் ஆதரித்தான்.

இசையில் வல்லுனன். வீணை வாத்தியத்துடன் அவனிருக்கும் சிற்பம் இதோ.

 

வீரம் மற்றுமே சரித்திரத்தை அமைத்ததில்லை.

மதியூகம், சதி, துரோகம் ,மற்றும் அதிர்ஷ்டம் அனைத்தும் சரித்திரத்தை நடத்திச் செல்லும்.

அடுத்த இதழில் அந்தக் கதை சொல்லப்படும்….