Chromepet railway station

பத்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த நான்கு  ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவில்லை. அவர் பதவி மாற்றம் பெற்று வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றபிறகு என்னிடம் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

சென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் வைதீஸ்வரன் கோயில் என்ற ஊரில் இருக்கிறார். உண்மையில் வைதீஸ்வரன் கோயில் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராகப் பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

2004 ஆம் ஆண்டில் பத்மநாபன் சீனியாரிடி தேர்வு எழுதும்போது, வேண்டாம் என்று தடுத்தேன். அவருக்கு நான் தடுத்தது புரியவில்லை. ” ஐம்பது  வயதாகப் போகிறது…இன்னும்கூட பதவி உயர்வு பெறவில்லையென்றால் என்ன?” என்று கேட்டார்.

“இந்த வயதில் போகிறேன் என்கிறீர்களே?ஓரு பைசாவுக்குப்  பிரயோஜனமில்லை,” என்றேன். 
நான் சொன்னதை அவர் கேட்கவில்லை. இதோ அவர் போய் 4 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் அவரை ஒருமுறை பார்த்தேன். பார்க்கப் பரிதாபமாக இருந்தார். பத்து கிலோ எடை குறைந்துவிட்டது என்றார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை, பிபி எல்லாம் உண்டு. அதுவேற அவர் முகத்தை சோகமாகக் காட்டியது.

“நீங்கள் கெட்டிக்காரர்…உங்கள் பேச்சைக் கேட்கவில்லை..”என்றார்.

“முதலில் உங்கள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்..இங்கிருந்ததைவிட சம்பளம் குறைவாகத்தான் வாங்குவீர்கள்…”

“ஆமாம்..வைதீஸ்வரன் கோயில் ஒரு ரூரல்…உண்மையில் அங்கு போவதற்குச் சம்பளம் அதிகமாகத்தான் தரவேண்டும்..சம்பளம் குறைச்சல்..வசதி அதைவிடக் குறைச்சல்.  மேலும் வேலைப் புடுங்கல் அதிகம்..பிராஞ்சு கதவைத் திறக்கிறதிலிருந்து பூட்டுறவரைக்கும் நான்தான்….”

பத்மநாபனிடம் எதுவும் ஒளிவு மறைவு கிடையாது. மனம் திறந்து டக்கென்று பேசிவிடுவார்.

“முட்டாள்தனம்தான் இது,”என்றேன்.

“ஆமாம். இன்னொரு முட்டாள்தனமும் இருக்கிறது..நான் ரிட்டையர்டு ஆகிறவரைக்கும் இந்தக் கும்பகோணம் வட்டாரத்தைவிட்டுப் போக முடியாதாம்..”

பத்மநாபனைப் பிறகு நான் பார்க்கவே இல்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்றுப்போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்குக் கை உடைந்தமாதிரி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சரவணா ஓட்டலில் காப்பியும், பொங்கலும் சாப்பிடாமல் இருக்க மாட்டோம். பத்மநாபன் இல்லாமல் எனக்குத் தனியாக அங்கு போகப் பிடிக்கவில்லை.

நான்கு ஆண்டுகளில் நான் பத்மநாபனை மறந்தே விட்டேன். திடீரென்று அவர் குரலைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அதுவும் காலை நேரத்தில்.

“என்ன பத்மநாபன்?…எங்கிருந்து பேசுகிறீர்கள்? சென்னைக்கு வந்துவிட்டீர்களா?”

“வந்துவிட்டேன்..டெம்பரரி டிரான்ஸ்வர்..வந்து ஒரு மாசம்தான் ஆகிறது..”

“எங்கே?”

“ஹஸ்தினாபுரம்…”

” சொல்லவே இல்லையே?”

“என்னத்தைச் சொல்வது? டெம்பரரிதானே? ஆமாம். உங்க பெண் பெயர் என்ன?”

“ஏன்?”

“சுருதிதானே?”

“ஆமாம்.”

“என்ன பண்றா?”

“பி.டெக்..”

“நினைச்சது சரியாப் போச்சு..”

“என்ன நினைச்சிங்க?”

“சுருதி மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளாகத்தான் இருக்க முடியுமோன்னு நினைச்சேன்…அது சரியாப் போச்சு..அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை…”

“நாமதானே அடிக்கடிப் பார்த்துப்போம்..வீட்டில சந்திக்க மாட்டோம்…இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே அடையாளம் தெரியப்போறது…”

Related image

“நான் சொல்ல வந்தது வேற விஷயம். நீங்க சீரியஸ்ஸா  கவனிக்க வேண்டிய விஷயம். எனக்கு ஆபீஸ்  எட்டரை  மணிக்கு…நான் மாம்பலத்திலிருந்து காலையிலேயே ஏழரை  மணிக்கெல்லாம் ஓடணும்..டெய்லி ஓடறேன்..நான் போற சமயம். குரோம்பேட்டையில் இருக்கிற இன்ஜினியரிங் காலேஜ் படிக்கிற பசங்களும் போவாங்க…ஒரே கூட்டமா இருக்கும்..அங்கே படிக்கிற ஆண்களும் பெண்களும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிண்டே போவாங்க..தினமும் உங்க பொண்ணு சுருதியைப் பாக்கறேன். நான் உங்க பிரண்ட்ங்கறதே அவளுக்குத் தெரியலை…அவளைச் சுத்தி நாலைஞ்சு ஆம்பளைப் பசங்க….எல்லாம் படிக்கிற பசங்க..அந்தக் கண்றாவியை நானே சொல்ல விரும்பலை..அந்தப் பசங்க சும்மா இருக்க மாட்டாங்க…சுருதிகிட்டவந்து ரொம்ப நெருக்கமா பேசுவாங்க..யாராவது ஒரு பையன் அவள் தோள்மேல் கூட கையைப் போடுவான்…ஒருத்தன் கன்னத்தில கிஸ் பண்றான். அந்தக் கண்றாவியை என்னவென்று சொல்வது..சுருதிகிட்டே அவன் பேசறான்..உதட்டுலதான் கிஸ் பண்ணக்கூடாதாம்..அது தப்பாம்.. கேட்கச் சகிக்கலை…”

பத்மநாபன் சொன்னதைக் கேட்டவுடன் எனக்குச் சொரேர் என்றிருந்தது.

“என்ன பத்மநாபன் சொல்றீங்கன்னு,” சத்தம் போட்டுக் கேட்டேன்.

“தப்பா எடுத்துக்காதீங்க…கடந்த ஒரு வாரமா எனக்குத் தயக்கமா இருந்தது..இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு..இத எப்படியாவது தடுக்கணும். நீங்க உங்க பெண்ணுகிட்ட எதுவும் பேசாமல் இத எப்படியாவது டீல் பண்ணணும்…ஜாக்கிரதையா டீல் பண்ணணும்..”

“பத்மநாபன் ரொம்ப நன்றி.. இத எப்படியாவது சரி செய்யணும்..சுருதி நல்ல பொண்ணு..கொஞ்சம் வெகுளி..இந்த விஷயத்தில நீங்களும் எனக்கு உதவி செய்யணும்..”

பத்மநாபனுடன் பேசிய விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை..மனைவியிடம் சொன்னால் தேவையில்லாமல்
கவலைப்படுவாள்..அன்று முழுவதும் சங்கடமாக இருந்தது. மாலையில் சுருதி காலேஜ் போயிட்டு வந்தவுடன், அவளை எப்போதும்விட அதிகமாகக் கவனித்தேன்..

“என்ன எப்படிப் போயிண்டிருக்கு படிப்பெல்லாம்…”என்று கேட்டேன்.
“நல்லாதானே இருக்கு..”என்றாள் சுருதி.

“உன் காலேஜ்ஜிலே ராக்கிங்லாம் கிடையாதா?”

“அதெல்லாம் கிடையாது..தெரிஞ்சா துரத்திடுவாங்க வீட்டுக்கு..காலேஜ் திறந்து நாலு  மாசம் மேலே ஆயிடுத்து..”

அன்று இரவு எனக்கு சரியாத் தூக்கம் வரலை..மறுநாள் காலையில் சுருதி காலேஜ் கிளம்பியவுடன் நானும் கிளம்பினேன். எதுவும் சுருதிக்குத் தெரியாது. அவள் ஏறுகிற ரயில் கம்பார்ட்மெண்டில் நானும் ஏறினேன். சுருதிக்குத் தெரியாமல்..நாலைந்து ஸ்டூடன்ஸ் சுருதியைப் பார்த்தவுடன் உற்சாகமாகக் கையசைத்துச் சிரித்தார்கள். சுருதி அவர்கள் இருந்த பக்கம் நகர்ந்தாள்..”உனக்காகத்தான் இடம் போட்டிருக்கிறேன்..”என்றான் ஒருவன் இளித்தபடி.

இந்த சமயத்தில், “சுருதி..”என்று நான் சத்தம் போட்டேன். சுருதி திரும்பிப் பார்த்தாள்.. என்னைப் பார்த்தவுடன் திகைப்பு அவளுக்கு..”அப்பா நீங்களா?” என்றாள். “இங்க என் பக்கத்தில் வந்து உட்காரு..” என்றேன்.
சுருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

“அவர்கள் எல்லோரும் யாரு?” என்று கேட்டேன்.

“ஃபிரண்ட்ஸ்”

சுருதி மேலும் பேசாமல் என் பக்கத்தில் இருந்தாள். சுருதியைக் கிண்டல் செய்யும் ஃபிரண்ட்ஸைப்  பார்த்தேன். எல்லோரும் படிக்கிறவர்கள். கையில் சின்ன நோட் மாதிரி வைத்திருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்போன்…வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றவுடன், அவளுடைய ஃபிரண்ட்ஸ் இறங்கி வேற கம்பார்ட்மெண்ட் போய்விட்டார்கள்.

“தினமும் இவர்களோடத்தான் காலேஜ் போயிண்டிருக்கியா?”

“ஆமாம்”

“அவர்கள் தினமும் உன்னைக் கிண்டல் செய்கிறார்களாமே?”

“இல்லையே..எல்லோரும் தமாஷாப் பேசிப்போம்..”

“பத்மநாபன் சொல்றார்…இல்லைங்கறீயே..”

“என் வகுப்பில படிக்கிறவங்க…நாங்க தினமும் இந்த டிரையினில் ஜாலியாப் பேசிக்கிட்டுப் போவோம்..”

“ஏன் உன்கூட மத்த கேர்ள்ஸ் வரமாட்டாங்களா?”

“மல்லிகாவும் என்கூடத்தான் வருவா..என் வகுப்புல கேர்ள்ஸ் கொஞ்சம் குறைச்சல்…”

“சுருதி..என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் தப்பு…கன்னத்தில கிஸ் பண்றது..தோள்ல கைப் போடறது..நீங்கள்ளாம் ஃபிரண்ட்டா இருக்கலாம். அதெற்கெல்லாம் ஒரு லிமிட் வேண்டும்…உங்க காலேஜ்ல வந்து பேசறேன்..”

கடகடவென்று சுருதி அழ ஆரம்பித்துவிட்டாள்.. “நீங்க காலேஜ்க்கு வராதிங்கப்பா,” என்றாள்.

குரோம்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், நானும் சுருதியுடன் இறங்கினேன். அவளுடைய ஃபிரண்ட்ஸ் என்னையும் அவளையும் பார்த்தபடியே முன்னால் சென்று விட்டார்கள். “எப்ப காலேஜ் முடியும்?”
“தெரியாது..சிலசமயம் நான்குக்கெல்லாம் முடியும்.. ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தால் ஐந்து மணிக்கு முடியும்..”

“சரி. க்ளாஸ் போ..” என்று கூறியபடி காலேஜ் வாசல்வரை வந்தேன். பத்மநாபனுக்கு போன் செய்தேன்..”இன்று உங்களைப் பார்க்கவில்லையே?” என்றார்.
“நான் சுருதியுடன் வந்தேன்..” என்றேன்.

“எத்தனைநாள்தான் உங்களால சுருதியுடன் வந்து கொண்டிருக்க முடியும்.”

“அதுதான் எனக்கும் புரியலை..”

“இதற்கு வேற  ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.”

அன்று மாலை சுருதி வகுப்புகளை முடித்துவிட்டு காலேஜ் வாசலுக்கு வந்தாள். அவளுடைய பிரண்ட்ஸ்களுடன்..கேட் அருகில் நான் இருப்பதைப் பார்த்தார்கள் அவளுடைய ஃபிரண்ட்ஸ். அவர்களில் ஒருவன், “சுருதி உன் அப்பா,” என்றான். சுருதி பயந்தபடியே என்கிட்டே வந்தாள். அவள் ஃபிரண்ட்ஸைச்  சைகை செய்து கூப்பிட்டேன். அவர்கள் தயக்கத்துடன் வந்தார்கள். “சுருதிக்கு திருமணம் ஆகப்போறது..நீங்கள் இப்படி ஒண்ணா வருவதைப் பார்த்தால், தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள்..”என்றேன்.

“சரி அங்கிள்..நாங்க இனிமே அப்படி வரமாட்டோம்..”என்றார்கள். பிரிந்து சென்றார்கள்.

நானும் சுருதியும் மின்சார வண்டிக்காகக் காத்திருந்தோம்.

“ஏன்பா…இப்படிப் பொய் சொல்றீங்க…அவங்க நல்லவங்கப்பா..சும்மா ஜாலியாப் பேசிண்டு வர்றோம்…”

“எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சுருதி.”

அடுத்தநாள் காலையில் நான் சுருதியுடன் மாம்பலத்தில் வண்டியில் ஏறினேன். அன்றும் பத்மநாபன் என் கண்ணில் படவில்லை. சுருதியின் நண்பர்களும் கண்ணில் படவில்லை. திரும்பவும் அவள் காலேஜ் விட்டு வரும்போது கேட் அருகில் நான் நின்றிருந்தேன். “அவர்கள் நல்லவர்கள்,” என்றாள் சுருதி முணுமுணுத்தபடி. நான் பதில் எதுவும் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரம் நான் சுருதியுடன் வந்து கொண்டிருந்தேன். பத்மநாபனிடம் போனில் பேசினேன்.

“நானும் உங்களைக் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்…சுருதிக்கு என்னைத் தெரியாமலிருப்பது நல்லது,”என்றார்.

ஒருவாரம் கழித்து சுருதி தனியாகக் காலேஜ் சென்றாள். தொடர்ந்து அவளுடன் செல்வது என்பதும் முடியாத காரியம் என்றும் எனக்குத் தோன்றியது. மேலும் சுருதி மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் அவளுடன் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்.
நான்கு ஐந்து நாட்கள் கழித்து பத்மநாபனை விஜாரித்தேன்.

“நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சுருதி மட்டும் அவர்களோடு வருவதில்லை. ஆனால் நாலைந்து பெண்கள் அந்தப் பசங்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறார்கள்,”என்றார்.

எனக்குக்  கேட்க நிம்மதியாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து பத்மநாபன் அவசரமாகக் போன் செய்தார்.

“அந்த நான்கைந்து  பெண்களுடன் சுருதியும் சேர்ந்து விட்டாள்.. இப்போது எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள்,” என்றார்.