
முதலில் இருவர்
பசியற்று பரமசுகத்திலிருந்தனர்
பின் சுகமற்றல் குறித்து
யோசித்த வேளையில்
பசித்தது
நியதிகளைச் சொல்லி
கனிந்தது மரம்
கனி ஒன்றை இருவரும்
பகிர்ந்துண்டனர்
இருவர் மூவராக
மூவர் நால்வராயினர்
நான்கு கனிகளை
ஆளுக்கு ஒன்றெனத் தந்து
நியதிகளைத் தொடர்ந்து
சொன்னது மரம்
இப்படியே நால்வர் ஐவராகி
அடுத்துப் பெருகி
ஆயிரமாயிரம் ஆயினர்
ஆயிரமாயிரம் கனிகளை
இறைஞ்சினர்
நியதிகளோடு கனிந்தது மரம்
நியதிகளைக் காப்பதாக
உறுதி சொல்லி
மொத்தக் கனிகளையும்
தந்துவிட்டு் மௌனமாய்
மறையச் சொல்லினர்
மரத்தை எல்லோரும்…
“எனது நியதிகளே நான்”
என
நினைவுபடுத்தி
பேசாப் பெருமரமென
மறைந்தது.
முதலில் இருந்தவர்கள்
முடிந்தவரை அள்ளிக் கொள்ள
கடைசியிலிருந்தவர்கள்
கனியற்று நின்றனர்.
கனிகளுடையோர் கோலேச்ச
கனியற்றோர் நொந்தனர்
மரத்தின் நியதிகளை மறைத்து
புது நியதி செய்தனர்
கனிகளுடையோர்
எங்களிடம் தருவதற்கில்லை
எல்லாம் மரம் செய்த பிழை
என எப்போதும்
மரத்தை தூற்றினர் சிலர்
நியதிகளை தூற்றினர் சிலர்
தாமே அம்மரமென்றனர் சிலர்
மறைந்த பின்
மரமென்று ஏதுமில்லை
என்றனர் சிலர்
கனிகளே நிஜமென்றனர் சிலர்
கனியுடையோர் சிலர்
மறுத்திருக்க
கனிவுடையோர் சிலர்
பகிர்ந்துகொண்டனர்.

கவிஞர் நிலா ரவியின் கற்பனை வளம் என்னை பிரமிக்க வைக்கிறது. அபாரம். இயற்கை பேரளிப்பையும், அதனால் எழும் வணிக பேராசையையும் ஆதாமும் ஏவாளும் கருத்தரிப்பு நிலையங்களில் கால்கடுக்க நிற்கும் கொடுமையை கண் முன் நிறுத்துகிறார்
LikeLike