தியேட்டர் மெரினா படைப்பில் ரா.கிரிதரன் இயக்கத்தில் அபயரங்கதிலகா என்னும் விசித்திரமான பெயரில் உருவான நாடகத்தை சமீபத்தில் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கேற்றியது. அருமையான கதையையும், பெரும்பாலான வசனத்தையும் எழுதிப் பாராட்டைத் தட்டிக்கொண்டு போனவர் ஜெ.ரகுநாதன். வசனத்தில் கிரிதரனும் இணைந்து தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்.
தஞ்சை பெரிய கோவிலில் தொப்பி அணிந்தவரின் சிலை. அதன் விவரம் ஒரு கண்டுபிடிக்காத புதிர். அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த கற்பனை கலந்த நாடகத்தின் மையம். ‘நான் யார்?’ என்று நாடகம் தொடங்குகிறது. விஷ்வகர்மா யாதவ் என்னும் தொப்பியணிந்த RAW(Research and Analysis Wing of Govt of India) வேலைதாரி கடலில் விபத்தில் விழுந்து தவிக்கும் போது ஆரம்பிக்கிறது. டைம் ட்ராவலில், காலத்தில் பின்னோக்கிச் சென்று ராஜராஜ சோழன் காலத்திற்குச் சென்றுவிடுகிறார். அந்தக் காட்சியை அணைந்து அணைந்து ஒளிரும் விளக்குகள் மூலம் காட்டியிருப்பது ஜோர்.
அடுத்து அவர் எப்படி மீட்கப்படுகிறார் என்பதைக் காட்டும் காட்சியும் அற்புதம். கடல், படகு ,மேலும் அதைத் துடுப்புபோட்டு வலித்துவரும் நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான பொன்னியின் செல்வனின் பூங்குழலி ‘அலைகடலும் ஒய்ந்திருக்க அகக் கடலும் பொங்குவதேன்’ பாட்டைப் பாடிக்கொண்டே வந்து மீட்பது மூலம் நாமும் காலவெள்ளத்தில் பின்னோக்கித் தள்ளப்படுகிறோம். ராஜராஜனின் முதல் வருகை பார்வையாளர்கள் மூலம் – நல்ல உத்தி.
பிறகு காந்தளூர் சாலை போரில் தோற்கடிக்கப்பட்ட நம்பூதிரி ஆசிரியன் ‘பரமன்’, அப்போரில் இழந்த தன் 14 வயது சிறுவனுக்காக ராஜராஜனைக் கொன்று பழி தீர்த்துக்கொள்ள தஞ்சை வருகிறான். பரமன் ஆட்களுக்குக் கிடைத்த யாதவ்வின் துப்பாக்கியால் ராஜராஜனைச் சுட்டுத்தள்ள ஏற்பாடாகிறது. ராஜராஜன், பரமன் மற்றும் எல்லோரும் கூடியிருக்கும்போது பரமனின் ஆள் ராஜராஜனைத் துப்பாக்கியால் குறிபார்க்கும் சமயம் கதாநாயகியின் தந்தை திங்களாச்சான் துப்பாகியின் திசையை மாற்றிவிட, குண்டு ராஜராஜனுக்கு பதிலாக பரமன் மேல் பாய்ந்து அவனைக் கொல்லுகிறது.
ராஜராஜன் விஷ்வகர்மா யாதவைப்பற்றியும் எப்படி அவன் துப்பாக்கி தன்னைக் காப்பாற்றியது என்பதையும் அறிந்து அவனுக்குக் கோவிலில் சிலை வடிக்க உத்தரவிடுகிறான். மேலும் யாதவ் டைம் ட்ராவலில் 1000 வருடம் பின்னோக்கித் தள்ளப்பட்ட விஷயத்தை ரகசியமாக வைக்க முடிவெடுக்கப்படுகிறது.
இதில் காமெடி கலந்த யாதவ்வின் இயல்பான நடிப்புக்கு த்ரீ சியெர்ஸ். அநிருத்தர், கோவில் கட்டிய பெருந்தச்சன், பட்டத்திளவரசன் ராஜேந்திரன் முதலானோர் ஆங்காங்கே வந்து நாடகத்தைப் பளபளபாக்குகின்றனர். குறிப்பாக சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட ராஜேந்திரன், தந்தை கட்டும் ஆலயத்திற்காக செலவிடும் செல்வங்கள் அனைத்தும் வீண் என்று கூறி அதை சோழ சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கவும், படை பலத்தை அதிகரிக்கவும் செலவிடத் தந்தையிடம் சீறுவது இயற்கையாகவே அமைந்திருக்கிறது. ராஜராஜனின் இயல்பான நடிப்பு நாடகத்தின் உச்சம். யாதவ்விற்கும் கதாநாயகிக்கும் ஏற்படும் ரொமான்ஸ் நன்றாகவே காண்பிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா சீன்களுக்கும் ஏற்றதாய் அமைக்கப்பட்ட ஒரே ஒரு வடிவமைப்பு நைஸ். அரசவையில் நடத்தப்பட்ட நடனக்காட்சி சரியான நேரத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது. சவுண்ட், ம்யூசிக், லைட்டிங், காலத்திற்கேற்ற ஆபரணங்கள் க்ரேட். ஒரே ஒரு குறை. RAWவிற்கு பதிலாக எல்லோரும் புரிந்துகொள்ளும் எளிதான டிபார்ட்மெண்டைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
ராஜராஜன், கடைசி சீனில் கதாநாயகியின் பெயர் என்ன என்று கேட்க அதுவரை அறிவிக்கப்படாத பெயர் ‘அபயரங்கதிலகா’ என்று அவள் தெரிவித்து நாடகமுடிவை மெருகேற்றி முடிக்கிறார்கள்.
இந்த நாடகத்தின் வெற்றி ரகுநாதனுக்கும் கிரிதரனுக்குமே உரித்தாகும்



