Image result for udupi temple ladies

” வயதான பிறகு எல்லோரும் கோவில் குளம் என்று போகிறார்கள்.. நீங்கள் எப்பொழுதாவது என்னைக் கூட்டிக் கொண்டு போகிறீர்களா? ” என்று என் மனைவி ஆதங்கத்துடன் போன வருடம் கேட்டாள்..

”வயதான பிறகுதானே! எனக்கு இன்னும் வயதாகவில்லையே!” என்றேன் சிரித்தவாறு.

“வாயில் சொல்லிக் கொண்டால் வயது குறைந்து விடுமா? உங்கள் ஆபீஸில் அப்படி நினைக்கவில்லையே… வயது கெடு முடிந்தவுடன் வீட்டுக்கு அனுப்பி விட்டார்களே! அவர்கள் பொய் சொல்லுகிறார்களா?

நான் பேச்சை மாற்ற முயன்றேன்.

“சரி இப்போது கோவிலுக்குத்தானே போகவேண்டும், அதற்கும் வயசுக்கும் ஏன் முடிச்சுப் போட வேண்டும்? அடுத்த வாரமே நாம் போகலாம். எனக்கு மங்களூரில் உடுபி கிருஷ்ணனைப் பார்க்க வேண்டுமென்று வெகு நாட்களாக ஒரு ஆவல்.. கிளம்பு” என்றேன்.

ஆனால் அந்த உடுப்பி அனுபவம் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அங்கே ஸாமி எனக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்

 உள்ளே  சன்னிதிக்குள் தரிசனத்துக்காக சுமாரான  வரிசை.. நானும் தோளில் பையை மாட்டிக்கொண்டு நின்றிருந்தேன். மனைவிக்கு மூட்டு வலி. அதனால்  அவள் தூரத்தில்  ஒரு  பெஞ்சியில்  உட்கார்ந்து கொண்டிருந்தாள்

 யாரோ  ஒரு  மாது கையில்  குழந்தையுடன்  என்னிடம்  பணிவாக  சிரித்துவிட்டு   என்  பின்னால்  நின்று கொண்டாள்

க்யூவுக்கு  வெளியே  இரண்டு  அழகான  பெண்கள்  கேரளா உடையில்   மங்களமாக நின்றுகொண்டிருந்தார்கள்

ஸ்வாமி தரிசனம் வரிசை  முடிந்து  நான்  சற்று  முன்னே  நகர்ந்தவுடன்   பின்னாலிருந்த  மாது  என் மேல்  ஒட்டியவாறு  கைக்குழந்தையை  என்  முன்  பக்கமாக  நீட்டிப்   பக்கத்து  சுவரில்  பதித்திருந்த   சாமியைத்  தொட்டுத்தொட்டு  அதன்  கண்ணைப்  பொத்திக் கொண்டிருந்தாள்.    என்னால்  நகர முடியவில்லை   {அந்த  சமயம்  என்  தோள்பைக்குள்  என்ன  இருக்கிறது  என்று  சோதித்திருக்கிறாள்}

நான்  சற்று  பலமாக  முன் நகர்ந்து   இடப்பக்கமாக  நகர்ந்து  வெளியே   நின்றதும்  அந்த இரண்டு   அழகான  பெண்கள்   ஒருத்தி   பின்னாலும்   இன்னொருத்தி  முன்னாலும்  வந்து  நின்று கொண்டார்கள்.  நகராமல்  நட்டு வைத்த   மாதிரி நின்றார்கள்.  எனக்கு  குழப்பமாக,  அசூயையாக இருந்தது.  அவர்களை  விலகச் சொன்னாலும்  ஏதோ  கன்னடத்தில்   சொல்லிச்  சிரிக்கிறார்கள்.  நான்  அசையவே
முடியவில்லை.

எனக்கு  அவர்களைத்  தொட்டுத்  தள்ள   சங்கடமாக  இருந்தது. ஏன்   இப்படிச்  செய்கிறார்கள் என்று  புரியவில்லை. இரண்டு  நிமிஷங்களுக்கு பிறகு திடீரென்று இரண்டு  பேரும் சிரித்துக்   கொண்டே  என்னைவிட்டு   அகன்றுவிட்டார்கள்   நான்என்  மனைவியிடம்  சென்று   இந்தப்     பெண்களின்   கேவலமான  நடத்தையைப்பற்றிச்  சொன்னேன்

கோவிலுக்குள்  இப்படி  ஒரு  வெட்கங்கெட்ட  செயல்  நடக்கிறதே  என்று  சொன்னேன்.  பிறகு  கோவிலுக்கு  வெளியே  வந்து  ஏதோ   வாங்குவதற்காக  என் தோள்  பையிலிருந்து  பர்ஸை  எடுக்க  முயன்றேன்.    என்  மனைவிதான் பார்த்தாள்.

  “அய்யயோ  பை  திறந்திருக்கிறதே!…

தோள் பைக்குள்  இருந்த  மனைவியின்  பர்ஸ்,  தனியாகக் கட்டாக  வைத்திருந்த  10000/  ரேஷன்  Card    Voters  cards  for  Identification  எல்லாம்  பறி போய்விட்டது.

 அப்போதுதான்  புரிந்தது  அந்த  மூன்று  பெண்களின்  கேவலமான  நடத்தை.

மூச்சிரைக்க   ஓடமுடியாமல்  ஓடி  உதவி கேட்டு இங்குமங்கும்  பதைப்புடன் அலைந்தோம்.   இரண்டு  மூன்று  பேர்  எங்களை   ” அங்கே  போய்   சொல்லு இங்கே   போய்  சொல்லு”  என்று  அலைக்கழித்துக்  கொண்டிருந்தார்கள்.  அதுவும்  கன்னடத்தில்.

கடைசியில்  ஒருத்தன்  சொன்னான் ,  “சி‌சி‌டி‌வி   காமிரா   உள்ள  இடத்தில்  போய்  சொல்லுங்கள்”  என்றான்   அங்கே போனபோது  உடனே   அக்கறையுடன்  கவனிக்க  யாருமில்லை.  கடைசியில்  ஒருதமிழ் தெரிந்த  அபிமானி   யாரோ  நிர்வாகியைக்  கூட்டிவந்து,  என்னிடம்  சம்பவ   நேரத்தைக்  கேட்டு  சி‌சி‌டி‌வி   காமிராவை  முடுக்கிப்  பார்க்கும்போது  ஒரு  மகா   திருட்டுத் திட்டமே விரிந்தது.

முதலில்  குழந்தையுடன்  நின்ற  மாது  என் தோள் பையை  அமிழ்த்திப்   பார்த்து  உள்ளே  ஒரு  பர்ஸ்   இருப்பதை  ஊகித்துக்   கொள்கிறாள்.   அருகே  பார்த்துக் கொண்டு  நின்ற  அழகான  பெண்களுக்கு   சமிக்ஞை  செய்கிறாள்.

உடனே  அந்தப்  பெண்கள்  என்னை  நகராமல்  இறுக்கிக் கொள்கிறார்கள்.  அச்சமயம்  குழந்தையுடைய  மாது  பின்புறம்  என்  தோள் பையில்  கைவிட்டு உள்ளே இருந்த  தடித்த  பையை எடுத்துத்  தன்  இடுப்புக்குள்  சொருகிக்கொண்டு மாராப்பை  மறைத்துக் கொள்கிறாள்.  உடனே  பெண்கள்  மூவரும்  சற்றும்  பதற்றமில்லாமல்  நடந்து  மெதுவாகக்  கோவிலுக்கு  வெளியே  போகிறார்கள்.

போகும்போதுகூட  முகத்தில்  எந்த விதமான  பாவத்தையும் காட்டாமல்  பசு  மாடுகள்போல்  போகிறார்கள்.

நிர்வாகி  பார்த்துச்  சொன்னான்,

”  ஓ  இந்தப்  பொம்பளைகளா!…இதுங்க  பழுத்த  போக்கிரீங்க. கோவில்லே திருவிழா…பூஜை  எது  நடந்தாலும்  இதுங்களைப்   பார்க்கலாம்”

“பின்  ஏன்  இவர்களைப் பிடிக்கவில்லை?” என்ற  என்  கேள்விக்குப்  பதில்  இல்லை.
“நீங்க  பேசாம  போலீஸ்  ஸ்டேஷனுக்குப்  போய்  ஒரு   FIR  கொடுத்திடுங்கோ” என்று  பயணத்தில்  நாம்   எடுத்துக்  கொள்ள  வேண்டிய  எச்சரிக்கைகளைப் பற்றி  விலாவாரியாகப்  பேசிக் கொண்டிருந்தான்.            பிறகுதான் புரிகிறது…அந்த  திருட்டுப்  பெண்கள்  வெகுதூரம்  போய்  மறைந்து   போவதற்கு   அவன்  ஒத்தாசை  செய்கிறான்  என்று…

பைக்குள்ளே  எவ்வளவு  பணம் இருந்தது  என்பதை  மட்டும்  மறக்காமல் கேட்டுக் கொண்டான்

போலீஸ்  ஸ்டேஷனில் அன்பாகப்  பேசினார்  இன்ஸ்பெக்டர்.   தமிழ் தெரியாது  கொஞ்சம்  ஆங்கிலம் தெரியும்  என்றார்.  பேப்பரைக்  கொடுத்து    நடந்த சம்பவத்தை  எழுதிக்  கொடுக்கும்படி   சொன்னார்.    CCTV   காமிரா  படமும் தனக்கு  வந்துவிட்டது  என்று  சொன்னார். நான் கொடுத்த பிராதை  நிதானமாகப் படித்துவிட்டு   FIR  போட்டு  விடட்டுமா? என்று  கேட்டார்.

“அதில்  என்ன  கஷ்டம் ?” என்றேன் . 

 “உங்களுக்குத்தான் கஷ்டம்……..நான்  இரண்டு  வாரத்துக்கு  ஒரு முறை யாரையாவது  பிடித்து  வைத்துக்   கொண்டு  உங்களுக்குத்   தகவல்  கொடுப்பேன்.   ஒவ்வொரு  முறையும்  நீங்கள்தான் சென்னையிலிருந்து  வந்து  அடையாளம் காட்டவேண்டும்.   பிறகு  கோர்ட்டில்  கேஸ்  நடக்கும்போது  வரவேண்டும்.  அதுவும்  இரண்டு  மூன்று  வாய்தா நிச்சயம்  நேரிடும்…என்ன  சொல்கிறீர்கள்? அதுவும்  தண்டனை   நிச்சயமாகுமாஎன்று சொல்லமுடியாது..நீங்கள்தொலைத்த  பணத்துக்கு  இந்தத்  தொந்தரவுகள்  ஈடாகுமா?” என்று  கேட்டான்.

நான்  கோபமாகக் கேட்டேன்

“குற்றவாளி  பிடிபட்டு தண்டனை  கொடுக்கும்போது  இதனால் எங்களுக்கு  ஆன  செலவையும்  சேர்த்துத் தானே  கொடுப்பார்கள்?”

“நியாயமான  எதிர்பார்ப்புத்தான்…ஆனால்  உங்கள்  வயது,  சூழ்நிலை,  தவிர  உத்தரவாதமில்லாத  நிரூபணம்  இவற்றைக்  கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்..முக்கியமாக உங்கள்  பணம்  நிரூபணம்  ஆகாது..நீங்கள்  10000/ என்று   சொல்லுவீர்கள்  குற்றவாளி  “பணமே அதில்  இல்லை  என்று சொல்லுவான்  நிரூபிக்கமுடியாதல்லவா?

எனக்கு  அப்போதுதான்  என்  பரிதாப  நிலைமை உறைத்தது ..நான்  மிகவும்  வருத்தத்துடன்
அவன்  முகத்தையே  பார்த்துக்  கொண்டிருந்தேன்.

” ஏன்  ஸார்.!  ஸாமி  முன்னாலயே  இவ்வளவு  அக்கிரமத்தைத் துணிச்சலா பண்றாங்க?  அவங்களுக்கு  ஸாமியைப்பத்தி  பயமே  கிடையாதா?” நம்பிக்கையோட  கோவிலுக்கு  வர்ரதுக்கெ  எனக்கு  இப்பப் பிடிக்காம  போச்சே…”

“யார்  கண்டார்கள்? முதலில்  பயமாக  இருந்திருக்கலாம். யாரோ  இவர்களை  இப்படி இந்தத் தொழிலுக்கு   விரட்டுகிறார்கள். யாரோ  இவர்களுக்கான   வசதியான  பாதுகாப்பு வியூகத்தைக்  கோவிலில்  ஏற்படுத்துகிறார்கள்.  யாரோ  இவர்களுக்கு  இதனால்  ஏற்படுகிற    சுலபமான  ஜீவனத்தைப்பற்றிய  சௌகரியத்தில்   உள்ள  பிடிப்பை  ஊன்றி விடுகிறார்கள்.. பிறகு  பிடிபடாவிட்டாலும்  பிடிபட்டு
வெளியே  வந்தாலும் இவர்கள்  இந்தத் தொழிலை  விட்டு  வெளியே  வரமாட்டார்கள்!…”

“நல்ல சமூகம்!  நல்ல  கோவில்    தரிசனம்… நீங்கள்  சொல்வது  சரிதான்.  ஸாமிக்கே  இக்காலத்தில்   பாதுகாப்பில்லாதபோது   ஸாமியைப்பற்றி   யார் பயப்படப் போகிறார்கள்? என்  பிராதைக்  கிழித்தெறியுங்கள்”  என்றேன்.   அவர்  தயக்கத்துடன் ஆனால் நிம்மதியடைந்தவராகச் சிரித்தார்.

நான்  சொன்னேன்…..

“ஆனால்  ஒன்று  ..கண்ணுக்குத்  தெரிகிற  இந்தத்  திருட்டுப்  பெண்கள்  மன்னிக்கப்பட வேண்டியவர்கள்.  அவர்களுக்குப்  பின்னால்  ஒரு ஒட்டுமொத்த அதிகார  கும்பலே  இந்தத்  திருட்டுக்கு  உடந்தையாகப்  பிடிபடாத  வளையத்தில்  பதுங்கிக்  கொண்டு  நடிக்கிறார்களே……அவர்களை எல்லாம்  சுட்டுப்  பொசுக்கவேண்டும்” என்றேன்

இன்ஸ்பெக்டர்   முகத்தில்    லேசாக  ஒரு  குற்றவாளியின்  சாயல்  மின்னி மறைந்தது.

சில வினாடிகள்  மட்டும் …

பி.கு.  நல்ல வேளை  தோள்  பையின்  இன்னொரு  பகுதியில் இருந்த  என்  பர்ஸை அவள்  எடுக்கவில்லை.  அதில்  கொஞ்சம்  பணமும்  A T M  கார்டும் இருந்தது.  நாங்கள் ஊர் திரும்பினோம்.