நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  2. இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Image result for home made dosa

 

தோசை ஒரு தொடர்கதை

 

தோசையம்மா  தோசையென்று பாட்டு எழுதினான் 

அன்று முதல் இன்று வரை அந்த ஆசை விடலியே !

அரிசிமாவும் உளுந்துமாவும் அரைத்து சுட்ட தோசையில்

அன்றும் இன்றும் என்றும் என்றும் பாசம் சிறிதும் போகலை !

 

காலை என்றால் இட்டிலி ; மாலை என்றால் தோசைதான் ;

ஆண்டாண்டு காலமாக அம்மா வார்த்துப் போட்டது !

சட்டினியும் சாம்பாரும் சேர்த்தடித்தால் சொர்க்கமே –

இன்னும் ஒன்று இன்னும் ஒன்று என்று கேட்கத் தோன்றுமே !

 

தோசைக் கல்லைப் போட்டதும் சொய் சொய் ஓசை கேட்டதும்

நாவில் ஊறும் எச்சிலை நிறுத்திடவே முடியுமோ ?

முறுகலான தோசையை முகர்ந்து பார்க்கும் போதிலே

உறுதியாக நம் முகத்தில் புன்முறுவல் தோன்றுமே !

 

விண்டு விண்டு உண்ணும் போது தீர்ந்துபோகும் தோசைகள் –

ஒன்றிரண்டு மூன்று என்று எண்ணிக்கைகள் ஏதடா ?

தொட்டுத் தொட்டு உண்ணலாம் முழுகடித்தும் தின்னலாம்

எண்ணையும் பொடியும் போட்ட தோசைக்கேது ஈடடா ?

 

சாதா, மசாலா என்று ரகம்ரகமாய் தோசைகள் !

தோசைக்காகவே தனியே தொடங்கிவிட்ட ஓட்டல்கள் !

தமிழனுடன் கலந்துவிட்ட பெருமை பெற்ற தோசைதான் –

தரணி முழுதும் சுற்றிச் சுற்றி பவனியாக வருகுது !

 

ஆசைக்கோர் அளவில்லை ஆன்றோர் சொன்ன வாக்கிது –

தோசைக்கும் அளவில்லை – நாமறிந்த உண்மையே !

சலித்திடாது இறுதிவரை தோசை சுட்டு வழங்கினாள் –

அன்னை தந்த தோசை ருசி என் நாவில் என்றும் நின்றதே !

 

                 @@@@@@@@@@@@@@

Related image