மூன்று செய்திகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

ஒன்று காவிரி நீர் பங்கீடு ..

இந்தப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.
அணைகளை நேசிய நீரோட்டத்தில் கலக்க எந்த மாநில அரசும் தயாராயில்லை.
அப்படிக் கொடுத்தாலும் மத்தியில் இருக்கும் எந்த அரசும் ஓட்டு வங்கியைக் கணக்கில் கொள்ளாமல் நியாயமாகச் செயலாற்றுமா என்பதும் புரியவில்லை.
இரு தீர்ப்பு வருவதற்குப் பத்துப் பதினைந்து ஆண்டுகள், அதை செயலாற்ற இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் என்று போனால் நமது இந்தியா வல்லரசாகப் போகும் கனவு இன்னும் பத்துப் பதினைந்து நூற்றாண்டுகளுக்குத் தள்ளிப் போய்விடும்!
சரியென்று நீதிமன்றமோ மத்திய அரசோ மாநில அரசோ தீர்மானிப்பதை உடனே செயலாற்றவேண்டும்!
தாமதமான நீதி, தரமான நீதி – அல்ல தரமறுத்த நீதியைவிட மோசமானது .
செயல்.. செயல்.. செயல்.. இதுதான் ஒவ்வொரு இந்தியனின் கடமையாக இருக்கவேண்டும்!
அடுத்தது நீட் தேர்வு!

இதில் ஏன் இத்தனை குளறுடி!
நீட் வேண்டாம் என்று சென்ற ஆண்டு போராட்டம் !
இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் ஏன் தமிழகத்தில் அதிக அளவில் வைக்கவில்லை என்ற போராட்டம்!
எதையுமே எதிர்ப்பது என்ற போக்கை அரசியல் கட்சிகள் விடவேண்டும்!
அரசியலை அனைத்துக் கட்சிகளும் ஒரு நாகரிகமாகப் போற்றவேண்டும்!
இது ஒரு இந்தியனின் கனவு. நிறைவேறுமா?
மூன்றாவது கர்நாடகா தேர்தல்.

தொங்கு சபை என்று பல அரசியல் ஆரூடங்கள் சொல்லின.
அது சரியாகவும் அமைந்தது.
இனி சாணக்கிய வேலைகள் தொடரும்.
யானைப் பேரங்கள் நிகழும் (குதிரையெல்லாம் போய் விட்டது)
ஏன் அரசு அமைப்பதற்குப் புதிய முறையை சிந்திக்கக் கூடாது?
ஆட்களைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பதைவிடக் கட்சியைத் தேர்ந்தெடுத்தால் என்ன? எந்தக் கட்சிக்கு ஒரு மாநிலத்தில் அதிக ஓட்டு எண்ணிக்கை கிடைக்கிறதோ அதையே ஐந்து ஆண்டுகள் ஆளச் சொல்வோம்.
அதே போல் நாட்டின் பிரதமரையும் தேர்ந்தெடுப்போம்
(கிட்டத்தட்ட அமெரிக்காமாதிரி இருக்கிறதே என்று தோன்றுகிறதா? )
அது சரியானால் அதைச் செய்வதில் என்ன தவறு?
பூனைக்கு மணிகட்ட மணி பார்க்க வேண்டாம்.
யோசிக்க ஆரம்பித்தாலே அது முதல் மணி!
(அம்மையார் பாணியில்) செய்வீங்களா? அல்ல – செய்வோமா?
