Image result for vishvakarma+suryadev serial

ராகு காலம் படர்ந்த  அந்த மூன்றே முக்கால் நாழிகைகளில்  விளைவுகள் அவற்றின் போக்கிலே துரிதமாக நடைபெற்றன.

ஸந்த்யாவின் நிழலில் மறைந்து இருந்த ராகு அவள் விமானத்தில்  வரும்போதும்,  சாந்துக் குளியல் அறைக்கு வரும்போதும் தப்பிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் ராகு தப்பிக்க இஷ்டப்படவில்லை. விஷ்வகர்மாவின் முகத்தில்  ஏற்பட்ட   கலவரத்தைக் கண்ட ராகு அவர் ஏதோ தீவிரமாகச்   செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டான். ‘ ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை , அவர் ஏன் இவர்கள் திருமணத்தை உடனே நடத்தக்கூடாது என்று சொல்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது அவனுடைய தலையே வெடித்துவிடும்போல் இருந்தது.

‘எரிகிற வீட்டில் பிடுங்கியது  லாபம்’ என்பதுபோல அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சூரிய தேவனைப்  பழி வாங்க முடியுமா என்ற பாணியிலேயே அவனுடைய எண்ணம் சென்றது. அதுமட்டுமல்லாமல் தன்னை யாரும் கொல்லமுடியாது என்ற அகம்பாவம் அவனுக்கு நிறைய உண்டு. அமுதம் குடித்தவனல்லவா அவன்.

விஷ்வகர்மா ஸந்த்யாவின் தாயிடம் ஏதோ ரகசியமாகக் கூறிவிட்டு சூரியதேவன் இருக்கும் அறைக்குச் செல்வதைப் பார்த்தான். அதுவரை ஸந்த்யாவின்  நிழலில் மறைந்து  இருந்தவன்  யாரும் அறிமாமல் விஷ்வகர்மாவின் நிழலில் மறைந்து கொண்டான். அவர் சூரியதேவன் படுத்திருக்கும் இடம் சென்று காவலாளிகளை அப்புறப்படுத்திவிட்டுத் தன் கையிலுள்ள  கோலால் சூரியதேவனை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தி ஏதோ அவருடைய ஆணைக்குக் கட்டுப்படுத்தப்போகிறார் என்று புரிந்து கொண்டான்.

விஷ்வகர்மா ‘மகாருத்ரபிரும்மன்’ என்று மூன்றுமுறை கூறியதைக் கேட்டதும் ராகு திடுக்கிட்டுப் போனான்.   மகாருத்ரபிரும்மன்பற்றி அவனும் சுக்ராச்சார்யார் சொல்லக் கேட்டிருக்கிறான்.  தனுர் மாதத்திலிருந்து  தை மாதம்  என்று அழைக்கப்படும்  மகர மாதத்திற்குப் போகும் ஸங்கராந்தித் திருநாள் தேவர்களின் இரவுப்பொழுது முடிந்து பகல்பொழுது ஆரம்பமாகும் புண்ணிய காலம். அந்தச் சமயத்தில் விஷ்ணு, சிவன், பிரும்மர் மூவர் ஆசியுடன் மணம் புரிந்து அன்று கரு உருவானால் அந்தக் கருவில் பிறக்கும் திருமகன்  மகாருத்ரபிரும்மன் என்ற சக்தியுடன் இருப்பான். அப்படிப்பட்ட ஒருவன் உதித்தால்  அவனை யாரும் வெல்லமுடியாது. அவன் அரக்கர் குலத்தை முற்றிலும் அழித்து  ஒன்றுமில்லாதவராகச் செய்துவிடுவான். அப்படி ஏதாவது நடைபெறும் என்று தோன்றினால் அதை நடக்கவிடாமல்  செய்வது அசுர குலத்தில் உதித்த ஒவ்வொருவரின் கடமை என்று அசுரகுரு  ஆணித்தரமாகக் கூறியது அவன்  மனதில் மீண்டும் ஒலித்தது. 

இப்போது விஷ்வகர்மா   என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய அவன் தன் பாம்புச் செவியைத் தீட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான். 

விஷ்வகர்மா தன் கருத்திலேயே தன் முழு கவனத்தைச் செலுத்தி இருந்ததால் ராகு தன் நிழலில் மறைந்து இருப்பதை உணரவே இல்லை. அவர் சூரியதேவனை மயக்க நிலையில் ஆழ்த்திவிட்டு அவர் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தார்.

” சூரியதேவரே ! நான் செய்யும் பணி பஞ்சமாபாதகம் என்பதை நான் அறிவேன். அதற்காக உங்களிடம் முன்கூட்டியே மன்னிப்பைக் கேட்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். சில நாழிகைக்கு முன்னால் உங்களால் தோற்றுவிக்கப்பட்ட உங்கள் வம்ச வித்துக்கள் மூன்றையும் நான் அழிக்கப்போகிறேன். என் பேரக் குழந்தைகளை நானே அழிக்கப் போகிறேன். இதைச் சொல்லும்போது என் இதயமே வெடித்துவிடும் போல உணருகிறேன்.

கோடானகோடி அண்டங்களின்  நன்மையை முன்னிட்டு இதை  நான் ரகசியமாகச் செய்யவேண்டியிருக்கிறது. மகாருத்ரபிரும்மமனைப்பற்றிச் சுக்ராச்சார்யார்  மூலம்தான் தெரிந்து கொண்டேன். ஆனால் அப்படிபட்ட ஒரு சக்தி பிறப்பது தேவர்களுக்கும் பிடிக்கவில்லை அசுரர்களுக்கும் பிடிக்கவில்லை. தங்களுக்கு மேற்பட்ட ஒரு சக்தி வருவது யாருக்குப் பிடிக்கும்? ஆனால் அது இப்போது தேவைப்படுகிறது. அந்த சக்தி ஒரு புதிய பரிமாணத்தில் உலகைப் படைக்கும். அந்தப் படைப்பைச் செய்யவே தேவசிற்பியான நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மகாருத்ரபிரும்மனை மூலப் பரம்பொருளாகக் கொண்டு நான் படைக்கும் அந்த புதிய உலகம் இப்போது இருக்கும் அனைத்து உலகங்களையும் அழித்துவிடும். உங்களுக்கு நன்கு தெரியும் மேல் ஏழு லோகங்களும் கீழ் ஏழு லோகங்களும் இருக்கின்றன என்று.

பிரும்மர்  இருக்கும் ஸத்யலோகம், தேவதைகள் உறையும் தபோலோகம் , பித்ருக்கள் இருக்கும் ஜனோலோகம், இந்திராதி தேவர்கள் இருக்கும் சொர்க்கலோகம், முனிவர்கள் இருக்கும் மஹரலோகம், கிரகங்கள், நட்சத்திர தேவதைகள் வசிக்கும் புனர்லோகம், மனிதர்கள், விலங்குகள், வசிக்கும் பூலோகம் இவை மேல் லோகங்கள்.

அவற்றைப்போல  அசுரர்கள் வசிக்கும்   அதல லோகம்,  விதல லோகம்  சுதல லோகம்,  தலாதல லோகம் , மகாதல லோகம் ,பாதாள லோகம், ரஸாதல லோகம்  என்று ஏழு லோகங்களும் கீழ் லோகங்கள் என்று  அழைக்கப் படுகின்றன.

மகா ருத்ர பிரும்மன் வந்தபிறகு அவனுக்காக நான் ஒரு தனி லோகத்தையே உண்டு பண்ணுவேன்.  இந்தப் பதினாலு லோகங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அப்படிப்பட்ட லோகத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் எனக்கு நானே இட்டுக்கொண்ட மகத்தான பணி. அதற்காகத்தான் ஸந்த்யாவைப் பெற்றெடுத்தேன். உலகின் ஒளி நாயகனான உங்கள் மூலம்தான் அந்த சக்தி பிறக்கமுடியும்.  இதை நான் யாரிடமும் சொல்லமுடியாது. அப்படிச் சொன்னால் அந்தப் புதிய மகா லோகத்தை  நிர்மாணிக்கும் சக்தி எனக்குக் கிட்டாமல் போகும்.

பின்னால் பிறக்கப் போகும் உங்கள் மகன் பெருமை  மிகுந்தவனாக வருவது உங்களுக்குப் பெருமை அளிக்கும்.  நீங்கள் உங்கள் சாந்து குளியல் முடிந்தபிறகு உங்கள் பர்வதத்திற்கு ஸந்த்யாவின் ஸ்வரூபத்துடன்  சென்று விடுங்கள்! ஸந்த்யாவை உங்கள் பிரபையுடன் இங்கே இருக்க வைக்கிறேன். சில மாதங்கள்தான் இருக்கின்றன – நான் எதிர்பார்க்கும் வேளை வருவதற்கு. அது வந்தவுடன் உங்கள் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.

அதனால் தற்சமயம் உங்கள் மூன்று குழந்தைகளையும்  அழிப்பதற்கு எனக்கு  அனுமதி கொடுங்கள்! இந்த சமயம் என் மனைவி அதற்கான  மருந்தை  ஸந்த்யாவிற்குக் கொடுத்திருப்பாள்.  அது அவள்   வயிற்றில் இருக்கும் மூன்று குழந்தைகளையும் உருத் தெரியாமல் ஆக்கியிருக்கும்

மீண்டும் உங்களிடம் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்”

விஷ்வகர்மா கூறியதன் ஒவ்வொரு சொல்லையும் சூரியதேவனுடைய ஆழ்மனது கேட்டு அனுமதி அளித்தது.

ஆனால் அது மனிதர் காதில் கொதிக்கும் எண்ணை விட்டதுபோல ராகுவிற்கு இருந்தது.

இதை எப்படியும் தடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் விஷ்வகர்மாவிற்குத் தெரியாமல் கதவில் இருக்கும் சாவித்துவாரத்தின் வழியாக அந்த அறையிலிருந்து வெளியேறி ஸந்த்யா இருக்கும் அறைக்கும் அப்படியே சாவித்துவாரத்தின் வழியாக உள்ளே சென்றான்.

அங்கே ஸந்த்யாவின் தாய் மருந்தை புகட்டுவதற்காக ஸந்த்யாவின் அழகிய இதழ்களைத் தன் கையால் திறந்துகொண்டு தங்கக் கிண்ணத்தைச் சாய்க்கத்  தலைப்பட்டாள்.

Related image

மூன்றே முக்கால் நாழிகை வரை அதீத பலம் இருக்கும் அந்த ராகுகாலம் முடிய இன்னும் சில நொடிகளே இருந்தன. அதற்குள் அவன் நினைத்த காரியத்தைச் செய்யவேண்டும். அதற்குப் பின்னால் அவனால் அந்தக் காரியம் செய்ய முடியாது.

தான் என்ன செய்யவேண்டும் என்பதை  முடிவு செய்தான்  அதற்கான விபரீத செயலில் துணிச்சலுடன் இறங்கினான் ராகு.

விளைவுகள் அதி பயங்கரமாக இருந்தன.

(தொடரும்)

இரண்டாம் பகுதி
ஆப்பிள் போனின் புது வடிவம் பூலோகத்தில் வெளியிடுவதற்கு முன்பே தத்தாம்ஸானந்தா மூலம் மேலுலகத்தில் வெளிவந்துவிட்டது. அவர்  எமபுரிப்பட்டண பிராஜக்ட்டில் இருக்கும்  உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆளுக்கொன்று வழங்கினார்.  எமன் மட்டும் எமிக்கு ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால் கேட்டால் மற்றவர்கள் தப்பாக நினத்துக் கொள்வார்களே என்று கேட்காமல் இருந்துவிட்டான். தலைக்கு ஒன்று என்று கொடுத்தால் பிரும்மா தனக்கு நாலு கிடைக்குமே என்று எதிர் பார்த்தார். முருகனும் தனக்கு ஆறு கிடைக்குமே என்று யோசித்தாராம்.
iPhone XS release date, price and specs: All iPhone XS Max models sell out
தத்தாம்ஸானந்தா மற்றவற்றை எல்லாம் விட்டுவிட்டு புது போனில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று சொல்ல ஆரம்பித்தார்.  பிராஜக்டை சுத்தமாக மறந்துவிட்டு  தேவ உலகப் பிரமுகர்கள் ஐ போனைப் பற்றிக் கவனமாகக் கேட்டனர். 6.1 அங்குல LCD திரையுடன் எட்ஜ் – டூ -எட்ஜ் டிசைன்   ஃபேஸ் ஐடியுடன் வந்துள்ள  ஆப்பிளின் எக்ஸ்‌எஸ்  அனைவரையும் கவர்ந்ததில் வியப்பேயில்லை.   பரவாயில்லை முதல் தேவ உலகத்தின் போனே நல்ல போனாக வந்தது குறித்து அனைவருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். அப்போது கிடைத்த பிரேக்கில் அனைவரும் தங்கள் போன் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பரிசோதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சிவபெருமான் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருக்கும் சங்கராச்சார்யாவிற்கு ஒரு பேஸ்டைம் போட்டார்.  அந்த சமயம் காசி சங்கராச்சார்யார் வாரணாசிக்கு வந்திருந்த மோடிஜியுடன் பேசிக்கொண்டிருந்தார். சங்கராச்சார்யார் மோடிஜியிடம்  “சிவபெருமான் லைனில் இருக்கிறார், நீங்கள் அவருடன் பேசுகிறீர்களா?”  என்று கேட்டார். மிகவும் மகிழ்ச்சியுடன் மோடிஜி ஐந்து நிமிடம் பேசினார். சிவபெருமான் கேட்ட ஒரு கேள்வி மோடிஜியை அதிர வைத்தது. ” அச்சே தின் எப்போ வரும்?” என்று சிவபெருமான் கேட்டதும் ” அதை நீங்கள் தானே சிவ்ஜி சொல்லவேண்டும்” என்று சொல்லிவிட்டு போனை சங்கராச்சார்யாரிடம் கொடுத்தார்.  சிவபெருமான் சங்கராச்சார்யாரிடம் அப்புறம் பேசுவதாகக் கூறி போனைக்  கட் செய்துவிட்டார்.
அதேசமயத்தில் மகாவிஷ்ணு பூலோகத்தில் டிரம்ப்கூட பேசிக்கொண்டிருந்தார். பாரிசில் நடைபெற்ற உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் பருவநிலை மாற்ற  ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உட்பட 195 நாடுகள் கையெழுத்திட்டும்  தான் மட்டும் ஏன் கையெழுத்து போடவில்லை என்பதைப்பற்றிய விளக்கத்தை டிரம்ப் சொல்லிக்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஈரான் சிரியா பிரச்சனைபற்றிப் பேச ஆரம்பித்தார். தான் ஒரு மீட்டிங்க்கில் இருப்பதாகக் கூறி மகாவிஷ்ணு போனைக் கட் செய்துவிட்டார்.
முருகன் வள்ளி தெய்வானை இருவருக்கும் கான்பிரன்ஸ் கால் போட்டு பேசிக்கொண்டிருந்தார். வள்ளி திருத்தணியில் பிறந்த  வீட்டுக்குப் போய் இருந்தாள். அப்படியே  தினப்புனங்கள் நடுவே குருவியை விரட்டிக்கொண்டிருந்த பழைய இடங்களைத் தோழிகளுடன் நினைவு கூர்ந்து காட்டில் அலைந்து கொண்டிருந்தபோது  அவள் அம்மா ” இந்தா புள்ளே வள்ளி! உன் வூட்டுக்காரர் உன்கூட பேசணுமாம் ” என்று சொல்லி போனை வள்ளியிடம் கொடுத்தாள்.  வள்ளிக்குத் தான் முதன்முதலில் முருகனைச் சந்தித்த இடம், யானை வந்த இடம் எல்லாவற்றையும் முருகனிடம் காண்பிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அது தெய்வானையுடன் சேர்ந்த கான்பிரன்ஸ் கால் என்று தெரிந்ததும் அவள் உற்சாகம் அப்படியே அடங்கிப் போயிற்று.  போறாக்குறைக்கு அங்கே நெட்வர்க் குறைவாக இருந்ததால்  முருகனின் ஆறு  முகத்தில் ஒரு முகம்கூட சரியா தெரியவில்லை. வள்ளி மிகவும் கடுப்பாகி அவள் அம்மா கொடுத்த போனைத் தூக்கி அங்கே  ஓடிவந்த குருவிகள் மீது “ஆலோலம்’ என்று சொல்லி வீசி எறிந்தாள். அந்த வார்த்தை  மட்டும் முருகன் காதில் விழுந்தது. சரி தெய்வானையிடம்  பேசலாம் என்று பார்க்தால் அவளும் மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு – மாமியார் வீட்டுக்குப் போய் வருகிறேன் என்று எஸ் எம் எஸ் அனுப்பிவிட்டு   போனைக் கட் செய்துவிட்டாள்.
பிள்ளையார் மட்டும் ஜாலியாக  ரிபப்ளிக்  டி வி சானலில் கணேஷ் சதுர்த்தி விசர்ஜன் பற்றி காரசாரமாக அர்னாப் கோஸ்வாமி விவாதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டார்.
மூன்று தேவியர்களும் சன் நெக்ஸ்ட்டில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
Image result for narad and phone
அப்போதுதான் தத்தாம்ஸானந்தா அவர்களுக்குப் புதிதாக ஒரு செயலியை அந்த போனில் இன்ஸ்டால் செய்யப் போவதாகக் கூறினார். அது வாட்ஸப்  என்பதை அறிந்து கொண்ட நாரதர் ‘ அந்த ஆப் மட்டும் கொடுத்து  விடாதீர்கள்’ என்று அலறினார்.  குறிப்பாகத் தமிழ்நாட்டில் அந்த அப்ளிகேஷனால் அனைவர் படும்- படுத்தும்பாட்டை நன்கு அறிந்த நாரதர் எப்படியாவது வாட்ஸ் அப்பிற்கு  தேவ உலகத்தில் தடை  விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
” ஏன் நாரதா ! இப்படி அலறுகிறாய்? விஷயத்தை விளக்கிக் கூறிவிட்டு உன்னுடைய அலறலைத் தொடர்”  என்று  தகப்பனார் பிரும்மர் சற்று எரிச்சலோடு கூறினார். 
நாரதர் விளக்க ஆரம்பித்தார். 
(தொடரும்)