
புதுமையான முறையில் கவிஞர் குடியிருக்கும் மேன்சனிலேயே வெளியிடப்பட்ட ஹைக்கூ கவிதை நூல்
சென்னை. அக்.16. கவிஞர் ஜென்ஸி எழுதிய ‘மகரந்தத் துணுக்குகள்’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா, நூலாசிரியர் தங்கியிருக்கும் சென்னை இராயப்பேட்டை கவுடியா மடம் சாலையிலுள்ள சுப்ரீம் மேன்சனின் தரைதளத்தில் புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமில்லாமல், கவிதை நூலை அச்சிட்ட கேபிடல் அச்சக ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவிற்கு தலைமையேற்று, கவிதை நூலினை பண்ணைத் தமிழ்ச் சங்க அமைப்பாளர் கவிஞர் துரை.வசந்தராசன் வெளியிட, கவிஞர் மு.முருகேஷ் பெற்றுக்கொண்டார்.
கவிதை நூலைத் திறனாய்வு செய்து கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, “தமிழ் கவிதையில் இன்றைக்கு சொல் புதிது, பொருள் புதிது என எழுதும் இளைய கவிஞர்கள் பட்டாளம் கிளம்பியுள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதை எழுதிய கவிஞர்கள் பலரும் இன்றைக்கு ஹைக்கூ கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். கவிதையின் கருப்பொருளும் சமூக அக்கறையுமே ஒரு கவிதையின் வெற்றியை தீர்மானிக்கும். கவிதையின் புறக்காரணியான வடிவம் ஒரு பொருட்டல்ல. தமிழில் ஹைக்கூ மகாகவி பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றைக்கு 530-க்கும் மேற்பட்ட பலவகை ஹைக்கூ நூல்கள் வெளிவந்துள்ளன.
முன்னரே தனது சிறுகதை நூலின் வழியே அறிமுகமாகியுள்ள கவிஞர் ஜென்ஸியின் கவிதையாற்றலுக்கு இந்த ஹைக்கூ நூல் சான்றாகும். தன் மனதைத் தொட்ட எந்தவொரு சமூக நிகழ்வையும் குறைந்த வார்த்தைகளில் செறிவான காட்சிக் கவிதைகளாகப் படைத்துள்ளார் ஜென்ஸி. இந்தக் கவிதைகளிலுள்ள செறிவும் காட்சியழகும் வாசிப்பாளனை நிச்சயம் ஈர்க்கும். பக்கம் பக்கமாக வெறும் வார்த்தை அலங்காரத்தோடு எழுதப்பட்டு வந்த தமிழ்க் கவிதைகளுக்கு செறிவையும் அழுத்ததையும் தந்த பெருமை ஹைக்கூ கவிதைகளைச் சாரும். கவிஞர் ஜென்ஸி, தனது சமூக அக்கறையை செறிவான மொழியில் சுருக்கென ஹைக்கூவாகப் படைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
கவிஞர்கள் ப்ரியம், உமா சுப்பிரமணியன், கோவை நாவரசன், முருகு பாண்டியன், மேன்மை இதழின் ஆசிரியர் மு.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் ஜென்ஸி ஏற்புரையாற்றினார். நிறைவாக, கவிஞரின் சகோதரர் எஸ்.கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
தகவல்: தமிழ் 24 நியூஸ்
